Search This Blog

2.6.10

இந்து மதத்தில் பெண்கள் நிலை



இந்து மத தருமத்தில் பெண்கள் ஈனப் பிறவி, கடவுளாலேயே விபச்சாரிகளாகப் பிறப்பு-விக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கிற நம்பிக்கையோடுப் பிராயச்சித்தம் செய்துகொள்ளக் கூடியவன். பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்தில் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்ட பிறகு புருஷனுடைய பந்தோபஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்க வீணர்களாய்ப் போய்விடுவார்கள். பெண்களுக்குச் சொத்து இருக்கக் கூடாது. அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது, ரகசியம் சொல்ல கூடாது. இன்னும் இவைபோன்ற எத்தனையோ நிபந்தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்திற்கு, ஆதாரமான பராசரஸ்மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

இவைகளை (இந்த புஸ்தகங்களையும் சாதிரங்களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்பிராயம்.

இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ, சமண தருமமோ எல்லாம் ஒரேவித யோக்கியதைக் கொண்டதே என்பது எனது அபிப்பிராயம். தெய்வத் தன்மை பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூட தம் பெண் சாதியை விபச்சாரியா பதிவிரதையா என்று பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலை சோறாகச் சமைக்கச் சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்துப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படி பரீட்சை செய்து பார்த்தால் இன்றையதினம் உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம், இங்கு இருக்கிற பெண்கள் எல்லாம் விபசாரிகளென்று தான் நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசிச் சாதமாக சமைக்கவோ மழை பெய்ய சொல்லவோ, பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது. வேறு எந்தக் காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்ப தாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும். இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாகவும், புருஷன் குஷ்டரோகியாகி விட்டதால் அவனைக் கூடையில் சுமந்து கொண்டு போனதாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்படுகிறது. எவ்வளவு அக்கரமும் கொடுமையுமானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப் போல் இருப்பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனேயொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.

பெண்கள் விபச்சாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரவுபதை என்பவள் தனக்கு அய்ந்து புருஷன் மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால்தான் விபாச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லாமலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்கோ விலைக்கு விற்றதாகவும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப் பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு புண்ணிய புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதிமார்களைக் கூட்டிக் கொடுத்ததாகவும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள் வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டி-களுக்குத் தொண்டு செய்ததாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்டதாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கிக் கொண்டு ராஜாவுக்கே கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்ததாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண் பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவதாயிருந்தாலும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்குப் பின் முரணுமாய் முடிந் திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள் விடுதலைக்கு மார்க்கங்கூட கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது தான் எனது அபிப்பிராயம்.

பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரகாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது.

மற்றும் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிகமாக அடிமைகள் ஆவார்களா? சுதந்தரமடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.

----------------------31.5.1930இல் கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற S.N.D.P. யோகம் என்று சொல்லப்படும் தீயர் மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது-8.6.1930 குடிஅரசு இதழில் வெளியானது.

3 comments:

nerkuppai thumbi said...

இது பெரும்பாலும் சரியே என்பதில் இரண்டு கருத்து இல்லை.
ஆனால், இது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐயா ஆற்றிய உரை. இது போன்ற நூற்றுக்கணக்கான உரைகளாலும், கட்டுரைகளாலும், போராட்டங்களாலும் சமூகத்தில், பெருவாரியாரின்எண்ண ஓட்டத்தில், அதன் காரணாமாக சட்டத்தில் பெரிய மாற்றங்கள் வந்துள்ளன.
ஆகவே, தாங்கள், அப்போது ஐயா சொன்ன கருத்துக்களையும், அதன் பின் நாட்டில் தோன்றிய மாற்றங்களையும் சேர்த்து சொல்வது அவசியம். இல்லையெனில், எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இப்படி இருந்ததா என அறிவதில் இந்தக் காலத்து இளைன்ஞர்களுக்கு ஆர்வம் இல்லை.

நடப்பு விஷயங்களை சொல்லாமல் விட்டதாலோ என்னமோ இந்த தலைமுறைக்கு பகுத்தறிவு பேச்சகளில் நாட்டம் இல்லை. , இந்த கருத்துக்கள் 1970 1975 க்கு பின் தோன்றிய தலைமுறைக்கு பற்று இல்லை என்பதே உண்மை.

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நெற்குப்பை.தும்பி
makaranthapezhai.blogspot.com

nerkuppai thumbi said...

இது பெரும்பாலும் சரியே என்பதில் இரண்டு கருத்து இல்லை.
ஆனால், இது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐயா ஆற்றிய உரை. இது போன்ற நூற்றுக்கணக்கான உரைகளாலும், கட்டுரைகளாலும், போராட்டங்களாலும் சமூகத்தில், பெருவாரியாரின்எண்ண ஓட்டத்தில், அதன் காரணாமாக சட்டத்தில் பெரிய மாற்றங்கள் வந்துள்ளன.
ஆகவே, தாங்கள், அப்போது ஐயா சொன்ன கருத்துக்களையும், அதன் பின் நாட்டில் தோன்றிய மாற்றங்களையும் சேர்த்து சொல்வது அவசியம். இல்லையெனில், எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இப்படி இருந்ததா என அறிவதில் இந்தக் காலத்து இளைன்ஞர்களுக்கு ஆர்வம் இல்லை.

நடப்பு விஷயங்களை சொல்லாமல் விட்டதாலோ என்னமோ இந்த தலைமுறைக்கு பகுத்தறிவு பேச்சகளில் நாட்டம் இல்லை. , இந்த கருத்துக்கள் 1970 1975 க்கு பின் தோன்றிய தலைமுறைக்கு பற்று இல்லை என்பதே உண்மை.

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நெற்குப்பை.தும்பி
makaranthapezhai.blogspot.com

தமிழ் ஓவியா said...

தங்களின் ஆலோசனைக்கு நன்றி. முதலில் பெரியாரை பெரியாராக மக்கலிடம் கொண்டு சேர்ப்போம் என்ற நோக்கில் தான் பெரியாரின் கருத்தை அப்படியே பதிவு செய்கிறோம். வேண்டுமானால் பின்னூட்டங்களில் நீங்கள் சொன்ன கருத்துப் பற்றி விரிவாக விவாதிக்கலாம்.

நன்றி தோழர்