Search This Blog

2.9.14

திராவிடர் கழகத்திலும் வாரிசு அரசியல் வந்துவிட்டதா? -கி.வீரமணி

பாரதிக்கு நடந்தது... பெரியாருக்கு நடக்கக்கூடாது!”
விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்
வாசகர் கேள்விகள்
 ***************************************************************************************
ராஜு, தேனி.

 ''தந்தை பெரியாரை, கடவுள் மறுப்பாளராக மட்டும் சுருக்கி நினைவுகூரும் அவலமே இங்கு நிலவுகிறது. அதை மாற்ற, திராவிடர் கழகம் என்ன செய்தது?''
''மிக நல்ல கேள்வி!
'கடவுளை மற’ என்பது பெரியாரின் தத்துவத்தின் ஒரு பகுதி; 'மனிதனை நினை’ என்பது அதன் மறு பகுதி. அதனால்தான் சுயமரியாதையைத் தலைப்பிட்டு, 'மனிதர்களின் தலையாய உரிமை அது’ என்று உணர்த்தினார். இதை எங்களது பிரசாரப் பயணங்களில் நீங்கள் கேட்கலாம்.
கடவுளை மறுத்த பெரியார், தனது சொந்த பாரம்பர்யச் சொத்து, இயக்கத் தோழர்களும் அன்பர்களும் வாரிக்கொடுத்த சொத்துகள் அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் அறக்கட்டளை ஆக்கினார். அதன் மூலம் கல்வி, மருத்துவப் பணிகள், அறியாமை ஒழிப்பு, கல்லாமை ஒழிப்புக்காக பெரும் சொத்துகளைக் கொடுத்தார். ஆனால், 'கடவுள் அவதாரம் இவர்’ என்று பிரசாரம் செய்யப்பட்டவர் வெங்கட ரமணர். அவரே பிறகு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆக்கப்பட்டார். அவரது திரண்ட சொத்துக்களைத் தன் குடும்பத்தினருக்குத்தான் உயில் எழுதிவைத்தார். அந்த வழக்கு இன்னமும் முடியாமல் நீதிமன்றத்தில் உள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் 'கடவுள் மறுப்பு’ என்பது,  கடவுள் பெயரால் நிறுவப்பட்ட பிறவிப்பேதம், பெண்ணடிமை போன்றவற்றை ஒழிப்பதோடு சமத்துவ நிலை, பகுத்தறிவு இவற்றையும் உள்ளடக்கியது. அதை எந்தத் தலைமுறையினருக்கும் புரியவைக்கும் பணியில் திராவிடர் கழகம் அயராது பாடுபடும்!''
************************************************************************************
லவ்லி பாண்டு, சித்தேரிப்பட்டு
''உங்கள் பார்வையில் கருணாநிதி- ஜெயலலிதா... ஒப்பிடுங்கள்?''
''கலைஞர் - கடும் உழைப்பின் உருவம்; முதலமைச்சர் ஜெயலலிதா - முரட்டுத் துணிச்சலின் உருவம்!''
***********************************************************************************
வீ.குணசேகரன், பாப்பாநாடு.
''ஜெயலலிதா, எந்தச் சமூகநீதியைக் காப்பாற்றியதற்காக அவருக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை’ பட்டம் கொடுத்தீர்கள்?'
''இடஒதுக்கீட்டுக்கு, 'சமூகநீதி’ என்று பெயர் உண்டு. அதைச் சுட்டிக்காட்டித்தான் அந்தப் பட்டம் தரப்பட்டது!
மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகளைக்கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. அதில், 'பொதுவாக 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக் கூடாது’ என்று எழுதப்பட்டிருந்தது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 50 + 18 + 1=69 சதவிகிதம் என்று இருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ்நாட்டின் சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது, திராவிடர் கழகம் ஒரு யோசனையை முன்வைத்தது. 'இந்திய அரசியல் சட்டத்தின் 31-சி பிரிவின்படி, தனிச் சட்டம் கொண்டு நிறைவேற்றி, ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு, அரசியல் சட்டத் திருத்தம் தேவை. அப்படிச் செய்தால், தமிழகத்தில் சமூகநீதி காக்கப்படும். அதைச் செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வர வேண்டும்’ என்று சொன்னோம். இந்த யோசனையைக் கேட்டு, அதற்கு என்று தனிச் சட்டத்தை ஒருமனதாக தனிச் சட்டமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றி, பிரதமர் நரசிம்மராவையும் ஒரு குழுவுடன் சென்று சந்தித்து, உடனே ஒப்புதல் அளிக்க வற்புறுத்தினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றம் ஏற்கச் செய்த பிறகு, குடியரசுத் தலைவர் (சங்கர் தயாள் சர்மா) ஒப்புதலும் பெறப்பட்டு, இந்தியாவிலேயே 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்டரீதியாக அமலில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை நிறுவினார். அந்தச் சமூகநீதி சிந்தனை மற்றும் செயல்பாட்டைப் பாராட்டியே 'சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை அவருக்குத் தந்தோம்.
யார் நல்லது செய்தாலும் அவர்களை மனம்திறந்து பாராட்டுவது கழகத்தின் பண்பு. பாராட்ட வேண்டியதைப் பாராட்டினால்தான், நமது எதிர்ப்புக்கு ஒரு மதிப்பும் நல்விளைவும் ஏற்படும்!''
***********************************************************************************
அ.பரக்கத்துல்லா, சிங்காநல்லூர்.
''தந்தை பெரியாரிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம் என்ன?''
''அப்படி எதையும் சொல்ல முடியாதே! வேண்டுமானால் இதைச் சொல்லலாம். நாள்தோறும் குளிப்பது பெரியாருக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால், நான் நாள்தோறும் இருமுறை குளிப்பவன். அது ஒரு புத்துணர்வைத் தருகிறது. ஒருமுறை தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் என்னைப் பற்றி ஒரு புகார் கூறினார் தந்தை பெரியார். 'உங்கள் வீரமணி பிராமணனாகிவிட்டார்’ என்று ஒரு போடு போட்டார். அவர் திடுக்கிட்டு, 'என்ன அய்யா?’ என்று விவரம் என்று கேட்க, 'அவர் தினமும் குளிக்கிறார்’ என்று சொல்லிச் சிரித்தார் பெரியார்!''







 ***********************************************************************************

க.சத்தியமூர்த்தி, ஏனங்குடி.
''திரைப்படங்கள் பார்ப்பது உண்டா? பார்த்ததில் பிடித்தவை எவை?''
''எப்போதாவது பார்ப்பது உண்டு! பாரதிராஜா அவர்களின் 'வேதம் புதிது’ (முதல்வர் எம்.ஜி.ஆர் சுட்டிப் பேசியதால்) பார்த்தேன். உடன் நேரில் சென்று புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்களைப் பாராட்டினேன். பிறகு, பாக்யராஜ் அவர்கள் 'இது நம்ம ஆளு’ படம் பார்க்க அழைத்தார்; பார்த்தோம். பாராட்டி எழுதினோம். அவரது படத்துக்கு வந்த எதிர்ப்பை எதிர்கொள்வதில், பாக்யராஜுக்குப் பக்கபலமாக இருந்தோம்.
கலைஞானி பகுத்தறிவாளர் கமல்ஹாசன் அவர்கள் 'தசாவதாரம்’ படம் பார்க்க அழைத்தார். பார்த்துப் பாராட்டினேன். எழுதினேன். 'பெரியார்’ படம் பற்றி எல்லோருக்கும்தான் தெரியுமே!''
****************************************************************************************
வைகை ஆறுமுகம், திருப்பூர்.
''இன்றைய ஹைடெக் இளைஞர்கள் பெரியாரிசத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?''
''சரியாகப் பார்க்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் உண்டு. அது அவர்கள் மீதான குறை அல்ல. அவர்களுக்கு முன்னர் இருந்த வரலாறும் நெருக்கடிகளும் இப்போது இல்லை. சிமென்ட் ரோட்டில் வேகமாகச் செல்லும் கார்போல, நல்ல வாய்ப்புகளுடன் பயணிக்கிறார்கள்.
ஆனால், அந்த வழுக்கும் பயணத்தின் வாய்ப்பு நிலைக்க, நீடிக்க... பகுத்தறிவு, தன்மானம், சுயமரியாதை, சமத்துவ உணர்வுகளை உள்ளடக்கிய பெரியாரிசம் தழைத்தோங்க வேண்டும். இதை அவர்களுக்கு உணர்த்த, நாங்கள் மேலும் பல திட்டங்களோடு பாடுபடவேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்!''

************************************************************************************

தளபதி முத்துக்குமார், சேலம்.
''கடவுள் இல்லை என்று கூறுகிறீர்கள். எனில், 63 நாயன்மார்களும், 274 பாடல் பெற்ற ஸ்தலங்களும் பொய்யா? பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் மற்றும் அனைத்து திருமுறை நூல்களும் கற்பனையா? நம் முன்னோர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்று கூறுவீர்களா?''

''நாயன்மார்களும் மற்ற பக்த சீடர்களும் அவர்களது பக்தி - மூடநம்பிக்கையால் பாடியதாலேயே, அவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா? முன்னோர்கள் காலம் எழுத்தாணி, கட்டைவண்டி யுகம். அதைவிட இப்போது அறிவு வளர்ந்துள்ளதா இல்லையா? புராணங்களில் சந்திரனுக்கு
27 மனைவிகள் என்று நம்பியதை இன்று நீங்கள் ஏற்பீர்களா? 'பித்தா பிறைசூடி பெருமானே...’ என்று பாடுகிறார்கள் - ஆம்ஸ்ட்ராங் காலை வைத்தது சிவன் தலையிலா...ஒப்புக்கொள்கிறீர்களா?''



 *********************************************************************************

பாலமுருகன் நாகராஜன், தர்மபுரி.

''உங்களுக்குப் பின் திராவிடர் கழகத் தலைவராக யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள்?''
''எந்தவித சுயநலத்துக்கும் இடம்தராத - மானம் பாராத - நன்றியைக்கூட எதிர்பார்க்காத - பதவி புகழ் தேடாத - பெரியார் தத்துவங்கள் உலகமயமாக்கப்பட உழைக்கும் ஆற்றலும் ஆர்வமும் கொண்ட - 'இனமானத் தொண்டர்கள் என் தோழர்கள்’ என்ற பெரியார் தந்துள்ள இலக்கணத்துக்குப் பொருந்தும் உழைப்பாளிகள் கழகத்தில் ஏராளம் உண்டு. அவர்களில் ஒருவரே அடுத்து கழகத்தை வழிநடத்துவார்!''
 ***********************************************************************************
வெ.வெங்கடாசலபதி, ஆத்தூர்.

''தந்தை பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க நீங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. பெரியாரின் படைப்புகள் இன்னும் அதிக மக்களைச் சென்று அடைய நாட்டுடைமையாக்கப்படுவதுதானே சரி... ஏன் எதிர்க்கிறீர்கள்?''

''தந்தை பெரியாரின் படைப்புகள் புரட்சிகரமானவை. அதே சமயம் அவற்றை நாட்டுடைமை ஆக்குவதில் உள்ள ஆபத்துகளில் முக்கியமானவை பட்டியலிடுகிறேன். புரிந்துகொள்ளுங்கள்...
1. பெரியார் கொள்கை பிடிக்காத அரசுகள் அந்த வன்மம்கொண்டு, உரிமைகொண்டு - பெரியார் படைப்புகளை அறவே முடக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு.
2. தந்தை பெரியார் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் மாறாமல் - மாற்றப்படாமல் - அப்படியே அச்சாக வேண்டும். பார்ப்பான் என்ற சொல்லாக்கத்துக்குப் பதில் 'பிராமணர்’ என்று போட்டால் பொருளே மாறிவிடக்கூடும். 'பார்ப்பனரை 'பிராமணர்கள்’ என்று அழையாதீர் - உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய’, என்பது பெரியார் வாசகம். இதை மாற்றினால் என்னவாகும்?
3. கடவுள் மறுப்புபோல புரட்சிகர வாசகங்கள் இடம்பெறாததோடு, திரித்தும் கூறி அச்சிட்டுப் பரப்பும் அபாயமும் உண்டு. எனவே, புத்தருக்கும் மற்ற புரட்சியாளருக்கும் ஏற்பட்ட ஜாதகக் கதை திரிபுகள்போல் பெரியாருக்கும் ஏற்படாது தடுப்பது எங்கள் கடமை.
4.காந்தியின் அறக்கட்டளை காந்தியாரின் நூல்களை தன் உடமையாக்கி உள்ளதே! அது தவறா? பாரதியாரின் பேத்தி, 'எங்கள் தாத்தாவின் பாடல்களில் பேதம் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறவில்லையா?
- இப்படி பலப்பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் ஊடுருவல்களுக்கும் திரிபுகளுக்கும் பஞ்சமா என்ன?
எங்களிடம் அனுமதிபெற்று எவர் வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ள வேண்டும்; அதன் மூலம் திரிபுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர, வேறு அல்ல. அதுவும்போக, பெரியார் நூல்களை நாங்கள் அச்சிட்டு, மலிவு விலையில் நாடு தழுவிய அளவில் பரப்பும் பணி தொடர் பணியாக உள்ளதே!''
                                               ---------------- பகுத்தறிவோம்...ஆனந்த விகடன் 27 Aug, 2014

'எம்.ஜி.ஆருக்கும் பெரியாருக் குமான நெருக்கத்தை, பிரியத்தைப் பற்றி சொல்லுங்களேன்!''
''ஜெயலலிதா அரசின் மூன்று ஆண்டு கால ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்குவீர்கள்?''
''திராவிடர் கழகம் ஏன் எப்போதும் இந்து மதத்தை மட்டுமே மிகத் தீவிரமாக எதிர்க்கிறது? கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மூடநம்பிக்கைகளே இல்லையா?''
- அடுத்த வாரம்...
கி.வீரமணியிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாகஅனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - கி.வீரமணி’ ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவள்ளுவர் எப்போ ஐ.ஜி ஆனார்?’

விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்
வாசகர் கேள்விகள்
 *************************************************************************************
செங்குட்டுவன், தஞ்சாவூர்.
''நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் உங்கள் நெருக்கத்தைப் பற்றி கூறுங்களேன்?''
''நடிகவேள் அவர்கள், என் கல்லூரிப் படிப்புக்காக கடலூரில் தந்தை பெரியார் தலைமையில் ஒரு நாடகம் நடத்தி, நிதி உதவி செய்தவர். 'இளைஞன் பேசுகிறானே..!’ என்று மகிழ்வோடு பாராட்டியே உதவிட முன்வந்தார்.
1976-ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் இயக்கத்தினர் பலரைக் கைதுசெய்து, சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தங்கவைத்தார்கள். நடிகவேளும் கைது செய்யப்பட்டு எங்களுடன் வந்து சேர்ந்தார். அப்போது அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களை என்னிடம் சுட்டிக்காட்டி, 'இவர்கள் யார்... யார்?’ என்று கேட்டார் எம்.ஆர்.ராதா. நான், 'இவர்... ஐ.ஜி அருள், இவர்... சஞ்சீவி பிள்ளை, இவர்... ஆர்.எம்.மகாதேவன்’ என்று கூறிக்கொண்டே வந்தேன். இடையில் குறுக்கிட்ட ராதா, 'சரி இங்கே கடைசியில் திருவள்ளுவர் படத்தையும் வெச்சிருக்காங்களே... திருவள்ளுவர் எப்போ ஐ.ஜி-யா இருந்தார்?’ என்று கேட்க,  துன்பத்தில் இருந்த நாங்கள் சிரித்துவிட்டோம். அவரது இயல்பான நகைச்சுவை உணர்வு மிசா கெடுபிடியை ஆசுவாசப்படுத்தியது. தொடர்ந்து பல தருணங்களில் இயக்கத்தின் கருத்தைத் தீவிரமாக விதைத்தார். அதற்கு நன்றிக்கடனாகத்தான் பெரியார் காலத்திலேயே பெரியார் திடலில், 'நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்’ உருவாக்கி, இன்றும் அதை நவீன வசதிகளுடன் பராமரித்து வருகிறோம்!''
 ****************************************************************************************
ஜானித் இக்பால், மின்னஞ்சல்.
''ஜெயலலிதா அரசின் மூன்று ஆண்டு கால ஆட்சிக்கு, எத்தனை மதிப்பெண்கள் வழங்குவீர்கள்?''
''தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கின்றன. கொலை, கொள்ளைகளால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு, விரோதமான சிந்தனைகள் - செயல்பாடுகள் அதிகம் இருக்கின்றன. பகட்டான பல  அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவது இல்லை. இவற்றில் எதை அலசி ஆராய்ந்து மதிப்பிடுவது? நிச்சயம் என்னால் மதிப்பெண் அளிக்க முடியாது!''

 ****************************************************************************************
முத்துக்குமார், கோவை.

''திராவிடர் கழகம், எப்போதும் இந்து மதத்தை மட்டுமே மிகத் தீவிரமாக எதிர்க்கிறதே... ஏன்? கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மூடநம்பிக்கைகளே இல்லையா?''
''தங்களின் கேள்வியிலேயே ஓர் உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறதே. அது... 'மிகத் தீவிரமாக எதிர்க்கிறது’ என்ற வார்த்தைகள். ஆக, மற்ற மதங்களையும் எதிர்க்கிறோம்; அதில் இந்து மதத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கிறோம் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி!
எங்களில் பெரும்பாலோரை, உழைப்பாளிகளை, மண்ணின் மக்களை, 'சூத்திரர், பஞ்சமர்’ என்று இழிவுபடுத் தும் வர்ணதர்ம முறை இந்து மதத்தில்தானே இருக்கிறது. அதனாலேயே கல்வி மறுப்பும், வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கும், உழைக்கும் சகோதரர்களை ஊருக்கு வெளியே ஒதுக்குவதுமான செயல்கள் அரங்கேற அதுதானே அடிப்படையாக இருக்கிறது. நாங்கள் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டு மானமும் அறிவும் பெறமுடியாத மாக்களாக வாழும்படி வைத்ததும் இந்து மதம்தானே. மேலும், நமது பெண்கள் கணவனை இழந்தால் அவர்களை விதவைக் கோலப்படுத்தி அவனமானப்படுத்துவதும், உயிரோடு எரித்து 'சதி மாதா’ கோயில் கட்டி வணங்கி, காசு பறிக்கும் மதமும் இதுதானே!
87 சதவிகிதத்துக்கு உரிய முன்னு ரிமையைப் பெற, 13 சதவிகிதமே உள்ள மற்ற மத மக்களிடம், அதுவும்... எங்களை நேரடியாகப் பாதிக்காதவர்களிடம், நாங்கள் ஏன் தீவிரச் சண்டை போடவேண்டும்?
கடவுள் இல்லை என்றுதானே கூறுகிறோம். அதில் பிராக்கெட் போட்டு, 'இந்துக் கடவுள் மட்டுமே இல்லை’ என்று நாங்கள் கூறவில்லையே. மற்ற மூடநம்பிக்கைகளைவிட, எங்களை இழிவுபடுத்தும் நிலையை ஒழிப்பதுதான் முதல் தேவை!''
 **************************************************************************************





செங்குட்டுவன், தஞ்சாவூர்.

''புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளைப் பற்றி எங்களுக்குப் பரிச்சயம். அவருடைய இயல்புகள் பற்றிக் கூறுங்களேன்?''  
'' 'புரட்சி’ என்ற வார்த்தைக்கு முற்று முதல் இலக்கணம் அவர். 1946-ம் ஆண்டு புதுவை மாநாட்டில் அவரை எதிர்த்து முழக்கங்கள் இருந்தபோதும் எதற்கும் மலைக்காது, வீறுநடை போட்டுச் சென்ற அஞ்சாமையின் உருவம் அவர்!
1946-ல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று மணலில், திராவிட மாணவர்களாகிய நாங்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம். அதில் பாரதிதாசன், இரவு 9 மணி முதல் 12 மணி வரை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. மிஞ்சியிருந்தவர்களோ மிகச் சொற்பம் என்றாலும், அவர் பேச்சை நிறுத்தவில்லை. ஏற்பாட்டாளர்கள் அவரது மகன் மன்னர்மன்னன் மூலம் துண்டுச் சீட்டில், '12 மணி ஆகிவிட்டது’ என்று எழுதி அனுப்பினர். அதைப் பார்த்து உடனே சீறினார். 'அட போறவன் போறான்... கேட்கிறவன் கேட்கட்டும். நீ போய் உட்கார்’ என்றார். பிறகும் அரை மணி நேரம் கழித்தே பேச்சை முடித்தார்!
அத்தனை உறுதியானவராக இருந்தாலும், அன்பைப் பொழிவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அவரது குழந்தைத்தனமான மகிழ்ச்சி கலந்த பாராட்டு, பலருக்கும் கிடைக்கும்; எனக்கும் கிடைத்துள்ளது!''

*************************************************************************************


அமலோற்பநாதன், சிவகங்கை.

''கீழவெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நிகழ்வில், பெரியார் எடுத்த நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டதே?''

''அது தவறான பிரசாரம். பெரியார் வெண்மணி கொடுமையைக் கண்டித்ததைப் பல ஏடுகள் மறைத்தன. அய்யாவைவிட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கடைசி வரை பாடுபட்டவர் எவர்? வெண்மணி கொடூரம் குறித்து 'விடுதலை’யில் அய்யா கருத்துக்கான ஆதாரம் இதோ...

'கீழ்வெண்மணியில் நேற்று முன்தினம் ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் தற்காப்புக்காகப் பதுங்கிக்கொண்ட வீட்டைப் பூட்டிக் கொளுத்தியிருக்கிறார்கள். அதில் 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில், வெட்ட வெளிச்சத்தில், வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்கள் ஆகும்.
சட்ட விரோதமான, பலாத்காரமான நாசவேலைகளான காரியங்களைச் செய்து, அதன்மூலம் பலன் பெறுவதற்கு என்றே ஏற்படுத்திக்கொண்ட ஸ்தாபனங்களாலேயே, இவை நடைபெற்றன. இவற்றை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டம் இல்லை. சட்டத்துக்கும் நீதிக்கும் சம்பந்தம் இல்லாத நீதி ஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படியிருக்க, பழிவாங்கும் ஜாதி உணர்ச்சிகொண்ட சுயநலத்தையே முக்கியமாகக் கருதுகிற நீதிபதிகளே,100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்’... என்று 'விடுதலை’யில் (28.12.1968) அறிக்கை வெளியிட்டார்

தந்தை பெரியார். அறிக்கையின் தலைப்பிலேயே, 'இந்தியாவை ஆள இந்தியருக்கு தகுதி இல்லை’ என்ற அளவுக்குச் சுளீர் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். இந்த மாதிரியான  அக்கிரமங்களை ஒழிக்க அந்நிய ஆட்சி வந்தாலும் பரவாயில்லை என்று கூறுவதற்கு, பெரியாரைத் தவிர வேறு யாரால் முடியும்?
அந்த அறிக்கையில் நீதிமன்றத் தீர்ப்புகளின் யோக்கியதையைப் பற்றி தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு சரியானது என்பதற்கு எடுத்துக்காட்டு... அந்தக் குற்றத்தைச் செய்த ஜாதி வெறியர்கள், தண்டனை இன்றி விடுதலை செய்யப்பட்டதுதான்!''
*************************************************************************************
 
கே.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

''சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் அடிப்படையில் மனிதர்களுக்கு அடைமொழி தேவை இல்லை என்கிறார்கள். ஆனால், உங்களுக்கோ 'ஆசிரியர்’, 'தமிழர் தலைவர்’ என அடைமொழிகள். அவை தேவையா?''

''என்னைப் பொறுத்தவரையில், அவை தேவை இல்லை; மற்றவர்கள் அன்புடன் அழைக்கும்போது எப்படித் தடுக்க முடியும்? அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?''
 *****************************************************************************************
நெடுமாறன், மதுரை.

''கொள்கை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உங்களுக்கு நேர் எதிர் துருவம் சோ.ராமசாமி. அவருடன் உங்களுக்குத் தனிப்பட்ட நட்பு உண்டா?''  
''நான், நண்பர் சோ அவர்களின் கடுமையான எழுத்துக்களை எதிர்ப்பவன்; எதிர்கொள்பவன். என்றாலும், பல சமயங்களில் அவரது நகைச்சுவை உணர்வைச் சுவைப்பவன்.
ஒருமுறை, 'நிகழ்ச்சி நடத்த நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தை நீங்கள் எங்களுக்குத் தர மாட்டீர்களா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கொடுப்போம். அது எங்கள் அய்யாவின் ஆணை’ என்று கூறிக் கொடுத்தோம். மற்றொரு முறை திருச்சி, தஞ்சாவூரில் உள்ள பெரியார் கல்வி நிலையங்களுக்கு அவரை அழைத்துப் பேச வைத்தேன். அவரும் வந்து பாராட்டிச் சென்றார்!
அவர், என்னை எடுத்த இரண்டு, மூன்று பேட்டிகளின்போது மனம்விட்டு நகைச்சுவையுடன் அவருக்கே உரித்தான பாணியில் பேசினார். குற்றச்சாட்டாக அவர் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கும் முன், 'சார்... சார்... நீங்கள் உடனே ஆதாரத்தை எடுத்துச் சொல்லிவிடாதீர்கள். நீங்கள் சொன்னால் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்பார்.

சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்து, அவரது உதவியாளரிடம் தொலைபேசியில் விசாரித்தேன். தொலைபேசியை நண்பர் சோவிடமே அவர் தந்துவிட்டார். உடல்நிலையை நன்கு கவனித்துக்கொள்ளச் சொன்னேன். அவரும் 'நன்றி’ என்று சொன்னார். முரண்பாடான கொள்கைகள் கொண்டிருந்தாலும், நட்புக்கு தடை இல்லையே!''

 ************************************************************************************
செந்தூர்பாண்டியன், திருத்துறைப்பூண்டி.
''இன்றைய நிலையில் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம், அடையவேண்டிய முன்னேற்றம்... இவற்றைப் பற்றி உங்கள் கருத்து?''
''படிப்பு உரிமை, சொத்து உரிமை, அதிகார மையங்களில் உரிய வாய்ப்புகள், தன்னுரிமை...  இவற்றில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் குறிப்பிடத் தகுந்தவையே. ஆனால், அவர்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனைகளில் மிகுந்த ஆர்வம் தேவை! பக்தி, ஜோதிடம், மூடநம்பிக்கைகளில் இருந்தும் அலங்கார அணிகலன் போதைகளில் இருந்தும் அவர்கள் விலகி நிற்க வேண்டும். பொதுத்தொண்டு, சமுதாயப் பணி, அரசியல் பங்கேற்பு... என, பெண்கள் செல்லவேண்டிய பயணமும் தூரமும் அதிகம்!''

 ***************************************************************************************
அழகுமலை, திருமங்கலம்.
''திராவிடர் கழகத்திலும் வாரிசு அரசியல் வந்துவிட்டதா? உங்கள் மகன் அன்புராஜ் பொறுப்புக்கு வந்துவிட்டாரே?'' 
''என்னையே பெரியாரின் அரசியல் வாரிசு என்று இன்றும் விமர்சிப்பார்கள். அதுவே உண்மை அல்ல; அப்படியிருக்க, உங்கள் கேள்வி அடிப்படை ஆதாரமற்றது!
திராவிடர் கழகத்தில் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலவைத் தலைவர், நான்கு பொதுச்செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்... எனப் பலர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்; பதவிகளில் அல்ல. அந்தக் குழுவில் அன்புராஜும் ஒரு பொறுப்பாளர். அதுவும் பொதுக்குழுவின் விருப்பத்தால் பொறுப்பு ஏற்றவர்... அவ்வளவே. மற்றபடி, 'பிரகலாதன்’களாக இல்லாமல் இருப்பது மகிழ்ச்சிதானே!''
************************************************************************************
தங்கராசு, விருத்தாச்சலம்.
'' உங்கள் வாழ்க்கையில் கடவுளின் மீது பக்தி என்பது ஒரு நிமிடம்கூட ஏற்படவில்லையா?''
''எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் அப்படி ஏற்பட்டதே இல்லை. சிறு பையனாக, இயக்கக் கொள்கை தெரியும் முன், அருட்பா படித்து ராமலிங்கர் பக்தி மட்டுமே கொஞ்சம் இருந்துள்ளது. மற்றபடி எந்தக் கோயிலிலும் எந்தக் கடவுளையும் பார்க்கவோ வணங்கவோ இல்லை. கொள்கைத் தெளிவு உள்ளவர்களுக்கு ஒருபோதும் மயக்கம் வராது!''
                              ---------------------------- பகுத்தறிவோம்...ஆனந்த விகடன் 03 Sep, 2014

''பிரபாகரன் உள்ளிட்ட ஈழப்போராளி தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?''  
''தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், தேவை இல்லாமல் அரசியல் கட்சிகளோடு ஐக்கியமாகி இருப்பதும், தேர்தல் பிரசாரம் செய்வதும் அவசியமா?''
''தற்போதைய நிலையில் திராவிட இயக்கங்களின் சாதனைகள், வேதனைகள்... என்னென்ன?''
- அடுத்த வாரம்..
---------------------------------------------------------------------------------------------------------------------------

                   ---------------------------- நன்றி:-  ஆனந்த விகடன்

25 comments:

தமிழ் ஓவியா said...


கேரள ஆளுநர் பி. சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்தும் - பாராட்டும்!


உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி செய்து, ஓய்வு பெற்ற நிலையில், ஜஸ்டீஸ் திரு. பி. சதாசிவம் அவர்கள், கேரள ஆளுநராக மத்திய அரசால் நியமிக் கப்பட்டிருக்கிறார்.

இவரது இந்த நிய மனம் பெரிதும் வரவேற் கப்பட வேண்டிய ஒன்று ஆகும். ஒரு தமிழர் - அதுவும் பெரியார் மண் ணிலிருந்து இந்தப் பொறுப்பை- வைக்கம் போராட்டம் நிகழ்த்திய மண்ணுக்கு ஆளுநர் ஆகப் பொறுப் பேற்கிறார் என்பது, அரசியல், மற்ற விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மகிழத்தக்கதே ஆகும்!

இதற்கு முன் தமிழ்நாட்டு ஆளுநராக கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற செல்வி பாத்திமா பீவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளாரே!
அதுபோலவே காஷ்மீர் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்!
எனவே முன் மாதிரிகளும்கூட இருந்துள்ளன. அரசியல் சட்டரீதியாக இந்த நியமனத்திற்கு எதிரான பிரிவுகள் ஏதும் இல்லை.

மற்றொன்றும்கூட சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆளுநர்கள் ஒரு மாநிலத்தில் இல்லாதபோதோ, அல்லது தற்காலிகமாக அப்பதவி காலியாக உள்ள போதோ, ஆக்டிங் கவர்னராக - பொறுப்பு ஆளுன ராக, அந்தந்த மாநில தலைமை நீதிபதிகள் (சிலீவீமீயீ யிவீநீமீ) தானே பொறுப்பேற்கின்ற நடைமுறை சட்ட ரீதியாக உள்ளது.

எனவே, இதைப்பற்றி சர்ச்சைகள்பற்றிக் கவலைப் படாமல், ஜஸ்டீஸ் திரு சதாசிவம் அவர்கள் அப் பதவியில் அமர்ந்து தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவார் என்று நாம் நம்பி, பாராட்டுதல் களையும், நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சென்னை தலைவர்
5.9.2014

Read more: http://viduthalai.in/e-paper/87124.html#ixzz3CRpuJ8Iw

தமிழ் ஓவியா said...


ஆஸ்திரேலியாவிலிருந்து பரோல் முடிந்து திரும்பும் நம் கடவுள்கள்!


ஆஸ்திரேலியாவிலிருந்து அரியலூர் ஸ்ரீபுரந்தான் கோவிலில் இருந்த 1050 ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் சிலை 2006-இல் திருட்டுப் போனது.

இதன் மதிப்பு 31 கோடி ரூபாயாம்! அதே போல விருத்தாசலத்தில் உள்ள விருத்த கிரீஸ்வரர் கோவில் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு சிலை- இதன் மதிப்பு 3 கோடி ரூபாயாம்!

தமிழக கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட இந்த சிலைகளை சுபாஷ் சந்திரகபூர் என்ற வடநாட்டுப் பேர் வழி, ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றுக்கு பல கோடிக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்ததாம்!

நமது சிலை திருட்டு தடுப்புக் காவல்துறை பிரிவினர் அங்கே சென்று கண்டுபிடித்து, ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குப் புகார் கூறியபின், அவ்வரசின் மூலம் ஆஸ்திரேலியா வந்துள்ளது. இப்போது ஆஸ்திரேலிய பிரதமர், புதுடில்லியில் நமது பிரதமரிடம் பத்திரமாக ஒப்படைக்கவிருக்கிறாராம்!

பிரதமர் அமைச்சர்கள் மட்டும் வெளி நாடுகளுக்குச் சென்றால் போதுமா? காலங் காலமாக காராக்கிரகத்தில் வவ்வால் புழுக்கை நாற்றத்தில் அடைந்து கிடக்கும் நம் கடவுள், கடவுளச்சிகளும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வர வேண்டாமா?

அதனால்தான் அரியலூர் நடராஜப் பெருமானும், விருத்தாசலம் கடவுளும் ஆஸ்திரேலியா பயணமாகி விட்டனர் போலும்!
ஆஸ்திரேலியப் பிரதமரான வெள்ளைக் காரர் நம் ஹிந்து கடவுளர்களை மிக பத்திர மாகக் கூட்டி வந்து, நீங்கள் ஜப்பானிலிருந்துத் திரும்பி சென்று வந்துள்ளீர்கள்;

நீங்கள் வணங்கும் கடவுள்களோ, எங்கள் நாட்டு அருங்காட்சியகத்தில் 8 ஆண்டுகள் வாசஞ் செய்து விட்டு, சுகம் அனுபவிக்கிறார்கள் அபிஷேகம் - அப்படி இப்படி என்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்து விட்டு - இப்போது சொந்த நாடு திரும்பி யுள்ளனர் - எனது துணையோடு என்று சொல்லாமற் ஆஸ்திரேலியப் பிரதமர் சொல்லக் கூடும்!

நம்ம கடவுள்களின் சக்தியே சக்திதான்! எப்படியும் சிலை தடுப்புக்கும், திருடிய பொருளை மீட்பதற்கும் மனித உதவி, காவல் துறையினர் உதவி தானே தேவைப்படுகிறது?

கடவுளை மற, மனிதனை நினை என்றாரே பெரியார் - அதன் பொருள் இப்போதாவது விளங்குகிறதா?

இவ்வளவு பத்திரமாக பெரிய மதில் சுவர்கள் நெடுங் கதவுகள், பூட்டுப் போட்ட நிலை எல்லாம் இருந்தும் சிறையில் இருந்த சர்வ சக்தி(?)க் கடவுளர்கள் திருடப்பட்டு ஆஸ்தி ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டு - பரோல் முடிந்து திரும்புவதுபோல திரும்புகின்றனரே, பலே, பலே நாம் இதற்கொரு சம்ப்ரோட்சண உத்சவம் நடத்திக் கொண்டாட வேண்டாமோ? முன்பு சிவபுரத்து நடராஜர் திரும்பினார்.

இப்போது அரியலூர் நடராஜர் பரோல் முடிந்து பத்திரமாக ஊர் திரும்பியுள்ளார்.

ஆனால், ஒரே ஒரு வருத்தம் தான்! போயும் போயும் இந்த மிலேச்சர் வெள்ளைக்காரனான ஆஸ்திரேலியாக்காரனோடா நம்ம ஆபத் பாந்தவன், அனாதைரட்சகன், சர்வ சக்தி நடராஜன் திரும்புவது; நமக்கு தோஷ மில்லையா எப்படி தோஷம் கழிப்பது?

இராம. கோபாலய்யரை அல்லது வழக்கு புகழ் காஞ்சி மட ஆதிபதிகளையோ கேட்டு முடிவு செய்தால் நன்னா இருக்கும்! இல்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/87122.html#ixzz3CRqGWWLH

தமிழ் ஓவியா said...


யார் இந்த வ.உ.சி.?


சுதந்திரத்துக்காக யார் யார் எல்லாமோ பாடுபட் டார்கள்; பாடுபட்ட பலரும் பிற்காலத்தில் பெரும் பதவிப் பல்லக்கில் பவனி வந்தனர். தன் தியாகத்துக்காக கிண்டி ஆளுநர் தோட்டத்தையே தியாகி மானியமாகக் கேட்ட ராஜாஜி போன்றவர்கள் அனுபவிக்காத பதவிகளா? (குங்குமம் 7.4.2000)

வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தின்போது அதற்கு எதிராக நின்றதால் ஆகஸ்டுத் துரோகிப் பட்டம்! அவரைத் தேடிச் சென்றது - ஆனாலும் வெள்ளையன் வெளியேறிய சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும் அவரே! என்ன செய்வது! அவர் தோளில் பூணூல் தொங்கியதே! ஆனால் இரட்டை ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) பெற்ற தமிழன் வ.உ. சிதம்பரனாரை எத் தனைப் பேர் நினைத்து பார்க்கிறார்கள்? அவரின் பிறந்த நாள் இந்நாள் (1872).

சிதம்பரனாருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி ஏ.எஃப் பின்ஹே கூறிய வாசகங்கள் கொடுமையா னவை என்றாலும் - அவை ஒரு வகையில் வ.உ.சி.யின் வீரத்திற்கும், தீரத்திற்கும், தியாகத்திற்கும் காலத்தைக் கடந்து கட்டியம் கூறிக் கொண்டு தானிருக்கும்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை வெறுக்கத்தக்க மிகப் பெரிய ராஜதுரோகி! மேன்மை தங்கிய மன்னர் பிரானின் பிரஜைகளில் இந் தியர் - ஆங்கிலேயர்களுக் கிடையே பகைமையையும், வெறுப்பையும் விதைப்பவர். அவருடைய எலும்புகள்கூட சாவிற்குப் பிறகு ராஜ துவே ஷத்தைப் பரப்பும்! என்று தீர்ப்பில் சொன்னார் என்றால் வ.உ.சி.யின் தீரம் எத்தன் மையது என்பது எளிதில் விளங்கும்.

பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்ட (7.7.1908) அந்தஅரிமா அதற்குப்பின் கோவை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்தச் சிறை யில் செக்கிழுக்க வைத்தனர்.

அந்த மாவீரன் சிறையி லிருந்து வெளியேவந்த போது அவரை வரவேற்க வந்தவர்கள் வெறும் 5 பேர்கள் தான்!

என்ன கொடுமையடா இது! கடைசிக் காலத்தில் வறுமைத் தேள் கொட்டக் கொட்ட தன் அன்றாட வாழ்வுக்கே அல்லற்பட்டார்! மண்ணெண்ணெய்க் கடை வைத்திருந்தார்; சென்னை யில் லோன் ஸ்கொயரில் அரிசிக் கடையும் வைத்தார்; அதுவும் நட்டத்தில் முடிந்தது.

பிற்காலத்தில் சுய மரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்ப ராகவும் விளங்கினார் சுய மரியாதை மாநாடுகளில் எல்லாம் கர்ச்சித்தார்.

வ.உ.சி.யைப்பற்றி தந்தை பெரியார் சொல்கிறார்: என்னை வ.உ.சி. அவர்கள் தலைவர் என்று சொன்ன தற்காக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது, தலைவராக இருந்து நடத்திய பெருங் கிளர்ச்சி யின்போது நான் உல்லாசத் துடன் விடலைப் புருஷ னாய் விளையாடிக் கொண் டிருந்தேன்.

அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன் (குடிஅரசு 26.6.1927) என்று கோயில்பட்டி திராவிடர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசினார்.

- மயிலாடன்

குறிப்பு: 1944இல் திரா விடர் கழகம் தோன்றியது என்றாலும் கோயில்பட்டியில் திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டில் பங்கேற்ற வரலாறு நோக்கத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/87119.html#ixzz3CRqj2gZe

தமிழ் ஓவியா said...


முன்னேற்றமடையவோ முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/87131.html#ixzz3CRrIGJqp

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் தமிழில் வழிபாடு


தமிழில் கல்வி, தமிழிசை, தமிழில் நீதி என்றெல்லாம் இன்னும் முழு மூச்சாக முயற்சிக்காமல், வழிபாட்டில் தமிழ் என சிலர் ஊடுருவ முனைந்துள்ளனர் என திரு லா.சு. ரங்கராஜன் என்பார் அவர்கள் வழக்கமான பாணியில் தினமணியில் (20.10.2012) கட்டுரை வரைந்துள்ளார்.

ஒரு சிலருக்கு வரும் வரும்படி பாதிக்குமேயெனக் கருதி தமிழில் வழிபாடு என்பது அவருக்கு ஊடுருவல் போலத் தோற்றமளிக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் கூடாதோ! இனி திருக்கோயில்கள் தோறும் தமிழில் மட்டுமே வழிபட வேண்டும் என இறைவன் திருமறைக்காட்டில் திருவிளை யாடலைத் தொடங்கினான்.இச்செய்தியை தினமணி அப்போதே வெளியிட்டது.

எல்லாவற்றிற்கும் அய்ரோப்பாவை உதாரணம் கூறுவோரே, அங்கே லத்தீன் மொழி வழிபாட்டை தூக்கி எறிந்து அவரவர் தாய்மொழி வழிபாட்டை நடைமுறைப் படுத்திய வரலாறு மறந்து போனது ஏன்? உலகில் எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழி மூலம் தானே வழிபாடு, கல்வி, ஆட்சி நடைபெறுகின்றது.

மேலும், கி.மு. 1500 வாக்கில் இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினர், பன்னிகு திருமுறை, சிவஞானபோதம் போன்றவற்றை தம் மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டு பின் நாளில் மொழி பெயர்ப்புதான் மூலம் என கதைத்த வரலாற்றை தமிழ்ப் பேரறிஞர் திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம் தனது தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் (14 தொகுதிகள்) விரிவாக விளக்கி விட்டாரே!
தமிழனுக்கு தமிழில் வழிபாடு செய் கின்ற எண்ணம் கூடாதா? அது என்ன தவறா? இறைவனே விரும்பி தமிழ் வழிபாடு வேண்டும் எனக் கூறியதாக பெரிய புராணத்திலேயே உள்ளதே!

- பெ. சிவசுப்பிரமணியன்
ஆட்சி அலுவலர் (ஓய்வு)./ தலைவர்
தாயுமானசுவாமி தமிழ்வளர்ச்சி மன்றம்,
சென்னை - 600 081

Read more: http://viduthalai.in/page-2/87143.html#ixzz3CRrWo8xV

தமிழ் ஓவியா said...


காணவில்லை!

திருடுபோன மோதிரம்

திரும்பவுமே கிடைத்திட்டால்

விரும்பி வந்து செய்திடுவேன்

திருப்பணிக்கு பொருளுதவி

என்று நானும் நித்தமுமே

வேண்டி வந்தேன் சாமியிடம்

வேண்டுதலும் பலித்தது

மோதிரமும் கிடைத்தது

பொருளுதவி அளிப்பதற்கு

திருக்கோயில் சென்ற போது சாமிசிலை திருடுபோன

சங்கதியைக் கேட்டேன்

அந்தசாமி கிடைப்பதற்கு

எந்தசாமியை வேண்டுவேன்?

மா.அமிர்தலிங்கம், சென்னை

Read more: http://viduthalai.in/page-7/87114.html#ixzz3CRsSnTwh

தமிழ் ஓவியா said...

போலிக் கடவுள்கள்

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள விக்கிரகங்களில் பெரும்பாலானவை உண்மையானவை அல்ல; போலிகளேயாகும். பணத்திற்கு ஆசைப்பட்டு, பல்வேறு புராதன விக்கிரகங்கள் வெளிநாடு களுக்குக் கடத்தப்பட்டு வருவதால், தற்போது கோயில் களில், நாம் வணங்கும் பல்வேறு கடவுள்களின் சிலைகள் போலிகளே!

விக்கிரகங்களைக் கடத்துபவர்கள் அசல்போலவே காட்சி அளிக்கும் போலி விக்கிரகங்களை நிர்மாணித்து விட்டுச் சென்று விடுவதால் அந்த விக்கிரகங்கள் மீது எவருக்கும் சந்தேகம் வருவதில்லை.

விக்கிரக திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தைக் கொண்டே, இன்னின்ன கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் போலியானவை என்று பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது.

சமீபத்தில் சர்ச்சைக்குட்பட்ட சிவபுரத்து நடராசன் விக்ரகம் தமிழகத் திலிருந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு, 15 ஆயிரம், 5 லட்சம், 35 லட்சம் என்று 3 பேர் கை மாறி, கடைசியில் ஒருவரால் 75 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டது.

அவ்வளவு மதிப்பு வாய்ந்த நடராசன் விக்கிரகம் களவு போன விஷயமே 7 ஆண்டுகளுக்குப் பின்னரே நமக்குத் தெரியவந்தது. சென்னை நகர சி.அய்.டி. போலீஸ் சூப்ரின் டெண்டன்ட் கே.வி.ஞானசம்பந்தம் ஒரு கருத்தரங்கில் வெளியிட்ட விவரமே இவை.

(ஆதாரம்: 8.12.1975, தினமணி, 2ஆம் பக்கம்)

Read more: http://viduthalai.in/page-7/87114.html#ixzz3CRscrN8x

தமிழ் ஓவியா said...


குமுதம் ஒப்புக்கொள்ளுமா?


ஆசிரியர் அவர்கட்கு!

குழந்தையும், தெய்வமும் ஒன்று; அறியாமல் செய்த பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன என்று ஆஸ்திகர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் நடப்பது என்ன?
15.11.1979ஆம் தேதி வெளிவந்த குமுதம் இதழின் பகுதியினை இங்கே தருகிறோம்.

கோபாலகிருட்டிணன் என்பவர் தன்னுடைய 7 மாத பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குருவாயூரப்பன் சன்னிதானத்திற்குச் சென்றாராம். அவ்வமயம் அந்தப் பச்சிளங்குழந்தை அக்கோவிலுக்குள் சிறுநீர் இருந்து விட்டதாம். உடனே அக்கோவில் நிர்வாகிகள், உன் குழந்தை கோவிலை அசுத்தப்படுத்தி (களங்கப்படுத்தி) விட்டது.

ஆகையால், அதை (கோவிலை) புனிதப்படுத்த ரூ.14.37 என்று கூறி வசூலித்து விட்டார்களாம். (இது அதிகாலையில் நடந்ததினால் குறைந்த தொகை; இந்த நிகழ்ச்சி பிற்பகலில் என்றால் ரூபாய் 3000 வரை கட்ட வேண்டியிருக்கும். உனக்கு கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் போ- என்று கூறினார் களாம்.

பணம் கொடுத்தால் புனிதமாகி விடும் என்று கூறுகிறார்களே! அப்படியானால், சாமியையே (சிலை) அசிங்கப்படுத்துகிறோம்; உடனே அபராதத்தொகை கட்டி னால் அந்தச் சிலை புனிதமாகி விடும் அல்லவா! (எவ்வளவு பணம் என்றாலும்) அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? (அல்லது) விபச்சாரமே (அதிகாலையில்) நடக்கிறது .

அதனால் அந்த இடம் களங்கப்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்; உடனே அபராதம் கட்டி அந்த இடத்தை புனிதப்படுத்தி விடலாம். இதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்களா?

(விபச்சாரம் செய்வதையே இன்றைய தினம் விழாவாகக் கொண்டாடுகிறார்கள் - சித்திரை திருவிழாவின் பிற் பகுதி)

ஆனால், அறியாமல் செய்த சிறு குழந்தைக்கு இந்த அபராதம் ஏன்? நன்றாக சிந்திப்பீர். பக்திக்கு வக்காலத்து வாங்கும் குமுதமும் குமுதத்தின் அரசும் புத்தி வந்து திருந்தி னால் சரி.

கோசு.இராசா, மதுரை

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRswQm8X

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் இருப்பதால், முற்போக்குக்கு அவசியமான மார்க்கங் களைக் கைப்பற்றவும் கண்டுபிடிக்கவும் முயலவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRt7ugpm

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி

ஒரு பெரிய சமூகப் புரட்சி உண் டாகாமல் அபேதவாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும். ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள். ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtJPMVz

தமிழ் ஓவியா said...

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

Read more: http://viduthalai.in/page-7/87115.html#ixzz3CRtQSDdr

தமிழ் ஓவியா said...


சிக்கலில் வாரியார்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மகாபாரதத்தில் துரோணர் காணிக்கையாக கேட்டு ஏகலைவன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்க வில்லை என்று மதுரையில் கிருபானந்தவாரியார் புராண பிரசங்கம் செய்த பொழுது கிருஷ்ண ஆரியா என்பவர் எழுந்து, இல்லை இல்லை, துரோணர் கேட்டுத்தான் ஏகலைவன் தன் கட்டை விரலைக் கொடுத்தான் என்று மறுப்புக் கூறினார்.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் கட்டிக் கொண்டனர். மகாபாரதத்தில் கிருஷ்ண ஆரியா சொல்லியபடிதான் உள்ளது. ஆனால் , வாரியார் சொன்ன படி நடந்து கொள்ளவில்லை. அதனால் கிருஷ்ண ஆரியா வாரியார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை அடிஷனல் முதலாவது சப்- மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

15.1.2.1979-உண்மை

Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtZNSK9

தமிழ் ஓவியா said...

கோயில் பெருச்சாளிகள்

தினசரி சிறீரெங்கநாத சாமி கோயிலில் 6 கால பூஜை நடக்கிறது. பொங்கல், புளியோதரை, ததிஅன்னம், வடை, அதிரசம், தேன்குழல், தோசை, பாயாசம், சுக்கு நீர், இவைகள் படைக்கப்படுகின்றன. பூஜை முடிந்தவுடன் மேற்படி ஸ்தலத்தார் (பட்டர்கள் 4, அண்ணங்கார் 2, ஜீயர்கள் 2, ஆக 8 பேர்) திரைபோட்டுக் கொண்டு பங்கு பிரித்துகொள்ள ஒரு மணி நேரம் ஆகிறது.

முன்னாள் மடாலய அமைச்சர் வெங்கடசாமி நாயுடுவிடம், ஆர்.ராஜகோபாலய்யங்கார் என்ற பார்ப்பனர் கொடுத்த புகார் மனு இது.

ஆதாரம்: 6.11.1954, விடுதலை

Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtgYpEk

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்

மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம்பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங்கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப்பாரு!

Read more: http://viduthalai.in/page-7/87116.html#ixzz3CRtnPM8b

தமிழ் ஓவியா said...


சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/86915.html#ixzz3CRu5E8xp

தமிழ் ஓவியா said...


தேனினும் இனிய விடுதலை


22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page1/86924.html#ixzz3CRufCWbD

தமிழ் ஓவியா said...


பற்களில் கறை போக்க...


என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page1/86882.html#ixzz3CRvKqo3y

தமிழ் ஓவியா said...


நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvVQz1K

தமிழ் ஓவியா said...

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

Read more: http://viduthalai.in/page1/86883.html#ixzz3CRvedmQN

தமிழ் ஓவியா said...

ரத்த அணுக்களை பெருக்கும் முருங்கைக் கீரை


உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் செரிமானமடைவதுடன் உடலால் விரைவில் ஏற்றுக் கொள் ளப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன.

தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பார்லி நீரை தினமும் அருந்திவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்து, காலையில் எழுந்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.

முதல் நாள் இரவில் உலர்ந்த திராட்சைப் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தல் உடல் நன்கு சக்தி பெறும்.

வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பைக் கரையும்.

வால் மிளகு பசியைத் தூண்டிவிடும். செரிமான சக்தியை உண்டாக்கும். கபத்தையும் வாயுவையும் போக்கும்.

Read more: http://viduthalai.in/page1/86886.html#ixzz3CRvuW3Zd

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று சுப்பிரமணியசாமி சொல்லுவதா?


சுப்பிரமணியசாமிகளை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழக மீனவர்களை விடுவிக்கலாம்; ஆனால் அவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று கூறும் சுப்பிரமணிய சாமிகளைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழிலாகும். அவர்கள் கடலில் சென்று தம் தொழிலை மிகப் பெரிய சூறாவளி, கடல் சீற்றம் - இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாது, தம் வாழ்வைப் பணயம் வைத்து மேற்கொண்டு வரும் இத்தொழிலையே செய்ய இயலாத வகையில், சிங்களக் கப்பற்படையினராலும், ஆதரவு காட்ட வேண்டிய நமது கடலோரக் கப்பற் படையினராலும் பல்வேறு இடையூறுகளையும் இடை யறாது சந்தித்து வருகின்ற அவலம் அன்றாடத் தொடர் கதையாகியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் சாதிக்க முடியாததை தாம் சாதித்துக் காட்டப் போவதாக மார்தட்டிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், எந்தப் பெரிய மாறுதலும் இன்றி அவர்களது வேதனையான வாழ்வுக்கான கெடுபிடிகளும், சிறை வாசங்களும், படகுப் பறிப்புகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஒரு சிலரை விடுதலை செய்து வித்தை காட்டியது இராஜபக்சே அரசு.

யார் இந்த சுப்பிரமணியசாமி?

இந்த நிலையில் தமிழ் இன விரோதி சுப்பிரமணிய சுவாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வுக்குள் புகுந்து கொண்டு தான் தான் ஏதோ இலங்கை அதிபர் இராஜபக்சேவையே வழி நடத்துபவர்போல பீற்றிக் கொள்வதோடு, பகிரங்கமாக மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியும், பேட்டி கொடுத்தும் வருகிறார். இவருக்கு மத்திய ஆட்சியில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரம் - தகுதி என்ன என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கையின் மீன் வளத்தைச் சுரண்டுவதாகவும், அவர்களின் படகுகளை (61 படகுகள்) இலங்கை அரசு அவர்களிடம் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்றும் தான்தான் ராஜபக்சே அரசுக்குக் கூறியதாகவும், இவர்கள் கொழுத்த பணக்காரர்கள் என்றும் ஏதோ வாயில் வந்தபடி உளறிக் கொட்டியுள்ளார்.

இதை பிரதமர் மோடியும், வெளி உறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜும், அமைச்சரவையில் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டு பிஜேபி தலைவர் மறுக்கிறார்

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டுப் பிஜேபி தலைவர் சொல்லுவது எனக்கு ஒரு பொருட்டல்ல; மத்திய அமைச்சர் யாராவது அப்படி சொல்லியிருக்கிறார்களா என்று ஆணவத்தோடு பதில் சொல்லியுள்ளார் இந்த சாமி (தமிழ்நாடு பிஜேபியின் புதிய தலைவர் இதில் இழையோடும் உணர்வைப் புரிந்து கொண்டால் சரி!) அந்தப்படி இருக்கையில், மத்திய அரசு சு.சுவாமிகளின் இந்த அடாவடித்தன அகம்பாவப் பேச்சுகளைக் கேட்டு சும்மா இருக்கலாமா?

மாநில அரசு இந்தப் பேர்வழியை தமிழ்நாட்டுக்குள்ளே வர அனுமதிக்கவே கூடாது. மீனவர்களின் கொதிப்பும், கொந்தளிப்பும் பாய்ந்தால் அது சட்டம், ஒழுங்கு கெட வழி வகுத்து விடாதா?

மத்திய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

அதுபோலவே மத்திய அரசும் விரைவில் இவரால் ஏற்படும் தலைவலி, திருகு வலிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கலாமா?

மக்கள் எதிர்ப்பு கண்டு பயந்துதானே தனக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்புக் கேட்டுப் பெற்றுள்ளார் இந்த சூராதி சூரர்?

தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது!

தமிழ்நாட்டில் எங்கும் நுழைய இத்தகைய தமிழ் இன விரோதிகளை அனுமதிக்கவே கூடாது. இராஜபக்சேவின் ஏஜண்ட்டுகள் போல் செயல்படும் இத்தகையவர்களை ஒருபோதும் தமிழ் மண்ணும், மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.

சென்னை
2.9.2014

- கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/86941.html#ixzz3CRwSIf8C

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்


ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர் கள் அடக்கினது; கொன்றது; இழிவு படுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.

(விடுதலை,18.1.1951)

Read more: http://viduthalai.in/page1/86930.html#ixzz3CRwvvxmq

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை


மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு, தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படவேண்டும்.

- (குடிஅரசு, 3.4.1927)

Read more: http://viduthalai.in/page1/87017.html#ixzz3CRxybgvj

தமிழ் ஓவியா said...


டெசோவின் இன்றியமையாமை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தனர். அங்கு என்ன பேசப்பட்டது? பிரதமர் எந்த உறுதியைக் கொடுத்தார்? என்பது போன்ற தகவல்கள் உருப்படியாக ஏதும் கசியவில்லை.

ஆனால், இலங்கையின் பிரபல இதழான வீரகேசரி சில முக்கியப் பிழிவுகளை வெளிச்சத் திரையில் ஓட விட்டு இருக்கிறது.

இலங்கையில் நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்க தனியார் ஆணையம் ஒன்றை இந்தியா நியமிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒரே வரியில் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிட முடியாது; அரசியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தலைமையில் உள்ள இலங்கை அரசு கவனித்துக் கொள்ளும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு இனப் பிரச்சினைபற்றி எடுத்துரைத்து, அவற்றிற்கான தீர்வுகளை அங்குள்ள அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி இதோபதேசம் செய்துள்ளார்; இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியப் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று சொல்லுகிறார்.

இலங்கை அரசு நாங்கள் கூறுவதை செவிமடுத்துச் செயல்பட்டிருந்தால், நாங்கள் ஏன் இந்திய அரசை நாடப் போகிறோம்? என்ற நியாயமான வினா மூலம் தங்கள் ஆதங்கத்தை அதிருப்தியை நாகரிகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய ஏடுகள் வெளிப்படுத்தாத தகவல்களை இலங்கையின் வீரகேசரி வெளிப்படுத்தி விட்டது.

இலங்கை அதிபர் ராஜபக்சேபற்றி தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறை சொன்னால், அதற்குள் புகுந்து உள்நோக்கம் கற்பித்து, பிரச்சினையை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் இறங்கும் இந்திய நாட்டு ஊடகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதி என்னும் முறையிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் ஏடு என்ற தன்மையிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கும், கருத் துக்கும் தங்கள் வசம் எந்த நியாயங்களை வைத் துள்ளனர்?

அய்.நா. மன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறி விக்கப்பட்ட விசாரணைக் குழுவையே அனுமதிக்க மறுக்கும் ராஜபக்சேயிடம் எல்லா வகைகளிலும் வீழ்த்தப்பட்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் ஈழத் தமிழர் தம் பிரநிதிதிகளின் குரல் எடுபடுமா? இந்தப் பொது தகவல் - புரிதல்கூட இல்லாமலா நம் நாட்டு தலைமைப் பீட அமைச்சர்கள் இருக்கிறார்கள்?

தேடி வந்தவர்கள் எடுத்து வைக்கும் குறை பாடுகளைக் கேட்டுக் கொண்டதற்காக, எதையாவது சொல்ல வேண்டும் என்ற சம்பிரதாய வார்த்தைகளை இந்தியப் பிரதமர் சொல்லியிருக்கிறார் என்பது தான் இதன் மூலம் தெரிய வருகிறது.

ராஜபக்சே அளவுக்குப் போவானேன்? அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இந்தியாவில் வந்து விசாரணை நடத்துவதற்கே விசா மறுக்கும் இந்திய அரசை - அதன் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி என்ன நினைப்பது?

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா ஏதாவது உருப்படியான முயற்சிகளை மேற்கொண்டால்தான் ஏதாவது முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களும் சரி, உலகெங்கும் உள்ள மனித உரிமை அலுவலர்களும் சரி எதிர்பார்க்கும் நிலையில் ராஜபக்சேவுக்கு அப்பனாக இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறோர்களே! இது நியாயமா? சரியா?

இத்தகையதோர் கால கட்டத்தில் கலைஞர் அவர்களின் தலைமையில் அமைந்த டெசோ உருப்படியான திசையில் காலத்தின் தேவையான - அவசியமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட டெசோவின் இந்தச் செயற்பாடுகள் காலத்தால் என்றென்றும் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைத் தங்கள் அரசிய லுக்குக் கிடைத்த மூலதனமாகக் கொண்டு முழக்க மிட்டவர்கள், இந்த முக்கியமான கால கட்டத்தில் வெளியில் தலை காட்ட முடியாத ஒரு இறுக்கமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று நினைக்க நிறைய நியாயம் உண்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவாரே - நம்மைப் பிளவுப்படுத்துவதை தூர வைத்து நம்மை இணைப்பவற்றைப் பற்றிக் கொண்டு ஓரணியாய்த் திரள்வோம் என்று உன்னதமான நல்வழிகாட்டுதலை தமிழகத் தலைவர்கள் சற்று யோசிக்கக் கூடாதா?

இதில் கொஞ்சம் மானப் பிரச்சினை தட்டுப் படுமேயானால் பொதுத் தொண்டில் மானம் பாராதே என்ற தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உரையை ஒருமுறை அசை போட்டுப் பார்க்கலாமே!

Read more: http://viduthalai.in/page1/87075.html#ixzz3CRzN1ik3

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.

- (விடுதலை, 3.4.1950)

Read more: http://viduthalai.in/page1/87074.html#ixzz3CRzX91Xm