Search This Blog

19.3.08

இவர்தான் பெரியார்

ஒருமுறை ஈரோட்டில் தமிழிசை மாநாடு நடந்தது. பெரியார், அண்ணா எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. மேடையில் பெரியார் எதையோ எழுதிக்கிட்டிருந்தார். அப்பப் பட்டக்காரர் வர்றார்... பட்டக்காரர் வர்றார்னு ஒரே பரபரப்பு. பட்டக்காரர்னா, தமிழக அமைச்சரா இருந்த சர்க்கரை மன்றாடியாரின் அப்பா நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார்.
மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த பெரியார், வாங்க எஜமானரே...ன்னு பட்டக்காரரை வணங்கி வரவேற்றுவிட்டு, திரும்பவும் மேடைக்கு வந்து எழுத ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்தவரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் வந்தார். பெரியார் மேடையில் உட்கார்ந்தபடியே ஒரு வணக்கம் போட்டு, வாங்க சண்முகம்னு சொன்னதோடு சரி. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மாநாடு முடிந்ததும், பெரியார் தனித்திருந்தபோது அவரிடம் கேட்டேவிட்டேன். என்னங்கய்யா, பட்டக்காரர் வந்த போது பரபரப்பா வரவேற்றீங்க. உலகப்புகழ் பெற்ற சண்முகம் செட்டியாரை சாதாரணமா வரவேற்றீங் களே?ன்னு கேட்டேன். அதற்குப் பெரியார் சொன்ன பதில் இன்னமும் மனசிலே தங்கியிருக்கு.
அங்கேதான் நீ சரியாப் புரிஞ்சிக்கணும். பட்டக்காரர் படிக்காதவர். அவரை வாசலில் நின்று வரவேற்று உபசரித்தால்தான் நம்ம அன்பு அவருக்குப் புரியும். நம்ம மனசை வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் அவருக்கு காட்டணும். ஆனால், ஆர்.கே.எஸ். படித்தவர். பெரிய அறிஞர். ஒரு சின்ன வணக்கத்திலேயே என் அன்பு உண்மையாகவும் முழுமையாகவும் வெளிப்பட்டதை அவர் புரிஞ்சுக்குவார் என்று பெரியார் சொன்னதில் மிகப் பெரிய தத்துவத்தைக் கண்டேன்.

- அண்மையில் மறைந்த முன்னாள் சட்டமன்றத் தலைவர் க.இராசாராம் (நக்கீரன், 16.2.2008 இதழில்)

0 comments: