Search This Blog

26.6.10

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?

சமூகநீதியின் விளைச்சல்


திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று திமிரோடு பேசும் நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

1916-இல் சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை நன்றியுள்ள பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சில் பசுமையாக நிலை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும்.

வரலாற்று ரீதியாகவும் பல உண்மைகள் அதில் வெளிப்படுத்தப்-பட்டு இருந்தன. பிரத்தியட்சமாக கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலை என்ன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவதாகவும் அது அமைந்திருந்தது.

அந்த அறிக்கையைக் கண்ட இந்து கூட்டம் எரிச்சல் அடைந்தது. தங்களுக்கு இடையூறு ஏற்படப் போகிறது என்பதை உணரவும் செய்தது.

இந்து ஏடு எழுதியது. It is with much pain and surprise that we perused the document மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்-துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம் என்று இந்து எழுதியது என்றால் அந்த ஆவணத்தின் வீரியத்தை விவரிக்கவும் வேண்டுமோ!

1928-இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக வந்த எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பார்ப்பனர் அல்லாதோர் வயிற்றில் பால் வார்த்தது சமூகநீதி பயிர் தமிழ் மண்ணிலே செழித்தோங்க நடவு மேற்கொள்ளப்பட்டது. இடையிடையே எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் முதுகில் குத்துகள்!

இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற வாளுக்குக் கிடைத்த முதல் பிரயோகம் தமிழ்நாட்டின் வகுப்புவாரி உரிமை மீதுதான். தந்தை பெரியார் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரும்படி நிர்பந்தித்தார் வெற்றியும் பெற்றார்.

ஆச்சாரியார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்; வழக்கம் போல தமது குருநாதரான மனுவின் நூல் பிடித்து, சென்னை மாநிலத்தில் இருந்து வந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டம் என்ற நவீன வருணா சிரமத்தைத் திணித்தார்.

வாபஸ் வாங்குகிறாயா? அக்ரகாரம் பற்றி எரிய வேண்டுமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் எரிமலைக் குரலின் காரணமாகத்தான் ஆச்சாரியார் பதவியைத் துறந்து ஓடினார். அன்று விரட்டப்பட்டவர் (1954) கடைசி வரை அரசியலில் தலையெடுக்க முடியாத நிலையைத் தந்தை பெரியார் உருவாக்கினார்.

பச்சைத் தமிழர் காமராசர் தந்தை பெரியாரால் கண்டு எடுக்கப்பட்ட வயிரமாகும். கல்வி சகாப்தம் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று உச்சி மோந்தார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்க ஆட்சியும் கல்விப் பயிரை வளர்த்தது.

அவ்வப்பொழுது இடையில் ஏற்படும் தடைகளைத் தவிடு பொடியாக்கிய தடந்தோள் திராவிடர் கழகத்திற்கு இருந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த இடஒதுக்கீடு அகில இந்திய அளவில் அமலுக்கு வர தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடியது.

42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் அது நடத்தியது. ஒரு சமூகநீதிக்காவலரை வி.பி.சிங் அவர்களை அடையாளம் கண்ட பெருமையும் கழகத்திற்கே உரியது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவித்து வருகின்றனர். முதல் தலைமுறையாக பட்டதாரியா? இதோ சலுகைகள்என்று வாரியிறைக்கும் வள்ளலாக மானமிகு முதல்வராக கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

தகுதி, திறமை எங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டியவர்கள் இன்று மலைத்து நிற்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இமயத்தின் உச்சிக்கே சென்று சாதனைக் கொடியைப் பறக்க விடக் கூடிய வர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைபற்றிய புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குள்ள இடங்கள் 460

இதில் பிற்படுத்தப்பட்டோர் 300

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72

தாழ்த்தப்பட்டோர் 18

முசுலிம்கள் 16

முன்னேறியோர் 54

இதில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் வாங்கியோர் 8 பேர்கள். இதில் பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1..

இவ்வாண்டு (2010) பொறியியல் கல்லூரி சேர்க்கையில் முதல் 10 இடங்களைப் பெற்றோர் (200-க்கு 200) பத்து பேர்.

அதில் பிற்படுத்தப்பட்டோர் 7

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3

(இதில் பெண்கள் இருவர்)

எவ்வளவு பெரிய மாற்றம் மகத்தான மாற்றம்! அன்று நாற்று நடவு _ இன்று மனங்குளிரும் மகசூல்!

இடஒதுக்கீடு என்பது ஜாதியை வளர்க்கும் ஏற்பாடு என்று கத்திப் பார்த்தனர். தகுதி போய்விடும், திறமை தீய்ந்து போய் விடும் என்று தீக்குழியில் விழுந்ததுபோல குதித்தார்கள்.

இடஒதுக்கீடு வந்ததால் கல்வி வளர்ந்தது; ஒரு பக்கம் காதலும் மலர்ந்தது -; அதன் மூலம் இன்னொரு பக்கம் ஜாதிக்கும் சவக்குழி வெட்டப்பட்டுக் கொண்டு வருகிறது.

தகுதி போய்விடும் திறமை போய்விடும் என்பதெல்லாம் மாய்மாலக் கூச்சல்! வாய்ப்புக் கொடுங்கள் சாதித்துக் காட்டுகிறோம் என்றனர் ஒடுக்கப்பட்ட மக்கள். இதோ சாதித்தும் காட்டி விட்டனர். என்றாலும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு உகந்த இடங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் இன்னும் ஏமாற்றம் தான். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றாலும் அது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனு டைய அடையாளங்கள்தான் இந்த சாதனைகள்!

இலக்கை அடைவோம்!

அதுவரை சமரசங்களுக்கு

இடம் இல்லை,

இல்லவேயில்லை.

வாழ்க பெரியார்!

வெல்க சமூகநீதி!

-----------------------மின்சாரம் அவர்கள் 26-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.

தமிழ் ஓவியா said...

அனைத்து மதங்களைப் பற்ரியும் தி.க. விமர்சித்துள்ளது . நூல்கள் வெளியிட்டுள்ளது. பல கட்டுரைகள் விடுதலை உண்மை இதழ்களில் வெளிவந்துள்ளது.
தமிழ் ஓவியா வலைப்பூவிலும் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளது.