Search This Blog

16.6.10

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி



நம் பிஞ்சுகளுக்கு அறிவுப் பால் இதோ!

தொண்டறம் என்பது பலதரப்பட்டது. பணம், காசு ஆகிய பொருள் நன்கொடை முதல் உழைப்பு, அறிவு , ஆற்றலைத் தருவது, சமூகத்தின் கடைகோடி மனிதனும் பயன் பெற எவ்வகையிலேனும் உதவுவது.

அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகளில் வாழும் நம் திராவிட தமிழ்க் குடும்பங்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட பலரது குழந்தைகள் தமிழ் மொழியை தமிழ் இலக்கியச் செல்வங்களை தமிழ் ஏடுகளைப் படிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தால்தான் தாய்மொழித் தமிழை, செம்மொழியான நம் மொழியைக் கற்றுக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திட முடியும்.

இதை அருமையாக உணர்ந்து தங்களது அரிய உழைப்பையும், தொண்டையும் சிகாகோ போன்ற பல பெருநகரங்களில் அமெரிக்காவில் டாக்டர் சரோஜா இளங்கோவன், திருமதி கண்ணகி விசுவநாதன், திருமதி பாபு, திரு. அருள் பாலு போன்ற பலரும் (இப்படிப் பலர் பல ஊர்களில் உண்டு.) சனிக்கிழமைகளில் அந்த பிள்ளைகளை ஒரு பொது அரங்கத்திற்கு அழைத்துச் சென்று தமிழ் மொழி கற்றுக் கொடுப்பார்கள்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் தமிழ் வகுப்புகள் எடுத்து, திருக்குறள் மற்றும் பல முக்கிய பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். சிற்றுண்டிகளையும் அக்குழந்தைகளுக்குத் தருவார்கள்.

அங்கு படிக்கும் தமிழ்க் குழந்தைகள் தமிழில் பேச முதலில் கற்றுக்கொள்வதோடு, நமது திருக்குறள் போன்ற நல்ல இலக்கியங்களையும் கூட படிப்படியாகக் கற்கிறார்கள். இது ஒரு நல்ல தொண்டறமாகும்.

இவர்களுக்கு குறுந்தகடுகளும் மற்றும் பல கணினியுதவிகளும்கூட மிகவும் எளிதில் கற்றுக் கொள்ள வசதியாக பயன்படுத்துகின்றனர்!

நமது டாக்டா சரோஜா இளங்கோவன் அவர்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூல், ஒரு குறள் - அதன் ஆங்கில மொழியாக்கம் போட்டு, அதற்கேற்ப ஒரு நிகழ்வு அல்லது கற்பனைக் கதை குழந்தைகள் சிறுவர்களை நன்கு ஈர்க்கும் வண்ணம் ஓரிரு பக்கங்களில் எளிய ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள்.

அதை சென்னையில் உள்ள சாரதா பதிப்பகத்தார் (சென்னை 600 014 என்ற முகவரி) வெளியிட்டுள்ளனர்.

இந்த நூலை நமது ஆங்கில வழி பயிலும் பள்ளிகளில்கூட மாணவ மாணவிகள் ஒழுக்க பாட போதனை (Moral Instruction Class) என்ற வகுப்பில் பாடமாக படிக்கச் சொல்லி அறிவு கொளுத்தினால் நல்லது! எடுத்துக்காட்டாக,

பக்கம் 17 இல்

அறத்துப்பால் பகுதி என்று தமிழில் பயன்தூக்கார் செய்த உதவி

நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது (குறள் 103)

தரப்பட்டு _ அதற்கு ஆங்கிலத்தில்

“If anyone does a good deed without expecting anything back, the value of such deed is greater than the ocean’’ என்று போடப்பட்டுள்ளது!

இதை ஒரு பொருத்தமான நிகழ்வு ஒன்றின் மூலமாக புத்தக ஆசிரியர் டாக்டர் சரோஜா இளங்கோவன் விளக்குகிறார். உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஆர்பர்ட் ஷூவைட்சர் தலை சிறந்த மனிதாபிமானி.

அவர் 1875 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கேயார்ஸ் பெர்க் என்ற பகுதியில் பிறந்தவர். அவர் குடும்பம் ஜெர்மனியில் வாழ்ந்தது.

அவர் ஆப்ரிக்கா சென்று, அங்குள்ள கறுப்பினத்தவரில் அதிகமாக தொழுநோயாளிகளானவர்களுக்கு தனது பணத்தில் மருத்துவமனை கட்டி தொண்டறம் புரிந்த கதையைக் கூறியுள்ளார்.

(திருக்குறள் மீது இந்த டாக்டர் ஆல்பர்ட் ஷூவைட்சர் மிகுந்த காதல் கொண்டவர். The Second Book of Kural’ என்ற ஒரு நூலை அவர் எழுதியுள்ளார்).

அவரது தொண்டறத்தினையே உதாரணம் காட்டி குறள்நெறி விளக்கம் 2 பக்கங்களில் தந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

இது போன்று நம் நாட்டு தொண்டறத் தலைவர்களையும் பற்றி இப்படி பல நூல்கள் வெளிவரவேண்டும்.

குழந்தைகளுக்கு இப்படி அறிவுப்பாலை ஊட்டவேண்டும்.

நல்ல தொண்டறம் செய்யும் அவர்களது பணி தொடரட்டும்_ மற்றவர்களும் இதை எங்கும் பின்பற்றலாமே!

------------------ "விடுதலை” யில் ”வாழ்வியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் - கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரை


0 comments: