Search This Blog

7.9.14

நாஸ்திகர்களே சமதர்மவாதிகள்!



கடவுளுக்காக இலட்சம், பத்து இலட்சம் பணம் போட்டுக் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, அய்ந்து வேளை, ஆறு வேளை பூஜை செய்து, மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய்- யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்னியாசியாய், குருவாய், சங்கராச்சாரியாராய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க, கடவுள் நம்பிக்கையுள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம்- யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. - இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் வார்த்தைக் குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப் படுகிறது என்றாலும், சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒரு விதமான அர்த்தத்தில்  பிரயோகிக்கப்படுகிறது.
அநேகமாக அவ்வார்த்தை அந்தந்தத் தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத் துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறின வாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப் படுகிறது.

ஆகவே, சோஷியலிசத்துக்கு, இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க, அவ்வார்த் தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.


சில இடங்களில் சோஷியலிசத்துக்கும், பொது உடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் ஒரு சாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடங்களில் பொதுவுடைமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றன.
இங்குச் சமதர்மம் என்கின்ற வார்த் தைக்குச் சமூகத் துறையிலும், பொருளா தாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (பேதமின்றி) வாழ வேண்டும் என்பதையே, சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என் கின்ற வார்த்தையை இங்குப் பிரயோகிக் கின்றேன்.
ஏனெனில் மற்ற நாடுகளில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ள போன்ற உயர்வு, தாழ்வு, பேதா பேதம் இல்லை.


பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது.
நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியி லேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக் கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்கள் சிறிதுகூட ஒப்ப மாட்டார்கள்.

ஒப்பமாட்டார்கள் என்ப தோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு- தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம் மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிற படியாலும், அதுவே அரசியலுக்கு ஆதார மாய் இருப்பதாலும், அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், மேல் நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே யாகும்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டுச் சமதர்மத் துக்கு முதற்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு, மருந்து என்று கருதி இருக்கும் நான், சமுதாயத்தில்- வாழ்க்கையில் சமதர்மத்தை - அபேதவாதத்தை முக்கிய மாய் வலியுறுத்தி வருகிறேன்.
நிற்க, பொதுவாகவே சமதருமம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கிய மானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன.

சர்வதேச சமதரும வாதிகளும், பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையும், சமதர்மத்திற்கு விரோத மானவை என்று தான் சொல்லி இருக் கிறார்கள். ஆதலால் எந்தச் சமதர்ம வாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய  பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப் பிராய பேதமில்லாமல் நடந்து தான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேதமுறை தான் பெரிதும் காரணமாய் - காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு, ஜாதி- பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி வரு கின்றதுடன், பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நம் ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத் தான் உண்டுபண்ணி விடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம், அவர்களில் பிறவியில் கீழ்- மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும்.

நம் மக்களுக்கு வெறும் பொரு ளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது, ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம், சொன்னால் தான், உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம்- ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு, அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.

மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப் பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப்பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட் டனவாக - கடவுளால் கற்பிக்கப்பட்டன வாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றனவாகவும் கருதப்படு கின்றன. உதாரணமாகப் பகவத்கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கருதப்படுகிறது.
மகம்மதியர்கள் குரானை மதிப் பதைவிட, கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக, பக்தியாய் அநேக இந்துக்கள் மதித்திருக்கிறார்கள். ஆனால், அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதி களும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர் களும், அததற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.
ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசு கிறவர்களில் கூட 100-க்குத் 99வு பேர்கள், கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டு தாம் இருக்கிறார்கள்.
ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு ஆகியவற்றைப் பற்றிக் கண்ணீர் விட்ட காந்தியார் கூட, கீதைக்குத் தம்மை ஆட் படுத்திக் கொண்டிருப்பதாய்ச் சொல்லியி ருக்கிறார்.

இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல்- கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்! கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும், அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் -, சொல்லத் தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படிச் சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப்பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே  இந்தப்படிச் சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும்  மக்களால் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.
ஆதலால் நாஸ்திகனாகவோ, நாஸ்தி கனாவதற்குத் தயாராகவோ, நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காத வனாகவோ இருந்தால் ஒழிய, ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இதுமாத்திரம் அல்லாமல், சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும், வாழ்வு மூலமாகவும் இன்று இருந்துவரும் பிரிவுக்கும், பேதத் துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளி என்றும், கடவுள் சித்தத் தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படு மானால் - அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகனாகத் தான் வேண்டும்.

ஏனெனில், செல்வவான்களிடம் இருக் கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும் கடவுள் கொடுத்தவை என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டவை என்றும் சொல்லப் படுமானால், அந்தக் கடவுளை யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார் தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக்கடவுளும், எந்த மாதிரியான அயோக் கியக் கடவுளும், மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதி யாக்கிப் பாடுபட்டுப் பாடுபட்டுச் சோம்பேறி களுக்கு அழுதுவிட்டுப் பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று, இருக்க இடமற்றுத் திரியும்படிக்கும் சொல்லி இருக்கவே இருக்காது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள் ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டுக்கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய்ச் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர் களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டிற்கும், இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும், இவர்கள் நடந்துகொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத் தனத்தினால், தொழில் முறையினால், மன வலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்ட தென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேரு வதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர் களுக்குக் கொடுத்தவர்களில் பெரும் பான்மை மக்கள் இன்று இருக்கும்  நிலையை யார் தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய, அப்பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கலி யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ்படுத்தப்படுமா னால், யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள் தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால், அப்படிப் பட்டக் கடவுளை அழித்து ஒழித்து விடுவ தில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்?
அப்படிப்பட்டக் கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படு மானால், அது ஒழிந்து போகுமே என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

இதையெல்லாம் பார்க்கும் போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடிய வில்லை.


சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக்காரன், பேராசைக் காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத் துக்குத்தான் பயன்படுகின்றதே ஒழிய, வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை.

மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத் திற்கு ஆக என்று கடவுள் சிருஷ்டிக்கப் பட்டு இருக்குமானால், அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும், அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலை யில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.


கடவுளைச் சதாகாலமும் கட்டி அழுது, அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்ச கர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களு டைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக இலட்சம், பத்து இலட்சம் பணம் போட்டுக் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து, அய்ந்து வேளை, ஆறு வேளை பூஜை செய்து, மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய்- யோக்கியமாய் நடக் கிறார்களா? கடவுளுக்காகவே சன்னியா சியாய், குருவாய், சங்கராச்சாரியாராய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக் கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத் தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க, கடவுள் நம்பிக்கையுள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம்- யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?


எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் கூறவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய், எந்தக் கடவுளும் இருக்கக்கூடாது என்றும், அப்படிப்பட்டக் கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் வற்புறுத்திக் கூறுகின்றேன்.
மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக் கட வுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?


                  ----------------------14.7.1970. உண்மை இதழில் தந்தை பெரியார்கட்டுரை,

7 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஜாதகம்

திருமணத்தின்போது பொருளாதாரம், ஜாதகப் பொருத்தம் குடும்ப கவுரவம் - இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற கேள் விக்கு ஓர் ஆன்மிக இதழ் தந்துள்ள பதில் இது. முதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

அடுத்து ஜாத கப் பொருத்தம் பாருங் கள் என்கிறது - ஆன்மிக இதழ். ஆக ஜாதகப் பொருத்தத்தில் மணமக் களின் மனப்பொருத்தத் துக்கு இடம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறதா இல்லையா? முக்கியமான விஷயத் திலேயே கோட்டை விட் டபின் அப்புறம் என்ன ஜாதகம் - வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/87322.html#ixzz3Ck7VvJdb

தமிழ் ஓவியா said...

பெரியார் 1000 வினா - விடைப் போட்டி


என் பெயர் ஸி.ணி.லி. ஜான்சிராணி. நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். 31.08.2014 அன்று நான் தென் சென்னையில் அரும்பாக்கத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் கலந்து கொண்டேன்.

கடந்த 10 நாட்களாக பெரியார் 1000 வினா - விடைப் புத்தகத்தை முழுவதும் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் நிறைய தெரிந்துக் கொண்டேன். அதில் சில.

பெண்ணடிமை ஒழிப்பு
ஜாதி ஒழிப்பு
வகுப்புரிமைக்கான போராட்டம்
இனிவரும் உலகம்
மூடநம்பிக்கை ஒழிப்பு
தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பு
பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு
பெரியாரின் இலட்சியங்கள், சிந்தனை.
இந்தப் போட்டியை நடத்திய திராவிடர் கழகத்திற்கு நன்றி.

- ஜான்சிராணி, சைதாப்பேட்டை, மேற்கு, சென்னை-15

Read more: http://viduthalai.in/page-2/87330.html#ixzz3Ck86eoGX

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண் நோயை குணப்படுத்தும் இளநீர்


வயிற்றுப்புண் நோய்(அல்சர்) என்பது நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படுவது. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான தின்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது.

வயிற்றுப்புண் உருவாகி இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைமூலம் நாம் அறிந்து கொள்ளலாம். வயிற்று புண் நோய் இருப்பவர்கள் சாக்லெட், குளிர் பானங்கள், மது, பெப்பர்மிண்ட், காபி, கருப்பு தேநீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் ஏற்பட்டிருந்தால் கோதுமை,கோழி,மீன், பீன்ஸ், முட்டை,தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவைகளை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.அத்துடன் புளிப்பான, பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் நோய் குணமாக முக்கிய இயற்கை மருந்தாக விளங்குவது இளநீர். இதில் உள்ள தண்ணீர்,வழுக்கை உள்ளிட்டவைகள் நம் உடலில் உண்டாக்கும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உண்டு.

இதனை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் நோய் விரைவில் குணமடையும். மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு, கண்களுக்கு குளிர்ச்சி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு செரிமானமாகும், செரிமானக் கோளாறு களை சரிசெய்யும்.

மேலும், இதனை தினமும் மதியம் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை வெளியேற்று வதுடன், ரத்த சோகையை போக்குகிறது. அத்துடன் ரத்த கொதிப்பு குறைக்க, இரத்த அழுத்தம், மஞ்சள்காமாலை, காலரா, அம்மை நோய்,கல்லீரல் பாதிப்பு, நாவறட்சி, தொண்டை வலி ஆகியவற்றையும் நீக்குவதுடன், உடல் பருமனையும் அதிகரிக்க செய்யும்.

மேலும் வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையில் ஏற்படும் தடிப்புகளை குணப்படுத்தவும் இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/87346.html#ixzz3Ck9wFvou

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் வராமல் தடுக்க ஏழு வழிமுறைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்த பட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க் கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

Read more: http://viduthalai.in/page-7/87350.html#ixzz3CkAG352y

தமிழ் ஓவியா said...

மழைக்காலம் வந்தாச்சு, குழந்தைகள் பத்திரம்

வெயில் காலம் வந்தா மட்டும் தான் பிரச்சி னையா? மழைக்காலம் வந்தா அதை விடப் பிரச்சினைதாங்க என பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சாச்சு. மழை பருவம் வந்தாலே மருத்துவமனையில் குழந்தையும் கையுமாக பலரைப் பார்க்கலாம். பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சினைகள். காரணம் வானிலை மாற்றம் தான். புது மழையில் நனைஞ்சா ஆகாதுன்னு பெரியவங்க சொல்றதைக் கேட்டிருப்பீங்க.

இந்த பருவத்தில் எப்படி சமாளிக்கிறது? குழந்தைகளை நோய்களிலிருந்து எப்படி பாதுகாக்கிறது?

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன் கூறும்போது: மழைக் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியமான விஷயம். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முதல் காரணம் கொசுதான். மழைக்காலத்தில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவை வரக்கூடும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசுவலை மற்றும் கொசுக்களை விரட்டுவதற்கான பிரத்யோக சாதனங்கள் மூலம் கொசுக்களை குழந்தைகளிடம் நெருங்க விடக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தவிர்க்க முடியும்.

மேலும் அதிக ஈரப்பதத்தினால் கால்களில் பூஞ்சை நோய்களும் வர வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளின் சருமங்களில் அதிக ஈரப்பதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மழைக்காலத்தில் வாட்டர் போன் இன்பெஃக்ஷன் என்று சொல்ல கூடிய எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

கோடை காலத்திலிருந்து மழைக்காலத்திற்கு வானிலை மாறும் போது நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மாத்திரைகளோ, ஊசிகளோ போடுவதற்கு பதிலாக சரியான முறையில் பராமரிப்பதன் மூலமும் நோய்கள் வராமல் தடுக்கலாம். கால நிலை மாறும் போது பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் எளிதில் தாக்கிவிடும்.

இதை தவிர்ப்பதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். சரியான விகிதத்தில் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு திறனை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதிகமாக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனே அதற்கான மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரைப்படியே மருந்து கொடுக்க வேண்டும். நாமே மருந்து கொடுக்கும் முடிவை எடுக்க கூடாது, என்றார். அம்பிகா பாண்டியன் (பாடி): வானிலை மாறும் போது குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவது சகஜம் தான். ஆனால் சரியான முறையில் குழந்தைகளை பாதுகாத்தால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காதில் குளிரான காற்று படக்கூடாது. அதனால் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்வெட்டர், குல்லா போன்றவற்றை போட்டு விடுவதன் மூலம் குளிரிலிருந்து பாதுகாக்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால்களில் சாக்ஸ் போட வேண்டும்.

சின்ன குழந்தைகளுக்கு காது மற்றும் கால் பகுதி அதிகம் குளிராக ஆகாதபடிக்கு பாதுகாப்பான உடைகளை அணிவிக்கவேண்டும். தண்ணீரை சுட வைத்து கொடுப்பதன் மூலம் குளிர் காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம். மழையிலே நனைய விடக்கூடாது. நனைந்தால் உடனே துவட்டி விடவேண்டும். குளிர்பானங்கள், அய்ஸ்கிரீம் போன்றவற்றை குளிர் காலங்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் உடல் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்க வேண்டும்.

மணிகண்டன் (குருபுரம்): குழந்தைகளுக்கு மினி ஸ்கர்ட், சிலீவ் லெஸ் போன்ற உடைகளை போடாமல் உடம்பை முழுவதுமாக மூடும் படியாக ஆடை அணிவிக்க வேண்டும். மெல்லிய ஆடைகளை போடாமல் நல்ல குளிருக்கு அடக்கமாக போட்டுவிடுங்கள். குளிர் காத்துப்பட்டால் நெஞ்சு சளி பிடிக்கும்னு சொல்வாங்க.

மாலை நேரங்களில் வெளியில் அலைய விடக்கூடாது. அப்படியே வெளியே போகிற மாதிரி இருந்தால் காதுக்கு ஸ்கார்ஃப் கட்டி கூட்டிப் போங்க. மழை பருவம் என்பதால் குழந்தைகளை வெளியே கூட்டிப்போனால் குடை அல்லது ரெயின் கோட் கட்டாயம் எடுத்துட்டுப்போங்க. உணவில் காரத்துக்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. மிளகு ரசம், மிளகு சாம்பார் இப்படி சாப்பிடக்கொடுக்கலாம். கொள்ளு ரசம், இஞ்சி ஆகியவை உடம்பின் சூட்டை அதிகரிக்கும்.

சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆறிப்போன உணவுகளைக் கொடுக்காமல் சூடான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/87349.html#ixzz3CkAPGCkE

தமிழ் ஓவியா said...

ஆடு, கோழி பலியிட்டு காவல் நிலையங்களில் பரிகாரமாம்!


நாமக்கல், செப்.8-_ இடமாற்றம், மோசமான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அதிர்ச்சியடைந்த வேல கவுண்டம்பட்டி காவல்துறையினர் ஆடு, கோழி பலியிட்டு காவல் நிலையத்தில் ரத்தத்தைத் தெளித்து பரிகாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தொடர்ச்சியாக வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

இங்கு ஆய்வாளர் பணியிடமும் காலியாகவே உள்ளது. தற்போது ஒரு துணை ஆய்வாளர் மற்றும் சில காவல் துறையினரே பணியில் உள்ளனர்.

அதிருப்தியிலும், மன உளைச்சலிலும்...

இந்தக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, சாலை விபத்து போன்ற மோசமான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு மாதத்திற்கு முன், காவல் நிலையத்திற்கு அருகிலேயே, காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பணியாற்றும் காவல்துறையினர் மிகுந்த அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் உள்ளனர். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய ரகசிய பூஜை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு, கோழிகளை பலியிட்டு ரகசிய பூஜை
காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரச்சினைகள் நிகழாமல் இருக்கவேண்டும் என்பதற் காகவும், இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவும், காவல்துறையினர் நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில், ஆடு, கோழிகளை பலியிட்டு ரகசிய பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த ரத்தத்தை காவல் நிலையத்தில் தெளித்துள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த வாகனங்கள் காவல் நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதில் படிந்துள்ள ரத்தக்கறையால் இரவு நேரங்களில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழுமோ என்ற அச்சம் உள்ளதாம். செய்தியாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு...

எனவே, அதில் இருந்து விடுபடும் நோக்கில் தினமும் எலுமிச்சம் பழத்தை அறுத்து அதன் சாறை காவல் நிலையம் முழுவதும் தெளித்து வருகிறோம். இதனால் மன நிம்மதி ஏற்படுகிறது. மற்றபடி ஆடு, கோழிகளை பலியிடவில்லை? என்றனர்.

விவரம் அறிந்து செய்தியாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்தியும் உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/87359.html#ixzz3CkAfdTKT

தமிழ் ஓவியா said...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சினை!




நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே 13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை நெய்வேலி நிர்வாகமும், மத்திய அரசும் மனிதநேய அடிப்படையில் அணுகி, அவர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த முன் வர வேண்டுமென திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் ஒப்பந்தத் தொழி லாளர்களாகவே (Contract Labourers)
வைத்து, அவர்களை வழமையான ஊழியர்களாகவோ, நிரந்தரத் தொழிலாளர்களாகவோ ஆக்காமல் இருக்கும் அவலத்தையும் அநியாயத்தையும் கண்டித்து (இதேபோல திருச்சி B.H.E.L. என்ற கனரகத் தொழிற்சாலையிலும்கூட அநீதி தொடர்ந்த வண்ணம் உள்ளது) அங்கே பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வந்தனர்; இதனை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்குத் தடையாணையை பெற்றுள்ளனர்.

மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சினை இது.

நெய்வேலி நிறுவனம், நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனம். இதற்கு அடிப்படைக் காரணம் உழைக்கும் தொழிலாளி வர்க்கம் அல்லவா? அவர்களது உழைப்பை - பணி நிரந்தரம் செய்யாது வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பல ஆண்டுகள் நீடிக்க வைப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன்
காணத் தகுந்தது வறுமையோ?
பூணத் தகுந்தது பொறுமையோ? என்று கேட்டார் புரட்சிக் கவிஞர்.

நல்ல சமூக பொருளாதார நீதியை நிலை நாட்டும் அரசானால், அது தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தியது போல - தொழிலாளர்களை, லாபத்தில் பங்கு பெற்ற பங்காளிகளாக ஆக்கிட முன் வர வேண்டும். மூலதனம் என்பது இவர்களுடைய உழைப்பும் தானே!
13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறதா அரசு?

நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனம் இவர்களை நிரந்தரமாக்கி, வாழ்வளிப்பதனால் உற்பத்தி பெருகும் - காரணம் தொழிலாளர்கள் மேலும் உற்சாகத்துடன் பணி புரிவார்களே!

பெரிய அதிகாரிகள் அரிசி வாங்கும் கடையும் இந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள் வாங்கும் கடையும் ஒரே கடைதானே!
பசியும் இருவருக்கும் பொதுவானதுதானே! (வேண்டு மானால் அதிக சம்பளம் பெறுவோர்க்கு பசி சற்று குறைவாகக்கூட இருக்கும் என்பதே உண்மை).

எனவே, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டால், இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியாது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. தலைமை அதிகாரிகள் இதில் மனிதநேய உணர்வுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அந்த 13,000 குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்து, பெருமை தேடிக் கொள்ள முன்வர வேண்டும்.

நெய்வேலி நிறுவனம், B.H.E.L. போன்ற நவரத் தினங்கள் - தொழிலாளர் பிரச்சினையிலும் எடுத்துக் காட்டாக முன்னணியில் நிற்பது, அனைத்துத் தரப்பி னருக்கும் நல்லதல்லவா?

எனவே, காலந் தாழ்த்தாது உடனடித் தீர்வு காண முயன்று இரு சாராருக்கும் (Win-Win) வெற்றி என்ற நிலையில் நிர்வாகம் விட்டுக் கொடுத்து, ஒரு குடும்பத்தில் தன்முனைப்புக்கு எப்படி இடந்தரக் கூடாதோ அதே போல இப்பிரச்சினையில் அணுகு முறையை - நடைமுறைக்கு உகந்ததாக ஆக்கிட முன்வர வேண்டுமென நிர்வாகத் தினை - மத்திய அரசினை திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


சென்னை

7.9.2014

கி.வீரமணி

தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87246.html#ixzz3CkBQiWl5