Search This Blog

29.10.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -16

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (16) பெரியாரைப் பற்றி சோ எழுதியது என்ன?



9.7.1953 நாளிட்ட விடுதலை தலையங்கத்தின் தலைப்பு ஆரியத்தின் அற்பப் புத்தி! என்ன அந்த அற்பப் புத்தி? கோபால்சாமி அய்யங்கர் இறந்து போன போது அரைப் பத்தி அளவுக்கு அனுதாபச் செய்தி வெளியிட்ட தமிழ்நாட்டு ஆரியத் தலைவர் ஒருவர் உலகத் தலைவர்களில் முதலிடம் பெற்றிருந்த ஸ்டாலின் இறந்தபோது, சாவது உலக இயற்கைதான். இவருக்குப் பின்னால் மற்றொருவரும் இவர் இடத்துக்கு வருவார் என்று ஒரே வரியில் கூறி முடித்துக் கொண்டார். இதனால் ஸ்டாலினுடைய புகழ் குறையவில்லை. இப்படிக் கூறியவரின் சிறுமைக் குணம்தான் வெளிப்பட்டது. 3-ஆந்தரம் - 4 ஆந்தரமான பார்ப்பன ருக்காக அனுதாபத் தலையங்கம் எழுதுகின்ற ஹிந்து பத்திரிகை பனகல் அரசர், கே.ஆர். சண்முகம் போன்ற திராவிட இனத் தலைவர்களுக்கு ஒரு வரி கூட எழுதவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்து போன்ற ஏடுகள் கூட தனியாருடையவை. அவை எப்படியோ போகட்டும். அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலி நிலையம் எப்படி நடந்து கொண்டது? ஆல் இண்டியா ரேடியோ அல்ல; ஆல் அய்யர் அண்ட் அய்யங்கார் ரேடியோ நிலையம் என்றுதான் திராவிடர் கழகத்தவர்கள் அழைப்பது வழக்கம். அதைப் பற்றியும் அன்றைய விடுதலை (9.7.1953) அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு தெலுங்குப் பார்ப்பனர் - முதியவர் - இறந்து போனார். அவர் ஒரு மருந்து வியாபாரி. கேசரி குடீரம் என்ற மருந்து விற்றுப் பெரும் பொருள் திரட்டியவர். இவரைப் பற்றி சென்னை வானொலி நிலையத்தார் செய்தி பரப்பியதுடன் வரலாற்றுக் குறிப்பு, பாராட்டுக் குறிப்பையும் ஒலி பரப்பினார்கள். இவருடைய மருந்தின் பெயரால்தான் இவர் பெயர் மக்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்டவர்க்கு - பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தால் - வானொலி இலாகாவில் விளம்பரம்! இதேபோல் அண்மையில் காலஞ் சென்ற டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி யாரைப் பற்றியும் சென்னை வானொலி நிலையத்தார் தனிப்புகழ் பாடினர். ஆனால் மறைமலையடிகள், ஆர்.கே.சண்முகம், எஸ்.முத்தய்யா (முதலியார்) போன்ற மாபெரும் தலைவர்கள் மறைந்தபோது வானொலி யில் எந்தப் பாராட்டுரையும் வழங்கப் படவில்லை. ஆர்.கே.எஸ். மரணம் பற்றி 2-3 வாக்கியங்களே கூறினர். இவர் காங்கிரஸ் கட்சிப் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அக்கட்சியின் முதலாவது மந்திரிசபை டில்லியில் ஏற்பட்ட போது இவர் எதிர்க்கட்சித் தலைவராயிருந்துங்கூட தனித்திறமை கருதி நிதியமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர். அகில இந்தியப் புகழ் மட்டுமல்ல; சர்வதேசப் புகழும் பெற்றவர். நிர்வாகத் துறைகள் பலவற்றிற்குத் தலைமை தாங்கித் தனித் திறமை காட்டியவர். கலாச்சாரத் துறையிலும் தமிழிசைக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக சி.ஆர். கல்கி யார் போன்ற ஆரியத் தலைவர்களின் புகழுரைகளுக்கு உரிமையாயிருந்தவர். திராவிட இன உணர்ச்சியைக் காட்டிக் கொள்வதே வெட்கம் என்று கூடக் கருதியவர். இப்பேர்ப்பட்ட ஒருவருக்கே வானொலி நிலையத்தில் இருட்டடிப்பு நடக்கிறது என்றால் மற்ற திராவிடத் தலைவர்களின் கதி என்னவாகும்? என்று தலையங்கம் தீட்டியதே விடுதலை. இவற்றையெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்கள். உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு ஹிந்து பார்ப்பன ஏடுதானே! தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான சி.பி.ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட ஹிந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே! அன்னை மணியம்மையார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை மரணம் அடைந்தோர்க்கென்று ஹிந்து ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில் (ளிதீவீணீக்ஷீஹ்) வெளியிட்டு இருந்தது என்றால், இவற்றை விட பார்ப்பனத் திமிர் பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

இவ்வளவு இருந்தும் இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ்நாட் டில் ஒரு அதிசயம் நடந்திருக்கின்றது. அதுதான் துக்ளக் இதழ் தந்தை பெரியார் பற்றி தீட்டிய தலையங்கம் ஆகும். சோவின் சிந்தனைகளையும் மீறி அந்த இடத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார் என்று தான் இதற்குப் பொருள். இதோ சோ எழுதுகிறார்:

திரு ஈ.வெ.ரா.

இவர்களா பெரியார்கள்? என்று பலரைப் பார்த்து, திரு ஈ.வெ.ரா. கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது . . . ஜாதி, மத வித்தியாசங்களின் அடித் தளத்தையே ஆட்டி வைத்து சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அடித்து நொறுக்கும் பணியில் ஈடுபட்டதற்காக இவரைப் பாராட்டத்தான் வேண்டும். . . அர்த்தமற்ற இந்த ஜாதி, மத பேதங்கள் என்ற வறட்சி நிலையில் அகப்பட்டுத் துவண்டு கொண்டிருந்த தமிழ் நாடு என்ற பயிர் மீது ஈ.வெ.ரா. என்ற பருவ மழை கொட்டியது . . . தன் மனத்திற்கு அவ்வப்போது சரியென்று படுவதை எந்த மேடையிலும் துணிவாகப் பேசிவிடும் இவர் நேர்மை, பொது வாழ்வில் சஞ்சரிக்கும் மற்றவர்களிடம் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். 1-.6.-1970 துக்ளக்கில் பெரியார் பற்றி எழுதியிருந்த கட்டுரையிலிருந்து ஒரு சில பகுதிகளைத்தான் மேலே கொடுத்திருக்கிறோம்... அந்தக் கட்டுரையிலும் சரி, மற்ற பல சந்தர்ப்பங்களிலும் சரி, பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடைய சில செயல்களை நாம் விமர்சனம் செய்திருக்கின்றோம். அர்த்தமற்றவையாகவும், பல சமயங்களில் அவருடைய பேச்சுக்கள் வேதனையளிப்பதாகவுமே இருந்தன என்பதே நம் அபிப்பிராயமாக இருந்தது. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப் போக முடியவில்லை என்றாலும் ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல் வாதிகளே எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில் திரு.ஈ.வெ.ரா. மட்டும் தன் கொள்கைகளில் கடைசி வரையில் அசையாது பிடிப்புக் கொண்டிருந்தார். ஊருக்குத் தகுந்தாற்போல், மேடைக்குத் தகுந்தாற் போல், வந்திருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற் போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில், எங்கு பேசினாலும் சரி, எவர் வந்தாலும் சரி, தனது கருத்தை மண்டையிலடித்தாற் போல் கூறும் துணிவு கொண்டி ருந்தவர் திரு. ஈ.வெ.ரா. இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் ஒன்று தனக்கென எந்தவித அபிப்பிராயமும் இல்லாதவர்கள் ; இரண்டு அப்படியிருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுபவர்கள். அப்படிப்பட்ட . . . . திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் அவர். ஒரு தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் இவர் மற்றவர்களுக்குக் காட்டிய மரியாதையைக் கேள்விப் பட்டால் வியப்பு மேலிடுகிறது! வயது, அந்தஸ்து, பிறப்பு இந்த மாதிரி அடிப்படைகளிலெல்லாம் சற்றும் வித்தியாசம் பாராமல், எந்த மனிதனையும் மனிதன் என்று உணர்ந்து மதிப்பதிலும், மரியாதை அளிப்பதிலும் இவருக்கு நிகராக யாருமே இல்லை யென்று கேள்விப்பட்டிருக்கிறோம். அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் யாரிடமும் திரு.ஈ.வெ.ராவுக்கு வெறுப்பு உணர்ச்சி இருந்தது இல்லை.

--------------------------15.-1.-73 துக்ளக் இதழிலிருந்து ஒரு பகுதி. . .

இராஜாஜியுடன் இவருக்கு இருந்த அபிப்பிராய பேதங்கள் ஆயிரமாயிரம். அவரைப் பற்றி இவர் தாக்கிப் பேசிய மேடைகள் கணக்கில் அடங்காது. அவர் ஆஸ்திகர். இவர் நாஸ்திகர். இப்படி அவருக்கும் இவருக்கும் மிகுந்த மனவேறுபாடுகள்தான் எத்தனை?
ஆனால் இராஜாஜி இறந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரியர் ஈ.வெ.ரா. துடித்த துடிப்பையும், உடல் நலக் குறைவு இருந்தும் இடுகாட்டிலும் வந்து அமர்ந்து இராஜாஜியின் அந்திமக்கிரியைகள் முடியும் வரை அங்கேயே இருந்து, தாங்க முடியாத துயரத்தை இவர் குழந்தை போல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந் ததையும் நேரில் கண்டவர்கள் கூறும் போது மெய் சிலிர்க்கிறது. நட்பிற்கு உதாரணம் வகுத்த இவருக்கு, இந்த சமயத்தில் மரியாதை செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டில் குறைந்து கொண்டே வருகிறார்கள். போலியாகவும், மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகத் தனது மனச்சாட்சியை அமுக்கிக் கொண்டும் வாழ்பவர்களுமே நிறைந்து காணும் இக் காலத்தில், உண்மையாக வாழ்ந்த ஒரு சிலரில் திரு.ஈ.வெ.ராவும் ஒருவர். அவருடைய கொள்கைகள் சிலவற்றிலும் அவருடைய செயல்கள் பலவற்றிலும் நாம் பல முறை குற்றங்கண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் மீண்டும் சுட்டிக் காட்ட இது நேரமில்லை. ஆனால், அவருடைய எண்ணங்களின் நேர்மையில் நாம் குற்றம் கண்டதும் கிடையாது; காண வும் முடியாது. சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத சில காரியங்களை அவர் செய்திருக்கிறார் என்று கூறும்போது, சமூகத்திற்கு நன்மையையும் செய்திருக்கிறார் என்று ஒப்புக் கொண்டே தீர வேண்டும். ஜாதி துவேஷங்கள் வெகுவாகக் குறைந்த பிறகும் அதைப் பற்றி விடாமல் பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட, 95 வயதாகியும் கடைசிவரை புத்தி தீட்சண்யத்துடன் அவர் வாழ்ந்தது இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு. மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்று கூறி மக்கள் மனத் திருப்தி பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. தெய்வங்களிடம் கூட நம்பிக்கை வைக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வந்தவர் திரு. ஈ.வெ.ரா. தெய்வ நம்பிக்கை கூடாது என்று அவர் கூறியதை நம்மால் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் தெய்வங்களின் அளவிற்கு, அருகதையற்ற மனிதர்களை உயர்த்தி, அந்த மனிதர்களிடம் மூடநம்பிக்கை வைத்து விடுவது என்ற நம் நாட்டு மக்களின் மடமை என்றாவது நீங்கினால் அன்றுதான் பெரியாரின் வாழ்க்கை இலட்சியம் ஓரளவாவது ஈடேறியிருக்கிறது என்று அர்த்தமாகும். அது என்றாவது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன், மறைந்த திரு.ஈ.வெ. ரா.வின் துணிவிற்கும் நேர்மைக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.

----------------------------(துக்ளக் 1-.1.-1974)

என்னதான் வலிந்து குறை சொல்லி எழுதி இருந்தாலும் தந்தை பெரியார் அவர்களின் சீலமிக்க கொள்கையினையும், நேர்மையையும், கொழுந்து விட்ட அவர்தம் பண்பாட்டின் நீட்சியையும் சோ போன்ற பார்ப் பனர்களே புறந்தள்ளிவிடவில்லை. இன்றைக்கு அதே துக்ளக்கில் தந்தை பெரியார் அவர்களையும், அவர் கண்ட இயக்கத்தையும், இயக்கத் தலைவர்களையும் மானாவாரியாகக் கொச்சைப்படுத்தி சேறு வாரி இறைத் தாலும், அவை கதிரவனைக் கண்டு சத்தம் போடுவதாகவே கருதப்படும்.


(பார்ப்போம்)

------------------------------------கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 29-10-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: