Search This Blog

24.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை - 2



சென்னை மாகாண 3 ஆவது தமிழர் மகாநாடு திறப்பு விழா பேருரை
கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்கம்

நேற்றையத் தொடர்ச்சி...

ஹிந்தி என்னும் குளிர் செந்தீயை அவள் இனிய உடம்பில் சிறது சிறிதாக நுழைத்து விடலாமென்று கருதுகின்றார்கள். ஹிந்தி வளர இடம் பெறுமாயின், இன்னுஞ்சில ஆண்டுகளில் உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் தமிழ் மணம் அறவேயொழிந்து பள்ளிப்புத்தகம், பத்திரிகையுலகம், சினிமாக்கதை, சிறந்த நுல்கள், செவ்விய பாடல்கள், அரசியல் நிகழ்ச்சி, ஆலயப் பூசனை, அகத்திற் பேசும் உறவினர் மொழி ஆய்வெல்லாம், ஹிந்தி மயமாய்த் தமிழர் நாடும் ஹிந்திய நாடாகவே இந்திய நாடும் நடுவெழுத்தாய் உயிரினை இழக்கும். உலக சரித்திரம் ஊனம் எய்தும். தமிழர் நாகரிகமே இந்திய நாகரிக உயிரெனும் நுட்பம் ஒழிந்திடலாகும். தமிழர்க்கு இகழ்ச்சியும் கேடும் இதனின் வேறேது?

செய்கடன் ஆற்றத் தருணம் இதுவே

இப்பேரிடையூற்றை நீக்குதற்குத் தமிழ் மக்கள் கண் விழித்துக் கடமையாற்றுஞ் சமயமிதுவே. கடமையை நிறைவேற்றுதற்கு உண்மைத் தமிழர் உடல் பொருள் ஆவி மூன்றும் அர்ப்பணம் செய்தற்குப் பிற்படலாகாது. மிகுதியால் மிக்கவை செய்வாரைத் தகுதியால் தாக்கித் தலைகுனியச் செய்யாவிடில் தமிழர் என்னும் பெயர்க்கு தமிழ் நாட்டினர் தகுதியிலார் என்பதே முடியும். தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பாடமாக ஆக்குவதை எதிர்த்தவர்கள் பலர், இப்போது இந்தியை வற்புறுத்தக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இனி எவரும் எவ்வகைத் தேர்தல்களிலும் அத்தகை-யார்க்கு முன்னேற்றங் கிட்டுமாயின் அறிவிலி என்ற சொல் தமிழர்க்கே வாய்ப்புடைத்தாகும்.

நமது குறைபாடு

தமிழரின் பெருங்குறை யாதெனின், தயவினால் தலைக் கேடு தேடிக் கொளல், அவர்கள் தம் உரிமையைப் போற்றுதலைத் தந்நலந்தேடும் தாழ்வென்று நினைத்து தாழ்வடைபவர். வீரமாய் எதனையும் தொடங்கி விடாமுயற்சியின்மையாக மோசம் போவார். தந்நூல் பேணாது பிறநூல் கற்பவர் உலகம் புகழும் தலை சான்ற கல்வி கற்பார் சிலர். அவர் சொல் கேளார் பலர். சுற்றத்துட் குற்றம் காண்பார். இனத்தார் பசித்திருப்ப அயலார்க்கு வயிறார அமுதிடுவர். தமிழ்ச் செல்வர் பலர் எதிரியின் முகமன் வலையில் அகப்பட்டு பெருமை பிதற்றி உரிமை இழப்பர்.

இத்தகைய குறைகளை எதிரிகள் நன்கறிவர். அன்னோர் சொல் நலங்-காட்டி பொருட் பழம் பறிப்பர். மாணவராக நின்று ஆணவராய் ஆசிரியராய் ஆட்சி புரிவார். தமிழரை பிரித்தாளும் பெற்றியில் இணையற்ற திறமைசான்றவர். எதிர்த்தாற் பதுங்கி அற்றம் பார்த்து தங்கருத்தை மெல்லென நுழைத்து இடைவிடா முயற்சியில் நாளடைவில் தமது வெற்றி நாட்டுவர். இந்நுட்பங்களைத் தமிழ் மகாநாட்டுத் தலை அறிஞர் தங்கடமை நிவேற்றுமிடத்து மனதில் பதிவித்துக் கொள்ளல் வேண்டும்.

நாம் செய்ய வேண்டுவதென்ன?

இனி செய்யற்பாலன சில தொகுத்துரைப்பாம். தமிழன்னையின் பெருமையைத் தமிழ் மக்கள் யாவரும் தெள்ளத் தெளிய உணரும் படி பத்திரிகையும் பிரசாரமும் ஓய்வில்லாமல் நடைபெற வேண்டும். தமிழின் ஏற்றத்தை உண்மையாக கருதும் எவரையும் நம்மவராகவே தழுவிக் கொள்ளுதல் வேண்டும். தமிழுக்கு உழைக்கும் அறிஞர்க்கு நேரும் இன்னல்களை முற்பட்டு அகற்றல் வேண்டும். தமிழுக்கு நேராகவோ மறைவாகவோ ஊறு செய்யும் பத்திரிகைகளை ஆதரியா தொழிதல் வேண்டும். போதுமான மொழிப்பற்று இல்லாத தமிழ்ச் செல்வர்களின் ஆதரவை கொண்டு பகைப் பத்திரிகைகள் பெருமிதமுற்று பெருநடை நடந்து பெருந்-தீங்கு விளைக்கின்றன. அவர்கள் சூழ்ச்சியினின்று நம்மை விடுதலை செய்யும் வீரப்பத்திரிகைகளை வேரூன்றச் செய்தல் வேண்டும்.

சிறந்த தமிழ் நூல்களுக்குத் தமிழ் மாண்பு விளக்கும் ஆராய்ச்சி முறையில் உரைகண்டு வெளிப்படுவதற்கு பெருந்துணை புரிதல் வேண்டும். தமிழ் நாகரிகத்திற்கு கண்ணாடியாய் அமைந்த தொல்காப்பியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உரைகள் அது தோன்றிச் சில்லாயிரம் ஆண்டுகள் கழிந்தபின் வடநூல் ஒளியினில் வகுக்கப்பட்டனவாகும். உரைக்கேற்ப நூற்பாக்கள் புகுத்தப்பட்டும் திருத்-தப்பட்டும் வைக்கும் முறை மாற்றப்பட்டும் இருப்பதை ஆராய்ச்சியாளர் அறிவர். அவ்வுரைக் கொண்டு நுல் கற்பவர் கலப்பற்ற உண்மையைக் காண இயலாதாவரே யாவர். அவ்வாறே திருவள்ளுவர் நூலுக்கும் தமிழ் நலங்காட்டும் புத்துரை இனியே அமைய வேண்டும். பரிமேலழகர் உரையில் கொள்ளத் தக்கன பல உள. எனினும் அதன் நிறம் தமிழ் நிறமன்று. வள்ளுவர் கூறிய பொது அறத்தை ஒரு குலத்துக்கொரு நீதிகூறும் மனு முதலிய நூல்களிற் காண்கவென்று அது கற்பிக்கின்றது.

பெண்கல்வி வேண்டாமென்று பேசுகின்றது. அரசியற் கொள்கைகக்கு ஆரிய நூலில் ஆதாரம் தேடுகின்றது. காமத்துப்பாலும் வடவாவழித் தென்கின்றது. அதனால் தமிழரது பண்டை பொது நெறி மறைவுற்று வருணக் கொள்கை மதிப்புறுவதாயிற்று. சங்க நூல்களுக்கும் தமிழர் மனப்பான்மையைத் தெள்ளிதின் உரைக்கும் தெளிவுரைகள் ஏற்படல் வேண்டும்.

புது நுல்கள் தோன்ற வேண்டும்

தண்டமிழ்க் காப்பிய நலங்களைக் கவினுற விளக்கும் நற்றமிழ் வாசக நுல்கள் நவநவமாக நனி பரவுதல் வேண்டும். புராணப் பனுவல்கள் ஆராய்ச்சியில் புடைக்கப்படுதல் வேண்டும். மெய்யாராய்ச்சியில் நிலை பெறுவனவே தழுவத்தக்கன. ஏனைய தள்ளத்தக்கன. சரித்திரம் செம்மை பெறுதல் வேண்டும். தமிழின் விழுமிய கருத்தும் நூலும் ஆங்கில முதலிய பிறமொழி தம்மினும் பிறங்குதல் வேண்டும். சித்தர், நூலாராய்ச்சி செவ்விதிற்றிகழ்ந்து மருத்துவ சோதிட மந்திர யோக நூல் முறைகளைத் தெற்றென விலக்குந்தெளிவு நூல்கள் பலப்பல ஆதல் வேண்டும். மேனாட்டு அறிவியல் நூல்கள் பலவும் தமிழர் பாங்குற அமைத்தல். ஆங்கிலங்கற்றவர் முதற்கடமையாகும். நயமிக்க வடநுல் பிறநூல்கள் தமிழிற் கொணர்தல் அவ்வம்மொழியில் வல்லுநர் கடமை செந்தமிழிசைகளே தமிழ் நன்மக்களால் போற்றத்தக்கன. இசைவல்ல தமிழர் இன்றமிழ்ப் பாட்டே பாடுதல் வேண்டும். இசைத் தமிழ் முழக்கம் தமிழ் மக்கள் யாவர் வீட்டிலும் நிறைதல் வேண்டும். நாடக கலைகள் தமிழர்சீரை நாடுதல் வேண்டும்.

-------------------தொடரும் - "குடிஅரசு", 2.1.1938

0 comments: