Search This Blog

30.11.12

ஜாதி ஆணவப் புரட்டு பற்றி கலைவாணர் என்.எஸ்.கே.

பகுத்தறிவுச் செம்மல் கலைவாணர் என்.எஸ்.கே. என்றும் வாழுகிறார்!
இன்று (நவம்பர் 29) நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கே. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட, போற்றுதலுக்குரிய என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.

மூடநம்பிக்கை முட்புதர்களே நிறைந்த நாடகம் மற்றும் சினிமா துறைகளில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி செய்த மாமேதை அவர்.

அவருடன் இணையாக டி.ஏ. மதுரம் அம்மையார் நடித்து, அந்த ஜோடிப் புறாக்கள் புதுவானத்தில் தன்னிகரற்றுப் பறந்தன; பார்த்தோரைப் பரவசமாக்கியது மட்டுமா? பார்த்தவர்களை ஒரு நொடிப் பொழுதாவது (சிரிக்க வைப்பதோடு) சிந்திக்கவும் வைத்தார்கள்.

அப்படிப்பட்ட இணையர் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட் டார்கள்.
நாகர்கோயில் குமரி தந்த குணாளர் என்.எஸ்.கே. ஒரு படிக்காத மேதை - ஆனால் மற்ற படித்த மேதைகளுக்குப் புரியாதவை, தெரியாதவை எல்லாம் இவர்களால் நாட்டுக்கே வகுப்பெடுத்து பாடங்கள்போல் சொல்லிக் கொடுத்தார் என்பது ஒரு தனி வரலாறு.

இவ்வளவு பகுத்தறிவுப் பாடங்களை, தமது எளிய நகைச்சுவைக் காட்சிகளை எங்கிருந்துதான் கற்றாரோ இவர் என்று வியத்த பலருக்கும் அவரே அந்தப் புதையல் அவருக்குக் கிடைத்த இடம் அக்காலத்தில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு ஏடு; நாடகக் கம்பெனியில் அவர் நடிகனாக இருந்த அக்காலத் தில் 80 ஆண்டுகளுக்குமுன்பே குடி அரசின் வாசகனாக - இல்லை இல்லை மாறாக காதலனாக அவர் மாறியதின் விளைவு அவர் அதன்மூலம் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார்!

அந்த பச்சை அட்டைக் குடிஅரசுப் பயிற்சிப் பட்டறையில்  உருவான அந்த வாள்வீச்சு எத்தனையோ பழமையை, சனாதனத்தை, ஜாதி ஆணவங்களை வீழ்த்திட பல லட்சம் மக்கள் மனதைப் பக்குப்படுத்தியது.

அவ் வாள் தலையை வெட்டவில்லை; தலைக்குள் இருந்த அறியாமையை வெட்டிச் சாய்த்து, மூளைச் சலவை செய்து, பலரும் சிந்திக்கும்படிச் செய்தது!

அக்காலத்து உத்தமபுத்திரன் திரைப்படம் அதில் இவரது நகைச்சுவைப் பாத்திரம் ஒரு வைதீக வைஷ்ணவ அய்யங்கார் பாத்திரம்; மதுரம் அவரது மனைவி.

தன் பசு மாட்டிற்கு புல்லுக்கட்டு கொண்டு வந்து விற்கும் கீழ் ஜாதி (பறைச்சி வேடம்)ப் பெண் வேறு ஒருவர்.

ஜாதி குலம் எல்லாம் தான் காமத்தின் முன் சுட்டெரிக்கப்படும் என்பதை வைத்து, இந்த அய்யங்கார் அந்தப் பெண்ணை (பின் வழியாகத்தான் எப்போதும் வருவார் அவர்) ஒரு நாள் தனியே புல்லுக்கட் டுடன் மாலை வரச் சொல்லுகிறார்.

தனது மனைவி (மதுரத்தை) வேண்டு மென்றே சண்டை போட்டு, (சுடும் தோசையை கீழே  போட்டு புரட்டி மண்ணுடன் தான் உனக்கு தோசை விக்கத் தெரியுமோ, நீ ஒரு மனுஷியா? என்று வம்பு செய்து, ஆத்திரமூட்டுவார்; சண்டை முற்றும்... என் தாய் வீட்டுக்குப் போவதாக இவர் சொல்லி விட்டு வெளியேறுகிறார்.

வைணவ அய்யங்காருக்கோ மகிழ்ச்சி - தன் திட்டப்படி அவரது மனைவி வெளியேறிவிட்டார்!

மாலை காத்திருக்கிறார். காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோயால் தவிக்கிறார்!

இவரது மகன் (8 வயது பையன்) காக்கா இராதா கிருஷ்ணன் அப்போது இளைஞர், அந்த வேடம் ஏற்றவர்) ஓடி வந்து, அப்பா அப்பா என்று குறுக்கிட்டு இடைஞ்சல்போல பேசித் தொணதொணக்கிறார். அவருக்கு 4 அணா - பெரிய காசு அப்போது - எடுத்துக் கொடுத்து டேய் வெளியே போய் பக்ஷணம் வாங்கி சாப்பிட்டு வாடா என்று விரட்டுவார். மகனும் மகிழ்ச்சியோடு ஓடுவார் - வெளியே போகும் சமயம் இந்த தோப்பனார் அய்யங்கார் பையனை சத்தம் போட்டு கூப்பிட்டு டேய் பக்ஷணம் வாங்கிச் சாப்பிடும்போது, நம்மவா கடையாய்ப் போய் பாத்து சாப்பிடு; சூத்ராள் கடையில் இடையில் வாங்கி சாப்பிட்டிராதே; வாங்கி சாப்பிட்டு அப்புறமாக என்று அந்த அப்புறத்தை அழுத்திச் சொல்லுகிறார்  (அரங்கமே கைத்தட்டலால் அதிரும்).
பிறகு புல்லுக்கட்டுடன் கீழ் ஜாதிப் பெண் வருவா அவளை எதிர்கொண்டு சாகசமெல்லாம் செய்வார்; ஏஞ் சாமி, நீங்க உசந்தவங்க, நாங்க கீழ்ஜாதி - என்ன நீங்க...

அட நீ ஒண்ணு அதெல்லாம்... என்றெல்லாம் வசனம் பேசிடுவார்! தன் மனைவி பற்றி அவர் புல்லுக் கட்டுக்காரியிடம் அலட்சியமாகப் பேசுவார்; பிறகு தலை முக்காட்டை சிறிது நேரம் (வசனம்) பேசியபின், நீக்கிப் பார்த்தால் தன் மனைவிதான் (டி.ஏ. மதுரமே) அந்தப் புல் சுமந்த பெண்ணாக இருப்பார்! (ஏற்கெனவே அந்த கீழ்ஜாதிப் பெண் இவரது தகாத  உறவு அழைப்புபற்றி வீட்டு எஜமானி மதுரத்திடம் சொல்லியதால் இது மதுரம் செய்த ஏற்பாடு) அய்யங்காரை விளாசு விளாசு என்று விளாசித் தள்ளுவார் (மதுரம்) மனைவியார்!

இந்தக் காட்சி எப்படிப்பட்ட அருமையான உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவப் புரட்டு பற்றியது பார்த்தீர்களா?

எத்தனையோ ஆண்டுகள் முன் பார்த்த காட்சி - கண்ணை - கருத்தை விட்டு அகலாக் காட்சி. கலைத்துறையில் அக்கால பெரியார் கொள்கை பரப்பாளர் அவர். இன்றும் வாழுகிறார்கள் அவ் இணையர்கள். மறையவில்லை என்றும் வாழ்வார்கள்.

கலைவாணர் - மதுரம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து.. “விடுதலை” 21-11-2012

14 comments:

தமிழ் ஓவியா said...


நம் நாட்டு செவ்வாய் தோஷமும், அமெரிக்காவின் செவ்வாய் குடியேற்றமும்!


-ஊசி மிளகாய்-

செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன்பதிவு செய்யலாம் 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை குடியமர்த்த திட்டம்

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முறை சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவ தால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழி களையும், பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத் தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவ பகுதிகளையும் கொண்டது.

செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண் டன. பின்னர் 1965-ஆம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதை கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மய்யம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலத்தை செவ் வாய்க்கு அனுப்பியது.

அது இந்த ஆண்டு ஆகஸ்டில் செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீன தொழில் நுட்பத் துடன் கூடிய கருவிகளை உள் ளடக்கியது. அவை செவ்வாய் கிரகத்தின் சுற்று சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை ஆராய்ந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பியது. சமீபத்தில் அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் பிடித்தது.

தமிழ் ஓவியா said...

அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யம் அமைத்து வருகின்றனர். அதற்கு தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த நிறுவனம் சாதனை படைத்தது. இதை யடுத்து தற்போது இந்த நிறு வனம் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிட் டுள்ளது. அதற்காக அங்கு காலனி அமைக்கப்படுகிறது.

இந்த தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஏரோ நாட்டிக் கல் சங்கத்தின் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது அவர் கூறும் போது, செவ்வாய் கிரகத்துக்கு முதல் கட்டமாக 10 பேரை மட்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக அதிக அளவில் ஆட்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.

இதற்கான கட்டணம் சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம் (5 லட்சம் அமெரிக்க டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிக அளவில் இப்பயணத்திற்கு முன் வர வேண்டும். அதற்காக கட் டணத்தை குறைக்க கூட தயா ராக உள்ளோம். தொடக்கத்தில் 10 பேரை மட்டுமே அழைத்து செல்ல திட்டமிட்டுள்ள நாங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அங்கு குடியேற்ற முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் முதலில் குடியேறுவோர் வாழ் வதற்கான சூழ்நிலை உருவாக் கப்படும் என்றார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன் பதிவு செய்யலாம்.- மேற்கண்ட செய்தி, நேற்று மாலை செய்தித்தாள்களில் வெளி வந்துள்ளது.

இது பகுத்தறிவின் பயன் - அறிவியல் சாதனை! நம்மூர் சாஸ்திரிகளோ, கனபாடிகளோ, உடனே பார்த்தீர்களா, பார்த்தீர்களா நம்ம பெரியவா சொன்ன கீழே ஏழு லோகம், மேலே ஏழு லோகம் என்று புராணங்களில் கூறியுள்ளது எவ்வளவு உண்மை என்று கயிறு திரித்து கப்சா விட இப்போதே தயாராகி இருப்பார்கள்!

அமெரிக்க மிலேச்சர்கள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது; ஜீவராசிகள் வாழும் நிலை இருக்கக் கூடும் - மீத்தேன் வாயு என்பது உயிர் வாழத் தேவையான ஒன்று என்று கண்டறிந்தே 47 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போது கியூரியா சிட்டி ரோபோ தொடர்ந்து, ரோவருடன் சென்று செவ்வாயில் இறங்கியது.

அது நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உள்ளடக்கியது அது. அதனால் செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் மண், மலை, காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது; அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் எடுத்து அனுப்பியது. நாசா விஞ்ஞானிகள் பிறகே மனிதர்களை அங்கே அனுப்பி (10 பேரை மட்டும்) வைக்க (இன்னும் 20 ஆண்டுகளில் இது 80 ஆயிரம் பேர்களாக உயருமாம்!) திட்டமிட்டுள்ள ஒரு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆளுக்கு 2 கோடியே 77 லட்சத்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்று அறிவித்துள்ளது - வியப்பான சாதனை அல்லவா?

நம் நாட்டில் இன்னமும் 35 வயது ஆன நம் பெண்களுக்கு, ஜோசியம் பார்த்து, செவ்வாய் தோஷ பரிகாரம் செய்ய அலைந்து, மாப்பிள்ளைகள் கிடைக்காத கவலையால், தற்கொலை செய்து கொள்ளும் பெண்களும், பெற்றோர்களும் நாளும் வளர்ந்து வருகின்றனர்!

மின்வெட்டு காரணமாக, நாடே அவதிக்குள்ளாகி இருக்கிறதே; அந்த மின்சாரம் என்ன 33 கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், அல்லது நம்ம மும்மூர்த்திகள் தொடர்ந்த லேட்டஸ்ட் அய்யப்பன் வரை எவர் கண்டுபிடித்தது?

அறியாமை, மூடநம்பிக்கையை விட கொடிய நோய்கள் வேறு உண்டா? சிந்தியுங்கள்.29-11-2012

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 1,2 உங்கள் இடம்


கழகத் தோழர்களே, கழகக் குடும்பத்தினரே! வரும் டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் நாள் நீங்கள் இருக்க வேண்டிய இடம் - சென்னை பெரியார் திடலில்.

முதல் தேதி திராவிடர் கழகப் பொதுக் குழு - பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பிற்பகல் கழக நிகழ்ச்சிகள்! சிறப்பான பட்டிமன்றம்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு, இயக்கத்தையும் நாட்டையும் வழி நடத்திச் செல்லும் தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2 (1933) என்றாலும் முதல் நாளே களை கட்டும் என்பதற்கு அடையாளம்தான் சனிக்கிழமை நிகழ்ச்சிகள்.

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இந்தத் தலைவர் நமக்குக் கிடைக்கவில்லை யென்றால் இந்த இயக்கம் இந்த அளவு விண்ணை முட்டி எழுந்து நின்றிருக்குமா?

(தந்தை பெரியார் அவர்களுடன் நீண்ட காலம் இருந்த விளம்பரம் பெற்ற முன்னணியினர் எந்த வேலையைச் செய்தனர் - பெயரைக் குறிப்பிடுவது நாகரிகமல்ல - எனவே விட்டு விடுகிறோம்)

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் செய்த வேலையினால் ஏற்பட்ட நெருக்கடிகளிலிருந்து பெரியார் அறக்கட்டளையைக் காப்பாற்றியவர் நமது தலைவர்.
வருமான வரித்துறையில் செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பிப் பெற்றது என்பது சாதாரண மானதல்ல! வட்டியுடன் திரும்பிப் பெற்றார் என்றால், அதிலுள்ள நேர்மையும் நியாயமும், செயல் திறனும் பிரமிக்கத்தக்கதாகும்.

அறக்கட்டளை என்ற, அங்கீகாரம் பறி போனால் விடுதலை ஏது? அதுதானே அவாளின் கண்களை உறுத்தியது. விடுதலையை நிறுத்தி விடுங்கள் - சமாதானமாகப் போய் விடலாம் என்று தாஜா செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர் என்றால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

விடுதலை இன்று எட்டுப் பக்கம் - புதிய பொலிவுடன், இன்னொரு பதிப்பு திருச்சியில் - அடுத்த பதிப்புக் குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

எத்தனை எத்தனை வெளியீடுகள் - நூல்கள்! மானமிகு கலைஞர் அவர்களே ஒரு முறை சொன்னது போல இப்படி எல்லாம் நூல்களை வெளியிட்டு ஆவணப்படுத்துவதில் திராவிடர் கழகம், இளவல் வீரமணி முன் வரிசையில் நிற்கிறார் என்று பூரிக்கவில்லையா?

இயக்கம் இன்று இளைஞர்களின் பாசறையாகக் கம்பீரமாக நிற்கிறதே! ஒரு காலத்தில் முதியோர் முகாம் என்று கழகத்தை கேலி பேசியவர்கள் உண்டு.

இன்று நடைபெறும் மாநாடுகளைப் பாருங்கள் - பேரணிகளைப் பாருங்கள்! அதிகம் இருப்பவர்கள் இளைஞர்களா? முதியவர்களா? என்பது ஒரு கண நேரத்தில் தெரிந்து விடுமே.

எத்தனை எத்தனை சாதனைகள்! தந்தை பெரியார் கொள்கை அடித்தளத்தில் நின்று போராட்ட உணர்வை உள்வாங்கி உழைத்தால் அல்லவா. இந்தியா முழுமைக்கும் மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு.

இந்தியாவின் தலைநகரில் புதுடில்லியில் பெரியார் மய்யம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது! கும்முடிப் பூண்டியைத் தாண்டி கால் வைக்காத கழகம் இன்று டில்லிவரை தடம் பதிந்து இருக்கிறதே - சாதாரணமானதுதானா?

இன்று நாம் பாராட்டலாம்; கை தட்டலாம்; ஏன் கவிதையும் பாடலாம் - விழா எடுத்துப் பூமாலை சூட்டலாம்.

இவையெல்லாம் இந்தத் தலைவரின் உழைப்புக் கும், சாதனைக்கு முன் எம்மாத்திரம்? எவ்வளவு உழைப்பு! எவ்வளவு மன உளைச்சல்கள்! சிறை வாசங்கள் - சங்கடங்கள் - நெருக்கடிகள்! எவ்வளவு முயற்சிகள் - எத்துணை சிந்தனை நுட்பங்கள்! இவையன்றோ இந்த வெற்றி மாளிகையைத் தாங்கிப் பிடிக்கும் கண்ணுக்குத் தெரியாத அஸ்திவாரக் கற்கள்!

நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் அய்யா என்று காட்டிக் கொள்ள நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு தான் இந்த விழா!

உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம் தலைவரே என்று ஒப்புக் கொடுப்பதற்குக் கிடைத்த ஒரு பொன் நாள்தான் இந்நாள்.

இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகும் திராவிடர் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் விபீடணர்கள் மத்தியிலே திராவிடர் இயக்கத்தின் கொள்கைகள் - தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் பூக்களின் மணம் இவற்றை உலகெங்கும் கொண்டு செல்லும் மிகப் பெரிய முயற்சியில் நமது தமிழர் தலைவர் ஊக்கம் கொண்டு செயல்படுகிறார்.

மதமற்ற உலகே மக்களின் மார்க்கம் - அதற்கான மகரந்தம் என்பது தந்தை பெரியார் இயலே என்பதை நிரூபிக்கப் போகிறோம்.

வாருங்கள், தோழர்களே! வணக்கம் செலுத் துவோம்! வாழ்த்துகள் கூறுவோம் - நன்றியை வெளிப்படுத்துவோம்.

ஆம், டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டு உங்கள் இடம் சென்னை பெரியார் திடலே! 29-11-12

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் 8 சிறப்பு வெளியீடுகள்



வடநாட்டில் பெரியார் தொகுதி -1

தந்தை பெரியார் அவர் களின் வடநாட்டுச் சுற்றுப் பயணங்களின் தொகுப்பாக வந்துள்ள இந்நூல் தந்தை பெரியார் 1940, 1941, 1944, 1950 ஆகிய ஆண்டுகளில் செய்த பயணங்களை விவரிக் கிறது.

பம்பாயில் டாக்டர் அம் பேத்கர் - ஜின்னா - பெரியார் சந்திப்பை விளக்குகிறது. எம்.என்.ராய் அவர்களின் யூனியன் டெமாக்ரடிக் யூனி யன் மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை, அரித்துவாரில் தந்தை பெரியார் உரை போன்ற முக்கிய உரைகளையும் பல்வேறு முக்கிய செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
தந்தை பெரியாரின் தேவை வடநாட்டில் எவ்வாறு இருந்தது என்பது வட இந்தியத் தலைவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து நன்கு விளங்குகின்றன. தந்தை பெரியாருடன் பல்வேறு காலகட்டங்களில் அவரது வட இந்தியப் பயணங்களில் பங்கேற்றவர்களையும் அறிய முடிகிறது. இதுவரை வெளிவராத பல்வேறு உரைகள் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1950ஆம் ஆண்டு பம்பாய் திராவிடர் கழக மாநாட்டில் திருவள்ளுவர் படத்தினைத் திறந்து வைத்து பெரியார் ஆற்றிய உரை திருக்குறளின் பெருமையை பகுத்தறிவுப் பார்வையில் விளக்குவதாக அமைந்துள்ளது.

மொத்தப் பக்கங்கள் : 224; நன்கொடை: ரூ.90/- வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

வடநாட்டில் பெரியார் தொகுதி -2

வடநாட்டில் பெரியார் பயணத் தொகுதி 1இன் தொடர் பகுதிகள் இந்நூலில் உள்ளன. 1959, 1968, 1970 ஆகிய ஆண்டுகளில் பெரியா ரின் பயணங்களை விளக்கு கிறது.

1959ஆம்ஆண்டு பெரியார் அவர்கள் கான்பூர், லக்னோ, அலகாபாத், டெல்லி, பம்பாய் ஆகிய இடங்களுக் குச் சென்றார். அப்போது அவர் பங்கேற்ற நிகழ்வுகளை விளக்கிக் கூறப்பட்டுள்ளது. கான்பூரில் பெரியாருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு நம் கண்முன் நடப்பதுபோல் விளக்கப்பட்டுள்ளது.

லக்னோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றியதையும், அப்போது ஏற்பட்ட சலசலப்பு பற்றியும், பின்னர் அய்யா அவர்கள் அதை முறியடித்ததுப் பற்றியும், தந்தை பெரியாருடன் சென்றிருந்த தொகுப்பாசிரியர் தமது ஆராய்ச்சி மிக்க முன்னுரையில் விளக்கியுள்ளார்.

அங்கு தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை முழுமையாக இதில் இடம் பெற்றுள்ளது. வடநாட்டில் போய் அங்குள்ள மக்களிடம் தமிழ்நாடு நீங்கிய இந்தியப்பட எரிப்புப் பற்றி உரையாற்றிய தந்தை பெரியாரின் அஞ்சாமையும், அவரது வாத நியாயங் களை அம்மக்கள் உணர்ந்து கொண்டதையும் அறியும் போது மிகவும் வியப்பாக உள்ளது.

பார்ப்பானுக்கு தம்மை அடிமைக்கும் நாடு எரிந்தால் என்ன? என்று தலைப்பிடப்பட்ட அச்சொற்பொழிவு வட இந்திய பார்ப்பன ஊடகங்களை மிரளவைத்தது. அவ்வேடு களில் வந்த செய்திகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பெரியாரின் ஜாதி ஒழிப்பிற்கு ஆதர வளித்த பயனீர், நேஷனல் ஹெரால்டு, ஸ்டேட்ஸ்மென் போன்ற இதழ்களில் வந்த செய்திகளும் தொகுத்துத்தரப் பட்டுள்ளன.

1968இல் லக்னோ பயணத்தையும், 1970 பம்பாயில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பெரியாரின் உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் இதுவரை வெளிவராத உரைகளாகும். ஆய்வாளர்களின் கைகளுக்கு இவை அரிய பொக்கிஷங்களாகும்.

மொத்த பக்கங்கள் : 384; நன்கொடை: ரூ.150/-
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 2)

அய்யாவின் பொய்யாத நம்பிக்கையாய் அவர் வழியில் பெரியாரை உலகமயமாக்கும் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறுதான் அய்யாவின் அடிச்சு வட்டில். ஆனால் அது அவரது வரலாறாக மட்டும் இல்லாமல், தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், அவரது இலட்சியப் பயணமாகவும், அன்றைய தமிழக அரசியல், சமூக சூழல்களையும் விளக்குகிறது. இதன் முதல் பாகம் 2008இல் வெளி வந்த தைத் தொடர்ந்து தற்போது அடுத்த நூலாக வந்துள்ளது. இந்த பாகத்தில் 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுபற்றியும், அதைத் தொடர்ந்து இராஜகோபாலாச்சாரியார் உள்ளிட்டோரின் அறிக்கையையும் விளக்குகிறது.

பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்ட செய்திகள், அதன் வளர்ச்சி மற்றும் 1971 ஆம் ஆண்டிற்குப்பின் பதவியேற்ற தி.மு.க. அரசின் சீரிய செயல்பாடுகளை விளக்குகிறது. கி.வீரமணி அவர்களின் சிறைவாழ்க்கை பற்றி விளக்கி கூறப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டில் கடலூரில் தந்தை பெரியாருக்கு சிலை வைத்ததைப் பற்றி விளக்கும் ஆசிரியர் அந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்டதையும் தற்போது சிலை வைக்கப்படுவதையும் இளைஞர்களுக்கு கூறும் விதம் தன்னல மறுப்புத் தலைவர் பெரியாரின் நன்றிபாராத் தொண்டின் வெற்றியை விளக்கி கூறுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிளவு பற்றியும், அது பற்றிய தந்தை பெரியாரின் நிலைப் பற்றியும் கூறுவதோடு, எம்.ஜி.ஆர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தந்தை பெரியாரின் பதிலை முழுமையாக எடுத்து விளக்குகிறார் ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசின் அரசு வழக்குரைஞர் நியமனம் குறித்த அய்க்கோர்ட் நீதிப்போக்கு கண்டனநாள் கூட்டத்தில் ஆசிரியரின் உரையை குறிப்பிட்டு உரையாற்றிய பெரியார் அவர்கள் நண்பர் வீரமணி விஷயம் கூட கொஞ்சம் சந்தேகப்படும்படிதான். அவர் பேசும்போது மற்றவர்கள் போல் அல்லாமல் சற்று தாராளமாகவே பேசினார். அவர் வெறும் ஆள் அல்லர். நம் தலைவர் போல, குருசாமி போல அவர் பேசவில்லை. சற்று துணிவாய்ப் பேசிவிட்டார். வீரமணி நம்மை போன்றவர் அல்லர். அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்புகள் அவரை அணுகக் காத்திருக்கின்றன. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்த வரை அவருக்கு அப்படி ஏற்பட்டதால் நமக்கு நல்லதாகி விட்டது என்று கருதுவேன். ஏன் நம் இயக்கத்துக்கு அவர் தொண்டு அரை நேரம். இனி அது முழுநேரம் ஆகிவிட லாம் என்று பெரியார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பெரியாரின் உள்ளக்கிடக்கையை விளக்குவதாய் அமைந்துள்ளது. இதுபோல் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகளும், இயக்க வரலாற்றுச் சுவடுகளும் ஏராளம் குவிந்துள்ளன.

பக்கங்கள் : 296; நன்கொடை : ரூ.120/-
வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் -3)

அய்யாவின் அடிச்சுவட்டில் இலக்கு நோக்கி தளராது பயணம் செய்யும்தமிழர்தலைவர் கி.வீரமணியின் தன் வரலாற்றுத் தொடரின் மூன்றாம் பாகமாக இந்நூல் வெளி வருகிறது.

ஆசிரியர் அவர்கள் தமது நுழைவு வாயிலில் எழுதி யிருப் பது போல் அவரது சுயபுராண மாக இல்லாமல் திராவிடர் கழகம், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களிடம் பெற்ற இலட்சியப் பயண அனுபவங்களின் தொகுப் பாகவே அமைந்துள்ளது. இயக்க வரலாற்றில் ஆவணமாக விளங்குகிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், தந்தை பெரியா ரின் இலட்சியக் கனவான கோரிக்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவேண்டும் என்பது. அதனை ஜஸ்டிஸ் வரதராஜன் நியமனம் மூலம் அவர் காலத்தில் சாதித்துக் காட்டியுள்ளார்.

1973 ஏப்ரல் ஆற்க்காட்டில் நடைபெற்ற மாநாட்டில் பந்தல் எரிக்கப்பட்டது. அது மீண்டும் சிலமணி நேரங்களில் பந்தல் போடப்பட்டு விழா நடத்தப்பட்ட வரலாற்றுக் குறிப்பு இதில் இடம்பெற்றுள்ளது.

தந்தை பெரியார் அவர்கள் கொண்டாடிய இறுதிப் பிறந்த நாளில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்வுகள் பதிவாகி யுள்ளன.
தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய மாநாடான தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு, தொடர்பான செய்தி களும் பெரியார், ஆசிரியர் உரைகளும் இடம்பெற்றுள்ளன.

அய்யாவின் மறைவுச்செய்தி இந்த பாகத்தில் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அம்மாவின் அறிக்கையும் திராவிடர் கழக மாநில பொது நிருவாகிகள் கூட்டத்தின் தீர்மானங்களிலும் பின் இணைப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.

பக்கங்கள்: 240; விலை: ரூ.90/-
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு.

பெரியாருடன் வீரமணி
(தேதி சொல்லும் சேதி)

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாருடன் பயணித்ததை தேதி வாரியாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ள நூல். ஆசிரியர்அவர்களின் குழந்தைப் பருவம் முதல் அய்யா அவர்களுடன் பங்கேற்ற எல்லா நிகழ்வுகளையும் தொகுத்துத் தந்துள்ளனர்.இந்நூலைப் படிக்கும்பொழுது 80 வயதில் 70 ஆண்டுகள் சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ள தலைவரின் பயணச் சுவடுகளாக இவை அமைந் துள்ளன.
பக்கங்கள்: 256 நன்கொடை: ரூ.100/-
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு.

வெற்றித் தளபதி வீரமணி அந்தாதி

சிங்கப்பூர் வெண்பாச்சிற்பி வி.இக்குவனம் அவர்களால் எழுதப்பட்ட வெற்றித் தளபதி வீரமணி அந்தாதி என்னும் இந்நூலில் வீரமணி அவர்களைப் பற்றிய செய்திகள் வெண்பா வடிவில் அமைந்துள்ளன. முதல் பாட்டின் இறுதிச்சீரும் (சொல்லும்) அடுத்த பாடலின் முதல் சொல்லும் ஒரே சொல்லலாக அமைக்கப் படும் அந்தாதி இலக்கிய வகையில் தமிழர் தலைவர் வீரமணி அவர்களை அழ காகப் படம் பிடித் துள்ளார் கவிஞர் இக்குவனம். இவை இரண்டு பக்கங்களாக எழுதப்பட்டு இரண்டும் இணைத்து வெளியிடப்பட் டுள்ளன.

மொத்த பக்கங்கள்: 32 நன்கொடை : ரூ.15/-
வெளியீடு: வெண்பாச் சிற்பி வி.இக்குவனம், சிங்கப்பூர்

LET’S LISTEN TO
DR. K.VEERAMANI

This selection contains speeches and interviews of Dr.k. Veeramani on diverse topic so clear to his heart, on different occasions and venues. His oratorical exulu rance, forceful argu ments,
continuously striking explosions, characteristic of his speeches are all found in tact here. His versatility and forcefulness of oratory bring out all that he intended to communicate. Very informative and impressive.

Pages: 136 Donation: Rs.60/-



JOY OF LIVING
-Dr.K. Veeramani

A selection of 25 essays written for “Viduthalai” everyday, has been translated into English and published on his 80th Birthday 02-12-2012, en couraged by their immense popularity among its rea ders.

The author seems to have opted for holidays from his wonted heated picnicking deleates on social issues and in into a world of common human experience, transcending all the man made barriers of differences. His practical wisdom intimate experience and a downright common sense approach to the simple problems of human beings are taken up for illustration, study and guidance written in a sample and lucid style it makes an enjoyable reading. No doubt, this collection abundance in practical wisdom and pragmatic recommendations. A very pleasant and profitable diversion from the author.

Pages: 80 Donation: Rs.35/-

தமிழ் ஓவியா said...

ஆ.இராசாமீது ஊழல் குற்றஞ் சுமத்தியவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?


2ஜியில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று எங்கள் அறிக்கையில் (Draft Report) குறிப்பிடப்படவில்லை - ஆடிட்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்

ஸ்பெக்ட்ரம் குறித்து சி.பி.அய். எந்த முடிவுக்கும் வரவில்லை - சி.பி.அய். இயக்குநர் அமர்பிரதாப்சிங்

ஆ.இராசாமீது ஊழல் குற்றஞ் சுமத்தியவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?

வர்ணமும் - வர்க்கமும் சேர்ந்த கூட்டுச் சதி

தமிழர் தலைவரின் அடுக்கடுக்கான வினாக்களும் விடைகளும்

சென்னை, நவ.29- ஆ. இராசாமீது சுமத்தப் பட்ட ஊழல் பழி வருணமும் வர்க்கமும் சேர்ந்த கூட்டுச் சதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலா? ஜோடிக்கப்பட்ட சதியா? எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் சரியாக இரவு 7.10 மணிக்கு சென்னை பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது (28.11.2012). கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். அவரது உரையில், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வந்த போதே தெளிவாக எடுத்துச் சொன்ன தலைவர் தமிழர் தலைவர்தான். பல முறை அறிக்கை வெளியிட்டு அதற்காக விமர்சனங்களையும் எதிர் கொண்டோம். ஆனால் பூனைக்குட்டி வெளியில் வந்தது என்று விடுதலையில் வெளியிடுவதைப் போல தற்போது உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அந்த பத்திரிகைகள் நடமாடிக் கொண்டுதானே இருக்கின்றன. மக்கள் நல அரசு என்பது வடநாட்டு மார்வாடிபோல வட்டிக் கடை நடத்துவது போன்றதல்ல!

எல்லாவற்றிலும் லாபக் கணக்கினை அரசு பார்க்கக் கூடாது. இப்போது உண்மைகள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றன. எனவே அமைச்சர் ராஜாவை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தார்களே! அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்பது? ஒரு நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்தார் என்பதற்காக கனிமொழி எம்.பி., அவர்களைச் சிறைப்படுத்தியது எப்படி சரி என்று வினா எழுப்பினார்.
தொடர்ந்து தமிழர் தலைவர் உரை யாற்றத் தொடங்கினார். கழகத்தின் முக்கிய பிரமுகர்கள், பல்துறை சான் றோர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் என அரங்கம் நிரம்பியிருந்தது. தமிழர் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...

கோயபல்ஸ் பிரச்சாரம்

நம்முடைய இயக்கத்தைப் பொறுத்த வரை உண்மைகள் மக்களுக்கு மறைக்கப்படும்போது வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பணியாற்றுபவர்கள்; நாம் பூதாகரமாக ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் நிலைத்து விடும் என்று புராணக் காலத்தில் இருந்து வருவதுதான்; உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்பார்கள். கந்த புராணத்தின் புளுகு எந்தப் புராணத்திலும் இல்லை என்ற சொலவடை உண்டு. அப்படியெனில் கந்தபுராணம் புளுகுதானே!

அதற்கடுத்து அரசியல் உலகம். இதில் இரண்டாம் உலகப் போரில் கோயபல்ஸ் என்ற பிரச்சார அமைச்சர். இதைவிட பெரிய பொய்களை யாரும் சொல்ல முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விட்டவர். கோயபல்ஸ் பாணி என்று அரசியலில் நிலைத்துவிட்டது. ஊடகங்கள் - பார்ப்பன ஊடகங்கள் வெட்கப்பட வேண்டாமா? 2ஜி அலைக்கற்றைபற்றி தற்போதுதான் ஓய்வு பெற்ற அதிகாரிகள் போதி மரத்து புத்தர்களாகி வருகிறார்கள். அவர்கள்மேல் நமக்கு வருத்தம் இல்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கடி இருந்திருக்கிறது.

எல்லோருக்கும் தெரியும். நண்பர்கள்கூட கேட் டார்கள். ஆசிரியர் வக்காலத்து வாங்கலாமா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலென்று வரிசையாக பூஜ்யத்தைப் போட்டார்களே, இன்றைக்கு இதன் நிலை என்ன?

இமாலய ஊழல், ராஜா ஊழல் செய்தார், திமுக செய்தது என்று பிரச்சாரம் செய்தார்கள், தொடர்ந்து அச்சுறுத்தினார்கள். சுப்பரமணிய சுவாமி போன்ற அரசியல் தரகர்களின் அடாவடிக்குப் பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடந்து கொண்டது பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகா?

மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியவர் ஆ. இராசா

எப்போதுமே ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவனுக்குக் கொண்டாட்டம்தான். எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலை மத்திய அரசு பெறவில்லை. யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பில் ஒரு தவறு என்றால் தலைமைப் பொறுப்பில் வகிப்பவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான் நியாயம். திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மய்யமாக பலருக்கு இருந்தது. தகுதி திறமையை நிரூபித்து தொலைத் தொடர்புத் துறை வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியை உருவாக்கியவர் ஆ. இராசா அவர்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்துத் துறையும் தொலைத் தொடர்புத் துறையும் மிக முக்கியமானவை. போக்குவரத்து வளர்ச்சிக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. சார்பில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு அவர்கள் பெரும் சாதனை செய்தார். தங்க நாற்கர சாலைகளை, சிறப்பாக அமைத்தார். சென்னையில் இருந்து திருச்சிக்கு 5 மணி நேரத்தில் போகக் கூடிய அளவுக்கு நல்ல சாலைகளை, பாலங்களை அமைத்தார். போக்குவரத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தொலைத் தொடர்பும் ஆகும்.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், சட்டக் கல்லூரியில் படித்து, பகுத்தறிவோடு திகழ்ந்து நம் தோழர்கள் பி.எல். படித்தாலே அரிது. அதிலும் மாஸ்டர் ஆப் லா எனும் எம்.எல். படித்து, சிறப்பாக ஒவ்வொரு பொறுப்பையும் எந்தப் புகாருக்கும் ஆளாகாமல், முன்னால் இருந்தவர்கள் கொள்கையை பின்பற்றியதோடு, அதனை எப்படி இன்னும் பயனுள்ளதாக செய்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி சிறப்பாக செயல் பட்டவர் ஆ. இராசா.
ஒரு மாற்றம் செய்தால் அம்மாற்றத் தால் பாதிக்கப்படுபவர்கள் மாற்றம் செய்தவர்களை சகித்துக் கொள்ள முடியாது. எதிர்ப்பு காட்டுவார்கள் - மிரட்டுவார்கள், அச்சுறுத்துவார்கள் எல்லா இடங்களுக்கும் தொலைத் தொடர்பு போய் சேர வேண்டும் என்று நினைத்தார் ராசா.
சாமான்ய மக்களுக்கும் கிடைக்கச் செய்தார்

தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற உடனே மனதுக்குள் முடிவெடுத்து சாமான்ய மக்களுக்கும் தொலைத் தொடர்பு வசதியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு ரூபாய்க்கு பேசலாம் என்பதே புரட்சி என்று பேசப்பட்டது. ஆனால் ஆ. இராசா 30 பைசாவுக்குக் கொண்டு வந்தவர். ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் கலந்து கொண்டு ஏற்கெனவே செய்த கொள்கை முடிவின்படி எப்படி அணுக வேண்டுமோ, அப்படி அணுகி ஆலோசித்து பயன் பாட்டைப் பரவலாக்கினார். ஏகபோக ஆதிக்கத்தில் சில முக்கியக் கம்பெனி களின் கைகளில் வைத்துக் கொண்டு இருந்த அலைக்கற்றை உரிமங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார். இதுதான் சமதர்மத்தின் அணுகுமுறை. சாதாரண ஆட்கள் வந்தால் போட்டி அதிகமாகும். எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சிறப்பாக வழங்கப்பட்டது.

பெரிய நகரங்களில் மட்டும் தொழில் நடத்தி சிக்கலில்லாமல் லாபத்தைக் கண்டிருந்த நிறுவனங்களுக்கு மாற்றாக நிறைய நிறுவனங்கள் உரிமம் பெற்றதால் சிறிய ஊர்களுக்கும் செல்பேசி கிடைத்தது. 30 சதவிகித அளவு பயன் பாடு என்றிருந்ததை 80 சதவிகிதமாக மாற்றினார் ஆ. இராசா. நாடு தழுவிய அளவில் சென்றடைந்தது முதலாளிகள் பாதிக்கப்பட்டார்கள். சும்மா இருப் பார்களா? 1952-களில் இருந்தே மத்தி யில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் டாடாக்களும், பிர்லாக்களும் 50-60 எம்பிக்களை வைத்திருப்பார்கள். சட்ட நிபுணர் ஒருவர்கூட, டாடா நிர்வாகத் தின் எம்பி என்ற பெருமையை பெற வில்லையா? முதலாளிகளுக்கு நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்டவர்கள் பற்றி பட்டியல் வெளிவரவில்லையா?

தமிழ் ஓவியா said...


அதுபோல அரசாங்கத்தை வளைப்ப தற்கு பார்ப்பனப் பத்திரிகைகளை பயன்படுத்தினார்கள். முதலாளித்துவ யானைகள் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு என்ன வழி இவரை வீழ்த்த என்று சதித் திட்டம் தீட்டினார்கள்.

வர்க்கமும் வருணமும்

பார்ப்பன - பனியா கூட்டு என்பதுபோல் வர்க்கமும் வர்ணமும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டினர்; சுப்பிரமணியசுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு பஞ்சமா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற கதையை ஜோடித்தார்கள். ஆ. இராசா எடுத்த முடிவா?

இப்பிரச்சினை வந்தபோதே நாங்கள் சொன்னோம். சுப.வீ, ரமேஷ் பிரபா, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் முதலியோர் பேசினோம். அது வும் அனுமான இழப்பு - யூக இழப்புதான் என்று. ஏலம் ஏன் விடவில்லை? ஆ. இராசா எடுத்த முடிவா இது? பிரமோத் மகாஜன் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.

அருண்சோரிகூட பத்திரிகையாளர் களிடம் பேசுகையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது கற்பனைத் தொகை அநேகமாக 30,000 கோடி ரூபாய் தான் இருக்கும் என்றாரே. அவர்கூட அநேகமாக என்றுதான் சொன்னார். இந்தக் கதை எப்படி உருவானது? ஒய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் ஆர்.பி. சிங் என்ன சொல்லியிருக்கிறார்? ராஜா செய்ததில் 2460 கோடி ரூபாயாக இருந்த வருமானம் அடுத்த ஆண்டு 18,000 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. அதற்கடுத்த ஆண்டு மேலும் இது அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் இதுதொடரும். ஆனால் ஏலம் ஒருமுறை மட்டுமே விட இயலும்.

டிராப்ட்டு ரிப்போர்ட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று கூறியிருக்கிறாரோ!

கபில்சிபல்கூட சொன்னாரே பொன் முட்டையிடும் வாத்து என்று; பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அழிக்கலாமா?

ஆர்.பி. சிங்குக்கு நிர்ப்பந்தம்

பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி (PAC) தலைவராக இருந்தவர் முரளிமனோகர் ஜோஷி அய்யர்தான்; ஓய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் ஆர்பி சிங் சொன்னது ஞாயிறன்று தி இந்து பத்திரிகையிலேயே வந்திருக்கிறது. என்னைக் கூப்பிட்டு கையெழுத்து போடச் சொன்னார்கள். கட்டளைக்குக் கீழ் படிந்தேன் அவ்வளவுதான். அரசுத் துறையிலே பணியாற்றியவர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் நன்கு அறிவீர்கள். சி.பி.அய். இயக்குநர் என்ன சொல்கிறார்?

அதேபோல சி.பி.அய். இயக்குநர் அமர்பிரதாப் சிங் என்ன சொல்லி யிருக்கிறார்? கடந்த 2 ஆண்டுகளாக காமன்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஸ் உள்ளிட்ட வழக்குகள் என் காலத்தில் தான் வெளி வந்தது. இதில் ஸ்பெக்ட்ரம் இழப்புத் தொகை குறித்து சிபிஅய் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை - இது தினமலரில் வந்திருக்கிற செய்தி!
அப்புறம் எதுக்கு ராஜாமீது வழக்கு? ஒன்றரை ஆண்டுகள் பெயில் தராத ஜெயில் வாழ்வு எதுக்கு? என்ன கொலையா செய்து விட்டார்? கொலை செய்ததாக சொல்லப்பட்ட சங்கராச்சாரி யார்கூட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இல்லையே? 2001-இல் குறியீட்டு எண் அடிப்படையிலான மதிப்பீட்டுப்படி குறிப்பிட்ட தொகை 30,000 கோடி அதைக்கூட வருவாய் இழப்பு என்று நாங்கள் சொல்லவில்லை என்று சிபிஅய் தெரிவித்த குற்றப் பத்திரிகையிலேயே தெரிவித்திருக்கிறதே. அப்புறம் எதுக்கு ராஜாவுக்கு சிறை? 2001இல் ராஜாவா அமைச்சராக இருந்தார்? ராஜா எப்போது அமைச்சரானார்?

தமிழ் ஓவியா said...

ஜீரோ லாஸ்

ஜீரோ லாஸ் என்று சொல்லும் அளவுக்கு நடந்திருக்கிறதே. ராஜா கட்ஆப் தேதியை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்கிறார்கள். ஆ. இராசா தனி மனிதனாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்ததற்குப் பிறகு இந்த ஆதாரங்கள் அனைத்தும் பப்ளிக் டாக்குமெண்ட், யார் இதைக் கண்டுபிடித்தது? ராஜா தவறு செய்தார் என்று பயனீர் என்ற பாஜகவின் பத்திரிகை. சுப்பிரமணியசாமி உடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க தீட்டிய திட்டம்தான் இது! பார்ப்பன ஊடகங்கள் கூட்டணி.

ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை ஊடகங்களுக்கு கொடுத்தவர் யார்?

அதேபோல ஆடிட்டர் ஜெனரல் அறிக் கையை முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கொடுத்தது யார்? இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில்தானே வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஊடகங் களுக்கு எப்படிப் போனது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுகுறித்த இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நிர்ணயித்தது ராஜா அல்ல. ட்ராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம். நுழைவுக் கட்டணம், ஏலம் விட வேண்டும் என்றோ ட்ராய் உள்ளிட்ட யாரும் சொல்ல வில்லையே. அப்புறம் அதில் தவறு எங்கே நடந்தது? வழக்கு போட்ட சிபிஅய் இன்னும் இழப்பு குறித்து முடிவுக்கு வரவில்லை என்று சொல்லி விட்டது. 80 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை ஒருவர்கூட இழப்பு - தவறு நடந்திருக்கிறது என்று சொல்ல வில்லையே.

ராஜா தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் செய்யவில்லை. அன்றைய நிதித் துறை அமைச்சகத்தின் செயலாளரும், தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுந ருமான சுப்பாராவ் 78ஆவது சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது அமைச்சர வையைக் கலந்துதான் முடிவெடுத்தார் ராஜா, தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டாரே.

தமிழ் ஓவியா said...

மக்கள் நல அரசு என்றால்....

மக்கள் நல அரசு என்பது லாப - நட்டக் கணக்கு பார்க்கக் கூடாது. நான் பொருளாதாரம் படித்த மாணவன். 60 வருடத்திற்கு முன்பு படித்தது இப்போது ராஜாவுக்கு பயன்படுகிறது. விழுமிய பயன் கருதி விலை நிர்ணயம் (Cost of Service), உடனே பணிக்கு ஏற்ற விலை நிர்ணயம் (Value of Service), என்று இரண்டு முறைகள் உண்டு. போக்குவரத்துத் துறையில் ஏன் நட்டம் வருகிறது. வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள் லாபத்தில் இயங்கும். டவுன் பஸ் எனும் உள்ளூர் பேருந்துகள் நட்டத்தில் இயங்கும். ஏனெனில் 2 பேர் ஏறினாலும் பேருந்து ஓட வேண்டும். இதை தனியாருக்கு கொடுத்தால் வழித்தட அனுமதி பெற்றிருந்தால்கூட நட்டத்தில் இயக்க மாட்டார்கள். எனவே மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதுபோலத்தான் தொலைத் தொடர்புத் துறையும். அரசாங்கம் என்ன வட்டிக் கடையா நடத்துகிறது? ராஜாவின் புத்திசாலித்தனத்தால் அணுகுமுறையில் கடைசியாக ரூபாய் 90,000 கோடி வந்துள்ளது. (AGR என்ற வருமானம்) லாபம் வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியைவிட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதிக லாபம் பெற்றிருக்கிறார்கள் காரணம் இராசா.

கனிமொழி எம்.பி., என்ன குற்றம் செய்தார்?

தமிழ் ஓவியா said...

அதேபோல கனிமொழி எம்.பி., என்ன குற்றம் செய்தார்? கலைஞர் டி.வி.க்கு லஞ்சப் பணம் வந்தது என்று சொல்கிறார்கள். லஞ்சப் பணத்தை யாராவது செக் மூலம் வாங்குவார்களா? செக்குமாட்டு மனப்பான்மை யாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது செக்கு அல்ல. செக் (Cheque) இன்னொன்று சாதிக் பாட்சா என்ற நண்பர் தற்கொலை செய்து கொண்டார். அது கொலையா? தற்கொலையா? கழுத்து இறுகியதா? எந்தக் கயிறு? எத்தனை இன்ச்? என்று நம்ம பத்திரிகையாளர்கள் எப்படியெல்லாம் எழுதினார்கள்! இப்போது இவர்கள் உயிரோடு இருக்கலாமா? என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இப்போது சிபிஅய் விசாரணை முடிவில் உண்மை வெளிவந்துவிட்டதே. தற்கொலைதான் என்று சொல்லி விட்டார்களே. நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா?

தருமபுரியில் நடப்பது என்ன? உண்மையைச் சொல்லத் தயங்கக் கூடாது. பெரியாரின் பால பாடம் இது. இன்னமும் தொண்டினை, அறிவைப் பார்க்காமல் ஜாதி பார்க்கிறார்களே! அதனால்தானே தருமபுரிகள் நடக்கின்றன. எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நாங்களும் பார்க்க வேண்டுமா? நியாயத்தை பேசாமல் போனால் சமுதாயத்தில் பொது ஒழுக்கம் என்னாவது? கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்கள் சந்தித்த அவமானம், மன உளைச்சலுக்கு பதில் என்ன? இழப்பீடு அதற்கு தர முடியுமா?

பிரதமர் கருத்து அலட்சியப்படுத்தப்பட்டதா?

அதேபோல பிரதமர் கருத்தை இராசா அலட்சியப்படுத்தினாரா இல்லை. 7.11.2008இல் பிரதமருக்கு ராசா கடிதம் எழுதினார். 17.11.2008இல் பிரதமர் பதில் எழுதி இருக்கிறார். இதுபோல பல கடிதங்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமரின் ஒப்புதலை பெற்றே நடந்திருக்கிறது. இதில் தவறு எங்கே நடந்தது?

கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் கூட இதுவரை எத்தனையோ அமைச்சர்கள் இருந்தார்கள்; ஆனால் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விசயத்தை ராஜாதான் கண்டுபிடித்தார். ராணுவத்தில் பயன்படுத்தாமல் கிடந்த அலைக்கற்றையை கண்டுபிடித்து மக்களுக்குக் கொடுத்தவர் ராஜா என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இதை எழுதியவர் ஒரு பார்ப்பனர். எனவே தோழர்களே உண்மையை பரப்புவதற்குத்தான் இந்த இயக்கம். காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப இதன் உண்மைகள் இன்னும் வெளிவர இருக்கின்றன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை விளங்கும். புதிய நோக்கு, புதிய பார்வை மட்டுமல்ல புதிய தீர்வும் தேவை. - இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்

இனிமேல் யாராவது 1,76,000 கோடி ஊழல் என்று சொன்னால், சொன்னவர் சட்டையைப் பிடிக்க வேண்டும். என்னய்யா, இந்தத் தொகையை யார் சொன்னது? எதனடிப்படையில் சொன்னது? என்று கேட்க வேண்டும். கடவுள் கதை மாதிரி ஆகிவிட்டதே! கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர் என்பது போல. பார்த்தவர்கள் சொன்னதில்லை. சொன்னவர்கள் பார்த்ததில்லை. பெரியார் சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் பேசினார் - ராவணனுக்கு 10 தலை வைத்தான். அதற்கப்புறம் ஏன் வரவில்லை. நாங்கள் வந்து விட்டோம்? கேள்வி கேட்க ஆரம்பித்தோம். கதையை நிறுத்தி விட்டான், என்று அய்யா சொன்னார். அதுபோல இனிமேல் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலும் உண்மையை வெளிப்படுத்த நாங்கள் வந்து விட்டோம், இனி விடமாட்டோம்! உண்மைகள் உறங்க விட மாட்டோம்.

- சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்


பலூன் உடையும்!

ஏலம் விடவில்லை, ஏலம் விடவில்லை என்று சொன்னார்களே. இப்போது விட்ட ஏலம் என்ன ஆனது? ஏன் விலை போகவில்லை? உடனே இதற்கு என்ன எழுதுகிறார்கள்? கூடிப்பேசி முடிவு செய்து விட்டார்கள் என்கிறார்கள். இப்படி கூடிப் பேசுகிறவர்கள் ராஜா முன்பே ஏலம் விட்டிருந்தால் அப்போது கூடி பேசமாட்டார்களா? எவ்வளவுதான் தொகையை பெரிதாக்கி ஊதி ஊதி பலூனை பொய்யைக் கொண்டு நிரப்பினாலும் உண்மை, என்ற ஒரு சிறு ஊசியைக் கொண்டு குத்தினால், பலூன் உடைந்து போகும். இப்போது ஓய்வு பெற்றவர்களே ஒவ்வொருவராக குத்திக் கொண்டிருக்கிறார்கள். பலூன் காற்று இறங்கி விட்டதே! - சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

தமிழ் ஓவியா said...


சாதிய வன்முறைகள் தொடராமல் தடுக்க...


பிற ஏடுகளிலிருந்து

சாதிய வன்முறைகள் தொடராமல் தடுக்க...

சமீப காலமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் சாதி ஆதிக்கச் சக்திகளின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தலித் மக்களின் குடியிருப்புகள் ஆதிக்க சக்திகளால் திட்டமிட்டு தீ வைத்து கொளுத்தப் பட்டதோடு அவர்களது உடைமைகளும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களும் சூறையாடப்பட்டன.
இவ்வளவு வன்முறையும் எதற்காக? வயது வந்த இரு காதலர்கள் தங்களின் எதிர்காலத்தை தாங்க ளாகவே முடிவு செய்து கொண்டனர் என்பதற்காகத் தான். தமிழகத்தில் மாறுபட்ட சாதிகளுக்கு இடையே திருமணம் நடை பெறுவது இது முதல் முறையல்ல. எண்ணற்ற திருமணங்கள் நடை பெற்றுள்ளன. ஆனால் சமீப காலமாக வடமாவட்டங்களில் தலித் மக்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துவருவதை பொறுத்துக் கொள்ள முடியாத வர்கள் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதும் படித்த தலித் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது கேலி செய்வதும் தொடர்கிறது. மேலும் அரசியல் ரீதியாக தமிழகத்தில் தனிமைப் படுத்தப்பட்ட ஒரு கட்சி திட்டமிட்டு வட மாவட்டங் களில் ஏழை எளிய உழைப்பாளி மக்கள் மத்தியில் சாதிய உணர்வை விதைத்து பாகுபாட்டை வளர்த்து வருவ தாகவே கருத வேண்டி உள்ளது. இந்த தலைவர்களின் வெறியூட்டும் பேச்சுக்கள் தலித் மக்களுக்கு எதிரான கலவரத்தில் முடிகிறது. ஏதோ தருமபுரி மாவட்டத் தோடு இது நின்று போகும் என்று கருதுவதற்குள் விழுப்புரம், கடலூர் மாவட்டங் களுக்கும் பரவியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை அரசு கைது செய்யாததுதான் மற்ற மாவட்டங்களில் கலவரம் தூண்டு வோருக்கு ஊக்கமளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது விழுப்புரம் மாவட்டம், கந்தலவாடி கிராமத்தை சேர்ந்த தலித் மாணவி பிரியா, சாதி மறுப்புத் திருமணத்திற்கு உதவியதால் படு கொலை செய்யப்பட்டார்.அடுத்ததாக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே பாச்சரா பாளையம் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் படித்து காவல் துறையில் பணிக்கு சேர்ந்த தால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் அவர் களது வீடுகளுக்கு தீவைத்து தங்களது வெறியை தணித்துக் கொண்டனர்.

எனவே தமிழக அரசு, சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது சட்டபூர்வ நட வடிக்கைகள் எடுப்பதோடு சமுதாயத்தில் தலித் மக்கள் தாங்களும் ஒரு அங்கம் தான் என்பதை உறுதிப்படுத்த அவர் களின் கிராமங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு கலவரத்தை தூண்டுவோரை சட்டத்தின்முன் நிறுத்த வும் தயங்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துப் பாதுகாப்புகளையும் உறுதிப்படுத்துவது அவசியம். இரு சமூகத்தினரும் உழைக்கும் மக்கள் என் பதால் அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத் தும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகள் சமூக அமைப் புகளின் பிரதிநிதி களை கொண்ட அமைதிக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கவேண்டும்.

- நன்றி: தீக்கதிர் நாளேடு 29.11.2012