Search This Blog

20.10.11

மானமுள்ள திராவிடன் தீபாவளி கொண்டாடலாமா?


ஓ, தீபாவளி கொண்டாடும் திராவிடர்களே!

இந்துமதம் பெயரால் பரப்பப்பட்டுள்ள பண்டிகைகள் அனைத்தும் ஒரு மய்யப் புள்ளியை வைத்துச் சுழலும் தன்மையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவதாரம் எடுத்து ராட்சதர்களைக் கொன்றார், அரக்கர்களை அழித்தார்,, அசுரர்களை ஒழித்தார் என்று இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் அந்த மகாவிஷ்ணு அவதாரம் எடுப்பதில்லையே - ஏன்? இப்பொழுது அசுரர்கள் எல்லாம் அழிந்து விட்டார்களா?
ராட்சதர்கள், அசுரர்கள் பற்றி இதிகாசங்கள் என்ன கூறுகின்றன? புராணங்கள் என்ன பேசுகின்றன? வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவைபற்றி தந்தை பெரியார் அவர்களும், திராவிடர் கழகமும், தன்மான இயக்கத்தவர்களும், இயக்க வெளியீடுகளும் ஏராளமான தகவல்களைக் கொட்டி யிருக்கின்றனர்; பிரச்சாரங்களையும் தொடர்ந்து செய்து கொண்டு தானிருக்கின்றனர்.

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும், ஆரியரல்லாதவருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமைபற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையும் இந்தப் பகைக்குக் காரணமாகும். (டாக்டர் ராதா குமுத முக்கர்ஜி எம்.ஏ; பி.எச்டி., எழுதிய இந்து நாகரிகம்).

தென் இந்தியாவில் இருந்த மக்களே தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விவேகானந்தர் கூறியுள்ளார். (சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் எனும் நூலில் இராமாயணம் எனும் தலைப்பில் பக்கம் 587).

நேரு அவர்களும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர்களைத்தான் அசுரர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனைக் கொன்றான், அந்த நாள் தான் தீபாவளி என்பதும், மாவலியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் (குள்ளப் பார்ப்பான்) எடுத்துக் கொன்றான், அந்நாள்தான் ஓணம் என்றும், சூரசம்ஹாரம் என்றும் பண்டிகைகளையும் கோவில் திருவிழாக்களையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் திராவிடர்கள் முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டாமா? கடவுள் அவதாரம் எடுத்து திராவிடர்களைக் கொலை செய்த நாளை திராவிடர்களாகிய நாம் எப்படி கொண்டாடுவது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? நம்மை ஒழித்த சக்திகளை வெறுக்க வேண்டுமே தவிர, விழா கொண்டாடலாமா? இது ஓர் இனத்தின் தனமானத்துக்கு இழிவு என்று உணர்வு பெற வேண்டாமா?

இந்த உணர்வைத் தானே திராவிடர் கழகம் எடுத்துரைக்கிறது! இதனைப் புரிந்து கொள்ளாமலோ மான உணர்ச்சி அற்ற தன்மையாலோ தமிழர்கள் நடத்தும் ஏடுகள், இதழ்கள்கூட நரகாசுரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தீபாவளி - அதனைக் கொண்டாட வேண்டும் என்று எழுதுகின்றன, கட்டுரைகள் தீட்டுகின்றன என்றால், இதைவிட வெட்கக் கேடு, மானக்கேடு ஒன்று இருக்க முடியுமா?

பார்ப்பனர்கள் தீபாவளி மலர்களை வெளியிடுகிறார்கள். சங்கராச்சாரியார்கள் தீபாவளி நாளில் கங்காஸ்நானம் ஆயிற்றா என்று அருளுபதேசம் செய்கிறார்கள் என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆரியத்தின் வெற்றிச் சிந்தனையைப் புதுப்பிக்க முயற்சி செய்கிறார்கள்.

நமது தந்தையாரை ஒருவன் கொன்று விட்டான் என்று வைத்துக் கொள்ளுவோம். நாம் என்ன செய்வோம்? கொலை செய்தவனுக்கு விழா எடுப்போமா? பழி வாங்கத் துடிப்போமா? - சிந்திப்பீர், திராவிடர்களே! மானமுள்ள திராவிடன் தீபாவளி கொண் டாடலாமா? அன்று கறுப்புடை அணிவீர்! துக்கத்தை வெளிப்படுத்துவீர்!!

--------------------- “விடுதலை” தலையங்கம் 20-10-2011

0 comments: