Search This Blog

31.3.08

'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.
இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.

அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.
1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.

ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.

`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு.



சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.

குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.
திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.

அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?

ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ! ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?

தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.
அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!



திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.

`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.

``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர் களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? - இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:

`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?

நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?




அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?
இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!

புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).

கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.


--------"மயிலாடன்" அவர்கள் "விடுதலை" 30-3-2008 இதழில் எழுதியது.

0 comments: