Search This Blog

10.8.10

நெற்றி சுத்தமாக இருந்தால் புத்தி சுத்தமாக இருக்கும் !

மனிதத் தன்மைக்கே விரோதமான ஒரு மதம் ஆரிய மதம்இந்து மதம்
வாலாஜா மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு

வாலாஜா மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். (8.8.2010)

மனிதத் தன்மைக்கே விரோதமான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரியமதம்இந்து மதம் என்று வாலாஜா மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

8.8.2010 அன்று வாலாஜாவில் நடைபெற்ற மண்டல திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழனை இயற்கை தட்டி எழுப்புகிறது

நான் பேசுவதற்கு முன்னாலே மழை வரக்கூடிய ஆயத்தம் இருக்கிறதென்று நீங்கள் எல்லாம் சற்று நேரத்திற்கு முன்னால் எழுந்தீர்கள். பிறகு தமிழனைத் தட்டி எழுப்புவதற்குப் பதிலாக தானே இயற்கை எழுப்புகிறது என்று மகிழ்ச்சியோடு இருந்த நேரத்திலே இயற்கையையும் வெல்லக் கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் என்ற அளவிலே கொட்டும் மழையாக இருந்தாலும், கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் குடி செய்வார்க்கில்லை பருவம் என்ற முறையிலே, செயல்படக்கூடியவர்கள் நாம் என்ற முறையிலே உங்கள் எல்லோருக்கும் அன்பையும், வணக்கத்தையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்ற இந்த நேரத்திலே பல ஊர்களிலே மழை வரவில்லை என்று கழுதைக்கும், தவளைக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கின்றான்.

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

ஆனால் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தி அதற்குப் பிறகு மழை வருகிறது இங்கே என்று சொன்னால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் மழை பெய்வதற்கும், இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது பருவத்தினுடைய நிலை என்ற பகுத்தறிவு சிந்தனைக்கு இங்கே நாம் ஆளாக வேண்டும் என்பதைத்தான் எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தொடர்ந்து துணைப் பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் மற்ற நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள். உள்ளத்தால் ஒருவர் மற்றுடலினால் பலராய்க் காண்பர். அந்த உணர்வு இந்த இயக்கத்திற்கு உண்டு.

பெரியார் திராவிடர்கள் என்றார்

யார் என்ன மதம்? என்ன ஜாதி? யார் என்ன கட்சி என்றுகூட பார்க்காமல் தமிழர்கள் என்று சொன்னால் கூட பல நேரங்களிலே பார்ப்பனர்கள் உள்ளே புகுந்துகொண்டு நானும் தமிழ் பேசுவதால் தமிழன்தான் என்று ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிற காரணத்தால்தான் எச்சரிக்கையாக நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்லக்கூடிய உணர்வை உருவாக்கினார்கள்.

எனவே இஸ்லாமிய சகோதரர்களாக இருந்தாலும், அல்லது இந்து என்ற பொருளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களை இந்து என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படக் கூடியவர்களாக இருந்தாலும், அதேபோல கிறித்துவ நண்பர்களாக இருந்தாலும், அல்லது எங்களைப் போன்றவர்கள் எந்த மதத்தையும் ஏற்காதவர்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் இனத்தால் திராவிடர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நாம் யாரையும் வெறுப்பவர்கள் அல்லர்

மனிதநேயத்தால் மனிதர்கள் அவ்வளவு தானே தவிர, நாம் யாரையும் வெறுக்கக்கூடியவர்கள் அல்லர். நம்மை வெறுக்கக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நேரம் அதிகமாகிவிட்டது. மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களிலிருந்தும் ஏராளமாக வந்திருக்கின்றீர்கள். என்றாலும் ஆர்வத்தோடு நீங்கள் கலையாமல் அமர்ந்திருக்கின்றீர்கள்.

புதிய அவதாரம் எடுத்திருக்கின்ற ஒருவர்

சுருக்கமாக மட்டும் சில கருத்துகளை நான் எடுத்து வைக்க விரும்புகின்றேன். இந்து முன்னணி என்ற பெயராலே இந்துக்களை ஒன்று சேர்ப்பதற்காகவே புதிய அவதாரம் எடுத்திருக்கின்ற ஒருவர் இங்கே மாநாடு போட்டு, பிறகு வேலூரிலே மாநாடு போட்டு அவர் கருத்தைச் சொன்னதை நண்பர்கள் சொன்னார்கள்.

சில பேருக்குக் கூட மேலெழுந்த வாரியாகக்கூட ஓர் எண்ணம் தோன்றும். என்னவென்று சொன்னால் ஓகோ, ஜாதியை ஒழிக்க இவர்களே கிளம்பி விட்டார்கள் போலிருக்கிறது என்று நாம் எண்ணக்கூடிய அளவிற்கு பேசியிருக்கிறார்களாம். ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு கூடாது அது எங்களுடைய கருத்து என்று அவர்கள் பேசியிருப்பதாகச் சொன்னார்கள்.

ஜாதி வாரியான கணக்கெடுப்பு தேவை

நாங்கள் ஜாதி வாரியான கணக்கெடுப்பு தேவை என்று இங்கே தீர்மானம் போட்டிருக்கின்றோம். இரண்டு அணியையும் அடையாளம் காண்பதற்கு, புரிந்து கொள்வதற்கு யாருக்கு சமூகநீதியிலே அக்கறை இருக்கிறது என்பதற்கு இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.

ஜாதி இருக்கவேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்களா? என்றுகூட நம்முடைய தோழர்களே கூட நினைப்பார்கள். என்னய்யா, ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காகத்தானே பெரியார் பாடுபட்டார். ஜாதி ஒழிப்புத்தானே இவர்களுடைய கொள்கைகள்.

அப்படி இருக்க, ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்களே என்று கூட நினைக்கலாம். இங்கேதான் சிந்திக்க வேண்டும்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லுகின்ற இராம.கோபாலன் சட்டையைக் கழற்றட்டும். ஜாதி வாரியான கணக்கெடுப்பு தேவை என்று சொல்லுகின்ற நாங்களும் சட்டையைக் கழற்றுகிறோம். சண்டைக்காக அல்ல. சட்டையைக் கழற்ற வேண்டும் என்று சொன்னவுடன் ஏதாவது கோதாவில் இறங்கி குஸ்தி போட வேண்டும் என்பதற்காக அல்ல. அவரசப்பட்டு அப்படி நினைக்காதீர்கள். நாங்கள் எப்பொழுதுமே அறவழியில் நம்பிக்கை உடையவர்கள். சட்டையை எதற்கு கழற்ற வேண்டும்? சட்டையைக் கழற்றி, வா என்று சவால்விட்டார் என்று பத்திரிகைக்காரர்கள் யாரும் நாளைக்குப் போட்டு விடக்கூடாது.

சட்டையைக் கழற்றினால் அவர் முதுகில் தொங்குவது பூணூல். எங்கள் முதுகு வெறும் முதுகாக இருக்கும். இதற்கு என்ன அர்த்தம்? அதாவது அவரும் இந்து. நாங்களும் இந்து.

இந்துக்களை எது ஒன்று சேர்க்காமல் இருக்கிறது? அவருடைய கோஷம் என்ன? இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்பதுதான். இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று சொன்னால் அவர் என்ன செய்ய வேண்டும்? என் முதுகும், அவர் முதுகும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். என் நெற்றியும், அவர் நெற்றியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். உலக முழுவதிலும் இருக்கிற கிறிஸ்தவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எல்லாம் சிலுவையைப் போட்டிருக்கின்றார்கள்.

இந்துக்களே ஒன்று சேருங்கள்!

அதேமாதிரி இஸ்லாமியர்களுக்கு சில அடையாளம் உண்டு. ஆனால் ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்ற உங்களுக்கு முதலில் நெற்றி சுத்தமாக இருக்கிறதா? நெற்றியில் குறுக்கே கோடு போடுகிறார்கள். இன்னும் சில பேர் நெடுக்குக் கோடு போடுகிறார்கள்.

தந்தை பெரியார் சொன்னார்நெற்றி சுத்தமாக யாருக்கு இருக்கிறதோ, அவனுக்குப் புத்தி சுத்தமாக இருக்கும் என்று சொன்னார். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்றீர்களே, ரொம்ப தூரம் போக வேண்டாம். காஞ்சிபுரம் பக்கத் தில்தான் இருக்கிறது.

யானைக்கு நாமம் போடுவதில் சண்டை

அந்த காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சண்டை வரதராஜ பெருமாளுக்கு அல்ல. பாதம் வைத்த நாமமா? பாதம் வைக்காத நாமமா? வடகலை நாமமா? தென் கலை நாமமா? என்கிற வழக்கு இருந்து வருகிறது.

இந்து மதத்தில் ஒரு பிரிவு வைஷ்ணவம், வைஷ்ணவத்திலாவது ஒன்றாக இருக்கிறார்களா, என்றால் இல்லை. அதிலே இரண்டு பிரிவு. ஒன்று வடகலை, இரண்டாவது தென்கலை. பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம். இவர்களுக்குள் சண்டை போட்டால் கூட பரவாயில்லை. ஆனால் யானையைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. யானை, எனக்கு இந்த நாமம் போடு என்று எங்காவது சொல்லுமா?

வழக்கு 150 வருடங்களாக நடக்கிறது

யானைக்கு எந்த நாமம் போடுவது? என்று 150 வருடங்களாக வழக்கு நடக்கிறது. இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம். இந்த வழக்கு லண்டன் கோர்ட்டுக்கு வெள்ளைக்காரனிடம் சென்று விட்டது. இலண்டனில் பிரிவி கவுன்சில் என்று இருந்தது. இப்பொழுதுதான் நமக்கு உச்சநீதி மன்றம் இருக்கிறது, சுதந்திரம் வந்த பிற்பாடு. 1947க்கு முன்னால் வரையில் பிரிவி கவுன்சில்தான் விசாரணைக்கூடம்.

அப்பீலுக்கு இங்கே உச்சநீதிமன்றத்திற்கு எப்படி செல்லுகின்றோமோ அதேமாதிரி பிரிவி கவுன் சிலுக்குச் செல்ல வேண்டும். நம்முடைய யானை வழக்கு அங்கே போனது.

வடகலை - தென்கலை

யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று வழக்கு. இந்த வழக்கை விசாரிப்பவர் வெள்ளைக்காரர். வாதாடு கிறவன்வக்கீல் வெள்ளைக்காரன். அவர்களுடைய நெற்றியில், இந்த மாதிரி கோடு போட்டு அவர்களுக்குப் பழக்கம் கிடையாது.

--------------------தொடரும்... "விடுதலை” 10-08-2010

1 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழருக்கு மாலை வணக்கங்கள் !

// மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தி அதற்குப் பிறகு மழை வருகிறது இங்கே என்று சொன்னால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் மழை பெய்வதற்கும், இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. //

ஆசிரியரின் சமயோசித தன்மை (டைமிங் சென்ஸ்) வியக்கவைக்கிறது தோழர் !