Search This Blog

27.9.14

காந்தியார் தேசப் பிதா என்றால், பெரியார் தமிழர்களுக்குத் தந்தை!


வாளெடுத்துப் போரிட்ட காலம் சென்று விட்டது பெரியார் தந்த அறிவாயுதத்தை ஏந்துவோம்!
சென்னை பெரம்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

சென்னை, செப். 25- வாளெடுத்துப் போரிட்ட காலம் சென்று விட்டது பெரியார் தந்த அறிவாயுதத்தை ஏந்துவோம்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். 17.9.2014 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
இளைஞர்கள் நல்ல பணியை தொடங்கியிருக்கிறார்கள்
இந்தப் பகுதிக்கு வரும்பொழுது கழக துணைத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல நீண்ட இடைவெளி என்று சொன்னாலும்கூட, அதற்கு முன்பு ஆண்டுக்கு ஒருமுறை நண்பர்கள் ஏழுமலை போன்றவர்கள் இருந்த காலத்திலும், முருகேசன் அவர்கள் இருந்த காலத்திலும், இன்னும் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய நம்முடைய தோழர்கள் ஏராளமாக இந்தப் பகுதியில் இருந்தார்கள்; குடும்பம் குடும்பமாக இன்னமும் இருக்கிறார்கள். உதாரணத் திற்கு நம்முடைய இந்திராணி - சபாபதி அவர்களுடைய குடும்பம் பெரம்பூர் என்கிற அடையாளத்தோடு இருக்கின்ற குடும்பம் அன்றும், இன்றும். அதுபோல், தந்தை பெரியாருடைய குடும்பங்கள், எண்ணற்ற குடும்பங்களில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன என்றாலும், இன்றைக்கு இந்தப் பகுதியில் அற்புதமான ஒரு விழாவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

அருமையான இளைஞர்கள் நல்ல பணியை தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பணி மேலும் மேலும் தொடரவேண்டும் என்பதுதான் எம்மைப் போன்றவர்களுடைய ஆசையாகும்.

இதேநேரத்தில், இந்தப் பகுதியில் நம்முடைய பகுத்தறிவாளர் கழகத் தோழர்களாக இருக்கக்கூடிய அருமை நண்பர்கள், சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை நம்முடைய ஒளிவண்ணன், தமிழ்ச்செல்வன், கோபால், வெங்கடேசன்  இப்படி பல தோழர்கள் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். இந்தக் குறிப்பிட்ட பகுதியிலே நீண்ட இடைவெளிக்குப் பின்பு, மக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதுதானே தவிர, மற்றபடி இந்தப் பகுதியில் பிரச்சாரம் நடைபெறவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், மக்களுக்கு நம்முடைய பிரச்சாரம் அடிக்கடி தேவை. அதுதான் அடிப்படையான ஒரு மிக முக்கியமாக கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒரு உண்மையாகும்.
எப்பொழுதும் முனை மழுங்காத ஆயுதம்; என்றைக்கும் எவராலும் வெல்லப்பட முடியாத ஆயுதம்

மிக அருமையாக ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் கூட, நம்முடைய தோழர்கள் அன்பின் மிகுதியால், வீர வாள் பரிசளிப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை வைத்திருக்கிறார் கள்.  தோழர்களின் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன், தலைவணங்குகிறேன். அதேநேரத்தில், வாளெடுத்து போர்க் களத்திற்குச் சென்ற காலங்கள் மாறிவிட்டன. இது ஏகே47 காலம். அப்படியானால், நாமெல்லாம் ஏகே 47 துப்பாக்கியைத் தூக்கவேண்டும் என்று பொருள் அல்ல. இவற்றையெல்லாம் சிறைப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் நம்மிடையே இருக்கிறது. உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். அவசர அவசரமாகக்கூட அரசாங்கத் தினுடைய காதுகள், ஏதோ பெரிய ஆயுதங்களை யெல்லாம் இவர்கள் தயாரிக்கிறார்கள்போல இருக்கிறதே என்று நினைப்பார்கள். அந்த சக்தி வாய்ந்த ஆயுதம் எப்பொழுதும் முனை மழுங்காத ஆயுதம்; என்றைக்கும் எவராலும் வெல்லப்பட முடியாத ஆயுதம். நம்மிடையே இருக்கிறது என்றால், அதுதான் அறிவாசான் நமக்குத் தந்த அறிவாயுதம் என்பதை மறந்துவிடக் கூடாது.

சுயமரியாதை, பகுத்தறிவு என்கிற ஆயுதம் இருக்கிறதே, அது எப்பேர்ப்பட்டவர்களையும் தலைவணங்கச் செய்யும். எல்லாக் களங்களிலும் நம்மை முன்னிறுத்தி, நாம் மிக நீண்ட காலமாக இருக்கிற மூடநம்பிக்கை, கண்ணுக்குத் தெரிந்த வற்றை மட்டுமல்ல, கண்ணுக்குத் தெரியாதவைகளையும் சேர்த்தே கருவறுக்கக்கூடிய அளவிற்கு அந்த ஆயுதத் திற்கு வலிமை உண்டு.
பெரியாருடைய போர் முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன செய்தி என்னவென்றால், மற்றவர்களுடைய போர் முறைக்கும்; பெரியாருடைய போர் முறைக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. மற்றவர்களுடைய போர் முறை, எதிரில் இருப்பவர்களோடுதான் போர் செய்வார்கள். ஆனால், தந்தை பெரியாருடைய போர் முறை இருக்கிறதே, அது மிக ஆழமாக, எவையெல்லாம் கண்ணுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும்கூட, எந்த அளவிற்கு எதிரிகளாக இருக்கிற வர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக  இருந்தாலும்கூட, எங்கே அஸ்திவாரம் இருக்கிறதோ, அந்த அஸ்திவாரத் திற்கே போய் துளைப்பார்கள். அதுதான் பெரியாரின் போர் முறை. மூல பலத்தை முறியடிப்பதுதான் பெரியாருடைய போர் முறை என்று சொன்னார்.

எனவே, பெரியாருடைய பிறந்த நாள் விழாவாகிய இன்றைக்கு ஒரு பெரிய போர், அறியாமைக்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக, பெண்ணுரி மைக்கு எதிராக, நீண்ட காலமாக இருக்கக்கூடிய அந்தப் பழைமை வாதத்தைப் பயன்படுத்தி, மதவெறியை உருவாக்கி, இந்த நாட்டில் அமைதியாக வாழுகிற மக்கள் மத்தியில், மதவெறியை உண்டாக்குவதன்மூலமாக, மதச்சார்புற்ற நாடாக இந்த நாட்டை மாற்றிக் காட்டலாம் என்று மதவெறி சக்திகள் முனைகின்றார்களே, அந்த மத வெறிக்கு எதிராக மிகப்பெரிய போரைத் தொடுக்கவேண்டிய வர்களாக நாம் இன்றைக்கு இருக்கிறோம். இது காலத்தின் கட்டாயம். இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டும். உங்களைப் பார்க்கின்றபொழுது, நம்பிக்கை வருகிறது. காரணம், எண்ணற்ற இளைஞர்கள் இந்த இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கம், தந்தை பெரியாருடைய இயக்கம் மூல பலத்தை முறியடிப்பது என்ற போர் முறையைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற இந்த இயக்கம் இருக்கிறதே, இது பலராலும், மிகப்பெரிய  அளவிற்கு, இதுவரை நம்மால் எதிர்பார்க்காத வட்டத்தில்கூட பெரியார் வென்று கொண்டே இருக்கிறார். பெரியாருடைய இயக்கத்திற்குத் தோல்வி என்பதே கிடையாது. இதுதான் காலங்காலமான வரலாறே தவிர, தோல்வி என்பதே பெரியாருடைய இயக்கத்திற்கு எப்பொழுதுமே வந்தது கிடையாது. அதனைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், இரண்டொரு செய்தியை மட்டும் சொல்லி, அடுத்த செய்திக்கு நான் செல்லவிருக்கிறேன். நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பிருக்காது. அதிகம் பேசினால், ஒரு 40 நிமிடம் பேசலாம். அல்லது ஒரு மணிநேரம் பேசலாம்; ஆனால், அதற்குள்ளாகவே எல்லா செய்திகளையும் சொல்லிவிட முடியாது என்கிற காரணத்தினால்தான், புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நூல்களும் இங்கே வெளியி டப்பட்டன. மலர்களை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம் என்று சொன்னால், அது வியாபாரத்திற்கு அல்ல; நாங்கள் சொல்கின்ற கருத்துகள் இருக்கின்றதே, அது எவ்வளவு ஆதாரபூர்வமானது; உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேண் டும் என்பதற்காகத்தான், அந்த நூல்களை நீங்கள் வாங் குங்கள், படியுங்கள், பிறருக்கும் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கக்கூடிய நிலையில்தான் இந்தக் கருத்தினைச் சொல்கிறோம்.

தலைமுறையை மய்யப்படுத்தியது
இந்த நாட்டில், தந்தை பெரியார் அவர்களுக்கும், மற்ற தலைவர்களுக்கும் உள்ள வேறுபாட்டினை அருமைத் தோழர் சுப.வீ. அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, மற்றவர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றார்கள்; பெரியார் ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே வரக்கூடிய ஆற்றலோடு பணியாற்றினார். பெரியாருடைய கடமை என்பதிருக்கிறதே, அது ஒரு புதிய தலைமுறையை உருவாக்கியது. வெறும் வாக்குச் சேகரிப்பை அல்ல; தேர்தலை மய்யப்படுத்தி அல்ல; தலைமுறையை மய்யப்படுத்தியது. அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
சென்ற தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறை, அதற்கு முன் பலதலைமுறைகள் மானத்தை மறந்த அல்லது இழந்த சகோதரிகளாக இருந்தனர் என்று சொன்னால், மான உணர்வுக்காக மிகப்பெரிய அளவிற்கு தன்னையே இழப்பதற்குத் தயாராகக் கூடியவர்களை உருவாக்கக் கூடிய தலைமுறையாக, இந்தத் தலைமுறை மானமும், அறிவும் உள்ள மக்களாக இருக்கவேண்டும். அதனை உருவாக்குவதுதான் தன்னுடைய பணி என்பதை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னார்.
மானமும், அறிவும் உள்ள மக்களாக...
தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து, உங்களுடைய பணி என்ன? என்று கேட்ட நேரத்தில்,

80 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த, கடுமையாக உழைத்த, அவர் காலடி படாத மண்ணே தமிழகத்திலும், பிற இடங்களிலும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு  உழைத்த, தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள் தெளிவாகச் சொன்னார்,

திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும்.
பெரியார் எதை விரும்புகிறார் மக்கள் மத்தியில், பதவியையா? புகழையா? பணத்தையா? அல்லது வேறு எதாவது செல்வாக்கையா? அல்ல; மாறாக பெரியார் விரும்பியது, இந்த சமுதாயத்தை மாற்றவேண்டும்; தன்னுடைய சமுதாயத்தை மானமுள்ள சமுதாயமாக மாற்றவேண்டும். அறிவுள்ள சமுதாயமாக மாற்றவேண்டும். இளைஞர்களே, சிந்தியுங்கள்! இதற்காகப் பாடுபட்ட தலைவர்கள் உண்டா இந்த நாட்டில். தலைவர்களுக்குப் பஞ்சமில்லை, கடவுள்களுக்குப் பஞ்சமில்லை, மகாத்மாக் களுக்குப் பஞ்சமில்லை, பரமாத்மாக்களுக்குப் பஞ்ச மில்லை. ஆனால், மக்களை மனிதர்களாக ஆக்கி, மக்களை சமப்படுத்தி, மக்களுக்கு சம வாய்ப்பைக் கொடுத்து ஆணும், பெண்ணும் வேறல்ல; இரண்டு பேரும் சம உரிமை படைத்த வர்கள். மேல் ஜாதி, கீழ்ஜாதி என்கிற ஆணவத்திற்கு இடமில்லை. எல்லோரும் சமமாக வாழவேண்டியவர்கள்; கைகோர்த்து வாழக்கூடியவர்கள். பிறவி அடிமைத்தனம் தேவையில்லை. பிறவி பேதம் என்பதற்கு விடை கொடுங்கள்; அதனைப் புதைகுழியில் தள்ளுங்கள் என்று சொன்ன மகத்தான புரட்சியாளர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஏன்? பெரியார் அவர்களுக்கு விழா கொண்டாடுவது, ஏதோ பெரியாரை புகழுவதற்காக அல்ல; பெரியார் மேலே இருந்துகொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார், சரியாக செய்கிறர்களா, இல்லையா? என்பதும் அல்ல. பெரியாருக் குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஏன்? பிறந்த நாள் விழா என்பது ஒரு சடங்கா? சம்பிரதாயமா? அல்ல நண்பர்களே, பெரியாரே அதற்கு விளக்கம் சொல்லியிருக் கிறார். விழா கொண்டாடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய காலத்திலேயே அந்த விழாவில் அய்யா அவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அப்பொழுது அவர் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், எனக்கு விழா கொண்டாடுகிறார்கள், அதிலே நான் கலந்துகொள்கிறேன் என்றால், என்ன காரணம் தெரியுமா? அது ஒரு பிரச்சாரம்; அவ்வளவுதானே தவிர, அதற்குமேல் அதற்கு முக்கியத் துவம் கிடையாது. பிறக்காத கடவுளுக்கே பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம்; பிறந்த எனக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதன்மூலம் பிரச்சாரம் செய்யவேண்டாமா? என்று பெரியார் கேட்டார். இப்படி கேட்ட தலைவரை வரலாற்றில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. கடவுளுக்குப் பிறப்பும், இல்லை இறப்பும் இல்லை என்று நாம் சொல்லவில்லை, நம்பிக்கையாளர்கள் சொல்கிறார். பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லையே, பிறகு எதற்கு விநாயகர் சதுர்த்தி; அவராலே நம்முடைய காவல்துறைக்கு எவ்வளவு பெரிய தலைவலி. இதுவரையில் பெரிய அளவிற்கு, விநாயகரைக் கரைப்பதற்கு, வாழ வைப்பதற்குக் கூட அல்ல, விநாயகரைக் கரைப்பதற்குப் பல்லாயிரக் கணக்கில் காவல்துறையினர் தேவைப்படுகிறார்கள். எங்கள் கூட்டத்திற்குக் காவல்துறையினர் தேவையா? தேவை யில்லை! ஒவ்வொரு கறுப்புச் சட்டைக்காரர்களும் கட்டுப்பாடானவர்கள். காவல்துறையினரின் கடமை அவர்கள் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, வேறு கிடையாது.

பத்து அவதாரத்தையும், சுற்றி சுற்றி நம்மூரிலேயே எடுத்தான்; வெளிநாட்டில் எடுக்கவில்லையே!
அப்படிப்பட்ட கடவுளுக்கு, பக்தர்கள் என்ன சொன்னார்கள், கடவுளுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்று. அப்புறம் எதற்கு கடவுளுக்கு விழாக்கள்; சிறீராம நவமி - நவமி என்றால் என்ன? ராமன் பிறந்தான்; கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? கிருஷ்ணன் பிறந்தான். இவர்கள் எல்லாம் கடவுளுடைய அவதாரங் கள். அதுவும் பத்து அவதாரங்கள், மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள். சிவன் அவதாரமே எடுக்கவில்லை.

மறைந்த நெடுஞ்செழியன் அவர்கள் கூட்டங்களில் உரையாற்றும்பொழுது, இந்தப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் நானும், அவரும் பங்கேற்ற கூட்டத்தில்கூட சொன்னார், பத்து அவதாரத்தையும், சுற்றி சுற்றி நம்மூரிலேயே எடுத்தான். ஆஸ்திரேலியாவிலேயோ, அமெரிக்காவிலோ எடுக்கவில்லையே! என்று சொல்வார்.

இவர்களுடைய ஜியாகரபியே வேறு விதமானது. கீழே ஏழுலோகம்; மேலே ஏழுலோகம் என்று சொல்வார்கள். விண்வெளிக்குச் சென்றார்களே, அவர்களைக் கேட்டுப் பாருங்கள்; எத்தனை லோகத்திற்கு நீங்கள் சென்றிருக் கிறீர்கள் என்று. லோகக் குரு, ஜெகத்குரு என்பான், சிதம்பர செட்டியார்தான் கேட்டார், ஜப்பானுக்குச் சென்று லோகக் குரு என்று கேட்டால், அவன், வாட், வாட் என்று கேட்க மாட்டானா? என்று.

அதுபோல், நம்முடைய நாட்டில் பிறக்காதவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுகிறபொழுது, எங்களுக்காகப் பிறந்தவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவது என்ன தவறு? அதுவும் எங்களுக்காக அல்ல; இந்தக் கொள் கையைப் பிரச்சாரம் செய்வதற்காக. ஏன் பிறக்காத கடவுளுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம்? எதற்காக கிருஷ்ண ஜெயந்தி? ஏன் விநாயர் சதுர்த்தி? எதற்காக ராம நவமி? கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால், அது ஒரு பிரச்சாரம். கடவுளுக்கு அதைச் செய்யவில்லை என்றால், கடவுளையே மறந்துவிடுவார்கள். அதுவும் மாதாமாதம்; ஒவ்வொருவரையும் கும்பிடு என்று சொல்கிறார்கள்; எதற்காக பிரார்த்தனை என்று சொல்கிறார்கள்; அப்படி சொல்லிக் கொண்டே இருந்தால் தான், அந்த மூட நம்பிக்கை எப்பொழுதும் காயாமல் ஈரம் இருந்துகொண்டே இருக்கும். அதுதான் மிக முக்கியம். அது இருக்கின்ற வரையில்தான், அவர்களுக்கு லாபம்.

இங்கே கவிஞர் உரையாற்றும்பொழுது, சங்கராச்சாரி காலத்தில்,  மகாமகத் தேதியையே மாற்றிவிட்டார்கள் என்று சொன்னார்.

சமஸ்கிருத மொழியில் அவன் என்ன எழுதி வைத்திருக்கிறான்?
இதில் அவருக்கு ஒன்றும் அதிசயமில்லை. அவாளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்தவர்களுக்கு பெரியார் நமக்கு ஊட்டிய உணர்வை எண்ணிப் பார்க்கின்றபொழுது, இதிலொன்றும் அதிசய மில்லை. காரணம் என்னவென்றால், சமஸ்கிருதம், சமஸ் கிருதம் என்று இப்பொழுது சமஸ்கிருதம் வாரம் கொண் டாடுகிறார்களே, ஆசிரியர் நாளை, குருஉத்சவம் என்று மாற்றக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்களே, அந்தப் பண்பாட்டு அடிப்படையில் வந்த சமஸ்கிருத மொழியில் அவன் என்ன எழுதி வைத்திருக்கிறான்.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.
மந்த்ராதீனம் து தெய்வதம்
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத் திற்குக் கட்டுப்பட்டது; மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப் பட்டது என்றால், உலகம் = பார்ப்பானுக்குக் கட்டுப்பட்டது.

பார்ப்பனர் தயவு வைத்தால்தான் அது கடவுள். அதனால்தான் காஞ்சிபுரம் தேவநாதன் வெவ்வேறு வேலையை செய்தார், கடவுள் முன்பாகவே. அவர் ஒன்றும் பெரிய தண்டனையைப் பெற்றுவிடவில்லை. ஏனென்றால், அவாளைப் பொறுத்தவரையில் சட்டம் சாதாரணமானது. சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும்தான் சட்டமே, மிக முக்கியமாக.


பெரியார் விழாக்கள்  எல்லாம் பகுத்தறிவுப் பிரச்சார விழாக்கள்
ஆகவே, இந்த நாட்டில் மிகத்தெளிவாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டுமானால், கடவுள் என்கிற பெயராலே, மூட நம்பிக்கையைப் பரப்புவதற்கு, அவன் விழா கொண்டாடும்பொழுது, அது தவறு என்று அறிவுறுத்து வதற்குப் பெரியார் விழாக்கள் தேவை. இந்த விழாக்கள் எல்லாம் பகுத்தறிவுப் பிரச்சார விழாக்கள் ஆகும்.

பெரியாருடைய கருத்துக்களை ஒரு காலகட்டத்தில் எதிர்த்தார்கள். இன்றைக்கு அவர் மறைந்து 40 ஆண்டு காலத்திற்குப் பிறகு, உலகெலாம் அவருக்கு விழா எடுக் கிறார்கள் என்று நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்; அது உண்மை. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அழகாகச் சொன்னார், மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று. தொழும் என்றால், கும்பிடுவது அல்ல; பின்பற்றும் என்று அர்த்தம்.

இன்றைக்கு உலகம் பெரியாரைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. பெரியார் என்ற மாமருந்துதான் உலகத்தினுடைய பல்வேறு நோய்களுக்கெல்லாம் அதற்கு விடையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பார்க்கும்பொழுது, இன்றைக்கு எவ்வளவு பெரிய மாறுதல். பெரியார் காலத்திலேயே அவரை எதிர்த்தவர்கள், இன்றைக்கு அவரைத் தவிர வேறு விடை கிடையாது பல செய்திகளுக்கு - பெரியார் தான் சரியான மாமருந்து என்று நினைக்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
                  -------------- தொடரும் -"விடுதலை” 25-9-2014
Read more: http://www.viduthalai.in/e-paper/88192.html#ixzz3ELoqlwH9

பெரியாருக்குச் சிலை வைக்கக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. அரசு கூறுவது சரியா?

பெரியாருக்குச் சிலை வைக்கக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. அரசு கூறுவது சரியா?

சென்னை பெரம்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் வினா

சென்னை, செப். 26- பெரியாருக்குச் சிலை வைக்கக் கூடாது என்று அஇஅதிமுக அரசு கூறுவது சரியா? என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

17.9.2014 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்ன சொல்லுகிறது?

பெரியார் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அன்று வந்திருக்கின்ற ஒரு செய்தி. இதோ என் கையில் இருப்பது நம்முடைய நாளிதழ் அல்ல; இந்து பத்திரிகை. இந்துப் பத்திரிகைக்கு, விடுதலையின் முன்னாள் ஆசிரியர் குருசாமி அவர்கள் வைத்த பெயர் இருக்கிறதே, மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று.

இந்து பத்திரிகையின் வாழ்நாள் குறிக்கோள் என்ன? பார்ப்பனியத்தைப் பாதுகாப்பது; இன்னமும் அவர்களுக்கு அதுதான் இலக்கு. என்னதான் அவர்கள் உலகளவில் அரசியல் பேசினாலும், அடிப்படையில் சங்கராச்சாரியாருக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள்; காரணம், அந்த இனத்தி னுடைய தலைவராக, மதிப்பிற்குரியவராக அவரை கருது கிறார்கள். அப்படிப்பட்ட இந்து பத்திரிகையில், இதுவரையில் வந்த செய்திகள் எல்லாம் இருட்டடிக்கப்பட்ட காலம் மாற்றப்பட்டு, இன்று காலையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த செய்தி என்னவென்றால்,


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பெரியாரை மகாத்மாவோடு ஒப்பிடுகிறது என்று தலைப்புப் போட்டிருக்கிறார்கள்.


பெரியார் தொண்டர்கள் எப்பொழுதும் சட்டத்திற்குப் புறம்பாக செல்பவர்கள் அல்ல!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லியிருக்கிறார், எப்படி இந்தியாவிற்கு காந்தியாரோ, அதுபோல், தமிழ்நாட்டிற்குப் பெரியார். அவர் மகாத்மா என்றால், இவர் பெரியார் என்று சொல்லியிருக்கிறார்.

திருவெறும்பூரில் ஒரு வழக்கு; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில், அங்கே பெரியார் சிலை வைப்பதற்காக, குண்டும், குழியும், குப்பையுமாக இருந்த ஒரு பகுதியை, அந்த இடத்தை, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுத்து, இவ்வளவு கட்டணம் என்று சொல்லி, எல்லா விதமான மறுப்புகள், ஆட்சேபனைகளை எல்லாத் துறை களிலும் பெற்ற பிறகு, தாராளமாகக் கொடுக்கலாம் என்று அரசு ஆணை போட்டு எங்களுக்கு வழங்கலாம் என்ற பிறகுதான், பெரியாரின் அறக்கட்டளையான, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக, நாங்கள் அங்கே பெரியாருக்கு சிலை வைத்தோம்; இதேபோல் பெரியாருடைய பிறந்த நாள் விழாவில். அதனைச் சுற்றியுள்ள இடத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தையொட்டி, ஒரு படிப்பகமும் அமைக்கப்பட்டது; அந்தப் பகுதியிலுள்ள மக்கள் எல்லாம் அந்தப் படிப்பகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஏழை, எளிய மக்கள், ஏராளமான தொழிலாளர்கள் வசிக்கின்ற பகுதி அது. எனவே, அவர்கள் சொன்னார்கள், அய்யா, அவசரம் என்று சொல்லக்கூடிய நிலைக்குப் போனால், பெரிய மருத்துவமனைக்கு நாங்கள் திருச்சிக்கு செல்லவேண்டியுள்ளது. ஆனால், சிறிய நோய் களுக்கு மருத்துவம் பார்க்கக்கூடிய அளவிற்கு, இங்கே ஒரு மருத்துவமனையை நீங்கள் கட்டுங்கள் என்று சொன்னார்கள்; அந்த வேண்டுகோளை ஏற்று,  ஒரு சிறிய மருத்துவமனை யைத் தொடங்கி, அங்கே இரண்டு மருத்துவர்கள் காலை யிலும், மாலையிலும் வந்து, குறைந்த கட்டணத்தில் மருத் துவம் பார்த்து வந்தார்கள். ஆட்சி மாற்றம் என்று வந்தவுடன், எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்பது அவசியமா? உடனடியாக ஒரு வழக்கைப் போட்டு, அந்த இடத்தை விட்டு நீங்கள் வெளியேறவேண்டும் என்று. நான் உடனடியாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்கிற முறையில், ஒரு ரிட் மனு போட்டேன். அதில், நாங்கள் முறைப்படி அரசாங்கத்திடம் ஆணை வாங்கியிருக்கிறோம். அரசாங்க ஆணை சட்டப்படி செல்லும். சட்டப்படிதான் நாங்கள் செய்திருக்கிறோம். பெரியார் தொண்டர்கள் எப்பொழுதும் சட்டத்திற்குப் புறம்பாக செல்பவர்கள் அல்ல என்று வாதாடக்கூடிய அளவில் அந்த வழக்கு நடைபெற்று வந்தது.

பெரியாருக்கு சிலை வைக்கக்கூடாது என்று இந்த அரசாங்கம் சொல்லலாமா?

இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றக் கிளையான மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அதனை ஆழமாகக் கேட்டு, பெரியாருக்கு சிலை வைக்கக்கூடாது என்று இந்த அரசாங்கம் சொல்லலாமா? பெரியார் இல்லை என்றால், நாம் எல்லாம் எங்கே? என்று கேட்டார். காந்தியார் எப்படி இந்தியாவிற்கோ அதுபோல்தான் பெரியார் இங்கே என்று சொன்னார். பெரியார் திரைப்படத்தில், கடைசியாக பெரியார் மறைந்தவுடன், இறுதி மரியாதை - அரசு மரியாதை செலுத்தவேண்டும் என்று சொன்ன நேரத்தில், தலைமைச் செயலாளர் முதல்வராக இருக்கக்கூடிய கலைஞரிடம் சொல்கிறார், அய்யா நான் இதனை சட்டப்படி செய்ய முடியாது; அப்படி செய்தால் விபரீதங்கள் ஏற்படும் என்று சொன்னார்.

என்ன விபரீதம் ஏற்படும் என்று முதல்வர் கலைஞர் கேட்டார்.

அரசாங்க யுக்தியாக, வழிகாட்டல் குறிப்பில் என்ன இருக்கிறது என்றால், அரசு முறையில், பெரியவராக இருந்தால்தான், அவருக்கு நாம் அரசு மரியாதை கொடுக்க முடியும். பெரியார் அந்த மாதிரி எந்தவித அரசாங்கப் பணியிலும் இல்லையே! ஆகவேதான் அவருக்கு அரசு மரியாதை கொடுத்தால், விபரீத விளைவு ஏற்படும் என்று சொன்னார்.

காந்தியார் தேசப் பிதா என்றால், பெரியார் தமிழர்களுக்குத் தந்தை!

உடனே முதல்வர் கலைஞர் அவர்கள், அப்படியா, பெரியாருக்கு அரசு மரியாதை கொடுப்பதற்கு, முடியாது என்றால், காந்தியாருக்கு அரசு மரியாதை கொடுத்தார்களே, காந்தியார் எந்த அரசாங்கப் பதவியில் இருந்தார். காந்தியார் தேசப் பிதா என்றால், பெரியார் தமிழர்களுக்குத் தந்தை ஆவார். ஆகவே, அவருக்கு நான் அரசு மரியாதை கொடுக் கிறேன். அதனால் என்னுடைய ஆட்சி போனாலும் பரவா யில்லை என்று சொன்னார்.

ஆகவே, இது முதல் முறையல்ல; நிர்வாகத்தில் இருக் கக்கூடியவர்கள் ஆட்சி வேண்டாம் என்று சொல்லலாம்.

ஆனால், இப்பொழுது நீதித்துறையே சொல்கிறது. அதுதான் மிக முக்கியம்.  நீதித்துறையே, பெரியார் என்பவர் யார் என்று சொன்னால், அவர் காந்தியாருக்குச் சமமானவர் என்று சொல்கிறது.

அதேமாதிரிதான், மண்டல் ஆணைய அறிக்கை என்பது, தந்தை பெரியாருக்குப் பிறகு, நாம் போராடி, அரசியல் சட்டத் திருத்தங்கள் எல்லாம் வந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி அந்த மண்டல் ஆணைய அறிக்கை வந்த நேரத்தில், அதனை செயல்படுத்துவதற்கு முன்னணியில் இருந்தவர், என்றென்றைக்கும் நம்முடைய போற்றலுக்கு உரியவராக, நம்முடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய வரலாற்றுத் திருமகனான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களாவார்.

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தந்தை பெரியாருடைய தொண்டை பதிவு செய்த வி.பி.சிங்

வி.பி.சிங் அவர்கள், நாடாளுமன்றத்திலேயே சொன்னார், பாரத ரத்னா பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர் களும், தந்தை பெரியார் அவர்களும், லோகியா போன்றவர் களும் அரும்பாடுபட்டு சமூகநீதியை உருவாக்கினார்கள் என்று, நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தந்தை பெரியாருடைய தொண்டை அவர்கள் பதிவு செய்தார்கள்.


மண்டல் ஆணைய வழக்கு வந்த நேரத்தில், அதில் தனித்தீர்ப்பு எழுதிய நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் அவர்கள் அந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்ற குறிப்பை, தான் எழுதிய தீர்ப்பிலேயே எடுத்துப் போட்டார். இப்படி வி.பி.சிங் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சமூகநீதிக்கு அந்தத் தலைவர் பாடுபட்டது இருக்கிறதே, பெரியாருடைய பேருழைப்பு சாதாரணமானதல்ல என்று சொன்னார்.

நண்பர்களே, ஏன் இதனை சொல்லுகிறேன் என்று சொன்னால், பெரியாரைப் புகழுவது என்பது எங்களுக்கு அவசியமில்லை. ஒரு காலத்தில் எதிர்நீச்சல் அடித்த பெரியார் அவர்களுடைய தொண்டு இன்றைக்குப் பல துறைகளிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வடநாட்டில், மத்திய அரசில் எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு வரக்கூடியதாக இருக்கிறது.


ஆட்சி என்பது இருக்கிறதே, அதற்கு மூன்று துறைகள் உண்டு. 1. அரசாங்கத் துறை 2. சட்டமன்றத் துறை 3. நிர்வாகத் துறை

வரலாற்றில் யாராலும் மறைக்கப்பட முடியாத, ஒளி வீச்சுக்களாக இன்றைக்குத் திகழ்ந்துகொண்டிருக்கிறது


இந்த மூன்று பிரிவுகளையும் எடுத்துப் பாருங்கள்; நிர்வாகத் துறையில் பெரியாரும், காந்தியாரும் ஒன்று என்பதை ஒருமுறை அல்ல பலமுறை எடுத்துச் சொல்லி, பெரியாருடைய தொண்டு என்பது சாதாரணமானதல்ல என்று நாடாளுமன்றத்தில் பதிவாகியிருக்கிறது. அது நீதிமன்றத் திலும் மறுபடியும் எடுத்து பதிவாகியிருக்கிறது. இப்பொழுது, இந்த நீதித்துறையிலும் அது பதிவாகியிருக்கிறது. நாடாளு மன்றத்திற்கே போகாத பெரியார், வாக்குக் கேட்காத பெரியார், பதவி பக்கம் தலை வைத்துப் படுக்காத பெரியார், அப்படிப் பட்ட பெரியாருடைய மகத்தான தொண்டு என்பதிருக்கிறதே, அது இன்றைக்கு வரலாற்றில் யாராலும் மறைக்கப்பட முடியாத, ஒளி வீச்சுக்களாக இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.


நீதியரசர் நாகமுத்து அவர்களின் தீர்ப்பு!

அதற்காகத்தான் நண்பர்களே, இங்கே மிகத்தெளிவாக எழுதியிருக்கிறார்.


Disposing of a writ petition on the installation of his statue at Koothappar near Tiruverambur in Tiruchi district, Justice S. Nagamuthu said Periyar was a towering personality who could be called the Mahatma Gandhi of Tamil Nadu. “E.V. Ramasamy, affectionately called as Thanthai Periyar, lived a revolutionary life and fought for social justice. Establishment of a casteless society and empowerment of women were some of the goals sought to be achieved by the great leader,” the judge said.


திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகில் கூத் தப்பார் என்கிற இடத்தில் தந்தை பெரியார் சிலை அமைப்பது குறித்த வழக்கில் நீதிபதி எஸ்.நாகமுத்து கூறும்போது பெரியார் தமிழ்நாட்டின் மகாத்மா  காந்தி என்று அழைக்கப்பட வேண்டிய உயர்ந்த தலைவராவார்.


ஈ.வெ.இராமசாமி அன்போடு பெரியார் என்று அழைக்கப் படுபவர். சமூகநீதிக்காக தம் வாழ்நாளில் புரட்சிகரமாகப் போராடி வந்தவர். ஜாதியற்ற சமுதாயத்தை அமைப்பது, பெண்கள் அதிகாரம் பெறுவது ஆகிய அவரது கொள்கை கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
நீதிமன்றத்தினுடைய இந்தக் கருத்து இருக்கிறதே, இன்றைக்கு இப்பொழுது நீதிபதி சொல்லியிருக்கிறாரே,

பெரியாருக்கு இந்து நாளிதழின் புகழாரம்!

பெரியார் அவர்களுடைய 135 ஆம் ஆண்டு நிறைவு; 136 ஆம் ஆண்டு பிறப்பு. இந்தக் காலகட்டத்தில் அவருக்குப் பாராட்டு மழையாக, பூமாலையாக, பாராட்டுரையாக இது வழங்கப்பட்டிருக்கிறது நீதிமன்றத்தாலே என்று இந்து ஏடு சொல்கிறது.


எனவே, இன்றும் நாங்கள் பெரியாரைப் புகழ்பாட வேண்டும்; அதற்காக கூட்டம் போடவேண்டும் என்பதற்காக அல்ல. பெரியார் பரிணமிக்கவேண்டும், அதுதான் எங்களு டைய கடமை. பெரியாரைப் புகழாதவர்கள், பெரியாரைப் பயன்படுத்தாதவர்கள் இந்த நாட்டில் யாரும் இல்லை. எதிரிகள்கூட பெரியாரைப் பயன்படுத்துகிறார்கள். காலையில் கூட, ஒரு தொலைக்காட்சி செய்தியாளர்கள் கேட்டார், சில பேர் பெரியாரை இன்னும் மறைக்கவேண்டும் என்று நினைக் கிறார்களே, தமிழக அரசின் முதல்வர்கூட, பெரியாருக்கு மாலை போடவில்லையே என்று.


பெரியாரைப் பரப்பவேண்டுமே என்கிற காலம் தாண்டிவிட்டது!

யார் பாராட்டுகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல; யார் விழா எடுக்கிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல; யார் முன்னாலே வருகிறார்களே என்பது முக்கியமல்ல. எங்களுக்கு முக்கியம் எல்லாம், பெரியாரை பல நேரங்களில் திரிபுவாதங்களில் இருந்து பாதுகாக்கவேண்டும். பெரியாரைப் பரப்பவேண்டுமே என்கிற காலம் தாண்டிவிட்டது. பெரியா ரைப் பாதுகாக்கவேண்டும் என்கிற அவசியம் தெளிவாக இருக்கிறது.


ஏனென்றால், பெரியாருடைய கொள்கைகள் நீர்த்துப் போகாத அளவிற்குத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லவேண்டுமானால், அது இந்தக் கருப்புச் சட்டைக்காரப் பட்டாளங்களினால் மட்டும்தான் முடியும். காரணம், எந்தவிதமான சபலங்களுக்கும் ஆளாகாததனால் தான் பெரியாருடைய பணியை முடிக்கமுடியும். அந்தப் பணியை முடிக்க வேண்டும் என்று சொன்னால், நமக்கு முன்பு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகள், மானமும், அறிவும் என்று சொன்னாரே, அந்த இரண்டு சொற்களிலேயே மிகத்தெளிவான அடிப்படை அதற்குள்ளே இருக்கிறது.


நாங்கள் எதையும் ஆதாரப்பூர்வமாகச் சொல்லக் கூடியவர்கள்


நினைத்துப் பாருங்கள், 68 ஆண்டுகள் ஆகிவிட்டன இந்த நாட்டில் சுதந்திரம் வந்து. ஆடுவோமே, பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று பாடி 68 ஆண்டுகள் ஆன நாட்டில், பெரியார் கேட்டார், இன்னமும் இந்த நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பஞ்சமன் இருக் கலாமா? பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா? மேல்ஜாதிக்காரன் இருக்கலாமா? கீழ்ஜாதிக்காரன் இருக்கலாமா? மனிதன் எப்பொழுது பிறப்பான் இந்த நாட்டில் என்று தந்தை பெரியார் கேட்டார்.


குறைந்த பட்சம் நமக்கு மான உணர்ச்சி வேண்டாமா? இன்றைக்கும் நம்முடைய சட்டம் மிகப்பெரும்பாலான மக்களை, உழைக்கின்ற மக்களை, இந்த மண்ணுக்குரிய மக்களை கீழ்ஜாதியாக ஆக்கியிருக்கிறதே, சூத்திரனாக ஆக்கி இருக்கிறதே, சட்டத்தில் இது பதிவு செய்யப் பட்டிருக்கிறதே. இந்து லா என்று சொல்லக்கூடிய அந்த சட்டம், மனு நீதியின் மறுபதிப்பு அல்லாமல் வேறு என்ன? யாராவது மறுக்கட்டும்; யாராவது எங்களைத் திருத்தட்டும், நாங்கள் தவறாகச் சொல்லுகிறோம் என்றால், திருத்திக் கொள்கிறோம், ஆதாரத்தைக் காட்டுங்கள். நாங்கள் எதையும் ஆதாரப்பூர்வமாகச் சொல்லக் கூடியவர்கள். உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது ஜாதி இருக்கிறதா?
இந்து லா என்று சொல்லக்கூடிய அந்த சட்டம், இன்னமும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று ஜாதியை வகுத்திருக்கிறதா இல்லையா? ஜாதிக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறதா இல்லையா? இந்திய அரசியல் சட்டம், மிகப்பெரிய அளவில் இருக்கிறதே, அந்த அரசியல் சட்டத்தில், 18 இடங்களில் ஜாதி என்கிற சொல் இருக்கிறதா இல்லையா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது ஜாதி இருக்கிறதா? பிறக்கும் பொழுதே ஒருவன் கீழ்ஜாதிக்காரனாகப் பிறக்கிறானா? உலகத்தில் பேதம் இருக்கிறது. ஒப்புக்கொள்கிறோம். நிற பேதம் இருக்கிறது. கறுப்பன் - வெள்ளையன் என்று. இன்னமும் ஆப்பிரிக்கா கண்டத்தில், அமெரிக்காவில் எங்கோ ஒரு மூலையில் அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அது தெரியாதவர்கள் அல்ல நாங்கள். ஆனால், அதேநேரத்தில், தயவு செய்து இளைஞர்களே, பொதுமக்களே நீங்கள் எண்ணிப் பாருங்கள்; அவர்கள்கூட படிக்கக்கூடாது என்று கறுப்பர்களை ஒதுக்கி வைத்திருக் கிறார்களா? படித்தால் அவன் நாக்கை அறு; படிப்பை சொல்லிக் கொடுக்கக்கூடிய வேதத்தைக் கேட்டால், அவன் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று எழுதி வைத்திருக் கின்றானா? ஆனால், இந்த மனுதர்மத்தில், இந்த வைதீக தர்மத்தில், இந்த சனாதன தர்மத்தில், இப்பொழுது ஹிந்துத் துவா பேசுகிறாயே, உன்னுடைய ஹிந்து தர்மத்திலே இதை எழுதி இருக்கிறார்களா இல்லையா? இன்னமும் ராமாய ணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த ராமாயணத் தில், ராம ராஜ்ஜியத்தினுடைய பெருமை என்ன? காட்டுக்குப் போனான், திரும்பி வந்தான், எல்லாம் செய்தான். கதையில் கூட என்ன எழுதியிருக்கிறான், சூத்திரன் சம்பூகன் வதம் செய்தான்; அதனால் பார்ப்பனச் சிறுவன் செத்துப் போனான்; அவன் இவனைக் கொலை செய்யவில்லை. செத்துப் போனான், ஏன் செத்துப் போனான் என்று ராமரிடம் கொண்டு போய் கேட்கிறார்கள். உத்தரகாண்டத்தில் இருக்கிறதே! ராமா, உன்னுடைய ஆட்சியில் அதர்மம் நடக்கிறது. தர்மத்திற்கு விரோதமாக நடக்கிறது. உடனே ராமன், நான் தர்மத்திற்கு விரோதமாக எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறான்.


நேரிடையாகக் கடவுளைத் தொழுவதற்கு சூத்திரனுக்கு உரிமை இல்லையாம்!

ஊருக்கு வெளியில், சம்பூகன் என்ற ஒரு சூத்திரன், அவன் கண்ணை மூடிக்கொண்டு நேராகக் கடவுளைப் பார்க்கவேண்டும் என்று தவம் இருக்கிறான். தருமப்படி, சனாதன தர்மப்படி, ஆரிய தர்மப்படி, வேத தர்மப்படி, எந்த சூத்திரனும், நேரிடையாகக் கடவுளைத் தொழுவதற்கு உரிமை இல்லை. அவன் எப்படி போகவேண்டும் என்றால், புரோக்கர் மூலமாகப் போகவேண்டும்; நேராகப் போகக் கூடாது.


சூத்திரன் தவம் செய்ததினால், பார்ப்பனச் சிறுவன் செத்துப்போனான்.
அப்படியா? என்ன செய்யவேண்டும் என்று ராமன் கேட்கிறான்.
அவனுடைய தலையை வெட்டு, அவனுக்குத் தண்டனை கொடு என்றார்கள்.
விசாரணையே செய்யவில்லை; நேராகச் சென்றான்,  கண்ட துண்டமாக வெட்டி விட்டான்.


அப்பொழுது பயன்படுத்தியது வாள்தான், இந்த வாளை அதற்காகத்தான் ஞாபகப்படுத்தியிருக்கிறார்கள். நான் ஒன்றும் சண்டைக்குப் போகவேண்டும் என்பதற்காக அல்ல. இந்த வாள் இருக்கிறதே, அவாள், இந்த வாள் சாதாரண வாள் இல்லை. அப்பொழுது பயன்படுத்தப்பட்ட வாள் இது.


அந்தக் கதையில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள், செத்துப் போன பார்ப்பனச் சிறுவனுக்கு உடனே உயிர் வந்துவிட்டதாம்; இன்னமும் இதனை நம்புகிறார்களே, நாங்கள் கேட்டோம் என்பதற்காகவே அந்தப் பகுதியை விட்டுவிட்டு அச்சடிக்கிறார்கள். நாங்கள் கேட்கக் கேட்க, ஒவ்வொரு பகுதியாக விட்டுவிட்டு அச்சடிக்கிறார்கள். இன்னுங் கொஞ்ச நாளில், நாங்கள் பேசினால், ராமாயணமே புதியதாக வந்துவிடும்.


நாங்கள் கீதையைப் படித்ததுபோல், வேறு யாரும் படித்தது கிடையாதே!


ஆகவே, சமுதாயத்தில் இந்த ஜாதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்! ஒரு பக்கம் சனாதனம்; இன்னொரு பக்கம் ராமாயணம்; எல்லா இடத்திலும் அதையே பிரச்சாரம் செய்கிறான். கீதை, கீதை என்று சொல்கிறார்கள்; மோடிக்குப் பாவம் ஜப்பான்காரனுக்குக் கொடுப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை, கீதையைக் கொடுக்கிறார். மோடிக்கு ஜப்பான்காரன் கண்டுபிடித்ததைக் கொடுக்கிறான். மோடி கீதையைத் தவிர வேறு எதைக் கண்டுபிடித்திருக்கிறார். அதுகூட சமஸ்கிருத மொழியில் அல்லவா இருக்கிறது. அப்படிப் பார்த்தால் மோடியே இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாதே! காரணம், எங்களுடைய கருத்துக்கு ஹிந்துத் வாவை ஏற்றவர் பிரதமர் என்று சொன்னாலும், மதிப்பிற்குரிய மோடி கீழ்ஜாதிக்காரர், சாஸ்திரப்படி, சட்டப்படி, சனாதனப்படி, அவர் கீழ்ஜாதிக்காரர். சூத்திரன் எந்த நாட்டில் ராஜாவாக இருக்கிறானோ, அந்த நாடு சேற்றிலே அகப்பட்ட வண்டி யைப்போல் சிக்கித் தவிக்கும். இப்பொழுது சிக்கித் தவிக் கிறது. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், கீதையைக் கொடுக்கிறாரே, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்து கொள்வதுபோல. அந்தக் கீதையில் என்ன இருக்கிறது? யாராவது சொல்லட்டுமே, நாங்கள் கீதையைப் படித்ததுபோல், வேறு யாரும் படித்தது கிடையாதே. கீதையின் மறுபக்கத்தை எழுதியிருக்கிறேன் அல்லவா!


ராமகோபாலன் அய்யர் அவர்கள் கீதையைக் கொண்டு போய் கலைஞரிடம் கொடுக்க வருகிறார். கலைஞரை சங்கடப்படுத்தவேண்டும் என்று நினைத்து. நம்முடைய தி.மு.க. தோழர்கள் எல்லாம் சங்கடப்பட்டு முன்னாடி வருகிறார்கள்; உடனே கலைஞர் அவர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன், உங்கள் வேலையைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று உதவியாளரிடம் சொல்கிறார். அந்த புத்தகத்தை கையில் வைத்துக் கொள்கிறார்.


வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் நூலைப் படித்துப் பாருங்கள்!

ராமகோபால அய்யர், உங்களிடம் பகவத் கீதையைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என்றார்.


உடனே கலைஞர் அவர்கள், ரொம்ப சந்தோசம், கொடுத்ததற்கு நன்றி! வீரமணி எழுதியிருக்கிறாரே, கீதையின் மறு பக்கம்; அந்த நூலை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; அந்த நூலை நீங்கள் படித்துப் பாருங்கள் என்று அந்த நூலை கொடுக்கிறார்.


பார்ப்பானுக்கு எப்பொழுதுமே பின்புத்திதான்


இப்படி யாராவது வம்பைப் போய் விலை கொடுத்து வாங்குவார்களா? பார்ப்பானுக்கு எப்பொழுதுமே பின்புத்தி தான்; முன்புத்தியே கிடையாது.
அந்தக் கீதையில் என்ன இருக்கிறது!

சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம்
குணகர்ம விபாசக
தஸ்ய கர்த்தாரமபிமாம்
வித்திய கர்த்தார மவ்யம்

நான்கு ஜாதியை நானே உண்டாக்கினேன் என்று கடவுள் சொல்கிறார்.
காலங்காலமாக இவ்வளவு பாடுபட்டு, ராமலிங்கனார் பேசி, பாரதியார் எழுதி, சித்தர்கள் பாடி, இவ்வளவு செய்தும் ஏன் இன்னமும் ஜாதி ஒழியவில்லை. ஏன் இன்னமும் ஜாதியினு டைய வேர் ஆடாமல் இருந்தது - பெரியாருடைய காலத் திற்கு முன்புவரையில். பெரியார் வந்துதானே, அஸ்திவாரத் தையே ஆட்டி வைத்திருக்கிறார். இதனை நெருங்கக்கூடிய கட்டத்தில் இருக்கிறதா, இல்லையா? இன்னுங் கொஞ்ச காலத்தில் முகலிவாக்கம் கட்டடம் இடிந்துவிழுந்த மாதிரி இடிந்து விழுந்துவிடும். அதிலொன்றும் சந்தேகமே இல்லை.

எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக எழுதியிருக்கிறார்கள் பாருங்கள், கடவுள் சொல்லியிருக்கிறாராம், கீதையில் எழுதியிருக்கிறது. நானே மாற்றவேண்டும் என்றாலும்கூட, அந்த வர்ணத்தை மாற்ற முடியாது என்று.
ஜாதியை எவ்வளவு முட்டுக் கொடுத்து வைத்திருக் கிறார்கள் பாருங்கள்.

-------------------- தொடரும் -----------”விடுத்லை” 26-9-2014
Read more: http://viduthalai.in/page-4/88284.html#ixzz3EQCs0rE1

புத்திமான் கண்டது மின்சாரம் பக்திமான் கண்டது பிரசாதம் 


புத்திமான் கண்டது மின்சாரம்  பக்திமான் கண்டது பிரசாதம்
சென்னை பெரம்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியரின் பகுத்தறிவு உரை வீச்சு

சென்னை, செப். 27- புத்திமான் கண்டது மின்சாரம், பக்திமான் கண்டது பிரசாதம் என்று பகுத்தறிவு உரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


17.9.2014 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


நண்பர்களே, குறைந்தபட்சம் நமக்கு மான வாழ்வு தேவையில்லையா!
சுதந்திர நாட்டில், இன்றைக்கு சுரண்டல், ஜாதி சுரண் டல், சமூகச் சுரண்டல், ஏமாற்றுதல் இவை அத்தனையும் இருக்கிறது என்றால், இவையனைத்தையும் எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே இயக்கம் தந்தை பெரியார் அவர் களுடைய திராவிடர் கழகம்.


நீங்கள் எந்த அரசியல் கட்சியை வேண்டுமானாலும் ஆதரியுங்கள்; வாக்களித்து ஏமாந்து போங்கள்; என்னதான் சாதனை செய்தாலும் கடைசியில் 200 ரூபாய்தானே முக்கியம். ஆனால், நண்பர்களே, குறைந்தபட்சம் நமக்கு மான வாழ்வு தேவையில்லையா!


பெரியார் கவலைப்பட்டார்; பெரியார் அவர்கள் ஒரு தந்தை நிலையில் இருந்து கவலைப்பட்டார். அறிவு நமக்குத் தேவையில்லையா? என்று கேட்டார். வளர்ச்சி என்றால், எல்லாவற்றிலேயும் வளர்ச்சி அடையவேண்டும். இப்பொழுது செல்போன் இல்லாத ஆட்களே இல்லாத ஒரு நிலை; கீரைக்கார முனியம்மாவிலிருந்து வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்கள்வரை செல்போனிலேயே அப்பாயின்ட்மெண்ட். 6 மணிக்கு இங்கே வேலையை முடித்து, 7 மணிக்கு அங்கே வருகிறேன் என்று.


செல்போன் இவன் கண்டுபிடித்ததா? அமெரிக்காக் காரன் கண்டுபிடித்தான்; ஆப்பிள் என்று பெயர் வைத்தான். இவனுக்கு ஆப்பிளை யாராவது விற்றால் சாப்பிடுவானே தவிர, அமெரிக்காக்காரன் கடித்த ஆப்பிளை சின்னமாக வைத்திருக்கிறான்.

புத்திமான் கண்டது  மின்சாரம்; பக்திமான் கண்டது பிரசாதம்!


அதை நம்மாள் வாங்கிக்கொண்டு வந்து, அய்ந்து, ஆறு விஷயத்தை இல்லாமல் செய்துவிட்டான். பகுத்தறிவு வளர்ந்தால், அறிவும், மானமும் என்று பெரியார் சொன்னார் பாருங்கள், அந்த அறிவு வளர்ந்தால் எப்படி போகும் என்பதற்கு உதாரணம், நீங்கள் எல்லோர் கைகளிலும் செல்போன் வைத்திருப்பீர்கள், கடிகாரம் தேவையில்லை, காலண்டர் தேவையில்லை, காமிரா தேவையில்லை, அகராதி தேவையில்லை என்று வரிசையாக சொல்லிக் கொண்டு போகலாம்.


நம் நாட்டில் கடவுள் பத்து அவதாரம் எடுத்தான்; அவன் பத்து விஷயங்களைச் சேர்த்து ஒரே கருவியில் அடக்கி விட்டான். அது அறிவினுடைய சிறப்பு. அதனால்தான் எங்கள் ஆள் அந்த காலத்திலேயே சுவரில் எழுதினான், புத்திமான் கண்டது  மின்சாரம்; பக்திமான் கண்டது பிரசாதம் இப்படி சுவரில் எழுதி, இப்படி அறிவை சொல்லிக் கொடுத்த இயக்கம், இந்த இயக்கத்தைத் தவிர நாட்டில் வேறு எந்த இயக்கம் இருக்கிறது. எவ்வளவு முட்டாளாக இருக்கிறானோ, அந்த அளவிற்கு நமக்கு லாபம்; நாம் வாக்குகளை வாங்கிச் செல்லலாம்; இதுதானே மற்ற அரசியல் கட்சிகளின் எண்ணம்.


உங்களை அறிவாளிகளாக்குவதற்கு இந்த இயக்கத்தை விட்டால், இந்தத் தலைவரை விட்டால் வேறு நாதி ஏது நண்பர்களே! நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

எங்களுக்காக அல்ல; மருந்து வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சீட்டு தருகிறார் மருத்துவர் என்றால், அதுபோல், நாங் களும் சொல்கிறோம். ஏனய்யா மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால்,
மருந்து கடைக்காரர் வருத்தப்படுவார், அதனால் வாங்குகிறேன் என்று சொல்வீர்களா? இல்லீங்க, மருத்துவர் எழுதிக் கொடுத்துவிட்டார், அதனால் வாங்குகிறேன் என்று சொல்வீர்களா?


சமுதாய நோய்கள் தீரவேண்டும் என்றால், பெரியார் என்ற மாமருந்து தேவை!


எதற்காக மருந்து வாங்குகிறோம், நம்முடைய நோய் போகவேண்டுமென்றால், அதற்காக அந்த மருந்தை வாங்கியாகவேண்டும்.
அதுபோல், இந்த சமுதாயத்தில் இருக்கின்ற அறியாமை நோய், ஜாதி நோய், தீண்டாமை நோய், பெண்ணடிமை நோய் தீரவேண்டும் என்றால், பெரியார் என்ற மாமருந்து தேவை. அது கசப்பு மருந்தாகவே இருக்கலாம். ஆனால், அதுதான் உங்கள் நீண்ட கால நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்தாக இருக்கும்.
எனவேதான், இந்த ஜாதியை இன்றைக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறானே, ஜாதிக்கு என்ன அடிப்படை என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள். அதற்கு ஏதாவது அறிவியல் அடிப்படை உண்டா? செல்போனில் கோளாறு என்றால், டெக்னாலஜி, தொழில்நுட்பம் சொல்ல முடியும். ஜாதி எப்படி உண்டாயிற்று என்றால், கடவுள் உண்டாக்கினார் என்று சொல்கிறார்கள்.
அந்தப் பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக முகம், தோள், தொடை, கால் இவற்றின்மூலம் பிராமண, சத்திரியன், வைசியன் சூத்திரன் பிறந்தான் என்று சொன்னால், இவன் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டிருக்கிறான்.


ஏண்டா, இந்த இடங்களில் எல்லாம் பிள்ளை பிறக் குமா? என்று கேட்கின்ற சாதாரண அறிவையே பாழ்படுத்தி விட்டார்களே! காரணம் என்ன? பக்தி வந்தால் புத்தி போகும்


புத்தி வந்தால் பக்தி போகும்! அதுதானே அதனுடைய அடிப்படை. அறிவியல் சிந்தனை வேண்டாமா இந்தக் காலத்தில்.


செவ்வாய் தோஷம் என்று இன்னமும் நம்பிக் கொண் டிருக்கிற இந்தக் காலத்தில், செவ்வாய்க் கோளுக்கே விண்கலத்தை அனுப்பிவிட்டாயிற்று. வருகின்ற  வாரத்தில் செவ்வாய்க் கோளில் இறங்கிவிடும்.  40, 45 வயதாகின்ற பெண்களுக்குத் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. காரணம், செவ்வாய்த் தோஷம் என்று சொல்கிறான். இவ்வளவு பெரிய முட்டாள்தனம் வேறு எங்காவது இருக்குமா? துணிச்சல் வந்தது என்றால், எவ்வளவு பேருக்கு வாழ்வு கிடைத்திருக்கும். ஆகவே அதனை எண்ணிப் பார்க்கவேண்டாமா? அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டாமா?


ஜாதித் தீண்டாமைக்கு அறிவியல் அடிப்படை என்ன என்பதை தயவு செய்து சொல்லுங்கள் பார்க்கலாம்.


ஜாதி, தீண்டாமைக்கு அறிவியல் அடிப்படை இல்லை என்பதை, எங்களால் நிரூபித்துச் சொல்ல முடியும்.

நிரூபணத்திற்காக வேறு எங்கேயும் செல்லவேண்டிய அவசியமில்லை. சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அது என்னவென்றால், இப்பொழுது உடல் உறுப்புக் கொடை, குருதிக்கொடை எங்கே பார்த்தாலும் நடை பெறுகிறது.


ஜாதிக்கு அறிவியல் அடிப்படை இல்லை!

பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவருடைய இதயத்தை எடுத்து சென்னையிலுள்ள ஒரு மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து ஒருவருக்குப் பொருத்து கிறார்கள். சென்னை விமான நிலையத்திலிருந்து 10 நிமிடத் தில் அந்த மருத்துவமனைக்கு வருகிறது, காவல்துறையின ரின் உதவியுடன்.
இந்தச் செய்தி எல்லா நாளிதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும் வந்தது, நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.


இந்தச் செய்தியில் உள்ளே சென்று பாருங்கள், அந்த இதயத்தைப் பொருத்தினார்களே, அது என்ன செட்டியார் இதயம் செட்டியாருக்கா? வன்னியர் இதயம் வன்னி யருக்கா? அல்லது பிள்ளை இதயம் பிள்ளைக்கா? அல்லது நாடார் இதயம் நாடாருக்கா? அல்லது முதலியார் இதயம் முதலியாருக்கா?


ஜாதிக்கு அறிவியல் அடிப்படை இல்லை. அது கற்பனையாக நம் மூளையின்மீது ஏற்றப்பட்ட, போடப்பட்ட விலங்கு. அதை உடைப்பதற்கு ஈரோட்டு சம்மட்டியால் மட்டும்தான் முடியும்.

விபத்துகள் நடைபெறாத நாள்களே கிடையாது இப் பொழுது. நிற்கின்ற வண்டிகூட விபத்துக்கு ஆட்படுகிறது.


உங்களுக்குப் புரிவதற்காக சொல்கிறேன், தவறாக ஒன்றுமில்லை.

அய்யங்கார் ஒருவர் விபத்தில் அடிபட்டு, எலும்பு முறிந்துவிடுகிறது; அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர் சொல்கிறார். ஆகவே, அந்த அறுவைச் சிகிச்சையை செய்யவேண்டும். ஆகவே, உங்களுடைய குருதி என்ன பிரிவு என்று கேட்கிறார்.

அய்யங்கார் பிரிவு என்றா அவர் சொல்வார்?

உலகத்திலேயே குருதியை எப்படி பிரித்திருக்கிறார்கள், ஏ1 பாசிட்டிவ், பி பாசிட்டிவ் , ஓ பாசிட்டிவ், இப்படித்தானே பிரித்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவடைய சட்டைப் பையிலும் நான் இந்த ரத்தப் பிரிவை சார்ந்தவன் என்கிற குறிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, நம்மாள் ஜாதிப்  பட்டத்தைப் போடுகிறான்; என்னங்க நீங்க செட்டியாரா?    எந்த செட்டியாருங்க. இல்லீங்க நாங்க வேற செட்டியார். முதலியாரா? எந்த முதலியாருங்க! என்று.


அண்ணா கூட்டங்களில் உரையாற்றும்பொழுது வேடிக்கையாக சொல்வார், ரயில் ஏறி உட்கார்ந்ததும், ஏங்க, நீங்க எந்த முதலியாருங்க என்று கேட்பார்களாம்; ஆற்காடு முதலியாருங்களா; ஆற்காடு என்றால், அக்கரை முதலியாரா? இக்கரை முதலியாரா? அதில் சைவ முதலியாரா? அசைவ முதலியாரா? என்று இப்படி கேட்டுக்கொண்டே இருப் பார்கள் என்று வேடிக்கையாக சொல்வார்.

ஜாதிப் பட்டம் முக்கியமல்ல;  குருதிப் பிரிவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

ஜாதியில் என்ன ரத்தம் என்று கேட்டால், என்ன சொல்வார்கள் இவர்கள்.

என்னுடைய குருதிப் பிரிவு ஏ1 பாசிட்டிவ். இனிமேல் இங்கே வந்திருப்பவர்கள் உங்களுடைய குருதிப் பிரிவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்; ஜாதிப் பட்டம் முக் கியமல்ல; விபத்து ஒன்று ஏற்பட்டால், நமக்கென்றாலும் சரி, மற்றவர்களுக்கென்றாலும் சரி குருதிப் பிரிவு தெரிந்தால் உடனடியாக உதவி செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.


ஒரு அய்யங்கார் அடிபட்டுவிட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும்; ரத்தம் தேவைப்படுகிறது.  அய்யங்காரிடம் டாக்டர் சொல்கிறார், உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ்.  உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றால் இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்படும் என்று. அதற்காக விளம்பரம் கொடுத்துள்ளோம் என்று சொல்கிறார்.
டாக்டரிடம் அய்யங்கார் சொல்கிறார், நான் தான் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்லிவிட்டேனே, இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.


உடனே டாக்டர் அய்யங்காரிடம் சொல்கிறார், நாம் விளம்பரம் கொடுத்ததைப் பார்த்து ஒரு இளைஞர் உங்களுக்கு ரத்தம் கொடுக்க முன் வந்திருக்கிறார். அந்த ரத்தத்தை உங்களுக்குச் செலுத்தினால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சொல்கிறார்.

அய்யங்காரோ, அப்புறம் என்ன டாக்டர் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதுதானே என்று.

டாக்டர் அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத் தொட்டாலே நீங்கள் குளிக்கவேண்டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்களுடைய உடம்பில் ஏற்றவேண்டும் என்றால், உங்களுடைய அனுமதி வேண்டும் அல்லவா? நாளைக்கு நீங்க விஷயம் தெரிந்ததும், என்னைக் கண்டிக்க மாட்டீர்களா? என்று சொல்கிறார்.


இப்படி டாக்டர் சொன்னால், அந்த பேஷண்ட்டான அய்யங்கார் என்ன சொல்வார், அய்யய்யோ அவருடைய ரத்தம் வேண்டவே வேண்டாம்; நான் செத்தாலும் பரவாயில்லை என்று சொல்வாரா?

ஜாதி இருக்கவேண்டும் என்று சொன்னால், இது செயற்கையானது அல்லவா?

என்ன டாக்டர் நீங்க, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று. என்ன நீங்க இன்னும் தயக்கம் காட்டுகிறீர்கள். உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்தத் தாழ்த்தப்பட்டவருடைய ரத்தத்தை எனக்குச் செலுத்துங்கள் என்பார்.


அப்படியென்றால், இவரைக் காப்பாற்றுவதற்கு, தாழ்த்தப்பட்டவருடைய ரத்தம் தேவை; இந்த சமுதாயம் வளர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்களுடைய உழைப்பு தேவை. ஆனால், ஜாதி இருக்கவேண்டும் என்று சொன்னால், இது செயற்கையானது அல்லவா? இது உள்ளே புகுத்தப்பட்டது அல்லவா? இயற்கையானது அல்ல என்பதுதானே உண்மை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


குருதிக் கொடை, விழிக் கொடை, உடல் உறுப்புக் கொடை கொடுக்கிறார்கள் அந்தந்த ஜாதிக்காரர்களுக்கா கொடுக்கிறார்கள்; யார் யாருக்குப் பொருந்துகிறதோ அவரவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அப்புறம் ஏன் ஜாதி, ஜாதி என்று மாரடிக்கிறார்கள். அரசியலில் பிழைப்பில்லாத வர்கள் ஜாதி பெயரைச் சொல்லிக் கொண்டு, வாக்குகளை வாங்கலாமா என்று பார்க்கிறார்கள். நாம் சிந்திக்க வேண்டாமா? யோசிக்கவேண்டாமா?
ஜாதி என்ற உணர்வுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை என்று ஆக்குகின்ற ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், நேற்றுகூட கலைஞர் அவர்கள் தெளிவாகச் சொன்னார் கள், ஜாதிக்கு இடமே கிடையாது என்று. கறுப்புச் சட்டை போட்டவர்களானாலும் சரி, தி.மு.க. என்றாலும் சரி, திராவிட இயக்கம் என்றால், ஜாதியைப் பற்றி நினைப்பதற்கு இடமே கிடையாது.


எதுவெல்லாம் தமிழ்ச் சொல் இல்லையோ, அவையெல்லாம் நம் சரக்கு அல்ல!

ஜாதி என்கிற சொல்லே நம்முடைய சொல் அல்ல; காபி என்று சொன்னால், அது வெளிநாட்டில் இருந்து வந்தது. அதுபோல், ஜாதி என்பது தமிழ்ச் சொல் அல்ல. எது எதுவெல்லாம் தமிழ்ச் சொல் இல்லையோ, அவை யெல்லாம் நம் சரக்கு அல்ல; வேறு சரக்கு உள்ளே வந்துவிட்டது என்று அர்த்தம். ஆகவே, அந்த ஜாதியைக் காரணம் காட்டி எட்டி நில்! தொடாதே! நீ அந்நியன் என்று சொல்கிறான். எப்படி அதனை ஏற்றுக்கொள்வது. தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?


ஜாதி என்கிற அமைப்புக்கு இடமில்லை; தீண்டாமை என்பதற்கு இடமில்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சட்டத்தில் எழுதினால் மட்டும் போதாது; இன்னமும் இரட்டைக் குவளை முறைகள் இருந்து கொண்டிருக்கின்றன; இன்னமும் ஜாதிக்குள்ளேயே திருமணங்கள் நடக்கின்றன. காதல் திருமணங்கள் நடைபெற்றால் இன்னமும் ஜாதியினால் வாழ முடியாதவர்கள் என்று சொல்லக்கூடிய கொடுமைகள் இருக்கின்றன. இதற்கு ஒரு வார்த்தையைக் கண்டுபிடித் திருக்கிறார்கள், கவுரவக் கொலை என்று. இதைவிட மானக்கேடு வேறு ஏதாவது உண்டா?


வருந்தொகை எவ்வளவு என்றுதானே கணக்குப் போடுகிறார்கள்!


இதனை எதிர்த்துத் துணிந்து போராடக் கூடிய ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அருமைத் தோழர்களே,  பெரியாருடைய இந்த இயக்கம்தான், இதற்காக இளைஞர் களை தயாரித்தது. இலக்கிய மேடைகளில் ஏறிக்கொண்டு,

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே


என்று குறுந்தொகையைச் சொல்கிறார்கள். இப்பொழுது வருந்தொகை எவ்வளவு என்றுதானே கணக்குப் போடுகிறார்கள் ஒவ்வொருவரும்.
எனவே நண்பர்களே, இந்த ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பதுதான், பெரியார் அவர்களுடைய 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலே நாம் போடுகின்ற மிகப்பெரிய திட்டம்.


அர்ச்சகர் வேலை என்ன அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.சைவிட பெரியதா?


ஜாதிப் பாம்பை, 1924 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அடித்தார்; அந்தப் பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து எல்லா இடத்தையும்விட்டு ஓடிற்று. கடைசியில் ஒரே ஒரு இடம் கோவில் கருவறைக்குள். அதுவும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்; ஆதிதிராவிடர் அய்.ஏ.எஸ். ஆகலாம்; ஆகியிருக்கிறார்; நன்றாகத்தானே பணியாற்றுகிறார்; ஆதிதிராவிடர் அய்.பி.எஸ். ஆகியிருக் கிறார், போலீஸ் அதிகாரி, சிறப்பாகத்தானே பணியாற்று கிறார். ஆனால், அதே ஆதிதிராவிடர் அர்ச்சகர்களாக முடிய வில்லையே! அர்ச்சகர் வேலை என்ன அய்.ஏ.எஸ்.சைவிட மிகப் பெரியதா? இல்லை அய்.பி.எஸ்.சைவிட மிகப் பெரியதா?


சின்ன மணியை ஆட்டுவதற்கு என்ன பெரிய பயிற்சி? அதுவும் பெரிய மணியை நம்ம கையில் கொடுத்திருக் கிறார்கள்; நம்ம செட்டியார் வெளியில் இருந்து வியர்த்து விறுவிறுக்க டங்டங்கென்று அடிக்கிறார். சின்ன மணியை ஆட்டிக்கொண்டு அவன் போய்விட்டானே!


பெரியார் இதைத்தானே கேட்டார், ஏண்டா, அவங்கிட்டப் போய் நீ தலையை வணங்குகிறாய்; முழுத் தேங்காயை வெளியில் இருந்து உடைத்து, இரண்டு மூடியையும் எடுத்துக்கொண்டு போய் சட்னி செய்து சாப்பிடு. பெரிய மூடியை அவன் எடுத்துக்கொண்டு, சின்ன மூடியை உன்னிடம் கொடுப்பதுதான் பக்திக்கு அடையாளமா? என்று கேட்டார்.


இந்த நாட்டில் மனிதநேயம்  மீண்டும் மலரவேண்டும்


எனவே, நண்பர்களே! ஜாதியை ஒழித்தாகவேண்டும்; சமத்துவம்

மலரவேண்டும்; மதவெறி மாய்க்கப்பட வேண்டும்; மனிதநேயம் இந்த நாட்டில் மீண்டும் மலர வேண்டும். இதற்காக திராவிடர் கழகத்தில் சேர்ந்து இளைஞர்களே, இந்த இயக்கத்தைப் பலப்படுத்துங்கள்! அது திராவிடர் கழகத்துக்காக அல்ல; உங்களுக்காக, உங்களு டைய விலங்குகளை உடைப்பதற்காக, உங்களை முன் னேற்றுவதற்காக என்று கூறி, சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களைப் பாராட்டி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

                             ---------------------- “விடுதலை” 27-9-2014
Read more: http://viduthalai.in/page-4/88307.html#ixzz3EWPe9yj8


0 comments: