Search This Blog

18.3.13

கும்பாபிசேகத்தின் ரகசியம் - பெரியார்

 
நடேசக் குருக்கள்: ஏண்டா சுப்பா, இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயிலுக்கு அபிஷேகம் வர்றதில்லை; பிரார்த்தனை வர்றதில்லை; முன்னைப் போல அதிக ஜனங்கள் அர்ச்சனை செய்ய வர்றதில்லையே, என்ன சங்கதி? 

சுப்புக் குருக்கள்: சங்கதியா! ஈரோட்டிலே ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல, அவன் குடிஅரசு எண்ணு ஒரு பேப்பர் போட்றான்; அதில் சும்மா இதையே எழுதுறான். பாப்பானுக்கு பணம் கொடுக்காதே; பாப்பான் காலில் விழாதே; பாப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே; கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துடு; அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே; அவன்கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படியெல்லாம் எழுதியும், போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வர்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள், தானே வர்றது; தானே கும்பிடறது; பேசாமல் போயிடறது, இப்படி பண்ணுராங்கடான்னா.

நடேசக் குருக்கள்: அப்படியா! அடடா! அவனுக்கு என்ன கேடு வந்தது? அவப்பா ரொம்ப பிராமண விசுவாசியாச்சுதே! எத்தனை சமாராதனை, எத்தனை கோயில் எத்தனை சத்திரம், சாவிடி, தண்ணிப் பந்தல், உச்சவம், உபநயனம், கல்யாணம் இதெல்லாம் செய்திருக்க, அப்படிப்பட்ட வயிற்றில் இப்படி பிள்ளையா பிறக்கனும்? அய்யய்யோ! கர்மம் உடுமா? அவன் இன்னம் கொஞ்சநாளில் என்ன கெதி ஆகப் போறான் எண்ணு பாரு. முன்னே மூணு நாலு தரம் ஜெயிலுக்குப் போயிம் அவனுக்குப் புத்தி வல்ல; இப்ப சீக்கிரத்தில் ஜெயிலுக்குப் போகப் போறானா இல்லையா எண்ணு பார்த்துகிட்டு இரு. ராஜத்து வேஷம், பிராமண துவேஷம் யாரை சும்மா விட்டது, இவனை விடுறதுக்கு? ஆனாலும், இதனாலே இப்ப நமக்கு இந்த 2, 3 மாசமாய் சுத்தமா வரும்படி இல்லையே; அதுக்கென்ன பண்ணறது? இப்ப வரவர தெவசத்துக்குக் கூட எந்த சூத்திரனும் நம்மைக் கூப்பிடறது இல்லை; நமக்கு முன்னையெல்லாம் ஒரு இடை இழுத்துவிட்டு அரிசி, பருப்பு, காசு எவ்வளவு தாராளமாகக் குடுப்பாங்கோ, இப்ப அதுகூட இல்லையே; இதென்ன சங்கதி? இந்த வருஷம் பிராமணன் மேலே சங்கராந்தி வந்துட்டதா என்ன? ஒண்ணும் தெரியவில்லையே!

சுப்புக் குருக்கள்: வரும்படியைப் பத்தி கவலைப்படாதே, நான் ஒரு வழி சொல்லுறேன்; அப்படிக் கேக்கறையா?

நடேசக் குருக்கள்: சொல்லித் தொலையப்பா! சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடி எல்லாம் கேப்பான் எண்ணு நீ கேட்டதில்லையா? சொல்லு, சொல்லு!

சுப்புக் குருக்கள்: சொல்லுகிறேன், வெளியில் சொல்லாதே!

நடேசக் குருக்கள்: இது வேறே கர்மமா? நான்தான் சுத்த சுத்தமா சோத்துக்கு சாகறேன்; இன்ன இதை வெளியில் சொல்றது வேறையா? கொஞ்சம் சொல்லப்பா சட்டுண்ணு!

சுப்புக் குருக்கள்: சுத்திமுத்தியும் பார்த்துக்கோ, ஆராவது வந்துடப் போறாங்கோ!

நடேசக் குருக்கள்: ஒருத்தரும் இல்லை; சொல்லித் தொலை!


சுப்புக் குருக்கள்: அது என்னான்னாக்கா, கோயிலில் சாமி இருக்குதல்ல, அதை ஆட்டிப் பிடுங்கி, கீழே தள்ளி படுக்க வெச்சிடு; காத்தாலெ கோயிலைப் போய் நீ பாத்ததாகவும்," கோயில் கதவு ஒடச்சி எவனோ உள்ளே போயி சாமியை ஆட்டி கீழே தள்ளிப் போட்டு, அதிலே இருந்த தங்கம், வெள்ளி, நவரத்னமெல்லாம் எவனோ எடுத்துக்கிட்டுப் போயிட்டான்; கும்பாபிஷேகம் பண்ணவேணும், இல்லாவிட்டால் ஊருக்கு ஆகாது; தர்மகர்த்தாவுக்கு தோஷம்; கமிட்டி யாருக்கு பாவம்!" அப்படிண்ணு சொல்லிப் போடு; கமிட்டியார் கும்பாபிஷேகம் பண்ற வரைக்கும் சாமிக்குக் கீழே போட்டு இருந்த தங்கம், வெள்ளிக்காசு, நவரத்னம் இதை வித்து சாப்பிட்டுகிட்டு இரு; இது தெரியாத உனக்கு?

நடேசக் குருக்கள்: இது நல்ல யோசனை தான்! நானும் இதற்கு முன்னாலேயே சாமியை ஆட்டித் தள்ளி, அதுக்குக் கீழே இருந்ததை எடுத்துக்கிட்டு, சாமியை சும்மாதான் நிக்கவச்சி இருக்கிறேன்; அர்ச்சனை பண்ற பூ பெலமா சாமி மேலே பட்டாலே சாமி ஆடும்! அது மாத்தரமா? எங்க கோயிலில் இருக்கிற எந்த சாமியைத் தொட்டாலும் சட்டுண்ணு படுத்துக்கும்! எல்லாம் ஆட்டிப் பிடுங்கி, அதிலிருந்ததை முன்னையே எடுத்துத் திண்ணு போட்டோம். ஆனதனாலே சாமியை பாடுபட்டு ஆட்டி கீழே தள்ள வேண்டியதில்லை; தொட்டால் போதும், தானே கீழே விளுந்துடும்!

சுப்புக் குருக்கள்: அப்படியானாக்கா, இன்னைக்கு ராத்திரியே சாமியை தள்ளிப்போடு; இருட்டு காலம் தானே, யாரு பாப்பாங்கோ! கும்பாபிஷேகம் பண்ணினாக்கா உனக்கும் கிடைக்கும், எனக்கும் கிடைக்கும், இன்னம் மத்த பிராமணாளுக்கும் தச்சனை, வேட்டி, சமாராதனை இதெல்லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிக்கிலாம். தச்சனை, வேட்டி, குடம், சொம்பு முதலானதும் மாசக்கணக்கா வரும். அப்பரம் இதை மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருஷத்து சங்கதி முடிஞ்சுபோகும்; மேலேக்கு பாத்துக்கலாம். அதுக்குள்ளே அவனும் ஜெயிலுக்கு போய்ட்டாக்க மத்தவனுங்கொ இந்த புத்தி வுட்டுடுவானுங்கோ.


நடேசக் குருக்கள்: சரி சரி, ராத்திரிக்குப் போய் தள்ளிப் போட்டே வந்துடுறேன்; நீ எங்கயும் போயிடாதே; தருமகர்த்தாகிட்ட சொன்ன உடனே அவன் ஒரு முட்டாளு ஆனதனாலே கும்பாபிஷேகம் உடனே பண்ண வேணும் எண்ணு சொல்ற தர்மகர்த்தா, அவன் உடனே ஏற்பாடு பண்ணராப்லெ இருந்தா உடனே உன்னை வந்து கூப்பிடுறேன் தெரியுமா!


சுப்புக் குருக்கள்: ஆமா, ஆமா, உங்க தர்மகர்த்தாகூட ஒரு பயித்தியக்காரன்தான். அவனுக்கு சும்மா மேலும் கீளும் சாம்பலைப் பூசத்தான் தெரியும். அரகரா சிவசிவ எங்கத்தான் தெரியும். மத்தபடி நீ சொல்லரதுதான் வேதவாக்கு. உடனே செய்வான். நானும் சத்திரத்திலேயே படுத்திருக்கிறேன். காலமே நேரத்திலேயே வந்து சொல்லு தெரியுமா!

நடேசக் குருக்கள்: சரி போயிட்டு வா; நீ நல்லா இருக்கணும். நல்ல கஷ்ட காலத்திலே சரியான யோசனை சொன்னே; சரி, சரி. 
சொன்னே; சரி, சரி.


---------------தந்தைபெரியார்-"குடிஅரசு"-29-05-1927

24 comments:

தமிழ் ஓவியா said...

யணங்கள் முடிவதில்லை - பாதைகள் மாறுவதில்லை!


இயக்கத் தோழர்கள் அயராத ஒத்துழைப்பினால் இருக்கும் காலம், இயங்கும் காலமாக எனக்கிருக்கிறது

எட்டுத் திசையும் இயக்கப் பணிகள் தொடர்கின்றன

பயணங்கள் முடிவதில்லை - பாதைகள் மாறுவதில்லை!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்னை மணியம்மையார் மறைந்த நிலையில் இயக்கப் பொறுப்பேற்ற கடந்த 35 ஆண்டுகளில் தாம் கடந்து வந்த, நடந்து வந்த பாதைகளைச் சுட்டிக்காட்டி நம் பயணங்கள் முடிவதில்லை - பாதைகள் மாறுவதில்லை என்ற முத்தாய்ப்பான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்து (1973) 40 நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன!

அய்யாவைப் பாதுகாத்து, அவருக்குப் பின் இயக்கத் தையும் பாதுகாத்த தியாகத் திருவுருவம் நம் அன்னையார் (ஈ.வெ.ரா.மணியம்மை) நம்மைவிட்டுப்பிரிந்து 35 ஆண்டுகள் (1978) ஓடிவிட்டன. அவர்களது வாழ்நாள் மாணவனாகவும், தொண்டுப் பணியாளனாகவும் மாணவப்பருவம் முதலே இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த எளியவன் பொறுப்பேற்றபின் எல்லாமே இருள் சூழ்ந்த நிலைதான் எனக்கு!

இயக்கக் குடும்பத்தவர்களின் ஆதரவு!

ஒரே வெளிச்சம் - இயக்கக் குடும்பத்தவரான எம் தோழர் தாய்மார்களின் இணையற்ற ஆதரவும், அரவணைப்பும்தான்! அந்தப் பேராதரவுதான் அன்றும், இன்றும், என்றும் எம்மை வழிநடத்துகிறது. எப்போதும், எதிலும் தடுமாற்றம் ஏற்பட்டதில்லை. சோதனைகளோ ஏராளம் - சந்திக்க அஞ்சவில்லை!

காரணம் எனக்குள்ள துணிச்சல்! நாம் அமர்ந்துள்ளது -அய்யாவின் தோள்களில்; அவர் தம் கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டைப் படையினரின் மடியில் அல்லவா என்கிற போது அச்சம் எதுவும் மிரட்டியதில்லை.

பெரியார் தந்த புத்தி!

இயக்கத்தினை நடத்த எனக்கு மிகப் பெரும் பலம் - எனது ஆற்றல் என்பதில்லை - எனது ஆசான் தந்தை பெரியார் தந்த புத்திதான்; அதற்குச் சபலம் தெரியாது; கொள்கைச் சமரசத்தை அறியாதது! அது (பெரியார் தந்த புத்தி) மானம் பாராதது, நன்றியை மறக்காதது; இனமானச்சுடரை என்றும் ஏந்திப்பிடிப்பது; எதிர்நீச்சலில் இன்பம் காணுவது; சுயநலத்தை விரட்டியடிப்பது. சொந்தம் என்பது கொள்கைச் சொந்தங்களே என்பது; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதது.

போராட்டக்களம் என்றால் புன்னகைப்பது! லட்சியத் திற்காக எந்த விலையும் கொடுக்கத் தயங்காதது.

தமிழ் ஓவியா said...

அறக்கட்டளை காப்பாற்றப்பட்டது!

அதன் காரணமாகவே உங்கள் தொண்டனாகி சந்தித்த சோதனைகள் முதலில் வழக்குகள் - அய்யாவின் அறக்கட்டளையை எதிர்த்து;

அடுத்து, அதனை விழுங்க ஆரியம் திட்டமிட்டிருந்தது வருமானவரி பாக்கி உருவத்தில்; அய்யா காலத்தில் 1962 முதல் துவங்கி ரூ.15 லட்சம், பிறகு ரூ.40 லட்சமாகி, அன்னையார் பொறுப்பேற்ற பிறகு (நெருக்கடி காலத்தில்) ரூ.60 லட்சமாகி அம்மாவிற்குப் பிறகு பொறுப்பு என் தலையில் ஏற்றப்பட்ட பிறகு ரூ.80 லட்சமானதோடு, இது அறக்கட்டளையே அல்ல என்று அடியை அசைக்க முயற்சித்த நிலைவரை - வந்தவைகளை அதே வருமான வரித்துறை மேல் முறையீட்டு வாரியத்தில் இரண்டு பார்ப்பன நீதிபதி பெருமக்கள் தீர்ப்பின் மூலமே தள்ளுபடி பெற்று, இது பெரியார் காலத்திலிருந்தே அறக்கட்டளை தான் என்ற பின்னோக்கிய தகுதி ஆணையைப் பெற்றோம் - பல சட்ட வல்லுநர்களின் தோன்றாத் துணையோடு வென்று, அய்யாவும், அம்மாவும் நிறுவிய இயக்கம், கல்வி நிறுவனங்கள், விடுதலை போன்ற கொள்கை ஏடுகளைக் காப்பாற்றி நிலை நிறுத்தினோம்.

பெரியார் தொடங்கிய கல்விப் பணிகள் தொடர்கின்றன

கல்வியின் மூலமே சமூக மாற்றத்தை அறிவு வழியில் அமைதிப் புரட்சியாக செய்து முடிக்க இயலும் என்ற அறிவு ஆசானின் தத்துவ வெளிச்சத்தின் காரணமாக அவர்கள் துவக்கிய கல்விப் பணிகள் விரிவடைந்தன. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சை வல்லம், பெரியார் மருந்தியல் கல்லூரி - திருச்சி, பெரியார் பெண்கள் பொறியியல் கல்லூரி (உலகிலேயே முதன் முதலாக)யாக 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கி இப்போது வெள்ளி விழாவைக் கண்டுள்ள பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகம்.

புரா என்ற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமே உலகப்புகழ் பெற்றுள்ள நிறுவனம், மேல் நிலைப்பள்ளிகள், திருச்சியில், ஜெயங்கொண் டத்தில் வெட்டிக்காட்டில் (கிராமங்களிலும்) அய்யா - அம்மா துவக்கிய நாகம்மையார் குழந்தை கள் இல்லம் என்ற (ஆதரவற்றோர்) இல்லம் அதன் பொன்விழா கண்டு, பொலிவுடன் வளர்ந்தோங்கியுள்ளது.

சிறிய மருத்துவமனைகள் சென்னையில், வல்லத்தில் (தஞ்சை) திருவாரூர் அருகில் சோழிங்கநல்லூரில், திருச்சி, திருவெறும்பூர், சேலத்தில் என இப்படி.

புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அறிவுரை தர நகரும் (Mobile) மருத்துவ ஆய்வகம், பெரியார் நகர்வு சந்தை என்ற இரண்டு நகரும் புத்தக நிலையங்கள் - எந்நேரமும் ஊர்தோறும் ஓடிக்கொண்டே உள்ள நிலை.

பெரியார் மகளிர் மேம்பாட்டுக்கான தனி அமைப்பு, சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, கிராமப்புற பெண் களும், தாய்மார்களும் பொருளாதார தன்னிறைவை நோக்கி லட்சியத்துடன் ஞடிறநச என்கிற பெரியார் அமைப்பு.

சுற்றுச் சூழல் மாசு படாத நிலையில் அதற்கான தனி ஆய்வு நிலையங்கள் தஞ்சை - வல்லம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள்; - இப்படி எத்தனையோ அறிவியல், தொழில் நுட்பக் கூடங்கள் எல்லாம் இயக்க மகுடத்தின் முத்துக்கள்.

இயக்கப் பணிகள் எட்டுத் திசையும்!

இயக்கப்பணிகளோ எட்டுத்திசைநோக்கி எப்போதும் தொடரும் நிலை! சமூக நீதிக்களத்தில், சரித்திரம் படைத்தோம் ஆம், அய்யாவின் அருஞ்சாதனை இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம்.

அவர்களுக்குப் பின் அவர் தம் தொண்டர்களாகிய நமது காலத்தில் நாம் எடுத்த அரிய முயற்சியால் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு - இறுதியில் எந்த மாநிலத் திலும் இல்லாத புதுமைப் புரட்சி அதுவும் 9ஆவது அட்ட வணைப் பாதுகாப்புடன் கூடிய இந்திய அரசியல் சட்டம் 86ஆவது திருத்தம்.

அதுவும் மூன்று பெரும் அதிகார மய்யமும் பார்ப்பனர் களிடமே இருந்த நிலையில்! அதுதான் அதிசயத்திலும் அதிசயம்!!

விடுதலைப் பணியில் 50 ஆண்டுகள்

தமிழ் ஓவியா said...

அய்யா தந்த அறிவுப்புரட்சிப் போர்வாளாம் விடுதலை நாளேடு தனது பவளவிழா கண்டது. அதில் பணிபுரிய அய்யாவால் அமர்த்தப்பட்டு அய்ம்பதாண்டுகள் நிறைவையும் பெற்று, அய்ம்பதாயிரம் சந்தாக்களை கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் திரட்டித் தந்து உற்சாகப் பெரு வெள்ளத்தை வழிந்தோடச் செய்தனர்!

தொழில்நுட்ப யுகத்தின் அசாதாரண வளர்ச்சியையும் விடுதலை பற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இணையத்தில் வெளிவந்த முதல் தமிழ் நாளேடு - இன்றும் பல்வகைப் பொலிவுகளோடு தொடர்கிறது!

உலகத் தமிழர்கள் உடனுக்குடன் படித்தறியும் வாய்ப்பினை அத்தொழில் நுட்பம் வாசக நேயர்களுக்கு வாரி வழங்கியுள்ளது.

பெரியார் வலைக்காட்சி, பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தோழர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோரின் சீரிய முயற்சி - இடையறாத உழைப்பினால், அது உலகின் பல நாடுகளில் (அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் போன்ற நாடுகளில்) கிளை பெற்று இயங்கிடும் நிலை.

உலகு தொழும் பெரியாரின் மண்டைச் சுரப்பு!

பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்ற புரட்சிக் கவிஞன் பொன் வரிகளின் பொருளுக்குச் சான்றுகளாகி நிற்கின்றன!

தமிழ் ஓவியா said...


உலகின் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பெரியார் தத்துவங்கள் பெரும் ஆராய்ச்சிப்பட்டமான முனைவர் பட்டத்திற்குரிய மூலாதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது!

இன்னும் இப்படி எத்தனையோ மகிழ்ச்சியின் தேன் துளிகள்! எந்தத் திக்கும் தித்திக்கும் இன்பச் செய்திகள்.

நான்கு முறை எனக்குக் குறி!

80 வயது என்று நினைவூட்டிடும் நண்பர்கள் மத்தியில் நான் எனது ஆசானின் அடிச்சுவட்டையே பின்பற்றி என்றும் போராட்டக் களச் சிப்பாயாகவே இருக்க விரும்புபவன்.
என்னை முடிக்க இதுவரை மம்சாபுரத்தில், (திருவில்லிபுத்தூர்) தம்மம்பட்டி (ஆத்தூர்) சென்னை புது வண்ணையில் இருமுறை - இப்படி நான்கு முறைகள் குறி வைக்கப்பட்டேன்.

இதய சிகிச்சை இதுவரை மூன்று முறை என்றாலும் பணி புரியத் தகுதிக் குறைவில்லை. அதற்கு என் மன ஊக்கம். அதனைத் தருவது எனது கழகக் குடும்பத் தினரும், நல்லெண்ண நண்பர்களும்தான்.

இருக்கும் காலம், இயங்கும் காலமே!

இருக்கும் காலம் எதுவாயினும், அது என்னைப் பொறுத்தவரை இயங்கும் காலமாகவே களம் காணத் தவறாதவனாக, கடமைப் பணியாளனாகவே இருக்க விரும்பும் நான், அனைவரது ஆதரவுக்கும் இரு கரம் கூப்பி, எனது ஆழ் மனதிலிருந்து நன்றியைக் குவிக் கின்றேன்.

என்றும் தொடரும் எம் இயக்கப் பணிக்கு என்றும் எம் தோழர்களின் தோள்களும், கரங்களும் எனக்குண்டு என்ற நம்பிக்கையே ஆதாரச் சுருதியாகும்.

எம் பணி தொடருகிறது; தொடரும்! பயணங்கள் முடிவதில்லை. பாதைகள் மாறுவதில்லை!

உங்கள் தொண்டன், தோழன்

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.3.2013

சென்னை


விடுதலையின் விலையைக் கூட்டாமல் இருக்க வழி!

விடுதலை சந்தாக்களை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலோ அல்லது புது சந்தாக்களை கழகத் தோழர்களும், நம் ஆர்வலர்களும், பகுத்தறிவாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் கோவை மாநாட்டில் பெரும் அளவில் தருவதற்கு மும்முரமான பணியை அயர்வின்றிச் செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு எமது உளங் கனிந்த நன்றி!

மற்றொரு புது அறைகூவலும் விடுதலை நாளேட்டிற்கு. அச்சடிக்கும் காகித விலை, மற்ற விலைவாசிகளைப் போன்றே வான்முட்ட உயர்ந்து விட்டது; அது மேலும் உயரக்கூடிய அச்சமும் நமக்கு உள்ளது.

விலையை ஏற்றாமலேயே சமாளிக்க வேண்டும் என்று திட்டமிட யோசித்தபோது, திராவிடர் கழக இயக்கப் பொறுப்பாளர்கள், கை கொடுத்துக் கரையேற்ற நம் உதவிக்கு - முன்பொரு முறை வந்தது போலவே - இப்போது, மாவட்ட வாரியாகவும் விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் மூலமும் அக்காகிதத்தாள் பலரும் ஒவ்வொரு மாதத்திற்குரியதை வாங்கி, நன்கொடையாகத் தந்து உதவிட பெரு உள்ளத்தோடு முன் வந்துள்ளனர்!

விலையைக் கூட்டாமலேயே தொடருங்கள் நாங்கள் உதவுகிறோம்;

எத்தனையோ நண்பர்கள் உண்டு என்று உதவிக் கரம் நீட்டியுள்ளார்கள்.

நன்றி! நன்றி!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...



கிரீமிலேயர் என்னும் முட்டுக்கட்டை



மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழுப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்பட்டிராத வருமான வரம்பினைத் திணித்தனர். (1992) புதிய சொலவடை ஒன்றையும் ஊசநயஅல டுயலநச அறிமுகப்படுத்தினர்.

இவ்வளவுக்கும் மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன் முதலாகக் கணக்குத் திறக்கப்பட்ட நிலையிலேயே இந்த சட்ட விரோத - நியாய விரோத, சமூகநீதி விரோத ஆணையைப் பிறப்பித்தனர்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணைச் சேர்ந்த காரணத்தால் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் மட்டும் மாறுபட்ட கருத்தினைப் பதிவு செய்தார்கள்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது திணிக்கப்பட்ட வருமான வரம்பு ஆணை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப் பட்டு, தோற்கடிக்கப்பட்ட திட்டம் அது.

வெகு மக்கள் எதிர்ப்புக் காரணமாக, திராவிடர் கழகத்தின் அயராப் பணியின் காரணமாக அதே எம்.ஜி.ஆர். அவர்களாலேயே அது தூக்கி எறியப்பட்டது மட்டுமல்லாமல், அதுவரை பிற்படுத்தப்பட்ட மக் களுக்கு 31 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீட்டின் விழுக்காடு, 50 விழுக்காடாக உயர்த்தவும் பட்டது.

இதற்கென்று ஒரு முக்கிய வரலாறே இருக்கிறது. இந்தப் பின்னணிகளையெல்லாம் புரிந்து கொள்ளா மலும், தெரிந்து கொள்ளாமலும் இந்திய உச்சநீதி மன்றம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக் கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தது.

தொடக்கத்தில் (1993) ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம், அடுத்து 2004இல் ரூ. இரண்டரை லட்சம், 2008 இல் ரூ.நாலரை லட்சம் என்று நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. 2013இல் ரூ.6 லட்சம் என்று பரிந்துரைக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ரூ.12 லட்சம் என்று உயர்த் தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. (3 ஆண்டு களுக்கு ஒரு முறை வருமான வரம்புத் தொகை மாற்றிய மைக்கப்பட வேண்டும் என்பதும் முறையாகக் கடைபிடிக்கப்பட வில்லை).

நியாயமாக இந்த அளவுகோலே தேவையற்ற ஒன்று. அதனை அறவே நீக்குவதற்குக்கூட நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசில் கணக்குத் திறக்கப்பட்ட நிலையில், எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் கிரீமிலேயரைக் கொண்டு வந்தார்கள் என்பதற்கு உச்சநீதிமன்றம் விளக்கம் - காரணம் கூறவில்லை.

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டதின் பலன் என்ன தெரியுமா?

மத்திய அரசுக்குட்பட்ட முதல் நிலை (Class I) பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் துள்ள விழுக்காடு, 4.69 இரண்டாம் பிரிவில் 10.63 விழுக்காடு, மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் கிடைத்துள்ள விழுக்காடு 24.40; ஒட்டு மொத்த மாகக் கணக்கிடும் பொழுது இதர பிற்படுத்தப்பட் டோருக்குக் கிடைத்துள்ள விழுக்காடு - 12.55 ஆகும். நியாயமாக சட்டப்படி கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடோ 27; ஆனால் கிடைத்துள்ளதோ வெறும் 12.55 விழுக்காடு. பாதிக்குப் பாதிகூட கிடைக்கவில்லை.

இதற்குக் காரணம் - இதர பிற்படுத்தப்பட் டோருக்கு வருமான வரம்பு விதிக்கப்பட்ட காரணத் தால், வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டியவர்கள் வெளியே தள்ளப்பட்ட காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வர்கள் மக்கள் தொகையில் 52 விழுக்காடு இருந்தும், இடங்கள் பூர்த்தி செய்யப்படாத ஒருநிலை ஏற்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்தக் கிரீமிலேயரை முற்றிலும் நீக்கிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டியது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் மிக மிக முக்கியமானதும், அவசரமானதும் ஆகும்.

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

தமிழ் ஓவியா said...


ஜெனிவா தீர்மானம்: மத்திய ஆட்சி என்ன செய்யவேண்டும்?

பிரதமருக்கும், சோனியாவுக்கும் கலைஞர் அவசரக் கடிதம்

சென்னை, மார்ச் 18- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் ``இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல், போர்க்குற்றம் - இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தவேண்டும். போர்க் குற்றம் குறித்து பன்னாட்டு ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற திருத்தங்களை மத்திய அரசு கோர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவருமான திருமதி சோனியா காந்தி ஆகியோருக்கு 16.3.2013 அன்று இரவு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரதமருக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

டெசோ சார்பில் தங்களிடம் அளித்த பல் வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளிலும் தி.மு.க. உறுப்பினர்களின் பேச்சுக்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கை அரசால் இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு முறையான திருத்தங்களைக் கொண்டு வந்து ஈழத் தமிழர்களின் முடிவில்லாத் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டியதுபற்றித் தங்களது கவனத்துக்கு மீண்டும் கொண்டு வருகிறேன். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் மிகச் சமீபத்திய தீர்மானம் அய்.நா.மனித உரிமைகள் கவுன் சிலில் மார்ச் 12 அன்று தாக்கல் செய்யப்பட்டது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அதன் மீது வாக்கெடுப்பு மார்ச் 20 அல்லது 21 அன்று நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், இந்திய அரசு திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு மார்ச் 18 வரை அவகாசம் இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபி மான சட்டங்கள் மீறல் களைக் கண்டிப்பதில் உலகத்தோடு சேர்வது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது ஆகும்.
இந்தியா என்ன செய்யவேண்டும்?

ஆனால், ஒரு சர்வதேச விசாரணைக் கமிஷ னால் போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப் பட்டு, அது ஒரு காலக்கெடுவுக்குள் தந்து அறிக்கையை சமர்ப்பித்து சர்வதேச நீதிமன் றத்தில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவதை உறுதி செய்யும் வகையில் கோருவ தற்கு இந்திய அரசு முன்கை எடுத்து அமெரிக் காவின் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை ஆகும்.
பொதுவாக தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு பிரிவி னரும், குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர் சமுதா யமும் கோரிக்கைகளுக்கு இந்திய அரசிடமிருந்து உறுதியான பதில் வராத நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், தமிழ்ச் சமுதாயம் முழுவதும் அநீதி இழைக்கப்பட்டதாக சரியாகவே உணர்ந் துள்ள நிலையில் இந்தக் கடிதத்தை நான் எழுத நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளேன். பெரும் மன உளைச்சல் மற்றும் இந்திய அரசால் கைவிடப்பட்ட உணர்வுடன் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். பின்வருமாறு திருத்தங்களை தீர் மானத்தில் சேர்க்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 1) இலங்கை இராணுவத்தாலும், நிர்வாகத்தினராலும் ஈழத் தமிழர்கள் மீது இனப் படுகொலையும் போர்க் குற்றங்களும் இழைக்கப்பட்டன என்று அறிவித்தல். 2) போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை கள் சட்ட மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைக் குற்றம் ஆகிய குற்றச் சாட்டுகளை ஒரு காலக்கெடுவுக்குள் விசாரிக்க ஒரு நம்பகரமான, சுதந்திரமான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வலியுறுத்தல்.

இந்த முறையீட்டை இந்திய அரசு உரியமுறை யில் பாவித்து, தற்போது ஜெனிவாவில் நடை பெற்றுவரும் அய்.நா.மனித உரிமைகள் கவுன் சிலின் 22 ஆவது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத் துக்கு மேற்கூறிய திருத்தங்களைக் கொண்டுவந்து தமிழ்ச் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு ஆறுதல் அளிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள் ளும் என்று நம்புகிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


காலச் சிலாசாசனம்!


உலக வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத இனப்படுகொலை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் இனப் படுகொலை (Genocide) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.

இனப்படுகொலையை ஒரு நாடு செய்தால் அதில் எந்த நாடும் தலையிடலாம் - அது வெளிநாடு தலையிட்டக் குற்றமாகாது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அரசோ இனப்படுகொலை அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக அந்த இனப்படு கொலை நாட்டை தமது நட்பு நாடாக அறிவிக்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

இன்றைய பேட்டியில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் மிகத் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியது போல இந்தியாவும் போர்க் குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், எதிர்காலத்தில் விசாரணைக்கு இந்தியா உட்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை.

எத்தனையோ முறை இதமாக - பதமாக - போதுமானது என்பதை விடத் தாண்டி வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தும்கூட, இந்திய அரசின் போக்கில் எந்தவிதமான நேர்மை யான, மனித உரிமையுடன் மனிதநேயத் துடன் கூடிய போக்கோ, சிந்தனையோ அறவே யில்லை.

வேறு வழியில்லை என்று உறுதியாகத் தெற்றென அறிந்த நிலையில்தான் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 16ஆம் தேதி மத்திய அரசில் திமுக தொடர்வதில் இனியும் அர்த்தமில்லை என்றே அர்த்தமிக்க கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டார். அதற்குப் பிறகாவது மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு தன்போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

தி.மு.க. தலைவரின் அந்த அறிக்கையை வரவேற்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதே நாளில் (16.3.2013) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

கலைஞர் அவர்களின் அறிக்கை வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன் எந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரித்திருந்தார்.

எல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரை - செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டதால் தி.மு.க. ஓர் அறுவை சிகிச்சை முடிவினை எடுக்க நேர்ந்தது.

தி.மு.க எடுத்த இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இது காலம் கருதி எடுக்கப்பட்ட ஞாலம் வரவேற்கும் முடி வாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட் டுள்ளார்.

இனியாவது ஏற்றப்பாட்டுக்கு இறக்கப் பாடல் பாடுவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்கள் ஒரே குரலில் ஈழத் தமிழர் உரிமையின் பக்கம் நிற்பார்களாக!

தி.மு.க. இன்று எடுத்த முடிவு காலம் உள்ளவரை, உலகம் உள்ள வரை நிமிர்ந்து நிற்கும் காலக் கல்வெட்டாகும் - சிலா சாசனமும் ஆகும்! 19-3-2013

தமிழ் ஓவியா said...


காலத்துக்கேற்ற...


காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
_ (குடிஅரசு,26.1.1936)

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!


சென்னை, மார்ச் 20- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று தாம் கூறியதைத் திரித்துக் கூறும் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்;

நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;

திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத் திருத்தங்களை, இந்திய நாடாளு மன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறை வேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன். உள்நோக்கத்துடன் திரிப்பதா?

நான் தெளிவாகச் சொன்னதை, முதல மைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங் களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத் தப்பட்டது இனப் படுகொலையே என்பதை யும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசார ணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ப தையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத் தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண் டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பு!

ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப் போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண் டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீர்த்துப்போன தீர்மானம்!

இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமள வுக்கு நீர்த்துப் போய்விட்டது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய் வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக் கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரி விக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக் கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங் களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக் கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற் கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் - வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு - திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேர்வு முறையில் தமிழ் மொழி தூக்கி எறியப்பட்டுவிட்டது - இதனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது (மார்ச் 18, 19).

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு களை அறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.

நெருக்கடி முற்றியது என்றவுடன், தமிழைப் புறந்தள்ளும் திட்டத்திற்குக் கடைசி கையொப்பமிட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் இப்பொழுது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாத பாப்பாத்தி போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள்! என்கிற தோரணையில், தாம் செய்த தமிழ் ஒதுக்கலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அவாளின் இனமலரோ எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து செய்தியையும் வெளியிட் டுள்ளது.

வெண்டைக்காய் விளக்கெண்ணெய் - கத்தாழை களைக் குழைத்து சமாதானம் சொல்ல முயற்சிக்கும் திருவாளர் நட்ராஜ் அய்யர்வாளுக்குச் சில கேள்விகள்:

1. பிரிவு -2 (குரூப்-2) தேர்வில் இருந்து வந்த பொதுத் தமிழ் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

2. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் இடம் பெற்றிருந்த பொதுத் தமிழ் முழுவதும் அகற்றப்பட் டுள்ளதா - இல்லையா?

3. பிரிவு நான்கில் (குரூப்-4) இதுவரை தமிழில் கேட்கப்பட்டு வந்த 100 வினாக்களுக்குப் பதில் 50 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளதா - இல்லையா?

அறிவு நாணயமாக சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்காமல், நேரிடையாக திருவாளர் நட்ராஜ் அய்யர்வாள் பதில் சொல்லுவாரா?

அய்யர்வாளுக்கு வக்காலத்து வாங்கும் இ(தி)னமணி, இ(தி)னமலர் அய்யர்வாள்களும்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் ஒரு பக்கம் - உள்ளூர் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம்.

இரண்டுக்குள்ளுமே ஆரியக் கொடுக்கு இருக் கிறதே - இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள 72 பக்கங்களையும் படித்துவிட்டுதான் இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துள்ளோம்.

கூடுதல் செய்தி (Tail Piece)

திடீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணைய தளத்திலிருந்து இந்தப் பகுதி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது - மாற்றம் வந்தால் சரி!

தமிழ் ஓவியா said...


இந்து ஏட்டுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, மார்ச் 21- ஸ்டாலினை மய்யப்படுத்தி இந்து ஏடு செய்தி வெளி யிட்டதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் - அறிக்கை வருமாறு:

தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக் காகவோ எடுப்பதில்லை. குறைந்த பட்சம் கழகத்தின் தலைமையிலே உள்ள முன்னோடிகள் கூடிக் கலந்து பேசி பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் தான் முடிவெடுப் பது வழக்கம். செய்தியாளர்கள் பல முறை சில அதிமுக்கியமான பிரச் சினைகள் குறித்து கேள்வி கேட்கும் போது கூட, கழகத்தின் செயற் குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித்த பிறகு தான் முடிவெடுத்து அறிவிக்குமென்று நான் பல முறை கூறியிருக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் தொடர்ச்சி யாக; நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செய லாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கழகத்தின் மூத்த செய லாளர்கள் ஆகியோரும் நீண்ட நேரம் விவாதித்த பிறகு ஒருமனதாக எடுத்த முடிவினைத் தான் 19-3-2013 அன்று காலை செய்தியாளர்களுக்கு அறி வித்தேன். உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகா விட்டால், ஸ்டாலின் விலகி விடுவ தாகப் பயமுறுத்தியது தான் கார ணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை யெல்லாம், அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகா தர்மத்தைப் பாழடிக்கின்றன. ஆனால் இந்து நாளிதழும் இப்படி உண் மைக்குப் புறம்பான செய்தியினை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

தமிழ் ஓவியா said...


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் புதிய அறிவிப்பு



புதுடில்லி, மார்ச் 21- இந்திய அரசுப் பணியாளர் ஆணையம் (ருஞளுஊ) புதிதாக அறிவித்த மாநில மொழி பேசு வோர்க்குப் பாதகம் விளைவித்த தேர்வுத் திட் டத்தை கைவிட்டது. பழைய முறையே தொட ரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசும், நடு வண் பணியாளர் தேர்வு ஆணையமும் (ருஞளுஊ) மொழிகள் தொடர் பான சர்ச்சைக்குண் டான எல்லா மாற்றங் களையும் திரும்பப் பெற் றுக் கொள்ள முடிவு செய்துள்ளன. ஆனால் பொதுப் படிப்பிற்கான பாடங்கள் இரண்டுக் குப் பதிலாக நான்காக உயர்த்த முடிவு செய் துள்ளன.

சென்ற புதன்கிழமை யன்று, பணியாளர்களுக் கான இணை அமைச்சர் வி. நாராயணசாமியுடன் நடுவண் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அரசு தரப்பிலி ருந்து கூறப்படுகிறது.
வட்டார மொழிகளில் எழுதலாம்
இந்த திட்டத்தின் படி, தேர்வுகளை வட் டார மொழியில் எழுது வதற்கான தடைகள் திரும்பப் பெறப்படுகின் றன. தவிர, தகுதித் தரம் கணிப்பதற்கான 100 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலத் தாள் நீக்கப்படுகிறது.

சென்ற வாரம், சீறிச் சினம் கொண்டு நின்ற நாடாளுமன்ற உறுப் பினர்களுடன், அவர்கள் அறிவித்திருந்த அறி விக்கையை செயல்படா மல் நிறுத்தி வைப்ப தாகவும், முன்பிருந்த நிலைமையே தொடரும் என்றும் சொல்லியிருந் தார். ஆனால், நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வுகளுக் குச் சற்று முன்பான நேரத்தில், காலத்தின் அழுத்தத்தைக் கருத்தில் கொள்ளாது, புதிய மாற்றங்களை வேக மாகத் திணித்தது. அத் துடன், அதன் மாற்றங் கள் முழுவதுமாக நிரா கரிக்க வேண்டாம் என் றும் கேட்டுக் கொண் டது. கடைசி சில நாட் களில் ஒரு பலமான கண்ணோட்டம் வெளிப்பட்டுள்ளதாகவும், எல்லா மாற்றங்களை யும் திரும்பப் பெற வேண்டாம் என்ற கருத்து பரவலாக வெளிப்பட் டது.
ஆனாலும் மொழி கள் பற்றிய விவரங் களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருப் திக்கேற்ப, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களது குறைகள் களையப்பட்டுள்ளன என்று ஒரு அரசு உயர் அலுவலர் குறிப்பிட்டுள் ளார். ஆனால், கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட் டுள்ள ஆணை விளக்கங் களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அரசு, நாடாளுமன்ற மக்கள் சபையில், உறுப் பினர்கள் அறிந்து கொள்ளும்படியாக ஒரு முடிவை அறிவிக்கலாம் என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார்.
ஆனாலும், அது அர சியல் நிலைமையையும், தலைமை வகிக்கும் அலு வலரையும் பொறுத்தது என்றார்.
நடுவண் பணியாளர் தேர்வு ஆணையம் முத லில் மொழிகள் பற்றிய மாற்றங்களைக் கொண்டு வந்தபோது, பணியாளர் துறையும், அமைச்சர் நாராயண சாமியும் மொழிகள் பற்றி மாற்றங்களின் உள்ளடக்கங்களை எதிர்த்துள்ளனர்.
சிவில்துறை அதி காரிகளும் நாடாளுமன் றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய அதே கருத்துகளைத் தான் கூறியுள்ளனர். அதன்படி அந்த மாற்றங்கள் இந்தி பேசும் மக்களுக்கு ஆதர வாகவும் நகர மக்கள் ஓரடி முன்னே போக சாதகமாக இருக்கவும் அமைந்துள்ளது என்று கூறினர்.

தமிழ் ஓவியா said...


தேவை அனைத்துலக விசாரணை நவநீதம்பிள்ளை உறுதி



சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அய்.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் வலியுறுத் தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இந்த அறிக்கையை, அய்.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் குயங் வா கங் பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை.

சில தெரிவு செய்யப் பட்ட பரிந்துரைகளை மட்டுமே சிறிலங்கா அர சாங்கம் நடைமுறைப் படுத்தி வருகிறது.

குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயங் களில் இன்னமும் பல் வேறு படிநிலைகளை சிறிலங்கா தாண்ட வேண் டிய நிலை உள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதன் மூலம் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

உண்மையைக் கண் டறியும் நெறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

சாட்சிகளையும் மற் றும் பாதிக்கப்பட்டோ ரையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

கடத்தல்கள், காணா மல் போதல்கள் தொடர் பாக அனைத்துலக சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

தேசிய நிறுவனங் களின் சுயாதீனத் தன்மையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசா ரணைகள் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப இடம்பெறுவதை உறுதிப்படுத்த, சுதந்திர ஆணைக்குழுவொன்று அதைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட வேண்டும். என்றும் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆரியப் பண்டிகைகள்



ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.
(விடுதலை,18.1.1951)

தமிழ் ஓவியா said...


நெத்தியடி யாருக்கு? அ.இ.அ.தி.மு.க.வுக்கு!


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் நெத்தியடி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரின் கேலிப் படத்தை வெளியிட்டு, அவர்களுக்கே உரித்தான அநாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி சாடியுள்ளனர் (21.3.2013).

சிரங்கு - சொறி என்றெல்லாம் தங்கள் வசம் உள்ள சரக்கை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர்.

தி.மு.க. மத்திய அரசிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் விலகியதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி விட்டாராம் - பொறுக்குமா நொய்யரிசிகளுக்கு?

பந்தை அடிக்க முடியவில்லையானால், காலை அடிக்கும் வேலை அவர்களுக்கு மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும்!

தி.மு.க. விலகியது ஒரு கொள்கையின் அடிப்படையில். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிபந்தனையின் அடிப்படையில்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி. அமைச்சரவையி லிருந்து விலகியதே - நினைவிருக்கிறதா? - அது எதன் அடிப்படையில்?

இதனை விடுதலை சொல்லுவதைவிட அன்றைய பிரதமர் வாஜ்பேயி (பி.ஜே.பி.) வாயால் சொல்ல வைப்பதுதான் சிலாக்கியமானது - மிகமிகப் பொருத்தமானதும்கூட!

இதோ வாஜ்பேயி பேசுகிறார், படியுங்கள் - கேளுங்கள்!!

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

வாஜ்பேயி: இல்லை. நியாயமற்ற நிபந்தனை களை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக் கப்படும்பொழுது, இதைப் போன்ற நிபந்தனை களை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் அ.தி. மு.க.வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார்.

சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங் களில் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட் டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலை யுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்கவேண்டும் என்பதுதான் அந்த விலை. அதுமட்டுமல்ல; பல ஊழல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும், அவருடைய நிபந்தனையாக இருந்தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடிபணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவ தில்லை என்பதை உணர்ந்தவுடன், அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.

குமுதம், 20.9.1999

நமது எம்.ஜி.ஆர் ஏடே! இதற்குப் பதில் என்ன?

ஒரு கொள்கைக்காக தி.மு.க. மத்திய அமைச்சர வையிலிருந்து வெளியேறுகிறது - அதற்காக திராவிடர் கழகத் தலைவர் வரவேற்கிறார் - பாராட்டுகிறார்.

தன்னலத்துக்காக - பக்கா சுயநலத்திற்காக செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படலாமா? நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெயலலிதாவை சங்கடப்படுத்த வேண்டுமென்றே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், பலே! பலே!!

தொடரட்டும் அந்தக் கைங்கரியம்

தமிழ் ஓவியா said...

இவள் கண்ணகி


- வி.சி.வில்வம்

கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது, கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக் கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.



நமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப் பிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய சிறிய கேள்வி ?

தமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.

ஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.
நாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய்ச் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

இந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு. சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு!

வாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.

நாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள்.

கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர். தெய்வக்கோலம் பூண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபவத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

தமிழ் ஓவியா said...

கண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை? எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள்? கண்ணகியா தெய்வம்? யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப் பொரிந்து தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப் பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா? கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன், அவளை எப்படி நான் தெய்வமாய்ப் பார்ப்பேன்? என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

கண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக் காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு? எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகி பதில் சொல்கிறார்.

நாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்குக் கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ உன் கணவர் நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் _ இரவு, நிலவு _ -கதிர், நீர் _ நெருப்பு, குளிர் _ வெப்பம், இன்பம் _ துன்பம் என்பதைப் போல காதல் _ -பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி. நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள் என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும் அகற்றப்படுகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன? எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச் செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.

இந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களையும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், நாளை கோவலன் பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடி, காற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.

இப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார்.

தெய்வமாக்குவதும் , வழிபடுவதும் தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?


- கி.தளபதிராஜ்

பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும் என்று புதிய தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்!



தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு பாப்பாத்தி என்றும் ஆண் குழந்தைகளுக்கு அய்யர் என்றும் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களை எல்லாம் இந்த வியாதிகள் பார்ப்பனர் என்றே கூறுவார்களோ?

திராவிட் என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றா? சைதாப்பேட்டையை ஆங்கிலத்தில் சைதாபேட் என்று கூறுவது போல் திராவிட் என்பது இடத்தைக் குறிக்கும்.

திராவிட என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய அனைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். திராவிட என்பது இடத்தைக் குறிக்கும் சொல். திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் திராவிடர் என்பது இனத்தைக் குறிக்கும். தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கலாம். எந்தப் பார்ப்பானாவது திராவிடர் என்று தன்னை சொல்லிக் கொண்டதுண்டா?

தமிழ் ஓவியா said...


மனோன்மணியம் சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர் நீங்கள் என்ன கோத்திரம்? என்று கேட்டாராம். அதற்கு மனோன்மணியம் சுந்தரனார் அளித்த பதில் தன்மானம் மிக்க தென்னாட்டுத் திராவிடன் என்பதே! (மனோன்மணியம் சுந்தரனார் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து) இந்துக்கள், திராவிடர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான், இந்து நாகரீகத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. (நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது). மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டினார் என்று கூறும் இவர்கள், தமிழர் அடையாளத்தை அழிக்கவே திராவிடர் இயக்கங்கள் பயன்பட்டதாக நா கூசாது கூறத்துவங்கிவிட்டனர். தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று கூறப்படும் மறைமலை அடிகள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை. பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டைத் தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர் என்றார்.

இப்படி தாகூரும், மனோன்மணியம் சுந்தரனாரும், மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்கப் பார்க்கிறார்கள்!
பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து நமக்கு விடுதலை தேவைப்பட்டது. அவர்களிடமிருந்து நம் இனத்தைக் காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாளச் சொல் தேவைப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்.
தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை! எந்தக் கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலைத் தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச் சொல்!.

தமிழர் என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள என்றும் பின்னர் திராவிடன் என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும் ஆதாரமாகக் கொண்டு, தம்மையே திராவிடன் என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே தேயம் என்பதுதான் தேசம் ஆனது என்று எந்தப் பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்---_திரமிளர்_-திராவிடர் செய்தியும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர் போராட்டத்தின் (?) விளைவால் அமையப் போகும் தமிழ்த் தேசியத்தை எந்தத் திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில் ஈடுபடுகிறார்களா? தமிழ்த் தேசியம் கூடாது திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்தத் தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் உங்களை இப்படிப் பேசவைக்கிறதா?

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு வினாக்கள்

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகை யீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்த போது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம்முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள்செய்தமையால் இத்தலத்திற்கு தாடகையீச்சரம் என்று பெயர் வந்தது.

இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

- மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29-31
உண்மை - 15.5.1983

தமிழ் ஓவியா said...


நமது நாடகம், சினிமா! -பாரதிதாசன்-


சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதை விட வேறே என்னவேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள்.

ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியை சேர்ப்பதற்கும் பெரு நாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்து தீர்ப்பதற்கும், பெரு நோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களை பின்னே தள்ளும்.

தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழ்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலை யவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அறியாமக்கள்; தமைக் காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை.

உண்மை - 15.6.1983

தமிழ் ஓவியா said...


வர்க்கப் பார்வையை சிதைக்கும் சாதி


பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் தத்துவம் வேத சாஸ்திரக் கருத்துக்களோடு இணைந்து இந்தியாவில் சமூக ஆதிபத்தியக் கருத்தாக நிலைநாட்டி வருவது பிராமணியம் என்பதாகும்.

இந்தியாவைத் தவிர உலகில் மற்றெல்லா நாடுகளிலும், குறிப்பாக மேலை நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் அடிப்படையில் ஆதிபத்தியம் நிலவியது. பொருள் உற்பத்தி உறவு முறையில் - அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகார ஆதிக்கம் வகிக்கும் வர்க்கம் மேலான வர்க்கமாகக் கருதப்பட்டது.

உதாரணமாக மன்னர்கள் நிலப்பிரபுக்கள் முதலாளிகள் உயர்வான சமூக அந்தஸ்து படைத்தவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில் மேற்கூறியவாறு வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு எனும் சமூக அந்தஸ்து நிலவி வந்த போதிலும் இவை அனைத்திற்கும் மேலாக - முதன்மையாக பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் சாதிய முறை ஏற்படுத்தப்பட்டது வேத சாத்திர கருத்துக் களேயாகும்.

இந்தியாவில் அடிமை முறையும், நிலப்பிரபுத் துவ உற்பத்தி உறவுமுறையும், பின்னிப் பிணைந் திருந்த சமுதாயத்தில் பொருள் உற்பத்தி உறவு முறையில் அரசியல், பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் என்ற அமைப்பில் ஏற்படும் வர்க்கப் பாகுபாடு அல்லது வர்க்க பிரிவுகளை மக்கள் பார்க்க விடாது தடுத்தும், தடைப்படுத்தியும் வந்தது பிராமணியம் எனும் தத்துவமாகும்.

-எம்.வி.சுந்தரம் எழுதிய சாத்திரப் பேய்களும், சாதிக்கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை) நூலின் பக்கம் 54-55

(சாதியா, பொருளாதார பார்வையா என்று நாம் இதுகாறும் எழுப்பி வந்த கேள்விக்கு பொருளாதாரமே என்று கிளிப்பிள்ளைப் பாடம் சொல்லி வந்த மார்க்ஸிஸ்டுகள் இன்றைய தினம் நம் கருத்தின் பக்கம் நெருங்கி வந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.)

உண்மை - 15.5.1983