Search This Blog

6.4.14

நான்கு வகை இரத்தப் பிரிவுகளில் நால்வர்ண தர்மமா?-மதவாத நச்சுக் கருத்துகளுக்கு மறுப்பு)




(மதவாத நச்சுக் கருத்துகளுக்கு மறுப்பு)

புத்தக நூலா? பூணூலா?
விஞ்ஞான அறிவுக்கு 60 வினா-_விடைகள் என்று ஒரு நூல் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் திரு வி.டி.சங்கர் பி.எஸ்சி. அவர்கள். இந்நூல், பார்ப்பன_வைதிக_ஜாதிய வர்ண தர்மத்தினை வலியுறுத்துகிறது. அந்நூலின் ஒரு கட்டுரையின் தலைப்பு பழைய தர்மமும் நமது கடமையும் என்பது.

அரும்பாடு - பெரும்பாடு
இந்த நூல், அர்த்தமற்ற, ஆதிக்க வர்ண தர்மத்துக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. வர்ண தர்மத்தை நியாயப்படுத்துகிறது. இதற்காக, இவர், அரும்பாடு, பெரும்பாடுபட்டிருக்கிறார். அதனை, இனிப் பார்ப்போம்!

ஆரம்பம் திருவிளையாடல்
பண்டைக்கால இதிகாசங்களும் வேத புராணங்களும் நெறிமுறைகளும் ஆசாரங்களும் இன்றுள்ள பகுத்தறிவாளர்களால் ஒதுக்கப்பட்டுள்ள விஷயங்கள் என்றாலும், இவற்றை ஆராயும் பொழுது வாழ்வின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பல அறிவியல் செய்திகளை நிச்சயமாகக் காணமுடிகிறது. கட்டுரையின் தொடக்கம் இது.
ஒதுக்க மாட்டார்கள், ஒழித்துக் கட்டுவார்கள்
இந்துமத வேத புராண இதிகாசங்களில் அறிவியல் இருக்கிறதாம்! இவற்றைப் பகுத்தறிவாளர்கள் ஒதுக்கிவிட்டார்களாம்! நிரம்பவே, சலித்துக் கொள்கிறார் நூலாசிரியர் சங்கர் அவர்கள். ஆதங்கப்படுகிறார் _ அங்கலாய்த்துக் கொள்கிறார். அறிவியல் மனப்பாங்கையும் (Scientific Temper) பகுத்தறிவு நெறியையும் பகுத்தறிவாளர்கள் ஒதுக்கிவிட மாட்டார்கள்! பின், என்ன செய்வார்கள்? அவற்றை உருத்தெரியாமல் ஒழித்து விடுவார்கள்; அழித்து விடுவார்கள். இதுதான் உண்மை! இதில் எவ்வகைத் தயக்கமும் இல்லை, நூலாசிரியர் அவர்களே!
கண்டுபிடிச்சேன்! நான் கண்டுபிடிச்சேன்!
இந்த நூலில் ஓர் அரிய _ அற்புதமான கண்டுபிடிப்பைச் செய்துள்ளார் அவர். அட,
அட, அடடா! என்ன கண்டுபிடிப்பு? என்ன ஆராய்ச்சி?
இந்தக் கண்டுபிடிப்புக்காக, இவருக்கு ஏன் அறிவியலின் பெயரால் நோபல் பரிசு இன்னும் வழங்காமல் இருக்கிறார்கள் என்பதுதான் எமக்கு விளங்கவில்லை!

இனி, இவரது அரிய கண்டுபிடிப்புக்கு வருவோம்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ நண்பரே, நண்பரே, நண்பரே!
அவர், பின்வருமாறு எழுதுகிறார்:
ஆதி நாட்களில் நமது நியதிகள் ஏற்படுத்திய வருணாசிரம தர்மத்தை எடுத்துக்கொண்டால், நாட்டைக் காக்கும் ஆட்சியாளர்களை -க்ஷத்திரியர் என்றும், அறிவு ஜீவிகளாக, பல நூல் நியமங்களை வகுத்து, தன் மதியால் இந்த அரசர்களையே அடக்கியாண்டவர்களை பார்ப்பனர்கள் என்றும், இந்த இரண்டு இனங்களுக்கும் பொதுவாக வணிகம், சமூக சேவை முதலிய பணிகளை மேற்கொண்டவர்கள் வைசியர் என்றும், இந்த இனத்துக்கெல்லாம் உதவியாக ஏவல் புரிந்து வந்தவர்கள் சூத்திரர் என்றும் பிரித்து இருக்கின்றனர்.
 

ஏற்படுத்தியதா? ஏற்பட்டதா?
வர்ணாசிரம தர்மத்தை ஆதி நாட்களில் நமது நியதிகள் ஏற்படுத்தினவாம்! நியதிகள், விதிகள், உண்டாக்குபவர் இல்லாமல் தாமாகவே சுயம்புவாக வந்தனவா? அவற்றை நியமிப்பவர் இருக்க வேண்டாமா? இது என்ன வாதம்?
ஆட்கள்தானே நியதிகளை உருவாக்கினர் _ உருவாக்க முடியும்? அவை தாமாகவே பொத் என்று விண்ணிலிருந்து குதித்து வந்துவிட்டனவா?

அண்ணலின் கை வண்ணம் அல்லவா?
இந்திய அரசியலமைப்பு விதிகள் தாமாகவே உருவாயினவா? அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வல்லுநர் குழுதானே விதிகளை வகுத்தது?
இப்பொழுது எண்ணிப் பார்ப்போம். வர்ண தர்மம் தானாகவே நியதியாக வந்துவிட்டதா?
வேதம் வெளிப்படுத்துகிறதே?
ரிக் வேதம் 9809ஆவது சுலோகம் பின்வருமாறு கூறுகிறது:
விராட் புருஷனாகிய பிரம்மாவின் முகம், தோள், தொடை, பாதம் இவற்றிலிருந்து முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் உருவாயினர்.
இந்த ரிக்வேத புருஷசூக்த சுலோகம், ஆரிய முனிவரான நாராயண கவியால் பாடப்பட்டது.
கூட்டணியால் கூறப்பட்டது
அந்தப் பிரம்மாவானவர் தலை, புஜம்(தோள்), தொடை, பாதம் இவற்றிலிருந்து முறையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு ஜாதிகள் (வர்ணங்கள்) பிறந்தன. (மனுநீதி 1:3)
இந்த மனு (அ) நீதி நூலை உருவாக்கியவர் பிருகு என்பவர்.
பிரம்மா மனுவுக்குச் சொல்ல, மனு மரீசிக்குச் சொல்ல, மரீசி பிருகுவுக்குச் சொல்ல, பிருகு அதனை நூல் ஆக்கினார் மனுநீதி என்ற பெயரில்.
ஒப்புதல் வாக்குமூலம்
பகவத் கீதை என்று சொல்லப்படுவது கண்ணனால் சொல்லப்படுவது எனக் கூறப்படுகிறது. இதில் கண்ணன் பின்வருமாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான். சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் _ (அத்தியாயம்: 4, சுலோகம் 13)
ஆக, நியதிகள் தாமாக வந்தவை அல்ல; ஆரிய ஆதிக்க புரியினர் ஏற்படுத்தியவை என்பது புலனாகின்றதன்றோ?
பார்ப்பனியப் பரப்புரை
அறிவு ஜீவிகளாக பல நூல் நியமங்களை வகுத்து, தம் மதியால் இந்த அரசர்களையே அடக்கி ஆண்டவர்கள் பார்ப்பனர்களாம்.
சூத்திரர்கள் ஏவலர்களாம், எடுபிடிகளாம்! நூலாசிரியர் கூறுகிறார் இப்படி!
பார்ப்பனர்கள் மட்டும்தான் அறிவு ஜீவிகளாம்! மதியுடையவர்களாம்! என்ன ஆணவம்! என்ன திமிர்த்தனம்!
அய்யன், அய்யா, அறிஞர், அண்ணல்
பார்ப்பனரல்லாத மற்றவர்களுக்கு _ சூத்திரர்களுக்கு அறிவே இல்லையா? அறிவு ஜீவிகள் இல்லையா? மதி இல்லையா?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிரகடனப்படுத்தி, உலகின் ஒப்பற்ற திருக்குறள் எழுதிய சூத்திரர் அய்யன் திருவள்ளுவர் அறிவுஜீவி இல்லையா? மதியில்லையா அவருக்கு?
பகுத்தறிவுப் பகலவன், அறிவாசான் அய்யா தந்தை பெரியார் அறிவு ஜீவியில்லையா? வெறும் ஏவலரா?
தன் துள்ளுதமிழ்ப் பேச்சாலும், எழுத்தாலும் பார்ப்பனியத்தைப் பதற வைத்த அறிஞர் அண்ணா அறிவு ஜீவியில்லையா?
நாலாம் ஜாதிக்கும் கீழாக வைக்கப்பட்ட பஞ்சமன் ஆன அண்ணல் அம்பேத்கர் அறிவுஜீவி இல்லையா? மதிவாணர் இல்லையா?
பெருந்தலைவரின் பேராற்றலும் பேரறிவும்
அறிவு ஜீவியாகக் கருதப்பட்டு நாடாண்ட பார்ப்பன இராஜகோபாலாச்சாரியாரை ஏவலர் என்று சங்கர் அவர்களால் குறிப்பிடப்படும் பெருந்தலைவர் காமராசர் அறிவுஜீவி இல்லையா?
ஆச்சாரியாரை, அய்யா பெரியாரின் பேருதவி கொண்டு ஆட்சியிலிருந்து அலறியடித்து ஓடச் செய்யவில்லையா பெருந்தலைவர்! நூலாசிரியர் இப்படிப் பிதற்றலாமா?
கந்தலாகிப் போய்க் கொண்டிருக்கும் காட்சி
ஆரிய _ பார்ப்பன வல்லாண்மை வர்ணதர்மம் கந்தலாகிப் போய்க் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு (கோவில் கருவறையில் மட்டும்தான் இந்த வர்ணதர்மம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.) சகிக்க முடியாமல், பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்புகிறாரே இந்த நூலாசிரியர்! அய்யோ பாவம்!
ஆகா! என்ன பொருத்தம்!
மேலும் தொடர்கிறார்: கூர்ந்து ஆலோசித்தால் இன்றைய இரத்தப் பிரிவுகளான எ, பி, எபி, ஓ என்ற நான்கும் அதன் பண்புகளும் வர்ணாசிரமத்தில் பிரிந்த அந்த நாற்குலங்களின் அடிப்படைக் குணங்களுடன் ஒத்துப் போவதை நாம் உணரலாம்.
அடே அப்பா! என்ன ஆராய்ச்சி? என்ன விளக்கம்? இவரது கருத்துப்படி,
இரத்தப் பிரிவு _ எ(A) பார்ப்பன(பிராமண)ர்களுக்கு உரிய பண்புகள் கொண்டது.
இரத்தப் பிரிவு _பி (B) சத்திரியப் பண்புகள் கொண்டது.
இரத்தப் பிரிவு எபி (AB) வைசியப் பண்புகள் கொண்டது.
இரத்தப் பிரிவு ஓ (O) சூத்திரப் பண்புகள் உடையது.
அதாவது, இரத்தப் பிரிவுகள் (Blood Groups) நான்கும் நான்கு வர்ணத்தார்களிடம் இருக்கும். மாறி இருக்காது!

குலமா? குணமா?
இரத்தப் பண்புகள் நான்கு பிரிவுகளுடன் நால்வர்ண தர்மக் குணங்கள் ஒத்துப் போகிறதாமே?
ஒத்து ஊதுகிறாரே நூலாசிரியர்?
இவர் படித்த அறிவியல் பட்டப்படிப்பு பி.எஸ்சி. (B.Sc.) இப்படித்தான் கூறுகிறதா?
செல்இயல் (Cytology), இதயஇயல் (Cardiology), உடலியல் (Physiology),வேதியியல் (Chemistry) உள்ளிட்ட அறிவியல் இப்படித்தான் கூறுகிறதா? அறைகூவல் விடுக்கின்றோம்!
இரத்தம்பற்றிய அறிவியல் உண்மைகளை, இரத்தப் பண்புகளை அறியாமலே ஏதேதோ கதைக்கிறாரே நூலாசிரியர் சங்கரர்?
இரத்தம்பற்றி மெய்யாகவே அறிவியல் கூறுவதை இப்பொழுது காண்போம்! அல்லது நினைவு கூர்வோம்.
இரத்தம் என்பது யாது?
உடல் உள்ளுறுப்புகளின் உட்புறச் சூழல்களில் ஒன்றுதான் இரத்தம் என்பது. நல்ல _ தூய தமிழில் குருதி எனப்படும். காரத்தன்மை கொண்ட சிவப்பான நீர்மம். இதன் அடர்த்தி 1.05 முதல் 1.06. சாதாரணமாக, நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனிடம் ஏறத்தாழ 5 லிட்டருக்குக் குறையாமல் இருக்கும் குருதி.
இரத்தத்தில் உள்ளடங்கி இருப்பவை:
இரத்தத்தில், பிளாஸ்மா (Plasma),, சிவப்பு, வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் (Platalets), நீர் முதலியன இருக்கின்றன.
55 முதல் 60 விழுக்காடு (55% _ 60%) பிளாஸ்மாவும், 40 முதல் 45 விழுக்காடு உயிரணுக்களும் (சிமீறீறீ) உள்ளன.
இரும்புச் சத்தான ஹீமோகுளோபின் (Haemoglobin) இருப்பதால் இரத்தம் சிவப்பாக இருக்கும். இந்த இரத்த அணுக்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எலும்பு மஜ்ஜை (Marrow), கல்லீரல், மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள் முதலிய பகுதிகள் ஆகும்.
இரத்தத்தின் இயற்கைப் பணிகள்
இரத்தம் 23 நொடிகளுக்குள் உடலை ஒரு தடவை சுற்றிவருகிறது. ஒரு நாளில், 2688 கி.மீ. பயணம் செய்கிறது. உடலில் உள்ள எல்லாத் திசுக்களுக்கும் (Tissues) சென்று ஆற்றலை அளித்துவிட்டு கார்பன்_டை_ஆக்சைடு முதலான மாசுகளை ஏற்றுக் கொள்கிறது.
வேறு வகையில் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக் கூறவேண்டுமானால், இரத்தம் உயிரிய வளியை (Oxygen) உடலின் திசுக்களுக்குச் சுமந்து செல்வதுதான்.
(Blood’s chief function is to carry oxygen to the tissues.)
ஏந்திச் செல்வது இல்லவே இல்லை!
உண்மையில் இரத்தத்திற்கும் மனிதப் பண்புகளுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை; இல்லை; இல்லவே இல்லை.
இது ஒருபோதும் அன்பு, சினம், விருப்பு, வெறுப்பு, ஈகை, வீரம், ஈரம் முதலான பண்பியல்புகளைச் சுமந்து செல்லாது; ஏந்திப் போகாது. இப்பண்புகள் இரத்தத்தில் கலக்கவும் கலக்காது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், வர்ணதர்மம், குலம், கோத்திரம், ஜாதி முதலான பார்ப்பனிய வல்லாண்மைப் பண்புகளை ஏந்திச் செல்லாது! ஏன்? அப்படி இயற்கையில் இவை உண்மையாக இல்லை!
எப்படிச் செப்புகிறார் இவர்?
அறிவியல் இவ்வாறு உண்மைகளைக் கூற _ திரு.சங்கர் B.Sc மட்டும் இரத்தப் பிரிவுகள் வர்ணாசிரம _ ஜாதி முதலான பொருளற்ற _பொய்யான பண்புகளைக் கொண்டிருக்கின்றன என, எப்படிச் செப்புகிறார்? அதுவும் அறிவியல் பற்றிய நூலில்!

இரத்தப் பிரிவுகள் (Blood Groups) 
A, B, AB, O - இவைதாம் குருதிப்பிரிவு வகை. 45% மக்கள் ‘O’ வகையைச் சேர்ந்தவர்கள். இவற்றின் உட்பிரிவுகள்: A, A1, AL என்பன.
எல்லோருக்கும் பொது இவை
இந்த இரத்தப் பிரிவுகள் ஜாதி, வர்ண, மத, மொழி, இன, இட, நாடு வேறுபாடின்றி எவருக்கு வேண்டுமானாலும் அமையலாம். அப்படித்தான் அமைந்திருக்கிறது. இது இயற்கை நியதி.
இல்லாத ஜாதிக்கு என்னென்ன குணமோ?
இந்த இந்த வர்ணத்தாருக்கு, ஜாதியாருக்கு இந்த இந்த இரத்தப் பிரிவுதான் இருக்கும் என்பது கிடையாது. இவ்வண்ணம் அறிவியல் எப்போதும் கூறியது கிடையாது! ஏன்?
ஜாதி, குலம், வர்ணம் முதலியவைதாம் உண்மையில் கிடையாதே!
இவை வல்லாண்மை (ஆதிக்க)ப் பார்ப்பனரின் கற்பனையான, குரூரமான, தன்னலம் கொண்ட கற்பனைக் கற்பிதமே தவிர வேறில்லை!
குலவெறி, குலவெறி, குலவெறி
எனவே, பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு எ, பி, எபி, ஓ இரத்தப் பிரிவுகள்தான் இருக்கும் என்பது பினாத்தல்; பித்துக்கொள்ளித்தனம். பார்ப்பனிய _ வைதிக, இந்து மதவெறி! ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறிடி _ என்பதுபோல. ஒய் திஸ் குலவெறி, குலவெறி, குலவெறி டி?
அறிவியலின் பெயரால் வர்ணதர்ம அரங்கேற்றமா?
இப்படிப்பட்ட அபத்தங்களை, ஆரிய_பார்ப்பனிய வைதிக, சனாதன இந்துமத வர்ண ஜாதி வெறியினை அறிவியலின் பெயரால் அரங்கேற்றம் செய்வதா?
கூடாது, கூடாது, கூடவே கூடாது! என, எச்சரிப்பதுதான் பகுத்தறிவாளர்களாகிய தந்தை பெரியார் நெறியாளர்களின் சமூகநீதிக் கடமை.
நமது கடமை என நூலாசிரியர் எதையாவது பொறுப்பின்றி, அறிவியல் மனப்பான்மை (Scientific Attitude) இன்றி எழுத வேண்டாம்!
கிறுக்க வேண்டாம்! சும்மா விடமாட்டோம்! இப்படிப்பட்ட அறிவியல் திரிபுவாதங்களை இவரனையார் நிறுத்தும்வரை விடமாட்டோம்.
 ----------------- -  பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள்  ஏப்ரல் 01-15 - 2014 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

20 comments:

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பட்டபாடு


சன் டி.வி., செய்தியாளர் விழுப்புரத்தில் கைது

29.6.2001இல் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் களைக் கைது செய்துவேப்பேரி காவல் நிலையத்தில் அடைப்பு.

12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதா கிருட்டிணன் சாலை விளக்குகளை யெல்லாம் அணைத்துவிட்டு பத்திரிகை யாளர்களை கண்மூடித் தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து புகைப்படக்காரர் மூர்த்தி, தினமணி புகைப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. புகைப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்பட்டன.

ஜெவுக்கு எதிராக எழுதியதற்காக இந்து பதிப்பாசிரியர் சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகியோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.

இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளி யிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.

சந்தன வீரப்பன் சம்பந்தமான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக்கழித்துக் கொடுமைப்படுத் தினார்கள்.

இந்து ஏட்டின்மீது 17 வழக்குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.

130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத் திரிகையாளர்கள்மீது தொடரப்பட்டன.

இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகை களில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டப்பட்டிருக் கிறது. காரணம், இரத்தம் தண்ணீரை விட கெட்டி யானது கடந்த மாதம் காஞ்சீபுரத்திலே, செய்தியாளர், தொலைக்காட்சியினர் தாக்கப்பட்டது (19.3.2014) ஜனநாயகத்தின் நான்காவது தூணே ஜெயலலிதா ஆட்சியில் தாக்குதலுக்கு ஆளானது.

இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/78274.html#ixzz2y9akTw32

தமிழ் ஓவியா said...

எச். ராஜாமீது கிரிமினல் வழக்கு!

தமிழக பிஜேபி துணைத் தலைவரும் சிவகங்கை மக்க ளவைத் தொகுதி பி.ஜே.பி. வேட்பாளருமான எச். ராஜா என்பவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அவதூறா கச் பேசியதற்காகவும் கிறித்த வர், முஸ்லீம்கள்மீது வெறுப் பைத் தூண்டும் வகையில் பேசியதாலும் அவர்மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை மது ரைக் கிளை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78279.html#ixzz2y9bHYte1

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்


வேட்பு மனு

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு வேட்பு மனு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1318.

தடை

மக்களவைத் தேர்தலில் முதல் வாக்கெடுப்பு நாளை தொடங்கி 9 கட்டமாக மே 12ஆம் தேதி முடிவடை கிறது. நாளை திரிபுராவில் தொடங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவுக்குப் பின்பு கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மீறல்கள்

சென்னையில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் 55064.

தண்டனை

வேட்பு மனுவில் தவறான தகவல் அளிக்கப் பட்டால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.

ரஜினியிடம் கெஞ்சல்

சரியான நேரத்தில் சரியான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தெரிவிப்பார் என்கிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.

பரிதாபம்: தங்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்க முடியாதவர்கள் சினிமாக்காரர்களிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள் என்றால் இவர்களின் பரிதாப நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வைகோ கிண்டல்!

அரிஸ்டாடிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதா வாகத்தான் இருக்க முடியும் என்று வைகோ கிண்டல் அடித்துள்ளார். தென் சென்னை பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: அரிஸ்டாட்டிலுக்கு அடுத்த அரசியல் ஞானி ஜெயலலிதாதான்! ஏனென்றால் மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைய ஓட்ட ளியுங்கள் எனப் பேசி வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்களோ ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வரு கிறார்கள்.

40 தொகுதிகளை வைத்துக் கொண்டு எப்படி பிரதமராக முடியும்? ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளை கடைசி வரை காக்க வைத்து கழுத்தறுத்தவர் என்று வைகோ பேசியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78278.html#ixzz2y9bSBj5E

தமிழ் ஓவியா said...


பாஜக சீட்டணிக்கு தமிழக மக்கள் தக்க விடை கொடுப்பார்கள்

- குடந்தை கருணா

கோப்ரா போஸ்ட் எனும் புலனாய்வு இணைய தளம் மூன்று நாட்களுக்கு முன்னர், பாபர் மசூதி இடிப்பில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, சிவ சேனா, சங் பரிவார் அமைப்புகள் எப்படி திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தது என்றும், பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஸி, பால் தாக்கரே போன்றோருக்கு இவை அனைத்து முன் கூட்டியே தெரியும் எனும் தகவல்களை, ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

கோப்ரா போஸ்ட் இணை ஆசிரியர் ஆசிஸ், ராமஜன்மபூமி இயக்கத்தின் 23 தலைவர்களை பேட்டி எடுத்து இந்த ஆதாரங்களை தந்துள்ளார். அந்த 23 தலைவர்களும், பாபர் மசூதி இடிப்பில் சதி செய்த வர்கள் அல்லது சதியினை நிறைவேற்றியவர்கள்.

அயோத்தியா இயக்கம் எனும் நூலை எழுத இருப்பதாக ஆசிஸ் இந்த தலைவர்களிடம் கூறி, அதன் மூலம் இந்த சதி செயலை கண்டுபிடித்து நாட்டிற்கு தந்துள்ளது கோப்ரா போஸ்ட். உமா பாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார் போன்ற பாஜக தலைவர்கள், சுவாமி சச்சிதானந்த் சாக்ஸி மகராஜ், சாத்வி ரிதம்பரா, போன்ற இந்து சாமியார்கள், இவர்கள் இந்த பேட்டியில் பங்கேற்றவர்கள்.

லட்சக்கணக்கான கரசேவர்கள் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்கும் முன், பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என உறுதி மொழி எடுத்து, இந்த இடிப்பில் பங்கேற்றுள்ளனர். இந்த உறுதி மொழியை, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஸி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யா தர்மேந்திரா போன்றோர் முன்னிலையில் இந்த உறுதி மொழி மேற்கொள்ளப்பட்டது.

கரசேவர்களுக்கு, உயரமான கட்டிடங்களில் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயுதங் களும் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இந்த பயிற்சி யினை அளித்தது ஆர்.எஸ்.எஸ். என ஆதாரங்களை குவித்துள்ளது கோப்ரா போஸ்ட்.

1992-ல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையை அமைத்துக் கொடுத்தவர் மோடி.

பாபர் மசூதி இடித்த 1992-க்குப் பிறகு, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் நடைபெற்று பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இன்றளவும், இதற்கான தீர்வு இல்லாத நிலையில், நாட்டில் அமைதிக்கு பங்கம் எந்நேரமும் ஏற்படலாம் என்கிற நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய பயங்கர சதித்திட்டத்தை தீட்டியும் பயிற்சியும் அளித்த ஆர்.எஸ்.எஸில் இருந்ததை பெருமையாகக் கருதுகிறேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி சொல்கிறார். ஆர்.எஸ்.எஸீன் கட்டுப்பாடுதான் தன்னை உயர்த்தியது என பெருமைக் கொள்கிறார்.

அத்தகைய மோடியை பிரதமராக வேண்டும் என தமிழ்நாட்டில் பாஜக சீட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வாக்கு கேட்கிறார்கள் என் றால், தமிழ் நாட்டை, அமளிக்காடாக ஆக்கிட மத வெறி சக்திகளுக்குத் துணைபோகிறார்கள் என்பது தான் விடை. தமிழக மக்கள் இத்தகையவர்களுக்கு தேர்தல் மூலம் நல்ல விடை கொடுப்பார்கள் என்பது உறுதி.

Read more: http://viduthalai.in/page-2/78272.html#ixzz2y9bdgUEo

தமிழ் ஓவியா said...


மோடியின் நண்பர் பாபா ராம்தேவின் அபத்தமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள்


யோகா குரு பாபா ராம் தேவ், பிஜேபி யின் ஆதரவாளர் என்பதும், பிரதமர் வேட்பாளர் மோடியின் நண்பர் என்பதும், அனைவருக்கும் தெரியும். அவரது யோகா வகுப்புகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமானவை. (இவற்றை YOUTUBEல் காணலாம்.)

பாபாராம் தேவ் அரசியலில் முக்கியப் பங்கு ஆற்ற விரும்புகிறார். நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகிறார். அதனால் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஊழலை ஒழிக்க இவர் தரும் பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள்: (02.04.2014, The Financial Express - பார்க்கவும்) சுங்க வரியைத் (Customs Duty) தவிர, மற்ற வரிகளான, வருமான வரி, கலால் வரி (Excise Duty) போன்றவற்றை ரத்து செய்துவிடலாம். 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க லாம். இதன் மூலம் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர முடியும் என்று இவர் நம்புகிறார்.

இந்த வரிகளுக்குப் பதிலாக BTT (Banking Transaction Tax), என்ற வரியை, அதாவது, வங்கிப் பணப் பரிமாற்றத்திற்கு 2% முதல் 15% வரை வரி விதிக்கலாம். மேலும் நோட்டுகளுக்குப் பதிலாக மின் பணம் ((Electronic Money) பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் கறுப்புச் சந்தை (Black Market) ஒழியும் என்று இவர் கருதுகிறார். பிரேசில் நாட்டில் இப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக பாபா ராம்தேவ் கூறுகிறார்.

இவர் தனது பொருளாதாரச் சீர்திருத் தங்களை, அரசியல் வாதிகள், பொருளாதார நிபணர்கள், (Chartered Accountants) ஆகி யோர் அடங்கிய குழுவில் விவாதித்திருக் கிறார்கள். நமது நாட்டில் தற்போது 17% வணிகம் தான் வங்கி வழியே நடப்பதாகவும் மீதி 83% வணிகம் வங்கிகளுக்கு வெளியே நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பாபா ராம்தேவின் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டால், அரசின் கடைநிலை ஊழியர் அதிக வரி கட்ட நேரிடும். அதே சமயம் கோடிக்கணக்கில் வருமானம் பெரும் பணக்காரக் கம்பெனிகளும், முத லாளிகளும் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்ள வழி கிடைக்கும்.

மேலும் வருமான வரி, கலால் வரி போன்றவை தான் மத்திய அரசின் முக்கியமான வருமான ஆதாரங்களாகும். (இதில் ஒரு பகுதியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தருகிறது) இவற்றை ரத்து செய்துவிட்டால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிய பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவதற்குக்கூட போதிய பணம் இருக்காது. அரசின் அன்றாடப் பணிகள் கூட முடங்கும் நிலை ஏற்படலாம்.

எப்படி இருப்பினும், தனது வரி விதிப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிரதமர் வேட்பாளர் மோடியும், பிஜேபியும் நிச்சயம் ஆதரவு அளிக்கும் என்று பாபா ராம்தேவ் நம்புகிறார்.

- பேராசிரியர் சி. ஜம்புநாதன், சென்னை

Read more: http://viduthalai.in/page-2/78268.html#ixzz2y9bnXXup

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை நிறைவேற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தாரீர்! கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வேண்டுகோள்


கோவை, ஏப்.6- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கட்டளைகளை நிறைவேற்றிட அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருமாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டுக் கொண்டார்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த கோவைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் பேசிய தாவது:-

இந்த இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல; இந்த இயக்கத்தினுடைய குறிக்கோள், நாடி நரம்பு களைத் தொட்டுப் பார்த்தால், அதில் ஏற்படுகின்ற துடிப்பு, இந்த இனத்தை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக - பெருந்தலைவர்கள், இடஒதுக்கீடு கோரிய சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், சர் ஏ..டி. பன்னீர் செல்வம் போன்ற பெருந்தலைவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடு பட்டார்கள் என்றால், அவர் களுடைய சுயநலத்திற்காக அல்ல, நம்முடைய எதிர்கால வாழ்வுக்காகத்தான் அவர்கள் பாடுபட் டார்கள், பணியாற்றினார்கள்.

நான் இங்கே உரையாற்றுவதற்கு முன்பு எனக்கு முன்னால் பேசிய தம்பி ஒருவர், 91 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கின்ற கருணாநிதி என்று குறிப்பிட்டார். எனக்கு 91 வயது என்பதை வெளியிலே சொல்லிக்கொள்ள விருப்பமில்லை. அதிலும் என்னு டைய துணைவியாரை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னுடைய வயது 91 என்பதை உரக்கச் சொல்வதிலே கொஞ்சம் கூச்சம்தான்.

ஆனால், 91 வயதில், தள்ளாடும் பருவத்தில் நான் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்). என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது (பலத்த கைதட்டல்) என்னுடைய சுயமரியாதை உணர்வுக்கு தள்ளாட்டம் ஏற்படக் கூடாது (பலத்த கைதட்டல்) என்பதிலே நான் தந்தை பெரியார் வழியிலே, அண்ணா வழியில் சிந்தித்து அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கின்றேன். (பலத்த கைதட்டல்).

திராவிட முன்னேற்றக் கழகம் நான் தொடக்கத் திலே குறிப்பிட்டதைப்போல, ஒரு இன எழுச்சி இயக்கம். நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர், என்னுடைய இளைய அண்ணன் பேராசிரியர் அன் பழகனார் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தி லெல்லாம், இந்த இயக்கம் தொடங்கியது அதிகாரங் களைப் பெற அல்ல.

இந்த இயக்கம் தொடங்கியது தமிழர்களைக் காப்பாற்ற, தமிழகத்தைக் காப்பாற்ற பல கருவூலங்களை அகழ்ந்து எடுப்பதற்காகத்தான் இந்த இயக்கம் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்ல நீங்களும் கேட்டிருக் கிறீர்கள். நானும் கேட் டிருக்கிறேன்.

அந்த உரையை ஏடுகளிலே படித்தும் இருக் கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இன்றைக்கு உங் களை யெல்லாம் நான் நாடியிருப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் வளர்க்க வேண்டும், தேர்தலிலே நான்கு பேரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும், நாம் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியா வினுடைய பிரதமராக வேண்டும் என்றெல்லாம் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.

தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும், தமிழன் என்றால் அவன் யாரையும் தலை தாழ்த்த மாட்டான், அவனும் தலை தாழ மாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற் காகத்தான் இந்த இயக்கம் அன்றுதொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது, பணியாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட அந்த இயக்கத்திற்கு தலைவராக கிடைத்த - தளபதியாகவும் விளங்கிய நம்முடைய அருமை அண்ணா, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைந்த பிறகும் அவர் ஏற்றி வைத்த அந்தச் சுடர் விளக்கு அணை யாமல் காப்பாற்றுகின்ற அந்தப் பெரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்றால், என்னை மாத்திரம் நம்பி அல்ல, என் உயிரினும் மேலான உடன்பிறப் புக்களே (பலத்த கைதட்டல்) உங்களையெல்லாம் நம்பித்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.

அப்படிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுகின்ற ஒரு கட்டம். இந்த மக்களுக்கான ஒரு ஆட்சியை நல்லாட்சியை தர வேண்டிய ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில் எந்த சிரமங்களும் இல்லாமல், எந்தத் தடையும் இல்லாமல் பணியாற்றுகின்ற இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற அந்த வல்லமையை பெரியார் வழங்கினார், பேரறிஞர் அண்ணா கட்டிக் காத்தார்,

இன்றைக்கு பெரு வெள்ளமாகத் திரண்டிருக்கின்ற நீங்கள் எனக்கு அரவணைப்பாக இருந்து என்னோடு சேர்ந்து இந்த இயக்கத்தைக் காக்க முன் வருகிறீர்கள். அதற்காக நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/78266.html#ixzz2y9cFwmfV

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி


பூனைக்குட்டி வெளியில் வந்தது!

ராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்

காஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்!

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது

ஜாதி வெறி + மதவெறி + பதவி வெறி இவற்றின் கூட்டுத் தொகையே பிஜேபி கூட்டணி கணியூரில் தமிழர் தலைவர் கருத்துரை

மதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர்! பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலை மறை காயாக இருந்தது அதிகாரப் பூர்வமானது! இதுவரை இலை மறை காயாகச் சொல்லப்பட்டு வந்த இந்துத்துவாவின் அஜண்டா - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக இப்பொழுது அறிவிக்கப்பட்டு விட்டது.


தமிழ் ஓவியா said...

மூன்று முக்கிய பிரச்சினைகள்

1. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது.

2. யூனிபார்ம் சிவில் கோட்.

3. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்புச் சலுகைகள் நீக்கப்படும் என்ற மூன்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள்

பசு நமது நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்றாகும், பசுப்பாதுகாப்பு இந்திய நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்; இதை கருத்தில் கொண்டு பசு பாதுகாப்பிற்கு தனியான ஒரு துறை ஏற்படுத்தப்படும். பசு பாதுகாப்பு குறித்து தனியான சட்டம் கொண்டுவரப்படும். கால்நடை வளர்ப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து பசுக்களுக்கு என சிறப்பு பாதுகாப்பு அமைப்பு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும்.

சேதுசமுத்திரம்: ராமர்சேது பாலம் இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சார மய்யமாக திகழ்கிறது. இது பலகோடி இந்துக்களின் நம்பிக்கைகளை சார்ந்த ஒன்றாகும். என்றும் பிஜேபியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களின் இந்த நீண்ட காலக் கோரிக்கைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தேவை புதிய சிந்தனை - பார்வை

இதுவரை இந்திய வாக்காளர்கள் எந்த முடிவில் இருந்திருந்தாலும், பிஜேபியின் அதிகாரப் பூர்வமான இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திறந்த மனத்தோடு, புதிய பார்வையைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்திய மக்களை ஹிந்துக்கள் - ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று கூறுபோடும் ஆபத்தான அஜண்டா வெளியிடப்பட்டு விட்டது.

1992 டிசம்பர் 2002 பிப்ரவரி

1992 டிசம்பரில் அயோத்தியிலும், 2002 பிப்ரவரியில் குஜராத் மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவாத வன்முறைகளுக்கு அரசு ரீதியான அங்கீகாரம் கொடுப்போம் என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் ஆபத்தான போக்கு இதில் மய்யம் கொண்டு விட்டது.

தமிழ் ஓவியா said...

பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை இந்திய வாக்காளர்கள் அளிப்பார்களேயானால், அது சுனாமியாக எழுந்து இந்திய மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்கு மதக் கலவரத்தை அன்றாடம் கட்டவிழ்த்து விடும் என்பதில் அய்யமில்லை.
தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது?

தேர்தல் ஆணையம் கூட பிஜேபியின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், குடிமக்களை மத ரீதியாகப் பிரித்து அவர்களுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய முறையில் ஆலோசனைக்கு உட்படுத்தக் கடமைப்பட்டுள்ளது.

பூனைக் குட்டி வெளியில் வந்தது!

ஆகக் கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது. இந்த நேரத்தில் மேலும் ஒரு முக்கியமான பிரச்சினை மக்கள் முன் எழுந்து நிற்கிறது.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்துள்ளன சில அரசியல் கட்சிகள் - பி.ஜே.பி.யின் இந்த அப்பட்டமான ஹிந்துத்துவா வெறி உணர்ச்சி கொண்ட தேர்தல் அறிக்கைக்குப் பிறகு - அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதுபற்றி மறு பரிசீலனை செய்யக் கடமைப்பட்டுள்ளன. அதனைச் செய்யத் தவறினால் நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில், பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

ஒரு வகையில் நல்லதே!

ஒரு வகையில் மூடி மறைக்காமல் பி.ஜே.பி. தன் நிறத்தைக் காட்டிக் கொண்டது கூட நல்லதாகத்தான் தோன்றுகிறது. நாட்டு மக்கள் அடையாளம் கண்டு பி.ஜே.பி.யை அறவே புறக்கணிக்க இது பெரிதும் உதவும் என்பதில் அய்யமில்லை. திராவிடர் கழகத்தின் தொலை நோக்கு!

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி.யின் இந்த நிலையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் வந்திருக்கிறோம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை பிஜேபியின் பின்புலத்திலிருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது முன்னே வந்து கட்டளையிடும் இடத்திற்கு வந்துவிட்டது என்று அறுதியிட்டு நாம் சொல்லி வந்தது - எழுதி வந்தது நூற்றுக்கு நூறு சரி என்பது இந்தத் தேர்தல் அறிக்கை மூலம் மிக மிகத் தெளிவாக உறுதிப்பட்டு விட்டது!
கழகத்தின் இந்தக் கணிப்பு - தொலைநோக்கு - நூற்றுக்கு நூறு சரியே என்பதைக் காலந்தாழ்ந்தாவது பொது மக்கள் - வாக்காளர்கள் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது!

வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

நடக்கவிருக்கும் தேர்தல் (ஹிந்துத்துவாவுக்கு) மதவாதத்துக்கும் - மதச் சார்பற்ற தன்மைக்கும் இடையிலான போட்டி என்பதை உணர்ந்து பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் முற்றிலும் நிராகரிக்குமாறு வாக்காளப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். வீழட்டும் மதவாதம்! வெல்லட்டும் மதச் சார்பின்மை!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


முகாம்: ஈரோடு

7.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78292.html#ixzz2yFi2l7de

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும்.

(விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/78317.html#ixzz2yFj9cQKm

தமிழ் ஓவியா said...


இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மே மாதம் துவங்குகிறது


இங்கிலாந்து டெய்லிமெயில் என்ற செய்தி நிறுவனம் சேகரித்த தகவலின் படி அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை தொடர்பில் விசா ரணை நடத்த விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உள்ளார்.எதிர்வரும் வாரத்தில் இந்த விசாரணை ஆணைக் குழு பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவநீதம்பிள்ளை இந்த நிபுணர் குழு வினை நியமிக்க உள்ளார்.

காணொலி சாதனங்கள் வாயிலாக வடக்கில் உள்ள மக்களிடம் தகவல்கள் திரட்டப்பட உள்ளது. இந்த ஆணைக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளனர்.

2002-ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தீர்மானத்தில் கோரப்பட்டுள் ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து மஹிந்த ராஜபக்சே அரசாங்கம் இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

மன்னார் பேராயர் ஜோசப் உள்ளிட்ட 60 பேர் இலங்கை அரசுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. நெருக்கடி

இதனிடையே சாட்சியாளர்களுக்கு அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக வடகிழக்கு மாவட்டத்திலிருந்து தகவல்கள் வருகிறது, முக்கியமாக சில பிரமுகர்களின் அலை பேசி ஒட்டுகேட்பது, வெளிநாட்டிலிருந்து அவர்களை காணவருபவர்களை தடுத்து வைப்பது, சர்வதேச அரங்கிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசும் இராணுவமும் மேற்கொண்டு வருகிறது. போர் விசாரணைக் ஆணைக் குழு வினர் படையினரையும் அரசியல்வாதி களையும் குற்றவாளியாக்க முயற்சிக்கப் படுகின்றது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றவாளியாக்கப்படும் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாத வகையில் தடைகள் விதிக்கப்படக் கூடுமென குறிப்பிடப்பட் டுள்ளது.

இலங்கையின் சூழ்ச்சி ஆரம்பம்

விசாரணைக்குழு வருவதை தடுக்க முடியாத பட்சத்தில் சர்வதேச நிலைகளில் ராஜதந்திர நடவடிக்கை எடுக்க புதிய தந்திரங்களை இலங்கை கையாள ஆரம்பித்து விட்டது, இதனில் முதல் படியாக வெளியுறவுத்துறையில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு சர்வதேச அமைப்புகளுடன் நல்லிணக்க மாக உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் பன்னாடுகளில் இலங்கைக்காக பணியாற்றும் தூதர்களும் அடங்குவர் இதன்படி இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி பிரசாத் காரியவசம், அமெரிக்க தூதராக நியமிக் கப்படவுள்ளார். முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஜெர்மனிக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

சரத் கோங்காங்கே தென்னாபிரிக்கா வுக்கான உயர் அதிகாரியாகவும் சுதர்சனன் செனவிரட்ன இந்தியாவுக்கான உயர் அதிகாரியாகவும் நியமிக்கப்படவுள் ளனர். இவர்கள் அனைவரும் பன்னாடு களில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் பாதகமாக அமை யாதவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நட்புறவு நாடுகளின் உதவி யையும் எதிர் நிலை நாடுகளை மடக்கும் விதமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விசா வழங்குவதா வேண்டாமா?
போர்க் குற்ற விசாரணைக் குழுவில் யார் யார் அமைந்துள்ளனர் என்று தெரிந்த பிறகு அவர்களின் பின்புலங் களை ஆய்வு செய்து அவர்களுக்கு விசா வழங்குவதா வேண்டாமா என முடிவு செய்யும் எண்ணம் இலங்கை வெளியுறவுத்துறையிடம் உள்ளது, இது குறித்து சில நாட்களுக்கு முன்பு விசாரணைக் குழுவை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சமர சிங்கே கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நியமல் பெரேரா கூறியதாவது மனித உரிமைகள் குழு இலங்கை வருவது தொடர்பான எந்த ஒரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை, ஆகையால் அதுகுறித்து இப்போது கூற ஒன்று மில்லை, விசாரணைக் குழுக்களுக்கு இலங்கையில் அனுமதி வழங்குவதா வேண்டாமா என்று அரசுடன் கலந்தா லோசித்து தான் முடிவு செய்வோம். பன்னாட்டு விசாரணைக்குழு விவகா ரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் பணிந்து போகமாட்டோம் எங்களுக்கு நாட்டு நலன் தான் முக்கியமே தவிர உலக நாடுகளின் அழுத்தம் முக்கியமல்ல என்று பதிலளித்தார்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/78319.html#ixzz2yFjGkadX

தமிழ் ஓவியா said...


என்ன தயக்கம் காம்ரேட்ஸ்?

- குடந்தை கருணா

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அதிமுக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட நிலையில், திமுக அணி யில் இணைந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என மத சார்பின்மைக் கொள்கையில் அக்கறை கொண்ட அனைவரும் விரும்பினர்; எதிர்பார்த்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணியுடன் கூட்டு இல்லை எனக் கூறிய நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அதே நிலை எடுக்க வேண் டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

தி இந்து ஆங்கில நாளிதழில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில், போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் எனக் கூறி உள்ளார். உண்மை தான். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தாண்டி, தமிழ் நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற் கும் இடையே தான் போட்டி நடை பெறுகிறது. மற்ற கட்சிகளெல்லாம், களத்தில் இருப்பதாகத் தெரிய வில்லை; ஆனால், திமுக அணி, அதி முகவை விமர்சனம் செய்து தேர் தலைச் சந்திப்பது என்பது, சிலர் சொல் வது போல், சட்டமன்றத் தேர்தல் அல்ல என்பது திமுகவிற்குத் தெரியும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அந்த அணியின் சார்பில் என்ன கருத்து முன் வைக்கப்பட்டது? மதச் சார்பின்மை, சமூக நீதி என்கிற இரண்டு தத்துவத்தை முன்வைத்து, தேர்தலைச் சந்திப்பதாக திமுக அணி கூறுகிறது. அதிமுக வெல்லும் ஒவ் வொரு இடமும், மோடிக்கு ஆதர வாகச் செல்லும் என்பது தா.பாண்டி யன் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். இங்கே, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவிற்கு ஒரு சீட்டு தேறாது என்பதும் தெரியும்.

அதிமுக இங்கே மண்ணைக் கவ்வினால், அது மதச் சார்பின்மைக்கு வெற்றி. அதனால் தான், திமுக அணி, அதிமுகவை குறிப்பிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதுதானே சரியான அணுகுமுறை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தருவது தானே சரியாக இருக்கும்.
அண்டை மாநிலமான ஆந்திரா வில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து தெலுங் கானா பகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு என இருந்தாலும், தெலுங்கானா உருவாகிட காங்கிரஸ் முயற்சி எடுத்ததால், அதனுடன் கூட்டு என் கிறார் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி.

கம்யூனிஸ்டு கட்சியோடு கூட்டு என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கி, அகில இந்திய செயலாளர் ஏ.பி.பரதன் போன்றோர் வந்து சந்தித்து சென்ற அடுத்த நாள், ஒரு காரணமும் சொல் லாமல், கம்யூனிஸ்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஒவ்வொரு தொண் டனையும் அவமதித்து, அவர்களது சுயமரியாதையையும் கேவலப்படுத் திய அதிமுகவை வீழ்த்துவது கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பணி யில்லையா காம்ரேட்ஸ்?

தமிழ் நாட்டில், காங்கிரசோடு கூட்டு இல்லை; மோடிக்கு தமிழகத் தில் இடம் இல்லை என்பதைத் தெளிவாக்கி தேர்தல் களம் காணுகிறது திமுக அணி.

தெலுங்கானா காம்ரேட்ஸ் கூறும் காரணத்தைவிட, தமிழ் நாட்டில், அதிமுகவை எதிர்ப்பதற்கும், திமுக அணியை ஆதரிப்பதற்கும் கூடுதல் காரணங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கிறதே காம்ரேட்ஸ்.

பாஜகவிற்கு தேர்தலுக்குப் பின்னால் ஆதரவு தரலாம் எனும் அதிமுவை தோற்கடிக்க, திமுக அணியை ஆதரித்து, மதவெறிக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை என நிரூபிக்கும் பணியில் நீங்களும் இணையுங்கள் காம்ரேட்ஸ்.

Read more: http://viduthalai.in/page-2/78326.html#ixzz2yFjPewGX

தமிழ் ஓவியா said...

.ஜே.பி.யின் மக்களைத் துண்டாடும் அறிக்கை ஹிந்துத்துவாவின் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது

புதுடில்லி, ஏப்.7- பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (7.4.2014) டில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை ஹிந் துத்துவாவின் மறு பதிப்பாக வெளிவந் துள்ளது.

முதல்கட்டத் தேர்தல் இன்று (7.4.2014) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தங் களின் தேர்தல் அறிக்கை இன்று தேர்தல் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களில் தங்களது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதினாலேயே தந்திர மாக இன்று வெளியிடப்படுகிறது.

ஏனென்றால், அவர்களின் தேர்தல் அறிக் கையில் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை அவர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள்மீது கட்டுப்பாடு விதிக்கப்பட வுள்ளது.

தேர்தல் அறிக்கையில் சில...

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் வெளி யாகியுள்ள முக்கிய செய்திகள் சில...

காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 370 ஆம் பிரிவு சிறப்பு சலுகைகள் நீக்கப்படும்.

இந்தியா முழுவதும் வாழும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் சென்று அவர்கள் இழந்த நிலங்களை மீண்டும் பெற்று அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவர நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு சலுகைகள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களைப் போல் மாற்றி அமைக்கப்படும். பாகிஸ்தான் வசம் இருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் எந்த ஒரு தயவு தாட்சண்யமின்றி களையப்படும்.

முஸ்லிம்களின் மதரசாக்களின் (மதபோத னைக் கூடங்கள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, மாற்றியமைக்கப்படும்.

நவீன பல்நோக்கு மருத்துவமனை அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். தற்பொழு துள்ள மருத்துவமனைகளிலும் நவீன மாற்றம் கொண்டு வருவோம்.

ராமர் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று. இது எங்கள் கட்சியின் கொள்கை முடிவு மட்டுமல்ல; கோடிக் கணக்கான இந்திய மக்களின் உள்ளார்த்தமான எதிர்பார்ப்பு; அரசியல் அமைப்பைச் சரி செய்து ராமர் கோவில் கட்டுவோம்!

கடற்கரை மற்றும் கடல் சார்ந்த தொழில் அனைத்தும் மத்திய அரசின் சிறப்புப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.

சேது சமுத்திரத் திட்டம்

ராம் சேது நம் தொன்மையான கலாச்சார மாகும். தோரியம் அதிக அளவில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் எந்த முடிவு எடுப்பதானாலும், இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

மேலும் பல அறிவிப்புகள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Read more: http://viduthalai.in/page-8/78311.html#ixzz2yFkRS8Tf

தமிழ் ஓவியா said...


உலக சுகாதார தினத்தில் சுகாதாரம் பேணுவது குறித்து தீர்மானம்


சென்னை, ஏப். 8- உலக சுகாதார நிறுவன அமைப்பின் (who) தோற்றுவிக்கப்பட்ட தினத்தை உலக சுகாதார தினமான ஏப்ரல் - 7 கொண் டாடப்படுகிறது.

இன்றைய உலகில், உடல் பருமன் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. 2008 இல் உலக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் மிகை எடை உள்ளவர்களாகவும் மற்றும் 11 சதவீதம் பேர் உடல்பருமன் உள்ளவர்களாகவும் இருந்தனர்.

இதுகுறித்து இன்டெஜிம் மற்றும் பைலேட்ஸ் எக்ஸ்பர்ட் என்ற உடற்பயிற்சி நிறுவன உரிமையாளர் மாதுரி ருயியா கூறியிருப்பதாவது:-

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான உடல் நலப்பிரச்சினைகள் வரு கின்றன. எனவே இந்நாளில் ஆரோக்கியமாக இருப் பதற்கும், ஆரோக்கியமான உணவு உண்பதற்கும் மற்றும் ஆரோக்கியமானவற்றை சிந்திப்பதற்கும் நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் பசியாக இருக்கும்போது ஒரு பை நிறைய சிப்ஸ் உண்பதற்குப் பதிலாக ஒரு கை நிறைய பாதாம் பருப்பு எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம் பருப்புகளில் உள்ள பெரும்பாலான கொழுப்புகள், இதயத்தைப் பாதுகாப்பதற்கு உதவக்கூடிய ஒற்றை நிறைவுறா கொழுப்புகளாகும்.

சோடாக்கள் மற்றும் வீறியம் நிறைந்த இதர பானங்களுக்குப் பதிலாக ஒரு கப் பச்சை தேநீர் பருகுவது நல்லது. சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்கள், உலக அளவில் பரவியிருக்கும் உடல் பருமன் தொற்று ஏற்படுவதற்கு பங்களிக்கக்கூடிய துடன், இதய இரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் மற்றும் சில புற்று நோய்கள் ஏற்படுவதற்குரிய அபாயத்தை மக்களுக்கு உருவாக்கக்கூடும்.

எனவே தாகம் ஏற்படும் போதெல்லாம் சோடா அருந்துவதை தவிர்த்து அதற்குப்பதிலாக ஒரு கப் பச்சை தேநீர் அருந்தவும், பச்சை தேநீரில், உயிர் வளியேற்ற சேதத்தை எதிர்க்கக்கூடிய உடலிலுள்ள அணுக்களை பாதுகாப்பதற்கு உதவக்கூடிய உயிர் வளியேற்ற எதிர்ப்புகள் நிறைய உள்ளன. பல்வேறு வாழ்க்கை முறை நோய்களிலிருந்து பச்சை தேநீர் பாதுகாப்பளிப்பதாக நம்பப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/78341.html#ixzz2yL8H8OXy

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன? - கி.வீரமணி


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?

பி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது - கி.வீரமணி

ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;

நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.

பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?

இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.

2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.

தமிழ் ஓவியா said...


3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)

இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?

இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.

1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.

எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!

கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?

இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்

இ) பொது சிவில் சட்டம்.

இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?

வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!

3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)

மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?

வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


8.4.2014முகாம்: கோவை

Read more: http://viduthalai.in/e-paper/78340.html#ixzz2yL8S4pb7

தமிழ் ஓவியா said...

ஒன்றுமே இல்லை


பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை -_ தமிழனுக்குப் போகக்கூடாது; - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

- (விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/78351.html#ixzz2yL9GDlWH

தமிழ் ஓவியா said...

அன்றே சொன்னார் தமிழர் தலைவர்

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது. இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது. நரேந்திரமோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தவர்; ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத்துவா கொள் கையை அப்பட்ட மாகக் கடைப்பிடிப்பதில் சற்றும் கூட பின் வாங்காதவர் என்பதால் அவரையே - பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதற்காக தனது அத்துணைப் பிரச்சார ஊடகங்களிலும் - இணைய தளம் உட்பட மிக வேகமாக முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது! சமூகநீதி உணர்வு நாடு முழுவதும் அலைவீசிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு யுத்தியை அரசியல் வியூகமாக வகுத்து, தற்போது காங்கிரசின் தலைமையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நிலவும் மக்களின் அதிருப் தியைத் திட்டமிட்டு, தன் பக்கம் சாதகமாகத் திருப்பி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், உண்மை யான சமூகநீதி இவைகளுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஹிந்துத் துவா ஆட்சியாகவே உருவாக்கிட துணிந்து களத்தில் வெளிப்படை யாகவே இறங்கி விட்டது!

17.2.2014 விடுதலை அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தினார். இன்று அதன் உண்மை உணரப் படுகிறது. அன்று பி.ஜே.பி.யின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று முன்வரிசைக்கு, பி.ஜே.பி.க்குக் கட்டளையிடும் இடத்திற்கு வந்து விட்டது.

ஆர்.எஸ்.எஸால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டவர் தான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.

மோடி பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் அவரை ஏன் முன்னிறுத்தியுள்ளது? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. என்றாலே பார்ப்பன ஜனதா என்ற கருத்து மக்கள் மத்தியிலே தெரிந்த ஒன்று. (இதற்கு முன்பேகூட பா.ஜ.க.வில் உள்ள உமா பாரதியும், கல்யாண்சிங்கும், (உ.பி.) பங்காரு லட்சுமணனும் (பி.ஜே.பி. தலைவராகவே இருந்தவர்) தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதியும் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளனர்.)

தமிழ் ஓவியா said...

இந்த முத்திரை பா.ஜ.க.மீது விழுகின்ற காரணத்தால் அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஒரு பிற்படுத்தப் பட்டவரான மோடியைத் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தியுள்ளது.

மோடி யார் என்பதற்கும் பெரிய விளக்கம் தேவைப் படாது! அவர் குஜராத்து மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள்மீது அரசப் பயங்கரவாத மாக மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டத்தை ஏவி, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

எனவே சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதார் கிடைத்தால் அதனைத் தக்க முறையில் பயன்படுத்திட பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தவறிடுமா?

நிஜப்புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாகவே குதிக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சிந்தித்தால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோடியை ஆர்.எஸ்.எஸ். தனக்குக் கிடைத்த போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதன் இரகசியம் என்ன என்பது எளிதில் விளங்குமே!

சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனம் ஒன்றில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆற்றிய உரையை DNA - Daily News and Analysis வெளி யிட்டதுண்டு. Brahmins kept Indian Culture Alive என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது.

“Bramins are custodians of Indian Culture and shastras. The Brahmin Community has helped preserved Indian Culture. If our culture is still thriving it is because of Brahmins he said that a Social system can be created by the Methods by the gun of Shastras”

இந்தியக் கலாச்சாரம் உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்ற தலைப்பில் வெளிவந்த அந்தச் செய்தியில் நரேந்திரமோடி பேசினார்.

இந்திய நாட்டின் கலாச்சாரம் சாஸ்திரங்கள் இவற்றின் பாதுகாவலர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் பார்ப்பனர்களே ஆவார்கள்!

நமது கலாச்சாரம் உயிரோடு இன்று வரை இருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பார்ப்பனர்களே!

ஒரு ஒழுங்கு முறையான சமூக அமைப்பு முறையை சாஸ்திரங்கள் என்ற துப்பாக்கியால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்னவர் தான் இந்த நரேந்திரமோடி.

அப்படி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த நரேந்திரமோடியைத்தானே கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்திட முன்வரும். பார்ப்பனர்களுக்கு நல்ல அடிமையாகக் கிடைத்தவர்தான் இந்த மோடி!

இந்த மோடி ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள் கையைப் பாதுகாப்பதில் நிகர் அற்றவர். மலம் அள்ளும் தொழில் என்பது அவர்களின் கர்மப் பலன் அந்தப் பணி ஒரு தெய்வப் பணி என்று சொன்னவர் (மோடியின் கர்மயோக நூலில்)

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (11.2.2007) நடத்தியதுண்டு.

குஜராத் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் தண்ணீர்த் தொட்டியில் உயர் ஜாதிக் காரர்களுக்கு ஒரு நேரம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு வேறொரு நேரம் என்று எழுதி வைத்துள்ளனர். என்றால் - இதன் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான நகர சுத்தித் தொழிலாளர்கள் அங்கு சமீபத்தில் போராடினார்களே!

ஆர்.எஸ்.எஸின் வருணாசிரமக் கொள்கையின் பாதாரவிந்தங்களைத் தழுவிடக் கூடியவர் மோடி என்பது விளங்கும். தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியார் கொள்கையால் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் - வரும் தேர்தலில் இதற்கொரு பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/78355.html#ixzz2yL9X726t

தமிழ் ஓவியா said...


திமுக ஆட்சியை ஒரு கணம் நினைத்துப்பாரீர்! திமுக ஆட்சியில் திருப்திகர நிதிநிலைமை தி இந்து ஏடு பாராட்டு


தி இந்து ஆங்கில நாளேடு 25.10.2010 அன்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்:

பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வரும் நிலையில்; அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் நிதியாண்டு நடுவில் அதிகரிப்பு ஆகியவை களுக்கு மத்தியில்; மாநிலத்தின் நிதி நிலைமை நன்றாக உள்ளது என்று அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கு வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கான இலக்கு களை அடைவதற்கு ஏதுவாக நிதிநிலை இருக் கிறது என்று வலியுறுத்துகிறார், நிதித்துறை முதன் மைச் செயலாளர் கே.சண்முகம்.

வருவாய் பற்றாக் குறைக்கும் மொத்த வருவாய் வரவுகளுக்கும் இடையிலான விகிதம் 5.38 சதவிகிதமாகவும்; நிதி பற்றாக்குறைக்கும் ஒட்டுமொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகி தம் 3.72 சதவிகிதமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.

சமீபத்திய நெறிமுறைகளின்படி, அடுத்த நிதியாண்டில்தான் (2011-2012) வருவாய் பற்றாக் குறை குறைக்கப்பட்டு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நிதிப்பற்றாக்குறை மூன்று சதவிகித மாகக் குறைக்கப்பட வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி, நமது வருவாய் வரவு ஏறத்தாழ கூடுதலாக ரூ. 3000 கோடி அளவுக்கு உயரும். மத்திய அரசிலி ருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வரி வருவாய் பங்கீடு, முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்ட ணங்கள் மூலம் வருவாய் பெருமளவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் இது ஏற்படும் என்று முதன்மைச் செயலாளர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் மீது மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வருவாய் உயர்வின் காரணமாக கூடுதல் வரி வருவாய் பங் கீடு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் விளக்கம் அளிக்கிறார்.

முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டண விதிப்பு மூலம் வருவாயானது, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான அள வைக் காட்டிலும் இந்த ஆண்டு அதே கால கட்டத்தில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் மின்சார மானியம், முதியோர் ஓய்வூதியத்தொகை, சத்துணவுத் திட்டம் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்பட சில நல்வாழ்வுத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு அரசுக்கு ரூ. 12,200 கோடி செலவாகும்.

இந்தப் பட்டியலில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு திருத்தியமைக்கப்பட்ட நிதி ஒதுக் கீடான ரூ. 2,250 கோடி மற்றும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்துக்கு மாநிலத்தின் பங்கான ரூ. 425 கோடி ஆகியவையும் அடங்கும்.

செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அக விலைப்படி உயர்வினால், அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 2190 கோடி செலவாகும்.

வருவாய் வரவுகளில் திருத்தப்பட்ட உயர்வு, கூடுதல் வருவாய் செலவினங்களான ரூ. 3000 கோடியில் ஈடு கட்டப்பட்டுவிடும்என்று சண் முகம் குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வருவாய் வரவுகளில், விற்பனை வரித்தொகை, மாநில சுங்க வரி, முத்திரைத்தாள், பதிவுக்கட்ட ணம் ஆகியவை மூலம் ஆண்டு முழுவதற் குமான ரூ. 41,438 கோடியில், சுமார் 17,345 கோடி வசூலாகியுள்ளது என்று அவர் தெரிவிக்கிறார் .

இந்த ஆண்டு இதுவரை, மத்திய வரிகளில் பங்கீடாக மத்திய அரசிடமிருந்து ரூ.3715 கோடியும், உதவி மானியமாக ரூ. 2,568 கோடியும் மாநிலத்தால் பெறப்பட்டுள்ளது.

அந்தத் திமுக ஆட்சி எங்கே! இன்றைய அஇஅதிமுக ஆட்சி எங்கே?

Read more: http://viduthalai.in/page-8/78372.html#ixzz2yLBGW2FB