Search This Blog

9.8.13

முஸ்லீம் வாலிபர்களுக்கு ....பெரியார்



சமீப காலமாக, அதாவது சுமார் ஒரு வருஷகாலமாக அநேக இஸ்லாம் வாலிபர்களுடனும், பல மௌல்விகளுடனும், இரண்டொரு மௌலானாக்களுடனும் நெருங்கிக் கலந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. அதிலிருந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் பலர் முழுவதையும், சிலர் ஒன்றிரண்டு தவிர மற்றதையும் ஒப்புக்கொள்ளு பவர்களாகவே அறியமுடிந்தது.

ஆனால் கடவுள் என்பதைப்பற்றி மாத்திரம் அவர்களில் அநேகர் தங்கள் அபிப்பிராயத்தை வெளியில் எடுத்துச் சொல்லவே பயப்படுவதையும் சிலர் அப்புறம்இப்புறம் திரும்பிப்பார்த்துப் பேசுவதையும், பார்க்கும்போது நமக்கு மிக்க பரிதாபமாகவே இருந்தது.

அதில் ஒருவர் நம்மிடம் பேசுகையில் “நீங்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசும், எழுதும் எழுத்துக்கள் எல்லாம் இந்துமதக் கடவுள்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றீர்களா? அல்லது மற்ற மதக்கடவுள்களையும் பற்றி பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு நாம் விடையளிக்கையில் “நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் தானே காரண பூதனாயிருக்கின்றதும், அதை வணங்கி னால் நமது தேவைகள் பூர்த்தியாகுமென்பதும், அதற்கு பணி விடை செய் தால் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது செய்த கருமத்திற்குத் தகுந்த பலனை நாம் செத்தபிறகு நமது ஜீவன் அல்லது ஆத்மா என்பவைகளுக்கு அளிக்கின்றாறது என்னப்படுவதுமான கடவுள் என்பது எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும், அந்த அர்த்தம் கொண்ட கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றோம்” என்று சொன்னோம்.

“இந்தப்படி சொல்வதற்குக் காரணம் என்ன?” என்று அவர் கேட்டார்.

நாம் அதற்கு விடையளிக்கையில், “இந்த மாதிரியான ஒரு கடவுள் தன்மையை மக்களுக்குள் புகுத்துவதால் மனித வர்க்கம் தன் முயர்ச்சியற்று, முற்போக்கற்றுப் போவதற்கு இடமேற்படுகின்றது என்றும், இந்தியா இன்று இந்த மிருகப்பிராய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும், மற்றும் மக்களில் உயர்வு தாழ்வும், செல்வவானும், தரித்திரனும் இருக்க இதுவே காரணம்” என்றும் சொன்னோம்.

அதற்கவர் “அப்படியானால் உங்களுடைய கடவுள் சம்பந்தமான எழுத்துக்கள் எங்கள் ஆண்டவனையும் தானே சேர்த்துப் பேசுவதாயிருக்கின்றது” என்று சொன்னார்.

நாம் அதற்கு, நான் என்ன செய்யலாம், உங்களுக்காக வேண்டு மானால் இஸ்லாமானவர்கள் கடவுள் தவிர என்று சொல்லி விடட்டுமா? என்று சொன்னோம்.

அதற்கவர் சிரித்துக்கொண்டே, எங்களைப் பரிகாசம் செய்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு “நீங்கள் மேலே குறிப்பிட்டகுணமும், தன்மையும் கொண்ட கடவுளைப்பற்றித்தான் சொல்லுகின்றேன் என்று சொன்னபிறகு, இஸ்லாமானவர்கள் கடவுள் மாத்திரம் அதிலிருந்து எப்படி விலக்கப்படும் என்றும் இன்றைய தினம் எல்லா மார்க்கத்தாரும் இந்த மாதிரியாகத்தானே கடவுளைக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று சொன்னார்.

அப்படியானால் அதற்கு நாம் என்ன செய்வதென்று சொன்னோம்.

அதற்கவர் “அதை மாத்திரம் விட்டுவிடக்கூடாதா” என்றார்.

நாம் எதை, இஸ்லாம் கடவுளை மாத்திரமா? என்றோம்.

அவர் மறுபடியும் சிரித்துக் கொண்டு “பொதுவாகக் கடவுள் என்பதையே தான் சொல்லுகின்றேன்.” என்று சொன்னார்.

நாம் மற்ற கடவுள்களைச் சொன்னால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது என்றும், வேண்டுமானால் உங்கள் கடவுளைச் சொல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னோம்.

இவற்றை நாம் பரிகாசமாய் சொல்லுவதாக அவர் உணர்ந்து பிறகு உண்மையாய் பேசுவதாய்ச் சொல்லிப் பேசியதாவது :-

“நீங்கள் சொல்லுவதில் குற்றம் இருப்பதாக நான் சொல்லவரவில்லை. ஆனால் என்போன்றவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது தான் எனது கவலையே ஒழிய கடவுளைப் பற்றிய கவலை எனக்குச் சிறிதும் கிடையாது. சுமார் பத்துவருஷ­ காலமாகவே எனக்கிருந்ததில்லை. ஆனா லும் கவலை இருக்கின்றதாக நம்பிக்கொண்டு நடக்கின்றவர்களைவிட நான் மிகவும் ஒழுக்கத்துடனும், நியதியுடனும் நடந்து வந்திருக்கின்றேன் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் என்னுடைய நடவடிக்கையை விட கடவுளைப் பற்றிக் கவலை கொண்டிருப்பதாக நான் நடந்து கொண்ட வேஷ நடவடிக்கையே என்னை பிறத்தியார் மதிக்கச் செய்திருக்கின்றதே அல்லாமல் என் ஒழுக்கத்தைப்பற்றி யாரும் மதிப்பதில்லை. ஆதலால் கடவுளைப் பற்றி கவலையில்லை என்று சொல்லிவிட்டால் என்னை எனது மார்க்கத்தார்கள் ஒழித்து விடுவார்கள்” என்று சொன்னார்.

அதற்கு நாம் உங்களுக்கு அந்த மாதிரி மக்களின் மதிப்பு வேண்டு மானால் அந்தப்படியே நடவுங்கள் இல்லாவிட்டால் தைரியமாய் உண்மை யை எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னோம்.

பிறகு, அவர் கடைசியாக முஸ்லீம் வாலிபர்களுக்குள்ளாவது இப்படியொரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்று கருதியிருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நாம் மிகவும் சந்தோஷம் என்று சொன்னோம். பிறகு வேறு பல விஷயங்கள் பேசினோம்.

நிற்க, இந்தப்படியான எண்ணமுள்ள இன்னும் அநேக வாலிபர்கள் இருக்கின்றார்கள். இரண்டொரு வாலிபர்கள் இதற்காக அதாவது சுய மரியாதை இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தங்களது மார்க்கத்தைக்கூட விட்டுவிடத் தயாராயிருப்பதாகச் சொன்னார்கள். அப்படி அவர் சொல்ல நேர்ந்த அவசியம் அவருக்கு மனித சமூகத்தினிடமிருக்கும் அன்பானது அவருடைய மார்க்கத்தைவிட பெரியதாகக் கருதியதேயல்லாமல் வேறல்ல.

ஆகவே, அப்படிப்பட்ட வேகமுள்ள வாலிபர்களானாலும், மௌல்வி களானாலும் தங்கள் சமூகத்திலுள்ள சில பழக்க வழக்கங்கள் மார்க்கத்தின் பேரினாலும், புரோகிதர்களாலும், இந்துக்கள் சாவகாசத்திலானாலும் அவை மனித இயற்கைக்கும், தர்மத்திற்கும் விரோதமாய் இருந்தால் அக் கொள்கை களை அதிலிருந்து கொண்டே திருத்த முயற்சிப்பதுதான் பயனளிக்குமே யொழிய மார்க்கத்தை விட்டு திடீரென்று வெளியேறி விட வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். இந்தப்படி அவர்களை அந்த மார்க்கக் கட்டளைப்படி நடந்து ஆண்டவன் என்பவரிடம் சன்மானம் பெறவோ, மோக்ஷமடையவோ நாம் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அந்த மார்க்கப் பேரைச் சொல்லிக்கொண்டாவது, அந்த சமூகத்தை சீர் திருத்தம் செய்யப் பயன்படுவார்களே என்கின்ற ஆசையின் மீதேயாகும்.

கமால் பாக்ஷா வீரர் மார்க்கத்தை வெளிப்படையாய் விட்டிருந்தாரானால், அவரால் அந்த சமூகத்திற்கு அவ்வளவு நன்மை செய்திருக்க முடியாது. ஆதலால் நமது முஸ்லீம் வாலிபர்களும், வங்காள முஸ்லீம் வாலிபர்கள் ஏற்படுத்திக்கொண்டிருப்பதுபோல இந்த மாகாணத்திலும் புரோகித ஒழிப்புச் சங்கமென்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்து கொண்டு அதன் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் அநேகத்தை நிறைவேற்றி வைக் கலாம். அன்றியும் இந்தத் துறையில் மற்றவர்களைவிட முஸ்லீம்களுக்கு வேலை குறைச்சலாய் இருக்கின்றதென்றே சொல்லுவோம். ஏனெனில் அவர்களுடைய மார்க்கக் கட்டளைகள் என்பதில் பல ஏற்கனவே சுய மரியாதைக் கொள்கையாகவே இருக்கின்றன.

ஆகையால் கடவுளைப் பற்றிய பேச்சு மாத்திரம் அவர்களுக்கும் வேண்டியதில்லை என்பது நமது அபிப்பிராயமாகும். வேண்டுமானாலும் அதை முதலில் பிரசாரம் செய்வதைவிட மற்ற காரியங்களைச் செய்வதே அனுகூலமானதாகும். விவகாரம் வரும்போது அதைப்பற்றியும் பேச யாரும் பயப்படவேண்டியதில்லை. ஆனால் அது அவரவருடைய சொந்த அபிப்பி ராயம் என்றுகூட சொல்லிக் கொள்ளலாம்.

ஆகவே முடிவாக நாம் சொல்லிக் கொள்வதென்னவென்றால் முஸ்லீம் வாலிபர்கள் இந்த தமிழ்நாட்டில் ஒரு புரோகிதமொழிப்புச் சங்கம் ஏற்படுத்திக்கொண்டு மக்களை புரோகிதக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கும் படியும், தங்கள் தங்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க மக்களுக்குத் தைரி யம் வரும்படியாகவும் செய்ய வேண்டியது முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதற்கு அவசியமும் மற்ற இதன் முழு விபரங்களும் வேண்டுமானால் வங்காள முஸ்லீம் புரோகிதமொழிப்புச் சங்கத்தாரிடமிருந்து தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதன் அவசியத்திற்குக் காரணம் அவர்கள் சொல்லுவதற்கு மேல் நாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. மூட நம்பிக்கை என்பதும் புரோகித ஆக்ஷியென்ப தும் எந்த மதத்திலும் இருக்கக்கூடாது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளு கின்றார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதத்தில் அவை இல்லை என்று சொல்லிவிட்டு அன்னிய மதத்தில் இருப்பதாகச் சொல்லு கின்றார்கள். ஆதலால் இன்ன மார்க்கத்தில்தான் இருக்கின்றது என்றும், இன்ன மார்க்கத்திலில்லை யென்றும் யாரும் வாதிட வேண்டியதில்லை. நடு நிலைமையிலிருந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டுபார்த்து, தங்களுக்கு இருப்பதாய் தோன்றினால் அதை விலக்கட்டும். தோன்றாவிட்டால் அப்ப டியே இருக்கட்டும் என்கின்ற கொள்கை வைத்தே முதலில் வேலை துவக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். வேலை துவக்கினால் பொதுநல ஊக்கமுள்ளஅநேக மௌல்விகள்கூட ஒத்துழைக்கத் தயாராயிருக் கின்றார்களென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

------------------------- தந்தைபெரியார் --”குடி அரசு” - துணைத் தலையங்கம் - 15.02.1931

37 comments:

தமிழ் ஓவியா said...


அட, மூடத்தனமே!


வேப்பனஹள்ளி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிக்குன் குனியா காய்ச்சலால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கினர்.

நோயிலிருந்து மக்கள் விடுபடவும், மழை பெய்து வறட்சி நீங்கவும் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரை காலி செய்து விட்டு காட்டில் குடியேறி சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு, வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, சாமி சிலைகளையும் அலங்கரித்து தங்களுடன் எடுத்துச் சென்றனர். காட்டுக்குள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தங்களது வளர்ப்புப் பிராணிகளான ஆடு, கோழி, நாய் ஆகியவற்றை தங்களுடன் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக ஊர்ப் பெரியவர்கள் கூறும் போது, மக்களுக்கு பிணி மற்றும் வறட்சி ஏற்பட்டால் இவ்வாறு கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு காலி செய்து வனப்பகுதிக்கு சென்று மாரியம்மனுக்கு பொங்க லிட்டு வழிபடு வதை எங்களது மூதாதையர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மூதாதையரை போன்று நாங்களும் இந்த வழிபாட்டினை மேற்கொண் டுள்ளோம் என்றனர். இதையடுத்து, மாலை அனை வரும் சாமி சிலைகளுடன் ஊர் திரும்பினராம்.

ஒரு சந்தேகம். இவ்வூர் மக்கள் நோய்க்கு மருந்தே சாப்பிட மாட்டார்களா?

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....
எழுத்துரு அளவு Larger Font

தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றி - தனி வாழ்வைத் துறந்து பொதுப் பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (1994).

தமிழ் ஓவியா said...


புறக்கணிக்கச் சொல்லுவது பொருத்தமான கருத்தே!



டெசோ சார்பில் நேற்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து நேரடியாக, கலந்து கொள்ள முடியாத தமிழர்கள் அதே நேரத்தில் இனவுணர்வோடு - சிந்தனையை எல்லாம் தமிழ் நாட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் கோடானு கோடி பேர்கள்.

தமிழ்நாடு அரசின் காதுகளும், மத்திய அரசின் காதுகளும், ஏன் ராஜபக்சேயின் ஆட்களும் (சோ ராமசாமி, குருமூர்த்தி வகையறாக்கள்) நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு அலைகள் - தலைவர்கள் ஆற்றிய உரையின் வீச்சுகள் - முழக்கங்கள் - மக்கள் மத்தியிலே அவற்றின் எதிரொலி - இவற்றை அறிந்த பிறகாவது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் மக்கள் மத்தியில் வேர்ப்பிடித்து நிற்கும் உணர்வின் கூர்மையான ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேற்று தொலைக்காட்சிகளில் இந்த ஆர்ப் பாட்டத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அதில் எதிர் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கருத்து. இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்தான் ஈழத் தமிழர்கள்பற்றி எடுத்து வைக்கப்படக் கூடிய வாய்ப்புக் கிட்டும்; போகாவிட்டால் அந்த வாய்ப்புப் பறி போகும் அல்லவா என்று காங்கிரஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

இதில் முதலாவது காமன்வெல்த் மாநாட்டில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி இந்தியா எடுத்து வைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி நம்புவதற்கு - இதற்குமுன் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நடந்து கொண்டு வந்திருக்கும் போக்கும் அணுகு முறைகளும் நம்புவதற்கான எண்ணத்தை ஏற்படுத்தவில்லையே!

அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நாடுகள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அரசின்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் (26.5.2009) அப்பொழுது இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே அவையில் என்ன பேசினார்?

இந்தக் கூட்டமே அவசியமற்றது - உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, தண்டிக்க, கண்டிக்க முயற்சி எடுக்கக் கூடாது என்று பேசிடவில்லையா?

பேசியதோடு மட்டுமல்லாமல், அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது, இலங்கைக்கு ஆதரவாகப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேறிட இந்தியா கை கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் உள்ள இந்தியா, இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கு இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கவுமான, கருத்துக் களைச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இந்தியா என்ற 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கிறது என்றால், அதனால் ஏற்படக் கூடிய தாக்கம் இலங்கை அரசுக்கு நெருக்கடி யையும், பேரழுத்தத்தையும் கொடுக்குமே!

நேற்றைய டெசோ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக் கணிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை மிகச் சரியானதே!

தமிழ் ஓவியா said...


தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக்காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர்.

- (விடுதலை, 5.4.1965)

தமிழ் ஓவியா said...


பெரியார் தொலைக்காட்சி வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

பெரியார் தொலைக்காட்சி வேண்டும்

ஆன்மீகவாதிகள் தனித்தனி தொலைக்காட்சி மூலம் ஆன்மீக பொய்களை மக்களுக்கு பரப்பி வருகின்றனர். ஆனால் அய்யாவின் சிந்தனைகள் பற்றி பெரியார் என்ற பெயரில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருப்பதால் ஒரு சமயம் சிறந்த நாடு அழிந்து போக சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.

இதற்கு எதிர் மறையாக பல கூட்டம் நடைபெற்ற பொழுதும், பிரச்சாரம் இருந்தாலும் இது மக்கள் இடம் போய் சேருவதே இல்லை. எல்லோரும் விடுதலை, முரசொலி, உண்மை, பம்பாய் தமிழ் இலக்கிய பத்திரிகைகளை படிப்பது இல்லை.

இலவச பதிப்பகம், குறைந்த விலை புத்தகம் போன்றவை மக்களிடம் போய் சேருவது இல்லை. ஆனால் தொலைக்காட்சி மட்டுமே மக்கள் மனதில் பதியும் நாடகம், அய்யாவின் சொற்பொழிவுகள், காவியம், கதை, விளக்கம் போன்றவை சினிமா கலக் காமல் தனி ஒளிபரப்பு அவசியம் இதுபற்றி தாங்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் மிக விரைவில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு மக்களுக்கு தேவை. மன் னிக்கவும். நாங்கள் பம்பாயில் இருப்ப தாலும் தமிழ் அதிகம் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாததால் தமிழ் எழுத்து களில் தவறுகள் இருக்க நேர்கிறது மன்னிக்கவும்.

- வி.பி. மோகன், கல்யாண் மும்பை

தமிழ் ஓவியா said...


மீண்டும் தேவதாசி முறையா? - கோவி.லெனின்


கவலைகள் பலவிதம். நடிகை சொர்ண மால்யாவின் கவலை அதில் ஒருவிதம். அவருடைய பர்சனல் கவலைகள் பல இருக்கலாம். அது பற்றி நமக்குக் கவலையில்லை. பரதநாட்டியம் பயின்று டாக்டர் பட்டமும் பெற்ற கலைஞர் அவர். அதனால் அவர் கவலைப்பட்டது, பரதக் கலை பற்றித்தான். ஒரு கல்லூரியில் பேசும்போது, முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள் என்ற அர்த்தத்தில் கவலை யோடு பேசியிருக்கிறார். அதாவது, தேவதாசி என்கிற பழங்கால முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப் பட்டதால், பரதக் கலை வளராமல் போய்விட்டது என்று கவலைப்பட்டிருக்கிறார் சொர்ணமால்யா. தேவதாசி முறை என்பது என்ன? அந்தக் காலத்தில் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களைக் கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்து விடுவார்கள். சதுராட்டம் என்ற பெயரில் அவர்கள் கோவில் நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடு வார்கள். பெயர்தான், கடவுள் தொண்டு. நடை முறையோ வேறு. கோவிலை நிர்வகிப்பவர்களும் ஊர் பெரிய மனிதர்களும் தங்கள் விருப்பத்திற்கு அந்தப் பெண்களை பயன்படுத்திக் கொள்வார்கள். தேவதாசியாக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் என்றால் அந்தப் பெண்ணின் பாட்டியும் தேவ தாசியாக இருந்திருப்பார். அதன்பின் அவரது அம்மாவும் தேவதாசிதான். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாலும் அதே நிலைதான். கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் பரம்பரை பரம் பரையாக பாலின இழிவையும் பாலியல் கொடுமை யையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்திலும் தாசிகள் என அவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது. இந்தக் கொடுமை களுக்கு எதிராக வெளிப்பட்ட அவர்களின் குமு றல்கள் அடக்கப்பட்டன. அல்லது நீடிக்க முடியா மல் அடங்கிப்போயின.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) உள்ளிட்டவர்கள் இந்த தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பாக, பெரியாரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத் தது. பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், அன்றைய சென்னை மாகாணம் என்பது இன்றைய தமிழகம், ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள், ஒரிசா எல்லை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலெட்சுமிதான், சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.

தமிழ் ஓவியா said...

சட்ட மன்றத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந் தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி, தேவதாசி முறையை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதாவைப் பற்றியும் அதனை நிறைவேற்றுவது பற்றியும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியிருந்தார். எனினும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மசோதாவை எதிர்த்துப்பேசிய காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணி களுக்கென்றே படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்து விட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாய மாகும் என்றார். அதற்குப் பதிலளித்த டாக்டர் முத்துலெட்சுமி, ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றால், அதை ஒரு சமுதாயத்துப் பெண்கள்தான் செய்ய வேண்டுமா? அந்தத் தொண் டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? என்று சத்திய மூர்த்தியைப் பார்த்து சூடாகக் கேட்டார். கடுமை யான எதிர்ப்புக்கு நடுவே சென்னை மாகாண சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேறியது. இதன் மூலமாக, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை பரம்பரை பரம்பரையாக கோ விலில் தேவதாசிகளாக்கி, பாலியல் கொடுமைக் குள்ளாக்கும் வழக்கம் ஒழிந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களில் இது மிகவும் முக்கியமானது. கோவிலின் பெயரால், பாலியல் கொடுமையை சமூக வழக்கமாக்கி வைத் திருந்த ஆதிக்க சக்திகளிடமிருந்து பெண்களை மீட்டது தேவதாசி ஒழிப்பு மசோதா. தேவதாசி முறையை ஒழித்தால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என அன்று சத்தியமூர்த்தி பேசினார்.

தமிழ் ஓவியா said...

அதே கருத்தைத்தான் இன்று கவலையோடு பேசியிருக் கிறார் சொர்ணமால்யா. சென்னை மாகாணத்தில் அப்போதே தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது தொடர்ந்தது. சில சமூகங்களில் வெவ்வேறு பெயர்களில் அது கடைப்பிடிக்கப்பட்டது. பருவமடைந்த பெண் களை கோயிலுக்குத் தேவதாசியாக்கி அங்கு ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் இச்சைக்குப் பலியாக்கும் வழக்கம் தமிழகத்தின் எல்லை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்வதை ஊடகங் களும், சமூக ஆர்வலர்களும், படைப்பாளிகளும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தபடியே இருந்தனர். இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழித்து, அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் பல மாநிலங் களில் மேற்கொண்டு வருகின்றன. மும்பை அதற்கோர் உதாரணம். ஸ்வேதா கட்டிக்கு இப்போது 18 வயதுதான். மும்பையின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் ஒரு தேவதாசிப் பெண்ணின் மகளாகப் பிறந்தவர். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தேவதாசியாக்கப்பட்டு, தன் அம்மா படும் பாலியல் கொடுமையைக் கண்டு ஸ்வேதா பயந்தார். அவரது தாய் வந்தனாவும் தனக்கு நேரும் கொடுமைகள் தன் மகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தார். அருகிலுள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப் பட்ட ஸ்வேதா, சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படித்துவந்தார். காமத்திபுராவில் உள்ள இப்படிப்பட்ட பெண் குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும், அப்னே ஆப் என்ற அமைப்பு, ஸ்வேதா நன்றாகப் படிப்பதை அறிந்து, அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்தது. அந்தப் பள்ளியிலேயே அவர் மேல்நிலை வகுப்புவரை நன்றாகப் படித்து தேர்ச்சியடைந் ததால், அப்னே ஆப் அமைப்பு ஸ்வேதாவை க்ரண்ட்டி என்ற தொண்டு நிறுவனத்திடம் அழைத்துச் சென்றது. நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் தன் இலட்சியக்கனவு என்று ஸ்வேதா தெரிவித்தார். பாலியல் தொழிலில் தள்ளப் பட்டவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களிடமிருந்து உதவி பெற்றுத் தரும் நிறுவனமான க்ரண்ட்டி, ஸ்வே தாவுக்கு உதவ முன் வந்தது. அந்த நிறுவனம் எடுத்த முயற்சிகளால், அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் வாய்ப்பை தற்போது பெற்றிருக்கிறார் ஸ்வேதா.

உலகம் முழுவதுமிருந்தும் 200-க்கும் அதிகமான வர்கள் ஸ்வேதாவின் கல்விக்காக நிதியுதவி அளித்துள்ளனர். அதன் மூலமாக அமெரிக்காவில் உளவியல் துறையில் படிக்கப் போகிறார் ஸ்வேதா. அவருக்கு சக மாணவிகளின் வாழ்த்துகள் குவிந்த படி இருக்கின்றன. ஸ்வேதாவின் அம்மா வந்தனா, அவள் அங்கே என்ன படிக்கப்போகிறாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவள் என்கூட இருக்கப்போவதில்லை என்பது புரிகிறது. ஆனாலும் அவளது நிலை கண்டு நான் மனரீதியாக பலமடைந்துள்ளேன் என்று சொல்லி யிருக்கிறார். தன்னுடன் தனது குடும்பத்தைப் பீடித்திருந்த இந்த தேவதாசி கொடுமை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் தன் மகள் இந்தப் பாழுங்கிணற்றில் விழவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதுபோல இருந்திருக்கிறது வந்த னாவின் குரல். அன்று மூவலூர் ராமாமிர்தமும், டாக்டர் முத்துலட்சுமியும் இழிவுபடுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர்கள். அந்த இழிவை எதிர்த்துப் போராடினார்கள். வென்றார்கள். ஆனால் சத்தியமூர்த்தி போன்றவர்கள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் பரதநாட்டியம் ஒழிந்து விடும் என்றார்கள். இன்று வந்தனாவும் அவர் மகள் ஸ்வேதாவும் தேவதாசி குலத்திலிருந்து மீள்வதற்குப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் சொர்ணமால்யா போன்றவர்கள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதால் பரதநாட்டியம் வளரவில்லை எனக் கவலைப்படுகிறார்கள்.

தேவதாசிகள் என்ற முறை எதற்குப் பயன் பட்டது, பயன்படுகிறது என்பதற்கு ரத்தமும் சதை யுமாக சாட்சிகளாக இருக்கிறார்கள் வந்தனா போன் றவர்கள். சத்தியமூர்த்தியைப் பார்த்து டாக்டர் முத்துலட்சுமி, கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? என்று சட்டமன்றத்தில் சத்தமாகக் கேட்டார். சொர்ணமால்யாக்களைப் பார்த்து வந்தனாவும் ஸ்வேதாவும் கேட்காமல் கேட்கிறார்கள்.

நன்றி: நக்கீரன் இணையதளம்

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருச்சி, ஆக.9- ஈழத் தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று திருச்சியில் நடந்த டெசோ ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத் தின் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில்டெசோ அமைப் பின் சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வ ராஜ் முன்னிலை வகித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

சென்னையில் கடந்த 16 ஆம் தேதி டெசோ கலந்தாய்வு கூட்டம் திமுக தலைவர் கலைஞர் தலை மையில் நடந்தது. அதில் இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்ற 4 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக மக்கள் மற்றும் மத்திய அரசு கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே இடையே இலங்கை யில் மாகாண கவுன்சில் பகுதியில் அதிகாரம் வழங்குவது தொடர்பாக 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த ஒப்பந் தத்தை நீர்த்துப்போகும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார்.

இதை நிறை வேற்ற இலங்கை அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் 13 ஆவது சட்ட திருத்தத்தில் உடன்பாடு இல்லை, 2 நாட்டின் இடையில் தன்னிச்சை திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என அந்நாட்டு ராணுவ தளபதி கோத்தபய ராஜபக்சே கூறிவருகிறார். இதில் இரு நாட்டு நலன் அடங்கியுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் திமுக மக்களுக்காக பாடுபடும். இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர் தற்போது வயிற்றெரிச்சலோடு உள்ளனர். இலங்கை தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும். டெசோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நடந்துள் ளது. சிங்கள அரசின் கொடிய ஆட்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்

தமிழ் ஓவியா said...


சிந்தனைப்பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பார தத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்லர் என்று சொன்னால் யாரும் கோ பித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதா யுகத்து கெய்டைப் பார்த்து, கலியு கத்தில் பிரயாணம் செய்ய வேண்டு மென்கின்றோம்.

@@@@@@@@@@@@@@@@@@

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

@@@@@@@@@@@@@@@@@@

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்யாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாபனங்கள், சகலவிதமான மத சங்கங்கள் ஆகிய அனைத்தும் தொழிலாளர் வர்க்கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவுவரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

தமிழ் ஓவியா said...


மதத்துக்கு இசையும் விரோதமாம்!


மதம் ஆட்சி செய்யும் ஈரான் நாட்டில் - மேற்கத்திய இசைகளை கேட்பது பாவம் என்றும் மதத்திற்கு விரோதம் என்றும் அறிவிக்கப்பட்டு - முல்லாக்கள் அரசு சார்பில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஈரானிய இளைஞர்கள் பலர் மேற்கத்திய இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இசையைப் பதிவு செய்து விற்கும் ஒலிப்பதிவு நாடாக்கள் விற்பனை நிலையத்தின் முன்பு ஏராளமான இளைஞர்கள் இசை யைக் கேட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது கடை உரிமை யாளர் முல்லாக்கள், இந்த காட்சியைப் பார்க்கட்டும் என்று அறை கூவல் விடுத் தார். நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட கடையில் ஒரு நாளைக்கு 100 இசைப்பதிவு நாடாக்கள் மட்டுமே விற்பனையானது; இப்போது நாளொன்றுக்கு 400 இசைப் பதிவு நாடாக்கள் விற்பனை ஆகிறதாம்.

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு! உண்டு! உதாரணம்:- மனிதன் சுருட்டுப் பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...


மனு தர்ம முரண்பாடு


சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.

(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான்.

(மனு, அத்தி.3, சு.17)

13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மையினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது. நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.
சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய் யப்பன் கோயிலுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக் கிட்டிருக் கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

தமிழ் ஓவியா said...

ஒரு வழக்கு

வழக்கறிஞர்: யுவர் ஆனர்; எனது கட்சிக்காரர் மகாமக விழா வில் நகைக்காக ஆசைப்பட்டு ஒரு குழந்தையைக் கொன்றது உண் மைதான் என்றாலும் அதே நாளில் மகாமகக் குளத்தில் குளித்து அந்தப் பாவத்தை அவர் போக்கிக் கொண்ட காரணத்தால் கோர்ட்டு அவரை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வேண்டு கிறேன்.

- பொதட்டூர் புவியரசன், திருத்தணி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது: நாடாளுமன்றம் எதிரே திமுக ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பு சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக டில்லியில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற பிரதான வாயிலில் உள்ள காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

புதுடில்லி, ஆக. 9- இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக் கணிக்கவேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடாளுமன்ற பிரதான வாயில் எதிரே திமுக உறுப்பினர்கள் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப் பின் (டெசோ) கூட்டம் கடந்த 16.7.2013 அன்று சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் அடிப்படையில்,

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறை வேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும் என் பதை எடுத்துக்காட்டியும்,

நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங் களையும், தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச் சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் நேற்று (8.8.2013) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட் டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

அதையடுத்து, நாடாளுமன்றம் தொடங் கும் முன்பாக பிரதான வாயில் எதிரே உள்ள காந்தி சிலை முன் திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கனி மொழி கூறியதாவது: இலங்கைப் போரின் போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்துச் சொல்ல முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல் களில் இலங்கை அரசு ஈடுபட்டது. அதன் மீதான பன்னாட்டு விசாரணை கோரி உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப் பட்டால், அது அந்நாட்டு அரசுக்கு அளிக்கும் அங்கீகாரம் போல ஆகும். எனவே, இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைக் குறி வைத்து இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது மீனவர்களை நடுக்கடலில் சட்டவிரோதமாக சிறைப்பிடித்து அந் நாட்டு சிறைகளில் இலங்கைக் கடற்படை அடைத்து வைக்கிறது.

அதனால் தமிழக மீனவர்களின் வாழ் வாதாரம், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக கச்சத் தீவை மீட்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் உரிமை களைப் பாதுகாக்கும் வகையில் 1987 இல் இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும் என்று திமுக கோருகிறது என்றார் கனிமொழி.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சென்ற திமுக உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங் கேற்கக் கூடாது என்று குரல் கொடுத்தனர்.

அக்கட்சியின் ஏ.கே.எஸ். விஜயன் தலை மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் மக்களவையின் மய்யப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள வைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் இருக் கைக்குத் திரும்பினர்.

தமிழ் ஓவியா said...


மூடத்தனத்துக்குச் சவுக்கடி! குழந்தை தீப்பற்றி எரிவது பில்லி சூன்யம் அல்ல


மருத்துவர் மறுப்பு இது ஒரு வகை நோயே!

சென்னை, ஆக.10- யாரும் பில்லி, சூன்யம் வைக்கவில்லை. உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்த அதிசய நோயின் பாதிப்பு இது என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நாராயண பாபு கூறினார்.

தானாக தீப்பற்றி எரியும் குழந் தைக்கு சிகிச்சை அளிக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தை கள் நல தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் நாராயண பாபு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை ராகுலுக்கு வந்துள்ள நோய் ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்டன் என்ற அதிசய நோய் ஆகும். இது உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்துள்ளது.அதாவது ஒரு வகையான வாயு உடலின் உள்ளே இருந்து குழந்தையின் தோல் வழியாக வெளியே வருகிறது. அந்த வாயு எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். இதன் காரணமாக குழந்தையின் அருகே வெப்பமாக இருந்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருந்தாலும், யாரா வது சிகரெட் போன்றவற்றை பிடித் துக்கொண்டிருந்தாலும் குழந்தையின் உடம்பில் தீப்பிடித்துவிடும். வியர்வை வியர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த அபூர்வ நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால் தீப்பிடிக்காது. காற்றோட் டமான இடத்தில் இருந்தாலும் தீப்பிடிக்காது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை பார்த்துக் கொள்கிறோம். தீக்காயங் களுக்கு மருந்துபோடுகிறோம். மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இது பில்லியோ, சூன்யமோ இல்லை. தெய்வக்குற்றமும் இல்லை. அறிவியல் ரீதியில் இது ஒரு நோய்.நான் 30 ஆண்டாக மருத்துவ தொழிலில் இருக்கிறேன். இப்படி தானாக உடலில் தீப்பற்றி எரிவதை கேள்விப்பட்டது இல்லை. பாடத்தில்தான் படித்திருக் கிறேன். இவ்வாறு மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரு டைய மனைவி ராஜேஸ்வரி (23). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஸ் வரிக்கு கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர். ராகுல் பிறந்த 9ஆவது நாள் அன்று வீட்டில் பகலில் கட்டிலில் படுக்கவைத்திருந்தனர். அருகில் பெற்றோர் இருந்தனர். அப்போது திடீர் என்று குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்தது. ஏதாவது விளக்கு தீ பட்டுவிட்டதா வேறு எப்படி தீப்பிடித்தது என்று பெற் றோர் அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. 13ஆவது நாள் அன்று குழந்தையின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது. 30ஆவது நாள் அன்றும் அப்படியே தீப்பற்றி எரிந்தது. இவ்வாறு தீப் பிடித்தபோது குழந்தையின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை வலியால் துடித்தது.இதனால் மிகவும் பதறிப்போன பெற்றோர் உடலில் தீக்காயம் ஏற்பட்ட ராகுலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச் சைக்கு பின்னர் வீடு திரும்பிய ராகுலின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணணமூர்த்தி தலை மையில் மருத்துவர்கள் கொண்ட குழு குழந்தையின் உடலை பரிசோதித் தனர். மருத்துவர்கள் கூறுகையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்ப தாகவும், உடலில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குழந்தை ராகுல், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டுவரப்பட்டான்.

சிறப்பு மருத்துவக்குழு குழந்தை ராகுலை குழந்தைகள் நலத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் நாராயண பாபு பரிசோதித்தார். அந்த குழந்தை மீது மேலும் தீப்பிடிக்காத அளவுக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு ஏற்பாடு செய்து அனுமதித்துள்ளனர். குழந்தை குளி ரூட்டப்பட்ட அறையில் உள்ளது.

தீப்பிடித்தால் அணைக்க தீயணைப்பு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. ராகுலை கண்காணித்து சிகிச்சை அளிக்க இரவும் பகலும் தனித்தனி யாக ஒரு மருத்துவர் ஒரு நர்சு ஆகி யோர் சிறப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். தற்போது குளூக் கோஸ் ஏற்றப்படுகிறது. குழந்தையின் உடல், தலை, கால் ஆகிய இடங்களில் தீக்காயம் உள்ளன. அந்த காயங் களுக்கு மருந்து போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது

தமிழ் ஓவியா said...


ஏழை - பணக்காரத் தன்மைக்குக் காரணம் ஜாதி முறையே! முதல் அமைச்சர் சித்தராமையா படப்பிடிப்பு


பெங்களூரு, ஆக.10- சமுதாயத்தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரிப் புக்கு காரணம் ஜாதி முறையே என்று சித்தரா மையா பேசினார்.

பெங்களூரு சிறீ லட்சுமிநரசிம்மசாமி ஆன்மிக அமைப்பு சார் பில் நடைபெற்ற விழா வில் கலந்து கொண்டு முதல் அமைச்சர் சித்த ராமையா பேசும்போது கூறியதாவது:- பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தை களுக்குக் கல்வி வசதி கிடைக்க வேண்டும். அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக் கத்தில் மாநிலத்தில் பல தலைவர்கள் செயல் பட்டு வந்துள்ளனர்; சமீபகாலமாக நான், எனது குடும்பம் என்ற மனோபாவம் மக்களி டையே அதிகரித்து வரு கிறது.

இத்தகையவர்களால் எந்தப் பயனும் இல்லை. சுயநலத்துக்காக வாழ் பவர்களை

மரணத்துக்கு பிறகு யாருமே நினைக் கப் போவதில்லை. அர சியலில் முறைகேடாக பணம் சம்பாதித்தவர் கள் என்ன ஆகி இருக் கிறார்கள் என்பது அனை வருக்கும் தெரியும். இந்த ஜாதி முறை யால் ஏராளமானவர் களுக்குக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. முந் தைய காலத்தில் மேல் தட்டு உயர் ஜாதி மக் களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. வஞ்சிக்கப் பட்டவர்களுக்கு அந்த கல்வி கிடைக்காததால் தான் இன்று சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற் பட்டுள்ளன. சமுதாயத் தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரித்து உள்ளதற்கு காரணம் ஜாதி முறையே.

வஞ்சிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக் கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களைப் போன்று வளர வேண்டும். இத் தகைய மக்களின் மேம் பாட்டுக்காக காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங் களை தீட்டி செயல் படுத்தி வருகிறது.
இவ்வாறு சித்தரா மையா பேசினார்.

தமிழ் ஓவியா said...


பழையவற்றைக் கிளறினால்...



நான்கு தீர்மானங்களை முன்னிறுத்தி டெசோ அமைப்பு, தமிழ்நாடு தழுவிய அளவில் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

முதல் தீர்மானம்: இலங்கையில் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றியதாகும். அந்தத் தீர்மானத்திலேயே ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட - அனைத்து நாடுகளிலும், வாழும் ஈழத் தமிழர்களி டையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான் ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும், என்பதுதான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும், தற்காலிகத் தீர்வாகாது, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது எனத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே என்பது ஒரு வரப் பிரசாதம்; அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர் என்ற குற்றச்சாற்று காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது.
26 ஆண்டுகள் ஓடி விட்ட காரணத்தால் அதன் உண்மைகள், தகவல்களை மறந்து போயிருப் பார்கள் மக்கள் என்ற மனப்பான்மையில் துணிந்து சொல்லப்படும் கருத்தாகவே இது கருதப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்படுவதற்குமுன் ஈழத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்படவில்லை. இலங்கை அரசும், இந்திய அரசும் (குறிப்பாக உளவுத் துறையும் சேர்ந்து) தயாரித்த சரத்துக்களைக் கொண்டதாகும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்லி அசோகா ஒட்டலில் கிட்டத்தட்ட சிறைக் கைதிபோல் வைத்துப் பேசப்பட்டதாகும். தீட்சித் போன்றவர்கள் மிரட்டல் தொனியில் பேசியும், பிரதமர் ராஜீவ்காந்தி கேட்டுக் கொண்டும் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக் குப் பாதகமாக இருந்ததால் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையே!
கடைசியில் பிரதமர் ராஜீவ்காந்தியின் வார்த்தை களை நம்பத் தகுந்ததாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் ஒரு சூழ்நிலை (அதில்கூட பிரபாகரன் கையொப்ப மிடவில்லை) ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதிபர் ஜெயவர்த் தனே (29.7.1987) கையொப்பம் போட்ட மை காய் வதற்கு முன்னதாகவே வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் என்ன கூறினார்? (6.8.1987).
வடக்கு - கிழக்கு இணைப்புத் தற்காலிகமானது தான். இதைக் கண்டு ஏன் எதிர்ப்பைக் காட்டு கிறீர்கள்? நானே இந்த இணைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். தற்காலிகமான இந்த ஏற்பாட்டிற்கு என்னைப் புரிந்து கொள்ளாது சிங்களச் சகோதரர்களே, ஏன் ரகளை செய் கிறீர்கள்? என்று பேசவில்லையா?
அந்த இணைப்புக்கூட கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்யப்படுமாம்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும், (குடி யேற்றப்பட்டு விட்டார்களே) முசுலிம்களும் எதிராக வாக்களித்தால் அந்த இணைப்பு இல்லாமலேயே போய்விடும்.
அதற்குப்பின் ராஜபக்சே என்ன செய்தார்? தமது கூட்டணியில் உள்ள மார்க்ஸிய அமைப்பான ஜெ.வி.பி மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுக்கச் செய்து, வடக்கு - கிழக்கு இணைப்புக் கூடாது என்ற ஒரு தீர்ப்பை பெற்றும் வைத்துள்ளார்.

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழி ஆகும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதே என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கேட்டதற்கு அதிபர் ஜெயவர்த்தனே சொன்ன பதில் என்ன தெரியுமா? இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பது பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 30.7.1987 பக்கம் 9) என்று ஒப்பந்தத்தின் மறுநாளே சொல்ல வில்லையா?

இலங்கைக் குடியரசுத் தலைவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் புலேந்திரன் குமரப்பா உட்பட 17 பேர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததே - அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு முனையவில்லை என்பதைவிட தலையிட மறுத்தது என்பதுதானே உண்மை. அதன் காரணமாக விடுதலைப்புலிகள் அவர்களுக்கே உரிய பாணியில் சையனைடு குப்பிகளை பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டனரே! ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் கெதி இதுதானா?

பழையனவற்றைக் காங்கிரஸ்காரர்கள் கிளற வேண்டாம் - அவை அவர்களுக்குச் சாதகமாக இருக்காது! இப்பொழுது 13ஆவது சட்டத் திருத் தத்தைக் கொண்டுவரச் செய்ய முடியுமா என்பதில், மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!

தமிழ் ஓவியா said...


தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்


திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவி லென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில் லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு. லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார்.

அதோடல்லாமல் சுவாமிகளின் திருக்கக்கூசும் அக்கோவிலுக் குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப்பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன.

அதோடு மாத்திரமில்லாமல் சுவாமிகள் சங்கர நாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனே தான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளி னாராம். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமிகள் கோவி லுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத் துடனேயே சென்றாராம். மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா? அதுதான் நமது லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்.

சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர் களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லை யப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக் கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த் தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக்கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது.

இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந் தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் சங்கராச்சாரிய சுவாமிகளின் பந்தலுக்கு நெல் லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியது
தான்.

- குடிஅரசு - கட்டுரை - 05.12.1926

தமிழ் ஓவியா said...

இதுகூட வகுப்புத் துவேஷமா?

திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம்.

அங்கு வேத பாராயணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக் கிறோம். கோவிலில் தேவாரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது?

தேவாரம் படிக்காததினால் மோட்சம் கெட்டுப் போய்விட்டது என்பதாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராயணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை.

ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டுப் பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926

தமிழ் ஓவியா said...

பார்ப்பனியத்தை ஒழித்த கலியாணங்கள்

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கலியாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர் கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது.

இவைகளில் ஒரு கலியாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற் கேற்றாற்போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார்.

ஆனால் மற்ற இரண்டு கலியாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கலியாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீமான்களான அ.கோவிந்த நாயக்கர், வெ.முத்து நாயக்கர், ரா.துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.

ஆகவே, இந்த மூன்று கலியாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் தங்கள் வீட்டு சுபா சுப காரியங் களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த வகுப்பார் பார்ப்பனியத்தை நீக்கி கலியாணம் செய்த கவுரவம் சேலம் தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும் வழிகாட்டின பெருமையும் அவர் களுக்கு கிடைத்ததைப் பற்றி நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு இதற்கு முக்கியமாய் நின்று வேலை செய்த ஸ்ரீமான்கள் எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர் முதலிய கனவான்களையும் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைக்கு ஜே!

சர்க்கார் உத்தரவு

எல்லா கிராமம் கிராமாதிகாரிகளுக்கும் - பொதுச் சாவடி, பொதுக்கட்டடம், கச்சேரி, பள்ளிக்கூடம், பொதுக் கிணறு, பகிரங்கமான பாதை, சந்தை முதலிய எல்லா இடங்களிலும் ஆதிதிராவிடர் களுக்கும் பிரவேசிக்கச் சுதந்திரமுண்டு என்ற விஷயத்தையும், மேற்படி ஆதிதிராவிடர்களைப் பறையர், சக்கிலியர், பள்ளர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்றே அழைக்க வேண்டும் என்பதையும், பத்திரங்களிலும் ஆதிதிராவிடர் என்றே பதியவேண்டியதையும் கிராமத்தில் பரவச் செய்து அமலுக்குக் கொண்டு வரவேண்டியது. மேற் படியார்களுக்குப் பூமி அடமான விஷயங்களில் வேண்டிய உதவி புரிய வேண்டியது.

- குடியரசு - 21.11.1926

தமிழ் ஓவியா said...


காலணிகளின் ஊமைக்குரல்



மனித நேயம் வெளிப்படாத
ஆடை அலங்காரத்தோடு
மனித இனம் பிரிக்கும் சாதி
சமய உணர்வோடு
கள்ளம் கபடம் நிறைந்திருக்கும்
அழுக்கு மனதோடு
குறுக்கு வழியில் பதுக்கி வைத்திருக்கும்
அளவிலா பொருளாசையோடு
சொத்து சுகங்களால் சேர்ந்திருக்கும்
பகட்டான முகப்பொலிவோடு
உண்மைக்கு நேர்மாறாக பேசும் பொய்நாவோடு
ஐம்புலனுள் எல்லாம் மறைத்து
போலி பக்தியோடு
கோவிலுள் நுழையுமுன் வெளியே
எங்களை கழட்டி விடுவது ஏன்?
நீங்கள் கும்பிடும் காட்சிகளை நாங்கள் பார்த்துவிடக் கூடாது
என்பதற்காகத்தானே! ஆமெனில்
இதுவும் ஒரு நாடகம் தானே!
இதில் இறையருளுக்கு இடமேது?

----------------அருள். கிரகோரி
தலைமை ஆசிரியர் பணிநிறைவு
விமான நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். ரகசியம்!



நீங்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துத் தருமாறு மிரட்டினால், உங்கள் நுழைவு எண் பின்னை தலைகீழாக அடிக்கவும். அதாவது 1 2 3 என்றால் 3 2 1 என்று அடிக்கவும். நீங்கள் அடிக்கும்போது உங்கள் பணம் பாதிலேயே சிக்கிக் கொள்ளும். அதனால் காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். எல்லா ஏ.டி.எம்.மிலும் இந்த வசதி உண்டு. அதனால் இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

தமிழ் ஓவியா said...


உணவு மசோதாவை ஆதரிக்க தி.மு.க. தலைவர் கலைஞர் நிபந்தனை


சென்னை, ஆக.10- மாநில அரசுகளின் உரிமை களுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவுப் பாதுகாப்பு மசோதா இருந்தால் மட்டுமே அதனை ஆதரிப்போம் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் கலைஞர் நிபந்தனை விதித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத் துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக் கேற்ற செயலாக் கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசு களுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண் டும். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன.

இதற்குப் பிறகாவது உணவுக்கான உரிமையை வழங்கி, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருப்பது ஆக்க பூர்வமானது. எனவே, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கவும் இல்லை. முழுமையாக ஆதரிக்கவும் இல்லை.

அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவ சியமான திருத்தங்களுடன், மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கேற்ப உணவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முன் வரவேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவு மசோதா இருந் தால் மட்டுமே அது நிறைவேற திமுக ஆதரிக்கும்.

எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறை யில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறை யினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக் கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண் டும்.

இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவீத மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவீத மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப் படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.

முதல்வர் தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு தான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரி விக்க முடியும்.

இந்த மசோதாவால் தமிழகத்துக்குப் பாதகம் தான். சாதகம் இல்லை என்று முதல்வர் உறுதி யாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப் போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதா வில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங் களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப வில்லை என்று கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொலை செய்வது தான் கடவுளா?



தமிழில் பக்தி நுரை தள்ளும் ஏடுகள் உண்டு. ஒன்றை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன் என்று ஏனோ அவர்கள் கருதுவதில்லை.
இதோ ஒரு பட்டியல். சிவபெருமானின் வீரச் செயல்கள் நடந்த தலங்கள்
திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
திருப்பறியல் - தக்கன் தலை கொய்தது
திருவதிகை - திரிபுரம் எரிப்பு
திருக்குறுக்கை - காமன் எரிப்பு
திருக்கடவூர் - காலனை உதைத்தது
திருவிற்குடி - க(ச)ந்தராசுரன் சம்ஹாரம்
திருக்கோவிலூர் - அந்தகாசுரன்வதம்
இப்படி கொலை செய்வதும், எரிப்பதும், வதம் செய்வதும்தான் கடவுளா?
இந்தக் கடவுளை நம்பும், பக்தி செலுத்தும் பக்தனின் புத்தி விளங்குமா?
தான் நம்பும் கடவுளின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வதால்தான் நாட்டில் இத்தனைக் கொலை பாதகங்கள் - வன்முறைகள் என்பதை ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பிரச்சினை



மானமிகு திராவிடர் கழக தலைவர் அவர் களுக்கு என் ஆசான் பொருளாளராக இருந்து வரும் கோ.சாமிதுரை அவர்களின் குமாஸ்தா பாலு பணிவன்புடன் எழுதிக்கொண்டது. நானும் என் ஆசான் அவர்களிடமும், அவரின் குமாரர் ஜி.எஸ்.பாஸ்கர் அவர்களிடமும் சுமார் 1962 முதல் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

அய்யா நானும் சபரிமலைக்கு 48 ஆண்டுகள் சென்றுள்ளேன். கள்ளக்குறிச்சியில் அய்யப்பன் ஆலயமும் பலர் உதவியுடன் கட்டியுள்ளேன். அர்ச்சகர் பிரச்சினைபற்றி தங்களின் விளம்பரம் டீ..வி. பேப்பர் மற்றும் செய்திகள் மூலம் கேள்வி பட்டேன். தங்களின் நல்லதொரு கோரிக்கை அற்புதம், போராட்டம் அற்புதம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை போற்றத்தக்கது. மேலும் ஊர் என்றால், பள்ளிக்கூடம், குளம் மற்றும் கோவில் இருக்க வேண்டும் என்பார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கள் என அனைத்து ஜாதியினர் இருக்கிறார்கள். குளம் இருப்பின் அனைவரும் தண்ணீர் அருந்து கிறர்கள், கோவில் என்றால் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கம். அவர்களன்றி மற்ற இனத்தினர் அவர் களுக்கு அடிமைபோல் இருந்துவர வேண்டியுள்ளது. இதனை தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் முதல் அனைத்து இடங்களிலும் எதிர்த்து போராடினார்கள். அதே போல் தாங்கள் தற்போது நடத்தும் போராட்டம் போற்றக்கூடியது. எல்லா மதத்தினரும் நன்றாகவே ஆதரவு அளிப்பார்கள். தாங்கள் நடத்தும் இந்த போராட்டம் எல்லாம் வல்ல நம் முன்னோர்கள் ஆசீர்வாதத்தினாலும், அனைத்து ஜாதியினர்கள் ஆதரவாலும், நான் வணங்கும் என் தாய் தந்தையர்கள் ஆசீர்வாதத் தினாலும் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

- கே.பி. பாலு (வக்கீல் கிளர்க்) கள்ளக்குறிச்சி

தமிழ் ஓவியா said...


மனித சமுதாயத்தில்...



நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் குழப்பமும்


21.7.2013 அன்று TRB,, 2800 முதுகலை ஆசிரியர் களைத் தேர்வு செய்வதற்காக நடத்திய தேர்வில் 150 மதிப்பெண்களுக்கான வினா பட்டியல் வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலான வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. இதுபற்றிய செய்திகள் ஒரு சில நாளிதழ்களில் அப்போதே வெளிவந்தது. அனைவருக்கும் தெரிந்ததே!

மேலும் குறிப்பாக, பிரதமர் பெயர் டாக்டர் மன்மோகன் சிது என்றும், இந்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிது அலுவாலியா என்றும், நிதிக் குழு தலைவர் பெயர் ரெதுகராஜன் என்றும், தவறாக எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டு இருந்தது.
மேலும், பல்வேறு கேள்விகளில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருந்தன. இதனால் தேர்வு எழுதியவர் களுக்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டன. தேர்வு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்குரிய விடைகள் (Answer Key) TRB மூலம் இணையதளத்தில் வெளியிடப் பட்டன. அதில் பல்வேறு கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டு: மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் பெயர், மான்டெக் சிங் அலுவாலியா என்பதற்குப் பதிலாக ரெங்கராஜன் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது நமது பிரதமருக்கு அடுத்த, முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவியாகும். இவர் பெயரையே TRB தேர்வு வாரியம் தவறாக வெளியிட் டுள்ளது. இதனால் தேர்வு எழுதியோர் மத்தியில் மிகவும் வியப்பும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் ஓவியா said...


கிராமப்புறங்களில்... ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு


ஆய்வுத் தகவல்

புதுடில்லி, ஆக.11-இந்தியாவில் ஏழைகள் கடந்த 2004-05 இருந்த அளவைவிட 2011-2012இல் குறைந் துள்ளனர். இருந்தபோதிலும் கிராமப் பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணக்காரர்களுடன் அவர்களது இடைவெளி அதிகரித்துள்ளது. அதேபோல், நகர்புறங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2011-2012ஆம் ஆண்டில் வீட்டு உபயோகப்பொருள் செலவு பற்றிய தேசிய மாதிரி ஆய்வு நடத்தப் பட்டது. புள்ளிவிவர ஆய்வில் கடைப்பிடிக்கப்படும் கினி விகிதம் அடிப்படையில் கணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கினிவிகிதம் 2011 2012இல் 0.28 ஆக அதிகரித்துள்ளது. இது 2004-2005ல் 0.26 ஆக இருந்தது. நகர் பகுதிகளில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு 0.35லிருந்து 0.37 ஆகி உயர்ந்துள்ளது. கினிவிகிதம் பூஜ்யத்திலிருந்து ஒன்று என்று வரிசைப் படுத்தப்படுகிறது. பூஜ்யம் என்பது சரி சமமானது என்பதை குறிக்கும். ஒன்று என்பது சரிசம மற்றது என்பதை குறிக்கும்.

ஏழை பணக்காரர் இடைவெளி உயர்ந்து உள்ளது குறித்து பொரு ளாதார நிபுணர்கள் வியப்பு தெரி வித்துள்ளனர். அரசு பல்வேறு நலத் திட்டங்களை கிராமங்களில் செயல் படுத்தி வந்தபோதிலும் இந்த இடை வெளி அதிகரிப்பு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று டில்லி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிராந்திய மேம்பாடு பற்றிய கல்வி மய்யத்தின் பேராசிரியர் அமிதாப் குந்து தெரிவித்துள்ளார். கிராமப் பகுதியில், வேளாண்மை துறையைத் தவிர பிற தொழில்களிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்று மேலும் கூறினார்.
1977 -1978ஆம் ஆண்டுக்கு பிறகு கிராமப் பகுதிகளில் சரி சமமற்ற நிலைமை அதிகரித்துள்ளது. 1973 -1974இல் 0.27 ஆக இருந்த கினிவிகிதம் அப்போது 0.34 ஆக அதிகரித்தது. இது கடந்த 1993 -1994ஆம் ஆண்டில் இது 0.28 ஆக இருந்தது. விவசாய தொழிலாளர்களின் நுகர்வு முறையில் சுணக்கம் இருந்தது. இது எதைக் காட்டுகிறது என்றால், நுகர்வு செலவு அதிகரித்துள்ளது சரிசமமற்ற வினி யோகம் மற்றும் திட்டங்களின் பயன் பாடு வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதைக் காட்டு கிறது என்றும் குந்து கூறினார்.

வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வருமான பகிர்வு ஆகியவை சரிசமமற்ற நிலையால் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து சமு தாயத்தில் சரிசமமற்ற நிலைமை அதிகரித்து வந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசி யம். நகர்புறங்களில் இருப்பதைவிட கிராமப் பகுதிகளில் வறுமை சத வீதம் குறைந்துள்ளது. சரிசமமற்ற நிலைமை, நகரங்களைவிட கிராமங் களில் குறைவு என்பதையே இது உணர்த்துகிறது.

திட்ட கமிஷன் புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 2004-2005ஆம் ஆண்டில் கிராமப்பகுதிகளில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். ஆனால், 2011-2012ல் 25.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில் நகரங்களில் 25.5 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சரிசமமற்ற நிலை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இல்லை என்றுதான் சொல்லலாம். பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப் ரிக்கா) கினி விகிதம், தென் ஆப்ரிக்கா வில் கடந்த 2008இல் அதிகபட்சமாக 0.67 ஆக இருந்தது. இதற்கு அடுத்த படியாக பிரேசிலில் (2012இல் 0.51), சீனாவில் (2012இல் 0.47), ரஷ்யாவில் (2011ல் 0.41) என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சரிசமமற்ற நிலைமை வருமானத்தை வைத்து கணக்கிடுவது இல்லை. நுகர்வு செலவை வைத்து கணக்கிடப்படு கிறது. கினிவிகிதம் தேசிய புள்ளி விவரம் கடந்த 2011-2012இல் கணக் கிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு கலைஞர் கடிதம்


சென்னை, ஆக.12- தமிழகத்தில் வசிக்கும் நரிக் குறவர்கள் இனத்தை, அவர்களுடைய சமூக, கல்வி முன் னேற்றத்திற்காக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச் சர் வி. கிஷோர் சந்திரதோவ்வுக்கு 11.8.2003 அன்று அவர் எழுதிய கடிதத்தில்

கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நரிக்குறவர் என்ற இனம் பரிதாபகரமான, இரக்கப் படக் கூடிய வாழ்க்கை நிலைகளை கொண்டுள்ளனர். அவர்கள் வசிப் பதற்கு நிலையான இருப்பிடம் இன்றி அடிக்கடி இடங்களை மாற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண் டுள்ளனர்.

அவர்கள் சமூகம் மற்றும் கல்வியில் மற்ற இனத்தவரை விட பின்தங்கி இருப் பதுடன் பழங் குடியினத்தவருக்கு சமமாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இரக்கத்து டன் இந்த இனத்த வர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தி.மு.க. அரசானது அவர்களின் முன்னேற்றத்திற்கு எல்லா உதவி களையும் செய்துள்ளது. 1970-இல் நரிக்குறவர்கள் ஒரே இடத்தில் வசிக்கவும் வாழ்வாதாரங்களுக் காகவும் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. 2008-2009இல் நல வாரியங்கள் தி.மு.க. அரசால் உருவாக்கப் பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங் கப்பட்டுள்ளன.

சமூகம் மற்றும் கல்வியில் முன்னேற்றமடைய தங்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் வசிக்கும் நரிக்குறவர் கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவும் அவர்கள் பழங்குடி யினர் ஆவார்.

பழங்குடியினரின் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ்நாட்டில் வசிக்கும் நரிக் குறவர்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கோரிக் கைகளை கனிவுடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய உடன் நடவடிக்கையை நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அக்கடிதத் தில் கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


அமர்த்தியாசென் சொன்னதும் சோக்களின் புழுக்கமும்!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் அவர்கள் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி குறித்து கருத்தினை வெளியிட்டார். அமர்த்தியாசென் அவர்கள் எந்த அரசியல் கட்சியின் வண்ணத்துக்கும் ஆட்பட்டவர் அல்லர்.

பொது நிலையில் நின்று நாட்டுப் போக்குகளைக் கணித்துக் கருத்துகள் சொல்பவர்கள் நாட்டுக்கு அவசியம் தேவை. மத நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை இந்தியாவின் பிரதமராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஓர் இந்தியக் குடிமகன் என்கிற முறையில் அவர் பிரதமர் ஆவதைக் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் மோடி எதையுமே சொல்லவில்லை. சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களுக்கும்தான் மோடி அப்படி என்னதான் செய்து விட்டார்? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.

இப்படி கூறும் பொருளாதார நிபுணருக்கு எந்தவித அரசியல் வண்ணமும் பூச முடியாது. அமர்த்தியாசென்னின் இந்தக் கருத்து இந்தி யாவைத் தழுவி மட்டுமல்ல; உலகம் முழுவதும் பேசப்படும் - பெரும் அளவுக்குத் தாக்கத்தையும் உண்டாக்கும். இதனைப் புரிந்து கொண்ட பிஜேபியைச் சேர்ந்தவர்களும், பிர்மா முகத்தில் பிறந்ததாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களும், அமர்த்தியாசென் அவர்கள் கூறிய கருத்துக்களுக்குத் தக்கவகையில் பதில் சொல்ல வக்கில்லாத நிலையில் அவரை சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

பார்ப்பன சங்கத்தின் அதிகாரப் பூர்வமற்ற தலைவராக விளங்கிக் கொண்டுள்ள திருவாளர் சோ ராமசாமி தமது இதழில் (துக்ளக் 7.8.2010) தலையங்கம் தீட்டியுள்ளார். அமர்த்தியா சென் கூறிய கருத்து இந்த இந்த வகையில் தவறு? மோடி உண்மையிலேயே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள் கையில் நூற்றுக்கு நூறு உடன்பாடு உடைய பிடிவாதக்காரர் - அடுத்து அவர் பிரதமர் நாற் காலியில் சட்டமாக உட்கார்ந்தால் தான் மதச் சார்பின்மை என்பது முழுமையடைந்து மணம் வீசும் என்று எழுதியுள்ளாரா?

மோடி என்ற பெயரைச் சொன்னாலே, எல்லோரும் ஏன் இப்படி நிதானம் இழக்கிறார்கள் என்று புரியவில்லை. அவ்வளவு சக்தி படைத்தவரா மோடி! அவரை விமர்சிக்கும் உரிமையோ, அவரை ஏற்க முடியாது என்று கூறுகிற உரிமையோ கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உண்டு. அமர்த்தியாசென் அப்படிப் பேசியதால் என்ன வந்து விட்டது. மோடிக்கு ஒரு ஓட்டுக் குறைவு அவ்வளவு தானே! இதுதான் அறிவு ஜீ(சீ)வி திரு சோ. ராமசாமி அய்யரின் பதில்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. அமர்த்தியா சென் அவர்கள் ஆழமாக எடுத்து வைத்த குற்றச்சாற்றுக்கு பி.ஜே.பி. மற்றும் பார்ப்பனர் தரப்பில் எந்தவித உருப்படியான பதிலும் இல்லை - கை வசம் இல்லை என்பது உறுதியாகி விட்டது.
அமர்த்தியசென் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்கிற ஏளனம்தானே இதில் தொக்கி நிற்கிறது. துக்ளக் வாங்கும் தமிழர்கள் இந்த இடத்தை நிதானமாக, ஆழமாக நோக்கட்டும்!
சோ வகையறாக்கள் மோடியைப் பிரதமராகக் கொண்டு வரத் தவிப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பார்ப்பனராக ஒரு பிரதமர் வந்து இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதைவிட பார்ப்பனர் அல்லாதாரான மோடி. அதனைச் செய்தால் அவர்களுக்கு மிகவும் வசதியாகும். பார்ப்பனர் பிரதமராக இருந்து அதனைச் செய்தால் மிக எளிதில் முத்திரை குத்திக் கீழே தள்ளி விடுவார்கள்.

மோடி என்னும் பார்ப்பனர் அல்லாதாரைப் பிரதமர் ஆக்கினால். அவர்மீது அத்தகு முத்திரையைக் குத்தி வீழ்த்தி விட முடியாதே! இந்தத் தந்திரம் தான் மோடியை முன்னிலைப்படுத்துவதன் பின்னணியில் பதுங்கியுள்ள சூழ்ச்சியாகும். அதுவும் குஜராத்தில் மோடி அரங்கேற்றிய அந்தப் பாணி சூரத்தனம் - மனித வேட்டை இந்தியா முழுமையும் நடைபெற்றால் அது பிஜேபி சங்பரிவார்க் கும்பலுக்கும், பார்ப்பனர்களுக்கும் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அல்லவா!

மோடி பிரதமர் ஆனால் ஏதோ சிறுபான்மை மக்களுக்குத்தான் ஆபத்து என்று மேம் போக்காக கருதிவிட வேண்டாம்; ஒட்டு மொத்த சமூகத்தையே அமளிக்காடாக்கும் ஆபத்தான ஒரு நிலை என்பதை மறந்துவிட வேண்டாம்.
அமர்த்தியாசென்கள் கொடுக்கும் குரல் பொது நிலையானது. வழிகாட்டும் திசை விளக்குப் போன்றது - கவனியுங்கள்! கருத்தூன்றுங்கள்!