Search This Blog

25.4.14

பார்ப்பான் மிரட்டலுக்கு நடுங்காதீர்!-பெரியார்


என் மீது கேஸ் (வழக்கு) உள்ளது; பெரிய கேஸ் 5, 6-வருடம் வரை சிறையிலிடும்படி தண்டிக்கலாம். 2-வருடமாவது தண்டிப்பார்கள். அதுவும் தண்டிக்கவில்லை விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்; 3000- பேருக்கு மேல் உள்ளே வைத்துவிட்டு நான் வெளியே இருக்க மனம் வருமா? மற்றவர்கள் என்னைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை; எனக்கே திருப்தி இருக்குமா? 3000-உடன் 3001-என்று இருக்க வேண்டும். எங்காவது இந்த அக்கிரமம் உண்டா? சாதி ஒழிய வேண்டும் என்பதற்காக எவ்வளவு கொடுமை!

திருட்டுப்பயல்கள் 4-பேர் சேர்ந்து நடத்துகிற அரசாங்கமாக இருந்தால் கூட இந்தக் கொடுமை நடக்குமா?

நீங்கள் கவனிக்க வேண்டியது இதுதான்; சிறை உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் எப்படி அங்குப் போவது என்று நினைக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? அவர்கள் எல்லோரும் அவர்களுக்காகவேதான் சிறை சென்றார்களா? அவர்கள்தான் மனிதர்களா? நாமும் நமது பங்குக்குச் செல்ல வேண்டும் என்கிற உணர்ச்சி ஏற்பட்டு மளமளவென்று காரியம் ஆக வேண்டும். அதுதான் உண்மையான சமுதாயக் கொந்தளிப்பு ஆகும். அதற்குத் தான் உண்மையான சமுதாயப் புரட்சி என்று பெயர்.

வருத்தத்தோடு சொல்கிறேன். அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள்! ஒரு காற்றில் அடித்துக் கொண்டு போய்விடும். இக்கிளர்ச்சி அடிக்க அடிக்க பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக்கூடியதல்ல! அத்தனை பேருக்கும் சம்பந்தமான காரியம்! மந்திரிகளுக்கே சாதி ஒழியவேண்டாம் என்ற எண்ணம் இருக்காது. எனக்குத் தெரியும் அடக்குமுறையை நம்பாதீர்கள்! அடக்கு முறையை நம்பிப் பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு விடாதீர்கள்! இந்த உணர்ச்சியை ஒருக்காலும் அடக்குமுறை மூலமே நசுக்கிவிட முடியாது. இன்று மந்திரிகள் என்னைப் பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஏன்? அவர்கள் இருக்கும் இடம் அப்படிப்பட்டது. 100-க்கு 97-பேர் ஆக உள்ள ஒரு இனத்திற்கு அவர்கள் மனம் புண்படும் காரியம் நடந்தால் நாட்டை இராணுவம்தானே ஆளவேண்டும்?

வடநாட்டான் விடாதே பிடி, அடை என்கிறான்! யாரைச் சொல்கிறான் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? உன்னைச் சொன்னால் என்ன? என்னைச் சொன்னால் என்ன?

அரசாங்க மரியாதை போய்விடும் என்று கருதினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதையாவது சொல்ல வேண்டுமே! நான் இப்போது விட்டுவிடுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன? சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்றுதானே பார்ப்பான் என்னைச் சொல்லுவான்? அரசாங்கத்தின் கடமை, புத்திசாலித்தனம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டம் கொண்டு வந்து அடக்கிவிடலாம் என்பதே போதுமா? ஒரு சட்டம் பண்ணினால் போதாதே? அடுத்த ஒவ்வொரு காரியத்திற்கும் சட்டம் செய்ய வேண்டுமே?

நேரு படத்தை எரித்தால், சிலையை உடைத்தால் இப்போதுள்ள சட்டம் ஒன்றும் செய்ய முடியாதே! காந்தியாவது செத்துப் போனவர். அவர் பெயரை இழுப்பதால் நாமும் அவரை இழுக்கவேண்டியுள்ளது. உயிரோடு இருக்கிற நேரு படத்தைக் கொளுத்தினால் இனிமேல் அதற்கும் சட்டம் கொண்டு வருவார்களா? எதற்கு இவற்றையெல்லாம் செய்கிறோம்? பதவிக்குவரவா? அல்லது அரசாங்கத்தைக் கைப்பற்றவா? அரசினரைக் கவிழ்க்கவா?

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000-போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்திருந்த சில இடங்களுக்குப் போலீசே (காவல் துறையே) போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பகுதிப் பேரைக்கூடப் பிடிக்கவில்லை. அதற்கே அங்கிருந்து லாரியில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருச்சிராப்பள்ளி வந்து திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால்குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்ப திருச்சிக்குக் கொண்டுவந்து இப்படிப் பந்து விளையாடியிருக்கிறார்கள்!

3000-பேருக்கு மேல் போயிருக்கிறார்கள் என்று பெருமைப் படவுமில்லை. 1000- பேர் போனாலும் வெட்கப்பட்டிருக்கவும் மாட்டேன்; ஏன் ஓட்டுக்கு, பதவிக்கு, விளம்பரத்திற்காகவா இந்தக் காரியத்தைச் செய்கிறோம்.

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் (காவல்துறையினர்) இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது. இன்னுமா பரீட்சை பார்க்க வேண்டும்?

சிலபேர் "இந்தக் காரியத்திற்கு இணங்கிவிட்டால் இன்னொரு காரியம் ஆரம்பிப்பார்" என்று யோசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரியம் ஆரம்பிப்பதாயின் முக்கியம் என்று கருதி ஆரம்பிப்போமே தவிர விளையாட்டுக்கா செய்வோம்?

அடுத்த காரியம் திராவிட நாடு இல்லையென்றாலும் தமிழ்நாடு தமிழருக்கு வரவேண்டுமா வேண்டாமா? அடுத்த காரியம் அதுதான்!

இந்தச் சட்டம் என்றால் என்ன? வடநாட்டான் தூண்டுதல் தானே? என் மீது வழக்கு எப்படி வந்தது? 2-நாள் முந்தி 'ஹோம் மினிஸ்டர்' (உள்துறை அமைச்சர்) சி.அய்.டி ரிப்போர்ட்டைப் பார்த்தோம் பத்திரிகைக்காரர்கள் சொல்வதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்கிறது. (பத்திரிகைக்காரர்களைப் பார்த்து) "உங்கள் ரிப்போர்ட்டைக் கொண்டு வாருங்கள்! ஒத்திட்டுப்பார்க்கலாம்; அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை" என்று சொல்லி விட்டாரே!

இந்த மாதிரியெல்லாம் சொல்லி விட்டு திடீரென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஆச்சாரியார் சொல்கிற மாதிரி வடநாட்டான் உத்தரவு வந்தது நடவடிக்கை எடுக்கிறார்கள் அவ்வளவுதான்.

இன்று டெல்லியில் நேரு பேசியிருக்கிறார்; பத்திரிகையில் பார்த்தால் தெரியும்! "இவையெல்லாம் காட்டுமிராண்டித்தனம்; சிலபேர் அவர்களுக்கு உள் ஆளாக இருக்கிறார்கள் (அதாவது இந்த மந்திரிகள் உள் ஆளாக இருக்கிறார்களாம்) நானே நடவடிக்கை எடுக்க வேண்டுமா" என்று பேசியிருக்கிறார்.

இவர்களைக் தவறாக நினைத்துப் பயனில்லை. இந்த நாட்டை வட நாட்டான் ஆள்கிறான்; அவன் உத்தரவு போடுகிறான்; அதன்படி நடக்கிறார்கள்!

வடநாட்டுப் பத்திரிகையெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலறுகின்றன. படம் போடுகிறார்கள் இது 'சங்கர்ஸ் வீக்லி' என்ற பத்திரிகை. இதில் படம் போட்டிருக்கிறான்; நான் பார்ப்பானை வெட்ட கையில் கோடாரி வைத்துக் கொண்டு ஓங்கிக் கொண்டு நிற்கிறேன். கருப்புச் சட்டைக்காரர்கள் பார்ப்பானைப் பிடித்து இழுக்கிறார்கள் பார்ப்பான்கள் மூலைக்கு மூலை ஓடுகிறான்கள். காமராசரை போலீஸ்காரன் போல போட்டிருக்கிறான். அவரைப் பார்த்து ஒரு பார்ப்பான் அய்யோ என்று கத்துகிறான். அவர் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு இதெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டது என்கிறாராம். இப்படிப் படம் போடுகிறான்.

இன்னொரு படம்: நான் நிற்கிறேன். வட நாட்டு மந்திரி - போலீஸ் மந்திரி பந்த் என் மீது நடவடிக்கை எடுக்க காமராசரைப் பிடித்தத் தள்ளுகிறார். அவர் அப்போதும் என்னிடம் நெருங்கப் பயப்படுகிறார். இப்படி ஒரு படம் போட்டிருக்கிறான். மந்திரிகள் நடுங்குகிறார்கள். மாஜிஸ்திரேட்டும் இந்த மந்திரி தயவை எதிர் பார்ப்பவர்கள். ஜில்லாதாஜிஸ்ரேட் மாத்திரமல்ல, அய்க்கோர்ட் ஜட்ஜ் கூட (உயர் நீதிமன்ற நீதிபதி) இப்போது மந்திரிகள் தயவை எதிர்பார்த்து ஆகவேண்டும்.

என் வழக்கில் முதலில் அவர்களேதான் சொந்த மூச்சலிகாவில் நீங்கள் போகலாம் என்றார்கள். பிறகு திடீரென்று 25-ஆம் தேதி மூச்சலிக்காவை ரத்து செய்ய வேண்டும். பழையபடி ஊர் ஊராகப் போய் குத்து வெட்டு என்று பேசுகிறான் என்று விண்ணப்பம் போடுகிறான். நினைத்தால் கஷ்டமாகத்தான் உள்ளது. எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறான்? 20-ஆம் தேதி எங்களிடம் கையொப்பம் வாங்கி இருக்கிறான்; 22-ஆம் தேதி மதுரையில் எனக்குச் சம்மன் சார்வு செய்தான்; 22-ஆம் தேதி மாலை வரையில் எங்கும் பேசவில்லை; கூட்டமுமில்லை நான் வாய் திறக்கவேயில்லை. பழையபடி 'குத்து வெட்டு என்று பேசுகிறான்' என்று சொல்கிறான். எப்போது பேசினார் என்றால் 17, 18, 19- ஆம் தேதி பேசியிருக்கிறார் என்கிறான். என்னிடம் கையொப்பம் வாங்கி கொண்டு 20-ஆம் தேதி விட்டிருக்கிறான். அதிலும் பேசக்கூடாது என்ற நிபந்தனை ஒன்றுமில்லை. இருந்தும் பேசாதே போதே 22-ஆம் தேதி சம்மன் வருகிறது 'ஏமாற்றி விட்டார்', 'நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்', 'சாட்சிகளைக் கலைப்பார்', 'சாட்சிகளுக்குத் துன்பம் கொடுப்பார் அதாவது காயப்படுத்துவார்' இப்படி ஏதேதோ கேவலமாக எழுதியிருக்கிறான்.

ஜட்ஜே (நீதிபதி) கேட்டாராம். என் காதில் விழவில்லை. சாட்சியைக் கலைப்பார் என்கிறாயே எல்லா சாட்சியும் போலீஸ்காரர்கள்தானே? அதுவும் ரிக்கார்டு சாட்சிதானே; அதை எப்படி கலைப்பார்? என்று கேட்டதற்கு அந்த பப்ளிக் பிராசிக்யூட்டர் (அவர் பார்ப்பனர்) போலீஸ்காரர்கள் எல்லாரும் அந்த உணர்ச்சி உள்ளவர்கள்; அதாவது என் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று பதில் சொல்கிறார். என்ன அக்கிரமம்? நீதி கெடுத்துவிடுவார் என்கிறான்; நான்தான் எதிர் வியாஜ்ஜிமே (எதிர் வழக்கு) ஆடப்போவதில்லை என்கிறபோது நீதி எப்படிக் கெட்டுப்போகும்? அந்த நீதிபதிக்கு, எங்குப் பேசினார்? எந்த தேதியில் பேசினார்? ஆதாரமென்ன? என்று கேட்டு 20-ஆம் தேதிக்குப் பிறகு எங்கும் பேசவில்லையே! ஆகையால் இந்த மனுவைக் கேன்சல் (தள்ளுபடி) செய்கிறேன் என்று சொல்லத் தைரியம் வரவில்லையே? என்னைக் கேட்கிறார் "இனிமேல்" பேசவில்லை என்று எழுதிக்கொடு" என்கிறார்.

என்னய்யா, நான்தான் பேசவே இல்லை என்கிறேன் இனி மேல் பேசவில்லை என்று எழுதிக்கொடு என்கிறீர்களே என்றால் "உனக்கு நான் சொல்வது புரியவில்லை. நீ சொல்வதும் நான் சொல்வதும் ஒன்றுதான் எதையாவது எழுதிக் கொடு; இப்ப, நீ வாயால் சொல்கிறாயே அதையே எழுதிக் கொடு" என்கிறார். என்னய்யா இது உங்கள் எதிரேயே சொல்கிறான் போலீஸ்காரன் எல்லாம் என் கட்சி என்று; அய்க்கோர்ட் (உயர்நீதிமன்றம்) போனாலும் நீதிபதிகூட என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான். பூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன் என்பான்.

இப்படிப் பித்தலாட்டம் செய்கிறவர்கள் நான் ஏதாவது எழுதிக் கொடுத்தால் "எழுதிக் கொடுத்துவிட்டான்! எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று பத்திரிக்கைக்காரன் எல்லாம் பிரச்சாரம் செய்வானே? நான் பொதுவாழ்வில் இருப்பவன் அது பற்றியும் கவலைப்பட வேண்டும். நான் வேண்டுமானால் உடனடியாக 'வெட்டு' 'குத்து' என்று சொல்லவில்லை என்று எழுதித் தருகிறேன் என்றேன். 'உடனடியாக' என்று போட்டிருக்கிறாயே அந்த வார்த்தையை எடுத்துவிடு என்றார்.

"நான் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அது முடியாவிட்டால் வெட்டு, குத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் வந்தால் சொல்லுவேன் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். வேண்டுமானால் உங்கள் விசாரணை முடியும் வரையில் அதுபோலச் சொல்லவில்லை. அதற்குமேல் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் மூட்டை முடிச்சோடு வந்துவிட்டேன்; என்னைத் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்; நிம்மதியாக இருப்பேன்", என்றேன். பின்னர் ஏதேதோ செய்து எழுதி வாங்கியதாகப் பேர் செய்து கொண்டு விட்டார்கள்.

நான் 23-ஆம் தேதி இருக்கக்கூடாது என்பது எண்ணம்; அதற்கு ஏதேதோ காரணம் சொல்லி (சிறையின்) உள்ளே பிடித்துப் போடு என்றான் திரும்ப சீரங்கம் கூட்டத்திற்குப் புறப்படும் நேரம் வந்ததும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் பார்ப்பான் மிரட்டினால் எல்லாம் நடுங்குகின்றன. ஒரு மந்திரி நினைக்க வேண்டாமா?

ஆகவே வடநாட்டு தென்னாட்டை அடிமை மாதிரி நடத்துகிறது; எதுவும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை; எனவே தென்னாட்டைத் தென்னாடே ஆளவேண்டும். அடுத்து இந்தக் காரியம் தான் செய்யப்போகிறோம்.

இந்திய ராஜ்ஜிய - இந்திய யூனியன் ராஜ்யப் படத்தைக் கொளுத்தப் போகிறேன். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவர தடுப்புக்காவல் சட்டத்தின்படி பிடித்துப்போடுவேன் என்கிறான். அதாவது முத்துராமலிங்கத் தேவரைப் போட்ட மாதிரி எனது நாற்பதாண்டு பொது வாழ்க்கையில் யாருக்கும் ஒரு சிறு கேடும் இல்லாமல் அமைதியாக நடத்திக் கொண்டு வருகிற எனக்கும் அதுவா? நடக்கட்டுமே!

ஓர் அதிசயமான சம்பவம்! நான் சிறையிலிந்து வந்ததும் சொன்னார்கள்: சிறையிலிருந்து வரும் போதே போலீஸ்காரர்களைக் கேட்டேன். காரில் வரும்போது சொன்னார்கள் - ஏதோ நாலுபேர் குடுமி பூணூல் வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்; செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றார்கள். இங்கு வந்ததும் சிலர் சொன்னார்கள். சேர்ந்து பார்ப்பனர் தாங்களே இப்படிச் செய்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஒரு பார்ப்பன மிராசுதாரர் தூண்டிவிட்டிருக்கிறார். தன் ஆட்களை வைத்தே இதுபோல ஒரு காரியம் செய்து இருக்கிறார்.

நம் தோழர்கள் மீது பழி சுமத்த முயற்சி நடக்கிறது; (காவல்துறையினர்) போலீஸ்காரர்கள் இதற்குக் குப்பைக்கூளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இது போலச் செய்து கொள்கிற நிலை வந்துவிட்டது என்றால் மகிழ்ச்சிதான்.

இன்றும் சொல்கிறேன். கழகக்காரர்கள் அதுபோல நடந்திருப்பார்களானால், வெட்கப்படாமல் சொல்கிறேன், அது தவறு. அவர்கள் கழக்கக்காரர்கள் அல்ல; கழகக்காரர்கள் அதுபோல நடந்திருக்க மாட்டார்கள், பூணூல் அறுப்பதும் குடுமி வெட்டுவதும் என் திட்டத்தில் இல்லாமலில்லை; ஆனால் அதை இப்போது செய்தால் அது தவறுதான்.

உயர்ந்த சாதிக்காரன் என்பதற்காக அதைக் காட்டிக் கொள்ளத்தானே உச்சிக்குடுமி, பூணூல். அதைப் பார்க்கும்போது எங்கள் இரத்தம் தொதிக்குமா இல்லையா?

ஆகவே ஓட்டல் போர்டுகளில் (உணவகப் பெயர்ப் பலகைகளில்) பிராமணாள் என்பதை அழிக்க வாய்தா கொடுத்ததுபோல் இதற்கும் வாய்தா கொடுப்பேன். ஆனால் இப்போது நடந்திருப்பது கழகத் தோழர்களால் என்று சொல்வது தப்பு உங்களுக்குத் தெரியாது. சென்னையில் பார்ப்பான் முகத்தில் தார் ஊற்றியதாகப் புகார் வந்தது. அவனே ஊற்றிக் கொண்டானா? யார் ஊற்றினார்கள் என்பது தெரியாது. போலீஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். "எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையாவது ஒருவரை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்கள். எச்சரிக்கை செய்து விட்டுவிடச் சொல்கிறோம். இல்லாவிட்டால் எங்களுக்குக் கஷ்டமாகும் என்றார்கள்" நானும் ஏமாந்துதான் போய்விட்டேன். தோழர்களிடம் சொல்லி ஒருவரை ஒத்துக் கொள்ளுமாறு சொல்லச் செய்தேன். ஒரு குற்றமும் அறியாத ஒருவர் ஒத்துக் கொண்டார். அபராதம் போட்டார்கள். அதைக்கூட போலீஸ்காரர்கள் தான் தந்தார்கள். ஆனால் அது என்ன ஆயிற்று என்றால் அதை வைத்துத்தான் தடையுத்தரவு போட்டார்கள்; போட முடிந்தது.

------------------------------ 28.11.1957-அன்று திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஈ.வெ.ரா பெரியார் சொற்பொழிவு. "விடுதலை", 30.11.1957

31 comments:

தமிழ் ஓவியா said...

மோடியிடம் தினமணியின் அவசரப் பேட்டி - ஏன்?

தினமணி, பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். ஏடு என்று நாம் சுட்டிக்காட்டிய போதெல்லாம் - அதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காதவர்கள்கூட, இந்தத் தேர்தலில் அது நடந்து கொண்டு வரும் போக்கினை நிதானமாகச் சிந்தித்தால் - திராவிடர் கழகத்தின் கணிப்பு விடுதலை யின் - மதிப்பீடு மிகவும் துல்லியமானதே என்று புரிந்து கொள்வார்கள்.

இதற்காக வெகு தூரத்திற்குச் சென்று ஆராய்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டாம்.

இன்று தமிழ்நாடெங்கும் - புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வாக்குப் பதிவு; இந்தக் கால கட்டத்தில் நேற்றைய தினமணி (23.4.2014) அவசர அவசரமாக தினமணியின் ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான திருவாளர் நரேந்திரமோடியைப் பேட்டி கண்டு, தினமணியின் முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடு கிறார் என்றால் இதன் அவசியம் என்ன? இதன் பின்னணி என்ன? என்பது - தமிழ்நாட்டில் கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுவன் கூடப் புரிந்து கொள்வானே!

பேட்டிக்கு முகவுரையாக தினமணி ஆசிரியர் அய்யர்வாள், மோடிபற்றிக் கொடுக்கும் முன்னுரை அவரின் முகவரியைப் பச்சையாகக் கட்டம் கட்டி வெளிப்படுத்தக் கூடியதாகும்.

ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தும், இவரது சுறுசுறுப்பும், மன வலிமையும் நிகரற்றது. சொலல் வல்லன், சோர்வு இலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்கிற வள்ளுவப் பேராசானின் குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம்.

இப் போது குஜராத் முதல்வர், தேர்தல் முடிவானால் அனேகமாக இந்தியப் பிரதமர்

என்று மோடிக்கு தினமணி ஆசிரியர் இப்பொழுதே பிரதமர் என்கிற மணிமுடியைச் சூட்டி விட்டார். தமது ஆசையைக் குதிரையாக்கி சவாரியும் செய்து விட்டார்.

மோடி என்றால் இதுதானா? மோடி என்றால் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் என்ற விலாசம் கிடையாதா?

மோடி என்றால் சிறுபான்மை மக்களுக்குப் பயங்கரமான எதிரி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லீம்கூட வேட்பாளராக பி.ஜே.பி. சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராதவர் என்ற அறிமுகம் அவரைப் பற்றிக் கிடையவே கிடையாதா?

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முஸ் லிம்கள், ஒருவர் சீக்கியர்; இந்து ஒருவரும் கிடையாது என்ற நிலைப்பாடு, மோடி எத்தகைய பாசிஸ்டு என்பதை உலகுக்கு அறிவிக்கவில்லையா?

வெளிநாடுகளில்கூட கல்வியாளர்கள், பேராசிரி யர்கள் பல்துறைகளைச் சேர்ந்த பெரு மக்கள், இந்தியாவில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு மரண பூமியாகும் - அண்டைய நாடுகள்கூடப் பதற்றம் அடையும் என்று கையொப்பமிட்டு அறிக்கை களே கொடுத்து இருக்கிறார்களே - அவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் அற்பம்தானா?

அமெரிக்கா போன்ற நாடுகள் இதுவரை மோடி தங்கள் நாட்டுக்கு வந்திட விசா கொடுக்க மறுத்து வருவது - ஏன்? இதுபற்றியெல்லாம் வைத்திய நாதய்யர் களுக்குத் தெரியவே தெரியாதா?

நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிர்மாணிக்க 11,00 ஏக்கர் நிலத்தை சதுர அடி ரூ.900-க்கு அடி மாட்டு விலைக்கு விற்றதால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?

சதுர அடி ரூ.10,000 சந்தை மதிப்பு!

அதே டாட்டாவுக்கு 0.1 சதவீத வட்டியில் ரூ.9750 கோடியை 20 வருடத்தில் திருப்பி செலுத்த வாய்ப்பு அளித்தவரும் இந்த மோடிதானே. இவர்கள் கண்ணோட்டத்தில் டாட்டா பரம ஏழையோ!

மோடியைப் பிரதமர் ஆக்குவதில் 74 சதவீத கார்ப்பரேட் முதலாளிகள் - ஆர்வத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டு இருக்கிறார்களே - உயர் ஜாதி ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றனவே - இந்தப் பின்னணிகளைக் கொண்ட பிற்போக்குவாதிகள் என்ற அடையாளம் வெகு மக்கள் மத்தியில் அறவே அழிக்கப்பட வேண்டும் என்ற தந்திரம் தானே இந்தத் தினமணியின் அவசரப் பேட்டிக்கான அவசியம்!

மோடியை நோக்கி தினமணி ஆசிரியர் வைக்கும் கேள்விக்குள்ளேயே விடையிருக்குமாறு தேர்ந்தெடுத் தல்லவா மோடி முன் வைக்கிறார்.

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் - அவரைத்தானே இந்த அக்கிரகாரவாசிகள் முன் வைக்கின்றனர் என்ற வினா எழலாம்.

ஒரு வகையிலே அவர்களின் கெட்டிக்காரத்தனம் இது; பச்சையாகப் பார்ப்பனர்களை முன்னிறுத்தும் போது, வெகு மக்கள் அந்த வன்மத்தை, நச்சுக் கோப்பையையும் பளிச்சென்று புரிந்து கொள்வார்கள்.

தந்தை பெரியார் மொழியில் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் நிஜப் புலிகளை விட, வேடம் தரித்த புலிகள் அதிகம் குதிக்கும். அதனால்தான் இந்த வேடப் புலியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதுவும் ஆர். எஸ்.எஸில் பயிற்சிக் கொடுத்துப் புடம் போடப்பட்ட வரைப் பயன்படுத்தி, தங்களின் மனுதர்ம ஹிந்துத்துவா சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோல நினைக்கிறார்கள்.

இந்த ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் தான் சோ ராமசாமிகளின், தினமணி வைத் தியநாதய்யர் அண்ட் சோக்களின் விஷம ஊற்று எங்கே, எப்படி மய்யம் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/79163.html#ixzz2zqtksBtE

தமிழ் ஓவியா said...


அவ(ன்)ள்


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்புப் பெண். தென்னாப்பிரிக்காவிலும் குக்கிராமம். படிப்பும் சொல்லும்படியாக ஏதும் இல்லை. பெண்ணின் பெயர் காஸ்டர் செமன்யா.

சிறிய வயதிலிருந்தே காற்றைக் கிழித்து ஓடுவது - அந்தச் சிறுமியின் பொழுதுபோக்கு! ஆனால் சர்வதேச ஓட்டப் பந்தய மைதானணீத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லைதான்.

ஆனாலும், அந்தப் பெண் 18 வயதில் பெர்லின் மைதானத்தில் நின்றார். துப்பாக்கிச் சத்தம் கேட் டது - அவ்வளவுதான் கால் கள் தரையில் பாவவில்லை - காற்றைக் கிழித்தார் 800 மீட்டர் தூரத்தை 1.55:45 நேரத்தில் கடந்து எல்லோர் புருவங்களையும் உயர்த் தக் காரணமாக இருந்தார்.

2009இல் அது உலக சாதனை! 1500 மீட்டரிலும் அதற்கு முன்னிருந்த சாதனையைவிட 25 வினாடிகள் குறைவில் முறியடித்தார்.

உடனே ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன; அவர்கள் எல்லாம் ஆண்கள்தான். ஒரு பெண்ணா - இவ்வளவு தூரத்தை இவ் வளவுக் குறுகிய நேரத்தில் கடந்தார்? ஆச்சரியமாக இருக்கிறதே - நம்ப முடி யாது. ஒருக்கால் இவள் ஓர் ஆணாக இருப்பாளோ? அல்லது போதைமாத்திரை சாப்பிட்டு இருப்பாளோ? சந்தேகக் கரையான் அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. காற்றைக் கிழித்து ஓடி முதல் பரிசுக் கோப்பையைப் பெற்ற பெண் அந்த மகிழ்ச்சியைக் கூட அனுப விக்கவில்லை.

அதனால் என்ன? எந்த பரிசோதனைக்கும் தயார்! மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்?

ஆனாலும் இந்தச் சோதனைகள் எல்லாம் முடிக்கப்பட்டு, அவள் பெண்தான்; எந்தப் போதை மருந்தையும் உட் கொள்ளவில்லை என்று அறிவிப்பதற்கு ஓர் ஆண்டு தேவைப்பட்டது என்பதுதான் கொடுமை யாகும். அதன் விளைவு ஓர்ஆண்டு ஓட்டப் பயிற் சிக்குக்கூட ஓய்வு கொடுத் ததுதான் மிச்சம். குற்றமற்றவர் என்று நெருப்பில் குளித்து வெளியில் வந்ததும், மீண்டும் தடகளப் போட்டிக்குள் குதித்தார். அதே பெர்லின் தான் அந்தப் போட்டியில் முதலிடம் பெற்றார் என்றாலும் முன் சாதனையை விட இரு வினாடிகள் அதிகமாகப் போய் விட்டது.

இந்தக் கொடுமையை என்ன சொல்வது! இதற்கு யார் தான் பொறுப்பு!

தமிழ்நாட்டில்கூட புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியைச் சேர்ந்த சாந்தி 2006 - தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற நிலையில் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டார்.

பெண்ணென்றாலே இப்படி ஒரு நிலைதான். நம் நாட்டில். வானதி சீனி வாசனும், டாக்டர் தமிழி சையும் வறட்டுத் தவளைகளாக தொலைக் காட்சிப் பெட்டிகளில் கட்சிக்காகக் கத்தினாலும் காரியம் என்று வரும் பொழுது - தேர்தல் களத்தில் ஒதுக்கத் தானேபடுகிறார்கள்? அதுவும் பெண்ணென்றால் பேயென்று பேசும் இந்து மதக் கட்சியில் வேறு எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/79178.html#ixzz2zqvsun3B

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/79162.html#ixzz2zqxIx07f

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமத்தில் நூல்களின் வாசிப்பை பளிச்சென உணர்த்திய பொம்மலாட்டம்


சென்னை, ஏப். 24- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா இணைந்து நடத்தும் சென்னை புத்தகச்சங்கமத்தின் ஆறாம் நாள் நிகழ்வு நேற்று (23.4.2014) இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சென்னை காவல்துறையின் பொருளாதார குற்றவியல் பிரிவு ஆணையர் மல்லிகா புத்தகச்சங்கமத்தில் உள்ள அனைத்து பதிப்பகத்தார் ஏற்பாடு செய்திருந்த அரங்கு களை பார்வையிட்ட பிறகு, அவர் புத்தக சங் கமம் பற்றி கூறியதாவது:- சென்னைப் புத்தகச் சங்கமம் குழந்தைகளுக்கான சிறப்பு சங்கமம் என்று தனி ஒரு பிரிவு உள்ளதுபோல் தெரிகிறது, குழந்தைகளுக்கான சிறப்பு அரங்குகள் விளையாட்டு பொருட்களுடன் கூடிய கல்வி பயிற்சி மற்றும் எளிமையாக பயில்வதற்கான குறுந்தகடு போன்றவை இம் முறை இங்கு அதிகம் இடம் பெற்றிருக்கிறது, இது மிகவும் தேவையான ஒன்றாகும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் குறிப்பாக 18 வயதிற்குட்பட்டவர்கள் கார்ட்டூன் சேனல் முதல் பொழுதுபோக்கு சேனல்களில் மூழ்கிபோய் விடுகின்றனர். 15 வயதிற்கு பிறகு மொபைல் விளையாட்டு, இண்டர்நெட் என தங்களது உலகத்தை சுறுக்கிக்கொள்கின்றனர். வலை தளங்களில் தேவையானது எது தேவையற்றது எது என பிரித்துப்பார்க்கும் பக்குமற்ற இந்த வயதில் குழந்தைகளின் கல்வி மீதான கவனம் பெரிதும் சிதறவாய்ப்புள்ளது. இது போன்ற 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நூல்கள் பெரிதும் உதவுபவை அவை படிக்கும் ஆற்றலை தூண் டும் விதத்திலும் சரி, பாடங்களை ஆர்வமுடன் படிக்கவும் ஒரு கருவியாக பயன்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் விடுமுறை காலத்தில் இந்தப்புத்தகச்சங்கம் மிகவும் பய னுள்ள ஒன்று இவற்றை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சென்னை புத்தகச்சங்கமத்தின் நேற்றைய சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 23 உலக புத்தக தினமாத லால் புத்தக வாசிப்பை மய்யமாக வைத்து சிறப்பான வகையில் கலை அறப்பேரவை மு.க. கலைவாணன் வழங்கிய புத்தகம் போற்றுதும் என்ற தலைப்பில் பொம்மலாட்டத்தை அரங் கேற்றினார். சென்ற ஆண்டு சுற்றுப்புறச் சூழலை மய்யமாக வைத்து செய்த பொம்மலாட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் தங்கள் திறமையை வெளிப் படுத்தி அனைத்து பார்வையாளர்களின் உள்ளத் தைக் கவர்ந்தனர்.

முக்கியமாக நூலகத்தின் பெருமையை கூறும் நாகரிகக் கோமாளி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் பாத்திரங்கள் என பொம்மலாட் டம் மூலம் நூலகத்தின் அருமை பெருமையை எடுத்துரைத்தார். இடையே நாகரிகம் என்ற பெயரில் தமிழை ஆங்கிலத்துடன் கலந்து பேசி கொச்சைப்படுத்தும் போக்கையும் தனது நகைச்சுவைகலந்த பொம்மலாட்டத்தின் மூலம் எடுத்துக்கூறி கண்டித்தார். பெண்களின் கைகளில் இருக்கும் கரண் டியை பிடிங்கிவிட்டு நூல்களைக்கொடுத்து படிக்கவையுங்கள் என்ற தந்தை பெரியார் சொன்ன வார்த்தையில் இருந்தே ஒரு முழுக் காட்சியை உருவாக்கி படிக்க வசதியில்லாமல் தற்கொலை செய்யப்போகும் ஒரு பெண்ணின் பாத்திரத்தில் பெரியாருடைய வார்த்தையின் மகத்துவத்தை உணர்த்தினார். நமது பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது தான் புத்தகங்களின் பணி, நல்ல புத்தகங்களை தேர்ந் தெடுத்து அவற்றை படித்து பயன்பெற்று நம் நாட்டிற்கும் நமது வீட்டிற்கும் நல்ல குடிமக னாய் வாழ்வது நல்லது, என்றும் நூலகத்தின் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களையும் தங் களது பொம்மலாட்டம் வாயிலாக நினைவிற்கு கொண்டுவந்தார். இறுதியாக அறியாமை மூடநம்பிக்கை, வருமை, இனபேதம், பெண்ணடிமை, போன்ற வற்றை ஒழிக்க கல்வி மாத்திரமே ஒரே வழி அதனால் தான் சமூகத்தின் வேர்களாக இருக்கும் பெண்கள் படிக்கவேண்டும் அப்படிப்படித்தால் தான் சமுதாயம் என்னும் மரம் செழித்துவளரும் என்று தன்னுடைய பொம்மலாட்டத்தின் இறுதியில் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். புத்தகம் போற்றுதும் புதுமையான பொம்ம லாட்ட நிகழ்ச்சியின் இறுதியில் கலை அறப் பேரவை மு கலைவாணன், மு.க பகலவன், இரா. கலைவாணன், வேடியப்பன், சரவணன், ரியாஸ் உள்ளிட்ட குழுவினர்களுக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கி பாராட்டிச் சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...

பொம்மலாட்டத்தைத் தொடர்ந்து வந்த சொற்பொழிவில் வரலாறு தரும் பாடங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராம கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். உலக இலக்கியத்தின் மாபெரும் படைப் பாளி சேக்ஸ்பியர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்தப்புத்தக தின விழாவில் சிறப்புரையாற்றுவதில் அகமகிழ் வடைகிறேன் என்று கூறி தனது உரையைத் துவங்கினார். சேக்ஷ்ஸ்பியரின் பெருமை குறித்து கூற வேண்டுமானால் உலகம் அழிந்தகாலத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் உயிரோடு இருக்கவேண் டும் என்றால் அங்கு யாரை குறிப்பிடுவீர்கள் என்று கேட்டதற்கு உலகப்புகழ்பெற்ற இலத் தீன் அமெரிக்க எழுத்தாளர் போர்வெல்ஸ் கூறிய தாவது:- நான் குறிப்பிட்டுக்கூறவிரும்பும் ஒருவர் சேக்ஸ்பியர் மாத்திரமே கூறியதன் மூலமாக கல்வியின் மதிப்பையும் கல்வியாளரின் மதிப்பை நாம் அறிந்துகொள்ளாலாம். தொடர்ந்து நூல்களுக்கும் சென்னை நகரத் திற்கு உள்ள உறவை ராஜமுத்தையாச் செட்டியா ரின் புத்தக சேகரிப்பின் ஆர்வத்தை எடுத்துக் காட்டாக வைத்து கூறினார். புத்தகச்சங்கம நடை பெறும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தின் வரலாறு குறித்து பல தகவல்களை எடுத்துக்கூறினார். இதுபோன்ற வரலாறு புத்தகங்களின் வாயிலாக பாதுகாப்படுகிறது. மேலும் மனிதர் கள் புத்தகங்களின் வாயிலாக வாழ்கின்றனர். சங்ககாலத்தில் வாழ்ந்த பல புலவர்கள் அவ்வையார், காக்கைப்பாடினியார், போன்ற தலைசிறந்த பெண்புலவர்கள் தொல்காப்பியர் வள்ளுவர் போன்றவர்கள் அவர்கள் எழுதிய நூல்களின் வாயிலாக இன்றும் உயிர்வாழ்கின்ற னர். தந்தைபெரியார் அண்ணல் அம்பேத்கர் போன்றோர் அவர்களின் நூல்களின் வாயிலாக இனி வரும் ஆயிரம் நூற்றாண்டுகளில் வாழ் வார்கள். நூல்களை போற்றுதல், நூல்களை பேணுதல், நூல்களை படித்தல் எல்லாத் தலை முறைக்கும் தேவையான ஒன்றாகும் என்று நூல்களின் பெருமையை விளக்கி தன்னுடைய சிறப்புரையை நிறைவு செய்தார். ஆறாம் நாள் நிகழ்வில் காவல் துறை (பொரு ளாதார குற்றவியல் ஆணையர்) மல்லிகா, மற் றும் திரைப்பட நடிகர் ஜெகன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தக ஆர்வலர்கள் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இறுதியாக, சென்னை புத்தகச்சங்கமத்தின் நேற்று சிறப்பு குலுக்கல் போட்டியில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் திறன்பேசியை பரிசாக தட்டிச் சென்றார்.

Read more: http://viduthalai.in/page-3/79194.html#ixzz2zqxgUz7P

தமிழ் ஓவியா said...


அய்யய்ய... சொல்ல வெட்கமாகுதே! செய்தி வெளியிட பணம்: 854 வழக்குகள் பதிவு


புதுடில்லி, ஏப்.24- மக் களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிட்டு 45 நாள்கள் ஆகியுள்ள நிலை யில், இதுவரை பணம் பெற்றுக் கொண்டு வேட் பாளர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது தொடர்பாக 854 வழக்கு களைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.

விளக்கம் கேட்டு அறிவிக்கை

இதில் 329 பேர் மீதான புகார்களில் உண்மை இருப் பது கண்டறியப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட வேட் பாளர்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப் பப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் பணத் தைப் பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிட்டதாக 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42 வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது.

ராஜஸ்தானில் 89 வழக் குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. 37 பேருக்கு அறி விக்கை அனுப்பப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேசத்தில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 64 பேருக்கு அறிவிக்கை அனுப்பப்பட் டுள்ளது. பஞ்சாபில் 73 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 41 பேருக்கு அறி விக்கை அனுப்பப்பட் டுள்ளது.

அதே போன்று குஜராத் தில் 61 வழக்குகள் (45 பேருக்கு அறிவிக்கை), மகாராஷ்டிரத்தில் 118 வழக்குகள் (23 பேருக்கு அறிவிக்கை), கருநாடகத் தில் 34 வழக்குகள் (15 பேருக்கு அறிவிக்கை), பிகாரில் 10 வழக்குகள் (ஒரு வருக்கு அறிவிக்கை), மத் தியப் பிரதேசத்தில் 9 வழக் குகள் (4 பேருக்கு அறி விக்கை), ஒடிசாவில் 15 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, அதில் 5 பேருக்கு அறிவிக்கை அனுப்பப்பட் டுள்ளது.

தமிழகத்தில் 41 வழக்கு கள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அதில் 8 பேருக்கு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவுரை

பணத்தை அளித்து தனக்கு ஆதரவாக செய்தி வெளியிடச் செய்யும் வேட் பாளர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று மாநில தலை மைத் தேர்தல் அலுவலர் களுக்கு தேர்தல் ஆணை யம் ஏற்கெனவே அறி வுறுத்தியுள்ளது.

இது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணை யத்தால் அமைக்கப்பட் டுள்ள குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த தொகை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-5/79159.html#ixzz2zqyFkUaH

தமிழ் ஓவியா said...


16 ஆவது மக்களவைத் தேர்தல்: கலைஞர் - மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் வாக்களித்த பின்னர் கலைஞர் பேட்டி


சென்னை, ஏப்.24- தமிழகத்தில் இன்று (24.4.2014) நடைபெறும் 16 ஆவது மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டா லின் மற் றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்.

கலைஞர்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர்: தேர்தல் வாக்குப் பதிவு நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாக்களித்திருக் கிறீர்கள். இந்தத் தேர்தல் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்குமா?

கலைஞர்: சாதகமாக இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே, சாதகமாக இருக்கு மென்று நம்புகிறேன்.

செய்தியாளர்: தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறுமா?

கலைஞர்: நிச்சயமாகப் பெறும்.

செய்தியாளர்: தோல்வி பயம் காரணமாக அ.தி. மு.க. எல்லா இடங்களிலும் பணப் பட்டுவாடா செய் திருக்கிறதே?

கலைஞர்: அ.தி.மு.க. பணத்தில் புரளுகின்ற கட்சி. எனவே, அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

செய்தியாளர்: தொடர்ந்து தி.மு. கழகத்தின் சார்பாக அ.தி.மு.க.வின்மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கூறி வருகிறீர்கள். அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

கலைஞர்: நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை.
அதேபோன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டா லின் இன்று காலை 10.10 மணியளவில் கோபால புரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள வாக்குச் சாவ டியில் வரிசையில் நின்று தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். மத்திய சென்னை வேட்பாளர் (தி.மு.க.) தயாநிதி மாறனும் வாக்களித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79176.html#ixzz2zqyb6rfE

தமிழ் ஓவியா said...


மோடி பிற்படுத்தப்பட்டவரா? இல்லை என்கிறார் அய்க்கிய ஜனதா தள தலைவர்


மேகசனா(குஜராத்), ஏப்.25- மோடி பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்று அய்க்கிய ஜனதா தளம் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் மோடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

குஜராத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அய்க்கிய ஜனதா தளம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. கடந்த 10 நாட்களாக மோடியின் திருமணம் குறித்த சர்ச்சை நிலவுகிறது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அவரது ஜாதி பற்றிய சர்ச்சை எழுந்து இருக்கிறது. பாஜக உயர் மட்ட ஜாதிகளுக்கு மட்டும் உரிய கட்சி அல்ல என்று உறுதிபடுத்தும்வகையில் மோடி தனது ஜாதி பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் 120கோடி மக்களை ஏமாற்றி வரு கிறார் என அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் கோவிந்த பாய் யாதவ் தெரிவித் துள்ளார்.கடந்த 1975ம்ஆண்டு பக்ஷி கமிஷன், மோடி சார்ந்துள்ள ஜாதிப்பிரிவை இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவில்லை. அந்த கமிஷனை பாபு பாய் ஜாய்பாய் படேல் அமைத் திருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79227.html#ixzz2zwf6i8BW

தமிழ் ஓவியா said...


நாடெங்கும்எதிர்ப்புஅலைகள்!


வாரணாசியிலே மோடியை எதிர்க்கின்றனர் பல்கலைக் கழக மாணவர்கள்!

வாரணாசி ஏப்.25- மோடிக்கு வாரணாசியி லேயே மாணவர்கள் மத் தியில் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது.

வாரணாசியிலேயே மாணவர்கள் மோடிக்கு எதிர்ப்பு!

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக இம் மாதம் 28, 29 ஆகிய தேதி களில் பிரச்சாரம் செய்ய டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அச் சங்கத்தின் தலைவர் அக்பர் செத்ரி கூறுகையில், தேர்தல் வர லாற்றில் முதல் முறையாக நாளேடு, இணையதளம் ஆகிய ஊடகங்களில் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி யின் பிரச்சாரம் இடம் பிடித் துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மாயத் தோற் றம் ஏற்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலையை எடுத் துக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, சங்கம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் மாற்று ஜனநாயகக் கொள் கைகளின் அடிப்படையில், அவருக்கு எதிராக மாண வர்கள் குழு வாராணாசியில் பிரச்சாரம் செய்யவுள்ளது என்றார்.

நாட்டில் எங்கும் மோடி அலை இல்லை: மன்மோகன் சிங் பேட்டி

பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவரது வீடு கவுகாத்தி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சருமட் டோரியா பகுதியில் அமைந் துள்ளது. இந்த தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது.

தேர்தலில் ஓட்டு போடு வதற்காக பிரதமர் மன் மோகன் சிங் தனது மனைவி குர்சரண் கவுருடன் நேற்று டில்லியில் இருந்து விமானப் படை சிறப்பு விமானத்தில் கவுகாத்தி சென்றார். பின் னர் அங்கிருந்து விமானப் படை ஹெலிகாப்டரில் கனப்பாரா பகுதிக்கு அவர் கள் சென்றனர். அவர்களை மாநில முதல் அமைச்சர் தருண் கோகாய் மற்றும் காங்கிரஸ் தலைவர் புவ னேஷ்வர் கலிட்டா ஆகி யோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து திஸ்பூருக்கு சென்ற அவர்கள், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர்.

ஓட்டளித்துவிட்டு வெளியே வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் கூறு கையில், 'நாட்டில் எந்த மோடி அலையும் வீசுவ தாக நான் நினைக்க வில்லை. இது வெறும் ஊடகங் களால் உருவாக் கப்பட்டது. நாட்டில் எங் கேயும், எந்த மோடி அலை யின் தாக்க மும் இல்லை என்றார்.

அவர் மேலும் கூறும் போது, 'காங்கிரசுக்கு இறங்குமுகமாக இருப்ப தாக நான் நினைக்க வில்லை. தேர்தல் முடிவு களுக்காக மே 16-ஆம் தேதி வரை பொறுத்திருங்கள். நாங்கள் பெரும்பாலான இடங் களில் வெற்றி பெறு வோம்' என்று தெரிவித்தார். மேலும், நாட்டின் ஜன நாயக நடை முறையில் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், தேர்தலில் அனைத்து வாக்காளர் களும் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி யுடன் தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். மோடிமீது வழக்கு பதிவு செய்க: காங்கிரஸ் குஜராத் முதல் அமைச் சர் நரேந்திரமோடி, வார ணாசி தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய் தார். அதையும், அதற்கு முந் தைய அவரது வாகன ஊர் வலத்தையும் தொலைக் காட்சியில் ஒளி பரப்பியது, அப்பட்ட மான தேர்தல் விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா கூறினார்.

அதாவது, நேற்று தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளிலும் தொலைக்காட்சிகளில் இந் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட் டது, விதிமீறல் ஆகும் என்று அவர் கூறினார். எனவே, மோடி மற்றும் இதில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத் துக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

நன்கு திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மனு தாக்கலுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79223.html#ixzz2zwfIZC2B

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்




தமிழ்நாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவான மய்யங்களில் தேர்தல் பார்வை யாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப் பதிவு மய்யங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.

- பீரவீன்குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் மோடி அலையோ, லேடி அலையோ இல்லை!
- தொல். திருமாவளவன்

தே.மு.தி.க. தலைவர் மின்னணு இயந்திரத்தில் வாக்கைப் பதிவு செய்தபோது, அவரின் மனைவி பிரேமலதா உதவி செய்துள்ளார். இது அப்பட்டமான விதி மீறல் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தியிருந்த போது, நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.51 கோடி என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதே மோடி நேற்று உ.பி. வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1.65 என்று காணப்படுகிறது. 15 நாள்களில் திடீரென்று மோடிக்கு ரூ.14.34 லட்சம் எகிறியது எப்படி? என்ற வினா இப்பொழுது எழுந்துள்ளது. மோடி என்றாலே சிக்கல் நாயகர் தானோ!

பணபட்டுவாடா நடந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. -ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர்

தருமபுரியில் பணபட்டுவாடா செய்தவர்களை விரட்டிக் கொண்டு ஒடிய இளைஞர் காவல் படைவீரர் வினோத் கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

வாக்காளர்களுக்கு அஇஅதிமுக முன் பணம் கொடுத்துள்ளதே - அதைப் பற்றிக் கேட்க மாட் டீர்களா? - செய்தியாளர்களிடம் விஜயகாந்த்

தமிழ்நாடு முழுவதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் 750 கைதிகள் அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


Read more: http://viduthalai.in/e-paper/79228.html#ixzz2zwfSoEK9

தமிழ் ஓவியா said...


சபரிமலை அலங்கோலம் பக்தர்கள் போர்க் கோலம்!

கொச்சி ஏப்.25- சபரி மலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளா கின்றனர்' என்று கேரள மாநில மனித உரிமை ஆணை யத்திடம் சபரிமலை அய்யப்ப சேவா சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் மனு, தேசிய குறை தீர்ப்பு அமைப்பான ஆம்புட்ஸ்மனின் விசா ரணைக்காகப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சியில் அந்த சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் எஸ். சுதர்சன் ரெட்டி, கருநாடக மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆண்டுதோறும் அய் யப்பனைத் தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த சுமார் 4 கோடி பக்தர்கள் சபரி மலைக்கு வருகின்றனர். அய்யப்பன் கோயிலை நிர் வகித்து வரும் திருவி தாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு சார்பில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை.

தேவஸ்தான தங்கும் விடுதியில் அரசியல் வாதிகள் போன்ற வி.அய். பி.களுக்கு 600 அறைகளை ஒதுக்கிவிட்டு பக்தர்களுக் காக 400 அறைகளை மட்டுமே அளிக்கின்றனர். முக்கிய பூஜைக் காலங் களில் தங்கும் விடுதிக் கட்டணமாக ரூ.25,000 வரை தேவஸ்தானம் வசூ லித்தது.

இதனால் வேறு வழி யின்றி மலைப்பகுதியில் ஆங்காங்கே சுகாதாரமற்ற இடத்தில் தரையில் படுத்து தூங்கவேண்டிய அவல நிலைக்கு பக்தர்கள் ஆளா கின்றனர். வயதான பெண் கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கென தனிக் கழிப்பிட வசதியும் இல்லை. போதிய குடிநீர் வசதி கிடையாது.

சில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் உணவக உரிமையாளர்களின் நெருக்கடிக்கு இணங்கி, சபரிமலையில் அமைக் கப்பட்டுவந்த அன்னதான மண்டபப் பணிகளை தேவஸ்தானம் நிறுத்தி விட்டது.

மகர விளக்கு, மண்டல காலப் பூஜை, படிப்பூஜை போன்ற விசேஷ காலங் களில் நாள்தோறும் ஒரு சாப்பாடு ரூ.22 என்ற கணக்கில், சுமார் 18,000 பக்தர்களுக்கு எங்கள் சங் கத்தின் சார்பில் வழங்கப் படுகிறது. தனியார் உணவு விடுதிகளில் சாப்பாடு விலை ரூ.80 ஆகும்.

ஆனால் உணவுக் கழிவு களை அகற்றுவதற்கும், பாதுகாப்புத் தருவதற் காகவும் தினசரி ரூ.10 ஆயிரத்தை சபரிமலை அன்னதான அறக்கட்ட ளைக்கு செலுத்தவேண் டும் என்று தேவஸ்தானம் நிர்பந்திக்கிறது.

சபரிமலையில் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவதற்கான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளும் செயல் படுத்தப்படாமல் உள்ளன. இது குறித்து கேரள மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அளித்தோம். அது, தேசிய குறைதீர்ப்பு அமைப்பான "ஆம்புட்ஸ் மனுக்கு' அனுப்பி வைக் கப்பட்டுள்ளது' என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/79224.html#ixzz2zwfaYDGh

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page-2/79230.html#ixzz2zwfw7wV2

தமிழ் ஓவியா said...


பணப் பட்டுவாடாவை தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது ஒப்புக் கொள்கிறார் தேர்தல் அதிகாரி


சென்னை, ஏப்.25- இந்த மக்களவைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தலில் இந்த முறை 1.3 கோடி வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துள்ளனர். மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் நல்ல பயன் கிடைத்ததாக மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் தெரிவித் தனர். இந்த உத்தரவால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

பணப் பட்டுவாடா

இந்த மக்களவைத் தேர்தலில், வாக்குக்கு பணம் அளிப்பதை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பணம் வழங்குவதை தடுப்பதற்காக 7 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கண்காணிப்புப் படைகள், மண்டல குழுக்கள் அமைக் கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தமிழகத்தில் வாகனச் சோத னைகள் நடத்தப்பட்டதன் மூலம், ரூ.25.56 கோடி ரொக்கமும், ரூ.27.74 கோடி மதிப்புள்ள ஜவுளிகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுமா: மக்களவைத் தேர் தலை ஒட்டி, தமிழகத்தில் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 20 நாட்கள் இடைவெளி உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் முழுவதுமாக தளர்த்தப்படாது. அரசின் சில நடைமுறைகளுக்கு அனு மதி வழங்கப்படும். அதுகுறித்த விரி வான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளி யிடப்படும் என்றார் பிரவீன்குமார்.

Read more: http://viduthalai.in/page-2/79236.html#ixzz2zwgGgRRg

தமிழ் ஓவியா said...


சிந்தனைத் துணுக்குகள் - சித்திரபுத்திரன்


எது நிஜம்?

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,

2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)

3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக, ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?

இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?

வெட்கம், புத்தி இல்லையோ?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும்.

ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

Read more: http://viduthalai.in/page-7/79231.html#ixzz2zwh9Plig

தமிழ் ஓவியா said...

இராமாயண காலம் - பொய்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப்பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங் களுடன் கீழே தரப்படுகின்றன:-
(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங் களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.
(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவால யங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக்கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.
(அயோத்தியா காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கம்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக் குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.

Read more: http://viduthalai.in/page-7/79231.html#ixzz2zwhIVRKh

தமிழ் ஓவியா said...


பூசாரிகளின் யோக்கியதை


(இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் வருடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படுகின்றன.

நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடி யாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது. அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறிவற்ற தற்குறிகளாக இருக்கின்றனர்.

அல்லது அரைகுறை யாக படித்தவர்களாக இருக்கின்றனர்; இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்ப வர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற்சில சிறப்பான விதிவிலக்கு கள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.

பொருளறியாத புலம்பலே மந்திரம்!

அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப்பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந் திருக்கவில்லை என்பது வருந்துதற்குரியது. தெய்வத்தின் கருணையைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத்திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை..

சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?

ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப் படுகிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

தெய்வத்துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார்.

தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியவில்லை, எந்தவகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhPbwYb

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது. - பக்ஸ்டன்

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhX0aKa

தமிழ் ஓவியா said...

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு: கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது.

அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்: தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத் துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

Read more: http://viduthalai.in/page-7/79233.html#ixzz2zwhdtosA

தமிழ் ஓவியா said...


பெருமாள் போய் பெத்த பெருமாளா?


பெருமாள் என்ற பெயர் நன்றாக இல்லை என்று சொல்லி, பெத்த பெருமாள் என்று பெயர் வைத்துக் கொண்டதைப்போல - நரேந்திர மோடியின் சொத்துக் கணக்கு வதேரா தொகுதிக்கும், வாரணாசிக்கும் இடையில் ரூ.14.31 லட்சம் வேறுபட்டது ஏன் என்ற கேள்விக்கு, பி.ஜே.பி. புதிய கதையை ஜோடித்துள்ளது.

மோடியின் வங்கிக் கணக்கிற்குக் கட்சியிலிருந்து மாற்றப்பட்ட தொகையால் இது நடந்தது என்று கூறப்படுகிறது.

கட்சியிலிருந்து எப்படி இன்னொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்? அப்படி மாற்றப்பட்டதற் கான ஆதாரம் என்ன என்பது போன்ற வினாக்கள் எழுந்துள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/79306.html#ixzz302Sktloq

தமிழ் ஓவியா said...


நம்பாதவன் நாத்திகனாம்


இப்பொழுது மத சம்பந்தமாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால், நம்பாதவன் நாத்திகன் என்பதுவே. - (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/79325.html#ixzz302SzSwh7

தமிழ் ஓவியா said...


மோடி அலை: கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சாரம்: புத்ததேவ் பட்டாச்சார்யா


கொல்கத்தா, ஏப். 26- மோடி அலை வீசுகிறது என் பது இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களின் பிரச்சாரம் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒரு வரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

இது பற்றி செய்தியாளர் களிடம் புத்ததேவ் பட்டாச் சார்யா கூறியதாவது: மோடி அலை என்று எதுவும் இல் லை. மோடி அலை என்று கூறப்படும் விஷயம் இந்தி யாவின் மிகப்பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களின் பிரச் சாரம்.

கார்ப்பரேட் நிறுவனங் களின் முதலாளிகளால், ஒரு விஷயத்தை உருவாக்கவும், ஒரு விஷயத்தைக் கெடுக் கவும் முடிகின்றது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த கார்ப்பரேட் நிறுவ னங்கள் பெரிய மீடியாக் களுக்கு பெரும் தொகை கொடுத்து, மோடி பிரச்சாரம் செய்யச் செய்கின்றன.

கடந்த சில மாதங்களாக வே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகின்றேன். எந்த மாவட்டத்திலும் மோடி அலை என்று எதுவும் தெரிய வில்லை. சில மீடியாக்கள் மோடி அலை வீசுவதாக செய்திகள் வெளியிடுகின் றன. நாடு முழுவதும் பல் வேறு பகுதிகளில் தேர்தல் நடக்கும்போது, மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை தொலைக் காட்சிகள் காட்டுகின்றன. இதுவும் ஒருவகையான பிரச்சாரம்தான். இது மக்கள் மத்தியில் தாக்கத்தை எற் படுத்தும். இது குறித்து தேர்தல் ஆணையத்தைன் கவனத்துக்கு எடுத்துச் செல் லப்பட்டாலும், அந்த விஷ யம் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் இது போன்ற விஷயங்கள் எதிர் காலத்தில் நடக்காது என்று நம்புகிறேன்.

இது தவிர பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் குஜ ராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டத்தை மட்டுமே பேசு கிறது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங் களின் வளர்ச்சித் திட்டம் இருப்பினும், இந்த மோ அலை மூலமாக மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக வுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அப்படி ஒன்று நடக்காது. இந்த மா நிலத்தில் உள்ள மக்கள், தனிப் பட்ட சமூகத்திற்கு அப்பாற் பட்ட வகையில் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு இந்த மாநில மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/79313.html#ixzz302VpL12C

தமிழ் ஓவியா said...


பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசய்யங்காரும்


திரு.எ. சீனிவாசய்யங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும்விட தீவிரமாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத்தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப்படுத்திக் கொண்டார்.

கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபா சந்திரபோசும் சமீபத்தில் ருஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவஹர்லால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள்.

ஆனால் திரு.சீனிவாசய்யங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்கு முறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.

இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை ஏமாற்ற ஏதாவது ஒரு புரட்டு வேண்டியிருப்பதால் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு கொள்கையை வெளிப்படுத்துவார்.

ஏனென்றால் சீனிவாசய்யங்கார் கூப்பிட்டபோது ஓடவும் வேண்டுமென்று கூப்பிட்டவுடன் ஓடிவரவும் அய்யங்கார் வார்த்தையை வேதவாக்காகக் கொண்டு பிரச்சாரம் செய்யவும் தமிழ் நாட்டில் இந்த இரண்டு கனவான்கள் தான் உண்டு, மற்றபடி, இப்போது அய்யங்கார் கூட இருக்கும் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் அய்யங்காரை விட்டு பிரிந்து மறுபடியும் அவருடன் சேருவதானால், மானம் ஈனம் சுயமரியாதை என்பவைகளைப் பற்றி சற்றாவது யோசித்துப் பார்ப்பார்கள் ஆனால், மேல்கண்ட இரண்டு கனவான்களுக்கும் இந்த விஷயங்களில் சிறிது கூட கவலை கிடையாது. ஏனென்றால் முற்றுந்துறந்த ஞானியிடம் மானம் ஈனம் இருக்க இடமேது?

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 26-05-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dgWQyn

தமிழ் ஓவியா said...

வரதராஜூலுவின் விஷமப் பிரச்சாரம்

தமிழ்நாடு பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சல் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வே.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டு விட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத்தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு, அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார்.

திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும், முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும், நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும், தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

எனவே இதனால் தமிழ்நாடு பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரியையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதைத் தவிர, வேறு எவ்வித நஷ்டமும் உண்டாகிவிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தவிர அம்மாதிரி ஏதாவது, ஒரு சமயம் தேவஸ் தானக் கமிட்டியார் அத்தீர்மானத்தை ரத்து செய்வார்களானால் கண்டிப்பாய் திரு. ஈ.வெ.ராமசாமியார், கமிட்டி வைஸ் பிரசிடெண்ட் தானத்தையும், மெம்பர் தானத்தையும் ராஜினாமாக் கொடுத்துவிட்டு அத்தீர்மானத்தின் தத்துவத்தைச் சட்டத்தின் மூலமோ, சுயமரியாதை சத்தியாக்கிரகத்தின் மூலமோ, அமலில் கொண்டுவரும் வேலையில் இறங்குபவரே ஒழிய உடம்புக்குச் சவுகரியமில்லை என்று சாக்குச் சொல்லிக் கொண்டு புறமுதுகு காட்டி ஓடிவிடமாட்டார் என்பதைத் திரு.வரதராஜுலுவுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79300.html#ixzz302dqEl2E

தமிழ் ஓவியா said...


நாஸ்திகத்திற்கு முதல் வெற்றி


நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும் பல கூலிகளை விட்டு விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்தில் தேர்தல் பிரச்சாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்கும் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும்.

இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன் பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரிட்சை நடத்திப் பார்த்தாகிவிட்டது.

அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் தானம், அதாவது சுதேசமித்திரன் இந்து ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் தானம் காலாவதி ஆனதும் அந்த தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டு விட்டதால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத்திமிரிலும், தலைசிறந்து விளங்கும் திரு.புர்ரா, சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலை செய்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலியார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர் களாயிருந்தும் ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும், அவரது சகபாடிகளும், திரு.புர்ரா. அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர்களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம்,

சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப்பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரச்சாரம் செய்தும் கடைசியாய் திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்ப ரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரியையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப்படையாகவே, திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள்.

இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர் பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை. எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது, கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர் களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண் டிருக்கவும்,

அதாவது ஐஸ்டிஸ் கட்சியின் ஜீவநாடி என்பவராகிய திரு.ராமசாமி முதலியார் அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, செனட் தொகுதி யில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல் லாதார் விரோதமாய் நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் நாஸ்திகத்திற்கு, (அதாவது செங்கற்பட்டுத் தீர்மானத் திற்கு) முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப்பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 07-04-1929

Read more: http://viduthalai.in/page-7/79298.html#ixzz302e2e2rr

தமிழ் ஓவியா said...


3500 ஆண்டுகள் பழமையான வானிலை அறிக்கை


வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வெட்டு 18ஆவது பரோ வம்சத்தை சேர்ந்த அமோஸ் வாழ்ந்த காலத்தை சேர்ந்தது. ஆறு அடி உயரம் கொண்ட சுண்ணாம்புக் கல்வெட்டு 'டெம்பஸ்ட் ஸ்டெலா' என்று அழைக்கப்படும் அதில் மழை, கருமேகம் உள்ளிட்ட மாறுபட்ட காலநிலை அமைப்புகள் பற்றி 40 வரிகள் அடங்கிய குறிப்பு காணப்படுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்லியல்துறை பேராசியர்கள் ராபர்ட் ரிட்னர் மற்றும் நாடின் மோயல்லர் ஆகியோர் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில் எகிப்தின் தெரா பகுதியில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ப் போவதாக, அந்த கல்வெட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு குறிப்புகளில் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர். அதுவே இன்றைய மெடிடீரியனின் கடலில் சான்ரொனி தீவாக காட்சியளிப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த கல்வெட்டில் கிடைத்துள்ள புதிய ஆதாரங்களை வைத்து அதன் காலவரிசை முறையை கணக்கிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page4/79273.html#ixzz302g9BGWH

தமிழ் ஓவியா said...


திருந்தாத திரை உலகத்தினர்


தமிழ் மீது பற்றுக்கொண்ட அறிஞர் களும், தமிழார்வலர்களும், செய்யாத, செய்யத்தவறிய செயலை தமிழுக்காக தந்தை பெரியார் அவர்கள் செய்தார்கள். அதுதான் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்.

தமிழைக்கற்பவர்களும், எழுதுபவர் களும் விரும்பக்கூடிய வகையில் எளிமை யாக தமிழை கொண்டு போய்ச்சேர்க்கும் முயற்சியில் இறங்கி தமிழில் உள்ள எழுத்துகளின் உருவைச் சீரமைத்தார். எடுத்துக்காட்டாக என்பதை லை ஆக வும் ச் என்பதை னை ஆகவும் க் என் பதை ணா வாகவும் மாற்றியமைத்தார். இது போன்ற தமிழில் உள்ள பல எழுத் துகளைச் சீரமைத்து எளிமையாக்கினார். அதோடு நின்றுவிடாமல் தான் நடத்திய அனைத்துப்பத்திரிகைகளிலும் அதனை நடைமுறைக்கு கொண்டுவந்து இன்று வரை ஏறத்தாழ 80 ஆண்டுகளாக அந்த எழுத்துரு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் மறைவிற்கு பிறகு 1978 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை அன்றைய தமிழக அரசு கொண்டாடிய நேரத்தில் அய்யா வுடைய இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமான நடைமுறைக்கு கொண்டு வந்தார். அதன் விளைவு பிற்காலத்தில் மாணவர்கள் தமிழைக் கடினமில்லாமல் எழுத முடிந்தது. பின்பு கணினியிலும் தமிழை எளிதாக கொண்டு வர முடிந்தது. இப்போது சமூக வலை தளங்கள் மூலமாக உலகெங்கும் தமிழ் தங்கு தடையின்றிச் செல்கிறது.

இவ்வளவும் தமிழை வெறுத்தவர், தமிழர் அல்லாதவர், திராவிடம் என்ற பெயரால் தமிழ் உணர்வை மழுங்கச் செய்தவர் என்று போலி தமிழ் தேசிய வாதிகளால் கோபத்தோடு அர்ச்சிக்கபடும் அறிவுலக ஆசான் அய்யா பெரியாரால் ஏற்பட்ட மாற்றம் அல்லவா!

இது பற்றி எல்லாம் எதுவும் தெரி யாமல், அறியாமல் தங்கள் பிழைப்பு நடந்தால் போதும், தான் சுகமாக இருந் தால் போதும் என்று எண்ணும் திருந்தாத கேடுகெட்ட ஜென்மங்களாகத் திரியும், தாங்கள் ஏதோ மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு வேறுபட்டு செய்கிறோம் என்று தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக்கொண்டு புகழ்தேடி அலை யும், தமிழ்திரைப்படத்துறையைச் சேர்ந்த வர்கள் (இதில் சில பேர் விதிவிலக்கு) தமிழ் மொழியிலேயே பயன்படுத்தாத பழைய எழுத்துருக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இப்போது வெளிவந்துள்ள, வெளி வரப்போகின்ற திரைப்படங்களான தெனாலிராமன் என்று எழுதவேண்டிய திரைப்படங்களின் பெயர்களை தெச்லி ராமன், கனவுத் தொழிற்சார்ஹ் என்று தாங்கள் இயக்கும் படங்களுக்கு பழைய எழுத்துருக்களை பயன்படுத்தி தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுகின்றனர். அவர்களுக்குத் தெரியாதா இந்த எழுத்துரு வழக்கத்தில் இல்லை என்று? தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் இது அசல் திமிர் தானே 35 ஆண்டுகளுக்கு முன்னால் பயன் பாட்டில் இருந்த ரூபாய்த் தாள்களையோ நாணயங்களையோ இப்போது பயன் படுத்த முடியுமா? இவர்கள் இயக்கும் படங்களுக்கு ஊதியமாக அந்த ரூபாய் தாள்களை கொடுத்தால் ஏற்பார்களா? அவை இப்போது செல்லாது. பயன் பாட்டிலும் கிடையாது என்று சொல் வார்கள் அல்லவா! அதுபோல் தானே எழுத்துரு மாற்றங்களும் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

நம்மைப்பிடித்திருக்கும் 5 நோய்களில் திரைப்படமும் ஒன்று என்று பகுத்தறிவு தந்தை அன்று கூறியது இப்போதும் பொருந்தித்தான் வருகிறது.

இனிமேலாவது இது போன்ற நட வடிக்கைகளில் ஈடுபடாமல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். வீணாக மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று உரிமையுடன் எச்சரிக்கின்றோம்.

- இசையின்பன்

Read more: http://viduthalai.in/page5/79274.html#ixzz302gS5Gnk

தமிழ் ஓவியா said...


பூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் நாசா மய்யம் சக்தி வாய்ந்த தொலைநோக்கியுடன் கூடிய கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் ஆய்வு செய்து புது கோள்கள் மற்றும் நட்சத் திரங்களை நிழற்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பூமியில் இருப்பது போன்று நட்சத்திரங்கள் உள்ளன. மேலும் திரவ நிலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு பூமியை போன்ற தட்பவெப்பம் நிலவுகிறது.

இதனால் இந்தக் கோள் பூமியை போன்று வாழ தகுதி உடையதாக கருதப்படுகிறது. இந்த கோளும் பூமி அளவு உள்ளது. எனவே, இக்கோள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page5/79276.html#ixzz302gbJRnc

தமிழ் ஓவியா said...



மதம் படுத்தும் பாடு

12 பேரின் காலைக் கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு என்கிற பெயரால் வாடிகனில் வழக்கத்துக்கு மாறாக நான்கு பெண்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி போப் முத்த மிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து, தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர், அவர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணி யாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டதன் அடிப்படை யில் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான வியாழனை புனித வியாழன் என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறதாம்.

வாடிகனில் நடைபெற்ற புனித வியாழன் வழிபாடு நிகழ்ச்சியில் போப் தலைமை தாங்கி வழிபாடு நடத்தினார். அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ரும் மற்றும் பாதிரியார்களும் கலந்து கொண்டனர்.

அப்போது போப் ஆண்ட வர் பேசுகையில், பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக, நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக, வகுப்பு அறைகளாக திகழ வேண்டும் என்று கூறினார். மாலையில் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மய்யத்துக்கு சென்றார், அங்கு தங்கியிருக்கும் 12 பேரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். 16 முதல் 86 வயதுவரை உள்ளவர்கள் ஆவர். அவர்களில் நான்கு பெண்கள், ஹமீது (75) என்ற முஸ்லீம் பெரியவரும் அடக்கம். இதற்கு முன்பெல்லாம், இந்நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ் தவ தேவாலயத்தில் தான் நடைபெறும்.

வழக்கமாக 12 பாதிரியார்களின் கால்களை போப் ஆண்டவர் கழுவி சுத்தம் செய்வார். ஆனால், புதிய போப்பாக பதவியேற் றுள்ள பிரான்சிஸ் அதன் மரபை மாற்றி மறுவாழ்வு மய்யத்துக்குச் சென்றுள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/79275.html#ixzz302gmKikq

தமிழ் ஓவியா said...


வாசகர் கடிதம்


வாசகர் கடிதம்

விடுதலை 5.4.2014 சென்னை சனிக்கிழமை ஞாயிறு மலர் படித்தேன்.

ஆகா என்ன அருமை! தி.மு.க. கூட்டணியைச் சமூக ரீதியான கொள்கை இருப்பதால் ஆதரி.

சிறுபான்மை மக்களுக்காக ஆதரவு கொடு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மறுபடியும் வேண்டுமா? வாக்களி. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகணுமா? வெற்றி அடையச் செய். பக்தி மடத்தில் பாழடைந்த பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது பாரீர்!

பிரம்மகத்தி கடவுள் நம்பிக்கை இல்லாதவரைப் பிடிக்கப் பயமோ? வரகுணபாண்டியனைப் பிடித்த பிரம்மகத்தி நீங்கிட, அவன் பார்ப்பானுக்கு உணவளிக்க வேண்டும். அரச மரத்தை வலம் வா. இப்படிப் பல.

விமோசனம் இல்லை. பிரம்மகத்தி இஸ்ட்ராங்கோ? அதனால் இன்னும் இதைச் செய். மதுரை சோமசுந்தரப் பெருமானை ஒவ்வொரு நாளும் 1008 முறை வலம் வா. பின் சரியாயிற்று.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்றும் சுயமரியாதையுடன்,

- க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page6/79279.html#ixzz302hG1TtU

தமிழ் ஓவியா said...


இப்படியும் நடந்திருக்கிறது எச்சரிக்கை!




எனதுஉறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நடந்தது. வரவேற்பு, உபசரிப்புக்கு பிறகு மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அழைத்துக் கொண்டு போனார்கள். மாப்பிள்ளை, பெண்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்திருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறார் என்று குழம்பிய புதுபபெண் மாமியாரிடம், உங்கள் மகன் ஏன் என்னிடம் எதுவும் பேசாமல் இருக்கிறார் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அவர், நீ பேசினால் அவன் பேசுவான் என்று பதில் சொல்லி இருக்கிறார். பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்த நாள் மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்தார்கள். அங்கு மாப்பிள்ளையின் நடத்தையை கவனித்து பார்த்தபோது தான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற விவரம் தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாப்பிள்ளை வந்திருக்கிறார். அதனால் மாப்பிள்ளையை யாரும் கவனித்து பார்க்கவில்லை. வெளிநாட்டில் வேலை பார்க்கிறாரே என்று சரியாக விசாரிக்காமல் பெண் வீட்டார் திருமணத்தை நடத்தி விட்டார்கள். பின்பு இரு வீட்டாருக்கு இடையே விரிசல் ஏற்பட்டு பெண்ணும், மாப்பிள்ளையும் பிரிந்து விட்டார்கள்.

- அ. அசீதாபேகம், அறந்தாங்கி,

(நன்றி: தினந்தந்தி குடும்ப மலர் 13.4.2014)

Read more: http://viduthalai.in/page6/79280.html#ixzz302hOjevi