Search This Blog

6.11.12

துன்பம் தரும் தீபாவளி



தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!


தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?


இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?
                ----------------------------தந்தைபெரியார் - “குடிஅரசு” கட்டுரை: 31.10.1937

27 comments:

தமிழ் ஓவியா said...


மாணவர்களே, இளைஞர்களே, எழுக!


மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் அவர்கள் நான் ஒரு சின்ன பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத்தக்க அளவுக்குப் பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படுமானால், அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும்.

எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதினால்தான் சின்னப்பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்து வருகிறது. என் ஆசையெல்லாம் நான் எப்பொழு தும் சின்னப்பையன்கள் மாதிரியே இருக்க வேண்டும் என்பதோடு, பெரிய ஆள்கள் மாதிரி ஆகக் கூடாது என்பதுமாகும் என்று கூறியுள்ளார் தந்தை பெரியார்.
(குடிஅரசு 10.1.1948)

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை ஓட்டம் எத்தகைய வாலிபமானது, முறுக்குத்தன்மை கொண்டது என்பது இதன் மூலம் விளங்கும்.

எந்த ஓர் இயக்கத்தின் எதிர்காலமும் அந்த இயக்கத்தில் இருக்கும் மாணவர்கள், இளைஞர் களைப் பொறுத்ததாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை இதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் களப் பணி ஆற்றி வருகிறது. இதற்கான பொறுப்பேற்றுள்ள தோழர்களும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து பம்பரம் போல சுழன்று பணியாற்றி வருவது பாராட்டத்தக்கதாகும்.

கடந்த ஞாயிறன்று திருச்சிராப்பள்ளி பெரியார் மாளிகையில் நடைபெற்ற மாநில அளவிலான மாணவர் அணி, இளைஞரணி கலந்துரையாடல் மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இருந்தது. 300-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.

வழிகாட்டும் உரையை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அளித்து தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

14 தீர்மானங்கள் என்று கூறப்பட்டாலும், கிட்டத் தட்ட அவை அத்தனையும் வேலைத் திட்டங்கள் என்றே கூற வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இளையோர் உலகம் திசைமாறி கலாச்சாரச் சீரழிவுப் பக்கம் கடல் அலை போல் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

சினிமா, கிரிக்கெட், மது போன்ற போதைகள் அவர்களை அலைக் கழித்துக் கொண்டு இருக் கின்றன. உலக மயம் கொள்கை இறக்குமதி செய் துள்ள நுகர்வோர் கலாச்சாரம் இளைஞர்களின் மூளையை மோசமான கலாச்சாரச் சூழலில் சிக்க வைத்து வருகின்றது.

இதனை இடித்துச் சொல்லவோ, சுட்டிக் காட் டவோ தலைவர்கள் இல்லை; அமைப்புகள் இல்லை.

திராவிடர் கழகம் மட்டுமே இந்தப் பணியில் இறங்கித் தீர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பதவிப் போதை என்பது எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாக உள்ளது. அரசியலில் நுழைந்தால் குறுக்கு வழியில் மேலே வரலாம் என்று கணக்குப் போடுவது இன்னொரு பக்கம்.

இந்த நிலையில் முற்போக்கான திசையின் பக்கம், புரட்சிகரமான சிந்தனையின் பக்கம் மாணவர்களை, இளைஞர்களை ஈர்ப்பதற்குத் தீவிரமான பிரச்சாரத் திட்டங்கள் தேவைப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள், வாயிற்கூட்டங்கள், அறிவியல் கண்காட்சிகள் முதலியவற்றின் மூலம் மாணவர்களை நல் வழிப்படுத்தித் தீர வேண்டும்.

கல்லூரிகளிலும், விடுதிகளிலும் மாணவர் கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும். நமது வெளியீடுகளைப் படிக்கச் செய்ய வேண்டும். படிக்க ஆரம்பித்து விட்டால் மாற்றம் வருவது நிச்சயம்தான்.

பகுத்தறிவும், தன்னம்பிக்கையும் இல்லாத மனிதன் எதற்குப் பயன்படுவான்?

நமது இயக்கத்தைப் பொறுத்தவரையில் வெறும் பகுத்தறிவை மட்டும் போதிக்கக் கூடிய இயக்கம் மட்டுமல்ல; ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடிய பண்பாட்டு அமைப்பாகும்.

பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று சொன்ன பகுத்தறிவுப் பகலவன் நமக்கு வழிகாட்டும் தலைமை ஆயிற்றே.

இவற்றை எல்லாம் உள் வாங்கிக் கொண்டு மாணவர் தோழர்களே, இளைஞரணியினரே உங்கள் களப் பணி களேபரமாகத் தொடங்கட்டும்! தொடங்கட்டும்!!

முதலில் உங்கள் பகுதியில் பகுத்தறிவுத் தகவல் பலகையை வைத்து நாளும் அறிவியக்கக் கருத்துக் களை எழுதத் தொடங்குங்கள். அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். அப்படி நிறுவப்பட்ட செய்தியைப் படத்துடன் விடுதலைக்கு அனுப்பி வையுங்கள், பார்க்கலாம்.
6-11-2012

தமிழ் ஓவியா said...


மீண்டும் பிராமணாள் கஃபேயா?


பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை அகற்றுவதா?
திராவிட இயக்க தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் - கழக துணைத் தலைவர் கண்டன உரை

சென்னை, நவ. 6- திருச்சி திருவரங்கத்தில் உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்று இணைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், சேலம் சங்கர் நகர் அரசு ஆதி திராவிட மாணவியர் விடுதியில் இருந்த தந்தை பெரியார், அம்பேத்கர், அண்ணா படங்களை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் அகற்றியதைக் கண்டித்தும் திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (6.11.2012) சென்னையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (6.11.2012) காலை 11 மணியளவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிராமணாள் கபே என்று இருப்பதைக் கண்டித்தும், பார்ப்பன ஆட்சி பரவுவதைக் கண்டித்தும் ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தி.மு.க. மாநில தொண்டரணி செயலாளர் பொள்ளாச்சி உமாபதி, திராவிட முன்னேற்றக்கழக இலக்கிய அணி பொறுப்பாளர் கயல் தினகரன், உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமை உரையாற்றினார்.

இதில் திராவிடர் கழக மண்டல செயலாளர் வெ.ஞானசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த் தசாரதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ்சாக்ரடீஸ், கழக ஊடகத்துறை மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக பொதுக்குழு உறுப்பினர் பொன்னேரி பன்னீர்செல்வம், தென்சென்னை துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் அருண்,

பொன் னேரி நகரத் தலைவர் வே.அருள், சோ.பாலு, ஆ.தமிழ் பிரபு, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வே.ஜோதிராமலிங்கம், இளைஞரணி செயலாளர் வை.கலையரசன், தென்சென்னை தலைவர் கு.செல்வேந்திரன், துணைத் தலைவர் தங்கரமேஷ்,

அமைப்பாளர் மகேந்திரன், மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வட சென்னை திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, மாணவரணி செயலாளர் பார்த்திபன், கழக பாடகர் தோழர் தாஸ், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி குறும்பட பிரிவு பொறுப்பாளர் உடுமலை வடிவேல், புரூனோ என்னா ரெசு, சுரேஷ், மகேஷ்வரன்,

தென்சென்னை துணைச் செயலாளர் கோ.வி.ராக வன், பழனிச் செல்வன், விருகை நாதன், மஞ்ச நாதன், இராமச்சந்திரன் மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் வடக்கு மண்டல செயலாளர் மாறன் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இறுதியாக ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கொள்கைத் தூதுவர் - பால்கர்ட்ஸ்

அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர், மனிதநேயத் தலைவர் டாக்டர் பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரை

சென்னை,நவ.6-அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியரும், மனிதநேய அமைப்பின் தலைவருமான டாக்டர் பால்கர்ட்ஸ் (Dr. Paul Kurtz) அவர்கள் 2012 அக்டோபர் மாதம் 20ஆம் நாள் காலமானார். பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நவம்பர் 5ஆம் நாள் மாலை நடை பெற்றது.

பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினை திறந்துவைத்து இரங்கல் உரையாற்றினார். கூட்டத்தில் பொருளாதார நிபுணரும், சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் மற்றும் பகுத்தறி வாளர் கழகத்தின் மேனாள் தலைவர் முனைவர் மா.நன்னன் ஆகியோர் உரையாற்றினர்.

பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை: டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:

ஒருவர் காலமாகும் பொழுது ஏற்படுகின்ற வருத்தத் தின் அளவு அவர் சமுதாயத்திற்கு எந்த அளவிற்குப் பயன்பட்டார் என்பதைப் பொறுத்ததாக அமையும் என்று தந்தை பெரியார் கூறுவார். அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் மறைவு நமக்கெல்லாம், மனிதநேயம் தழைத்திடப் பாடுபடும் அமைப்புகளுக்கெல்லாம் மாபெரும் இழப்பை, வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பல அறிஞர்கள் சிந்தனையாளர் களாக விளங்கியுள்ளார்கள். அறிவியல் அறிஞர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். டாக்டர் பால்கர்ட்ஸ் துணிச்சல் மிக்க சிந்தனையாளர். தான் சிந்தித்ததை துணிச்சலாக வெளியிட்டவர். மனிதர்களுக்கு மனித நேயம் முக்கியம்; வாழ்க்கையினை அமைதியானதாக ஆக்கி வாழ்ந்து மகிழ வேண்டும்; வாழும்பொழுது மனநிறைவில் திளைக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அமெரிக்க நாட்டில் நாத்திக மனப்பான்மையுடன் பலர் இருக்கிறார்கள். ஆனால் தங்களை நாத்திகர் என வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பெரியார் போட்டுத் தந்த பகுத்தறிவுப் பாதையில் பெரும்பான்மையானவர்கள் பயணித்து தங்களை நாத்திகர் என வெளிப்படையாகக் காட்டுவதில் உலகத்திலே பெரும்பான்மையானவர்களைக் கொண்ட மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். நாத்திகர் உலகிற்கு தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது.

உலகில் மத அடிப்படையில்தான் போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மதம் அமைதியான வாழ்வினை அளிக்க வில்லை. பகுத்தறிவிற்கு மதம் புறம்பானது. பகுத்தறி வாளர்களுக்கு மதம் பிடிக்காது; மதமும் பிடிக்காது.

டாக்டர் பால் கர்ட்ஸ் மனிதநேயம் என்பதை மதவாதிகளின் பிடியில் இருந்து மீட்டு மதச்சார்பற்ற மனிதநேயம் (Secular Humanism) என அடையாளப் படுத்தி வலியுறுத்தி வந்தார். Living without Religion (மதம் நீங்கிய வாழ்வு) என ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி யுள்ளார். அழகான ஒரு புதிய ஆங்கிச் சொல்லை உருவாக்கினார். Eupraxophy என்பதே அந்த சொல். மதம் என்ற வேர்ச்சொல் ஆங்கில மொழியில் கிடையாது. Religion என்பது டச்சு மொழிச் சொல்லாகும். டச்சு மொழியில் Religion என்பதன் பொருள் கடவுளுக்குச் சேவை செய்வது என்பதாகும். ஆங்கிலத்தில் Religion என்ற சொல் ஆரம்பத்தில் கிடையாது.

தமிழ் ஓவியா said...


மனிதரை மேம்படுத்த மதம் தேவையில்லை. மதம் மனிதனை பின்னடையவே செய்திடும். Eupraxophy எனும் சொல்லில் Eu என்பது நல்லது என பொருள்படும். Praxis என்பது செயல் ஆகும். Sophia என்பது அறிவுடைமை (Wisdom) என பொருள்படும். எனவே eupra xophy என்பதுதான் முழுப்பொருள் நல்ல நடைமுறைக்கான அறிவுடைமை (Good practical wisdom) எனக் கொள்ளலாம்.

மனித நேயம் என்பது மதமல்ல என்பதை வலியுறுத்த eupraxophy எனும் ஆங்கிலச் சொல்லை புதிதாக உருவாக்கி மானிடத் திற்கு அளித்தவர் டாக்டர் பால்கர்ட்ஸ். மதம் என்பதே மற்றவர்களை புண்படுத்து வதாகும். சிந்திக்காதே! நம்பு! ஏற்றுக்கொள்! கேள்வி கேட்காதே! என தடைபோடுவது மதமாகும். மனித நேயத்தின் முழுப்பயன் மானிடத்திற்கு கிடைக்க வேண்டுமானால் மனிதநேயம் மதமாக இருத்தல் கூடாது. மதத்தின் பிடியிலிருந்து மீட்கப்படவேண்டும். என சிந்தித்து, தனது கருத்தினை நடைமுறைப் படுத்தியவர் பால் கர்ட்ஸ் அவர்கள் - தனது சிந்தனை களை பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வடித்து அதைப் பதிப்பிப்பதற்காக புரோமிதியஸ் புக்ஸ் (Prometheus Books) எனும் வெளியீட்டகத்தினை நிறு வினார். தனது புத்தகங்களோடு, பிற அறிஞர்களின் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிட்டார். புரோமிய தியஸ் என்பது கிரேக்க புராணப் பெயராகும். பெரியார் இயக்கத்துடன் தொடர்பு

மனிதநேயத்தினை வலியுறுத்திய புராண காலத்தில் வாழ்ந்தவர் பெயராகும். டாக்டர் பால்கர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு பம்பாயில் பெரியார் இயக்கத்திற்கு அறிமுகம் ஆனவர். அது முதல் பெரியாரின் பணிகளைப் படித்து அறிந்து, கேட்டு அறிந்து பெரியாரது இயக்கத் தின்பால் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அமெரிக்க நாட்டிலுள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தினர் அவருடன் தொடர்பில் இருந்தனர். அமெரிக்கா செல்லும்பொழுது அவரது இடத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல 2007ஆம் ஆண்டில் நமது அழைப்பினை ஏற்று சென்னை-பெரியார் திடலுக்கு வருகை தந்தார். கருஞ்சட்டைத் தோழர்க ளுடன் கலந்துரையாடினார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய மனித நேய மேம்பாட்டுப் பணியினை பெருமைபடுத்தும் விதமாக மதிப்புறு முனைவர் (D. Litt)
பட்டத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வழங்கியது.

பெரியார் இயக்கம் நடத்திடும் கல்வி நிலையங்களை பார்த்துவிட்டு ஒரு பகுத்தறிவு இயக்கம் கல்வி மேம் பாட்டுக்கு இந்த அளவிற்கு செயல்பட முடியுமா? என வியந்து பாராட்டினார் டாக்டர் பால்கர்ட்ஸ்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை பிறநாடுகளில், தமது எழுத்துகளின் மூலம் பரப்பிடுவதில் ஒரு குறிப்பிட்ட பங்காற்றியவர் டாக்டர் பால்கர்ட்ஸ். பெரியார் கொள்கை பரப்பு தூதுவர் என்பது மிகவும் பொருத்தம். தந்தை பெரியார் உலகமயமாகும் சூழலில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்கள் காலமானது நமக்கெல்லாம் பேரிழப்பாகும். டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களது சிந்தனைகள், போற்று தலுக்குரியன. அவருடைய மனிதநேய மேம்பாட்டிற்கான பங்களிப்பு நினைவு கூர்ந்து பாராட்டப்பட வேண்டியது. வாழ்க பால்கர்ட்ஸ் சிந்தனைகள். வாழ்க அவரது புகழ்!

தமிழ் ஓவியா said...

-இவ்வாறு தமிழர் தலைவர் பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார்.

முனைவர் மு.நாகநாதன் உரை

டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் குறிப்பிட்டதாவது:
பொதுவுடைமை தத்துவத் தந்தை காரல் மார்க்ஸின் துணைவியார் ஜென்னி மார்க்ஸ் தனது கணவருக்கு துணையாக இருந்த ஒரு நாத்திகப் போராளி. தந்தை பெரியாருக்கு வாழ்க்கைத் துணைவியாக, இயக்கத் துணைவியாக, அவரது மறைவிற்குப்பின் இயக்கத்தினை வழி நடத்திய பெருமைமிக்க அன்னை மணியம்மையார் பெயரில் அமைந்துள்ள இந்த மன்றத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடை பெறுவது சிறப்புக்குரியது.
அமெரிக்க நாட்டில் நாத்திக கருத்துகள் பரவலாக இருக்கும் நிலையினை எதிர்த்து கடவுள் பற்றினை வளர்த்தெடுக்கும் விதமாக லட்சக்கணக்கில் டாலர் களை செலவழிக்கும் குழுமங்கள் உருவாகி உள்ளன. இத்தகைய சூழல் நிலவும் அமெரிக்க நாட்டில் டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய நாத்திகப் பணி, அறிவியல் மனப்பான்மை வளர்ப்புப் பணி, மனிதநேய பணி அளப்பரியது; மகத்தானது.

1973ஆம் ஆண்டு அமெரிக்க மனிதநேய சங்கம் (American Humanist Association) வடித்துக் கொடுத்த மனிதநேயர் அறிக்கை (Humanist Manifesto) தயாரிப்பில் டாக்டர் பால் கர்ட்ஸ் முக்கிய பங்காற்றினார். மூடநம்பிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். உலகியலை மதச்சார்பற்ற வகையில் பார்க்கும் உளப்பாங்கு உருவாகிட அயராது சிந்தித்து உழைத்தவர் அந்தப் பெருமகனார். தனது எழுத்துகளில் அத்தகைய சிந்தனை களை வலியுறுத்தி கூறியவர். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி மார்கண் டேய கட்ஜு ஊடகங்களைத் தாக்கும் போதைகளாக மத மூடத்தனம், சினிமா, மட்டைப் பந்து ஆகியவற்றைக் குறிப் பிட்டார். தந்தை பெரியாரின் இயக்கமும் அதன் இன்றைய தலைவரான வீரமணியார் அவர்களும் அந்தப் போதை எதிர்ப்புப்பிரச்சாரம்தான் செய்து வருகின்றார். மனித நேயம் தழைப்பது பகுத்தறிவா ளர்கள் கையில் தான் உள்ளது. மதம் நீங்கிய மனிதநேயத்திற் காகப் பாடுபட்டவர் பால் கர்ட்ஸ். பெரியார் இயக்கத்தின் உற வோடு சமு தாயப் பணி ஆற்றிய வர். பால் கர்ட்ஸ் அவர்களின் நினைவுகள் மனிதநேயம் மனித ரிடம் பெருகிட உறுதியாகப் பயன்படும், பயன்படுத்திட வேண்டும்.

முனைவர் மா.நன்னன்

பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர், தமிழாய்ந்த பகுத்தறிவு அறிஞர் முனைவர் மா.நன்னன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

பகுத்தறிவாளர்களுக்கு, மனிதநேயர்களுக்கு நாடு, மொழி, எல்லைகள் கிடையாது. அவர்களது சிந்த னைகள், செயல்பாடுகள் உலகளாவியவை. ஒருநாட்டு எல்லைக்குள் அவர் களைச் சுருக்கிவிடக் கூடாது. பால் கர்ட்ஸ் அத்தகைய ஒருமனிதநேயர். இழப்பு என்பது வருத்தத்தை அளித்தாலும், மானிட இயல்பு அது. வருத்தத்தில் மூழ்கிவிடாமல், இறந்தவர் ஆற்றிய சமுதாயப் பணியினை நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும்.

அப்பொழுதுதான் மனிதநேயம் மேலும் வலுப்படும். ஒருவரின் மறைவினை காலமாகிவிட்டார் எனக் கூறுதல் மிகவும் பொருத்தமாகும். காலமாகிவிட்ட வருக்கு வைகுண்ட பதவிகள், சிவலோக பதவிகள் மத மூடநம்பிக்கையினால் அளிக்கப்படுகின்றன.

மோசமான வருக்கு நரகபதவி அளிக்க யாரும் முன் வருவதில்லை. மதம், மத உணர்வுகள் என்பதே ஒருவரது விருப்பத்தின் வெளிப்பாடு. பொதுவாழ்வுப் பணி புரிந்தோருக்கு பகுத்தறிவாளர் இரங்கல் கூட்டம் நடத்தும் பொழுது வீரவணக்கம் எனச்சொல்வதை விடுத்து காலமான வரை நினைவு கூருகிறோம் என மரியாதை செலுத்துவது பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அண்மையில் காலமான மனிதநேயர் முனைவர் பால்கர்ட்ஸ் அவர்களை நினைவுகூர்வோம்.

இரங்கல் கூட்டத்தின் துவக்கத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு பெரியார் இயக்கத்துடன் உள்ள தொடர்புகளைக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார். டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பின் சுருக்கத்தினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சமா.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் வாசித்து நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார்.

டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் இரங்கல் கூட்டத்திற்கு லண்டன் மாநகரிலிருந்து பன்னாட்டு மனிதநேய நன்னெறி அமைப்பின் (International Humanist and Ethical Union) மற்றும் ஒடிசா பகுத்தறி வாளர் சங்கத்தினர் செய்தி அனுப்பி இருந்தனர்.

இரங்கல் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புதுமை இலக்கிய அணிச் செயலாளர் வீரமர்த்தினி, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, சென்னை மாநகர மேனாள் மேயர் சா.கணேசன் திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் மனிதநேய உணர்வாளர்கள் பலர் வருகை தந்தனர்.

தமிழ் ஓவியா said...


குறையில்லாமல்...


மனக்குறை இல்லாமல் வாழ வேண்டு மென்றால் வசதியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழ வேண்டும். (விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...

தீபாவளி நம்முடையதன்று



அய்ப்பசி திங்களின் தீபாவளி நம்முடையதன்று. அது நரக சதுர்த்தசி என்ற பெயரால் வந்தேரியாய்ப் புகுந்து கொண் டது. தீபாவளி என்றால் விளக்கு வரிசை அல்லது மாலை என்று பொருள். (தீபம்_ஆவலி) இது வட மொழிச் சொல். நாம் இந்நாட் கொண்டாடும் அய்ப்பசித் தீபாவளியில் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைக்கிற வழக்கம் காணவில்லை.

சி.கே. சுப்பிரமணிய (முதலியார்) பி.ஏ., (பொங்கலும் தமிழர் விழாக்களும், செந்தமிழ்ச் செல்வி, ஆறாம்சிலம்பு -_1928)

***

அய்ப்பசித் திங்களில் மதுரை நாயக்கர்கள் தீபாவளிப் பெருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மக்களும் இதைச் சிறப்பாகக் கொணடா டினார்கள். இதுகுறித்து வெவ் வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும் தீபாவளிக்கும் தொடர்பே இல்லை. தீபாவளி நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் புத்தாடை உடுத்திப் பலவகைச் சிற்றுண்டிகளை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். தீபாவளி தமிழகத்தில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட் டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென்தமிழ் நாட்டு மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கற்பட்டு, வடஆற்காடு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை.

மதுரை நாயக்கர் வரலாறு (பக்கம் 430)
அ.கி.பரந்தாமனார்.
தகவல்: இரா.கு. இராமசாமி, இராவத்தூர், கோவை

தமிழ் ஓவியா said...

அடக் கடவுளே!


நான் சமீபத்தில் ஒரு இந்திப் படம் பார்த்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், இது வழக்கமான சினிமா விமர்சனம் அல்ல. காரணம், நான் பார்த்தது வழக்கமாக நாம் பார்க்கும் படம் அல்ல...

ஓ மை காட் (OH MY GOD) எனும் புதிய இந்திப் படத்தில் கதாநாயகன், நாயகி, டூயட், காதல் காட்சிகள், செக்ஸ் என்று எதுவுமில்லை. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் இரண்டே வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறது.

இந்த கதையின் நாயகன் காஞ்சிலால் மெஹ்தா, ஒரு நாத்திகன். துளிகூட கடவுள் நம்பிக்கை யில்லாதவன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களின் மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடுவான். கடும் மழை பெய்த ஒருபொழுதில் இவனது கடை சிதைந்து போகிறது. உள்ளேயிருந்ததோ ரூ.40 லட்சம் மதிப்புமிக்க கடவுள் சிலைகள். எல்லாம் நாசம். நல்லவேளை, கடையை ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷ்யூரன்ஸ் செய்திருக்கிறான். அந்த காப்பீட்டு தொகையை கேட்டு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை அணுக, அவர்கள் பணம் தர மறுக்கிறார்கள். புயல், மழை, பூகம்பம், சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்டால் இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைக்காது. காரணம், இவை Act of GOD (கடவுளின் செயல்) ஆம்! இந்த விஷயம் காப்பீட்டு ஒப்பந்தத்தில் இருக்கிறதாம்.

அவ்வளவுதான். கடவுள் நம்பிக்கையில்லாத காஞ்சிலால் மெஹ்தா கடவுள் மீது வழக்கு போடுகிறார். கடவுள் இருந்தால்தானே நேரில் வருவார் என்கிறார். கடவுளின் பெயரால் இந்தியாவில் பிரபலமான மூன்று சாதுக்களின் மடங்களுக்கு நோட்டீஸ் பறக்கிறது. அவர்கள் கோர்ட்டில் ஆஜராகிறார்கள். காஞ்சிலால் மெஹ்தாவிற்கு ஆதரவாக யாரும் வாதாட மறுப்பதால் அவரே கோர்ட்டில் வாதாடுகிறார்.

தமிழ் ஓவியா said...


இந்த வழக்கு விஷயம் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் பிரபலமாக, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மற்ற மத மக்களும் காஞ்சிலால்உடன் சேர்ந்து போராட, இஸ்லாமிய மத அறிஞர்களும், கிறிஸ்துவ பாதிரியார்களும் கோர்ட்டுக்கு வருகின்றனர்.

இந்த இயற்கை பேரழிவுகளுக்கு எங்க கடவுள் காரணமில்லை... அவன் கருணைமிக்கவன், என்கிறார் இந்து சாமியாரான ஹித்தேஷ்வர் மஹராஜ்.

அப்ப எங்க கடவுளுக்கு மட்டும் கருணையில்லையா? என்று மௌல்வியும், பாதரும் ஆவேசப்பட, யாருடைய கடவுள் இந்த பேரழிவுகளை செஞ்சதுன்னு நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள், என்கிறார் காஞ்சிலால் மெஹ்தா.

ஒரு கோடி கேட்டு ஒரு தனிநபரால் தொடரப்பட்ட வழக்கு, மற்றவர்களும் அதில் சேர்ந்து கொள்ள 400 கோடி தரவேண்டிய நிர்பந்தம் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு. அதனால் இது கடவுளின் செயல்தான் என்பதை நிரூபிக்க அவர்கள் போராடுகிறார்கள். இது கடவுள் செயல் அல்ல என்று மதகுருமார்கள் கூறுகிறார்கள்.

வேத புத்தகங்களை ஆதாரமாக வைத்து இயற்கை பேரழிவுகளுக்கு கடவுள்தான் காரணம் என்பதை கோர்ட்டில் நிரூபிக்கும் காஞ்சிலால் மெஹ்தாவிற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 400 கோடியை இந்து மத பீடங்கள் தர முடிவு செய்கின்றன. இந்த முடிவுக்கு பின்னணியாக அவர்கள் முன்வைக்கும் காரணம் அதிர்ச்சிகரமான கிளைமேக்ஸாக நம் முன் விரிகிறது.

காஞ்சிலால் மெஹ்தாவை கொன்று, அவரையும் கடவுளாக்கி அதன்மூலம் 400 கோடியை ஒரே வருடத்தில் சம்பாதித்துவிட அவர்கள் திட்டமிடுகிறார்கள். அது நடந்ததா, இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

இந்தப் படத்தை முதல் முறையாக பார்த்தபோது நான் மிரண்டு போனேன். ஒருவேளை தந்தை பெரியார் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றும் வசனங்கள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் வசனங்களை கவனிக்க தவறினால் நஷ்டம்தான். அப்படி ஒரு பகடி படம் முழுக்க நிறைந்திருக்கிறது. கடவுளைப்பற்றியும், மூடநம்பிக்கைகளையும் படம் முழுக்க, ஒவ்வொரு காட்சியிலும் எள்ளி நகையாடியிருக்கின்ற விதம், அதை நகைச்சுவையாக காட்டியிருக்கிற விதத்தினால் படம் ஆத்திகர்களையும் யோசிக்க வைக்கிறது. இதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி. ஆத்திகர்களின் மனம் புண்படாதபடி நாத்திகக் கருத்துக்கள் அவர்களே ஏற்றுக்கொள்ளும்படி செய்ததற்கு படத்தை எழுதி இயக்கிய அறிமுக இயக்குநர் உமேஷ் சுக்லாவிற்கு பாராட்டுகள்... இந்தப் படத்தை பற்றி தமிழ் மக்களுக்கு சொல்வதற்காக இப்படத்தை தொடர்ந்து பலமுறை பார்த்தேன். ஒவ்வொருமுறையும் மக்கள் கூட்டம் தியேட்டரில் அதிகமானது. இந்திய சினிமாவில் கடவுளை போற்றி, மூடநம்பிக்கைகளை வளர்க்கும்விதத்தில் எண்ணற்ற படங்கள் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாவில் சொல்லவே தேவையில்லை. மிக அதிகளவில் பிற்போக்கு படங்கள் வந்துள்ளன. மூடநம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்டு சில படங்களில் சில காட்சிகள் வரும்.

தமிழ் ஓவியா said...

ஆனால், ஒரு படம் முழுக்க கடவுள் இருக்கிறானா? அவன் இருந்தால் நேரில் வரட்டும் என்று கேட்டபடி இரண்டு மணிநேரம் மக்களை தங்கள் நாற்காலியில் கட்டிப்போட்ட வித்தை நடக்கிறது என்றால்... அது இப்பொழுதுதான். இந்திய சினிமா பேசத்தொடங்கி 100 வருஷம் ஆகும் இந்தப்பொழுதில் முதல்முறையாக

அது உண்மையை பேசுகிறது ஓ மை காட்! படம் மூலமாக...

படத்தின் கதையின் நாயகனாக பரேஷ்ராவில் என்கிற இந்தி சினிமாவின் பிரபல நடிகர் நடித்திருக்கிறார். இவர் பெரிய ஹீரோ நடிகர் கிடையாது. ஆனால், திறமையுள்ள கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். காஞ்சி விருத் காஞ்சி என்று குஜராத்தியிலும், கிருஷ்ணன் Vs கஷ்ஹையா என்று இந்தியிலும் மேடை நாடகமாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சக்கைபோடு போட்ட நாடகத்தின் சினிமா வடிவமே, ஓ மை காட்...

எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஹித்தேஷ்வர் மஹராஜ், உண்ணாவிரதம் இருப்பதாக மக்களிடம் சொல்லிவிட்டு, டாய்லட்டிற்குள் சென்று சாப்பிடுவது, சாமியார்களின் போலி உலகத்தை தோலுரித்து காட்டுகிறது. லீலாதர் என்கிற சாமியாரின் காலடிபட்ட இடம் ஒன்றரை லட்சத்திற்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது. கோமி மய்யா எனும் பெண் சாமியார் எப்பொழுதும் மேக்கப் போட்டுக் கொள்வதிலேயே தன் பொழுதை கழிக்கிறார். மற்ற மதவாதிகளும் ஆத்திரப்படுபவர்களாகவும், அன்பு இல்லாதவர்களாக இருப்பதாகவும் படம் யதார்த்தமாக காட்டுகிறது.

ஹித்தேஷ்வர் மஹராஜை கிண்டல் செய்ய, இன்றும் ஒரு மணி நேரத்துக்கு கிருஷ்ணன் பால், வெண்ணை சாப்பிடப் போவதாக காஞ்சிலால் மெஹ்தா புரளியை கிளப்பிவிட, தேசமெங்கும் மக்கள் பால், வெண்ணை, மோர், தயிர் எடுத்துக்கொண்டு கிருஷ்ணன் சிலைகளிடம் அதை சாப்பிடச் சொல்லி கெஞ்சுவது, கொஞ்ச வருஷம் முன்பு பிள்ளையார் பால் குடித்ததை நினைவுபடுத்தியது.

மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானத்தில் திடீரென முளைக்கும் அனுமான் கோயிலை, மாணவர்கள் போராடி தூக்கி விடுகின்றனர்.

தொலைக்காட்சி சேனல்கள் ABP காஞ்சிலால் மெஹ்தாவிடம் பேட்டி எடுக்க தொடர்ந்து வற்புறுத்த அவர் சம்மதித்து மக்களுடன் பேசுகிறார். அதில் கடவுளை நம்பியதால் தனக்கு வேலை கிடைத்ததாக சொல்லும் ஒரு இளைஞர், அதற்காக தான் மொட்டை அடித்தாக தனது மொட்டை தலையை காட்ட காஞ்சி கேட்கிறார்.

உன் வீட்டு வாசலில் அசிங்கமான மயிர், ஈறு பேன் டேண்ட்ரஃப் நரைத்த மயிர்கள் கிடந்தால் அது உனக்கு எப்படியிருக்கும்?
அசிங்கமான அருவெறுப்பாக இருக்கும், என்கிறார் இளைஞர். அப்ப அது கடவுளுக்கு மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கும். அந்த மயிரால் கடவுளுக்கு லாபமில்லை. கோயில்களுக்கு அது வியாபாரம். இந்த மாதிரி காணிக்கையாக செலுத்தப்படும் மயிர் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது, என்கிறார் காஞ்சி.

மடாதிபதிகள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர், அதனால் கிடைக்கும் பணத்தில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன என்கிறார்.
வேறென்ன செய்ய முடியும். எல்லாம் கறுப்பு பணம். உங்களுக்கு அய்.டி. பிரச்சினையும் கிடையாது. குட்கா, பான்பராக் விற்று சம்பாதித்தவன் கேன்ஸர் ஆஸ்பத்திரி கட்டுவது போலத்தான் நீங்கள் செய்வதும்...., என்கிறார் காஞ்சி.

இன்னொரு காட்சியில், ஹித்தேஷ்வர் மஹாராஜை குறுக்கு விசாரணை செய்யும் காஞ்சி, உங்களுடைய மடாலயத்தைபற்றி விரிவாக சொல்லுங்கள்? என்கிறார்.

எங்கள் மடாலயம் 22 ஏக்கரில் அமைந்துள்ளது. 320 சிலைகள் உள்ளன. 122 பூசாரிகள் இருக்கின்றனர் என்று பெருமைப்படுகிறார்.

தமிழ் ஓவியா said...


உங்கள் மடாலயத்திற்கு வெளியே எத்தனை பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்று தெரியுமா? அவர்களுக்கு மடாலயத்திற்குள் அனுமதிகூட கிடையாது. இந்த கோயில்கள் ஷாப்பிங் மால்கள். மதநம்பிக்கை எனும் பயத்தை காட்டி இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் இந்த வியாபாரத்தில் Recession வருவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் Recessionல்தான் இவர்களின் வியாபாரம் இன்றும் கொடிகட்டிப் பறக்கும்... என்கிறார் காஞ்சி.

அமர்நாத், வைஷ்ணவ தேவி கோயிலுக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பலர் சாகிறார்கள். கடவுள் ஏன் அமைதியாக இருக்கிறார்? நாடெங்கும் நடக்கும் விபத்துகளில் கார், பஸ், வேன் எதில்தான் சாமி படம் இல்லை சொல்லுங்கள்... என்று கேட்கும்போது கோர்ட் மட்டுமா, அரங்கமே அதிர்ச்சியில் உறைகிறது.

கடவுளை பாராட்டிக்கொண்டே, வாழ்த்திக் கொண்டே ஜால்ரா போட்டா நம் காரியம் எப்படி நடக்கும்? நம்முடைய செயல்களின் விளைவே வாழ்க்கை. உழைச்சாதான் காசு. இல்லேண்ணா பட்டினி. ஜட்ஜ் அவர்களே... ஒருமுறை ஒரு கோயிலுக்கு சென்றேன். அங்கே மக்கள் வரிசையில் பால் செம்புடன் நின்றிருந்தனர். உள்ளே யாரோ பால் குடிக்கப் போகிறார்கள் என்று நானும் ஒரு செம்பு பாலுடன் வரிசையில் நின்றேன். கோயிலுக்குள் சென்றபின்தான் தெரிந்தது, உள்ளே பால் குடிக்கிறவர் யாருமில்லை. ஒரு கறுப்பு கல் மட்டுமே அங்கே இருந்தது... என்று காஞ்சி சொல்ல,

மடையனே. அது கல் கிடையாது. சிவலிங்கம்..., என்று ஆத்திரப்படுகிறார் ஹித்தேஷ்வர் மஹராஜ்.

அத்தனை பேரும் தாம் கொண்டு வந்த பாலை அந்தக் கல்மீது போட, அது வீணாக கால்வாயில் போய் விழுந்தது. ஒரு ஏழை நாட்டிற்கு, எத்தனையோ பேர் பசியுடன் இருக்கும் தேசத்திற்கு தினசரி எத்தனை லிட்டர் பால் இப்படி வீணாக கொட்டப்படு கிறதோ... நான் கொண்டு சென்ற பாலை இப்படி கொட்ட எனக்கு மனசு வரலே. பசித்த ஏழைக்கு அதை கொடுத்துட்டேன் என்று காஞ்சி சொல்ல, கோர்ட்டில் மட்டுமல்ல அரங்கிலும் பலத்த கைத்தட்டல்.

இப்படி கோர்ட்டில் தனது நாத்திகக் கருத்துகளை காஞ்சி தொடர்ந்து வைக்க, மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது.

சமஸ்கிருத மந்திரத்திற்கு அர்த்தம் கேட்டு பூசாரிகளிடம் கேள்வி கேட்க தொடங்குகின்றனர் மக்கள். சரியான அர்த்தம் சொன்னால்தான் காசு என்று கூற, திகைத்து போகின்றனர் பூசாரிகள்.

உடைந்து போன தனது கடையை வாங்க யாரும் முன்வராததை பார்க்கும் காஞ்சி சிரித்தபடி சொல்கிறார்:

உள்ளே சாமி சிலைகள் இருக்கு. 100 வருஷம் கழிச்சு அது வெளியே வந்தா, அந்த இடத்தோட மதிப்பு ஏறும். அங்கே கோயில் கட்டுவார்கள்....

இது சாதாரண ஒரு வசனம் அல்ல. சத்தியம். இந்த இடத்தில் நமக்கு ராமர் ஜென்ம பூமியின் நினைவுதான் வருகிறது. எவ்வளவு எளிமையாக, யதார்த்தமாக பாபர் மசூதியை இடித்ததை அந்த அக்கிரமத்தை வசனகர்த்தா சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

கடவுள், மதம், சாதி, சடங்கு, மூடநம்பிக்கைகள் மனிதன் மனிதனை பயமுறுத்த ஆரம்பித்தவை. அவை பிற்பாடு பெரிய வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டன. மக்களை நேசிப்பதே உண்மையான மதம். ஏழைகளுக்கு உதவுவதே உண்மையான மதம் என்று படம் முடியும்போது, கடவுளை மற, மனிதனை நினை, என்கிற தந்தை பெரியாரின் வாக்கியம் நினைவுக்கு வந்தது.

படத்தில் ஒரு காட்சியில், மக்கள் காஞ்சிலால் மெஹ்தாவின் நாத்திகக் கருத்துகளில் இருக்கும் நியாயத்தை ஏற்று பாராட்டும்போது, அவருடைய மகள் கண்கலங்கியபடி, பிகிசீ நிஹிசீஷி. ‘HAY GUYS. HE IS MY DAD,’ என்று பெருமைப்படுகிறாள்.

முகம் தெரியாத எனது சகோதரர்களான பரேஷ்ராவில், அக்ஷய் குமார், உமேஷ் சுக்லா இவர்களையும் நான் கண்கலங்கியபடி எண்ணி பெருமைப்படுகிறேன். அதேசமயம் பகுத்தறிவு பாதையிலிருந்து புறப்பட்டு, காட்சிகளை ஆரம்பித்து, சினிமாவை ஆட்டிப்படைத்து, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியவர்கள் இங்கே என்ன செய்தார்கள் என்று நினைத்தால் வெட்கத்தில் தலைகுனிகிறேன்.

தன்னை பகுத்தறிவுவாதி, நாத்திகன் என்று கூறும் கமல்ஹாசன் ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக ஹேராம், உன்னைப்போல் ஒருவன் படங்களை எடுத்தார் என்று யோசித்து பாருங்கள். இந்த நேர்மையான ஓ மை காட் படத்தை தமிழாக்கம் செய்து மக்கள்வரை சேர்க்க நாம் முயல வேண்டும்.


- அப்சல்

தமிழ் ஓவியா said...

இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்


ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு:

அய்.நா. மனித உரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, உயர் பாதுகாப்பு வளையங்கள், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2005-இல் திரிகோணமலையில் அய்ந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை, கேலிச் சித்திர ஓவியர் (Cartoonist) பிரகீத் எகினொலிகொட காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

சாட்சிகள், மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற் கான சட்ட மூலம், சேனல் 4 காணொலி தொடர்பான விசாரணை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆன இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய செய்திகள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில், உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டுப் போரின்போது, இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான ஒரு முறைப்படியான சுதந்தர விசாரணை நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தக் கட்டத்தில் இலங்கை பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாள் நடக்கவுள்ள இலங்கைத் தொடர்பான விவாதத்தையடுத்து நவம்பர் 5ஆம் நாள் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற வெளிநாடுகளில் இப்படி ஒரு மனிதநேயம், மனித உரிமை காப்பு உணர்வு ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட முயற்சிகளும் கேள்விகள் வாயிலாக வெடித்துக் கிளம்பும் செய்திகள் வரும்போது, ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டினை உள்ளடக்கி ஆளும் இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமிழ் ஓவியா said...

இதை தி.மு.க. போன்ற ஆளுங் கூட்டணிக் கட்சிகள் வற்புறுத்திட வேண்டும். பிரதமரைப் பார்த்தும், அய்க்கிய முற்போக்கு முன்னணி தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரை நேரில் கண்டும் பேசி, இந்தியப் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகள் மேலும் எப்படி இன்னும் முள்வேலிகள் அகற்றப்படாமல், சிங்களக்குடியேற் றமாக தமிழர் வசித்த பகுதிகள் மாற்றப்பட்டு அங்குள்ள தமிழர்கள் வாழவும் வசதியற்று ழடிஅநடநளள வீடற்றவர்களாகவும் (ஏற்கெனவே நாடற்றவர் களாக்கப்பட்டு விட்டு) உள்ளநிலை, வடகிழக்கு மாகாணங்களில் இராணுவம் தான் சகல சர்வ அதிகாரிகள் என்ற நிலை போர் முடிந்த 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படி ஒரு கொடுமையா - வாழ்வுரிமைப் பறிப்பா என்று கேட்க வேண்டும் - இந்தியா பிரச்சினை எழுப்பிட வேண்டும் அந்த நவம்பர் கூட்டத்தில்.

அய்.நா. சென்ற வெளி உறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அவசர அவசரமாக காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தராதீர் என்று பிரதமருக்கு எழுதுவதில்தான் முனைப்பு காட்டப்படுகிறது. இது மகா வெட்கக் கேடு அல்லவா!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண 1) மத்திய (இந்திய) அரசு முயற்சிகள்

2) உலக மாமன்றமான அய்.நா.வும், அதன் பல்வேறு அங்கங்கள் மூலம்தானே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பரிகாரம் காண முடியும்?

நாம் அழுத்தங்கள் தரலாமே தவிர, ஆக்க ரீதியான பாதுகாப்பும் மீட்டுரிமையும், பெற்றுத் தர மேற்கண்ட இரண்டு அமைப்புகளின் பங்கும் பணியும் கடமையும் தானே முக்கியம்?

எனவே வாக்கெடுப்பிலும் இந்தியாதானே இலங்கையை வழிக்குக் கொண்டுவர தக்கதோர் நிலை எடுக்க வேண்டும்?

மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாக வேண்டும்!

3. விடுதலைப்புலிகளை தமிழர்களை அழித்த இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை இராஜபக்சே அரசு நிறுவி, சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல்!

போர் வெற்றிச் சின்னமா? ஈழத் தமிழர் வாழ்வுரிமையை அழித்த வெறிச் சின்னமா? நடுநிலை நாடுகள் கண்டிக்க வேண்டும். இப்படி ஒரு பழி வாங்கும் மிருக உணர்ச்சி தமிழர்கள்மீது சிங்கள அரசால் நிரந்தரமாகக் காட்டப்பட்டால், அங்கு பழைய - சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதோ சம வாய்ப்பு என்பதோ, பரஸ்பர அன்பு என்பதோ ஏற்படுமா?

இறுதியில் தீர்வு தனி ஈழம்தான் என்று தமிழர்கள் எண்ணிட அவர்களைத் துரத்துவது அல்லாமல் வேறு என்ன?

புலியும், ஆட்டுக் குட்டியும் சர்க்கஸ் கூடாரத்தின் காட்சி வரையில் நட்பாக இருப்பதாகக் காட்ட முடியும் - அது நிரந்தரமாக மாறிவிட்டது என்று எவராவது கூறினால் அதைவிட கேலிக் கூத்து ஏமாளித்தனம் வேறு உண்டா?

உலக நாடுகள் பார்வை, ஈழத் தமிழர்பால் அனுதாபத்தோடு விழுகிறது. இந்திய அரசே, உங்கள் கடமை என்ன?

சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்து நீங்காப் பழியால் தேர்தல்களில் மீளாத் தோல்விகளையும் சுமக்கத் தயாராகப் போகிறதா காங்கிரஸ்?

யோசிக்க வேண்டிய தருணம் இது!

தமிழ் ஓவியா said...

இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்புவிசை!


இது என்ன புதுவிசை?

அறிவியலில்,

1. அணுக்கருவிசை (Nucleous Force)

2. ரேடியக் கதிர்ப்பு விசை (Radio activity Force)

3. மின்காந்த விசை (Electro-Magentic Force)

4. ஈர்ப்பு விசை (Gravitation Force)
என்பதாகப் படித்திருக்கிறோம்; அறிந்திருக்கிறோம்.

இது என்ன புதிதாக ஒரு விசை? அதுவும், இரு பாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசை? இது இயல்பான விசை! உயிரினங்களுக்கு குறிப்பாக மனித இனத்தின் ஆண்-_பெண் இருபாலர்க்கும் உரிய சிறப்பு விசை!

வக்கிரமான வன்செயல்!

இன்று ஊடகங்களான செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் முதலானவற்றில் வரும் விபரீதமான_வெறுக்கத்தக்க, சமூக நல்லுணர்வாளர்க்கு வருத்தத்தையும் இழிவையும் மானக்கேட்டையும் நாணக் கேட்டையும் உண்டுபண்ணுகின்றன.

ஆற்றுப்படுத்தல் ஆகலாம்

பள்ளியில் சில ஆசிரியர்கள் தம்மிடம் பயிலும் பெண்பிள்ளைகளிடம் தகாத வகையில் உறவு கொள்வது; ஆசிரியை, தன்னிடம் பயிலும் மாணவனை இதே வகையில் பயன்படுத்துவது; எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி மாணவன், தனக்குப் பாடம் புகட்டும் ஆசிரியையுடன் விரும்பத்தகாத வெறிவேட்கை வினையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் நடந்துவருவதைக் கண்டு பதைக்கிறோம்; துடிக்கிறோம் ஏன்? இப்படி? என்ன காரணம்? இந்த ஆய்வு அலசல் இவற்றிற்கான ஓர் ஆற்றுப்படுத்தல் (Councel) ஆகவும் இருக்கும்; இருக்கவும் பயன்படலாம்.

இது ஒரு தூண்டுவிசை!

மேலும் ஒரு புதிர்விசையா? இல்லை. இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசை என்பது, ஊரறிந்த _ உலகறிந்த ஒரு சொல்லின், அதன் பொருளின் அறிவியல் விளக்கம்தான் அது! அதுதான் பாலியல் உணர்ச்சி (ஷிமீஜ்) எனப்படும் காதல் எனப்படுவது.

கெட்ட வார்த்தை அல்ல

காதல் என்ற உடனே அது ஏதோ கெட்ட வார்த்தை என்று நம்மில் சிலர் நினைப்பர்; வெறுப்பர்; பேசுவர்.

அப்படி ஒன்றும் அந்தச் சொல் தவறான கெட்ட வார்த்தை அல்ல! இதுபற்றி அறிவியல் வழிநின்று ஆய்வு செய்து அலசல் செய்வது எதிர்கால இளைய தலைமுறைக்குப் பயனுடையதாக இருக்கும்; இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்; நம்புகிறோம். எனவே, அருள்கூர்ந்து முகம் சுளிக்க வேண்டாம்.

பொதுவான கண்ணோட்டம்

கொஞ்சம் தேவை;

கொஞ்சம் நம்பிக்கை;

கொஞ்சம் மனநிறைவு;

கொஞ்சம் சரணாகதி.

இவை எல்லாம் கலந்த சேர்க்கைதான் காதல் என்று அறிஞர் ஃபிஸ்டர் கருதுகிறார். ஆனால், இதுதான் காதல்! என அறுதியிட்டுச் சொல்ல சமூக இயலாளர்களால் இயலாது. உலகம், ஒருமனதாக ஒப்புக்கொள்ளும் காதலுக்குப் பொதுவான விளக்கத்தை யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.
காதலிக்கத் தேவைப்படும் தகுதிகள்

காதலிப்பதற்கு மூன்று முதன்மையான தகுதிகள் வேண்டும் என்கிறார் அமெரிக்காவின் முன்னணிக் காதல் உளவியலாளர்களுள் ஒருவரான லிண்டா ஒல்சன் என்பவர்.

அவர் கூறும் அந்த மூன்று தகுதிகள்

1. ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் அடிப்படையில் பாலின ஈர்ப்பு இருத்தல் வேண்டும்.

2. ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகும் தன்மை (Adjustability) இருத்தல் வேண்டும்.

3. இணைந்து வாழ்வதற்கான உறுதி இருத்தல் வேண்டும்.

உணர்ச்சியாளர்களின் கண்ணோட்டம்

காதல் என்பது , இதயத்தில் மலரும் உணர்ச்சி என்று பெரும்பாலும் உணர்ச்சியாளராகிய பாவலர்கள், இலக்கியவாதிகள் என்று எளிதாகச் சொல்லிவிடுவர். விழியில் நுழைந்து, இதயம் புகுந்து உயிரில் கலந்து உறவு. இப்படி ஒரு திரைப் பாவலர் கூறியுள்ளார்.

அறிவியலில் அடிபட்டுப்போகும்

இதயத்தில் மலரும் உணர்ச்சி காதல் என்ற கருத்து அறிவியலோடு ஒத்தப்போகாது! இக்கருத்து அறிவியலில் எடுபடாது! உணர்ச்சியின் இருக்கை இதயம் அன்று (The heart is not the seat of emotion) என்பது அறிவியல்.

இந்த ஈர்ப்புவிசை எங்கே உருவாகிறது?

இந்த இருபாலியல் உணர்ச்சி ஈர்ப்பு விசை எங்கே உருவாகிறது? இது உருவாவது மூளையில்தான் என்கிறது அறிவியல். நம் உடலில், குறிப்பாக நரம்பு மண்டலத்தில் (Nervous System) நிகழும் வேதியில் மாற்றங்களின் விளைவுதான் (The effect of chemical reaction is nervous system) காதல் எனப்படும் இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்புவிசை என்கின்றனர், அறிவியல் வல்லுநர்கள்.

தமிழ் ஓவியா said...

ஆளாளுக்கு வேறுபடுவது

Phenyelethalamine அல்லது P.E.A. ஆகிய வேதிப்பொருள்களே (Chemical Substances) காதல் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.

இந்த வேதியில் கலவையில் நிகழும் ஏற்ற-_இறக்கங்களைப் பொறுத்துக் காதல் உணர்ச்சியும் ஆளாளுக்கு வேறுபடுகிறது என்கிறார்கள் அவர்கள்.

நனைந்து நனைந்து

காதல் வயப்படும்போது மூளை பினிலெத்தாலமைன் (PEA) என்றும் வேதியியல் பொருள்களால் நனைக்கப்பட்டு அதனால், மனமகிழ்ச்சி, மனக்கிளர்ச்சி, இன்ப உணர்ச்சி இவற்றைப் பெறச் செய்கிறது என்கிறார்கள் காதலியல் அறிவியல் வல்லுநர்கள் வேறுவகையாகவும் அறிவியலாளர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ஆண்ட்ரஜன், எஸ்ட்ரோஜன், அட்ரினலின் ஆகிய சுரப்பிகளின் அட்டகாசம்தான் காதல்

முதல் அறிகுறி

அடிப்படையில், பாலினக் கவர்ச்சி (Sexual Attraction)யே காதலுக்கான முதல் அறிகுறி என்று அறிவியல் கூறுகிறது. அப்படி என்றால், வெறும் காமம் (Lust)தான் காதலா? அல்ல. காமமும் காதலும் கலந்ததுதான் காதல் என்கிறார்கள் சமூக இயலாளர்கள் (Socialogists)

இல்லை! இருக்கலாம்!!

பாலின ஈர்ப்பு விசை எள்ளளவும் இல்லாத காமம் கடந்த காதல் உண்டா? இல்லை! என்கிறது அறிவியல். இருக்கலாம்! என்கிறது சமூக இயல்.
காதலா? காமமா?

நெறியானது காதல்; வெறியானது காமம் _ என்ற கருத்துரு பிற்காலத்தில் உருவாகிவிட்டது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான்! தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியம், திருக்குறள் தொடர்பான நூல்கள் இரண்டும் ஒன்றுதான் என்கின்றன.

சின்னஞ்சிறு கிளையில் மாபெரும் கனி தொங்குவது போல சின்னஞ்சிறிய என் உயிரிலே மாபெரும் காமம் (காதல்) தொங்கிக் கிடக்கிறது என்னும் பொருளில், சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி ஆங்கு

தமிழ் ஓவியா said...

உயிர்தவச் சிறிது: காமமோ பெரிதே எனக் குறுந்தொகைப்பாடல் கூறுகிறது.

மலரைவிட மிக மிக மென்மையானது காமம் என்கிறார் திருவள்ளுவர்; தம் திருக்குறளில் பின்வருமாறு கூறியுள்ளார்.

மலரினும் மெல்லிது காமம் (குறள் 1289)

எளியது எது? அரியது எது?

ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம். ஓர் ஆண்டில் முப்பது பேரைக் காதலிப்பது எளிது; முப்பது ஆண்டுக்காலமாக ஒருவரையே காதலிப்பதுதான் அரியவற்றுள் எல்லாம் அரிது.

காதலில் முப்பால் உணர்வு

காதல் வயப்பட்டவர்களின் மூளையை நுண்ணொளிப்படம் (Scan) செய்து ஆய்வு செய்த ஹெலன் ஃபிஷர் என்னும் உளவியல் வல்லுநர் மூவகை உணர்வுகளைக் கண்டறிந்ததாகக் கூறுகிறார். அவை:

1. காமம்

2. விந்தையான மிகையான கற்பனைக் காதல் உணர்ச்சி (Romantic Love)

3. நீண்டகாலப் பிணைப்பினை முன்னிறுத்தும் காதல்.

காதல் ஏற்பட பெரியார் கூறும் காரணங்கள்

உளவியலார், அறிவியலார் (Pure Scientists) கூறுவதை இதுவரை பார்த்த நாம் இதுபற்றி சமுதாய அறிவியலாளர் (Social Scientist) தந்தை பெரியார் காதல் ஏற்படக் காரணங்களாகப் பின்வருமாறு கூறுகிறார்:

எப்படிப்பட்ட காதலும், ஒரு சுயலட்சியத்தை, தனது இஷ்டத்தை, திருப்தியை கோரித்தான் ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, போக போக்கியத்துக்குப் பயன்படுவதைக் கொண்டோ, அல்லது, மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும்! அப்படிப்பட்ட, காரியங்களுக்கெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாக இருக்கலாம்; அல்லது, அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம் - பெரியார்: குடிஅரசு _தலையங்கம் _ 18.1.1931

பார்த்தீர்களா? தந்தை பெரியார் அவர்கள் காதல் பிறப்பது எவற்றின் அடிப்படையில் என்பதை -மிகத் தெளிவாக கூறியிருக்கும் பாங்கினை நாம் வியக்காமல் இருக்க முடியாது!

தமிழ் ஓவியா said...

வெற்றியா? தோல்வியா?

காதலின் தொடர்ச்சி மணவாழ்க்கை என்ற கோட்பாட்டை வலியுறுத்திய மரபில் (Tradition) வந்தது நமது சமுதாயம். திருமணத்திற்குப் பிறகு தோற்ற காதலும் உண்டு; அதேபோல, திருமணத்தில் முடியாமல் வெற்றிபெற்றதும் உண்டு.
கடைசி வரை காதலா?

காதலித்து மணம் புரிந்தவர்களின் வாழ்க்கை நீடித்து இருக்காது _ என்ற பொதுக்கருத்து பரவியிருக்கிறது. காதலித்துக் கடைசிவரை வாழ்ந்துகாட்டியவர்களும் உண்டு. இடையிலேயே வீழ்ந்துபட்டவர்களும் உண்டு. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும் என்கிற கவிஞர் கண்ணதாசனின் பாடலடிகளை இங்கு நினைவூட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

தெரிந்தும் தெரியாமலும்

வாழ்க்கை என்றால், ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உண்டு; அது, காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் _என்பது ஜார்ஜ் சரண்டின் அவர்களின் காதல் கோட்பாடு. இந்த ஒரே ஒரு மகிழ்ச்சியை எவர் துறக்க முன்வருவார்? அதனால்தான் பெரும்பாலானவர்கள், காதலிக்கிறார்கள் _ தெரிந்தும் தெரியாமலும்; புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும்.

மனிதக் காதல்தான்!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதலில் தெய்வீகக் காதல் என்பது ஒன்றில்லை. அமரகாதல் என்பது கிடையாது. அதையும் தாண்டி, புனிதமான காதலும் இல்லை! எல்லாம் மனிதக் காதல்தான்!

இறுக்கமான பாலியல் ஈர்ப்பு விசை

இறுக்கமான, ஜாதியக் கட்டமைப்பைக் கொண்ட நம் சமூகத்தில் காதலினால் ஏற்படும் சிக்கல் நிறைய உள என்றாலும், இதே காதல்தான் தொடர்ந்து பல தடைகளையும், தளைகளையும் தகர்த்தெறிந்து வென்றும், தோற்றும் முன்மாதிரிகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

இறைந்து கிடக்கும் காதல்

வென்ற காதல்;

தோற்ற காதல்;

வெல்வதுபோலத் தோன்றி தோற்ற காதல்;

தோற்றதுபோலக் காட்டி வென்ற காதல்;

தோற்காமலும் வெற்றி பெறாமலும் நடுவிலேயே கரைந்து போன காதல்;

இவ்வண்ணம், எண்ணிலாக் காதல் உருவெளித்தோற்றங்கள் சமூகத்தின்முன் இறைந்து கிடக்கின்றன.

பரபரப்பு பல சமயங்களில்

காதலைச் சித்தரிப்பதில், பலவாறான காட்சிக் கொடைகளும் உண்டு. பாடல்கள், காட்சிகள், உரையாடல்கள், உரசல்கள் மூலமாகவும் திரையுலகம் ஏற்படுத்திய பரபரப்புகளைவிட திரை நட்சத்திரங் ((Stars)களின் காதல், பல சமயங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.

தொலைக்காட்சித் தொடர்களும் இதற்கு விதிவிலக்கன்று. பிரபலங்களாக இருப்பதாலேயே நட்சத்திரங்கள் காதலிப்பதும், காதல் கிசுகிசுப்பதும், மணந்து கொள்வதும் மணவிலக்குப் பெறுவதும் செய்திகளாகி விடுகின்றன.

கடைசி உண்மை காதல்பற்றி

வரலாறு போலவோ, அறிவியல் போலவோ, காதல் எனும் கவர்ச்சி விசையை யாருக்கும், எவரும் கற்றுக்கொடுத்துப் புரிய வைப்பது இயலக் கூடியது அன்று. எல்லாம் பட்டறிவு பயிற்றுவிக்கும் பாடம்! காதலை ஓர் உணர்ச்சியாக மட்டுமே பார்ப்பதே கடைசி உண்மையாகப்படுகிறது.

இதுவே, இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசையின் கோட்பாடு!

- பேரா.ந.வெற்றியழகன்

தமிழ் ஓவியா said...

உபபாண்டவம்



அந்துமணி பார்த்தது, கேட்டது, படித்தது எனும் தலைப்பில்வரும் கட்டுரைத் தொடரின் (தினமலர்-_வாரமலர் செப். 30) ஒரு பகுதி இங்கே...

எழுத்தாள நண்பர் ஒருவர் தன் பையிலிருந்து தடிமனான எடுத்து விளக்கருகே புத்தகத்தைக் கொண்டு சென்று எல்லோரும் இந்தப் புத்தகத்தைப் பாருங்கள் என்றார். உப பாண்டவம் என பெரிய எழுத்திலும் அதன் கீழ் எழுதியவரின் பெயரும், ஊகித்து அறிய முடியாத முகப்புப் படமும் அச்சாகி இருந்தது.

இந்த நூல் மிடியோகிரிட்டியின் (இரண்டாந் தரமான) மொத்த எடுத்துக்காட்டா இருக்குப்பா... சிறு பத்திரிகையாளர்களுக்குத் தமிழே எழுதத் தெரியாது என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று! ஒரு கிரிக்கெட் வீரரிடம் உள்ள புரோபஷனலிசம் சிறு பத்திரிகைக்கு எழுதுபவர்களிடம் இல்லை... என எடுத்த எடுப்பில் பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்!

அப்படி என்னதான் இருக்கு என்றேன். நீயே படிச்சுப் பாரு.. குறிப்பா 300வது பக்கத்தில் அஸ்வமேத யாகம் பத்தி எழுதியிருக்கான். அதைப்படி என்றார்....

புத்தகத்தைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள எழுத்தாள நண்பரை ஓரம் கட்டினேன்.

இந்த நூலோட மூலப் பிரதி 1923ல் வெளியானதுப்பா. மொத்தம் 18 நூல்கள். 14 ஆயிரம் பக்கங்கள். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் உ.வே.சீனிவாசாச்சாரியார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சமஸ்கிருத பண்டிதராக இருந்தவர். நூலைப் பதிப்பித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த ராமானுசசாரியார். இந்த 18 வால்யூம்களையும் பிரசுரிக்க, தன் சொத்து முழுவதையும் இவர் விற்க நேர்ந்ததாம். இதன் பிரதி இப்போது சிறிரங்கத்தில் உள்ள உ.வே.திருமலாச் சாரியிடம் மட்டுமே உள்ளது. அவர் ஒரு உபந்யாசகர். இந்த மூலப் பிரதியிலிருந்தே, இப்போது நீ கையில் வைத்திருக்கும் உப பாண்டவம் எழுதப்பட்டுள்ளது. போதுமா தகவல் என்றார் நண்பர்...

அடுத்தநாள், உப பாண்டவம் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். புத்தகத்தில் 300 பக்கத்தில் அஸ்வமேத யாகம்பற்றி குறிப்பிடப்பட் டுள்ளது. அது, குற்றுயிராக குதிரை வீழ்ந்து கிடக்கும் இரவில் குதிரையின் அருகே அரசனும் அவன் பட்டத்து அரசியும் உடலில் ஒரு வஸ்திரமும் இன்றி நிர்வாணிகளாக ஒருவரை ஒருவர் நெருங்காமல் ஒரு இரவும், நெருங்கிப் புணரா நிலையில் ஒரு இரவும் படுத்து எழவேண்டும். பின்பு, பட்டத்து அரசியானவள் குதிரையோடு உடல் உறவு கொள்ளவேண்டும். குதிரையை... (அச்சிட முடியாத வார்த்தை) அவளோடு சம்போகம் செய்ய உதவி செய்யும் பணியாளர்கள் இருந்தனர். பின், குதிரையின் குருதியை தன் கேசத்தில், உடலில் அவள் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

யுதிர்ஷ்ட்ரன் தன் மனைவி பாஞ்சாலியோடு இந்த பலி சடங்கை செய்வதற்காக நிர்வாணம் கொண்டு குதிரையருகே படுத்துக்கொண்டான். குதிரையோடு உறவுகொள்ள திரவுபதியை அழைத்தவர்கள் தனியே கூட்டிப்போனார்கள். இந்த அஸ்வபலி சடங்கின் சாந்தி காரியங்களை சகோதரர்களும் (பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்) செய்தனர். பட்டத்து அரசிக்குப் பின்பு அவளுக்கு அடுத்த நிலைப் பெண்களும், அரசனின் உதிர வழிகளும் இதே குருதிச் சடங்கைச் செய்தனர். குதிரையின் குருதியானது உலகில் வெல்லமுடியாத சக்திகள் யாவையும் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர்.

இப்படி எழுதப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞான உலகத்தில் இதெல்லாம் நம்பக்கூடியவைகளாக இல்லையென்றாலும், சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்கள் உண்மை நிலையை விளக்குவரா? என்ற கேள்வியோடு கட்டுரை முடிகிறது.

புராணங்களும் இதிகாசங்களும் அண்டப் புளுகும் ஆபாசமும் நிறைந்தது. அவற்றை தீயிட்டு பொசுக்குங்கள் என்று நாம் சொன்னால் பொங்கி குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

விரைவில் உப பாண்டவம் முழுதும் உள்ளது உள்ளபடியே உண்மையில் வெளிக்கொணர்வோம். காத்திருங்கள்.

- சிவகாசி மணியம், சிவகாசி
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

காலில் விழுவது திராவிட மரபா?


ஒருவருடைய காலில் விழுந்து வணங்குவது அல்லது ஒருவருடைய காலைத் தொட்டு வணங்குவது என்பது வடஇந்தியாவைவிடத் தென்னாட்டில்தான் இன்று அதிகம் வழக்காற்றில் காணப்படுகிறது. இதனை வைணவ சமயம் சரணாகதி என்று குறிப்பிடுகிறது. சரண் புகுதல் என்று கவிஞர்கள் இதனைப் பாடி வைத்துள்ளனர். பாரதி தேடி உன்னைச் சரண் புகுந்தேன் தேசமுத்து மாரி என்று முத்துமாரியைப் பாடுகையில் குறிப்பிடுகிறார். வைணவத்தில் எல்லாப் பொறுப்புகளையும் நீயே கதி என்று பெருமாளிடம் காலில் விழுந்து ஒப்படைத்துவிட்டால் பெருமாள் பார்த்துப்பார் என்று குறிப்பிடுவார்கள்.

அதேபோல் பார்ப்பனர்களிடையே இறைவன் ஊர்வலத்தின்முன் வேதம் ஓதிக் கொண்டு வருபவர்களையோ, அல்லது நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிக்கொண்டு வருகின்றவர்களையோ அவர்கள் வருகையில் சாலையாக இருந்தாலும் விழுந்து நமஸ்கரித்தல் என்பதைச் செய்கிறார்கள்.

அதேபோலச் சமயத் தலைவர்கள் அதாவது ஆச்சாரியாரியர் என்று அழைக்கப்படும் சங்கராச்சாரியார் அல்லது ஜீயர்கள் என்று அழைக்கப்படும் திருவரங்கம் ஜீயர், அகோபிலம் ஜீயர் என்று அழைக்கப்படுகின்ற ஜீயர்கள் வருகின்றபோது சாஷ்டாங்கமாக அதாவது அடிபட்ட மரம் வீழ்ந்தது போல எண்சாண் உடம்பும் தரையில் பட விழுந்து வணங்குகிறார்கள். இதனைத் தெலுங்கில் படிமுக்கு என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு வணங்குவதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நால்வருக்கு உரியதாக வகுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் பெற்றோர்களைக் காலில் விழுந்து வணங்குவது, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை வணங்குவது, தெய்வத்தை அவ்வாறு வணங்குவது என்ற வழக்கம் இருந்து வந்துள்ளது.

நாளடைவில் இப்பழக்கம் பெரியவர்களை விழுந்து வணங்குவது என்று ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் மனினுடைய சராசரி ஆயுட்காலம் அறுபது வயதுக்குக் குறைவாகவே இருந்தது. எனவே அறுபது வயது அடைந்தவர்கள் அதனை மணிவிழா என்றோ, சஷ்டியப்த பூர்த்தி என்றோ கொண்டாடுகையில், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கூட அறுபது வயது கொண்டாடியவர்களை வணங்க வேண்டும் என்ற மூடநம்பிக்கையின் பயனாய் காலில் விழுந்து வணங்குவதோடு, வெள்ளிப்பூ, பொற்பூ என்று பொன்னால், வெள்ளியால் ஆன சிறிய பூக்களைப் பாதத்தில் போட்டு அவர்களை வணங்கினார்கள்.

இப்போது பெரிய மனிதர்கள், ஆச்சாரியார்கள் என்பவர்கள், தண்டனை பெறக்கூடிய குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டு சிறைச்சாலை எட்டிப் பார்த்து அல்ல, சிறைச் சாலையில் வாசம் செய்துவிட்டு வந்தவர்களை விழுந்து வணங்குகிறார்கள்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதன் அல்ல மனித ஜென்மத்தின் கால்களில் விழுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. நம்மைப் போலவே பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து வந்தவர்கள்தானே? எனவே உயர்ந்த பண்பாடு உள்ள மனிதர்களுக்கு மரியாதை செலத்துவது, கைகளைக் குவித்து வணக்கம் செய்வது, வாழ்த்துவது ஆகியன அவர்கள் பண்பால், அறிவுத் திறத்தால், அறவாழ்க்கையினால் உயர்ந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்கு அவற்றைச் செய்வதில் தவறில்லை.

ஆனால் அதை விடுத்து அவர்கள் காலில் விழுந்து வணங்குவது அவர்கள் அரச பதவியில், உயர் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அவர்களைக் காலில் விழுந்து வணங்குவது அது கண்டு அவர்களும் மகிழ்வது அறிவீனம் அல்லவா எனும் கேள்வி எங்கும் கேட்கப்படுகிற கேள்வி.

தமிழ் ஓவியா said...

காலில் விழுந்து வணங்குவது உயர்வானதா என்றால் உயர்வானது, அதனைச் செய்பவர் தவறு செய்பவர், இழிந்தவர் என்றே கருதப்படும் நிலை உள்ளதற்குக் கிராமப் புறங்களில் பஞ்சாயத்துக்கள், தவறு செய்தவர்களை விசாரிக்கின்றபோது அவர்கள் தவறு செய்தவர்களாயின் மன்னிக்கும்படி வாயினால் மட்டும் கூறி வேண்டினால், அவர்களை மன்னிக்க அவர்கள் ஊரார் காலில் விழுந்து வணங்கி வேண்டிக் கேட்கவேண்டும். அதேபோல் திருட்டு முதலியவை செய்தவர்கள் காலில் விழுந்து கதறினால் மன்னிக்கப் பெறலாம். தன்னைக் காதலித்துக் கைவிட்ட ஆடவனின் காலில் விழுந்து கெஞ்கினால் மனம் இறங்குவது உண்டு.

எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் காலில் விழுவது என்பதைத தமிழ்ச் சமுதாயம் ஏற்பதில்லை. தமிழ்ச் சமுதாயம் மட்டும்தானா உலகில் வேறு நாடுகளில் நிலைமை எப்படி?


கிரேக்கத்தில் நடந்த கதை இது. அலெக்சாண்டரின் காலைத் தொட்டு அரிஸ்டாட்டில் அவர் அரசராக விளங்கியபோது, வணங்கினார் என்று வரலாற்றில் ஒரு தகவல் கூறப்படுகிறது.

அறிஞராயும், தத்துவ ஞானியுமான அரிஸ்டாட்டில் அலெக்சாந்தர் அரசர் என்பதால் அவரை வணங்கியபோது, மற்றவர்கள் இதனை ஒரு குறையாக எண்ணி, இவ்வளவு பெரிய மாமனிதரான நீங்கள் போய் அரசரான அவர் காலில் விழலாமா? இது சரியா? முறையா? என்று கேட்டபோது, அரிஸ்டாட்டில் கூறியதாகக் கூறப்படும் பதில் இதுகுறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நான் என்ன செய்வது? அலெக்சாந்தர் என்னுடைய மாணவன்தான்.

இப்போதோ அவர் அரசர். அது மட்டுமல்ல அவன் காலில் இந்தக் கிரேக்கநாட்டின் அரசு அல்லவா இருக்கிறது. எனவேதான் அவன் காலில் விழுந்து வணங்கினேன் என்று பதில் கூறினாராம்.

ஆக இங்கு மட்டுமல்ல அங்கும் கூடக் காலில் விழுகிற பண்பாட்டு நடவடிக்கை உலகின் பார்வையில் குறித்த செயல் என்றுதான் கருதப்படுகிறது. இதனை இங்கே நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும்.

சரி! இந்தக் காலில் விழுந்து வணங்கும் பழக்கம், மரபு, ஆரியப் பண்பாடா? திராவிடப் பழக்கமா? மரபா? என்று ஆராய்ந்தால் வரலாறு என்ன கூறுகிறது?

வரலாறு தெள்ளத் தெளிவாக இது ஆரியப் பண்பாடு என்று காட்டுகிறது. ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக, மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வருகையில் பாரசீகத்தில் நீண்ட நாட்கள் அதாவது பல்லாண்டுகள் தங்கினார்கள்.

அங்கே பாரசீக நாட்டின் மரபு, பண்பாடு அரசனுடைய காலில் விழுந்து வணங்குவது மட்டுமல்லாது, அரசனுக்கு மரியாதை காட்டுவதற்கான அரசனுடைய பாதங்களை அவருடைய அவையில் முத்தமிடுவது என்பது ஆகும். இந்தப் பழக்கம்தான் ஆரியர்களைத் தொற்றிக் கொண்டது.

எனவே, இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர்களுடைய பழக்கம் தாள் பணிவது சரணாகதி ஆவது என்று ஆயிற்று.

இந்த வரலாற்றைச் சொல்லுகையில் மற்றுமொரு வரலாற்றுச் செய்தியையும் தொட்டுக் காண்பிபோம். இந்தக் காலில் விழுந்து வணங்குவது, காலை முத்தமிடுவது ஆகியனவெல்லாம் இசுலாமியர்களிடையே கிடையாது. இசுலாமிய சமயமும் அதனை ஏற்றுக் கொள்வது கிடையாது.

வடஇந்தியாவில் இசுலாமிய ஆட்சி ஏற்பட்டபோது அடிமை மரபு என்று சொல்லப்பட்ட மரபின் அரசராக விளங்கிய சியாசுத்தீன் பால்பன் என்ற இசுலாமிய மன்னர்தான் அரச பதவியில் தெய்வீக உரிமைக் கோட்பாடு என்பதனை நம்பி அதனை நுழைத்தவர்.

தமிழ் ஓவியா said...

அரசருடைய அதிகாரத்தையும், அரச பதவிக்குச் செல்வாக்கையும் புகுத்த விரும்பினார். அவர் முழுமையான வல்லாட்சி அதாவது யாரும், எவரும் அரசரைக் கேள்வி என்று எதுவும் கேட்காமல், அரசருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று விரும்பினர். எனவே அதற்குரிய வழிகள் என்று பல வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்தினார்.

அவர் பாரசீகத்தின் பண்பாடு ஆன அரசருடைய முன் விழுந்து படுத்து வணங்க வேண்டும் என்றும் கட்டளையையும், அரசருக்கு மரியாதை செலத்தும் வகையில் அரசருடைய அவையில் அதாவது பலரும் கூடியுள்ள, பலரும் பார்க்கின்ற அவையில் அரசரின் கால்களுக்கு முத்தமிடுதலையும் அறிமுகம் செய்தார்.

அந்தப் பழக்கம் இன்றும் நம் அரசியல்வாதிகளிடம் தொற்றிக் கொண்டு உள்ளது. எனவே மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள், அவைத் தலைவர்கள் முதலமைச்சர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தனர். அவ்வாறு விழுந்த புகைப்படங்களும் பத்திரிகைகளில் இடம்பெற்றன.

பெற்ற தாய், தந்தையர் காலில் விழுகின்றானோ இல்லையோ, அரசில் உயர்பதவி வகிக்கும் முதலமைச்சர் காலில் விழுந்தனர். இதில் வேடிக்கை பேரன், பேத்தி எடுத்தவர்கள் கூட, அவர்கள் காலில் மற்றவர்கள் விழும் நிலை எய்தியவர்கள் கூடச் சம்பந்தம் இல்லாத -_ ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் காலில் விழுந்தனர்.

இங்கே நாம் காணும் வேடிக்கை இது. சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் வயதாகாதவர்கள் என்றாலும்கூட அவர்கள் காலில் சாமி, சாமி என்று விழுவதைக் கார்த்திகை மாதம் பிறந்ததுவிட்டால் காணலாம்.

பாக்யராஜ் திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி. பாக்யராஜ் நடித்த ஒரு கை ஓசை திரைப்படத்தில் பாக்யராஜ் மஞ்சள் வேட்டி அணிந்து சாமியாடியாகி விடுவார். அவரைப் பெற்ற தகப்பன், மகன் சாமியாடியானதால் காலில் விழுவார்.

அப்போது பாக்யராஜ் மனத்தில் இளம் வயது நினைவுகள் பின்புலத்தில் ஓடும். அப்போது சிறுவனாக இருக்கையில் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு தந்தை அடிக்கத் துரத்தியது நினைவுக்கு வரும். அன்று தன்னை அடிக்கத் துரத்திய தந்தை இன்று காலில் விழுவதை எண்ணி பாக்கியராஜ் மகிழ்வார்.

இன்று அதுபோல் அரசியலில் பலருக்கும் தன்னிடம் பதவி, பரிசை, ஆள் அம்பு, சேனை இருக்கையில் காலில் விழுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது போலும்.

உண்மையான துறவு உடையவர்கள் அவ்வாறு தம் காலில் விழுபவர்கள் தம் காலில் விழவில்லை, இறைவன் தம்மிடம் உறைவதாக எண்ணிக் கருதுகிறார்களாம்.

எது எப்படியோ, திராவிடன் எவருடைய காலிலும் விழமாட்டான்.

- முனைவர் பேரா.ந.க.மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...



சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ள தாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.

உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன?

என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசை யிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.

அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

தமிழ் ஓவியா said...

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.

செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது என்று நினைத்து உருவாக்கப்பட்ட நல்ல நேரம்,கெட்ட நேரம் என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்) இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங் களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை
(3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?

நன்றி: அறிவுத்திருக்கோவில் ஆண்டு மலர்

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் இவர்கள்!

- கி.தளபதிராஜ்

தீரர்(?) சத்தியமூர்த்தி அய்யர்!

இந்தி எதிர்ப்பு போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939ம் ஆண்டு "பாஷா ஏகாதிபத்தியத்தை" ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது.

"என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!.

சர்க்கார் உத்தியோகங் களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்திவிடுவேன்! காந்தியார் உயிருடன் இருக்கும்போதே, இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன். ராமராஜ்ஜியம் என்பது, வர்ணாஸ்ரம முறைப்படி ஒவ்வொருவனும், அவனவன் ஜாதி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியது தான். ராமர் காலத்தில் மக்கள் இந்த வர்ணாஸ்ரம முறைப்படியே, அதாவது பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்துகொண்டு திருப்தியாய் இருந்தான். அதனால் யார் மீதும் வருத்தப்பட வில்லை.என்றார்.

அருப்புகோட்டையில் 1937 ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் இராஜதுரோகிகள் என்றும், அவர்கள் மீது ஆயுள் தண்டனை அல்லது தூக்குத்தண்டனை விதிக்கவேண்டும் என்றும் கொக்கரித்தார்.

குழந்தை திருமண தடை சட்டமசோதா

பெண்கள் திருமண வயது 14 ஆக உயர்த்த வேண்டும் என்று கருதி, குழந்தை திருமண தடை சட்ட மசோதாவை இந்திய சட்டசபையில் சார்தா என்பவர் கொண்டுவந்தபோது, சட்டசபையிலும் வெளியிலும் அதை விமர்சித்ததோடு, தனது பெண் குழந்தைகளுக்கு பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்போவதாக சூளுரைத்தார் சத்தியமூர்த்தி!. பெண்களுக்கு பருவமடைந்த பின்னர் திருமணம் செய்துவைப்பது இந்து மத மரபுக்கு எதிரானது என்று வாதாடினார். தனது கருத்துக்கு ஆதரவாக "பராசர் ஸ்மிருதி" யிலிருந்து ஸ்லோகங்களை எடுத்துக்காட்டினார்.

பிராமணன் கப்பலேறக் கூடாது என்றும் தன் பாஷையை விட்டு அந்நிய பாஷையை படிக்கக்கூடா தென்றும் அந்தப் "பராசர் ஸ்மிருதி" சொல்லுகிறதே!, இவர் ஏன் சீமைக்குப் போனார்? மிலேச்சப் படிப்பான பி.எல் ஏன் படித்தார்? கடல்கடந்து போனவனையும் அந்நிய பாஷையை படித்தவனையும் பிரஷ்டனென்று சாஸ்திரம் சொல்லுகிறது.பிரஷ்டனான இவர் வைதீகச் சபையில் தன்னை பார்ப்பனராக நினைத்து, "பராசர் ஸ்மிருதி"யை பேசுவதே குற்றமல்லவா? என்று பார்ப்பனர்களின் வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் அனைத்திலும் புலமை பெற்றிருந்த சுவாமி கைவல்யம், சத்தியமூர்த்தி அய்யரைப்பார்த்து கேள்வி எழுப்பினார்.

கைவல்யம் கேட்ட அதே கேள்வியை, "ஸ்மிருதி"யின் இந்த ஸ்லோகங்களை அய்யரின் கண்ணாடி அணிந்த கண்கள் பார்க்கத் தவறிவிட்டதா? என்று நக்கலாக எழுதினார் குத்தூசி.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதா சுப்பராயன் தலைமையிலான சென்னை சட்ட மன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்துக்கான மசோதாவை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கொண்டுவந்தபோது அது இந்து மரபுக்கும், ஆகம விதிகளுக்கும் எதிரானது என்று சொல்லி, கடுமையாக எதிர்த்தவரும் இதே சத்தியமூர்த்தி அய்யர்தான். கடவுளுக்கு சேவகம் செய்வதற்காகவே தேவதாசி முறை கொண்டுவரப்பட்டது என்று வாதாடினார். அப்படிப்பட்டவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் என்றார். அதைகேட்டு வெகுன்டெழுந்த முத்துலெட்சுமி, அப்படியானால் எங்கள் வீட்டுப்பெண்கள் இதுவரை கடவுளுக்கு சேவகம் செய்து மோட்சம் பெற்றது போதும்!. விருப்பப்பட்டால் அய்யர் தங்கள் வீட்டுப்பெண்களை இனி அந்தப் பணி செய்ய அனுப்பி மோட்சம் பெறட்டும் என்றார். சத்தியமூர்த்தி அய்யர் சகலத்தையும் மூடிக்கொண்டார்!.

கட்அவுட் கலாச்சாரம்!

சத்தியமூர்த்தி அய்யர் மேயராக பதவி வகித்த போது, சென்னையில் "காங்கிரஸ் பொருட்காட்சி" நடத்தப்பட்டது. அந்தக் கண்காட்சியின் மையப்பகுதியில் சத்தியமூர்த்தி மேயர் கவுன் அணிந்து எடுத்துகொண்ட மிகப்பெரிய படமும், அதற்கு இருபுறத்திலும் சிறிய அளவில் அரவிந்தர் மற்றும் காந்தி படங்களும் வைக்கப்பட்டிருந்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு பதிவு செய்திருக்கிறது. இவர் மேயராக இருந்த போதுதான் மேயர்கள் மாநாட்டைக் கூட்டி அதற்கு தன்னை தலைவராக்கிக் கொண்டதுடன் அதுவரை "மேயர்" என்று அழைக்கப்பட்ட பதவியை "வணக்கத்துக்குரிய மேயர்" என்றாக்கி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

பதவிப் பேராசை!

சத்தியமூர்த்தி அய்யரின் பித்தலாட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் குடியரசு இதழ்களில் நிரம்ப காணமுடிகிறது. இந்திய சட்டசபை மெம்பர் ஆனவுடன் மந்திரி கனவில் அவர் பிதற்றியதை கேலி செய்து "சத்தியமூர்த்தியின் திருவிளையாடல்" என்ற தலைப்பில் குடியரசில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

தோழர் சத்தியமூர்த்தியின் நாக்குக்கு நரம்பு கிடையாது.அவர் பேச்சுக்கும் மதிப்பு கிடையாது.என்று ஒரு பழமொழி உண்டு. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் பொதுவாழ்வில் விளம்பரம் பெற்ற பிறகு, சுமார் ஆயிரம் தடவைக்கு குறையாமலாவது தான் பேசியவைகளுக்கும்,நடந்து கொண்டவைகளுக்கும் மன்னிப்பு கேட்டிருப்பார்!. இரண்டாயிரம் தடவைகளுக்கு குறைவில்லாமல் தான் வெளிப்படுத்திய அபிப்பிரபயங்களுக்கு தத்துவார்த்தமும், சந்தர்ப்ப அர்த்தமும், மாற்று சேதிகளும் வெளியிட்டிருப்பார்!. இந்திய சட்டசபை மெம்பர் ஆனவுடன் சதாசர்வ காலம் மந்திரி பதவி பற்றிய பேச்சும் எண்ணமும் கனவுமாகவே இருந்து வருகிறார்!.இந்த பயித்தியம் முத்திவிட்டதின் பயனாய் இச்செய்தி மாகாணமெங்கும் பரவியதோடல்லாமல், இந்திய தேசமெங்கும் பரவிவிட்டது. இதனால் காங்கிரஸில் சரியாகவோ, தவறாகவோ, யோக்கியர்கள் என்று பெயர் வாங்கியிருந்த சிலருடைய நிலைமை மிக ஆபத்தாக போய்விட்டது!.

தமிழ் ஓவியா said...

ஏனெனில் காங்கிரஸ் காரர்கள், உத்தியோகம் பெறுவதில்லை.சர்க்காருடன் ஒத்துழைப்பதில்லை என்றெல்லாம் சொல்லி ஓட்டுவாங்கியிருக்கும்போது அந்த வாக்குறுதிக்கு மாறாக நடக்க ஆரம்பித்தால் அவர்கள் மரியாதை கெட்டுப்போவதுடன், ஜனங்கள் நம்ப மாட்டார்களே!. அடுத்த எலக்?ஷன் வரையிலாவது வாயை மூடிகொண்டிருக்கக் கூடாதா? என்கிற கஷ்டம் வந்துவிட்டதால் அவர்கள் சத்தியமூர்த்தியை கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே சத்தியமூர்த்தியார் ஒரு பல்டி அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.அப்பல்டியில் ஒரு மாபெரும் புளுகு புளுகி இருப்பது மிகவும் கவனித்துப் பெரியதொரு சிரிப்பு சிரிக்கக் கூடியதான வார்த்தையாக இருக்கிறது. அதாவது தான் மந்திரியாக ஆகநினைத்திருந்தால் 15 வருடங்களுக்கு முன்பே ஆகியிருப்பாராம்!. எப்படி ஆகியிருப்பார்? ஏன் ஆகவில்லை? என்பது ஜனங்களுக்குத் தெரிய வேண்டியது ஒரு முக்கிய காரியமல்லவா?

சத்தியமூர்த்தியார் 15 வருஷம் எப்படி மந்திரி பதவியை வெறுத்துத்தள்ளினார் என்பது பற்றி யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை! உண்மை! முக்காலும் உண்மை! என்பது விளங்கும். எப்படியெனில் சத்தியமூர்த்தியார் நாடகப்பிரியர் என்பது உலகம் அறிந்த விஷயம். அவர் கொஞ்ச காலமாக சுகுண விலாச நாடக சபையிலும் ஒரு குறிப்பிட்ட மெம்பராய் இருந்து வருகிறார். அதற்கு முன்னரும் பல நாடக கூட்டத்திலும் சம்பந்தம் வைத்திருக்கிறார்.

ஆகவே நாடகத்தில் மந்திரி வேஷம் போடும் சந்தர்ப்பம் இவருக்கு பல தடவை கிடைத்திருக்கலாம்.அதிலும் இவர் அரசியலில் இறங்கி விளம்பரம் பெற்ற பிறகு இவரது மந்திரி நடிப்புக்கு அதிக கிராக்கி கூட ஏய்பட்டிருக்கலாம். அதைச் சத்தியமூர்த்தியார் தமது கவுரவத்துக்கு குறைவானது என்று கருதி மறுத்தும் இருக்கலாம்.அல்லது தனக்குள்ள தகுதியை, திருப்தியைக் கருதி வேறு வேஷம் போட ஆசைப்பட்டு அடைந்துமிருக்கலாம்.

இந்த விஷயமெல்லாம் மூர்த்தியாருடைய நாடகத் தோழர்களைக் கேட்டால் இன்னும் நன்றாய் தெரிந்து கொள்ளக்கூடும். ஆகவே அய்யர்வாள் மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னதானது நாடகத்தில் வேஷம் போடும் மந்திரி பதவியே ஒழிய சென்ளை அரசாங்கத்தின் நிர்வாகத் துக்கு பொறுப்பாய் இருக்கும் மந்திரி பதவி அல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்!. என்று அதில் குறிப்பிட்டிருந்தது.



திராவிட இயக்க சுவடுகளில்...

உலக நாடுகளிடையே அமைதியையும், நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட அய்க்கிய நாடுகள் மன்றம் இருக்கிறது. அது மட்டுமன்றி ஒவ்வொரு நாட்டிலும் இருக் கின்ற சிறுபான்மையினரின் உரிமைகளுக்குத் தக்க பாதுகாப்புத் தரவேண்டுமென்ற குறிக்கோளும் அய்.நா. மன்றத் திற்கு இருக்கிறது.

இலங்கையிலுள்ள தமிழ் பேசுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கிறது என்ற காரணத்தைக் காட்டி அய்.நா. அமைப்பின் மூலம் இலங்கை வாழ் தமிழருக்கு பாதுகாப்புத் தர, இந்திய அரசாங்கம் ஏன் முயலக்கூடாது.

மன்றம், 24.8.1958

தி.மு.க. உதித்த நாள் முதல் தமிழர்கள் சென்று வாழும் வெளிநாடுகள், நாடுகளிலே யெல்லாம் கூடியவரையில் ஒரு தமிழரையாவது அய்க்கமிசனாக நியமிக்க வேண்டும்! அப்போது தான், தானாடாவிட்டாலும் தன் தசையாடும், கொஞ்சமாவது தமிழர்தம் பிரச்சினை புரியும் என்கிறது.

அறிஞர் அண்ணா, திராவிட நாடு,
29-.06.1958

தமிழ் ஓவியா said...


பிராமணாள் இனியும் தலை காட்டக் கூடாது!


சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் பிராமணாள் என்னும் ஓட்டல் 6.11.2012 ஆம் நாள் இரவோடு இரவாகக் கடையைக் கட்டிக் கொண்டது.

திராவிடர் கழகத் தோழர்கள் கேட்டுக் கொண்ட போதே அந்தப் பிராமணாள் பெயரை நீக்கி யிருந்தால், இப்பொழுது அந்த உணவு விடுதியையே மூடிவிடும் அவல நிலை ஏற்பட்டு இருக்காது.
பார்ப்பனர்கள் உணவு விடுதி நடத்தக் கூடாது. அவர்கள் பிழைப்புக்காக எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என்ற அற்பப் புத்தி நமக்கொன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் நன்றாகவே பிழைக்கட்டும்; நன்றாகவே சகல சம்பத்துகளுடனும் வாழட்டும் நமக்கொன்றும் அட்டியில்லை.

பார்ப்பான் பணக்காரனானால் என்ற கட்டுரையை குடிஅரசு இதழில் (9.11.1946) தந்தை பெரியார் தெளிவாகவே எழுதியுள்ளார்.

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாக இருக்க வேண்டும் என்பதல்ல.

ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக கோடீஸ்வரனாக வும், லட்சாதிபதியாகவும் ஆகி விட்டாலும் சரியே எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும் மடாதிபதிகள் உட்பட எவரும், சிறிதுகூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்று தெளிவாக, நீரோட்டமாகக் கூறியுள்ளாரே!

பிராமணாள் உணவு விடுதி என்பதில் உள்ள பிராமணாள் என்பதை ஒழிப்பது என்பதற்கான விளக்கம் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறதே!

பார்ப்பனர்களுக்கு இது தெரியாதா? பிராமணாள் என்பது உயர் வருணத் தன்மையைப் பறைசாற்றக் கூடியதென்று தெரிந்துதானே அதனை இன்றளவும் நிலைநாட்டிடத் துடிக்கின்றனர் - அடம் பிடிக்கின்றனர்.

அரசர்கள் முதல் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து விட்டதாலும், வருணாசிரம தர்மத்தில் உயர் ஆளுமை அவர்களுக்கு எல்லா வகையிலும் வசதி வாய்ப் புள்ளதாக இருப்பதாலும் அதனை விட்டுக் கொடுக்க மனம் இர(ற)ங்கி விடுவதில்லை.

பிராமணாள் என்று தங்களை உச்சமான இடத்தில் ஆசனம் போட்டு உட்கார வைத்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த வருணாசிரமத் தன்மையில் பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று சுட்டுவதுதான் சகிக்க முடியாததாக இருக் கிறது. ஏன் சகிக்க முடியாதது என்று சொல்லு கிறோம்? சூத்திரன் ஏழு வகைப்படுவான். அதில் ஒன்று தமது விபச்சாரி மகன் என்று பார்ப்பான் எழுதி வைத்திருப்பதுதான்.

பிராமணாள் ஒழிப்புப் போராட்டத்தை எதிர்த்து எழுதுவோர்கூட, திராவிடர் கழகம் எடுத்து வைக்கும் இந்தக் குற்றச்சாற்றுக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், பிரச்சினையைத் திசை திருப்பும் தன்மையில் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் நடத்திய உணவு விடுதியில் இடம் பெற்ற பிராமணாள் ஒழிப்பு - இத்தோடு முடிவுக்கு வந்தாக வேண்டும். மறுபடியும் சிறீரங்கத்திலோ, வேறு இடங்களிலோ பிராமணாள் முளைப்பதை அனுமதிக்க முடியாது, முடியவே முடியாது.

அப்படி எந்த ஊரிலாவது பிராமணாள் தலை காட்டுமேயானால் முதலில் கோரிக்கையை நேரிடையாக வையுங்கள். நாகரிகமாகப் பிரச் சினையை முடித்துக் கொண்டால் பிரச்சினை இல்லை; முரண்டு பிடித்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்குமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். உரிய முயற்சியைத் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு மேற் கொள்ளலாம்.

திராவிடர் கழகத்தின் முறையான முயற்சியும், பண்பாட்டுடன் கூடிய அணுகுமுறையும்தான் இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

கொள்கையும் முக்கியம் - வழிமுறையும் முக்கியம் என்பதை எந்தக் காரணத்தோடும் கழகத் தோழர்கள் மறந்துவிட வேண்டாம். இந்தப் பிரச்சினையில் முழு முயற்சியுடன் செயல்பட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.8-11-2012