Search This Blog

20.8.10

தெலுங்கு மொழி பெரியார்திரைப்படம் பெயர் சூட்டல் ஒரு விளக்கம்


பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு பெரியார் ராமசாமி நாயக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெரியாருக்கு தமிழ் நாட்டில் முளைக்காத நாயக்கர் பட்டம் ஆந்திராவில் மட்டும் முளைத்தது எப்படி? எனும் விமர்சனப் போக்கு நிலவுகிறது. விமர்சனங்களை படிப்பவர் களுக்கு நியாயம்போலக்கூட அது தோன்றலாம்.

தமிழில் பெரியார் திரைப்படத்தினை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரித்தனர். தெலுங்கு மொழியாக்க படத்தினை நாக் எண்டர் பிரைசஸ் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் தெலுங்கு மொழியாக்க படத்தினை ஏற்கெனவே ஆந்திரத்தில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் இது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களிட மிருந்து சற்று வேறுபட்டு லாபநோக்கினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ல இது. பெரியார் தெலுங்கு பட முன்னோட்ட நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் நடைபெற்ற பொழுது தெலுங்கு படத்தின் பெயர் குறித்து விளக்க மளிக்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் ஞான.ராஜசேரன் அய்.ஏ.எஸ் உடன் இருந்தார். வெளிமாநிலங்களில் ஜாதிப் பெயரைப் போடாமல் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுவது மரியாதை குறைவாகவே கருதப்படும் நிலை இன்றும் நீடித்து வருகிறது. தந்தை பெரியாரைப் பற்றி பிற மாநிலங்களில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் நீடித்து வருவது எதார்த்தமான நிலையாகும். பொதுமக்களுக்கு யாரைப் பற்றிய படம் என்பது எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெரியார் இராமசாமி நாயக்கர் எனும் பெயரில் படத்தினை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

நாயக்கர் என குறிப்பிட்டது மரியாதை நிமித்தம் என்றார். பெரியார் திரைப்படத்திலேயே செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெறும் காட்சியில், அதில் பெரியார் உட்பட பல தலைவர்கள் தங்களது பெயருடன் ஜாதிப் பட்டத்தை போட்டுக்கொள்ளும் பழக்கத்தினை விட்டுவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பெரியார் ஜாதியினை எதிர்த்துப் போராடியவர் என்ற செய்தியெல்லாம் படத்தில் வருகிறது. தெலுங்கு படம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரினை தயாரிப்பாளர் சூட்டி இருந்தாலும், நாயக்கர் எனும் பெயரினை நீக்கி வெளியிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நடைபெற்றது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மட்டுமே. படம் இன்னும் வெளியிடப் படவில்லை. தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் வெளியிடப் படும்பொழுது நாயக்கர் எனும் ஜாதிப் பெயரினை பெரியார் விட்டுவிட்டார் எனும் செய்தியினைத் தெரிவிக்கும் முகமாக
எனும் பெயரிலேயே படம் வெளியிடப் படும். பெரியார் ராமசாமி எனப் பெயரிடுவதை விட என வெளியிடுவது பெரியாருடைய கொள்கையினை அழுத்தமாக வெளியிடும் அணுகுமுறை என்பது ஊடகப் பார்வையில் உள்ளவர்களுக்கு உண்மையிலே புரியும்.

ஒரு திரைப்பட பெயரிலேயே திரிபு நிலைகள் தோன்றி அது மாற்றப்படும் நிலை உருவாகும் சூழலில், திரைப்படம் பெயர் பற்றி விமர்சனம் கொடுப்பவர்கள், பெரியாரது எழுத்துகளின் பதிப்பு தாராளமயமாக்கப்பட்டால் ஏற்படும் கொள்கை திரிபு நிலைகளை அறிவார்களா? அடுத்து நிச்சயம் அறிவார்கள்! பெரியாரது எழுத்துப் பதிப்பின் தாராளமயம் பற்றி அவர்கள் கூற வேண்டிய அவசியம் என்ன? அவர்களது நோக்கம் பெரியாரது எழுத்துகளைப் பரப்புவது என்பதல்ல. காலப்போக்கில் அதை சிதைப்பது என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நடுநிலையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட மக்கள் சிந்திப்பார்களாக!


-------------------------”விடுதலை” 19-8-2010

1 comments:

Unknown said...

பெரியாருக்கும், பெரியாரை இன்று காத்து நிற்பவர்களுக்கும் வெற்றி!