Search This Blog

23.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை - 1

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிந்தனை
சென்னை மாகாண 3 ஆவது தமிழர் மகாநாடு திறப்பு விழா பேருரை
கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்கம்

தமிழன்பர்களே!

தமிழர் என்பார் தமிழைத் தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். தமிழ்நாட்டிற் பிறந்தும் தமிழைத் தாய்மொழியெனக் கருதாதவர் தமிழராகார். தமிழ் நாட்டிற் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போற்போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்ததெனக் கருதுபவருந் தமிழரே. தமிழ்நாட்டிலே தமிழிலேயே இறைவனை வாழ்த்தி வழிபடல் வேண்டும்; தமிழிலேயே சமயச் சடங்குகள் யாவும் நடைபெறல் வேண்டும்; தமிழிலேயே அரசியல் நிகழ்ச்சிகள் எழுதப்பெறல் வேண்டும்; தமிழிலேயே எக் கலைகளையும் கற்பித்தல் வேண்டும்; தமிழிலுள்ள அறிவுக்களஞ்சியங்களைப் பாதுகாத்தல் வேண்டும்; தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஒன்றே கட்டாயமொழிப் பாடமாக இருத்தல் வேண்டும் என்ற கொள்கைகளை மேற்கொண்டு ஒழுகுபவரே உண்மைத் தமிழராவர். உண்மைத் தமிழர் ஒருங்கு வீற்றிருந்து தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் நாடும் பேரவை தமிழர் மகாநாடு எனப்பெயர் பெறும். இத்தமிழ்ப் பேரவையிற் புகுவோர் நினைவில் வைத்தற்குரிய சிலவற்றை இங்கே குறிப்பிடக் கருதுகின்றேன். தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வதில் உண்மையாக உழைப்பவர்களுள் சாதி சமயம் பற்றிய பிளவுகள் கருதப்பட மாட்டா. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், கிறிஸ்தவர், மகமதியர், அய்ரோப்பியர் முதலிய யாவரும் தமிழன்னைக்குத் தொண்டு செய்வதில் ஒன்று சேரலாம். பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்குந் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்துதற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப்பற்று ஒன்றேயாகும். தாய்மொழிப் பற்றில்லாத தாய்நாட்டுப் பற்று உயிரில்லாத உடம்புபோல்வதாகும்.

தமிழர் சமத்துவ உணர்ச்சி

தமிழ் அறநூல் பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் எனவும் தமிழ்ச் சமயநூல் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனவும், பழந் தமிழ்பனுவல் யாதும் ஊரே யாவருங் கேளிர் எனவும் முழங்குங்காலை தமிழ் மக்களைச் சாதியால் வேறு செய்து, சமயத்தால் மாறு செய்து, மொழியினாற் கூறு செய்து அவர்களுக்குள் ஒற்றுமைக் கேடுண்டாக்கியது யாது? மரத்தின் அடியில் யாவருங் கலந்து முதல்வனைத் தொழுத தமிழர்பால் வருணம்பற்றிக் கோயில் புகுதல் கூடாது என்ற கோட்பாடு எப்படி நுழைந்தது? தொடுக்குங் கடவுட் பழம் பாடற்றொடையின் பயனாம் பரமற்கு மிடுக்குமிகுந்த உரை கொண்டு நிகழ்த்தும் பூசனை எவ்வாறு உவப்பாயிற்று? நிறைமொழிமாந்தர் மறைமொழி நடுவிற் பிறமொழி மந்திரப் பெருமை புகுந்ததேன்? மலையிலும் கடலிலும் காட்டிலும் நாட்டிலும் பாலைவனத்திலும், பாமர மக்களும் பண்பாய் ஒலித்த யாழும் குழலும் செய்தியறைந்த பறையும் எங்கே போயின? இசைக்குரியது ஏனையர் மொழியெனும் வசைக்கருத்து யாங்ஙனம் வந்தது? பன்னிரு முறையிலும், நாலாயிரப் பனுவலிலும் பயின்ற இன்னிசைப் பண்ணும் திறனும் பரந்து நிலவாமைக்குக் காரணம் யாது? ஓவியக் கலைக்கும், உயரிய சிற்பத்திற்கும் உரிய தமிழ் நூல்கள் எங்கே ஒளிந்தன? சித்தர் மருத்துவம், சிறந்த வாத நூல், வானூல், கற்பநூல், யோகத் தமிழ்நூல், அறிவர் ஞான நூல் என்பன மாசுபடிந்து மங்கிக் கிடத்தற்கு மந்திரம் செய்தார் யார்? தமிழர் தம் சமய நிலையங்களிலும், அற நிலை-யங்-களிலும் மூட பத்தி தலையெடுப்ப முதன்மையான அறிவைக் கொன்றது யாது? என்பவை போன்ற வினாக்கட்குத் தக்க விடை தேட வேண்டும்.

தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம்

தேடுமிடுத்து கல்லாமையாலும், நூல் காவாமையாலும், கற்றாரைப் பேணாமை-யாலும் தமிழினத்தார் தாழ் நிலையடைந்து எதிரிகளின் சொல்லம்பிற்கு இரையாகிப் பொய்ச் சொற்பொழிவென்னும் சரட்டினாற் பிணிக்கப்பட்டு மெய்யுடை யொருவன் சொல்மாட்டாமையால் பொய் போலும்மே! பொய் போலும்மே! பொய்யுடையொருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே! மெய்போலும்மே! என்ற முதுமொழிக்குத் தக்க எடுத்துக்காட்டாக இலங்குதலே தெளிவாகத் தெரியவரும். ஆரியருக்கு நாகரிகத்தைக் கொடுத்து அவரது ஆடம்பர மொழிகளைத் தாங்-கள் பெற்று அம்மொழியைத் தாமும் அவரும் பொதுமொழியாகக் கருதி, தம்-முடைய கருத்துகளை அது வாயிலாக... விளக்கவே மொழியுங் கருத்தும் ஆரியருடையனவே என்ற தப்புக் கொள்கை தலையெடுக்கலாயிற்று. இந்நுட்பத்தை ஆய்ந்தறிந்த டாக்டர் கில்பெர்ட் சிலேட்டர் ‘‘While the Aryans were dravidised in culture, the dravidians were aryanised in language” என்று சுருக்கமாகவும் அழகாகவுங் கூறினார்.

சகம் முழுவதும் பரவிய தமிழ்

ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் எனச் சேக்கிழார் பெருமான் அருளிய வண்ணமும்; சதுர் மறை ஆரியம் வருமுன் சக முழுதும் நினதாயின் முதுமொழி நீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே என்று காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் மொழிந்த வண்ணமும் ஒரு காலத்தில் உலகமெங்கும் தமிழ் மொழியானது பரவியிருந்த போது மதியிற்களங்கம் போல அதன் பகுதி ஒன்றில் ஆரியங்கிளைப்பதாயிற்று. அதை மொழி நூலாராய்வார் நன்கறிவார். அதனை இங்கு விரிப்பின் பெருகும். நம்மளவில் பார்க்கும்பொழுது இந்திய நாடு முழுவதிலும் குமரி முனைக்குத் தெற்கேயும் தமிழானது பதினாயிரம் ஆண்டுகட்கு முன் பரவிச் செழித்தோங்கிற்று. வடமேற்கு இந்தியாவில் ஆரியம் தோன்று முன்பே செந்தமிழ் நாகரிகமும் செம்பொருள் வழிபாடும் நாடெங்கும் சிறப்புற்று விளங்கின. அவற்றின் பழமைமையக் குறித்து 51 ஆண்டுகட்கு முன்னேயே காலஞ்சென்ற சென்னைக் கவர்னர் கனம் கிராண்ட் டப் ஆய்ந்துரைத்த அமுதமொழி தமிழ்நாடெங்குந் தங்க எழுத்தில் பொறிக்கத் தக்கது. Their institutions..... go back to a period as compared with which the hoariest indo-aryan, antiquity is as the news in Reuters latest telegram.

பண்டைத் தமிழர் சிறப்பு

இறந்தாரை எழுப்பும் மந்திரம் வல்லராய்த் தண்டமிழர் இலங்கினார் என்பது இருக்கு வேதத்தால் குறிக்கப்பட்ட தொன்றாகும். நெருப்புக் கடவுளை வழிபட்ட ஆரியக் குருக்கள் சிலர் முதன் முதல் வடநாட்டில் வாழ்ந்த தமிழ் மன்னன் ஒருவன்பால் உயர்ஞானம் கற்றனர் என்பது உபநிடத ஆராய்ச்சியால் புலனாகும். எல்லை கடந்த செல்வச் செருக்கில் திளைத்த தமிழர் அறம், பொருள், இன்பம் வீடு கூறும் மறைநூல் மறந்தனர். அகத்தியர் முதலிய அய்ம்முனிவர் உணர்த்திய அருள் நுல் என்னும் ஆகமம் இழந்தனர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம் என்பது போல, ஆரியர் வேதமும் தந்திரமும், தலை நூல்களாயின. தம் வரலாற்றினை அறவே மறந்த ஆதித் தமிழர் ஆரியர் சூழ்ச்சியால் சொல் வலைக்குள் அகப்பட்டனர். ஆரியச் சொல்லம்பால் தாக்கப்பட்டுத் தாய்மொழி பேசும் நாடு குறுகப் பெற்றுக் கிளை-மொழியாகிய கன்னடம், தெலுங்கு, முதலியவற்றை இழந்து, வடவேங்கடம் குமரிக்குள் ஒடுங்கிக் கோயிலிலும் வீதி-யிலும், வீட்டிலும் ஆற்றிலும் எவ்விடத்தும் ஆரிய மொழிக்கும் அம்மொழி தலைவருக்கும் அடிமையாயினர். பண்டைத் தமிழ்ப் பனுவல்களும் பாங்கிற் சிறந்த வரலாறுகளும் பதுங்கிக் கிடப்ப ஆரியக் கலைகளும் காவியங்களும் ஆடல்களும் பாடல்களும் யாண்டும் பரவித் தாண்டவமாடலாயின.

ஹிந்திப் புரட்டு

இங்ஙனம் விளைந்த குறைகள் பலப்பல... அவையாவற்றாலும் ஊனம் பெறாது தனது உண்மையியல்பின் செம்மையினால், பழையவற்றுள் பழையதாயும் புதியவற்றுள் புதியதாயும் மூவாது சாவாது என்றும் உயிர் வாழும் தண்டமிழ் அன்னை இன்னும் உயிரோடு வாழ்ந்து வீறுற்றிருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட பகைச் சொல்லினர் ஆரியம் முதலிய மொழி போற்றமிழ் மொழியையும் இறந்த மொழியாக்குங் கருத்துடன் அவள் மக்களின் அறியாமையைக் கருவியாகக்கொண்டு, அவள் இன்னுயிரைச் செகுத்து விடலாமென்று துணிந்து கொண்டு இற்றைக் காலத்தில் முன் வந்திருக்கின்றனர்.

------------------ தொடரும்”விடுதலை” 23-6-2010

0 comments: