Search This Blog

28.6.10

அண்ணா பார்வையில் கலைஞர்

தன்னை வெல்வான்
தரணியை வெல்வான்

தம்பி,

இலைகள் உதிர்ந்த நிலையில் சில மரங்கள், இது முழுவதும் வெட்ட வெளி அல்ல என்பதைக் காட்டுவதற்காக இருந்து கொண்டிருந்தன. மற்றபடி அந்த இடம் இயல்பாகவே, வெப்பத்தை அதிகமாக்கிக் காட்டக்கூடிய இடம்.

முப்பது அறைகளுக்கு மேல் இருக்கும். அதிலே ஒரு அறையில் தம்பி கருணாநிதி.

மற்ற அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. மொத்தத்தில் ஒரு விதமான வெறிச்சோடிய நிலை.

ஆள் நடமாட்டம் இல்லை என்பது மட்டும் அல்ல பேச்சுச் சத்தம்கூடக் காதிலே விழ முடியாத இடம். அத்துணை தனிமை.

பாதுகாப்புச் சட்டப்படி சிறை பிடித்து வைத்திருப்பதால் மிக்க பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பது திட்டம் போலும். அதனால்தான் சிறைக் கட்டடத்தில் பல நூறு பேர் இருக்க கருணாநிதிக்காகவே ஒரு பெரிய தனிச் சிறையை ஒதுக்கி, அதிலேயும் தனியாக வைத்திருக்கிறார்கள்.

சிறையிலே போட்டு அடைத்ததும், வேதனை வென்றுவிடும். உணர்ச்சிகள் மங்கிவிடும். உறுதி தளர்ந்துவிடும் என்று நினைப்பு.

ஆனால் சிறை அவ்விதமான தல்ல. அந்த இடம் உறுதியைக் கெட்டிப்படுத்தி வைக்கும் உலைக் கூடம். சிந்தித்து, சிந்தித்துத் தமது சிந்தனை செல்வத்தைச் செம்மையாக்கிக் கொள்ள வைக்கும் பயிற்சிக் கூடம்.

உடல் களைத்தாலும் உள்ளம் களைத்திடாது என்ற நிலையில் உள்ள கருணாநிதியிடம் ஒரே ஒரு கவலைதான் இருக்கிறது தருமபுரி பற்றி.

வெற்றி நிச்சயம். அந்தச் செயலிலே தனது பங்கினைச் செலுத்த முடியாதபடி பக்தவத்சலனார் செய்துவிட்டாரோ என்ற கவலைதான்.

கருணாநிதியை ஏன் சிறை பிடித்தீர்கள்?

என்ன குற்றம் செய்தான் அந்த பிள்ளை? குற்றமா? இவர்களின் குணத்தை அம்பலப் படுத்தினான் எழுதினான்.

ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பயம், கோபம்...

இவை பற்றி எண்ணிடும்போது, சிறையில் தம்பி அடைக்கப்பட்டிருப்பது குறித்து இயற்கையாக எழும் சோகம் கூட மறைகிறது. கருணாநிதியின் எழுத்துக்கும் பேச்சுக்கும் ஆட்சியாளர் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது. ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலருகிறது.

கழகத்தின் வளர்ச்சி கண்டு காங்கிரஸ் அரசு கதி கலங்கிப் போய் உள்ளதை எடுத்துக் காட்டி, கழகத் தோழர்களுக்கு மேலும் எழுச்சியைத் தரவல்ல நிகழ்ச்சி, கருணாநிதியைச் சிறைப்படுத்தி இருப்பது என்பது புரியும் போது மகிழ்ச்சி கொள்ள கூட முடிகிறது.

அடக்கு முறையை வீசி அறப்போர் வீரர்கள் அடக்கிவிடவோ, அவர்தம் பாசறையை ஒழித்து விடவோ முடியாது. சிறைக்கோட்டம் தள்ளப்படும் லட்சியவாதிகளோ, உறுதி பன் மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல, தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம் பற்றிய எண்ணம், இவைகளைக் கூட மறந்து விடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப் பற்றிய எண்ணம் எழுப்பி விடும். ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது.

இது பற்றியே ஆன்றோர் சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்.

பாளையங்கோட்டைச் சிறை வாயிலில் கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை.

அங்கு பொறிக்கப்பட்டு இருப்பது என்ன? தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!

- அண்ணன் அண்ணாதுரை

(பாளையங்கோட்டை தனிமை சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்தபோது 4.4.1965 இல் அறிஞர் அண்ணா எழுதிய உணர்ச்சி மிகு கடிதத்தின் ஒரு பகுதி).

2 comments:

Ivan Yaar said...

If you have real guts you should oppose all gods and all religions. But you are only against Hindus and Only against one community Brahmins. Hindus are tolerant people who keeps on silent always. I feel D.K. is the party which has no real guts to oppose other religions than Hinduism. If DK is atheist party they should protest against ISLAM too. Muslims are great people who have real faith on their god. They wont like others speaking bad about their god and their religion. If DK publishes one article against Islam or Allah, Muslims will surely teach DK party a lesson.

தமிழ் ஓவியா said...

அனைத்து மதங்களைப் பற்ரியும் தி.க. விமர்சித்துள்ளது . நூல்கள் வெளியிட்டுள்ளது. பல கட்டுரைகள் விடுதலை உண்மை இதழ்களில் வெளிவந்துள்ளது.
தமிழ் ஓவியா வலைப்பூவிலும் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளது.