Search This Blog

16.10.11

தீபாவளி பண்டிகைக் கொண்டாடக் கூடாது? ஏன்? எதனால்?

தீபாவளி பண்டிகை

வருஷா வருஷம் கடவுளுக்கு (சாமிகளுக்கு) கல்யாண உற்சவம் வருவது போல வருஷா வருஷம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

நம்மக்களும் பெரும்பான்மையோர்கள், கடவுளுக்கு எங்காவது கல்யாணம் செய்வாருண்டா? கடவுள்தானாகட்டும் கல்யாணம் செய்து கொள் ளுமா? என்கின்ற அறிவே இல்லாமல் எப்படி கோயில்களில் வருஷா வருஷம் கல்யாணம் செய்கிறார்களோ அதே போல் இந்தத் தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகிறார்கள்; இவற்றுள் அண்மையில் வரப்போகும் இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலை இருப்பதே இல்லை; ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு கொண்டாட்டங்கள் கொண்டாட வேண்டும். ஏதாவது ஒரு சாக்கில் கடவுள் மத பக்தி காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உள்கருத்தை அறிவது என்கின்ற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதுகிறோமானால், ஒருவனை பிராமணன் என்று அழைக்கிறோம் என்றால், அதன் கருத்து என்ன? என்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணாள் என்றால், நாம் யார்? ஒருவனை நாம் பிராமணன் என்று அழைப்பதால் நம்மை யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்று ஆனாலும்கூட அதன் கருத்து என்ன ஆகின்றது? அதனால் நாம் நம்மை சூத்திரன், கீழ் பிறப்பு என்பதாக ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது? என்பது போன்ற அறிவில்லாததனாலேயே ஒருவனை நாம் பிராமணன் என்கின்றோம். இந்தக் காரணத்தால் பிராமணன் என்பதாக ஒரு ஜாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு ஜாதி மகன் இருக்கவும் நாமே இடம் கொடுத்து உதவி செய்தவர்களாக ஆகிவிடுகிறோம். இதனால் பிராமணர்கள் என்பவர்களும் (பார்ப்பனர் கள்) தங்களை பிராமணர்கள் என்று எண்ணிக் கொண்டு, நம்மை சூத்திரர்கள் என்றே கருதிக் கொண்டு மற்றெல்லா விஷயங்களிலும் நம்மை சூத்திரர் களாகவே (கீழ்ஜாதி மகனாகவே) நடத்துகிறார்கள்.

இது போலவே நாம் இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம் நம் இழி நிலையை உணராத, மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி, வேறு யாராவது நமது இழி நிலை ஒழிப்புக்கு ஆக செய்யப்படும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டவர்களாகி, நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்படாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு காட்டி வைத்தவர்களாக ஆகிவிடுகிறோம்.

இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல், என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும் குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வருபவைகளும்,மற்றும் பல பொது முயற்சி கிளர்ச்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம் நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 99 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்துவரும் பல உரிமை மறுப்புக்களும் முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், நம் எதிரிகளால் அல்லது நம்மை இப்படி ஆக்கிவைத்து பலன் அனுபவித்துக் கொண்டு இருக்கும் மக்களால் இந்த நிலையை இப்படியே இருத்தி வைக்க வேண்டும் என்பதுமான ஒரு போட்டா போட்டி முயற்சிகளேயாகும்.

இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும் நாம் ஏன் உற்சவாதிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண் டாடக் கூடாது என்பதுமான விஷயங்களைப் பற்றி பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதாகும்.

அது போலவே இந்தக் காரணங்களால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுப்படுத்தி, அடக்கி ஒடுக்கி அழுத்தி வைத்திருக்கும் பிராமணர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம ஜாதிக்கிரமம் அவற்றை அனுசரித்த ஆதாரங்களாகிய வேத சாஸ்திர, புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும், பிரசாரம் செய்யவும், இயல் இசை நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வரவுமான எதிர் முயற்சிகளும்மாகும்.

இது பழைய போராட்டமே

இந்த இரண்டு போராட்டமும் இந்த நாட்டில் இன்று நேற்று அல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்றும் ஆதார பூர்வமாய்க் காணலாம். ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக் கிறது என்பதைக் காட்டுவதுதான், அதை ஆதரிக்கும்படி தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலான காரியங்களாகும்.

எதனால் இதை இந்தப்படி நாம் சொல்லுகிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்கு குறையாத உற் சவம், பண்டிகை நல்ல நாள் கெட்ட நாள் கொண் டாட்டங்கள், விரதம் முதலிய அநேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கு சாஸ்திர தர்மங்களுமே காரணமாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.

உதாரணமாக, கடவுள் அவதாரங்கள், கடவுள்களின் யுத்தங்கள், கடவுள்கள் செய்த (சம்ஹாரம்) கொலைகள், கடவுள்கள் செய்த வஞ்சக (கபடநாடக)ங்கள், கடவுள் களின் காலடிகளில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன எல்லாம் எதற்காக என்று பர்த்தோமேயானால் நன்றாய் விளங்கிடும்.

கந்தப் புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலிய எல்லாம் ஜாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு, மேல்ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் ஜாதி சம்பிரதாயத்தையும் உரிமையையும் நடப்பு களையும் கீழ் ஜாதியார் என்பவர்கள் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்காளவே இருந்து வரும்.
இதுதான் தேவாசுர (சுரர்-அசுரர்) போராட்டமாகவும், தேவர் -அரக்கர் போராட்டமாகவும், இராட்சத சம்காரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும்.

தெளிவாகச் சொல்லவேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி முதலானவர்களும், சூரர், அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்கு ஆக தோன்றி எதிர்த்தவர்களை கொன்று இருக்கிறார்கள் என்றும், இந்த கொலையைப் பற்றி மகிழ்ச் சியடையவும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடுகிறோம் என்றும் கூறலாம்.

ராட்சதர்கள் யார்?

புராண இதிகாச அரசுரர்களும், சூரர்களும், ராக்கதர்களும், இராட்சதர்களும் என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால், முறையே இந்த சூத்திரர்களும், பிராமணர்களும் என்பவர்கள் அல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அனேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களான மேதாவிகளால் எழுதி வைக்கப் பட்டிருந்தும், இன்றைய ஆராய்ச்சி நூல்கலாலே அறியலாம்.

புராணங்களை எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தை தெளிவாய் விளக்கு கின்றன.

அதாவது, இரண்யன் பிராமணர்களுக்கு எதிரி, பிராமணர்களின் உயர்சாதித் தத்துவத்தையும் அவர்களுடைய ஜபதப மந்திரத் தத்துவத்தையும் ஒப்புக் கொள்ளாதவன்; பிராமணர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன்; இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக பிராமணர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும்; இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு அழித்து ஆகவேண்டும்; ஆதலால் ஓ! தானவர்களே! (ஏவலாளர்களே) மண்வெட்டி கோடாரி கடப்பாறை கொண்டு புறப்படுங்கள்; இந்த பிராமணர்கள் ஜபதபம் எக்கியம் ஓமம் செய்யும் இடத்தை அணுகுங்கள். அவை களை அழித்துத் தரை மட்டமாக்குங்கள்; புறப்படுங்கள் என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இரண்யன் தம்பி மீதும் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.

இரண்யன் தம்பி மீது பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இது போலவே இராணவன் மீதும், அவன் தேவர் களுக்கு விரோதமாக அவர்கள் யாகாதிகளை அழித்த தாகவும், பிராமணர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது.

இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இவைகள் நடந்ததோ இல்லையோ, உண்மையோ, பொய்யோ, எப்படி இருந்தாலும் மேல் ஜாதி, கீழ்ஜாதி, சுரர் - அசுரர், தேவர்கள்-ராக்கதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப் பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்ட தாக இருக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாது. பாகவத்தில் இரண்யன் பிராமணர்கள் மோசக்காரர்கள் என்றும், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் ஜாதி குறிப்பிட்டுச் சொன்னதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்றும் கந்த புராணமும் இராமாயணமும் பார்த்தால், அவற்றில் வரும் பெயர்கள் மாத்திரம் வேறு வேறாக இருக்கின்றனவே ஒழிய,இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன.கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.

எனவே, இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள் அதாவது சூத்திரர்கள் என்று இழித்துக் கூறப்படுபவர்களாக்கிய நாம் கொண்டாடலாமா என்பதுதான் இன்றைய பிரச்சினையாகும்.

தீபாவளி

இனி எடுத்துக்கொண்ட தலைப்பின் விஷயத்துக்கு வருவோம். அதாவது தீபாவளி பண்டிகை பற்றி, இப்படிப் பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் தீபாவளி என்கின்ற பண்டிகையும் ஒன்று. முதலாவது இந்தப் பண்டிகைக்கும் அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லை எனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பெயர். இந்த தீபவரிசை விழாவை கார்த்திகை மாதத்தில் தனியாகக் கொண்டாடுகிறோம். அப்படி இருக்க இந்தப் பெயர் குறிப்பிட்ட பண்டிகைக்குப் பொருத்தமில்லை. இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியம் என்னவென்றால், நரகாசுரன் என்ற ஒரு அசுரன்; இவன் ஒரு தெய்வப் பெண்ணை சிறை பிடித்துக் கொண்டான். (கந்தபுராணம் இந்திரன் மனைவியை சூரன் சிறைப்பிடித்த கதை, தீபாவளி நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறைபிடித்த கதை மற்றும் மற்றொரு தெய்வப் பெண்ணாகிய அதிதி என்பவள் காதணியைக் கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படி கவர்ந்தானோ தெரியமுடியவில்லை) இதுதவிர இவனது பிறப்பு வளர்ப்பு மிகவும் அதிசயமானது. அதாவது உலகத்தையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்ட இரண்யாட்சன் என்றும், ராட்ச தனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாக அவதரித்து ராட்சதனைக் கொன்ற பின்பு, அந்தப் பன்றி உருவே பூமியைப் புணர்ந்து அதில் பூமிக்குக் கர்ப்பம் ஏற்பட்டு, அந்தக் கர்ப்பத்தில் உண்டானவன் இந்த நரகாசுரன் சாட்சாத் கடவுளுக்கும் கடவுள் பத்தினியாகிய பூமாதேவிக்கும் பிறந்த இவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் தேவர்கள் முறை யிட்டார்கள். மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கிருஷ்ணனும் அவன் மனைவியுமாய், இந்த நரகா சுரனைக் கொன்றுவிட்டார்கள். மகிழ்ச்சியடைய வேண்டும்.

அப்படிக் கொன்றதால் தேவர்கள் சுகம் அடைந் தார்கள். அந்த சுகத்துக்கு ஆகத்தான் நாம் மகிழ்ச் சிக்கு ஆகவே தீபாவளி கொண்டாட வேண்டும்.

இதுதான் தீபாவளி தத்துவம். இது சம்பந்தமான கதையை கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ கடுகளவு பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? எவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் கொண்ட கதையை, அதுவும் நமக்குக் கேடான கருத்துக் கொண்ட கதையை, நாம் நம் தெய்வீக மதக் கதையாக, ஏன்? கதையாகக் கூட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாகக் கொண்டு கொண்டாடுவதா? என்பது யோசிக்கத் தக்கதாகும்.

நரகாசுரன் ஒரு திராவிட நாட்டு அரசனாகவும் திராவிடத்தை (வங்களாத்தை)ச் சேர்ந்த ஒரு பிராக் ஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகிறான். கதை எப்படி இருந்தாலும் இவனும், இந்த நரகாசுரனும் இரண்யாட்சன், இரணியன் சூரபத்மன் முதலிய திராவிடத் தோன்றல்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவனாவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம்.

ஆகவே, இன்று நாம் (திராவிடர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட அவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு ஆக நாம் துக்கப்பட வேண்டுமே யொழிய, மகிழ்ச்சி அடைவது மடமையும், இழிவும், ஈனமுமாகும். ஆதலால் திராவிட மக்கள் எவரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாடக் கூடாது என்று வேண்டிக் கொண்டதோடு, திராவிட கழகத்தவர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தீபாவளியன்று கருப்புச் சட்டையுடன் நரகாசுரனுக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டு ஊர்வலம் வந்து அவனது கொலைக்காகத் துக்கப்படும் துக்க நாளாகக் கொள்ள வேண்டும்.

-------------------தந்தைபெரியார் -- ”விடுதலை” தலையங்கம் 12-10-1949

0 comments: