Search This Blog

13.8.13

கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்

செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி

கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்

தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமூகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதும், ஒவ்வொரு சமூகத்தானும், ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமூகங் களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த்தையேயாகும். ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச்சொன்னால் ‘இது சாத்தியப் படுமா’ என்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லுவதாகவே இருக்கிறது. எச்சமதர்மக் காரனையாவது அழைத்து உங்கள் சமூகத்தில் மதத்தில் சமதர்மம் இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படி யிருக்கிறாய், அவன் ஏன் அப்படியிருக்கிறான், நீ ஏன் எஜமானனாயிருக் கிறாய், அவன் ஏன் அடிமையாயிருக்கிறான், நீ ஏன் பிரபுவாய், செல்வந்தனா யிருக்கிறாய், அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிகிடப்பவனாயிருக்கிறான்? உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசை கூட இல்லை? நீ ஏன் வருஷம் 10000 கணக்காய் லாபம் பெருக்கி ராஜபோகம் அனுபவித்து லக்ஷாதிபதியாய் விளங்குகின்றாய்? அவன் ஏன் நஷ்டப்பட்டு, கை முதலை இழந்து கடன் காரனாகிறான்? நீ ஏன் பிச்சை கொடுக்கத் தகுந்தவனானாய் அவன் பிச்சை வாங்கத் தகுந்தவனானான்? நீ ஏன் பாடுபடாமல் வேதத்தையும், மந்திரத் தையும் சொல்லிக் கொண்டு நோகாமல் வயிறு வளர்க்கின்றாய்? அவன் ஏன் பாடுபட்டு இடுப்பொடிந்து, கூன்விழுந்து இளைத்துப்போகிறான். உன் பிள்ளை ஏன் பி.ஏ., எம்.ஏ., ஐ.சி.எஸ். பாரிஸ்டர் படிக்க முடிந்தது? அவன் பிள்ளை ஏன் கையெழுத்துப் போட கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பன போன்ற சாதாரணமான பொதுக்கேள்விகளைக் கேட்டால் சமதர்மம் மதக்காரர்கள் என்பவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

முட்டாள்தனமானதும், போக்கிறித்தனமானதுமான பதிலைத்தான் சொல்லுவார்கள். அதென்னபதிலென்றால் “ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு ஆகத்தானே கடவுள் சிருஷ்டியின் இயற்கை இருக்கின்றது என்று சொல்லுகிறார்கள். இந்தப் பதிலைப் படித்த மேதாவிகளான பி.ஏ., எம்.ஏ., பண்டிதர்களும், சாஸ்திரிகளும், குருமார்களும், பாதிரிகளும் மௌலானாக்களும், தத்துவஞானி என்பவர் களும், மகாத்மாக்கள் என்பவர்களும் அரசியல் ஞானிகள் சீர்திருத்தக் காரர்கள், பரோபகாரிகள், ஆஸ்திகர்கள், பிரமஞானிகள், பிரம சமாஜக் காரர்கள் முதலாகிய எல்லாப் ‘பொருப்பு வாய்ந்த’ கனவான்களும் சொல்லு கின்றார்களென்றால் இந்தக் கூட்ட மக்களோ, மதமோ, அரசியலோ, ஞானமோ, சமதர்மமாகுமா என்று யோசித்துப்பாருங்கள்.

ஏழை பணக்காரக் கொடுமைக்கும், சோம்பேறி உழைப்பாளி தன்மை யில் உள்ள வித்தியாசத்திற்கும் “ஐந்து விரல்களும் ஒன்று போலிருக்கின்ற னவா” என்கின்ற உதாரணத்திற்கும் ஏதாவது பொருத்தமிருக்கிறதாவென்று யோசித்துப் பாருங்கள். இந்த பதிலை ஒன்றா முட்டாள்த்தனம் அல்லது போக்கிறிதனமான பித்தலாட்டத்தனம் என்று தானே சொல்லவேண்டும். இன்னும் வெளிப்படையாகப் பேச வேண்டுமானால் இன்று காணப்படும் மதம், ஜாதி, சமூகம், அரசாங்கம், ஞானம், தத்துவ சாஸ்திரம் முதலியவை களெல்லாம் சமதர்மத்துக்கு விரோதமான சூஷி எண்ணத்தின் மீது கட்டப் பட்டவைகளென்று தான் சொல்லவேண்டும். இதுமாத்திரமல்லாமல் இவைகளெல்லாவற்றிற்குமாதாரமாய்க் கொள்ளப்படும் கடவுள் என்ற தன்மையும் இந்த உண்மை சமதர்மத்திற்கு விரோதமான தன்மைகளை நிலை நிறுத்தவும் அதன் குற்றங்களை உணராமலிருக்கவும், திருத்துப்பாடு செய்யா மலிருக்கவும் தந்திரக்காரர்கள் செய்த சூஷியேயாகும். அல்லவென்றால் இச்சூட்சிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருத்துப்பாடு செய்துகொள்ள முடியாத மூட மக்களின் அறியாமை உணர்ச்சியேயாகும்.

இன்றையத்தினம் வார்த்தையில் சமதர்மமே யொழிய காரியத்தில், வாழ்க்கைத் தத்துவத்தில் எங்கே சமதர்மம் இருக்கிறது?

ஒருவனுக்கு மகிமையில், சம்பாதனையில், அல்லது சொத்தில் இத்தனையில் ஒரு பங்கு என்று பிச்சை கொடுத்துவிட்டால் அது சமதர்ம மாகிவிடுமா? ஒருவனை தொட்டுக் கொண்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவன்கூட இருந்து சாப்பிட்டுவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவனைக் கோவிலுக்குள் விட்டுவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவன் கூடஇருந்து கடவுளைப் பிரார்த்தனை செய்தால் அது சமதர்ம மாகிவிடுமா? ஒருவன் கஞ்சித்தொட்டிவைத்து எல்லோருக்கும் கஞ்சி ஊற்றினால் அது சமதர்மமாகிவிடுமா? ஒரு சத்திரம் கட்டி வைத்துவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? எல்லோரையும் ஒன்றாய் உட்கார்ந்து படிக்கச் சொன்னால் சமதர்மமாகிவிடுமா? எல்லோரும் ஒன்றாயிருந்து கும்பிட ஒரு கோவில் கட்டி விட்டால் சமதர்மமாகிவிடுமா வென்றுயோசித்துப்பாருங்கள். இவற்றால் இதைசெய்கின்ற மனிதனுக்கோ, இதை அனுபவிக்கின்ற மனிதனுக்கோ, முறையே நஷ்டமென்ன? லாபமென்ன? இவையெல்லாம் வெரும் பித்தலாட்ட சமதர்மங்கள்.

உலகம் பொது, உலகத்திலுள்ள செல்வம் போக போக்கியம் பொது, உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு வேண்டிய காரியத்திற்காக மனிதன் செய்ய வேண்டிய வேலைகளெல்லாம் பொது, அதனால் ஏற்படும் பலன்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொது-சரிபாகம் பிரித்துக்கொள்ளத்தக்கது. இதற்கு மீறி நடந்தால் குற்றம்-தண்டிக்கத்தக்கது என்று எந்த மதம், எந்த சமூகம், எந்த அரசாங்கம், எந்த அரசியல் ஞானம், எந்த மதத் தத்துவஞானம், எந்த மகாத்மா முதலியவைகள் கூறுகின்றன என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மத வெறி காரணமாக தன்தன் மதம் சமதர்ம மதம் என்பதும், சமயவெறி காரணமாக தன் தன் சமயம் சமதர்ம சமயமென்பதும் அரசியல் வெறி-சூக்ஷி காரணமாக தன் தன் அரசியல் முறை சமதர்மம் என்பதுமான பித்தலாட் டங்கள் தான் நடைபெறுகின்றனவேயல்லாமல் உண்மை சமதர்மம் எங்கே இருக்கின்றது? எதில் இருக்கின்றது என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.

அரசனும், ஆண்டியும் ஒன்றாயிருந்து ஒரு ஓட்டலிலிருந்து சாப்பிட்டால், ஒரு கோயிலில் கும்பிட்டால், ஒரு பள்ளிக்கூடத்தில்படித்தால், ஒரு தெருவில் நடந்தால், ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட்டால், ஒரு காற்றை சுவாசித்தால் இவையெல்லாம் எப்படி சமதர்மமாகிவிடும்? என்று யோசித்துப் பாருங்கள். இதைச் சொல்லி மக்களை இன்னும் எத்தனை காலத்திற்கு உண்மையான சமதர்ம மில்லாமல் கொடுமைப்படுத்தி ஏழைகளின்-தொழில் செய்து, பாடுபடும் பாட்டாளிகளின் ரத்தத்தை சோம்பேரிகளும், சுயநலக் காரர்களும், வன்னெஞ்சக்காரர்களும் உரிஞ்சும்படி விட்டுக்கொண்டிருப்பது என்பதை யோசித்துப் பாருங்கள். மேல்கண்ட கொடுமைகளுக்கும், பித்தலாட் டங்களுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் என்ன சமாதானமிருக்கின்றது. ஆண்டவன் செயல், ‘கடவுள் சித்தம்’ ‘அவனவன் முன் ஜென்மப்பலன்’ என்று சொல்வதோடு ‘ஐந்து விரல்களும்’ ஒன்று போல் இருக்கின்றனவா என்று கேட்கும் கேள்வியுமல்லாமல் வேறு என்ன? ஆண்டவன் செயலை ஒப்புக்கொள்ளாதவனும் ஐந்துவிரலும் ஒன்று போலிருக்குமா என்கின்ற சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாதவனும் இந்த சமாதானத்தைப்பற்றி என்ன சொல்லக்கூடும்? இந்த சமாதானம் போக்கிறித்தனமானதும், முட்டாள் தனமானதும், பித்தலாட்டமானதும் என்று தானே சொல்லித்தீர வேண்டும். ஐந்து விரல்களும் ஒன்றுபோலிருக்கின்றனவா வென்று கேட்டவர்கள் அரசியலில் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் கேட்பதின் கருத்து என்ன? ஒன்றாய் சாப்பிடவும், ஒன்றாய் பிரார்த்தனை செய்யவும், ஒன்றாய் படிக்கவும், ஒன்றாய் உத்தியோகம் பார்க்கவும், ஒன்றாய் அதிகாரம் செலுத்தவும், உரிமைகள் கேழ்ப்பதின் அர்த்தம் என்னவென்று யோசித்துப்பாருங்கள்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டுச் சொந்தக்காரன் அல்லாததால் இந்த நாட்டை விட்டுப்போய் விட வேண்டும் என்கின்றோம். அதே முறையில் பணக்காரனும், மிராசுதாரனும், ஜமீன்தாரனும் பாடு படாதவர்களானதினால் அவர்கள் மற்றவர்கள் பட்டபாட்டின் பலன்களை அனுபவிக்கத் தகுதியுடை யவர்கள் அல்லவாதலால் அவைகளை எல்லாம் பாடு படுவர்களுக்கு விட்டு விட்டு அவர்களும் மண்வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் சொன்னால் “ஐந்து விரல்களும் ஒன்று போலிருக்கிறதா? ஆண்ட வன் செயலுக்கு யார் என்ன செய்யக்கூடும்?” என்றால் இது போக்கிறித் தனமான சமாதானமா? இல்லையா வென்று யோசித்துப்பாருங்கள்.

சில சமயக்காரர்கள்-சீர்திருத்த வாதிகள் பிறவியில் ஜாதி உயர்வு தாழ்வு கூடாது என்கின்றார்கள். காரணம் என்னவென்றால் சமதர்மம் என்கின்றார்கள். இது சரிதான். ஆனால் பிறவியில் பணக்காரர்கள், ஜமீன் தாரர்கள் ராஜாக்கள், பிரபுக்கள், ஏழைகள், வெட்டியான்கள் என்னும் வகுப்பு களும் பணவிஷயமான-தொழில் விஷயமான வித்தியாசங்களும் இருப்பது சமதர்மமா என்று கேட்டால் அதை “ஆண்டவன் - செயல்” என்கின்றார்கள். இது நியாயமா அல்லது அயோக்கியத்தனமா வென்று யோசித்துப்பாருங்கள். போலி சமதர்மத்தையும், ஆண்டவனையும், ஐந்துவிரல்களையும் போக்கிறி கள் தங்கள் சுயநலத்துக்கு தகுந்தபடி உபயோகித்துக்கொண்டு மூடர்களை நம்பச் செய்து, மோசம் செய்து வருகின்றார்கள். ஆதலால் சமதர்மத்தில் உண்மையான திருஷ்டியுள்ளவர்கள் இந்த ஆண்டவனை - சமதர்மத்துக்கு விறோதமான ஆண்டவனை போக்கிறிகளும், சோம்பேரிகளும் தங்கள் சுயநலத்துக்கு உபயோகித்துக்கொண்டு தொழில் செய்யும் பாட்டாளி களையும், ஏழைமக்களையும் ஏமாற்ற உபயோகிக்கும் ஆண்டவனை அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் சமதர்மத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டும் வேலையாகும்.

ஏனெனில் ஆண்டவன் என்கின்ற ஒரு சாக்கு சொல்ல இடமில்லை யானால் உலகிலுள்ள அயோக்கியத்தனங்களுக்கும், கொடுமைகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், எந்த மனிதனாலும் எப்படிப்பட்ட சமாதானமும் சொல்ல முடியவே முடியாது. அப்படி வேறு எந்தசமாதானமும் சொல்லப்பட்ட போதிலும் அந்த சமாதானங்கள் அரை நிமிஷநேரம் கூட நிலைக்காது. ஆண்டவன், கடவுள், பகவான் என்கின்றதான வார்த்தைகள் அர்த்தமற்றதும் வெகுகாலமாகச் சொல்லிச்சொல்லி மக்களைப் பயப்படுத்தி அவர்களது ரத்தத்தில் ஊரச்செய்து விட்டதினாலும், அந்த ஒரு வார்த்தைக்குத் தான் உழைப்பாளிகளான மூட ஜனங்கள் பயப்படுகின்றார்கள்.

உண்மையான சமதர்மத்தைவிரும்புகின்ற மக்கள் எவ்வளவுதான் ஆஸ்திகர்களா யிருந்தாலும் கொஞ்ச காலத்திற்காவது அவர்களது கடவுளை பகிஷ்காரம் செய்து வைத்துத்தான் ஆக வேண்டும். அல்லது ஐந்து நாள் பத்து நாள் வாய்தாக் கண்டு கடவுளுக்கு ஒரு நோட்டீஸாவது கொடுத்தாக வேண்டும். அதாவது,

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடுபடும் மக்களாகிய நாங்கள் அதுவும் ஜனங்களிடம் பக்தி கொண்டு, உனது படைப்பு களான உலக மக்களுக்கு விவசாயம் செய்து தானியங்களை உண்டாக்கியும் தொழில்கள் செய்து சாமான்களை உண்டாக்கியும், வேலைகள் செய்து அவை களை நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தும் கொடுத்த மக்களாகிய நாங்கள் இன்று மாத்திரமல்லாமல், வெகு காலமாய் வீடு இல்லாமல், போதிய துணிக ளில்லாமல் ஆகாரமில்லாமல் அவஸ்தைப்பட்டு பட்டினி கிடக்கின்றோம். மேற்கண்ட பாடுகள் படாத சோம்பேறிகள் ராஜாவாகவும், ஜமீன்தாரனாகவும், முதலாளியாகவும், குருவாகவும், மதப்பிரசாரகனாகவும், பெரிய பெரிய அதிகாரியாகவும் இருந்து கொண்டு அளவுக்கு மேல் அனுபவித்துக்கொண்டு மனம் பதரும்படி செல்வங்களை வீணாக்கிக்கொண்டு வாழ்கின்றார்கள். இவைகளையெல்லாம் ஒரு வாரத்தில் சரிசெய்து எல்லோருக்கும் செல்வத் தையும், வேலையையும் சரி சமமாக்கி சமதர்மத்தை ஏற்பாடு செய்கின்றாயா? இல்லையா? ”

என்று ஒரு நோட்டீஸ் கொடுத்து விட வேண்டும். ஒரு சமயம் ஆஸ்திகர்களான கடவுள் பிரசாரகர்கள் இதற்கு-இவ்வளவு பெரிய காரியத் திற்கு ஒரு வாரம் போறுமா வென்று கேழ்ப்பார்கள். கடவுள் சர்வசக்தியும் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடிய வல்லமையும் உடையவர் என்று சொல்லப்படுவதால் ஒரு வார நோட்டீஸே அதிக காலம் என்று சொல்லலாம். ஆகையால் அந்த வாய்தாவில் சமதர்மம் ஏற்படாவிட்டால் அதை ஒழித்து அந்த உணர்ச்சியையே அப்படி ஒரு விஷயமோ, வஸ்துவோ, பொருளோ ஒன்று இருந்ததாகவே ஞாபகத்திற்கு வரமுடியாமல் செய்து சமதர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டும்.

அப்படிக்கில்லாமல் செக்கு மாடு சுற்றுவது போலும், அறைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைப்பது போலும், ஆண்டவன் செயல், ஆண்டவன் செயல் என்று சொல்லிக்கொண்டும் ஆண்டவனை தினம் 5-தடவை 10-தடவை பிரார்த்தித்துக்கொண்டும், பூஜை, உற்சவம், பிரார்த்தனை செய்யச்செய்து கொண்டுமிருப்பதில் பயனென்னவென்பதை யோசித்துப் பாருங்கள்.

சமதர்மம் என்று நாம் சொல்வது எல்லா மக்களுடைய, எல்லா மத மக்களுடைய, எல்லா உலக மக்களுடைய சமத்துவத்தைப் பொருத்ததே யொழிய யாரோ, ஒரு சில சமூகத்திற்கோ, வகுப்புக்கோ, மதத்திற்கோ, தேசத் திற்கோ என்பதாக அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு சமதர்மம் என்பது ஒப்பற்ற சாந்தியையும், மனத் திருப்தியையும், நிம்மதியையும் அளிப்பதாகும். இன்று மனித சமூகமென் பதில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் அவன் எந்த நிலையில் இருப்பவனா னாலும், எந்தப் பதவியிலிருப்பவனானாலும் சாந்தியோ, மனதிருப்தியோ, நிம்மதியோ, உண்மையான சந்தோஷமோ, பரஸ்பர அன்போ, பொறாமை யற்ற தன்மையோ இருக்கின்றதா வென்பதை யோசித்துப் பாருங்கள்.

----------------------------- 20.03.1933 இல் சிவகங்கை அரண்மனை வாசல் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை."குடி அரசு" - சொற்பொழிவு - 02.04.1933

22 comments:

தமிழ் ஓவியா said...


அடேடே, கிடுகிடு அரசியல் பிரளயம் இதோ!

- ஊசி மிளகாய்


இந்திய அரசியலில் மிகப் பெரியதொரு அரசியல் பூகம்பம் விரைவில் ஏற்படவிருக்கிறது!
நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது;

ஜக்கம்மா குறி சொல்லுதாயே

ஆமாம். சு.சாமி,யே - அவருடைய மிகப் பெரிய பல கோடி மக்களையும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து, விரிந்து பல லட்சக் கணக்கான கிளைகள், இலைகள், தழைகள் எல்லாம் உடைய - மாபெரும் தனி (ஆளான) தன்மையுடைய வம்படி வழக்குப் புகழ் வாய் வீச்சு வல்ல சாமியான சு.சாமியே அவருடைய ரத, கஜ, துரக, பதாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு வந்து விட்டார்! பராக்! பராக்!!

இனி என்ன கவலை?

ஏற்கெனவே மோடியைப் பிரதமராக்கும் அறிவிப்பையே ஆர்.எஸ்.எஸ். தள்ளி தள்ளி மற்ற நான்கு, மாநிலத் தேர்தல்கள் நவம்பரில் முடிந்த பிறகே, வாக்காளர் தலையில் மிளகாய் அரைக்க முற்படுவதுபோல - அறிவிக்கவிருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்!
இந்த நிலையில் அந்தக் கட்சி மேலும் பலங் கொண்டு வெற்றி மேல் வெற்றி குவிக்க சு.சாமியும் சோ சாமிகளும், குருமூர்த்தி ஜீகளும் சேர்ந்து எப்படியும் மோடிஜியை பிரதமராக்கியே தீருவது என்று வீரசவர்க்கார், நாதுராம் விநாயக் கோட்சே அஸ்தி முன்னால் பஸ்கி போட்டு ச...ப...தம் எடுத்துள்ளார்கள் எனத் தெரிய வருகிறது!
இந்த லட்சணத்தில் மோடி தலைமையில் அடுத்துவரும் ஆட்சி பி.ஜே.பி. கூட்டணியோ, குழம்பணியோ கொண்ட ஆட்சி எப்படி ஊழலை அறவே ஒழிக்கும் ஆட்சியாக அமைக்கப்பட வேண் டும் என்பதை முன்னிலைப்படுத்த பெங்களூரு எடியூரப்பா என்ற பரிசுத்த பரமாத்மாவை பாவ மன்னிப்புக் கொடுத்து தீட்சை தந்து மீண்டும் பா.ஜ.க.வில் சேர்த்து விடப் போகிறார்களாம்!

பலே பலே!

இதற்கு, முன்பே சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வாக்கு பா.ஜ.க.வுக்கு குறைந்து கொண்டே வருவதாக பல நாளேடுகள் எழுதுகின்றன.

எடுத்துக்காட்டாக
மக்களவை தேர்தலில் (பா.ஜ.க. வாக்குகள் தமிழ்நாட்டில்)

1998 6.9%

2004 5.07%

2009 2.33%

2014 ???

- டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற நாளேடு இப்படி சொல்லுகிறது.

பா.ஜ.க. எத்தனை அழைப்பு விடுத் தாலும் அதனுடன் கூட்டுச் சேர எந்த தமிழ் நாட்டுக் கட்சியும் தயாராக இல்லை!

ஏதோ சில லட்டர்பேடு கட்சிகள் வடக்கே யிருந்து வரும் லாபமான வரவுக்காக கூட்டு சேருகிறோம் என்று கூறி சேரக் கூடும்!

போதாக் குறைக்கு அரசியல் புரோக்கர்களும் இப்படிச் சேருவதன்மூலம், முயற்கொம்பு வாங்க மூணே முக்கால் பணம் முன் பணமாகக் கேட்ட பழைய பழமொழியை ஞாபகப்படுத்தும் நிலைதான் இன்று!

புருடா சாமிகள் வரவு சில செய்தி தேடி பசியோடிருந்த பசியேப்ப ஏடுகளுக்கு மிரட்டுக் கடை அல்வா போல் இனிப்பாக இருக்கும் என்பது உறுதி! உறுதி!!
உன் நண்பன் யார் என்று சொல்! பிறகு
உன்னை யார் என்று சொல்கிறேன்
என்பது ஆங்கிலப் பழமொழி.
பா.ஜ.க.வை ஒரு வழியாக
வழி பண்ணிட்டார்கள்! பலே, பலே!

தமிழ் ஓவியா said...


தேன்மொழி


வேலூர் மண்டல திரா விடர் கழகக் கூட்டத்தில் (11.8.2013) கழகத் தலைவர் கூறிய கருத்துக்களை கழ கத் தோழர்களே கவனித் தீர்களா?

ஒவ்வொரு சொல்லும் முத்து தான் - நாம் கடைப் பிடிக்க வேண்டிய கருத்துக் கள்தான் - கொடுக்கப்பட்ட வரைபடம்தான் - நம் நாள் குறிப்பின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட வேண் டியவைதான்.

காலத்திற்கேற்ப கழகச் செயல்பாட்டின் முறைகளில் மாற்றங்கள் தேவைதான் - வேகக் கூடுதலும் அவசியம் தான். கழகத்திற்கு மகளிர் பேச்சாளர் கூடுதலாகத் தேவைப்படும் (கழகப் பிரச் சார வழக்குரைஞர் அருள் மொழியின் கவனத்திற்கு இது) நேரம் இது.
சொன்னதோடு மட்டு மல்லாமல் உடனடியாக அறிவிப்பும்கூட; ஏலகிரியில் மகளிருக்கென்று மட்டும் இரு நாள் பயிற்சிப் பட்டறை.

தமிழ்நாடெங்கும் உள்ள கழகத் தோழர்கள் அடை யாளம் கண்டு பேச்சில் ஆர்வமுடைய மகளிரை, மாணவிகளை அனுப்பி வைப்பது அவசியம்.

ஏன் ஏலகிரியை நமது தலைவர் தேர்வு செய்தார்? கழக மகளிர் அணியினரும், பாசறையினரும் கணிச மான அளவுக்கு நிறைந் திருக்கும் பாசறைப் பகுதி இது! வேலூர் புரட்சிப் பெண்கள் மாநாட்டில் அடையாளம் காணப்பட்டது - அதனுடைய தொடர்ச்சி யாக இதனைக் கருதலாம்.

குடியாத்தம் சகோதரி தேன்மொழியார் வேலூர் கலந்துரையாடல் கூட்டத் தில் பேசினார்.
பெரியார் பிறந்த நாள் விழாவை வீட்டுக்கு வீடு கொண்டாடுவோம் - இதில் மகளிரின் பங்கு மகத்தான தாக இருக்க வேண்டும்; ஒவ்வொருவர் வீட்டு முகப் பிலும் ஊரின் முக்கிய பகுதிகளிலும் அறிவுலக ஆசானின் உருவப் படத்தை மின் விளக்குகளால் அலங் கரித்து வைப்போம்!

கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைப் போம் - அவரவர்களின் கருத்துக்களைக் கேட்போம்; ஒலி பெருக்கி வைத்து அய்யாவின் உரைகளை ஒலி பரப்புவோம், கழகப் பாடல் களை ஒலி பரப்புவோம்.

நம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று இனிப்புகளை வழங்குவோம்! பேச்சுப் போட்டிகளை நடத்துவோம்! பெரியார் வினா விடைப் போட்டிகளை நடத்த ஆவன செய்வோம்.

இது பெரியார் நாடு என் பதை உறுதிபடுத்துவோம்.

தமிழனுக்கென்று ஒரு விழா - தேசிய விழா - அது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பதை நிலை நிறுத்துவோம்! இந்தக் கால கட்டம்தான் இதற்குப் பொருத்தமானது!
காலம் கெட்டுப் போய் விட்டது; இளைஞர்கள் திசை மாறிச் செல்லு கிறார்களே என்று ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. தந்தை பெரியார் சிந்தனை களை மூளைகளில் ஊடுரு வச் செய்வோம்! நோய்கள் ஓடும் நொடிப் பொழுதில்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விடுதலை! விடுதலை!! விடுதலை!!!


விடுதலை நமது போர்வாள்! என்றார் தந்தை பெரியார்! 78 ஆண்டுகளைக் கடந்து ஆனை நடைபோட்டுச் செல்லுகிறது.

இந்த வீரன் சந்தித்த களங்கள் எத்தனை எத்தனையோ! குவித்த சாதனை முத்துக்கள் கணக்கில் அடங்கா.

இவன் ஏறிய உயரத்தை அளக்க எவரால்தான் முடியும்?

பஞ்சமனையும். சூத்திரனையும் அவர்களுக்குக் கீழே இடித்துத் தள்ளப்பட்ட மகளிரையும். தன் தோளை ஏணியாக்கி உயர்த்திப் பிடித்தவன் இந்தப் பெருமை மிக்க விடுதலை வீரன்.

சமூகக் களமா?

பொருளாதாரக் களமா?

அரசியல் தளமா?

சமத்துவத் திசையா?

அப்பப்பா! இந்த மாவீரனின் வாள் வீச்சுமுன் ஆதிக்கக் கோட்டைகள் சரிந்தன! ஆன்மீகப் போர்வையில் ஆட்டம் போட்ட ஆரியத்தின் ஆணி வேர்கள் அறுந்து வீழ்ந்தன.

சுருக்கமாகச் சொன்னால் பிற்போக்கு சாம்ராஜ்ஜியக் கோட்டைகள் இந்தச் சூரிய நெருப்பால் சாம்பல் மேடாகின!

சமூகநீதித் திசையில் இவன் படைத்த சரித்திரத்தை சரித்திரம், தன் பேழையில் பத்திரமாக வைத்துக் கொள்ளும்.

எவ்வளவோ எழுதலாம்! என்றாலும் நம் தமிழர்கள் இதன் அருமையை முற்றிலும் உணர்ந்தனர் என்று மார்தட்டிக் கொள்ள முடியவில்லை.

தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

இந்த அளவுகோலில் இன்னும் தமிழன் இல்லங்களாக இல்லாதது கோடானுகோடியே! நன்றியை எதிர் பார்க்காது, நாட்டுக்கும், இனத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமையில் சோர்ந்ததில்லை.

எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இந்த ஏட்டின் ஆசிரியர்கள்! டி.ஏ.வி.நாதன், பண்டித முத்துசாமிப்பிள்ளை, அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, சாமி சிதம்பரனார், அ. பொன்னம் பலனார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற பட்டியலை ஒரு தரம், ஆம் ஒரே ஒரு தரம் மீண்டும் கவனித்துப் பாருங்கள்.

இவர்களை மிஞ்சி யார் எழுத்தாளர்கள்? யார் கருத்தாளர்கள்? அறிவுலகச் சூரியன் அய்யாவின் சிந்தனைத் தோட்டத்தில் பூத்த குறிஞ்சி மலர்கள் அல்லவா இவர்கள்!

ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உலகில் ஒரு நாத்திக ஏடு - இத்தனை ஆண்டுகள் ஏறு நடை போட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டா? அத்தகைய புரட்சி ஏட்டில் அரை நூற்றாண்டு காலம் ஒருவர் தொடர்ந்து ஆசிரிய ராக இருந்தார் என்பதற்குத்தான் ஆதாரம் உண்டா? இது ஒருகின்னஸ் சாதனையே!

ஆசிரியர் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அது விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிப்பது ஏன்?

ஆம், ஆசானாக - ஆசிரியனாக இருந்து இந்த ஒரு ஏடு தானே தமிழர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. அறியாமை இருளை விரட்டியடிக்கும் ஆதவனாக சுடர் விடுகிறது! அதனால்தான் ஆசிரியர் என்றால் விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிக்கிறது.

வேறு எந்த ஒரு கட்சியும், இயக்கமும் சாதிக்க முடியாத இவற்றை நாம் சாதித்துள்ளோம்.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நமது ஆசிரியர் சொன்னது வெற்றுச் சொற்கள் அல்ல என்பதை - விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் சாதனை பொறித்த அவர் விஷயத்திலேயே அதனை நிரூபித்துக் காட்டினோம்.

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்தோமே. ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் - நம்மை அறியாமலேயே நம் தோள்கள் நிமிர்கின்றன - மார்பு புடைக்கிறது - கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்புகிறது.

அதனைத் தொடர வேண்டாமா? அந்தச் சந்தாக்களின் எண்ணிக்கையில் ஒரு தொய்வு ஏற்படலாமா?

நம் எதிரிகள் ஏதோ புதுவாழ்வு வந்ததுபோல ஆட்டம் போடும் ஒரு கால கட்டத்தில் விடுதலை வீரனின் அம்பறாத் தூணியில் கணைகள் பூட்டப்பட வேண்டாமா?

பெருமைகள் தேவைதான் - அது வீண் பெருமையாக ஆகிவிடக் கூடாதல்லவா! செயலில் பூத்து நறுமணம் கமழும் போதுதானே அந்தப் பெருமைக்குப் பீடு மிகு பொருள் கிடைக்கும்.

இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!

1927ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குடிஅரசு பிரதியின் எண்ணிக்கை 5,000த்தை யாவது தாண்டிவிட வேண்டாமா! அப்படியானால் ஒவ்வொருவரும் மும்மூன்று புது சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுங்கள். அப்படிக்கில்லாமல், குடிஅரசே! குணக் குன்றே! அஞ்சாவீரமே!

உண்மை அவதாரமே!

சுயமரியாதைச் சூரியனே!

...என்று கவி பாடுவதில் ஒரு பலனுமில்லை.

காரியத்தில் காட்டுங்கள்

(குடிஅரசு 26.12.1926)

அன்று பெரியார் சொன்னதை இன்று சொன்னதாகவும் எடுத்துக் கொள்வோம்.

நாம் வாய்வீச்சு வீரர்களா? காரியத்தில் சாதித்துக் காட்டும் தீரர்களா?

எங்கே பார்ப்போம்!



13.8.2013
சென்னை

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,திராவிடர் கழகம்

குறிப்பு: சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஜவகர் அவர்கள் தன் மூலம் முன்பு சேர்த்துக் கொடுத்த 30 சந்தாக்களையும் மீண்டும் புதுப்பித்துக் கொடுத்து வழி காட்டுகிறார். கடந்த முறை சேர்க்கப்பட்ட சந்தாதாரர்களின் முகவரிப் பட்டியல் மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்பு கொள்வீர்! தொடர் சந்தாதாரர்களாக ஆக்குவீர்! ஆக்குவீர்!!

தமிழ் ஓவியா said...

மதுரை மீனாட்சிமீது நம்பிக்கை இல்லை!

மதுரை மீனாட்சியம்மனை இந்து அறநிலையத்துறை அவமானப்படுத்துவது போல, வேறு யாராலுமே, அவமானப்படுத்திட முடியாது.

பக்தர்களின் உடைமைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள, ரூ.85 லட்சத்தில் நவீன ஸ்கேனர்கள் பொருத் தப்படும். 24 மணி நேரமும் 150 காவலர் நிறுத்தப் பட்டுள்ளனர். நாள்தோறும் மூன்று முறை வெடிகுண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு மேற்கு தெற்கு மற்றும் வடக்கு கோபுரவாசல் களில் மெடல் டிடக்டர் வைத்து சோதனை செய்து பக்தர் களைக் கோயிலுக்குள் அனுப்புகின்றனர். மீனாட்சியாவது வெங்காயமாவது அது வெறும் பொம்மை என்று சொல் லாமல் சொல்லி விட்டதே - இந்து அறநிலையத்துறை - ஆகா! மீனாட்சியம்மன் மகிமையே மகிமை.

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் என்பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். கல்கி இதழ் (18.8.2013 பக்கம் 3) ஒரு பக்கம் அளவுக்கு சிலாகித் துள்ளது படத்துடன்.
சரி, இருக்கட்டும். சந்தடி சாக்கில் கந்தப் பொடி.. குசும்பு என்ன தெரியுமா? நிதித்துறையில் ராமராஜ்ஜியம் ஆரம்பமாகப் போகிறதாம்.. புரிகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் பெயர் ரகுராம் - அதனால்தான் இந்தக் கு(சு)றும்பு! சம்பூகன் தலைகள் வெட்டப்படுமா/ தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

நியாயமான கேள்வி...

2002இல் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இனக் கலவரம் மூட்டப்பட்டது. வெளியார் யாரையும் குஜராத்துக்குள் அனுமதிக்கவில்லை குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அப்படியானால் குஜராத் மாநிலமே நரேந்திரமோடிக்குச் சொந்தமானதா?
- மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே! ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு - முடிவு


ராச்செஸ்டர், ஆக.13- நாத்திகர்களைவிட மத வாதிகளின் அறிவு குறை வானதே என்று ராச் செஸ்டர் (அமெரிக்கா) பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.
பல பத்தாண்டு களாகத் தொடர்ந்த அறிவியலின் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்பாக, மத நம்பிக்கையுடைய மக்கள், மதநம்பிக்கை இல்லாதவர்களைவிடக் குறைந்த அறிவாற்றல் உடையவர்கள் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

மிரான் ஜீக்கர்மேன் என்ற, ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியரின் தலை மையின்கீழ் நடத்தப் பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட் டுள்ள வேறுபாடு களைப் பற்றிய 63 ஆய்வு களில் 53, ஆய்வுகள் மத நம்பிக்கையுடையவர்கள் குறைந்த அளவு அறி வாற்றல் உடையவர்கள் எனக் கருத்து தெரிவித் துள்ளது. வயது அதிக மானதன் காரணமாக, அதிக மூளை ஆற்றல் கொண்டவர்கள், நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள். ஏன் என்பதற்கான காரணங் கள், நாம் முன்பு நினைத் திருந்ததைவிட எளிதாக இருந்தது.

உதாரணமாக, அதிக அறிவாற்றல் உள்ளவர் கள், திருமணம் செய்து கொள்பவர்களாகவும், வாழ்வில் வெற்றி அடைந்தவர்களாகவும், இருப்பதால், அவர் களுக்கு மதம் மிகக் குறைந்த அளவில் தான் தேவைப்படுகிறது.
இதுபற்றிய ஆய்வுகள் ஜீக்கர் மேனின் ஆய்வுக் கட்டுரையையும் சேர்ந்து 135 அய்.க்யூ புள்ளிகளுக்கு மேல் உள்ள 1500 அறி வாளிக் குழந்தைகளுடன் 1921இல் ஆரம்பிக்கப் பட்டு இன்றளவும் தொடர்ந்து வரும் ஆய் வுகளைச் சார்ந்ததாகும்.
மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, கடவுள் நம்பிக்கை அதி கரிக்கும் என்ற பொதுக் கருத்துக்கு மாறாக லூயி டெமானின் ஆராய்ச்சி முடிவுகள் 75-லிருந்து 91 வயது வரை மத நம்பிக் கைகள் குறைந்து வரு வதைத் தெரிவிக்கின்றன. மதம் தொடர்பான ஈடு பாடுகள் வயது ஆக ஆகக் குறைந்து வருகின் றன என்பதை நிரூபிக்க வேறு ஆய்வுகள் தேவைப் படும்.

1958-லேயே மைக் கேல் ஆக்கியேல், மத நம்பிக்கையுடைய குழந் தைகள் முற்காலத்தில் மதம் தொடர்பான வற்றை எளிதில் கிர கித்து விடுகின்றன. ஆனா லும், அவர்கள்தான் அது தொடர்பான அய் யங்கள் எழுப்புபவர் களாகவும், புத்திசாலி மாணவர்கள் பழங்கால நம்பிக்கைகளை ஏற்க இயலாதவர்களாகவும், மத நம்பிக்கை தொடர் பானவற்றை ஏற்றுக் கொள்ள இயலாதவர் களாகவும் உள்ளனர்.

ஜீக்கர் மேனின் 1916ஆம் ஆண்டு ஆய் வில் பொதுப் படை யாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 58 விழுக்காடு அமெரிக்க அறிவியலா ளர்கள் கடவுள் இருப்பை அய்யப்படுகிறவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றார்கள் இந்த அளவு எழுபது விழுக் காடாக ஆக, மிக வல்லுநர்களாக உள்ள அறிவியலாளர்களிடம் உயர்ந்து உள்ளது. ஆளு மையும் சமூக மனவியல் பற்றியுமான மறு கண் ணோட்டம் என்ற கல்வி ஏட்டில் இந்தக் கட்டுரை வெளியா யிற்று. அதிகம் அறிந் திருந்த அறிவாளி களுக்கு, மதநம்பிக்கை கள் அறிவுக்கேற்றதாக இல்லாததாலும், அறி வியலில் பொருந்தாததாக வும், ஆய்வுக்கு உட் படுத்த முடியாதனவாக வும் இருந்த காரணத் தால் சுவையற்றுப் போயிருந்தது.
அறிவாளிகள் இயற் கையாகவே பள்ளிகளில் அதிக நேரத்தைச் செல வழிக்கக் கூடியவர் களாக இருக்கிறார்கள்.

அவை ஒருவித தன்னடக் கத்திற்கும், நீண்ட கால லாபத்திற்கும் பயன ளிப்பன. ஆய்வாளர்கள் அதிக அறிவு படைத்த வர்கள் உயர்ந்த உத்தி யோகங்களையும், அதனால் அதிக வரு வாய், சுயமரியாதையை யும், கொண்டிருப்ப தனால் நம்பிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இளவயதிலேயே அறி வில் சிறந்து விளங்குப வர், முதியவனாகும் போது, அதிகப் பலன் பெறுகின்றனர். மதத்தின் செயல் பாடுகள்பற்றிய மேலும் ஆய்வுகள் தேவை என்று வல்லுநர்கள் கருது கின்றனர். ஆய்வாளர் கள், மதம் அளிக்கின்ற செயல்பாடுகளை ஏற்பவர்கள் நம்பிக்கை உடையவர்களாகவும் அவை குறைந்தவர்கள், உதவியற்றோர் ஏழைகள் ஆகியோர், கடவுள் நம்பிக்கைகளைக் கைக் கொள்கிறார்கள் என் றும், ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி...



மதங்களுக்கு உயிர் நாடியா யிருப்பது பிரச்சாரமும், பணமுமே யல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சாரத்திற்கான துருப்புச் சீட்டா?


பாரதீய ஜனதாவுக்கு ஏதாவது பிரச்சினை என்னும் தீனி அவசியமாகிறது. அதுவும் அவர்களின் அடிப்படைவாதமான சிறுபான்மையினர் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஒன்று கிடைத்து விட்டால் அல்வா சாப்பிட்ட மாதிரிதான்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினரால் 5 இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன், இந்தியப் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர்கள் கூட பாகிஸ்தானோடு இந்தியா பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது இந்தியாவின் சுயமரியாதைக்குக் கேடானது என்றெல்லாம் நீட்டி முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானோடு எப்பொழுதுமே பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று சொல்கிறார்களா? அல்லது இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது காலக்கெடு நிர்ணயித்துள்ளார்களா? எவ்வளவுக் காலத்துக்குப் பிறகு பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தினால் இந்தியாவின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று கருதலாம் என்பதுபற்றி திட்டவட்டமாக பிஜேபி தரப்பில் சொல்லப்படவில்லை.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கையை யாரும் நியாயப்படுத்த முடியாது.

ஆனால் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு மிடையே உள்ள பிரச்சினையைப் பேச்சு வார்த்தை யால்தான் தீர்க்கப்பட முடியும் என்பது, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முறையாகும்.

பாகிஸ்தான் என்பது முஸ்லிம் நாடு என்பதை மனதிற் கொண்டு, அதற்கு எதிர்ப்பான ஒன்றைப் பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் பிஜேபியின் யுக்தியாகும்.

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதுண்டு. இந்திய தரப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீரவிவாதி களால் காந்தகாருக்குக் கடத்தப்பட்டது. தீவிர வாதிகளால் வைக்கப்பட்ட நிபந்தனையை ஏற்று, இந்தியச் சிறையில் இருந்த பயங்கரவாதிகளை விடுதலை செய்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கே உடன் சென்று அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்து விட்டு வந்தார்.

இவற்றோடு இணைத்துப் பார்க்கும் போது, இப்பொழுது எல்லையில் நடைபெற்ற நிகழ்வு பெரியது என்று கூறிவிட முடியாது. பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற மிக மோசமான அதிர்ச்சியளிக்கக்கூடிய தாக்குதலுக்குப் பிறகு வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லையா?

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்த்து சீனா வரைபடம் (ஆஹஞ) வெளியிட்டுள்ளது. விசாக்களை வழங்கிக் கொண்டு இருக்கிறது. எவ்வளவுத் தலைபோகும் பிரச்சினை என்றாலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டே தீர்வு காணப்பட வேண்டிய கால கட்டம் இது.
யுத்தத்தின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று ஆரம்பித்தால், இன்றைய அணுயுகத்தில் வெற்றி என்று சொல்லுவதற்குக்கூட ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கப் போவதில்லை. இதையெல்லாம் புறந்தள்ளி சிறுபிள்ளைத்தனமாக பிஜேபியின் மூத்த தலைவர்களே பேசுவது அந்தக் கட்சியின் பொறுப்பற்ற தன்மையையும், எதனையும் அரசியலாக்கி இலாபம் என்ற குளிர்காய வேண்டும் என்கிற அவர்களின் குறுகிய சுயநல நோக்கத்தை யும்தான் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனப்பான்மையில், அடுத்த ஆட்சி என்கிற போதை ஏறி பிஜேபி யூகங்களை வகுப்பதில் வெகு மக்கள் ஏமாந்து விடக் கூடாது! கூடாது!!

தமிழ் ஓவியா said...


ஜாதிகள் ஒழிய வேண்டும்! சமத்துவம் மலரவேண்டும்!


ஆசிரியருக்குக் கடிதம்

ஜாதிகள் ஒழிய வேண்டும்! சமத்துவம் மலரவேண்டும்!

தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
15.6.2013-இல் நிறைவேற்றிய திண்டுக்கல் தீர்மானம் மிகவும் அற்புதமான தீர்மானம். விஞ்ஞானமும் நாகரிகமும் வளர வளர அதற் கேற்ற மாற்றங்களைக் கொண்டு வரவேண் டியது நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் இந்தியன் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று கூடும்போது தமிழன், தனித்தனியாக பிரிந்து செல்லும் போது தமிழன் இல்லை. எல்லாம் இந்த பாழாய்ப் போன ஜாதி வந்து இன்னமும் இந்த நாட்டைக் கேடுகெட்ட நிலைக்குக் கொண்டு செல்லு கிறது. ஜாதி வன்மம் சில அரசியல்வாதி களாலும் தூண்டப்பட்டு கோரத் தாண்ட வமாடுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் திண்டுக்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்னுடைய நீண்டகால அவாவும் இது தான். பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க் கையின் போது, இடஒதுக்கீடு காரணத்திற்காக மட்டுமே ஜாதிப்பெயர்களுக்குப் பதிலாக குறியீடுகளை SC, ST.SC(A). MBC, OBC, OBC(M) போன்று குறிப்பிட வேண்டும் - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தை களுக்கு ஜாதியற்ற பிரிவினர் I.C. (Quota) என்பதை சிறிய அளவில் தொடங்கி படிப் படியாக உயர்த்தலாம். ஒரே ஜாதியில் திருமணம் புரிந்தோர், மனமாற்றமடையும் போது, அவர்களது குழந்தைகள் ஜாதி யற்றோர் என்று பதிவு செய்யலாம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது. காலப்போக்கில் ஜாதியற்றோர், ஜாதியற்ற பிரிவினர்I.(Inter Caste Quota)சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே போகலாம். முன் னேறிய வகுப்பினர் ஜாதியற்றோர் பட்டி யலில் விரும்பினால் சேரலாம். முன்னேறிய வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு கூடவே கூடாது. 69 சதவீதம் + 31 (ஜாதியற்றோர் + ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்) சதவீதம் என்று அரசு அறிவிக்கலாம். இந்த 31 சதவீதம் காலப்போக்கில் அதிகரித்து 100 சதவீதத்தை எட்டினால, நாட்டில் ஜாதி ஒழிந்து விட்ட தாகக் கருதலாம். இந்த இடஒதுக்கீடு எல்லாத் துறைகளிலும் - நீதித்துறை, அறநிலையத்துறை உட்பட பின்பற்ற வேண்டும்.

நாட்டிற்கு நல்வழிக்காட்டும் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு, நிறைவேற்றப்பட்டிருக்கும் திண்டுக்கல், தீர்மானம். பாராட்டுக்குரியது. வரவேற்கத் தக்கது. நன்றி! வணக்கம்.

வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!

-கா.நா.பாலு (தலைவர், இடைப்பாடி)

தமிழ் ஓவியா said...


தினமணியின் பத்திரிகா தர்மம்

துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டம் நிறுத்தப்படலாம் என்பது தினமணியின் தலைப்பு (13.8.2013 பக்கம்-4) உள்ளே என்ன தெரியுமா? துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டத்தில் இப்போதுள்ள நிலையே நீடித்தால் அந்தத் திட்டத்தை நிறுத்தும் நிலைக்கு தேசிய நெடுஞ் சாலைகள் மேம்பாட்டு ஆணையம் தள்ளப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காணத் தவறக்கூடாது.

தலைப்பு என்ன சொல்லுகிறது? மத்திய அரசே முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறது.

உள்ளே செய்தி எப்படி இருக்கிறது... மத்திய அரசு அந்த நிலைக்கு தள்ளப்படுவதாக இருக்கிறது.

இரண்டும் ஒன்றுதானா? முடிவு எடுப்பதற்கும், தள்ளப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு - தினமணிக்குத் தெரியாதா? இந்த மேம்பாலம் உருவாவதற்கு தடையாக அதிமுக அரசு இருப்பதைத் திசை திருப்பும் வேலையைக் கவனிக்கவும்.

தமிழ் ஓவியா said...


மதுபானம் படைத்து நேர்த்திக்கடனாம்!


சின்னமனூர், ஆக.14- தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, உப தெய்வமான சோணை கருப்பசாமி கோயிலில் நடந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் நள்ளிரவில் கிடா வெட்டி, மதுபாட்டில்களை படைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினராம். குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின், 4 ஆவது சனி வாரம் முடிவடைந்துள்ள நிலையில், உப தெய்வமான சோணை கருப்பசாமிக்கு, சிறப்பு செய்யும் பொங்கல் விழா நேற்று (13.8.2013) முன்தினம் நள்ளிரவில் நடந்தது. சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சோணை கருப்பசாமியை தரிசித்து, தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்களாம். வேண்டுதல் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் நிறைவேறும் என்பது அய்தீகமாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆட்டு கிடாக்கள், கோழிகள், மதுபாட்டில்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்குவர். இதன்படி, 10 முதல் 15 கிடாக்கள், 500 கோழிகள், 5000 மதுபாட்டில்கள்வரை படைக்கப்படுகின்றனவாம். நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை அறுத்து, அதன் உறுப்புகளையும், நள்ளிரவில், ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களையும் கருப்பசாமி முன்படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாம். பின்னர், மதுபாட்டில்களை உடைத்து, குதிரை சிலையின்கீழ் உள்ள துவாரத்தில் ஊற்றினர். வெட்டப்பட்ட கிடா, கோழி களுடன், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் நடந்ததாம்.

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை



பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் பொறுப்பில்லையா?


2002 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பதைக் காரணம் காட்டி நரேந்திர மோடி அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறையால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு மதக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மோடி அரசில் நடத்தப்பட்ட மனித வேட்டைதான் முதல் இடத்தில் இருக்கும்.

மோடி குற்றமற்றவர் என்ற ஒரு பெருமழைப் பிரச்சாரத்தை பார்ப்பன மேல் ஜாதி ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. பண முதலைகளும் மோடியின் பக்கம் வலுவாக நின்று கொண்டுள்ளன.

2002 முதல் குஜராத்தில் நடைபெற்ற வன் முறைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்திலிருந்து வந்துகொண்டுள்ளன.
மோடி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென் கோட்நானி என்னும் பெண் அமைச்சர் (அவர் ஒரு டாக்டரும்கூட!) பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில் 95 முசுலிம்கள் (குழந்தைகள் 35 பேர்) கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளார். அவரோடு மேலும் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை!
இப்படி தண்டனைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு தகவல்:

குஜராத் மாநில கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) பாண்டே இப்பொழுது சிறையில் இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தப் பாண்டே குற்றவாளி என்கிற அடிப்படையில்தான் இந்தத் தண்டனை; அவரின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவி பட் ஆகியோர் மோடி கட்டளை யிட்டதை அம்பலப்படுத்தினரே!
நாளை நடக்கும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது; தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மோடி ஆணையிட்டார் என்று கூறி யுள்ளனரே!

முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டவர் அமைச்சர் ஹிரேன் பாண்டியா. விசாரணை ஆணையத்திடம் கூட்டத்தில் நடந்தவை களைக் கூறியவர் இவர்.

விளைவு என்ன? ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுவிட்டாரே! தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று அவரின் தந்தையார், நீதிபதி நானாவதி ஆணை யத்திடமும் கூறியுள்ளாரே!

குஜராத் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக் குகளின் எண்ணிக்கை 4252; 2000 வழக்குகளை மோடி அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. அந்த வழக்குகள் மீதும் மீண்டும் புலனாய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் குட்டு வைத்ததால், அந்த வழக்குகள் பெயர் அளவுக்கு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டன.
இவ்வளவும் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடியின் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்கு யார் பொறுப்பு? எனக்குச் சம்பந்தம் இல்லை என்று ஒரு முதலமைச்சர் கூறுவாரேயானால், அவரைவிடப் பொறுப்பற்றவர், கடமை என்ற சொல்லை அசிங்கப் படுத்துபவர் யாராகத்தான் இருக்க முடியும்?

அரியலூரில் ரயில் கவிழ்ந்ததால் மத்திய அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத் தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் பதவி விலக வில்லையா?
அந்தப் பண்பாடு பா.ஜ.க.வில் அறவேயில்லை என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.

இந்தத் தன்மையில் உள்ளவர்தான் இந்தியா வுக்குப் பிரதமராக வரக் கங்கணம் கட்டிக் கொண்டு குதிக்கிறார்.

வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம்! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


அறிவியல்


23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள்.

ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.

- குடிஅரசு, 30.1.1938

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் பிறப்புப்பற்றி மறைமலை அடிகள்

விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோவிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் - பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையை புணர வேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம்.

அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ?

அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்!

இக்கதை விலங்கின் புணர்ச்சியை கண்டு வரம்பு கடந்த காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது. பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

தமிழ் ஓவியா said...

சிந்தனைத்துளிகள்

நேற்று என்பது ஒரு ரத்து செய்யப்பட்ட செக்; நாளை என்பது ஒரு புரோ நோட்டு; இன்று என்பது ரொக்கப்பணம் அதை அறிவுடமையுடன் செலவு செய்யுங்கள்.

- ஆண்டர்சன்

பேசிவிட்ட வார்த்தை, தொடுத்து விட்ட அம்பு, கடந்து விட்டகாலம், இழந்து விட்ட வாய்ப்பு இவைகளை மீண்டும் பெற முடியாது.

- ஜான்சன்

பகலவன் படாத பனிக் கட்டி போன்றது புகழ் வாழ்வு

- ஷேக்ஸ்பியர்

தமிழ் ஓவியா said...


மோடி: கண்டனங்கள் வலுக்கின்றன!


புதுடில்லி, ஆக.16- பிரதமருக்கு சவால் விட்டுப்பேசிய நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவால் விடுத்து பேசினார். பிரச்சினைகள் குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? என்று அவர் கேட்டார்.

இதற்காக அவருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேட்டி அளித்த போது கூறிய தாவது:-

சாஸ், பாகு அண்ட் தாமத் டெலிவிஷன் தொடரைப் பற்றி மோடி பேசியுள்ளார். அப்படி என்றால், மோடிதான் வில்லனா? (கல்நாயக்). கல்நாயக் என்ற பெயரில் கூட ஒரு சினிமா வந்துள்ளது. கல்நாயக் தொடரும் ஒளிபரப்பாகிறது. அதைப் பற்றியும் அவரிடம் கேளுங்கள். அய்தராபாத்தில், யெஸ் வீ கேன் ஆம், நம்மால் முடியும் என்று, ஒபாமா பயன்படுத்திய வார்த்தைகளை மோடி பேசியுள்ளார்.

யாரோ எழுதிக்கொடுத்ததை அவர் பேசியுள்ளார். அவர் தனது பேச்சை பிரதமரின் பேச்சுடன் ஒப்பிட்டுள்ளார். அது, சிறிய மனிதரின் வாய்நீளத்தை காட்டுகிறது. அவர் தனது முதுகைத்தட்டி தானே பாராட்டிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுமையாக காத்திருந்து பார்க்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும்

இன்று சிறப்புமிக்க நாள். எனவே, மோடி இன்று மட்டுமாவது பொறுமை காக்க வேண்டும். ஆனால் இது அவருக்கு புரியாவிட்டால், அவருக்காக பரிதாபப் படுகிறேன். பிரதமர் என்பவர் இந்தியாவின் அடையாளம். மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை மோடி விமர்சித்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு விசா மறுக்கப்பட்ட அவர், இதுபற்றி பேசக்கூடாது. பாகிஸ்தான் விவகாரத்தை இந்தியா கையாள்வதையும் விமர்சித்துள்ளார். அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:- ஒபாமாவை விட நான் பெரியவன் என்று கூறினால், என்னை பைத்தியக் காரன் என்பார்கள். பிரதமருக்கு ஒரு மாநில முதல் அமைச்சர் எப்படி சவால் விட முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

கோட்டைக்குள்ளேயே எதிர் குரல்!

நரேந்திர மோடியைவிட பிகார் முதல்வர் நிதீஷ்குமார் சிறந்த பிரதமர் வேட்பாளர் என, அம் மாநில பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிறுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, பிகாரில் நிதீஷ்குமார் தலைமை யிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், மோடியைவிட பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறந்த பிரதமர் வேட்பாளராக திகழுவார் என, பிகார் பாஜக எம்எல்ஏ ராணா கங்கேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முகைதீன்நகரில் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் "ஹரித் சமாகம்' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் நிதீஷ் குமார், பாஜக எம்எல்ஏ ராணா கங்கேஷ்வர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில்,""பிகாரின் பெருமைக்குரியவர் நிதீஷ். நரேந்திர மோடியைவிட இவர் சிறந்த பிரதமர் வேட்பாளர்'' என்றார்.

ஏற்கெனவே, தர்மங்கா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அமர்நாத் காமி, நிதீஷ்குமாரைப் பாராட்டியதற்காக கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இந்நிலையில், மற்றொரு பாஜக எம்எல்ஏ இவ்வாறு கருத்து தெரிவித்தது, அக் கட்சியி னரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.

(குடிஅரசு, 7.11.1926

தமிழ் ஓவியா said...


மோடிப் பேச்சு ஆச்சரியப் படத்தக்கது தானா?


குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் பேச்சையும் கேட்டேன். பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் பேச்சுகளையும் கேட்டேன்.

இதுபோன்ற முக்கிய நாளில் நாட்டின் நலன், வளர்ச்சி, சக்தி குறித்துத்தான் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனங்களில் ஈடுபடுவதைத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்

அதுவும் அரசியலில் ஈடுபடுவோர் தன் மீது குற்றம் சாட்ட இடம் கொடுக்காதவாறு பொது வாழ்வில் நேர்மையாகவும், தனி வாழ்வில் தூய்மை யாகவும் இருக்க வேண்டும் - என்று பி.ஜே.பி. யின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுதந்திர தினத்தன்று குஜராத் முதல் அமைச்சரும், அடுத்துப் பிரதமர் நாற்காலியில் சட்டமாக உட்காரத் துடித்துக் கொண்டு இருப்பவருமான நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி சுதந்திர நாளில் அநாகரிகமான முறையில் அர்த்தமற்ற சவ(ட)ல் விட்டுப் பிரதமரைக் குறித்து மரியாதை குறைவாகப் பேசிய பேச்சின்மீது பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் வைத்துள்ள குற்றச்சாற்று இது.

சாலையோரங்களில் ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா? போட்டுப் பார்ப்போமா? என்று இரு சண்டியர்கள் பேசும் பேச்சை - முதல் அமைச்சர் வாயிலிருந்து கேட்க முடிகிறது - அதுவும் பிரதமர் நாற்காலியின் மீது உட்காரத் துடித்துக் கொண்டு இருப்பவர் ஒருவர் வாயிலிருந்து வருகிறது என்றால் என்ன பொருள்? வார்த்தைகள் ஒரே வாந்தியாக அல்லவா இருக்கின்றன.

சுதந்திர நாள் என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சியின்மீது குறை கூறக் கூடாது என்ற பொருளல்ல. அது ஆக்க ரீதியாக இருக்க வேண்டாமா? என்னுடன் நேருக்கு நேர் பிரதமர் விவாதிக்கத் தயாரா? என்று சவால் விடுவது சான்றாண்மைத் தன்மையின் கீழ் வருமா?

பிஜேபியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் அதிகாரப் பூர்வமற்ற நிலையில் அதுதான் நிலை என்பதை அரசியல் வட்டாரமும் ஊடகங்களும் அறிந்தே இருக்கின்றன.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடந்து வரும் போக்கும், வாயிலிருந்து வெளிவரும் சொற்களும் நாகரிகக் கோட்டுக்குள் இல்லை என்பதை பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியே ஒப்புக் கொள்வதாகக் கருதப்பட வேண்டும்.

குஜராத் கலவரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய முதல் அமைச்சர் நரேந்திரமோடி சிறுபான்மை மக்களை நாய்க் குட்டிக்கு ஒப்பிட்டுக் கருத்துக் கூறியது - கடும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது.

அடுத்து நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய் அப்படியானால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரானவர் அல்லவா என்ற எதிர் கேள்வி எழுந்தது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென் போன்றவர்கள் சாடும்படி இருந்தது. சிறுபான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்புக் குறித்து நம்பகத் தன்மையில் நரேந்திரமோடி இல்லை என்பது அரசியல் வண்ணக் கலவைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கருத்துத் தெரிவித்துள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.

ஒன்றை நினைவூட்டினால், மோடியின் தராதரத்திற்கு போதுமான சாட்சியாக அமைந்து விடும்.

மோடி ஆட்சியில் 2002 டிசம்பரில் தூண்டி விடப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான கலவரத்தின்போது சிறுபான்மை மக்களான முசுலிம்கள் அகதிகள் முகாம்களில் அடைபட்டுக் கிடந்தனர். பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் என்ன பேசினார் - நினைவிருக்கிறதா?

சிறுபான்மை மக்கள் - முகாம்களில் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின் றனர் என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரக் குணமும், வக்கிரப் புத்தியும் கொண்டவர் தான் மோடி என்பதை நினைவுப்படுத்திக் கொண்டால் சுதந்திர தின விழாவில் அவர் பேசிய பேச்சுப்பற்றி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

சுதந்திர நாள் அல்ல,துக்க நாள்!!!!

என்னைப் பொறுத்தவரையில் நான்இதை "சுதந்திரம் பெற்ற நாள்" என்றுசொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும்,நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்று தான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை.இந்தியாவுக்கு சுதந்திரம் என்றுஎன்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான். காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத்தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் .... இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத்தனமான காரியம்விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்?

தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம்-15.08.1972