Search This Blog

11.7.11

அகல்யை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய கன்னிகைகளை தினம் நினைத்தால்...


"பஞ்சகன்யாஸ்மரே....."


பார்ப்பன பாஷையில் ஒரு தோத்திர ஸ்லோக முண்டு. என்னவென்றால், "ஆகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா, பஞ்சகன்யாஸ்மாரே நித்தயம் மஹாபாதக நாசனம்" இதன் கருத்து அகல்யை துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னிகைகளை தினம் நினைத்தால் மஹாபாதகமெல்லாம் நாசமாய் விடும் என்பதே. இதில் ஏற்பட்ட விவகாரத்திற்காகத்தான் "ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்கின்ற பழமொழி உண்டாக்கப்பட்டது. விவகாரத்தின் தன்மையாவது:-

கோபமில்லாமல், பகுத்தறிவோடு கேட்க வேண்டும். ஏனென்றால், கோபம் வந்தால் பார்ப்பான் ஏமாற்றி விடுவான். கோபமில்லாவிட்டால் தான் அதிலிருக்கும் ரகசியம் விளங்கும். நான் கிளப்பப்போகும் விவாதம் இந்த ஸ்லோகத்தை எந்தப் பார்ப்பான் எழுதினானோ அந்தப் பார்ப்பான் எழுதி வைத்த சங்கதியைத்தான் சொல்லப்போகிறேன். ஆதலால் நான் என் உத்தேசப்படி சொல்லப்போவதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் கண்டிருப்பது வாஸ்தவமா, இல்லையா என்று ஒவ்வொரு பார்ப்பானையும் கேளுங்கள்; வாஸ்தவமல்ல வென்று சொன்னால் என்னைக் கேளுங்கள்.

முதலாவது அந்த ஸ்லோகத்தில் மேல்கண்ட ஐந்து பெண்களையும் கன்னிகைகள் என்று குறிப்பிட்டிருக்கிறது. கன்னிகை என்றால் கலவி அறியாதவள். அதாவது புருஷர்கள் சாவகாசம் தொடங்காதவள். கல்யாணமில்லாதவள் என்பது பொருள். ஆகையால் அந்த ஸ்லோகம் முன்னுக்குப்பின் முரணானது என்று சொல்லுவேன்.

ஒரு சமயம் பார்ப்பனர்கள் இதற்கு இந்த சுலோகத்தில் ஃ பெண்களைக் குறிப்பிட்டு நினைக்கும்படி சொன்னதின் கருத்து கன்னித்தன்மையை உத்தேசித்ததல்ல. அவர்களுடைய கற்புத் தன்மையைப்பற்றி என்று சமாதானமாகச் சொல்ல வருவார்களானால், அதைப்பற்றி சற்று யோசிப்போம்.

இந்த ஐந்து பெண்களையும் நான் 1 தாரை, 2 அகலியை, 3 துரோபதை, 4 சீதை, 5 மண்டோதரி என்கிற வரிசையில் எடுத்துக் கொள்ளுகிறேன்.

முதலாவது தாரை.

தாரை என்பவள் தேவ குருவாகிய பிரகஸ்பதியினுடைய பெண்சாதி. இந்தம்மாளைப்பற்றிய விஷயம் அறிவதற்கு கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு காதம் காதமாய் ஊர்பயணம் போக வேண்டியதில்லை. இன்றைக்கும் தெருத்தெருவாய் தாரையும் சந்திரனும் படுத்து உருளுவதும், நிர்வாணமாய் நின்றுகொண்டு சந்திரனுக்கு எண்ணை தேய்ப்பதுமான சத்காலட்சேபத்தை தினம் தினம் பார்த்து வருகிறோம். தாரையம்மன் புருஷனே சங்கதி தெரிந்து இரண்டுபேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டுபேருக்குமாக பிறந்த குழந்தை புதன் என்பவன் இருப்பதும் மேற்படி பார்ப்பனர்கள் சாஸ்திரங்களிலேயே இருக்கிறது. ஆகவே குருவின் யோக்கியதை, குருபத்தினியின் யோக்கியதை, சிஷ்யனின் யோக்கியதை, ஆச்சிரமத்தின் யோக்கியதை, ஆரிய நாகரீகத்தின் யோக்கியதை ஆகிய இவ்வளவுக்கும் தாரையம்மாள் உதாரணமாக விளங்குகிறாள். இதையெல்லாம் விட கற்பின் லக்ஷணத்திற்கும் இது ஓர் ஆரிய இலக்கியமாய் விளங்குகின்றது.

இரண்டாவதான அகலியை அம்மாள் விஷயம்.

அகல்யை அம்மாள் என்பவள் கெளதம முனிவர் என்கின்ற ஒரு ரிஷியின் பெண்டாட்டி. தெய்வராஜனான இந்திரன் இந்த அம்மாள் மேல் ஆசைப்பட்டு, மாறுவேஷம் பூண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பிறகு ஒருவருக்கொருவர் இன்னார் என்று தெரிந்துகொண்டு இரண்டுபேரும் சுகித்ததாகவும், ரிஷி இந்த விஷயம் தெரிந்து இருவரையும் தண்டித்ததாகவும், அத்தண்டனையால் இந்திரனுக்குச் சரீரமெல்லாம் பெண் குறியாகவும், அகலியை கல்லாகவும் ஆய்விட்டதாகவும் பார்ப்பன சாஸ்திரங்கள் என்பவைகளே சொல்லுகின்றன. அதுவும் தெருவில் போகின்ற சாஸ்திரங்கள் சொல்லவில்லை. ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுவதாகிய இராமாயணம், பாரதம் முதலியவைகளில் தான் இந்த உண்மைகள் சொல்லப்படுகின்றன. இதனால் தேவர்களின் அரசனின் யோக்கியதையும், ரிஷி பத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்றது.

மூன்றாவது, துரெளபதையம்மன் சங்கதி.

இந்தம்மாள் முதலில் ஒரு புருஷனை மாத்திரம் கட்டிக்கொண்டு, பிறகு மாமியார் இஷ்டப்படி, மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டியாக இருந்து வந்திருக்கிறாள். ஐந்து பேரிருந்தும் ஆசை தீராமல் இன்னொரு புருஷனையும் மனதில் நினைத்து நினைத்து வருந்தியிருக்கின்றாள் என்பதை தானே ஒப்புக்கொண்டதல்லாமல் உலகப் பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால், ஆண்மக்களே இருக்கக் கூடாது என்று தீர்ப்புங் கூறிவிட்டாள். இதனால் அக்காலக் கற்புக்கு லக்ஷணம் புருஷனும், மாமியாரும் யாரிடம் போகும்படி சொன்னாலும் போய்த்தான் ஆக வேண்டு மென்பதும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும், பிறகு தன்னிஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்ததுதான் என்பதும் அக்கால வழக்கத்தில் இருந்தாய் விளங்குகின்றது. ஆகவே ஐந்து கன்னிகைகளில் மூன்றுபேர் சங்கதி இப்படியிருக்கின்றதே என்று கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் பார்ப்பனர்கள் "ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்று சொல்ல அதிலிருந்து இந்தப் பழமொழி ஏற்பட்டது. இந்த இரண்டில் ஒன்றும் குற்றமில்லையா என்று பார்த்தால் அதிலும் ஒன்றைக்கழிக்க வேண்டியதாகத்தான் இருக்கின்றது. அடியோடு கழிக்காவிட்டாலும் சந்தேகத்திலாவது வைத்துத் தீரவேண்டியதாகத் தானிருக்கின்றது.

நான்காவதான சீதையம்மாள்

சங்கதியை பார்த்தால் முன்சொன்ன கதைகளின் படி அவ்வளவு இல்லாவிட்டாலும் உத்தம ஸ்திரீ என்றோ முழுதும் பரிசுத்தமானவளென்றோ, கற்புக்கரசி யென்றோ சொல்வதற்கில்லை. குணவிஷேசத்தைப் பற்றியோ வென்றால், மாயமானைத் துரத்திக்கொண்டு ராமர் போன காலத்தில் வெகு நேரம்வரை திரும்பி வராதது கண்டு புருஷனைப்போய்ப் பார்த்து வரும்படி சீதை, லக்ஷுமணனுக்குச் சொல்ல, லக்ஷுமணன் போகவேண்டிய அவசியமில்லை, ராமர் எப்படியும் திரும்பி வருவார் என்று சொன்னதற்கு அண்ணன் செத்தால் என்னைக் கைப்பற்றலாம் என்று பார்க்கின்றாயா என்று சொன்னதிலிருந்தே லட்சுமணனிடம் பழகிய சீதைக்கும் போதிய அறிவும், உயர் குணமும், விஷயத்தை அறியும் சக்தியும் இல்லை யென்கின்ற தத்துவமும் நன்றாய் விளங்குகின்றது. தவிர, சீதையிடம் வெகுகாலம் நன்றாய்ப் பழகிய அவள் புருஷனாகிய ராமனும் பல தடவை சீதையின் கற்பில் சந்தேகப்பட்டிருக்கிறான். அதாவது ராவணனைக் கொன்ற பின் சீதையை முதல் தடவை சந்தேகப்பட்ட போது சீதையிடம் என்ன சொல்லுகிறான் என்றால் "ஏ சீதை, நான் உன்மேல் ஆசைப்பட்டு உன்னை மீட்டுக்கொண்டு போவதற்காக ராவணனிடம் யுத்தம் செய்யவில்லை. பின் என்னவென்று கேட்பாயானால் ஒருவன் பெண்ஜாதியை மற்றொருவன் அடித்துக்கொண்டு போய்விட்டால் அவனைச் சும்மா விட்டுவிடுவது வீரனுக்கு அழகாகுமா என்கின்ற ரோசத்தின்மேல் தான் சண்டைபோட்டு அவனைக்கொள்றேன். மற்றபடி ஒரு துஷ்டன் வீட்டில், அதுவும் அவனுடைய அதிகாரத்திற்கும் பலத்திற்கும் கட்டுப்பட்டு 10 மாதம் வசித்த தன் பெண்சாதியை சுயமரியாதையுள்ள எவனாவது மறுபடியும் சேர்த்துக்கொள்வானா?" என்று சொன்னதோடல்லாமல் சகல வசத்திலும் அவனுடைய சுவாதீனத்திலிருந்த நீ, அவனுக்கு வசப்படாமலிருந்திருக்க முடியுமா? ஆதலால் நீ எங்கே வேண்டுமானாலும் உன்னிஷ்டப்படி போகலாம். உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கோபத்தால் சொல்லவில்லை. நெடுநேரம் ஆலோசித்து செய்த முடிவு இது" என்று சொன்னான். (இந்த இடத்தில் ராமன் உலக அபவாதத்திற்குக் கட்டுப்பட்டு இப்படி சொல்லவில்லை. தானே சந்தேகப்பட்டு ஒரு வித முடிவு செய்துகொண்டு சொல்லுகிறான் என்றுதான் அர்த்தம்) "அதோடு பத்துமாதம் எதிரி வீட்டில் வசித்த நீ" என்பதால் இதுவரை உயிர் வைத்திருந்தாயே என்கின்ற கருத்தும் தொக்கியிருக்கின்றது. இதற்கு சீதை சொல்லும் பதில் என்ன வென்றால்:- "ஏ ராமா, நீ சொல்வது உண்மையா? அதற்கு நான் என்ன செய்யக்கூடும். நானோ ஒரு பெண். ஒண்டியாயும் அனாதையாயும் இருந்தவள். ராவணனோ ராட்சசன். அளவற்ற பலசாலி. என்னால் கூடியவரை தடுத்துப் பார்த்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போகவேண்டும் என்கின்ற ஆசை யிருந்ததா? விதியை நோகவேண்டியதே தவிர என்னைக் குற்றஞ் சொல்லக்கூடாது. என் தேகம்தான் பிறருக்கு வயப்பட்டதே ஒழிய என் ஹிருதயம் அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் உன்னிடத்திலேயே இருக்கின்றது. சுதந்திரமற்ற நான் என்ன செய்ய முடியும்? அநுமானை அனுப்பி நான் இருக்குமிடத்தையும் ஸ்திதியையும் அறிந்துவரச் சொன்னதின் மூலம், நான் லங்கையில் ராவணனுடைய வீட்டில் இருப்பதாகத் தெரிந்தவுடனே என்னை ஏன் தள்ளிவிடவில்லை" என்றுதான் சொன்னாள். (இது வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 117, 118-வது சருக்கத்தில் காணப்படுவது) இந்த இடத்தில் ராமன் சீதையைப் பார்த்து நீ கற்பழிந்துவிட்டாய் என்று நான் தீர்மானித்துவிட்டேன் என்று வெளிப்படையாய் சொல்லிக் காட்டியதற்கு சீதை ஏன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று தைரியமாய் சொல்லியிருக்கக் கூடாது என்கின்ற கேள்விக்கு பதில் இல்லை. அதோடு என் சரீரம் அவன் வயப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதும் மனம் உன்னிடம்தான் இருந்தது. விதியை நோக வேண்டுமே யொழிய என்னை நோகக்கூடாது. ராவணன் வீட்டில் இருந்ததையும் என் ஸ்திதியையும் அனுமான் பார்த்துவிட்டு வந்து சொல்லி இருப்பாரே அப்போதே ஏன் என்னை தள்ளிவிட்டதாக சொல்லி அனுப்பவில்லை. என்பதாக வெல்லாம் சொல்லுவதினால் விஷயம் சந்தேகத்திற்காவது இடமுண்டாகிறதா, இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு சமயம் இராவணன் மீது அதிகமான பழியைச் சுமத்த வால்மீகி வேண்டுமென்றே இப்படி எழுதி இருக்கக்கூடும் என்று சொல்வதானால் அது வேறு விஷயம். என்னவென்றால் அது ராவணன் சங்கதியைப்பற்றிப் பேசும் போது கவனிக்கவேண்டிய விஷயம். தவிர மற்றொரு தடவை வண்ணான் வார்த்தையைக் கேட்டுக் கொண்டு கொஞ்சமும் கூட முன் பின் யோசிக்காமல் திடீரென்று லவமணனை விட்டு சீதையை நடுக்காட்டில் கொண்டுபோய் விட்டு வந்ததும், அங்கு சீதை தன் கற்பைப்பற்றி யார் என்ன சொல்லிவிடப்போகிறார்களோ எனப் பயந்து "லவமணா, இதோபார் நான் இப்பொழுது கர்ப்பமாயிருக்கிறேன்" என்று சொன்னதும், காட்டில் இரட்டைப் பிள்ளை பெற்றதாக ஒரு ராமாயணத்திலும், தர்ப்பை கிள்ளிப்போட்டு வால்மீகி ஒரு பிள்ளையை உண்டாக்கினார் என்று மற்றொரு ராமாயணத்திலும் சொல்லப்பட்டாலும் இந்த பிள்ளைகளை ராமன் ஒப்புக்கொள்ளாமல் வால்மீகி முதலிய பெரிய தவ சிரேஷ்டர்கள் என்போர்கள் பிரமாணம் செய்தும் ஒப்புக்கொள்ளாமல் மறுபடியும் நெருப்பில் இறங்கும்படி சொன்னதும், அதற்கு சீதை கட்டுப்படாமல் உலக அபவாதத்தையோ அல்லது ராமனுடைய சந்தேகத்தையோ நிவர்த்தி செய்ய வேண்டாமா என்கின்ற கவலையில்லாமல் பூமியைப் பிளக்கச் செய்து, பூமியில் இறங்கி மறைந்துவிட்டாள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இன்னமும் என்னென்னமோ இருந்தாலும் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு இதுவே போதும். எனவே சீதையின் விஷயமானது சந்தேகப்படுவதற்கில்லாமல் போகவில்லை என்பதோடு, சீதையின் லவமித் தன்மையும், ராமனின் விஷ்ணுத் தன்மையும் எப்படிப்பட்டதென்று விளக்கவும், ஆரியர் பழக்க வழக்கங்களும் அக்காலத்திய ஆண் பெண்கள் வாழ்க்கை நிலைமையும் வெளியாக்கவும் உதவுகின்றது.

கடைசியாக மீதி இருப்பது ஐந்தாவதான மண்டோதரி அம்மாள்.

இந்தம்மாள் விஷயத்தில் ஒரு தகராரையும் காணோம். கம்ப ராமாயணத்தில், புருஷன் பிரிந்த உடன் செத்து விட்டான் என்கின்ற சங்கதி தெரிந்து அழுது உயிர் விட்டுவிட்டதாகக் காணப்படுகின்றது. தவிரவும் செத்துப் போன ராவணனைப் பார்த்து அழும்போது சீதை குலத்திலாவது ரூபத்திலாவது குணத்திலாவது சாமர்த்தியத்திலாவது என்னைவிட சிறந்தவளா என்று மாத்திரம் கேட்டிருக்கின்றார்கள். இது சீதையின் குணத்தை 10 மாதம் நேரிலிருந்து பார்த்தவள் கேட்டிருப்பதால் இதில் மண்டோதரி பேரில் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் சீதையின் குணம்தான் வெளியாக்கப்பட்டதாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் மண்டோதரியின்பால் மாத்திரம் குற்றம் சொல்ல இடமில்லை. கற்புள்ள பெண் என்றே சொல்லலாம். ஆனால், இது திராவிடச் சிறப்புக்கும் இலக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக பஞ்ச கன்னிகைகளின் யோக்கியதையைப் பார்க்கின்றபோதும், கற்பு இலக்கணங்களைப் பார்க்கின்றபோதும், குரு, அரசன், ரிஷி, கடவுள் என்கின்றதைப் பார்க்கின்ற போதும் நன்றாய் கவனித்தால் இதன் ஆபாசங்கள் விளங்குவதோடு ஐந்துக்கு இரண்டாவது சுத்தமாய் தேர்கின்றதா என்பது வெளியாகும்.

முதலாவது விஷயம், குருபத்தினியின் சங்கதியையும், சிஷ்யனின் யோக்கியதையும், வெளியாக்கிற்று. இந்த இரண்டாவது விஷயம் தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருப்பவன் யோக்கியதையும் ரிஷி பத்தினியின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. இந்த இரண்டு விஷயமும் புருஷர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பதையாவது காட்டிற்று. மூன்றாவது விஷயமோ புருஷனும் ஒப்புக்கொண்டான், மாமியும் ஒப்புக்கொண்டார்கள், உலகமும் ஒப்புக்கொண்டது என்பதைக் காட்டிற்று. நாலாவது விஷயம், அவதாரங்கள் என்பதின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. மிஞ்சியது இராக்ஷசர்கள் என்றும் இராக்ஷச ஸ்திரீகள் என்றும் ஆரியர்கள் எப்பேர்ப்பட்டவர்களை சொல்லுகிறார்கள் சொல்லி வந்திருக்கின்றார்கள் என்பதையும் ஒரு திராவிடப் பெண்ணின் கற்பின் நிழலுக்குள் ஆரியர்கள் எப்படி வந்து கலந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும் வெளியாக்கிற்று, இந்த பழமொழி, ஒன்று உலகத்தை ஏமாற்றச் செய்திருக்கவேண்டும். அல்லது இது அவர்களின் பழக்க வழக்கமாயிருக்க வேண்டும். ஆகவே ஐந்துக்கு இரண்டு கூட அவர்கள் சொற்களில் உண்மையிருந்தால் அதுவும் நம்முடைய விஷயங்களில்தான் என்பதும் இந்த விஷயத்தினால் வெளிப்படுத்துகின்றேன்.

--------------- சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “பகுத்தறிவு” - மே 1938

0 comments: