Search This Blog

6.8.13

மதம் மக்களுக்குச் செய்துவரும் நன்மை என்ன?

மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?


``மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்திற்கும் ஏற்ற விதிகளைக் கொண்டதேயாகும் என்று சொல்லப்படுமானால், அம்மாதிரி மதங்களைப் பற்றிச் சுயமரியாதை இயக்கம் அதிகக் கவலைப்படுவது கிடையாது. அதற்குச் சுயமரியாதை இயக்கம் அவசியமானால், உதவியும் செய்யும். மற்றும் ``மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்காக மதம் ஏற்பட்டது என்றால், அதைப்பற்றியும் சுயமரியாதை இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடும்.

 ஏனெனில், அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு - தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்துப் பொது முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் -_ அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேசவேண்டாம். ``நம்முடைய மதம் என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.
இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்து மதமல்லாமல், வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள்  இத்தனை ஜாதிகளாக அவற்றிலும் உயர்வு தாழ்வாகப் பிரிவுபடுத்தப்பட்டு இருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இதற்கு ஆதாரம் இந்து மத, சாஸ்திரமும், வேதமும்தான் என்று பேசுகிறார்கள். ஆகவே, இந்த நிலையில், இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும், ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லிம் ஆகாத எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.
மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும், சுதந்தரமும் சமூக வாழ்விலும், பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்றவுடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய, மதம் மக்களுக்குச் செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மத வெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை மட்டும் கெடுக்கிறது. மதம் மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது.
சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு -_ தாழ்வு கற்பிக்கிற மாத்திரமல்லாமல், மதம் பொருளாதாரத்தில், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூல காரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு ஜாதியும், மதம் சிருஷ்டிக்கவில்லையா? உலகச் செல்வமும், போக போக்கியமும், சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும், சோம்பேறி வாழ்க்கையாளருக்கும் சரீரப் பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும், வயிற்றுச் சோற்று அடிமையாகவும், கீழ் ஜாதியாராகவும் கீழ் மக்களாகவும் இருக்கவும், பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக் கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?
பகுத்தறிவற்ற பட்சி, மிருகம், பூச்சி, புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு, எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?
-------------------------------------------------- தந்தை பெரியார்--"உண்மை", 14.01.1971

51 comments:

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


- கலி.பூங்குன்றன்

1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?

உலகில் எந்தவொரு மதமும் தன் மதத்தவனையே தாழ்வாகக் கருதுவதோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர பிறர் மதகுரு ஆகக் கூடாது என்று தடுப்பதோ இல்லை.



கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம்.

ஆனால், இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராக முடியும். அதற்காக எந்தக் கல்லூரியிலும் படிக்க வேண்டாம்.

தாழ்த்தப்பட்டவர்களே ஒன்று சேர்வோம் வாரீர் என்று இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அழைக்கிறார்களே _ -அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்து என்று சொல்லுகிறார்களே _- அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து அர்ச்சகராக்க வேண்டும் என்று கூறினால் கூடாது... தாழ்த்தப்பட்டவர்களோ _ - பிற்படுத்தப்பட்டவர்களோ, மற்ற பார்ப்பனர் அல்லாதாரோ அதற்குரிய பயிற்சி பெற்றாலும், கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யக்கூடாதாம். கருவறைக்குள் அவர்கள் சென்றால் சாமி தீட்டாகி விடும் என்று ஆகமங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்த இழிவை தமிழர்கள் ஏற்கத்தான் வேண்டுமா? இந்த இழிவை ஒழிக்கும் போராட்டத்தைத்தான் தனது இறுதிப் போராட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார். அதற்கான போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்.

கடவுள் மறுப்பாளர்களான திராவிடர் கழகத்துக்காரர்கள் கோவிலில் அர்ச்சகராக யார் வருவது என்பதுபற்றிய அக்கறை _- ஏன்? நாத்திகர்கள் இதில் தடையிடலாமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்பது தமிழர்களின் உரிமை!

உரிமைக்கும், கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும்.

பார்ப்பனர் தவிர்த்த - மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதற்குச் சொல்லும் காரணம் பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்பதே! சூத்திரர்கள் என்றால் வேசிமக்கள் என்கிறது மனுதர்மம். (மனுதர்மத்தின் அத்தியாயம் 8 - சுலோகம் 415)

நாம் வேசிமக்கள், அதனால் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதை நாம் ஏற்கலாமா? திராவிடர் கழகம் அர்ச்சகர் பிரச்சினையில் தலையிடுவது _ இந்த இன இழிவை ஒழிப்பதற்காகவே! மற்றபடி திராவிடர் கழகத்துக்காரர்கள் யாரும் அர்ச்சகர் பணிக்காக விண்ணப்பம் போடப் போவதில்லை..

2. தந்தை பெரியார் என்ன சொன்னார்?

நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் ஜாதியார் _- சூத்திரர் - பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அனுபவங்களில் தீண்டப்படாத _ நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்து மத சாத்திரங்களில் தர்மமாகவும், இந்து லா என்னும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும், அதை அனுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றது. அந்தப்படி அமல் நடத்தப்பட்டும் வருகின்றன.

நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்கும் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்பக்கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், நாம் கீழ் ஜாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம் (விடுதலை 14.10.1973) என்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

3. எவ்வளவு காலமாக இந்தப் போராட்டம்?

தமிழ் ஓவியா said...


தமிழர்கள் கட்டிய கோவிலில் அர்ச்சனை செய்ய தமிழர்களுக்கு இடமில்லை என்ற நிலை தொடரும் 1000 ஆண்டுகால அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டம் இது. கோவில் அமைந்த தெருக்களில் நுழைதல், கோவில்களுக்குள் நுழைதல் என தீண்டாமை குடிகொண்ட இடங்களிலெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் தந்தை பெரியார். கோவில் கருவறைக்குள் தமிழர்கள் ஜாதிபேதமின்றி அர்ச்சகராக வேண்டும் என்ற கருத்தை 1937லேயே பெரியார் முன்மொழிந்தார். படிப்படியாக தன் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களை அதற்குத் தயார்ப்படுத்தவும் செய்தார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி 1970ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெறும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். 16.11.1969 அன்று மாலை 3.30க்கு திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கூடிய மத்திய நிர்வாகக் கமிட்டியில், கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் விளக்கப்பட்டு, 8 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் செல்லவும், தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டதிருத்தம் ஒன்றினை அரசு கொண்டுவரும் என அறிவித்தார்கள். இதற்கான அர்ச்சகர் நியமன மசோதா சட்டசபையில் 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன மடங்களின் பின்புலத்தில் இருந்த சிலர் 12 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

அர்ச்சகர் உரிமையை அமல்படுத்தி, தமிழர்களின் இழிவைப் போக்கும் வகையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னை பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9ஆம் தேதிகளில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதுவே பெரியார் கூட்டிய இறுதி மாநாடும் ஆகும். இதனையே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் குறிப்பிட்டார்.

பெரியாரின் மறைவிற்குப் பின், அன்னை மணியம்மையார் தலைமையில் அறப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், மாநாடுகளும் நடத்தப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெரியாரின் நூற்றாண்டையொட்டி அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீதிபதி எஸ்.மகராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு 1979ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்டது. உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தவிதமான தடையும் இல்லை என்று இந்தக்குழு அறிவித்தது.

தமிழ் ஓவியா said...

பின்னர், அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 8.6.1984 அன்று அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, பழனி கோவிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்படும் என அன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

எனினும், நடைமுறைக்கு வராமலிருந்த இந்தப் பிரச்சினைக்கு, 17.9.1991 அன்று தமிழக அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்கள் கடைசியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்படி, அரசால் திறக்கப்பட இருக்கும் ஆகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவார்கள்; இதன்மூலம் பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று 17.10.1991 முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டார்கள். 1996ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது? அந்த முள்ளை அகற்றிட 1.2.2006 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்தாயிரம் தோழர்கள் மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை நியமித்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு சிறிய திருத்தத்துடன் 21.8.2006 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருவல்லிக்கேணி, சிறீரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இதற்கென பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் திராவிடர் கழகம் மேற்கொண்டது. பயிற்சியில் சேர 1267 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. ஓராண்டுப் பயிற்சியில் 206 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சார்பில் அர்ச்சகர் உரிமைக்கான ஆணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

22.10.2012 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறீரங்கம், ராஜபாளையத்தில் எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பயிற்சியில் தேர்வு பெற்ற 206 பேர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து திண்டுக்கல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்ப்பானாகப் பிறந்து விட்டதாலேயே எந்த மோசமான ஒழுக்கக் கேடனும் அர்ச்சகராகலாம், முறையாகப் படித்து ஒழுக்கத்துடன் வாழும் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராகக் கூடாதாம். தமிழர்களே சிந்திப்பீர்! என்ன கொடுமை இது! தமிழ்நாட்டில் உள்ள தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம் _ தமிழர்கள் சூத்திரர்களாம்! சூத்திரர்கள் என்றால் என்ன? வேசி மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறது. (அத்தியாயம் 8, சுலோகம் 415) தமிழா! நாம் இன்னும் சூத்திரர்கள்தானா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானா? தமிழினப் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்! உங்கள் இழிவை ஒழிக்கும் போராட்டத்தில்தான் திராவிடர் கழகம் குதிக்கிறது.

வரும் ஆகஸ்டு முதல் தேதி முதல் போராட்டம்! போராட்டம்!! பலகட்டப் போராட்டம்!!! ஆதரவு தாரீர்! ஆதரவு தாரீர்!

தந்தை பெரியார் தொடங்கினார் -_ அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் _- நாம் முடித்து வைப்போம் _- வெற்றி பெறுவோம். இன இழிவைத் துடைப்போம். எழுச்சி கொள்வீர் தமிழர்களே! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறைகூவல் விடுத்துள்ளார். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெருவாரியான இயக்கங்கள் இப்போராட்டங்களில் பங்கெடுக்க முன்வந்துள்ளன.

பெரியாரின் கனவு நனவாகும்! சமத்துவ சமுதாயம் உருவாகும்!.

தமிழ் ஓவியா said...

இன்றும் பிரிக்கும் பார்ப்பனீயம்


தமிழன் கல்விக்கு வேட்டு!

இதோ ஒரு நிகழ்கால உதாரணம்

புதுக்கோட்டையில் சில தினங்களுக்கு முன் 25-குடும்பங்களை அய்ந்தாண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், அவர்களை ஊருக்குள் நடக்கும் நல்லது கெட்டது என்று எதிலும் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அத்துடன் அது முடிந்துவிட்டது.

ஊருக்குள் என்னதான் நடந்தது? ஏன் ஊரை விட்டு 25- குடும்பங்களை அய்ந்தாண்டுகளாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்? மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தவுடன் குறைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதா? என்ற கேள்விகளுடன் ஊருக்குள் நுழைந்தோம். ஊருக்குள் யாரும் பேச மறுத்தார்கள் என்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் சரவணவேல் என்பவர் கூறுகையில், மற்ற ஊர்களில் பள்ளிகள் தொடங்கியது மாதிரிதான் குலமங்கலத்துக்குள்ளும் பள்ளி தொடங்கப்பட்டது. அந்தப் பள்ளிக்கு ஊரின் குலதெய்வமான சிறீஉடைய பராசக்தி என்ற பெயர் வைக்கப்பட்டது. அதை நிர்வகித்து வந்தவர் பழனியாண்டித் தேவர் என்பவராவார்.

1943-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியை 1956-வரை நிர்வாகம் செய்துவிட்டு அவருக்கு அரசுப் பணி கிடைத்ததால் சுப்பையா தேவர் என்பவரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுவிட்டார். அவர் 4- மாதம் 10-நாட்கள் நிர்வாகம் செய்துவிட்டு சின்னையா தேவர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு மலேசியா சென்றுவிட்டார்.

அப்போது அடித்த புயலில் பள்ளிக்கூரை சாய்ந்து விட்டது. சின்னையா தேவர் சொந்தப் பணத்தில் சீர்செய்து 86-வரை நிர்வாகம் செய்தார். இங்கு கள்ளர், மறவர், வேளாளர், தேவேந்திரகுல வேளாளர், பள்ளர், பறையர், ஆசாரி, வண்ணார், கவுண்டர் என எல்லா ஜாதியினரும் இருந்தனர். அனைவரின் கல்விக்கும் இப்பள்ளிதான் பெரும் உதவியாக இருந்தது. ஓராசிரியர் பள்ளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து அய்ந்து ஆசிரியர்கள் வரை பணிபுரியும் அளவிற்கு உயர்ந்தது. தனியார் நிர்வாகமாக இருந்தாலும் 1973_-74 இ-ல் அரசு உதவி பெறும் பள்ளியாக மாறியது. பள்ளி நிர்வாகக் கமிட்டியும் அமைக்கப்பட்டது. சின்னையா தேவர், சுப்பையா தேவருக்கு அடுத்து தற்போது நான் செயலாளராக இருந்து நிர்வாகம் செய்து வருகிறேன். கமிட்டியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஊருக்குக் கோவில் கட்ட வேலைகள் தொடங்கியபோது பிரச்சினைகளும் தொடங்கிவிட்டது. இப்பள்ளியை ஊருக்குச் சொந்தமாக்க நடந்த முயற்சியிலிருந்து கோவிலுக்கு வரி வாங்குவது உட்பட அனைத்துக்கும் தொல்லை கொடுத்து வந்தனர். பள்ளியில் சேர்ந்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை வாங்கிச் சென்று வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர். அதனால் இப்பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முடியாத பட்சத்தில் கோவிலில் சாமி கும்பிடவும் அனுமதிக்கவில்லை. திருவிழாவும் நடத்தவிடவில்லை. உறவினர் என்று சொல்லி எழவு வீடுகளுக்கும் போகமுடியவில்லை. அதனால் இப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்திருக்கிறோம் என்றார்.

பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் மீது வழக்குப்போட்ட ஒருவரை எப்படி எங்கள் வீட்டுத்துக்கத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பது? அதனால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டோம். பள்ளியில் இருந்த பிள்ளைகளை அவரவர் விருப்பப்படி வேறு பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். கோவில் கட்டப் பணம் கொடுக்காததால் இப்போது திருவிழாவிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இப்போது ஊரிலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களாகத்தான் ஒதுங்கியிருக்கிறார்கள் என்றார்.

தமிழ் ஓவியா said...

ஒன்றியக் கவுன்சிலரான ஆர்.எம்.கருப்பையா கூறும்போது, பள்ளியைப் பொறுத்தமட்டிலும் ஊருக்குக் கேட்டுப் பார்த்தோம். ஊருக்கு ஒப்படைக்காததால் நிர்வாகக் கமிட்டியிடமே விட்டுவிட்டோம். அவர்களே நிர்வாகம் செய்து கொள்ளட்டும் என்று இருக்கிறோம். சாமி கும்பிட யாரையும் தடுக்கவில்லை. விரும்பியவர்கள் கும்பிட்டுக் கொள்ளட்டும் என்று இருக்கிறோம். சிலர் கோவிலுக்கு வந்து போகிறார்கள் என்றார். முன்னாள் கவுன்சிலரான அழகப்பன் என்பவர் கூறுகையில், 2006-ஆம் ஆண்டு கோவில் கட்ட நினைத்து நிதி வசூலித்தோம். ஆனாலும் நாங்கள் 2008-க்குப் பிறகு ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறோம். கோவிலுக்குத்தான் போகமுடிவில்லை என்றால் தாய் தகப்பன் இறந்த துக்கத்தில்கூடக் கலந்து கொள்ளவிடாமல் தடுப்பதுதான் வேதனையாக இருக்கிறது. கிராமத்தில் துக்க வீடுகளில் பெரும்பாலும் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வார்கள். அதில் இறந்தவரின் பிள்ளைகளைக்கூடக் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் அளவிற்குப் போய்விட்டது. அந்த வேதனையை அனுபவிப்பவர்கள்தான் உணர முடியும் என்றார்.

பொதுவான சிலர் கூறுகையில், பள்ளி அரசுத் தொடக்கப் பள்ளி என்று இருந்தாலே இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்காது. சாமியின் பெயரைச் சூட்டியிருப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக அரசுப் பள்ளிகள் என்றாலும் அதை நிர்வகிப்பது ஊர்மக்கள்தான். அவர்களால்தான் அதை உயர்த்தவும் வளர்த்தெடுக்கவும் முடியும்.

தமிழ் ஓவியா said...

அதில் பிரச்சினை வந்துவிட்டால் பாழ்படுவது கல்வியும் பாதிக்கப்படுவது கல்விக்கு ஏங்கும் ஏழைக்குழந்தைகளும்தான். பணக்காரர்கள் எவ்வளவு செலவு செய்தேனும் படிக்கவைத்து விடுவார்கள். ஆனால் ஏழைகள் என்ன செய்வார்கள்? ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த நிலையை மாற்றவே சில நூறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இப்போது கல்வி கிடைத்தும், இதுபோல் பக்தி, தனிமனித சுயலாபம் போன்றவற்றால் கல்வி கிடைக்கவில்லை என்றால் மறுபடியும் கற்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் போய்விட நேரும் என்றார்கள்.
இதற்குப் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்ற நிலையில் மேலும் தீவிரமாக விசாரித்தபோது கிடைத்த உண்மை அதிர்ச்சியாக அதேநேரத்தில் நமக்குப் பழக்கப்பட்டுப்போன ஒன்றாக இருந்தது. (இதை நினைவுபடுத்தக் காரணமாக இருப்பது தந்தை பெரியாரின் வாசகங்களும் அவரது பார்ப்பனீயம் குறித்த கருத்துகளும்தான். எந்த ஒரு இடத்திலும் தமிழனை ஒன்றாக இருக்கவிட மாட்டான் பார்ப்பான் என்பது அனுபவம்.) அதனால் வெவ்வேறு ஜாதிகள் இருக்குமிடத்திலும் ஜாதிகளுக்கிடையே வரும் கலவரங்களுக்குப் பின்னணியிலும் பார்ப்பான்தான் இருப்பான். இங்கு உயர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் மறவர் ஜாதிக்குள்ளும் இருதரப்பு மோதிக்கொண்டு அரிவாள் எடுத்துக் கொண்டு இளைஞர்கள் நிற்கிறார்கள் என்றால் ஏதோ இருக்கும் என்பதால் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று.

குலமங்கலத்தில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தொடக்கப் பள்ளியில் 2008-ஆம் ஆண்டு தலைமையாசிரியர் பதவி காலியாகி இருக்கிறது. அந்தப் பணிக்கு அய்ந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர் வேண்டும் என்று நிர்வாகத்தின் சார்பில் கோரப்பட்டிருக்கிறது. அந்தப் பணிக்கு மலையக்கோவில் குருக்களான சுப்பிரமணியக் குருக்களின் மகள் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் டீச்சர் டிரெய்னிங் மட்டும் முடித்திருக்கிறார். அதனால் நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்டது.
பணியை எப்படியும் பெற நினைத்த சுப்பிரமணியக் குருக்கள் ஊருக்குள் இருந்து இப்போது கோவில் கும்பாபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கும் நபர்களிடம் சென்று இந்தப் பணிக்கு ரூபாய் மூன்று லட்சம் தருகிறேன். அந்த நிதியைக் கோவிலுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ரேட் பேசியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

அதை முன்னின்று பேசியவர் அந்த ஊரின் அம்பலம் சுப்பிரமணியன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் பள்ளி நிர்வாகத்தினரை நெருக்கி, பள்ளி நிர்வாகம் ஊரில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்கள். அந்த ஆசிரியை தலைமையாசிரியராகத் தகுதி இல்லாதவர் என்று சொன்னதால் இருபக்கமும் ஊதிப் பெரிதுபடுத்தி விட்டதும் பார்ப்பனீயம்தான். கோவில் கட்டியதிலும் கும்பாபிஷேகம் செய்ததிலும் வருமானம் பார்ப்பனீயத்துக்குத்தான். கல்வியை இழந்ததும் கல்விக்காக அதிக செலவு செய்ய வேண்டி வந்ததும் இப்போது பகைமையை வளர்த்துக் கொண்டு இருதரப்பாக மோதிக் கொள்வதிலும் மற்ற இனத்தவருக்குத்தான் துன்பங்கள் நேர்ந்திருக்கிறது. இந்தத் துன்பங்களை எப்போது தமிழர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? இதோடு மேலும் ஒரு சம்பவம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாங்காடு என்றொரு கிராமம். மா, பலா, வாழை என்று முக்கனிகளும் விளையும் நல்ல மண்வளம் மிக்க பூமி. மிளகு, காப்பி, கோகோ உட்பட மலைப்பயிர்களும் விளைகிறது என்றால் மண்வளத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நல்ல விளைச்சல் இருந்தால் நாலு பணம் கையில் புழங்கத்தானே செய்யும். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் நிறையப்பேர் வெளிநாடுகளிலும் உழைத்து அந்நியச் செலாவணியை ஈட்டிவருகிறார்கள்.

அத்தனையும் மக்களின் உழைப்பு என்றாலும் அதைத் தின்று கொழுக்க நினைத்த பார்ப்பனீயம் உழைக்க நினைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. தனது ஏமாற்றுத்தனத்தின் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மாங்காட்டில் உள்ள கோவில் குளத்தில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது என்றொரு புரளியைக் கிளப்பிவிட்டதன் மூலம் அந்தத் தண்ணீரைப் பிடித்துச் செல்ல பிளாஸ்டிக் பாட்டில்களுடன் நூறு கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்தெல்லாம் தமிழன் வந்து சேர்ந்தான். அன்று முதல் சாதாரண மாரியம்மனாக இருந்த கோவில் நீரூற்று மாரியம்மன் ஆகிப்போனது.
அக்கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கும் செய்யப்பட்டது. புதிய தேர் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாரியம்மன்கோவில் சாதாரண மாரியம்மனா நீரூற்று மாரியம்மனா என்று இன்றளவும் ஊருக்குள் பட்டிமன்றம் நடத்தி தீர்வு காணப்படாமல் இருக்கிறது. ஆனால் பார்ப்பனீயம் என்ன செய்கிறது தெரியுமா? மாரியம்மன் கோவில் கட்டுவதற்கு யாரெல்லாம் கலந்து கொள்ளவில்லையோ, சாதாரண மாரியம்மன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களோ அவர்களைப் பிடித்து, அவர்களை முன்னிறுத்தி பல லட்ச ரூபாய் வசூலும் செய்து அந்த ஊரில் பாழடைந்து போய்க் கிடந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்கச் செய்து சமீபத்தில் குடமுழுக்கும் நடத்திவிட்டது. இரு கோவில்களுக்குமே செலவு செய்ததும் உழைத்ததும் பாடுபட்டதும் அலைந்ததும் நம் உழைக்கும் மக்கள். ஆனால், அக்கோவிலால் வருமானம் என்னவோ மாங்காடு கிராமத்தில் இருக்கும் ஒரே குடும்பத்து அண்ணன் தம்பிகள் ஆன பார்ப்பனர் இருவருக்கும்தான். புரிய வேண்டிய மக்களுக்குப் புரிய வேண்டுமே!

_ புதுக்கோட்டையிலிருந்து ம.மு.கண்ணன்

தமிழ் ஓவியா said...

இராமநவமி உண்டானதும் கண்ணன் கடவுளானதும் எப்படி?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் பணியாற்றியவர் பேராசிரியர் அ.அ.மணவாளன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரஸ்வதி சம்மான் விருது, மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருதுடன் 2012ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். அண்மையில் அவரது நேர்காணலில் தெரிவித்திருந்த ஆய்வுக் கருத்து இது


வேறுவேறு இராமாயணப் பிரதிகளுக்கிடையே கொடுக்கல் _ வாங்கல் எப்படி நடந்துள்ளது என்பதைப் பற்றிப் படிப்பதுதான் எனது முக்கிய கவனமாக இருந்தது. ஒப்பியல் குறித்த எனது ஆய்வுமுறையில் நான் கவனம் செலுத்தினேன். ஒப்பியல் ஆய்வு நெறிமுறையில் விவாதிக்கப்படும் தாக்கம் என்பதைக் கடந்து, எதிர்த்தாக்கம் என்ற ஒன்று நடந்திருப்பதைத்தான் இராமாயணம் குறித்த எனது ஆய்வில் நான் கண்டறிந்தேன்.

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இராமாயணம் பற்றிய ஆய்வு குறித்துப் பேச அழைத்திருந்தார்கள்.

கூட்டத்திற்கு யார் தலைமைதாங்கப் போகிறார் எனக் கேட்டேன். அதற்கு 17 மொழித் துறைகள் இணைந்து நடத்துகிறபடியால், டெல்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்தான் தலைமை தாங்குவார் என்றார் அமைப்பாளர். துணைவேந்தர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று கேட்டதற்கு சமூகவியல் என்றார். அப்போது நான் யாராவது சமஸ்கிருதத் துறையைச் சார்ந்தவர் இருந்தால் பரவாயில்லை. ஏனென்றால், என்னுடைய உரை தமிழ், சமஸ்கிருதத் தரவுகளைக் கொண்டு இரு மொழிகளையும் கலந்ததாக இருக்கும் என்றேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சத்யவிராத் சாஸ்திரியின் தலைமையில் எனது உரையை ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது உரையின் இடையில் இராமநவமி பற்றிப் பேசும்போது இராமநவமி என்று கொண்டாடுகிறார்களே, அது யார் சொன்னது எனக் கேட்டேன். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது பற்றிய குறிப்பை வைத்து இராமநவமியைக் கொண்டாடுவதாகக் கூறினார்கள். வால்மீகி எங்க சொல்லி இருக்கிறார் எனக் கேட்டதற்கு அங்கிருந்த சமஸ்கிருதப் புலமை வாய்ந்த ஒரு அம்மையார் எழுந்து கடகடவென்று 6 சுலோகங்களைச் சொன்னார்கள். இந்த சுலோகங்கள் எங்க வருது? என்று கேட்டேன். வால்மீகி இராமாயணத்துலதான் என்றார்கள். எந்த வால்மீகி இராமாயணம்? எனக் கேட்டேன். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் புலவழக்குகள் எனப் பல புலவழக்குகள் உள்ளதென்று கூறி, நீங்க சொன்ன சுலோகங்கள் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில்தான் இருக்கு என்றேன். ஆமாம் என்றார்கள். இந்திய மொழிகளில் உள்ள இராமாயணங்களைச் சேகரித்து, அவற்றில் முழுமையாக உள்ள 3,500 பிரதிகளை மட்டும் வைத்து அவற்றில் பொதுவாக உள்ளவற்றை எடுத்து ஒரு பதிப்புத் தயார் செய்யப்பட்டது. அதில் பாலகாண்டத்தில் தசரதனின் குழந்தைகள் பிறப்புப் பற்றியும் அவர்களின் ஜாதகம் பற்றியும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதை வைத்து எங்கெங்கு, எந்தெந்தப் பகுதிகள் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வில் இராமன் பிறப்பு, நட்சத்திரம் குறித்த செய்தி கம்ப ராமாயணத்தில் இருந்துதான் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள்.

@

தமிழ் ஓவியா said...


ஆய்வாளர்
பேரா. அ.அ.மணவாளன்

கும்பகோணத்தில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் மூலமாகத்தான் நடந்திருக்கு. கம்பராமாயணத்தில் உள்ள பகுதியை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறார்கள். இதை ஆய்வாளர்கள் இடைச்செருகல்தான் என எப்படி நிறுவுகிறார்கள் என்றால், வால்மீகி எழுதிய சமஸ்கிருத மொழியிலான இராமாயணம் வாய்மொழி மரபில் நிலவவில்லை என்பதன் மூலம்தான். பொதுவாக இதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இதை மறுப்பதின் மூலம் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். சென்னையில் இதனை மறுத்துக் கூறியவர்களிடையே நான் பேசும்போது சமஸ்கிருத மொழியானது எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்பது ஆராய்ந்து கண்டு கொள்ளப்பட்டது என்று சென்னை மைலாப்பூரிலிருந்து வெளிவந்த லிணீஷ் யிஷீக்ஷீஸீணீறீ இதழிலிருந்து ஒரு மேற்கோளாகக் குறிப்பிட்டேன். யார் இதைச் சொன்னது? எனக் கேட்டார்கள். காஞ்சி மடப் பெரியவரான சந்திரசேகர சுவாமிகள் என்றதும் எல்லோரும் அமைதி ஆனார்கள். கண்ணன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் உள்ளது. கிருஷ்ணன் என்கிற பெயர் கருப்பு நிறத்தைக் குறிப்பதாக உள்ளது. கண்ணனைக் கடவுளாக்கியது தமிழ்நாட்டுக்காரர்கள்தான். வடபுல பாரதத்தில் சாதாரண சிற்றரசனாகக் காட்டப்பட்ட கண்ணனை நாங்கள் எல்லாம் கோவில் கட்டி வழிபடும் கடவுளாக்கியவர்கள் தமிழர்களே என்று வடநாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகளை மேற்கொண்டு ஆய்வு செய்வதால் கண்ணன் வழிபாட்டின் தோற்றம் பற்றிய வேறு பல பயனுள்ள செய்திகளைப் பெறலாம். இராமாயணத்திற்கு முன்னரே மகாபாரதம் தமிழுக்கு வந்துள்ளது. பல்லவர் காலச் சிற்பங்களில் இவற்றின் அம்சங்களைக் காணமுடிகிறது. இதுகுறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

நன்றி: ஜூலை 2013, உங்கள் நூலகம்.

தமிழ் ஓவியா said...




உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர்.

ஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் படிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் ஓவியா said...



கருத்து

மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது. ஆனால் உலக அளவில் அதைப் பார்க்க முடிவதில்லை. ஜாதி என்னும் குறுகிய வட்டாரத்திலிருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும்.

- எஸ்.தமிழ்வாணன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

கால அவகாசம் அளிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கிடப்பில் போடும் எண்ணத்தில் சில அதிகாரிகள் இருக்கின்றனர். மக்களை அங்கும் இங்கும் அலைய வைக்கும் மனம் படைத்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர். மக்களின் எஜமானர்கள் என்று நினைத்துச் செயல்படுகின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களின் ஊழியர் என்பதை மறந்துவிட்டனர். தற்போதைய ஆட்சி முறையின்படி மக்கள்தான் எஜமானர்கள்.

- கே.கே.சசீதரன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்களாவது தங்களின் மேலதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பாலியல் தொந்தரவு என்பதை படுக்கைக்கு அழைத்தார் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அருவருப்பாக திட்டுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களும் பாலியல் வன்முறையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் புகார் தெரிவித்த பெண்கள் தயங்கித் தயங்கி பூடகமாகத்தான் சொன்னார்கள்.

குடும்பச் சூழலும் சமூகமும்தான் தனக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை வெளிப்படையாக _ புகாராக சொல்ல பெண்களைத் தடுக்கிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவில்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்து பாலியல் தொந்தரவுகளைச் செய்யும் நபர்களை அதிரடியாக ட்ரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

- திலகவதி இகாப,
தமிழகக் காவல்துறை மேனாள் தலைவர்

தமிழ் ஓவியா said...

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?


நீயும் நானும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தால் - நாம் பூசை செய்கிறாப்போல, தொட்டுக் கும்பிடுகிற மாதிரி ஏற்பட்டுவிட்டால், பார்ப்பான், கோவிலுக்குள் சாமி இல்லை; கல்தான் இருக்கிறது என்று அவனே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான்.

இன்றைக்கு பார்ப்பான், சூத்திரன் என்கின்ற பேதத்தைக் காட்டுவதற்கு கர்ப்பக்கிரகம் ஒன்னுதான் இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஒழிந்ததுபோல் இந்த இடத்தில் இருக்கிற பேதத்தையும் ஒழித்தாக வேண்டும். சாமி இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் அதைப்பற்றிக் கவலை மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்பதுதான். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த மதத்தைச் சார்ந்தவன் எதுவரையில் வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. இந்து மதம் ஒன்றில் மட்டும்தான் பார்ப்பானைத் தவிர மற்றவன் கர்ப்பக்கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற தடை இருக்கின்றது. இந்தத் தடைதான் நம்மைச் சூத்திரனாகவும் பார்ப்பானைப் பிராமணனாகவும் வைத்திருக்கின்றது.

(திருச்சியில் நடைபெற்ற தீபாவளிக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)

- (விடுதலை -16.11.1969)

தமிழ் ஓவியா said...

சோத்தபய ராஜபக்‌ஷே - துக்ளக்கின் துதிபாடும் பயணம் - 3


புலிகள் பெயரில் தொடரும் கைதுகள் நிம்மதியின்றி ஈழத்தமிழர்கள்

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

'அமைதிபுரி- _ ஒழிக்கப்பட்ட புலித் தீவிரவாதம் -வளர்ச்சித் திட்டம்' இவ்வாறே இருக்கிறது இலங்கையின் வடக்குப் பிரதேசம்.

இது துக்ளக்கர்களின் கூற்று.



மரணத்தின் நெடுஞ்சாலையான 'ஏ_-9' வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றனர் துக்ளக்கர்கள். ஆனால் அங்கிருந்த 'ஆனையிறவு' என்ற ராணுவத்தளமும் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களும் அதன் தொடர்ச்சியாய் இருக்கும் பல்வேறு ராணுவத் தலைமையகங்களும் கண்களிலேயே படவில்லை போன்றுள்ளது. ராணுவக் கண்களாய் ராணுவத்தின் தூதுவனாகச் சென்றவர்களுக்கு 'சாலையின் இரு மருங்கிலும் சிவப்புக் கலரில் மண்டையோடும், இரு எலும்புகளும் கொண்ட எச்சரிக்கைப் பலகைகள்' இருந்தது மட்டும் காண முடிந்ததாக குறிப்பிடுகின்றனர். அதுதான் கண்ணிவெடி நிலப்பகுதிகள். இந்தக் கண்ணிவெடி அகற்றல் பகுதிகளில் யாரையும் அனுமதிப்பதில்லை என்பது பாதுகாப்பு ரீதியாக இயல்பான செயல்பாடுதான். அதே போல் துக்ளக்கர்களும் அங்கு மகிழுந்தை நிறுத்திய போது தங்களை அங்கு அனுமதிக்கவில்லை என்கின்றனர். 'உயிரைப் பணயம் வைத்து நடக்கும் அந்த (கண்ணிவெடிகள் அகற்றுவது) வேலை சிரமமானது என்பதைப் பார்த்ததுமே தெரிந்து விடுகிறது' என்று குறிப்பிட்டுள்ள துக்ளக்குக்கு 'அங்கு பணயம் வைக்கப்படும் உயிர் _- தமிழர்களின் உயிர் என்று கூறிடக்கூட முடியாமல் அரசு விசுவாசம் தடுக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் இருக்கிற வேலைகளில் எல்லாம் சிங்களர்களுக்குப் பெரும்பான்மை உரிமை தருகிற இலங்கை அரசு, இவ்வேலையில் மட்டும் தமிழர்களுக்கு நூறு சதவீத பங்கீட்டைத் தந்துள்ளது என்பதே கண்ணி வெடிகள் அகற்றல் வேலைத்திட்டத்தின் வடிவம்.

'இலங்கையில் அமைதி திரும்பி, அபிவிருத்திப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. சாலைகள், அரசுக் கட்டிடங்கள், மின்சார நிலையங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு ஃப்ரெஷ்ஷாக காணப்பட்டன. ஆனாலும் அந்த அமைதிக்கு இடையே மெல்லியதாய் ஒலிக்கும் சோக இசை மாதிரி ஊருக்கு ஊர் நிற்கின்றன சிதிலமடைந்த பல வீடுகள். போரின் காரணமாக இடம் பெயர்ந்த யார் யாருக்கோ சொந்தமான வீடுகள், உரிமையாளர் திரும்பி வராததால் சிதிலமடைந்து, கூரை இழந்து, செடி வளர்ந்து பரிதாபமாக நிற்கின்றன.' இவ்வாறாக போரில் அழிவுண்ட சொத்துகள் மீது கவலை தெரிவித்துள்ள துக்ளக் , அடுத்த பத்தியிலேயே 'போர் முடிந்து திரும்பி வந்த பல குடும்பங்கள் தங்கள் வீடுகளைச் செப்பனிட போதிய பொருளாதார வசதியில்லாமல் தவித்ததால், இப்படி ஆளில்லாமல் கிடக்கும் வீடுகளில் இருந்த தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். சிலர் உரிமையாளர்களின் அனுமதி பெற்று எடுத்தார்கள். சிலர் அனுமதியில்லாமலே களவாடிக் கொண்டனர்' என்று போரில் தப்பித்து வந்த மக்களுக்குத் திருட்டுப் பட்டம் கட்டியுள்ளது. இதையும் அந்த மக்களேதான் சொன்னார்களாம். இதன்படி இவர்கள் சொல்ல வருவது சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்த வீடுகளில் எதுவுமே களவாடப்படவில்லை, இதையும் தமிழர்கள்தான் செய்தார்கள்.

வன்னி பிரதேசத்தில் நடந்த போரின் போது சிங்கள ராணுவத்தின் களவாடலுக்கும் சொத்து அழிப்புக்கும் போரில் சிக்குண்ட `எனது நண்பரின் சாட்சியிலிருந்து,' நான் கிளிநொச்சியைச் சேர்ந்தவன். யுத்தம் நடக்ற வேளை புலிகள் பின்வாங்க பின்வாங்க, நாங்களும் அவர்களோடே சென்றோம். கையில் கிடைக்கிறத எடுத்துக்கிட்டு நாங்களும் நகர்ந்தோம். நான் அய்யாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருந்தேன் அதில் இன்று ஒன்றுகூட என்னிடம் இல்லை. போர் முடிந்து எங்கட ஊருக்குள் நாங்க அனுமதிக்கப்பட்ட அப்ப எல்லாம் எரிஞ்சு சாம்பலாதான் இருந்துச்சி. வீட்டுக்குள்ள எல்லாமே உடைக்கப்பட்டு இருந்திச்சி' என்றார்.

இவர் சொல்வதும் பொய்யாகவே இருக்கட்டும். துக்ளக்கர்களே உங்கள் கருத்துப்படி, 'வீட்டைச் செப்பனிடத்தான் மக்கள் பொருட்களைத் திருடினார்கள். அப்படியென்றால் புத்தகங் களையும் அவர்களின் உடைமைகளையும் யார் களவாடியது. இதற்கும் புலிகளே காரணம் என்று சொல்லப் போகிறீர்களா?

தமிழ் ஓவியா said...

சிங்கள ராணுவத்தின் மனிதப் படுகொலைகளைக் கண்டு மனித மனங்கள் வெட்கித் தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறது. ஆனால் அந்த ரத்த வெறியர்களை 'புத்தர்கள்' என்று நியாயம் பேசுகிறது துக்ளக்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்தார்களாம் துக்ளக் நியாயவான்கள். அவர், ராஜபக்க்ஷே எந்த அளவு குற்றவாளியோ, அதே அளவு குற்றவாளிதான் புலிகள் தலைவர் பிரபாகரனும். கடும் போரின் போதும் வன்னிப்பகுதித் தமிழர்களை வெளியே விடாமல், தனக்கு அரணாக வைத்துக் கொண்டு பல தமிழ்க் குடும்பங்களை அழித்தொழித்தார். தமிழர்களை அழித்ததில் பிரபாகரனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே பங்கு டி.என்.ஏ.க்கும் இருக்கிறது. பல கட்டங்களில் தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ராஜபக்க்ஷேகூட ஒரு கட்டத்தில் இந்திய மாடல் மாகாணசபைத் தீர்வுக்கு ஒத்து வந்தார். ஆனால், புலிகள் அழிவை மட்டுமே தேர்வு செய்தனர். கடைசிக் கட்டத்தில் கூட ராஜபக்க்ஷே தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசினார். ஏறக்குறைய 65 ஆயிரம் தமிழர்கள் ராணுவத்திடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டனர். இன்னும் சுமார் 20 ஆயிரம் மக்கள்தான் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று எங்களிடம் குறிப்பிட்டார் ராஜபக்க்ஷே. ஆனால், நான் அதை மறுத்தேன்.

இன்னும் 3 லட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தேன். ராஜபக்க்ஷே என் மீது கோபப்பட்டார். பொய் சொல்லாதீர்கள் என்றார். ஆனால், நான் ஆணித்தரமாக அடித்துச் சொன்னேன். அதன் பிறகு அவர் கொஞ்சம் நம்பினார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அனுப்பும் உணவுகளைக் கூடுதலாக அனுப்பச் சொன்னார். (போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு அனுப்பப்பட்டுள்ளது.) அதோடு, மீண்டும் பல நோ ஃபயரிங் ஜோன்களை உருவாக்கி, மக்கள் வெளியே வந்து ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்டில் தஞ்சம் புகலாம் என்று ராஜபக்க்ஷே அறிவித்தார். முதல் நாளே உள்ளிருந்து 85 ஆயிரம் பேர் ரிஸீவிங் பாயின்ட்டுக்கு வந்து சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளியே வந்துவிட்டனர். அதன் பிறகுதான் போர் மேலும் தீவிரமடைந்து முடிவுக்கு வந்தது'' என்றாராம்.

தமிழ் ஓவியா said...

ஆனந்த சங்கரி எவ்வளவு பெரிய புரட்டின் மன்னர் என்பதை அறிய 'போரின் போது ராணுவத்தால் மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது' என்ற கருத்தைச் சற்று யோசித்தாலே போதும். "போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு அனுப்பப்பட்டுள்ளது" என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது துக்ளக். அப்படியென்றால் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அய்.நா.வின் அறிக்கையில் உணவின்றியும் மருந்தின்றியும் மக்கள் மாண்டு போனார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே, அதை எந்தக் கணக்கில் சேர்க்கச் சொல்கிறார் ஆனந்த சங்கரி. தண்ணீரை பிளாஸ்டிக் படகுகளில் ஊற்றிக் குடிக்கச் சொன்னபோது அதைக் குடிக்க முட்டி மோதி பசியாலேயே செத்தார்களே, அதை எதில் சேர்ப்பது? மக்கள் சோற்றுக்கு வழியற்றவர்களாகக் கிடந்தார்கள் என்பதை அவர்கள் புகைப்படம் உங்கள் மனதுக்குத் துளியும் உணர்த்தவில்லையா? ராணுவக் கட்டுப்பாட்டில் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்களே? அதற்கும் நீங்கள் சொன்னபடிதான் ராஜபக்க்ஷே உத்தரவிட்டாரா? இன்று கிளிநொச்சியில் அறை போட்டு உட்கார்ந்து உள்ளார்களே ... நீங்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்தால் மக்களோடு மக்களாகச் சென்றிருக்கலாமே, தமிழர்கள் கொத்துக் கொத்தாக முள்ளிவாய்க்காலின் சிறு நிலப்பரப்புக்குள் கொல்லப்பட்டபோது மக்களைக் காப்பாற்றப் பேசுகிறேன் என ராஜபக்க்ஷேவின் குளு குளு பாதுகாப்பு அரண்களில் நீங்களும் உங்கள் குடும்பமும் பெருத்த பாதுகாப்போடு தானே அண்டிப் பிழைத்தீர்கள்?

மே 18க்குப் பிறகு ஆயிரக்கணக்கான பேருந்துகளில் தப்பிய மக்களும் எஞ்சிய புலிகளும் ஏற்றப்பட்ட பின்புதான் ஓமந்தையை நோக்கிச் செல்லும் போது உணவு வழங்கப்பட்டது என்று உங்களுக்கு ராஜபக்க்ஷே சகோதரர்கள் சொல்லவில்லையோ? ராஜபக்க்ஷே ஜால்ரா கூட்டணிக் கும்பலைச் சந்தித்த துக்ளக்கர்கள் ராஜபக்க்ஷே சகோதரர்களிடம் ஒரு பேட்டி எடுத்து வந்திருந்தால் சோ'த்தபய ராம'பக்க்ஷே பிறவிப் பலனை அடைந்திருப்பார்.

அமைதிபுரியாக இருக்கிறது இலங்கை. ஆனால், தமிழர்கள் வாழும் வட-கிழக்குப் பிரதேசத்தில் பாதுகாப்புக்காக சிங்கள ராணுவத்தின் நான்கு லட்சம் பேர் குடிகொண்டு உள்ளனர். புலித் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் புலிகள் என்ற பெயரில் கைதுகள் நடக்கின்றன, தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, இலங்கையின் நான்காவது சுதந்திர விழா கொண்டாடப்பட்ட பிறகும் 1972இல் தற்காலிகமாகப் போடப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் 40 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நிரந்தரமாக நடைமுறையில் இருக்கிறது.

போர் பாதித்த பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் படுவேகமாக நடக்கிறது. ஆனால், தமிழர்கள் ஒட்டிய வயிறோடு வாழ வழியின்றி ஏக்கத்தோடு கையேந்தி நிற்கின்றனர்.

'மயான அமைதி- _ சிங்கள ராணுவக் குடியேற்றம் _- வளர்ச்சித் திட்டப் பெயரில் சிங்கள ஆக்கிரமிப்பு' இதுவே துக்ளக் தெரிந்தும் _ தெரிந்தே விட்டுவிட்ட 'இலங்கையின் வடக்குப் பிரதேசம்'

- உண்மைகள் கசக்கும்..

தமிழ் ஓவியா said...

ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்!


மின்னஞ்சல் தமிழர் சிவா சுளீர்!

- வெளிச்சம்

உலகில் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்கள் தமிழர்கள். ஆனால், முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் பலவற்றை இழந்து இருக்கிறோம். இந்த இழப்புகளை இனி இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் வியக்க ஒரு தமிழர் உயர்ந்து நிற்கிறார்.



அவர் பெயர் சிவா அய்யாதுரை. இராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாழும் தமிழரான, சிவா அய்யாதுரை தொலைத் தொடர்புத் துறையில் உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் மின்னஞ்சலை(email)க் கண்டுபிடித்தவர் என்று அறியும் பொழுது தமிழராய் பெருமிதம் கொள்ளத் தோன்றுகிறது. ஜூலை 22 அன்று சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திரு. சிவா அவர்கள் பேசும்பொழுது பல அரிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மகிழும் அளவுக்கு அந்தக் கருத்துகள் அமைந்திருந்தன. ``மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ்ஞானிகள் என்றால் வெள்ளைத் தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது என்றவர், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை விவரித்தார்.

ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு சென்னையிலிருந்து வரும் ஆங்கில நாளிதழின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும், சிவா அய்யாதுரைப் பற்றிய செய்தி தம் நாளிதழில் வராமல் பார்த்துக் கொண்டாராம்.

சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழ் மும்பையினைச் சேர்ந்த இந்தியர் என்று வெளியிட்டு பூணூலால் தன் முதுகைச் சொறிந்து கொண்டது. (சிவா சில காலம் மும்பையில் வாழ்ந்தவர்.)

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து, ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதுதான் முன்னேற்றம் காண முடியும். தமிழர்களின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார் சிவா அய்யாதுரை. மேலும், இன்றைய கல்வி முறை மாற வேண்டும். -மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவது, அடிமையாய் வேலை செய்யும் ரோபோ இயந்திரங்களாகத்தான் உருவாக்க முடியும். இப்பொழுதுள்ள கல்வி முறை, ஆதிக்க ஜாதிகள், தங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவே உதவுகிறது. தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் வளர களம் அமைக்க வேண்டும். மரபுகளை உடைத்தால்தான் புத்தாக்கத்தினைப் படைக்க முடியும். சுய சிந்தையினை உருவாக்கும் பெற்றோர், ஊக்குவிக்கும் வழிகாட்டி, நல்ல கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலை இவைகள் இருந்தால் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் திரு. சிவா.

எந்த ஆராய்ச்சியின் முடிவும் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்தைப்படுத்த முடியும், பொருள் ஈட்ட முடியும் என்று கூறியவர், உலகில் இன்றைக்கு 180 கோடி மக்களுக்கு வேலை தர வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உலக அமைதிக்குப் பெருங்கேடாய் முடியும் என்று எச்சரித்தார். ஆதிக்க ஜாதியினர் தம் பிடியினைத் தளர்த்தி அனைவரையும் உள்சேர்த்து ஒருங்கிணைந்த சமுதாயம் அமையத் தழைப்பட்டால் மட்டுமே அமைதிக்கு வழிகோலும். இல்லையென்றால் எகிப்து நாட்டில் உண்டான புரட்சியினைப் போல இந்தியாவிலும் உண்டாகும் என்கிறார் சிவா.

தொடர்ந்து 45 நிமிடங்கள் உரையாற்றிய பின், பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் விடையளித்தார். பதினான்கு வயதிலேயே மின்அஞ்சல் என்கிற சேவையைக் கண்டுபிடித்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய சிவா அய்யாதுரை தமிழர் என்பதில் மட்டும் நமக்குப் பெருமையல்ல. உச்சிக்குச் சென்றவுடன் பார்ப்பன அடிவருடியாக மாறிவிடும் தமிழர்களிடையே சிவா அவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்தான்.

ஊரெங்கும், வீதியெங்கும் தமிழர்கள் இவரைச் சுமந்து சென்று இவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும் - அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல சிவா அய்யாதுரைக்கள் உருவாக வேண்டும். அப்போது அய்யா பெரியார் கண்ட கனவு நனவாகும்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


நிலத்துக்கு அடியில் உள்ள கனிமங்கள் நில உரிமையாளருக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புற்றுநோய் பாதித்த திசுக்களை மூன்றே நிமிடத்தில் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அய்நைப் என்ற கருவியினை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விவாகரத்தின்போது கணவரின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

அய்ரோப்பிய நாடான பெல்ஜியத்தின் புதிய மன்னராக பிலிப் ஜூலை 21 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெருவிளக்குகளை நெதர்லாந்து நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷாசி கண்டு பிடித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...



நாத்திக அறிவியலாளர் கார்ல் சாகன் - நீட்சே



கார்ல் எட்வர்டு சாகன் (1934-_1996) ஒரு அமெரிக்க வானவியலாளர். வானவியல் இயற்பியலாளர், நூல் ஆசிரியர், அறிவியல் பரப்புநர்; வானவியல் மற்றும் இயற்கை அறிவியல் செய்திகள் அறிவிப்பாளர்.

அறிவியல் ஆய்வுப் பகுப்பையும்(?) அறிவியல் முறைகளையும் வெளிநிலை உயிரியல் ஆய்வு முன்னோடியாகவும், வெளிக்கோள் உயிரின அறிவைத் தேடுபவராகவும் இருந்துள்ளார். சாகன் அவரது வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்களாலும் அண்டவெளி (Cosmos) என்று 1980களில் வந்த தொலைக்காட்சித் தொடராலும் தனிப்பட்ட பயணம் (Personal Voyage) என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தொடர்பு (Contact) என்ற புதினத்தின் ஆசிரியராகவும் நன்கு அறியப்பட்டுள்ளார். (இந்த நாவல் 1997இல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது).

கார்ல் சாகன் நியூயார்க்கில் உள்ள ப்ருக்ளினில் பிறந்தார். அவரது தந்தை சாமுவேல் சாகன் (இன்றைய உக்ரேன்) ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு ஆடைஅகப் பணியாளர். அவரது தாய் ராட்சேல் மோலி க்ரூபர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. தனது சிந்தனை ஊக்கத்திற்கு குடும்பத்தின் தாக்கமே காரணம் என்று சாகன் கூறியுள்ளார்.

அவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்; அதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அறிவியல் முறைக்கு நடுமையான இரண்டு முரண்பட்ட கருத்துகளை ஒன்றுபடுத்திச் சமன் செய்யும் வழிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

நியூஜெர்சி ரஹ்வே உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ரயர்சன் வானவெளி இயல் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1954இல் இளங்கலை அறிவியல் பட்டமும், 1955இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960இல் வானவியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

சாகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் 1968 வரை பணியாற்றியுள்ளார். பிறகு நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1971 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கே 1972 முதல் 1981 வரை அவர் கோள்கள்பற்றிய ஆய்வுச் சாலையை அமைத்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் சாகன் ரேடியோ இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யத்தின் கூட்டு டைரக்டராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

விண்வெளித் திட்டப் பணிகளில் ஆரம்ப முதலே சாகன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அவர் நாசாவின் ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். நிலவிற்குப் போவதற்கு முன்பு அப்பல்லோ விண்வெளி வீரர்களுக்கு விளக்க உரை கொடுப்பதும், அவருக்கு அங்குள்ள பணிகளில் ஒன்று. சூரிய அமைப்பு முறையை ஆய்வு செய்வதற்கான ரோபோக்கள் செயல்படும் விண்கலத்தின் பயணங்களுக்காகவும் சாகன் கருத்துதவி புரிந்துள்ளார். அதற்காகப் பல பயணங்களின்போது பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். சூரிய அமைப்பை விட்டுப் புறப்படும் விண்கலம், மாற்ற முடியாத ஒரு உலகப் பொதுவான செய்தியை அங்கேயே விட்டுவரும் ஒரு கருத்தை உருவாக்கிய அவர், அதன்மூலம் வெளிக்கோள் உயிர்கள் அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடும் என்று கருதினார்.

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்

Print
Email

மனிதம் தழைக்க!

கரம் கொடுப்போம்
அறம் செய்ய!
மரம் நடுவோம்
மழை பொழிய!
குறை தவிர்ப்போம்
உறவுகள் வளர!
தோள் கொடுப்போம்
பணி முடிக்க!
போர் தொடுப்போம்
பகை வெல்ல!
இணை தேடுவோம்
இல்லறம் சிறக்க!
விலை கொடுப்போம்
விடுதலை அடைய!
தொண்டறம் செய்வோம்
மனிதம் தழைக்க!

- சீர்காழி கு.நா.இராமண்ணா




ஒரு நாள் வரும் ஒளி

கைத்தடியால் தட்டித்தட்டி
நடந்து வந்த பார்வையற்ற ஒருவன்
பக்தர்களின் ஆரவாரம்
காதில் கேட்டு நின்றான்.
இல்லாத கடவுளை எண்ணி எண்ணி
கருத்துக் குருடராய் காலம் தள்ளுகிறார்
என்று சொல்லிச் சென்றான்! அடடா!
ஒளியற்றவன் விழித்திருக்கிறான்!

- மலர்மன்னன், முசிறி




முரண்பாடு

குடும்ப ஒற்றுமைக்காக
வணங்குகிறான்
ஒற்றுமையில்லா
கடவுளை
பக்தன்

- ப.நாகராஜன், மாராச்சேரி




மாற்றம்

நேற்று
குப்பைக்குப் போன
மாட்டுச்சாணி!
இன்று
பூஜை அறைக்கு
வந்தது பிள்ளையாராய்!

-த. செண்பகம், அய்யம்பாளையம்




கலவர தினம்

இந்துவும் முசுலீமும்
இணைந்து கொண்டாடினர்
மதக் கலவர தினமாய்
விநாயகர் சதுர்த்தி
-_த. செண்பகம், அய்யம்பாளையம்




ஏழுமலையான் நிலை

தன் சன்னதியில்
திரும்பும் இடமெல்லாம்
உண்டியல் வைத்து
கையேந்தி நிற்கிறது!
உலகின்
பணக்கார தெய்வம்
திருப்பதி ஏழுமலையான்!

- த. செண்பகம், அய்யம்பாளையம்




ரதயாத்திரை

கிறித்தவன் கண்டுபிடித்த வாகனம்!
அரபு நாட்டு முசுலீம் தந்த பெட்ரோலில் ஓடியது
இந்து மதவாதியின்
ரத யாத்திரை!

- த.செண்பகம், அய்யம்பாளையம்


தப்புத் தாளம்

கடவுள் ஏன்
கல்லானான்?
கேள்வியே
தப்புன்னே..
கல்தான்
கடவுளாச்சு!

- சிவகாசி மணியம்



முரண்

அம்மன் கோவில்
ஒலிபெருக்கியில்...
தாயிற் சிறந்த
கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!

-_ த.செண்பகம், அய்யம்பாளையம்



காசா? கடவுளா?

காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!
கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது
(பிச்சையெடுத்தல்)
காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்
காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்

_மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்

தமிழ் ஓவியா said...

மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது


மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை (NEET- National Eligibility - Cum Entrance Test)அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு- நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது (மூன்று நீதிபதிகளில் பெரும்பான்மைத் தீர்ப்பு)

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு (27.9.2012) அறிக்கை ஒன்றை விரிவாக வெளியிட்டுள்ளோம்.

இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு சட்டப்படியே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்தியப் போர்வையில் மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஒன்றைத் திணிப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும்.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற அத்துமீறலால், இதுபோன்ற மாநில அரசின் கொள்கை முடிவுகளில் பெரியண்ணனாக மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு 15 சதவீத இடங்களை எடுத்துச் சென்று விட்டது. மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 சதவீத இடங்களைக் கொண்டு சென்றுள்ளது.

இதில் என்ன கொடுமை என்றால், இப்படி மத்திய தொகுப்புக்குக் கொண்டு செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேயில்லை.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்கிற சட்டப்படியான நிலைமையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

இந்த நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனும் தன்மையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ன செய்தது தெரியுமா?

மாநிலங்களிலிருந்து 15 சதவீத இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்றதை மாற்றி, நூறு சதவீத இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, புதிதாக அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்தித் (NEET) தேர்வு செய்கிறதாம்.

இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்துவதால் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமை இருக்காது என்று நாக்கில் தேன் தடவுவது போல காரணம் சொல்லுகிறார்கள்.

அதாவது உண்மையா? இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான நுழைவுத் தேர்வு அன்று இது.

டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த நுழைவுத் தேர்வு செல்லுபடியாகாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால் தனித்தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுதிட வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி, இன்றைய ஆட்சியிலும் சரி நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

மற்ற பல மாநிலங்களும் இதை எதிர்த்து, தங்கள் உரிமையும் பறி போகின்றன என்று வாதாடினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு இப்பொழுது மேற்கொள்ளவிருக்கும் மேல் முறையீட்டை எதிர்த்து தன்னையும் ஒருவாதியாக இணைத்துக் கொண்டு, (Implead) தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூக நீதியைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆந்திர மாநில அரசும், காஷ்மீர் மாநில அரசும் - அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் இடங்கள் எங்களுக்குத் தேவையில்லை; -எங்கள் மாநிலத்திலிருந்து இடங்களையும் மத்திய அரசுக்கு அளிக்கத் தயாராக இல்லை என்று கறாராக முடிவு செய்து அறிவித்தனர். இம்முறையைப் பின்பற்றி நம் மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இழப்பிலிருந்தும் தப்புவதற்கும் வழி இருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்றாமல் இடங்களை விலை பேசி விடுகிறார்கள். இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு (Neet) அதனைத் தடுத்து விடுகிறது என்று கூடுதலாக தங்கள் முடிவுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார்கள்.

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாக அழுத்தம் கொடுத்து, தவறு செய்வதற்கு இடம் கொடுக்காத ஒரு வழி முறையை (Fool Proof) உண்டாக்கினால் அந்தத் தவறினைத் தவிர்க்கச் செய்ய முடியுமே! நீட் நுழைவுத் தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் அமைந்துள்ளதாகும். வேறு கல்வி முறையில்தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களைப் பாதிக்கச் செய்யும் ஒரு தேர்வு முறை, சரியானது தானா? பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட கல்வி முறையில் பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்வு முறையைப் புகுத்தலாமா?

இன்னொன்று, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களும் அந்தந்த மாநிலத்தில் படிக்கவே விரும்புவார்கள். அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய தேர்வு முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். பெண்கள் வெளி மாநிலத்தில் சென்று படிப்பது இன்றைய சூழலில் கடினமே! அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி போன்றவர்கள்கூட அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்துள்ளனரே!

மருத்துவக் கல்வியில் நுழைய மத்திய அரசு என்னும் ஒட்டகத்தை அனுமதித்தால் எல்லாத் துறைகளிலும் புகுந்து மாநில அரசே என்ற ஒன்று இல்லாமல் எலும்புக் கூடாக ஆக்கக்கூடிய அபாயம் ஏற்படும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ்நாடு முதல் அமைச்சர் இதில் முக்கிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய ஆபத்தினைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.
சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, மத்திய அரசின் முடிவைக் கைவிடச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பணி நியமனத்தில் (FACULTY) இடஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. சமூக நீதியில் அடுத்தடுத்துப் பல இடர்ப்பாடுகள் திணிக்கப்பட்டு வருகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

வெடிப்பாக்கள்



சாலைகளில்
பசியில் துவள்பவரை
காணும் போதெல்லாம்,
விழி விரித்து
சுற்றும் முற்றும் தேடுகிறேன்
உங்கள் கடவுள்களை ......
***
அதிகாலையில்
கூட்டை விட்டு
கிளம்பும் பறவைகள்,
இரை தேடுமே
தவிர
இறை தேடுவதில்லை ......
***
பண்டமாற்று முறையிலிருந்து
பங்கு வர்த்தகம் வரை வளர்ந்து விட்டோம்,
ஆனாலும்
எலியைப் பிடிக்க பூனை குறுக்கே ஓடி விட்டால்
பயணத்தை ரத்து செய்கிறோம் ...
***
பொதுக் கழிவறைகள்
இல்லா ஊர்களிலும்
கல்லறைத் திருநாள் இருக்கும்,
பேருந்து நிலையம்
இல்லா ஊர்களிலும்
தேர் தெப்பம் இருக்கும்,
நூலகம்
இல்லா ஊர்களிலும்
தீ மிதித்தல் இருக்கும்,
மருத்துவமனை
இல்லா ஊர்களிலும்
பால்குட வைபவம் இருக்கும்,
பள்ளிக்கூடம்
இல்லா ஊர்களிலும்
அய்வேளைத் தொழுகை இருக்கும்,
மின்சார இணைப்பு
இல்லா ஊர்களிலும்
அபிஷேக ஆராதனை இருக்கும்,
தார்ச்சாலை
இல்லா ஊர்களிலும்
அற்புத சுகமளிக்கும் கூட்டம் இருக்கும் ***
எவர் விழியிலும்
சிக்காமல்
ஒளியுமளவிற்கு,
அப்படி என்ன
தவறு செய்திருப்பார்கள் ?
இந்தக் கடவுள்கள் ***
பொன்னாலான தாலியாகினும்
ஒரு நாள் கழுத்தில் சுமக்க
எந்த ஆணாவது சம்மதிப்பானா ??
ம்ஹூம் ....
அவனுக்குத் தெரியும்
அது அடிமையின் அடையாளமென்று.
***
எப்போதும் எதையோ நோக்கி
சாரை சாரையாய்
விரைந்தபடியே எறும்புகள்,
முடங்குதல் சோர்வு
மனத் தளர்வு
நம்பிக்கையின்மை
இவையெல்லாம் மனிதருக்கே ....
***

- பாசு.ஓவியச் செல்வன்

தமிழ் ஓவியா said...


வேண்டவே வேண்டாம் மோடி



ஜாதிமத பேதமற்ற தன்மைகள் அவரிடம் இல்லாத காரணத்தால், நான் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்று பொருளியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமர்த்யா சென் பதில் கூறுகையில், பிரதம மந்திரியாக மோடியை நான் விரும்பவில்லை. மைனாரிட்டி மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்க அவர் தவறி விட்டார். அவர் முதலில் ஜாதிமத பேதங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.

அவரைப்பற்றிய பதிவுகள் நன்றாக இருப்பதாக நான் நம்பவில்லை. பாதுகாப்பின்மையை உணர்வதற்கு நான் மைனாரிட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மைனாரிட்டிகளுக்கு எதிரான ஒரு வன்கொடுமை 2002இல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய குறை இயல்பு உள்ளவரைப் பிரதமராக என்னால் ஏற்க இயலாது என்று அமர்த்யா சென் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

ஆடி’ப் போச்சு


ஆடி வெள்ளி, ஆடி விரதம், ஆடிப் பெருக்கு என ஆடி மாத மூடநம்பிக்கை விஷேசங்களைப் பட்டியலிட்டு ஆன்மீகப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி தங்களின் பிழைப்பைத் தக்கவைக்க முயலுகின்றன. கோவில்களில் விசேடங்கள் என்ற பெயரில் பக்தர்களின் பணத்திற்குக் குறி வைக்கப்படுகிறது. கோவில் வாடிக்கையாளர்களான பக்த கோடிகள் நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் ஆடி மாத மகிமையைப் பேசத் தவறுவதில்லை.

ஆடி மாதம் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது; முகூர்த்தங்கள் கிடையாது; திருமணங்கள் ஆவணிக்குத் தள்ளிவைக்கப்படுகின்றன. சரி, இவர்கள் தங்களின் மத மூடநம்பிக்கையைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்னொரு புறம் என்ன நடக்கிறது? ஆடித் தள்ளுபடி சேலை கட்டிப் பறக்கிறது. ஆடிக் காத்து அதிர்ஷ்டக் காத்து ஆகிவிட்டது. நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மாள் துணிக்கடை விளம்பரம் ஒன்றில் `ஆடியிலே அடிக்குதடா அதிர்ஷ்டக் காத்து என்று பாடுகிறார்.

நாளிதழ்களைப் புரட்டினால் எல்லாப் பக்கங்களும் ஆடித் தள்ளுபடி விளம்பரங்கள்தான். இப்போது அதிலும் ஒரு படி மேலே போய் ஒரு நிறுவனம் `இது ஆடித் தள்ளுபடி அல்ல; ஆடி சேமிப்பு என்று தனது வணிகத்துக்குப் புது விளக்கம் அளிக்கிறது.

ஆடி மாதத்தில் துணிக்கடைக்கே செல்லாத நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கே இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆவணி மாதத் திருமணத்திற்குக்கூட ஆடி மாதம் சேலை, துணிகள் எடுக்கச் செல்லமாட்டார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். ஆடியில் திருமணப் பட்டு எடுக்கச் செல்லுகிறார்கள். ஏன் தெரியுமா? ஆடியில் 5 முதல் 50 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கிறதே! விடலாமா?


தமிழ் ஓவியா said...

மத மூடநம்பிக்கை காரணமாக ஆடி மாதம் துணிக்கடைகள் காத்தாடின. அதனை முறியடித்து வணிகத்தைத் தூக்கி நிறுத்த துணிக்கடைகள் செய்த வணிக உத்திதான் தள்ளுபடி விற்பனை. அந்த உத்தி வெற்றிபெற்றுவிட்டது. மத நம்பிக்கையாளர்களை தங்கள் வழிக்குக் கொண்டுவந்துவிட்டனர் வணிகர்கள். பணத்தின் முன் நிற்கமுடியாமல் மத நம்பிக்கை ஓடி ஒளிந்துவிட்டது.

இப்போது அடுத்த கட்டம். ஆடியில் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுவது பன்னெடுங்கால வழமை. காரணம் கேட்டால் சொல்வார்கள் ``ஆடியில் இணைந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; சித்திரை கடும் வெப்பம் வீசும் மாதம், அதனால் ஆடியில் இணைய வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்று சொல்வார்கள். இந்த வழக்கத்தையும் இன்னும் சில மூடநம்பிக்கையாளர்கள் பின்பற்றினாலும் முற்றிலும் கடைப்பிடிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் புதுமணத்தம்பதிகள் கணினித் துறையில் வேலை செய்கிறார்களே. ஒரே பகுதியில் அலுவலகங்கள் இருக்கும். ஒன்றாகத்தான் சென்றுவர வேண்டும். தனித்தனியாகவெல்லாம் இருக்க முடியாது. விடுமுறையெல்லாம் கொடுக்க மாட்டார்கள். பின் எப்படி ஆடி மாதப் பிரிவு? ஒரே வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம். ஆடி புதுமணத் தம்பதிகளைப் பிரித்தது ஒரு காலம். ஆனால், இன்று வாழ்க்கைச் சூழல் தம்பதிகளிடமிருந்து ஆடியைப் பிரித்து விட்டது. சென்ற ஆண்டு ஒரு செல்பேசி நிறுவனம் ஆடி மாத புதுமணத் தம்பதிப் பிரிவை வைத்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. சினிமாத் தம்பதிகள் சினேகாவும் பிரசன்னாவும் நடித்திருக்கிறார்கள். ஆடி மாதம் பிரிந்திருப்பவர்கள் அந்த செல்போன் கடையில் சந்திக்கிறார்கள். இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்; முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். பின் தனித்தனியாகச் சென்றாலும் செல்பேசியில் தங்களின் ஆசையை, காதலை முத்தங்களின் வாயிலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆடியில் தனித்தனியாக இருந்தாலும் கால மாற்றம், வாழ்க்கைச் சூழல், அறிவியல் வளர்ச்சி புதுமணத் தம்பதிகளைப் பிரிக்க அனுமதிக்கவில்லை என்பதை இந்த விளம்பரம் உணர்த்துகிறது.

இன்னொரு விளம்பரம். அது ஒரு திருமணத் தகவல் நிறுவனம். ஆடி மாதம் என்பதற்காக மணமக்கள் தேடும் பணியை நிறுத்தவேண்டாம்; உடனே வாருங்கள் எங்கள் நிறுவனத்திற்கு என்று அந்நிறுவனம் அழைக்கிறது. அதையும் ஒரு வயதான மூதாட்டியை வைத்தே சொல்ல வைத்திருக்கிறது.

திருமணத் தகவல்கள் எல்லாம் இப்போது இணைய தளங்களிலேயே கிடைக்கின்றன. ஆடிமாதம் என்பதால் யாரும் இணையத்தைப் பார்க்காமல் இருப்பதில்லை. இணையத்தைத் துலாவும் போதே இணையரையும் தேடுகிறார்கள்.

காதல் திருமணங்கள் அதிகம் நடக்கத் தொடங்கியுள்ளன. ஆடி மாதம் என்பதால் காதலர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டு இருப்பதில்லை. முதல் பார்வையும் அதன் வழி காதலும் ஆடி மாதங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆடி மாதம் ஆணையும் பெண்ணையும் பிரித்தது ஏன் என்பதைப் பற்றி ஒரு தகவலை கரிசல் இலக்கியர் கி.ராஜநாராயணன் ஆடி அழைப்பு என்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. ஆடியில் விதைப்பு நடக்கும். அக்காலகட்டத்தில் விதைப்புப் பணிக்காக விடிகாலை எழுந்து ஆண்கள் வயலுக்குச் செல்வார்கள். அதனால் முதல் நாள் இரவு விரைந்து உறங்க படுக்கைக்குச் சென்றுவிடுவார்கள். எனவே வீட்டில் மனைவி இருந்தால் இரவில் உறக்கம் கெடலாம் அல்லவா? உறக்கம் கெட்டால் விடிகாலை எழுந்திருக்க முடியாது. விதைப்புப் பணி கெட்டுவிடும். எனவேதான் பெண்களை அவர்களது தாய் வீட்டிற்கு அனுப்புவது அக்கால வழக்கமாக இருந்தது என்கிறார் கி. ராஜநாராயணன். வேளாண்மை மட்டுமே தொழிலாக இருந்த அந்தக் காலத்தில் ஆடிக்கு தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றது சரியாக இருந்திருக்கலாம். இன்றைய காலத்தில் அது தேவையா? காலம் மாறிவிட்டது; வேலைகளும் மாறிவிட்டன; இந்த ஆடி மாத மூடநம்பிக்கை மாறவேண்டாமா?

அறிவால் உணர்ந்து மாற்றத்தை ஏற்கத் தயங்கும் சமூகத்தை அறிவியல் வளர்ச்சியும், காலத்தின் வேகமும் மாற்றிக்கொண்டிருக்கின்றன. மாறியவர்கள் உலகைப் புரிந்துகொண்டவர்கள் ஆவார்கள். வறட்டு மத மூடநம்பிக்கையால் மாறத் தயங்குபவர்களை காலம் விட்டுவிட்டுச் சென்றுவிடும்.

- அன்பன்

தமிழ் ஓவியா said...


’சமயம்’ பார்த்து நுழைந்த ஆரியம்



தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் _ ஆழ்வேராய் இருந்து உழைத்தவர் தேவநேயப் பாவாணர். தமிழ்மொழி, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் இருந்துள்ளது என வாதிட்டவர். 40க்கும் மேற்பட்ட சொல்லியல்பு களைக் கற்று சிறப்பான முறையில் சொல்லாராய்ச்சி செய்துள்ளார். தமிழறிவினாலும், பன்மொழியியல் அறிவினாலும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டவர்.

தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில், சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். வடமொழி தேவமொழி யென்றும், அதனை ஒலிமுறை பிறழாமல் ஓதும் ஆற்றல் பார்ப்பனருக்கு அதாவது பிராமணர்க்குத்தான் உண்டென்றும் கூறி, கோவில்களில் வழிபாடு செய்யும் அதிகாரத்தைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். இப்படிச் செய்தது கி.மு.1200 என்று சொல்லலாம்.

#####

பிராமணனை நாம் தமிழன் என்று ஏற்றுக் கொண்டாலும், அவன் அதை ஒத்துக்கொள்வதில்லையே! நம்மைவிட உயர்ந்தவன் _ மேலானவன் _ நம்மின் வேறானவன் என்றல்லவோ அவன் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறான், சொல்லி வருகிறான்!

ஆப்பிரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் எப்படி அந்த நாட்டுப் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று, தங்கள் நிறவெறி காரணமாகக் கூறிவந்தார்களோ, அப்படியேதான் இந்த நாட்டிற்கு வந்த ஆரியர்களும் _ இக்கால பிராமணர்களும் பூதேவர் என்றும் பூசுரர் என்றும் தங்களை உயர்வாகவே சொல்லிவந்தார்கள்; சொல்லி வருகிறார்கள். எனவே, இதை ஒருவகை நிறவெறிக்கொள்கை அதாவது (Brahman Aparthied) என்று சொல்லலாம்.

தொடக்கத்திலிருந்தே ஆரியர்கள் தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக்காட்டியே வந்துள்ளனர். மலையாளத்தில், அந்நாட்டுக் குடிமக்களான நாயர்கள் வாழும் வீடுகளுக்குக் கரை என்று பெயர்; ஆனால் பிராமணர்களின் இருப்பிடங்களுக்கு மட்டும் இல்லம் என்று பெயர். இவ்வாறே ஆரியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு நம்மை என்று பொருள் தருகின்ற மங்கலம் என்னும் சொல்லைக் கொண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களை அமைத்துக் கொண்டதோடன்றி, ஏனைய தமிழ் மக்களிடம் கலந்து பழகாமல், தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர்.

வீடு கட்டுதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் மனை நூலிலும்கூட, பிராமணர்களுக்கு உளுக்காத _ உறுதியான மரங்களும்; மற்றவர்களுக்கு எளிதில் உளுத்துப்போகக் கூடிய மற்ற மர வகைகளும், சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன்? செய்யுட்களில் சிறந்ததான _ வெண்பா பிராமணர்க்கு உரியது; ஏனைய செய்யுட்கள் மற்றவர்க்கு உரியன என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றனவே! இதுமட்டும் அன்று; தமிழர் குழுவிலே மிகவும் சிறந்தவராக _ உயர்ந்தவராகக் கருதப் பெற்ற முனிவர்களைக் குறிக்கும் அந்தணர் என்ற பெயரையும் நாளடைவில் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டார்கள்.

இதைக் கேட்கும்போது, ஆரியர்கள் எப்படி இத்தகைய தமிழ்ப் பெயர்களைத் தாங்கினர் என்ற அய்யம் உங்களுக்கு எழலாம். ஆனால், இந்த அய்யம் தேவையற்றது. ஏனெனில், தொடக்க காலத்தில் _ அஃதாவது கடைக்கழகக்காலம் வரையில்கூட _ ஆரியர்கள் தூய தமிழ்ப் பெயர்களையே தாங்கியிருந்தனர். ஒருசிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். காலப்போக்கில்தான் அவர்கள் படிப்படியாகத் தமிழில் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர்; தமிழரிடையே வடவரின் கதைகளைப் பரப்பினர். சமயம் பார்த்து, மிக்க திறமையோடு இவற்றை அவர்கள் செய்து வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தியது, முன்னமே நான் கூறியபடி, சமயத்துறையில்தான். ஆனால், ஆரியத்தால் தமிழன் கெடுகிறான்.

ஆரியர்கள் தமிழரை எவ்வழியில் வெல்லலாம் என்று எண்ணிப் பார்த்தார்கள். ‘Vulnerable Poison’ என்பார்களே அதைப்போல, சமயத்துறையில் தலையிட்டால்தான், தமிழரை எளிதில் வெல்லலாம் என்று கண்டுகொண்டார்கள். தமிழருக்கு இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதைமை, சமயப்பித்து (Religious fanaticism) கொடைமடம் (Indiscriminate munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள் முன்னேற்றத்திற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

முதலில் அரசர்களைச் சார்ந்து, அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள் உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர்.

தமிழ் ஓவியா said...

ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம் தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை. அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

என்றாலும், பொதுவாகத் தமிழர்கள் ஆரியர்களைத் தங்கள் பகைவராக என்றுமே கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலந்தொட்டு அவர்களைத் தங்கள் உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களை அயலாராக எண்ணி வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும்கூட, பிராமணர்கள் அவர்களைத் தங்களைச் சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும்கூட, எல்லாவகையிலும் தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள் இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத் தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன! இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார் தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும். இவர்களைக் காணும் ஆங்கிலேயர்கள், இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச் சிறந்த நாகரிகம் உடையவர்களாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று அய்யுறு நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள் உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப் பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின் உள்ளத்திலிருந்து பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூன்று இயல்புகளையும் அறவே அகற்றி விட்டனர். இறைவனையும் விதியையும் காரணமாகக்காட்டி, தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர்.

இதனாலேயே தமிழர்களிற் சிலர் பிராமணர்களை அறவே வெறுக்க முற்பட்டு, அவர்களுடைய உணவுக்கடைகளையும் புறக்கணித்து வருகின்றனர். சித்த மருத்துவர் தகடூர் செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும்.

சிறிது ஆழ்ந்து நோக்குவோமானால், உண்மையில் பிராமணர்கள் நம்மைவிட எந்த வகையிலும் உயர்ந்தவர் அல்லர் என அறியலாம். எடுத்துக்காட்டாக, ஒன்று சொல்கிறேன். பிராமணர் தங்களை மற்ற குலத்தாரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்ற இனத்தாரிடம் எதுவும் வாங்கி உண்ணமாட்டார்கள்| தமிழரில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சைவ வேளாளர்கள் பொற்கலத்தில் ஏதேனும் உணவுவகையிட்டுக் கொடுப்பினும் வாங்க மறுத்துவிடுவர். ஆனால், அவர்களே வேளாளரினும் தாழ்ந்தவராகக் கருதப்பட்டுவந்த இடையப் பெண்கள் பழைய மட்கலத்தில் கொண்டுவந்த மோரை வாங்கி வானமிழ்தம் என்று கூறி, மகிழ்ச்சியாகக் குடிக்கின்றனர். இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்லுவது!

இப்படியெல்லாம் இருந்தும், பிராமணர்கள் தங்களை மேற்குலத்தாரென்று சொல்லிக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களைத் தாழ்த்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாறும் தன்மையேயன்றி, வேறன்று. எட்டினால் முடி; எட்டாவிட்டால் அடி _ இதுதான் பிராமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்.

இங்குள்ள பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் செல்வதில்லையென்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டுப் பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் சென்று, புலாலுணவு நீக்கி மரக்கறி உணவுமட்டும் உட்கொண்டு மீளுவர். தமிழ்நாட்டிலும்கூட, பிராமணர்கள் தங்கள் உணவுக் கடைகளில் எல்லாக் குலத்தாரையும், இனத்தாரையும் ஏற்றுக்கொள்கின்றனர், வாணிகம் என்ற முறையில். ஆனால் வீட்டில் மட்டும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் _ பல்கலைக்கழகக் கண்காணகராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், அவ்வளவு ஏன் _ இந்தியக் குடியரசின் தலைவராக இருந்தாலும்கூட, ஒரு சிலரை ஏற்பதில்லை. இந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது!

இதற்கெல்லாம் காரணம் நமது பகுத்தறிவின்மையே. இவ்வாறு நாம் ஆரியருக்கு அடிமைப்பட்டிருப்பதால்தான். ஆங்கிலேயர்கள் நம்மை, உயர்ந்ததொரு நாகரிகத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் _ ஆரியர் வருவதற்கு முன்னமே சிறந்த பண்பாட்டோடு விளங்கியவர்கள் என்று ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றார்கள்; மறுக்கின்றார்கள்.

நூல்: மொழிச் சிந்தனைகள் -

தமிழ் ஓவியா said...

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!


அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!

ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை

எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!

ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்

இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.

2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,

3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,

4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,

நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.

ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!

டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!

கடந்த ஆண்டு டெசோ மாநாடு!

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!

என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!

கட்சியில்லை - ஜாதியில்லை!

தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!

இதில் கட்சியில்லை,

இதில் ஜாதியில்லை,

இதில் மதமில்லை,

இதில் மனிதநேயம் உண்டு.

மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,

நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்
அவர்கள் உரிமைகளை பெறும் வரை
நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!

90 வயதிலும் களத்தில் கலைஞர்

சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!

சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.

திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.

திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.

எச்சரிக்கை ஒலி!

தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

தமிழ் ஓவியா said...

இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!

மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!

வாரீர்! வாரீர்!!

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும் போராடுவோம் வாரீர்! வாரீர்!!

வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
5.8.2013

தமிழ் ஓவியா said...

பத்து பேர் உயிரைக் குடித்த ஆடிப் பெருக்கு!

பரமத்திவேலூர், ஆக. 5- தஞ்சை, சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் காவிரியாறு கால்வாய் வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் இறந்தனர்.

நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ, நீரில் இழுத்து செல்லப் பட்டனர். மாதேஸ்வரன் உடல் மீட்கப்பட்டது. ராஜூ என்ன ஆனார் என்று தெரியவில்லை.

தர்மபுரி மாவட் டம், நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அருள்குமார்(17) மேட்டூர் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந் தார்.
சேலம் பள்ளப் பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) நண்பர்களு டன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமி டத்தில் காவிரியாற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
தர்மபுரி மாவட் டம், மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர் களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் டைவ் அடித்த போது கல் இடுக்கில் தலை மோதி உயிரிழந்தார்.
திருவையாறு அடுத்த தென் பெரம்பூ ரில், வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் , ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகு தியைச் சேர்ந்த சகோத ரர்கள் குஞ்சுஅப் துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென் றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன் ஹாஜி, கார் ஓட்டுநர் சித்திக் ஆகியோர் உயிரி ழந்தனர்.

தமிழ் ஓவியா said...

கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகமாம்



கள்ளக்குறிச்சி, ஆக.5- கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற் போது நிலவி வரும் கடும் வறட்சி நீங்க வருண பகவான் கருணை மழை பொழிய வருண மகா யாகம் கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெரு அரசமரத்தடியில் உள்ள விநாயகர், களரி முனியப்பன் கோவிலில் நேற்று நடைபெற்றதாம். இதையொட்டி அதி காலை 5 மணிக்கு 108 கட ஸ்தாபனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை ஆகிய நிகழ்ச் சிகள் நடந்ததாம்.

தொடர்ந்து 6.15 மணிக்கு சூர்ய நமஸ்கார மும், 6.30 மணிக்கு விசேஷ கோ பூஜையும், கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வத்த பூஜையும், 9 மணிக்கு அபூப சிறீமகா கணபதி ஹோமம், சிறீசண்முக ஹோமம் உள்பட பல் வேறு ஹோமங்கள் நடந்தனவாம்.

20 ஆயிரம் மந்திரங் கள் காலை 10.30 மணி யளவில் திருவையாறு கல்யாணபுரம் சிறீனிவாச ஜோதிடர் தலைமையில் ஹோம குண்டத்தில் செங்கல் அளவிலான தேங்காய் பர்பி, அருகம் புல், கொப்பரைத் தேங் காய், தாமரை, கரும்பு, அவல், கடலை, நெய், தேன் மற்றும் 108 நாட்டு மூலிகைகளை கொண்டு ஹோமம் நடைபெற்ற தாம்.


தொடர்ந்து பெரிய அளவிலான தண்ணீர் தொட்டியில் 5 பேர் உள்ளே அமர்ந்து 10 ஆயிரம் மந்திரங்கள் கூறி வருண ஜெபம் நடத்தின ராம். இதேபோல் ஹோம குண்டத்தில் 10 ஆயிரம் வேதங்கள் ஓதி மகா யாகம் நடைபெற்றதாம்.

தமிழ் ஓவியா said...


சாமி பிரசாதம் சாப்பிட்டோர் பிழைப்பார்களா?


ராங்கியா, ஆக.5 அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப் பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி யோடு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந் தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை யினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங் கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப் பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத் தின் பின்னணியில் சதிச்செயல் உள் ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளிவந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வரலாறு பேசும்!


கேள்வி: சென்னையில் ஒரே நாளில் ஏழு தற் கொலைகள் என்று தின மலர் நாளேடு கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கிறதே!

கலைஞர்: அ.தி.மு.க. ஆட்சியின் வரலாறு பேசும் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

- (முரசொலி 2.8.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...


இராணுவத்தினர்க்கு நம் வணக்கமும் - நன்றியும்!



எல்லாத் துறைகளையும்விட இராணுவத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏன் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் பாதுகாப்புக்கு இராணுவத்துறை தானே மிக மிக முக்கியமானது என்று பதில் கூறலாம். அது உண்மைதான்.

அதன் சேவை நாட்டுப் பாதுகாப்புடன் முடிந்து விடக் கூடியதல்ல. இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் பொழுது, உயிருக்குப் போராடும் போது, தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தரும் உழைப்பு, மேற்கொள்ளும் மயிர்க் கூச்செறியும் அபாயகரமான செயல்பாடுகள் போற்றத் தகுந்தவை!
ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி - அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒகேனக்கல்லில் நீரின் சுழற்சியில் சிக்கிய நால்வரை நமது இராணுவ வீரர்கள் மீட்ட சாகசம் சாதாரணமானதல்ல. மூடநம்பிக்கைவாதிகள் மறுபிறவி என்று சொல்லுவது ஏமாற்று வேலை; உண்மையிலேயே மறுபிறப்பு என்பது ஒகேனக்கல்லில் நடத்திருக்கிறது.

இரவு முழுவதும் மரக்கிளையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை சாகசச் செயலால் அதே நேரத்தில் சாமர்த்தியமான அணுகுமுறையால் மீட்டுக் கொடுத்துள்ளனர் இராணுவ வீரர்கள்.

உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தவர் நன்றி தெரிவிப்பது மட்டும் முக்கியமல்ல; மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இதே ஒகேனக்கல் வெள்ளத்தில் இதற்கு முன்பெல்லாம் பல முறை உயிரிழப்பு நடந்ததுண்டு; முதன் முதலாக இராணுவம் தலையிட்டு உயிரைக் காப்பாற்றியது இதுதான் முதல் தடவை என்று அறிகிறபோது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ஒகேனக்கல்லிலும் சரி, கடலிலும் சரி, ஏரிகளிலும் சரி, இன்பச் சுற்றுலா செல்லக் கூடியவர்கள் நீரில் மூழ்கி மரணிக்கும் செய்தி அடிக்கடி வந்து கொண்டு தானிருக்கிறது.

தமிழ்நாடு அரசு இத்தகைய சுற்றுலா இடங்களில் தக்க பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமும் முக்கிய முமாகும். மனித உயிர் என்பது மலிவான ஒன்றல்ல என்பது எப்பொழுதும் அரசுக்கு நினைவிருக்கட்டும்!

அண்மையில் வடநாட்டில் உத்தரகாண்டில் கோயில்களை நாடிச் சென்ற அப்பாவிப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கடும் வெள்ளத்தால் காவு கொடுக்கப்பட்ட கொடுமையை இப்பொழுது நினைத்தாலும் நம் குருதியெல்லாம் உறைந்து விடும். இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாப கரமான முறையில் இருந்தவர்களை மரணிக்காமல் காப்பாற்றியதற்கும் காரணம் இந்திய இராணுவமே.

உயிர் பிழைத்து மீண்டு(ம்) வருவோம் என்று அந்தப் பக்தர்களேகூட சிறிதும் நினைக்கவில்லை; நம்பிக்கை இழந்து கதறினார்கள். அவர்களையெல் லாம் இந்திய இராணுவத்தினர் காத்தவிதம் இருக்கிறதே சாதாரணமானதல்ல!

இரு மலைக்குன்றுகளின் இடையே கம்பிகளை இணைத்து அதில் இராணுவ வீரர்கள் குறுக்கே படுத்துக் கொள்ள, பக்தர்கள் அந்த இராணுவ வீரர்கள் முதுகில் நடந்து வெள்ளத்தைக் கடந்து வர.. சினிமாவில் இடம் பெறும் ஜோடனைக் காட்சியல்ல அவை. உண்மையில் நடந்தது. இதற்காக எவ்வளவு தூரம் இராணுவ வீரர்களைப் பாராட்டினாலும் வெகுமதிகள் அளித்தாலும் தகும்.

ஆனால் இப்படி மனித உயிர்களைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு அந்தச் சாதனையின் பெருமை நம் நாட்டில் செல்லுவதில்லை. கடவுள் கிருபையால் பிழைத்தோம் என்று அறிவு நாணய மின்றி, நன்றி உணர்ச்சி சிறிதுமின்றி கூறியதைக் கேட்ட போது வேதனைதான் மிஞ்சியது.

அந்தக் கடவுளை வழிபடச் சென்ற இடத்தில் தானே இந்தத் துயரங்கள் நடந்தன.

தன்னுடன் வந்த உற்றார் உறவினர்களை, நண்பர்களை இழந்தனர் என்பதைக்கூட மறந்துவிட்டு, உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிர் பிழைத்ததற்குக் காரணமாக இருந்த - தங்கள் உயிரை பணயம் வைத்துச் செயல்பட்ட இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பதை மறந்து, மீண்டும் கடவுள்மீது தங்கள் நம்பிக்கையைத் திணிப்பது எவ்வளவுப் பெரிய மோசமான செயல். அந்த அளவிற்குக் கடவுள் பக்திப் போதை நம் மக்களின் அறிவைப் பாழ்படுத்திவிட்டிருக்கிறது என்று தானே பொருள்?

தமிழ் ஓவியா said...


ஆந்திர மாநிலத் தலைநகரில் சமூக நீதி முழக்கம்


கொள்கை உணர்வுகளுக்கு உறுதி கூட்டிய, ஆக்கப்பணிகளுக்கு ஊக்கம் சேர்த்திட்ட

தமிழர் தலைவரின் ஒரு நாள் ஆந்திரா பயணம்

- தொகுப்பு: வீ.குமரேசன்

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்கின்றனர். ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் கே. சந்திரபானு மற்றும் நீதியரசர் ஜி. சந்திரய்யா உடன் உள்ளனர்.

மக்களிடையே சமத்துவத்தினை, சமவாய்ப்பினை ஏற்படுத்தி, மக்களின் சுயமரியாதை மேம்பாட்டினை உறுதிப் படுத்தும் தத்துவம் சமூகநீதியாகும். சமூகநீதிக்கான குரல் மற்றும் நடை முறைக்கான வழிமுறை பல்லாண்டு களாக பல விதங்களில் பரிமாணம் கண்டு வருகிறது. பெரும்பான்மை மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக சமூகஅநீதி இழைக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சூழலில் சமூகநீதிக்கான குரல், அதன் நடைமுறை ஆக்கத் திற்கான உழைப்பு பல ஆண்டு களுக்கு தொடர்ந்து எடுத்துச் செல் லப்பட வேண்டும். சமூகநீதிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கிய பின்பு, அடக்கு முறைவாதிகளான சமூக அநீதியாளர்கள், தாம் அனுபவித்த அந்த பலன்கள் பறிபோகிறதே என்று சூதுகலந்த அணுகு முறையினைக் கைக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக் களுக்கான சமத்துவ வாய்ப்பினை அணை போட்டு தடுத்துக்கொண்டே வருகின்றனர். சமூகநீதிக் கொள்கை, உரிமை படைத்த மக்களிடையே அது பற்றிய விழிப்புணர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த செயல் பாடு இவைகளின் மூலம்தான் உரிய பலனை ஈன்றெடுக்க முடியும்.

இத்தகைய சமூகநீதித் தத்துவ நடைமுறையினை இந்திய அளவில் கொண்டு சென்றதில் தந்தை பெரி யார் காலம் முதல் தமிழர் தலைவர் காலம் வரை தொடர்ந்து பெரியார்தம் பகுத்தறிவு இயக்கம் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத் தில் வலுப்பெற்று உருவெடுத்த அன் றைய நீதிகட்சியாளர்களால் சமூக நீதி உணர்வுகள் அரசியல் தளத்தின் வழி நடைமுறை காணத்துவங்கின.

அரசியல் விடுதலை பெற்று அரச மைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டவுடன் சமூகநீதித் தத்துவத்திற்கு பங்கம் வந்த வேளையில், களம் இறங்கி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தினை கொண்டு வந்த சாதனை, பெரியார் இயக்கத் தினையே சாரும். சமூகநீதி நடை முறை வரலாற்றின் பங்களிப்பின் மய்யக்கருவாக விளங்குவது, பெரி யார் இயக்கத்தின் பெருமைகளுள் ஒன்றாகும். தந்தை பெரியார் முன்னெடுத்துச்சென்ற சமூகநீதித் தத்துவத்தை, கொள்கை முழக்கமாக நாடெங்கும் தூக்கிப்பிடித்து, அந்தந் தந்தப் பகுதியில் உள்ள அமைப்பு களை, அதன் தலைவர்களை துணைக்கழைத்து நாடு தழுவிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரு பவர் தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார். தமிழ்நாட்டில் அரசியல் ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும், சமூகநீதி நடைமுறை ஆக்கத்திற்கு உரிய நேரத்தில் குரல் கொடுத்து, உன்னத பணிகளை ஒருங் கிணைத்து களம் கண்டு காரியம் ஆற்றி டும் தமிழர் தலைவரின் சீரிய தொண்டறத் தால், தமிழ்நாடு சமூகநீதித் தளத்தில் நாட்டின் பிற பகுதிகளைவிட முன்னி லையில் உள்ளது. இந்த முன்னிலை கண்ட வடபுல, பிறபகுதித் தலைவர்கள், எங்களுக்கும் ஒரு பெரியார் ஆரம்ப நிலையில் இருந்திருந்தால் இன்னும் மேம்பாடு அடைந்திருப்போம் என ஆதங்கம் கலந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மண்டல் குழு பரிந்துரைகளின் நடைமுறைக்கு தமிழர் தலைவரின் சீரிய தலைமையின் அவசியத்தை மண்டல் அவர்களே, அந்த பரிந்துரைகள் உருவான காலத்திலேயே உணர்ந்திருந் தார்; பெரிதும் நம்பியிருந்தார் என்பது சமூகநீதித் தத்துவ நடைமுறைக்கு எத் தகைய கடப்பாட்டினை பெரியார் இயக்கம் கொண்டுள்ளது என்பதற்கு அழுத்தமான எடுத்துக்காட்டு.

சமூகநீதி நடைமுறைக்கான அடுத்த கட்ட பயணத்திற்கு தமிழர் தலைவரின் ஒருங்கிணைப்புப் பணி இன்றியமையாத தேவை என்பது அரசியல் எல்லைகளைத் தாண்டி அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். சமூகநீதித் தத்துவ நடைமுறைக்கு அந்தந்தப்பகுதி ஒடுக்கப்பட்ட அமைப்பு கள் மற்றும் அதன் தலைவர்களின் ஈடுபாட்டில் இடைவிடாத நெருக்கம் காட்டி, நெறிப்படுத்தி வருவது தமிழர் தலைவரின் பல்வேறுதரப்பட்ட பணிகளில் ஒன்றாகும். சமூகநீதி நடைமுறைக்கு அமைப்பு ரீதியாக செயல்படுவதில் ஆந்திர மாநிலம் தனித்தன்மை பெற்றுள்ளது. அம் மாநிலத்தில் சமூகநீதித் தளத்தில் குறிப் பாக நீதி அரசர்கள், வழக்குரைஞர்கள் என சமுதாயத்தில் தாக்கத்தினை ஏற்படுத்திடும் வல்லமையாளர்களை ஒருங்கிணைத்தவர் நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி ஆவார். காலத்தால் அவர் மறைந்து அய்ந்து ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது நினைவுநாளை அவரது குடும்பத்தினர் மற்றும் கொள்கை சார்ந்த நண்பர்கள் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் 5-ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து தமிழர் தலைவரை சிறப்பு விருந்தினராக பங்கேற் றிட அழைத்திருந்தார்கள் அந்நிகழ்வில் பங்கேற்று, சமூகநீதி நடைமுறைக்கு ஆக்கம் கூட்டிடும் நோக்கத்தில் ஜூலை 21-ஆம் தேதி ஒரு நாள் பயணமாக ஆந்திர மாநிலம் அய்தராபாத் நகருக்கு சென்றிருந்தார்.

ஜூலை 21-ஆம் நாள் அதிகாலையில் கிளம்பி அய்தராபாத் நகரம் சென்றடைய, சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்திற்குள் நுழையும் முன்பு ஒரு இரங்கல் செய்தி. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணாக்கரும், பாரதிதாசன் கவிப்பரம் பரையில் இறுதியாக வாழ்ந்தவருமான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த கவிஞர் சாமி.பழனியப்பன் மறைவுக்கு இரங்கல் செய்தியினை எழுதிக் கொடுத்துவிட்டு, இயக்கத்தின் சார்பில் கவிஞரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவதற்கு ஆவன செய்ய பணித்துவிட்டு தமிழர் தலைவர் பயணத்திற்கு அணியமானார். மறைந்த கவிஞர் சாமி.பழனியப்பன் திரைப்படப் பாடலாசிரியர் பழனிபாரதி அவர்களின் தந்தையார் என்பது இயக்கத்தார் அறிந்ததே. காலை 7.10 மணிக்கு கிளம்பி 8.20 மணிக்கு அய்தராபாத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் சகோதரர் பி.எஸ்.ஏ.பிரகாஷ் வந்திருந்து வரவேற்றார் நகருக்கு வெளியே சற்று அதிக தொலைவில் அமைந்திருந்த விமான நிலையத்தி லிருந்து தமிழர் தலைவரை நகரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் இல்லத் திற்கு அழைத்துச் சென்றனர். இல்லத்தில் தமிழர் தலைவர் தங்குவதற்கு மாடியில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்,

இல்லத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் துணைவியார் திருமதி. ஜெயலட்சுமி, மகள் திருமதி. சவிதா குமாரி, மருமகன் சுதாகர் மற்றும் பேரக்குழந்தைகள் இன்முகத்துடன் வரவேற்றனர். சுவாமி மறைந்த சூழலில் இல்லத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் குடும்பத்தினரை நலம் விசா ரித்து சுவாமியுடனான சந்திப்புகளை, உரையாடல்களை நினைவு கூர்ந்தார்.

இல்லத்திற்கு அருகிலேயே பங்லிங்கம் பள்ளி பகுதியில் அமைந் துள்ள ஆந்திர பிரதேச அரசு போக்கு வரத்துக் கழக கலைமன்றத்தில் ஜஸ்டிஸ் சுவாமி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் திருந்தனர். காலை சிற்றுண்டியை முடித்து விட்டு சரியாக 11 மணியளவில் நிகழ்வு மன்றத்திற்கு தமிழர் தலைவர் வந்தடைந்தார். ஜஸ்டிஸ் சுவாமியின் நண்பர்கள், வழக்குரைஞர் குழாம் என பலரும் மன்றத்தின் வாயிலிலிருந்து அரங்கத்திற்குள் தமிழர் தலைவரை அழைத்துச்சென்றனர். முன்னதாக வருகை தந்திருந்த ஆந்திரபிரதேச உயர்நீதிமன்ற இந்நாள், மேனாள் நீதியரசர்கள் பலரும் எழுந்து நின்று மிகவும் மரியாதையும் அன்பும் கலந்து தமிழர் தலைவரை வரவேற்று அவரது அருகில் அமர்ந்து உரையாடிக் கொண் டிருந்தனர். சரியாக 11.30 மணிளவில் நினைவு நாள் நிகழ்ச்சி தொடங்கியது.

நினைவு நிகழ்ச்சிக்கு ஆந்திர பிர தேச உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் க.சந்திரபானு தலைமை வகித்தார். மேடையில் தமிழர் தலைவரை மய்யப் படுத்தி அவரது இருபுறமும் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜி.சந்திரய்யா, ஏ.வி.சேஷசாய், ஆந்திர பிரதேச அரசு நிர்வாக ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜி.எத்திராஜூலு, மேனாள் நீதிபதி நீதியரசர் ஜி.பவானி பிரசாத் ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேலும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜி.விவேகானந்த், ஆந்திர மாநில அரசின் மேனாள் அமைச்சர் ஜி.ராஜேசம் கவுடு, பிரபல மருத்துவர் டாக்டர் நரசய்யா கவுடு, பணி நிறைவு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி நாயக் ஆகியோரும் மேடையில் வீற்றிருந் தனர்.

தமிழ் ஓவியா said...


தொடரும் தமிழக மீனவர் துயரம்! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, ஆக. 5- ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட் களுக்கிடையே அரங் கேறும் கொடுமையாக மாறிவிட்டது. தமிழகத்தில் 13 கடலோர மாவட் டங்கள் உள்ளன. 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றன.

ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மண்டபம், கோடியக்கரை, புதுக் கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் எல் லைத் தாண்டி மீன் பிடிப்பதாகச் சாக்கு சொல்லி இலங்கைக் கடற்படையினர் அவர்களை வேண்டுமென்றே கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் பத்து முறை இலங்கைக் கடற் படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர்.

இரண்டு நாட் களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கள் 65 பேர் இலங்கைக் கடற் படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்கள். அதன்பிறகு கோடி யக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த 74 மீனவர்களை, பத்துக்கும் மேற்பட்ட படகு களுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, அவர்களை திரி கோணமலை கடற் படைப் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையிலே 21 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். இந்த வரிசையில் தான் 3-8-2013 அன்று ராமேஸ்வ ரம் மீனவர்கள் 20 பேர் சிறை பிடிக்கப்பட் டுள்ளார்கள்.

அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்

மீனவர்களின் இந்தப் பிரச் சினை பற்றி மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி செய்தி யாளர் களிடம் கூறும்போது, மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அமைச்சர்கள் ஆறு முகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோருடன் பேசி, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியிருப்பதாகவும், பிரதமரிடம் பேசி, கைது செய் யப்பட்டவர்களை ஓரிரு நாட் களில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கு மென்றும், மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்படா மல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற தாகவும், இதுகுறித்து நட வடிக்கை எடுக்க மத்திய அரசு இரண்டு மூன்று முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை என் றும், அதனால் மத்திய அரசு இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறியதாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே தமிழக மீனவர்களின் இந்தத் தொடர்ந்து வரும் துயரம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் வெறும் கடித பரிமாற் றத்தை மட்டும் செய்து கொண்டி ராமல் பயனுள்ள முறையில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு விரைவில் முடி வெடுத்துச் செய்தா லொழிய, நம் முடைய மீனவர்களின் துன்பங் கள் குறையப் போவதில்லை. இந்தப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை என்பதால் தமிழகத் திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடவும், இலங்கைக் கடற் படையினரின் மனிதாபிமான மற்ற போக்கைக் கண்டித்திட வும்தான் முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலை யில் இருக்கிறோம். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்!

எனவே மாநில அரசு ஒவ் வொரு முறை நமது மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பிரதமருக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கைத் தூதுவருக்கோ, இலங்கை அரசுக்கோ கடிதம் எழுதுவதும், அத்துடன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதுவதும் சரியல்ல. மத்திய அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள், தாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்ட தாகவும், பெரும் நட்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாத நிலை இருப்ப தாகவும், மீன்கள் அதிகம் இருக் கும் பகுதி நோக்கிச் செல்லும் போது இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும், எனவே இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டிருக் கிறார்கள். இந்தக் கோரிக்கை களை அப்படியே அலட்சியப் படுத்திவிடாமல் மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு ஆழ்ந்து பரிசீலித்து எந்த முறையிலே மீன வர்களின் துயரத்தைக் களைய லாம் என்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு அறிக்கையில் திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?


எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!

ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து

டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!

தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!

தமிழர் தலைவர் அறிவிப்பு

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.

அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!

உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!

உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும், வேலியே பயிரை மேய்ந்த கதை போல,

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;

அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!

ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு

மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது; இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின் மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.

80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!

நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!

எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!

இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!

திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!

உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!

இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!

தோழர்களே தயாராவீர்!

வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!

காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,

எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
6.8.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


அட புத்தி கெட்ட...

செய்தி: இறைவன் அருளால் உயிர் பிழைத்தோம்! - ஒகேனக்கல் வெள்ளத்தில் உயிர் பிழைத்தோர் பேட்டி

சிந்தனை: அரும்பாடுபட்டு அவர்களை மீட்டது இராணுவமா? கடவுளா? அடபுத்தி கெட்ட மக்களே!

தமிழ் ஓவியா said...


ஆயுதம்!



கொஞ்சத் தண்டனையா னாலும், அதிகத் தண்டனையா னாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

தமிழ் ஓவியா said...


சிவ- அய்யாதுரை பேசுகிறார்


தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!

இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?

இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.

நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.

நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.

பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்; அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?

தமிழ் ஓவியா said...


இறந்தும் வாழ இதோ ஓர் அற்புத வழி?


நம்மில் பலருக்கும் இருக்கும் அல்லது அடிக்கடி வரும் பயங் களிலேயே மிகப் பெரிய பயம் (சாவு) மரண பயம்தான்!

எவ்வளவு காலம் நாம் வாழு கிறோம் என்பதா முக்கியம்? எவ்வளவு (குறுகிய) காலம் வாழ்ந்தாலும் அதில் நாம் செய்த நற்பணிகள் - தொண் டறம் - நமது சுயநலம் தாண்டிய பொதுத் தொண்டு, மக்கள் நலம் சார்ந்த செயல்கள் இவைதானே உண்மையானவை?

அறத்தால் வருவதே இன்பம் என்னும் போது அவ்வின்பத்திற்கு எது தேவை - தூய உள்ளம், தொண்டு உள்ளம், தொல்லுலக மக்கள் எலாம் எமது குடும்பத்தவரே - யாவரும் கேளீரே - என்ற சிந்தனை!

மனத்துக்கண் மாசு இல்லாதது தான் தூய உள்ளம்! அதுதானே அறம் - அது தானே நம்மை பிறருக்கு உதவிடச் செய்யும் ஊற்று? - இல்லையா?
மாசுபடிந்த மனம் சுயநல

தூசுபடிந்த உள்ளம் அல்லவா?

பொறாமைக் கிருமிகளும் அந்த மனத்தினை
கெட்டமனத்தினை ஆக்கிரமித்துக் கொள்ளுமே!

வாழ்வில் மரண பயத்தை விட்டொ ழித்து, வாழுவதைப் பொருள் உள்ள வாழ்வாக நாம் ஆக்கிக் கொள்ளுவதே சாலச் சிறந்தது.

இந்தப் பொருள் பணம் காசு சேர்ப்பதிலேயே சர்வகாலமும் எண்ணி எண்ணி ஓடிஓடி தேடிச் சேர்த்து - கேடு கெட்ட மானிடராக வாழும் வகைக்கான பொருள் பணம் அல்ல; அர்த்தமுள்ள - பயனுறு வாழ்வாக வாழ்வது என்பதே முக்கியம்!

தனக்கு இறுதியில் ஆறடி மண்கூட உறுதியில்லை; (அது இப்போது தேவையு மில்லை; காரணம் மின்மயானத்தில் - நொடிப் பொழுதில் பிடி சாம்பலாகி அவற்றை எங்கும் தூவிடலாம் - என்ற கதை போன்று ஆகிவிட்டது நவீன வாழ்க்கை) அப்படி இருக்கும்போது சுயநலத்திற்காக பல வீடுகள் - கண்ணுக்குத் தெரிந்து ஊரை அடித்து உலையில் போடும் வேலைக்கே தமது 24 மணி வாழ்வு போதவில்லை - பல சோற் றாலடித்த சுயநலப் பிண்டங்களுக்கு.

பலர் பதவியை, அதிகாரத்தை, இதற்காகவே கண் மண் தெரியாமல் ஆட்டம் ஆடி பிறகு நீதிமன்றம், வக்கீல், ஜெயில், பெயில் என்று ஓடித் திரியும் நிலையைக் கண்டும் பாடம் கற்கத் தெரியாத - அல்லது விரும்பாத - பம் மாத்து மனிதர்களாகவே வாழுகின்றனர்!
அவர்களைப் போல் இல்லாமல், நமது நற்செயல்களால் - தொண்டறத்தால் இறந்தும் உயிர் வாழ எண்ணிட வேண்டும்; அது எளிதும் கூட!

என்ன அப்படியா என்கிறீர்களா? இன்று உலக உறுப்புக் கொடை நாள்; நம் வீட்டில் யாருக்காவது ஏதோ எதிர்பாராத விபத்துக் காரணமாக மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்டு விட்டால் - அவர்களது உடல் உறுப்பு களை கொடையாக மருத்துவமனை களுக்கு வழங்கினால் அது பிறரது - தேவைப்படுவோர் -உடலில் பொருத்தப் பட்டு அதன் மூலம் தொடர்ந்து இறந்தவர் வாழலாம்!

நாமும் இறந்த பிறகும் வாழலாம், நமது உடல் உறுப்புகளைக் கொடையாக கொடுப்பதன் மூலம். நம் உடலிலோ, நாம் அளிக்கும் உடலிலோ உடனடியாக உறுப்புகளை (அதற்குரிய கால அவகாசம் உண்டு) வழங்கலாம்.

1. கண் விழிகளை (கார்னியா) - 2 வாரம் 2. சிறுநீரகம் - 24 மணி நேரம்

3. கல்லீரல் - 12 மணி நேரம்

4. கணையம் - 12 மணி நேரம்

5. இருதயம் - 3 மணி நேரம்

6. நடுக்காது - தோல் - 5 ஆண்டுகள்

(Bone Marrow)

7. தோல் - 3 மணி நேரம்

இந்தக் கால அவகாசத்திற்குள் அவற்றை தேவைப்படும் மனிதர்களுக் குப் பொருத்தி விடுவார்கள் - பொருத்திவிட வேண்டும்.
அந்த உறுப்புகள் மூலம் - வாழு கிறார்கள் - செத்துவிடவில்லை. சத்து உள்ளவர்களாக அவர்கள் உறுப்பு மூலம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரு கிறார்கள். பயணங்கள் முடிவதில்லை என்று பாருக்குப் பறை சாற்றுகிறார்கள் என்றுதானே பொருள்?
பெரியார் உறுப்புக் கொடை கழகத் தில் உறுப்பினராகுங்கள்; உடல்கள், உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிட உறுதி மேற்கொள்ளுங்கள்.
அது கொடையாளனை நிரந்தரமாக வாழ வைக்கும்! -veramani

தமிழ் ஓவியா said...


மந்திரம்


கேரள மந்திரவாதம், மலையாள மந்திரவாதி இவை நாடு நெடுகப் பிர பலமான சொற்கள்; கோட் டயத்தை அடுத்த சூர்ய காவடி மனை மந்திரவாதி சூரியன் சுப்பிரமணியன் பட்ட திரிப்பாடு தலைமை யில் ஆண்டுதோறும் ஒரு பக்தர் குழு இமயமலை வரை சென்று ஏழு புனித நதிகளின் நீர், மானசரோ வர் ஏரி நீர் ஆகியவற்றைச் சேகரித்துக் கொண்டு வந்து மாசுபட்ட 44 கேரள நதிகளைத் தூய்மைப்படுத் தும் தொண்டு செய்து வருகிறது.

இந்தப் பணி 8 ஆண்டு களாக நடைபெற்றதில் 20 நதிகள் தூய்மைப்படுத்தப் பட்டு உள்ளதாகத் தெரி விக்கிறார் சூரியன். தனது மாந்திரிக பூஜைகளில் எல்லா ஜாதியினரும் கலந்து கொள்ள அனு மதித்து ஒரு புரட்சி செய்திருக்கிறார் சூரியன். அது மட்டுமல்ல, இதுவரை சில பூஜாரிகளுக்குத் தெரிந்திருந்த கணேச மந்திரத்தைப் பகிரங்கப் படுத்தினார். மனிதர்கள் மேலும் நல்ல நிலை அடை வதற்காக இஷ்ட பூர்த்தம் என்ற 256 நாள் வேள்வி ஒன்றையும் நடத்தினார் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம்.

இதனைப் படித்து நன்கு வயிறு குலுங்கச் சிரிக்கலாம். மந்திரத்தால் மாங்காய் விழுமா? என்று குக்கிராமங்களில்கூட கேள்வி கேட்பார்கள். அந்தப் படிக்காத மக் களிடத்தில் இருக்கும் பொது அறிவுகூட இந்த சங்பரிவார் கும்பலுக்கு இல்லாதது பரிதாபமே!

மந்திரத்தால் நதி களைச் சுத்தப்படுத்த முடி யும் என்றால் கங்கையைச் சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு ஏன் பணம் ஒதுக்க வேண்டும்? பேசாமல் இந்த மந்திர வாதியை மந்திரியாக ஆக்கி விடலாமா? மந்திரவாதி என்பதற்கும் மந்திரி என் பதற்கும்கூட கிட்டதட்ட எழுத்து நெருக்கமாக இருக்கவில்லையா?

மந்திரவாதியால் மாசு பட்ட ஆறுகளைச் சுத்தி கரிக்க முடியும் என்றால் அந்த மந்திரத்துக்கு மேலும் கிக் கொடுத்தோ அல்லது 256 நாள் யாகம் என்பதை 756 நாள் என்று ஆக் கியோ, இந்தியாவில் உள்ள நதிகளையெல்லாம் இணைத்து விடலாமே! எவ்வளவுப் பணம் மிச்சம்!

ஹிந்துத்துவாவாதிகள் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் அரசாங்கமே தேவை இருக்காது.

சூ மந்திரகாளி! என்று கை அசைத்தால் மூட்டை மூட்டையாக நவதானியங்கள் வந்து கொட்டும். ஜெய் ஜக்கம்மா என்றால் எல்லா அய்ஸ் வர்யங்களும் ஆறாகப் பெருக்கெடுத்து நுரை தள்ளி ஓடும் - அப்படித் தானே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஒரு நொடியில் சாதிக்கலாமே!


டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு - பெரும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பி விட்டது. முக்கிய எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி யுள்ளன.

சமூகநீதித் தளத்தில் எப்பொழுதும் முன் வரிசையில் நின்று தடம் பதிக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர், இந்தத் தகவல் வெளிவந்த அந்த நிலையிலேயே கண்டனம் தெரிவித்ததோடு, டில்லியிலே போராட்ட அறிவிப்பினையும் வெளிப் படுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காட்டுக்கு வழி செய்யும் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் உச்சநீதிமன்றம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜஸ்டிஸ் திரு.சதாசிவம் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ள ஒரு காலகட்டத்தில், உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில்தான் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காட்டுக்குக் கதவு திறந்தார். இதே தேதியில் (7.8.1990). அதன் காரணமாக ஆட்சியையும் பறிகொடுத்தார் (பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது!)

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது 2006 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக் குள்ளும் அவ்வாறு செயல்படுத்தாமல் அதனை அய்ந்தாண்டு என்கிற அளவுக்கு இழுத்தடித்து விட்டனர்.

இப்பொழுது என்னவென்றால், உச்சநீதிமன்றம் வரை சென்று எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற தீர்ப்பினைப் பெற்றுவிட்டனர்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு என்று அறிவித்தபோது இதே எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள்தான் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் பெரும் பணமுதலைகள் எல்லாம் இவர்களின் பின்ப(பு)லத்தில் இருந்தனர் - மும்பையில் மதுக்கடைகளை நடத்துபவர்களும் இருந்தனர் - எப்படிப் போராட்டம்?

நோயாளிகளைக் கவனிக்காமல் சீட்டாடிக் கொண்டு இருந்தனர். அரசுக்குச் சொந்தமான தளவாடங்கள்- மின்சாரம் போன்றவற்றை அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பயன் படுத்திக் கொண்டனர்.

இதில் இன்னொருகொடுமை என்ன தெரியுமா? இவர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் நடத்திய நாட்களுக்கும் இதே நீதிமன்றம் சம்பளம் கொடுக்கச் சொன்ன கொடுமையை என்ன சொல்ல!

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சக்திகள் சாதாரண மானவையல்ல - 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறி மாநிலங்களவையில் அவசர அவசரமாக (அதுதான் அந்த நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம்) ஒரு மசோதாவை இரண்டே நிமிடத்தில் நிறைவேற்றிக் கொண்டனர் என்றால், அந்தச் சக்திகள்தான் எத்தகையவை!

இதனை எதிர்த்து அப்பொழுதே திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை - அத்தோடு காலாவதியாகிவிட்டது அந்த மசோதா!

கொல்லைப்புற வழியாக சாதிக்க முடியாததை இப்பொழுது நீதிமன்றம்மூலம் சாதித்துக் கொண் டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200-க்கும் மேல் இருக்கின்றனர்.

இவர்கள் இணைந்து ஒரே ஒருமுறை குரல் கொடுத்தாலே போதும் - ஒரே நிமிடத்தில் சமூகநீதி வெற்றி பெற்றுவிடுமே! ஏன் தயக்கம்?

தமிழ் ஓவியா said...


படிக்கவேண்டிய பாக்கிகள் பெருக்கம்!


பசித்தவர்களும், ருசித்துச் சாப் பிட்டே பழக்கப்பட்டவர்களும் எப் போதும் புதுப்புது உணவு வகைகளை யும், புதிய சமையல் பக்குவங்களையும் ருசி பார்க்கவே விரும்புவர்; அத் தகைய உணவு விடுதிகளையே தேடுவர் - நாடி ஓடுவர்!

அதுபோலத்தான் புத்தகங்களை விரும்பி (சு)வாசித்தே பழக்கப்பட்ட வர்கள் - புதிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து படித்துச் சுவைப்பர் - செரிமானம் செய்து சிந்தனைப் பெட்டகத்தில் ஏற்றி வைப்பர்!

சந்திக்கும் நண்பர்கள் பலரும் புத்தகங்களைக் கொடுத்த வண் ணமே உள்ளனர் - சேர்த்து வைப்ப தற்கு வீட்டில் இடமே இல்லை.

பெரியார் - பகுத்தறிவு நூலகம் சென்னையில் உள்ள அருமையான அறிவுக் கருவூலம்; அதற்கும் இது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்துள்ளேன். அங்கும் இடப் பிரச் சினை; பல நண்பர்களின் கொடை உள்ளம் நாளும் இடப் பிரச்சினையை அங்கேயும் ஏற்படுத்துகிறது. மூன்று மாடி (தளங்கள்) கொண்ட புதிய நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள் ளது. நிதி மற்றும் பல பிரச்சினைகளில் அப்புதிய நூலகக் கட்டட முயற்சித் தள்ளிக் கொண்டே போகிறது!

மதுரைத் தோழர்கள் குறிப்பாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, மண்டலச் செயலாளர் அழகிரிசாமி, கழகத் தோழர்கள் எம்.கனி, முருகேசன் போன்ற பலரும் புத் தகங்களையே, மலர்ச்செண்டுகளுக்குப் பதிலாக கொடுத்து மகிழ்வர்!

அதில் ஒரு நூல்! தேவதாசியும் மகானும் என்ற ஒரு நூல் வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் ஆங்கிலத்திலும், தமிழில் பத்மா நாராயணன் பெங்களூரு நாகரத்தினம் அம்மாள் என்ற பிரபல நாட்டிய, இசை மற்றும் பல்கலைக் கலைஞரான வீராங்கனைபற்றிய ஓர் அருமையான நூல். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் பெண்களும், உயர்ஜாதி ஆணாதிக்கமும், எப்படியெல்லாம் பல்வகைப் போராட் டங்களில் ஈடுபட்டு, தத்தம் திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள்; வரலாறு படைத்தார்கள் -

திருவையாறு தியாகய்யர் சமாதி - கோவில் எல்லாம் எப்படி பல்வகைப் போராட்டத்திற்குப் பிறகு இன்றுள்ள நிலையை எய்தின என்ற வரலாறும், சமூகநீதி - பாலியல் நீதிக் கான தொடர் போராட்டங்களும் தேவ தாசி மகளிர் என்று அழைத்த பெரு மைக்குரிய பெங்களூரு நாகரத்தினம் அம்மாள், முத்து, பழனி, வீணைதனம் மாள், அவர்தம் சந்ததி போன்ற பல வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது! பல வரலாற்று நூல்களில் காண முடியாத சமூக விஞ்ஞானம் - சமூகப் புரட்சி - எதிர்ப்புரட்சி போராட்டங்களும் பற்றிய அரிய தகவல்கள் அந்த ஒரு நூலில் ஏராளம் கிடைக்கின்றன! சுவையாக இருக்கிறது!
இன்னும் நான் படித்து முடிக்கவில்லை; இன்றோ, நாளையோ முடிப் பேன்.

ஜிம்ரோன் என்ற ஒரு உற்சாகமூட்டும் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்:

நீங்கள் ஒவ்வொரு வாரமும் குறைந் தது இரண்டு புத்தகங்களையாவது படிக்கவேண்டும். இதன்படி ஒரு ஆண்டில் நூறு புத்தகங்களைப் படித்து முடிக்கலாம் என்கிறார்!

இப்படிச் செய்தால் நீங்கள் பத் தாண்டுகளில் - பத்தாயிரம் புத்தகங் களைப் படித்து முடிக்கலாமே! அதன் மூலம் பத்தாயிரம் புத்தகங்களின் கருத்துக்குப் பின்தங்கியவர்களாக ஒருபோதும் இருக்கமாட்டீர்கள் அல்லவா!

படிக்க நேரத்தைக் கண்டுபிடிப்பது தான் எம்மைப் போன்றவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை; உறங்குமுன் தவறாது படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். பயணங்கள், குறிப்பாக ரயில் - தொடர்வண்டி பயணங்கள் படிக்க உதவிடுகின்றன - அங்கும் நண்பர்கள் குறுக்கிடாமல் இருந்தால்!

குறிப்பிட்ட நேரம் - படிக்கும் நேரம் - சிலருக்கு உண்டு - நமக்கோ கிடைக்கும் நேரம் எல்லாவற்றையும் படிக்கும், எழுதும் நேரமாக்கிக் கொண்டுள்ளதால், முடிக்கும் நேரம் தெரியாமல், புத்தகங்கள் பாக்கியாகவே உள்ளன!

கடனில் வாழும் பழக்கமுடையவன் அல்ல நான்; காரணம், தேவை குறைவே!

ஆனால், புத்தகக் கடன் பாக் கியோ ஏராளம்! புதிது புதிதாக வந்து சேர்ந்து விடுகின்றனவே என்ன செய்ய! புது வழி தேடுகிறேன் - 24 மணிநேரம் - இதில் தூங்கியும், உண்டும் ஆக வேண்டுமே - அவையும் நல வாழ்வின் இன்றியமையாமை அல்லவா! ---veramani

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...



மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...


அறிவோடு சிந்திக்க...



புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஈழ விடுதலை மாநாட்டை மதுரையில் நடத்தியது திராவிடர் கழகம்


நாம் தொடுத்துள்ள போராட்டம் ஓயாது!

மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்

மதுரை, ஆக.8- நமது அமைப்பு வலிமை மிக்கது - ஈழத் தமிழர்களுக்காக நாம் தொடுத் துள்ள போராட்டம் வெற்றி கிடைக்கும் வரை ஓயாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

மதுரையில் காட்ரோடு தலைமைத் தபால் அலுவலகம் எதிரில் இன்று (8.8.2013) காலை 10 மணியளவில் டெசோவின் ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் உரையாற் றுகையில் குறிப்பிட்டதாவது:

மதுரைக்கும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. டெசோ என்னும் அமைப்பு முதன் முதலில் மதுரையில் தான் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பாக ஈழ விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. குமரிநாடன் என்னும் ஈழத் தோழரே மாநாட்டில் கொடியை ஏற்றினார். இதில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த மாநாடு மதுரையில் நடைபெற்றதுண்டு.

மீண்டும் டெசோ புதுப்பிக்கப்பட்டு அதன் சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று (8.8.2013) நடை பெறுகிறது. காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடைபெற உள்ளது. அடுத்து இரு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபக்சே இருக்கப் போகிறார். கனடா போன்ற நாடுகள் அங்கு நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்திய அரசு சார்பாக பிரதமரோ, மற்ற யாருமோ கலந்து கொள்ள கூடாது.

டெசோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது சிலர் கேலி செய்தார்கள். இதனால் என்ன பலன் என கேட்டார்கள். ஆனால் டெசோவின் சார்பாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு தேவை! உலகளவில் உள்ள ஈழத் தமிழர்கள் எல்லாம் வாக்களித்து எத்தகைய அரசியல் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுதான் இறுதி முடிவு . ஆனால், அதற்கு இடைப்பட்ட நிலையில் கொடுங்கோலன் இராஜபக்சேவும், அவரது சகோதரர்களும் செய்கின்ற ஈழத் தமிழர் ஒழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும். சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியேற்றுவதைத் தடுக்க வேண்டும். அன்றைய மத்திய அரசால் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. திராவிடர் கழகம் அப்பொழுதே அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்த் தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட 13ஆவது திருத் தத்தை இன்றும்கூட செயல்படுத்த மறுக்கிறது இலங்கை அரசாங் கம்! அதற்கு துணை போகிறது இந்திய அரசாங்கம்.