Search This Blog

11.4.13

அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை-பெரியார் எழுதிய உரையாடல்


அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை

அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: - என்ன காரணம் ?

அர்ச்சகர்;- இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக் காரர்கள் சாமி இல்லை, பூதம் இல்லை என்றுசொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்ச்சகர் :- இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும், கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.

ஜோசியர்:- மற்றென்ன காரணம் என்று சொல்லுகிறீர்கள்?

அர்ச்சகர்;- கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி, அதை நிருத்திவிட்டார்களல்லவா? அதனால்தான்?

ஜோசியர்:- இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்? கடவுள்தான் எங்கும் நிரைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வர வேண்டுமா?

ஜோசியர்;- மற்றெதற்காக வருகின்றார்கள்?

அர்ச்சகர்:- இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு வருகின்றார்கள்.

1. தன்னை பக்திவான் என்று பிறர் மதிக்க வேண்டும்.

2. அங்குவரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும் , ஆண் களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வளிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால் தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவைகள் கிடைக்கும். ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில் என்ன பிரயோஜனம்? கோவில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்?

ஜோசியர்:- அப்படியா சங்கதி. அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழிகிடைக்காதோ?

அர்ச்சகர்:- என்ன வழி?

ஜோசியர்:- நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து, தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

அர்ச்சகர்:- அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சௌகரியம், வீடு,வாசல், கட்டில், படுக்கை முதலிய சௌகரியம் ஆகியவைகள் வேண்டாமா இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?

நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி அதுவும் இரகசியம் என்றும், அவசரமென்றும் பயப்படுத்தி 10,5 பெற்றுக்கொண்டு கஷ்ட மில்லாமல், நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ளமுடியுமா?

ஜோசியர்:- என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்துவிட்டது.

அர்ச்சகர்:- உங்களுக்கு என்ன வந்தது ?

ஜோசியர்:- இப்போது எந்தத் ‘தேவடியா’ மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது.

அர்ச்சகர் : - ஏன்?

ஜோசியர்:- ஏன் என்ன அததுகளே பெண்ணும்-மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்ச்சகர்:- இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?

ஜோசியர்; - அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குதான் எங்கு வருகின்றார்கள். ‘திருட்டுத் தேவடியா பிள்ளைகள்’ காயலா வந்தால்-தலை வலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதேயில்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள். என்னடா என்று கேட்டால் சுயமரியாதையடா என்கின்றார்கள்.

அர்ச்சகர்:- சரி, இவ்வளவு ஆனதற்கப்புரம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.

ஜோசியர்:- என்ன?

அர்ச்சகர்:- நாமும் சுயமரியாதை பிரசாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ளமெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது எப்படி என்றால் இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான் அதாவது “நானும் சுயமரியாதைக்காரன்” என்று சொல்லிக்கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல.

ஜோசியர்:- அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பௌத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு-ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்துதான் பு-ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே.

அர்ச்சகர்:- அதுவும் அப்படியா. அப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும் இந்த சு-ம. காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.

--------------------------------------சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட உரையாடல்  -” குடி அரசு” -  10.05.1931

26 comments:

தமிழ் ஓவியா said...


அமாவாசை பூசணிக்காயால் ஆட்டோ கவிழ்ந்தது!


சென்னை, ஏப்.11: வண்டலூர் அருகே அமாவாசைக்காக சாலையில் உடைத்த பூசணிக்காயில் சிக்கி ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. அதில் இருந்த மாற்றுத் திறனாளிகள் உள்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அசோக் நகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் நேற்று கேளம்பாக்கத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் வண்டலூருக்கு சென்று கொண்டு இருந்தனர். கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே அமாவாசைக்கு சாலையில் பூசணிக்காய் உடைத்து இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பூசணிக்காய் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளைத் திருப்பினார்.

அதேநேரத்தில், பூசணிக்காய் மீது ஏறியதில் ஷேர் ஆட்டோ பல்டி அடித்து கவிழ்ந்து நொறுங்கியது. அதிலிருந்த மாற்றுத் திறனாளிகள் கனகலட்சுமி (27), ரம்யா (27), ரேவதி (25), கிரிஜா (24), லதா (26), அவர்களின் மேலாளர் தனசீலன் (54), ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிலர் கை உடைந்தது. சிலருக்கு தலை, முதுகு, காலில் காயம் ஏற்பட்டது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் வந்து அவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தது. விபத்து பற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


கோவைக்கு வாருங்கள் உரக்கப் பேசுவோம்!


நாளை மறுநாள் 13.4.2013 சனியன்று கோவை - சுந்தராபுரத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது ஒரு மாநில மாநாடு எனும் அளவுக்குப் பெருமையும், தகுதியும் உடையதாக இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

மாநாட்டுக்குத் தீர்மானங்கள் வரவேற்கப்பட்டன. இந்தக் கால கட்டத்திற்குத் தேவையானதும், எதிர்காலத்தில் சந்திக்கப்பட வேண்டியதும் சிந்திக்கப்பட வேண்டியதுமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவின் தலைநகரில் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம் உலகையே உலுக்கி எடுத்து பெண்கள் பாதுகாப்புப் பற்றி உரக்கச் சிந்திக்க வைத்தது.

பெண்களுக்குத் துப்பாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்குக்கூட கருத்துகள் உலா வந்தன.

இதுபோன்ற ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகம் நடத்தும் கோவை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.
என்னதான் கல்வி வாய்ப்புகள் பெண்களுக்குப் பெருகி இருந்தாலும் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது, தேவைப்பட்டால் எதிர்தாக்குதல் கொடுப்பதெல்லாம் தேவைப்படுகிறது.

அதற்காகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய இடம் கல்விக் கூடங்கள்தாம்! உடற்பயிற்சி, கராத்தே போன்ற சிறப்புப் பயிற்சிகள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். உள ரீதியாக தன்னம்பிக்கை, துணிவு - இவை எல்லாம் அவசியம் தேவை. அதற்கான கல்வித் திட்டம் நம் நாட்டில் இல்லை என்பதை மரியாதையாக ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.

1929ஆம் ஆண்டிலேயே பெண்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறச் செய்தவர் தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கும்மி, கோலாட்டம் கற்றுக் கொடுப்பதும், கோலம் போடச் சொல்லிக் கொடுப்பதும் தேவையில்லை. மாறாக கைக்குத்து, குஸ்தி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே கோடிட்டுக் காட்டியுள்ளார் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
1987இல் கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தென் மாநில ஒடுக்கப்பட்டோர் சமூக நீதி மாநாட்டில் பெண்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மிக முக்கியமாக பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு பெண் களுக்குத் தேவை என்று வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியர் பணிகளில் ஓரளவு இந்த வாய்ப்பு இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கென்று தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.

நாடாளுமன்றம், மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற மசோதா 1996 முதல் நிலுவையில் இருக்கிறது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதற்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். இதுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையும் முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து கோவை மாநாட்டில் முக்கியமாகக் கருத்துகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பு என்னவென்றால், காலை கருத்தரங்கமாக இருந்தாலும் சரி பிற்பகல் நடக்கும் பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் நடக்கவிருக்கும் திறந்த வெளி மாநாடாக இருந்தாலும் சரி அனைத்து நிகழ்விலும் பெண்களே கலந்து கொள்வார்கள். கழகத் தலைவர் என்கிற முறையில் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு.

இந்திய அளவில்கூட இப்படி ஒரு மாநாடு இந்த வகையில் நடப்பது கோவை மாநாடே! இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்திலும் வேலூரில் நடத்தப் பட்டது.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் இரு கண்கள் போன்றவை யாகும்.

இந்த இரு நிலைகளிலும் வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட முடியும். ஏற்றத் தாழ்வுகள் பிளவுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளும் கட்டுப்படுத்தப்படும்.

சமூக நிலையிலே இருக்கக் கூடிய இத்தகைய ஏற்றத் தாழ்வைப் போக்காத நிலையில், வேறு எந்த சீர்திருத்தம், மாற்றம் வந்தாலும் அது நிலைக்காது என்பது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.
உரக்கப் பேசுவோம் - வாருங்கள் - கோவைக்கு!

தமிழ் ஓவியா said...


மே. வங்கத்தில் அடிதடி அரசியல்!

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த மாணவர் தலைவர் கதிட்தோ குப்தா கடந்த வாரம் நடத்த போராட்டத்தின்போது காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

அதன் எதிரொலியான தாக்குதல் நேற்று டில்லியில் நடைபெற்றது. திட்டக் குழுத் தலைவர் கூட்டிய கூட்டத்துக்குச் சென்றபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அது வன்முறையாக மாறி திரிணாமுல் காங்கிரஸ்காரரான மாநில அமைச்சர் அமித்மித்ரா தாக்கப்பட்டார். மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தங்களைக் கொல்ல சதி நடப்பதாகவும் குறிப்பிட்டார். உடனே கொல்கத்தா திரும்பினார். உடல் நலம் பாதிக்கப் பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே டெல்லி நிகழ்வால் ஆத்திரம் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்டுக் கட்சி களின் அலுவலகங்களை மே. வங்கத்தில் அடித்து நொறுக்கித் தள்ளினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் என்று தெரிந்திருந்தும் வேண்டும் என்றே மம்தா பானர்ஜி அந்த வாயில் வழியே வந்ததுதான் பிரச்சினைக்குக் காரணம் என்கிறார் சி.பி.எம். பொலிட் பிரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி
காங்கிரஸ் புகார்

மத்திய அமைச்சரும் மே. வங்க காங்கிரஸ் புள்ளியுமான தீபாதாஸ் முன்ஷி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் அலுவலகங்களையும் என் காரையும் அடித்து நொறுக்கினர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மோடி ஆட்சியிலே தண்ணீர்ப் பஞ்சத்தால் பெண்கள் பெரும் அவதி!


ராஜ்கோட், ஏப்ரல் 11- குஜராத் மாநிலத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட் டுள்ள பகுதிகளில் உள்ள தலித் இன மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அன்றாடம் அல்லல்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, உயர் இன மக்களின் பிரதிநிதியாக மட்டுமே செயல்படுகின்றார் என்பது இவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

இங்குள்ள சவுராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் தேவதாரி ஆகிய பத்து கிராமங்கள் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றிற்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களை ஊருக்குப் பொது வான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடிக்க மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி அருகே சென்றால் தலித் மக்களை சாதியைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். எனவே கொதிக்கும் வெயிலில் அப்பெண்கள் 3 கிலோ மீட்ட ருக்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இந்தக் கஷ்டத்தையும், அவமதிப்பை யும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இம்மக்கள் அம்மாவட்ட இணை ஆணை யரிடம் சென்று முறையிட்டனர். ஆனால், அதற்காக அவர்கள் மிரட்டப் பட்டனர். கீழ்சாதியில் பிறந்ததற்காக நாங்கள் தாகத்துடன் இருக்கமுடியுமா? என்று தலித் பெண்ணான ஜெயாமக் வானா கோபத் துடன் கூறுகிறார்.

ஆணையரிடம் முறையிட்ட பின்னர், நர்மதை நதி நீர் அய்ந்து நாட்களுக்கு ஒருமுறை இவர்களின் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், அளவு குறைவாக உள்ளதால் இதுவும் இவர் களுக்குப் போதுமானதாக இல்லை.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

தமிழ் ஓவியா said...


கோவையைக் குலுக்க வாரீர்!

கோவையைக் குலுக்க வாரீர்!
பெண்கள் மாநாடு - இது
பெண்கள் மாநாடு
புரட்சிப் பெண்கள் மாநாடு
புரட்சிப் பெண்கள் மாநாடு

புதுமை மாநாடு - புதுமைகள் பல படைக்கும் மாநாடு
எழுச்சியூட்டும் இழிவை அகற்றும்
புரட்சிப் பெண்கள் மாநாடு
வீழ்ச்சியுற்ற சமூகத்தை
உயர்த்தும் மாநாடு!

பெண்கள் புரட்சி மாநாடு
தந்தை பெரியார் படைத்த
புரட்சிப் பெண்கள் மாநாடு
சமூக சமநிகர் பண்பாட்டை
அமைக்கும் மாநாடு
புரட்சிப் பெண்கள் மாநாடு
புதுமை மாநாடு - இது
புரட்சி மாநாடு

சுந்தர மாநாடு - இது
சுதந்திர மாநாடு - உரிமை
ஊக்குவிக்கும் இம்மாநாடு
தகுந்த மாநாடு - இது
தன்மான புரட்சிப் பெண்கள் மாநாடு
சுந்தராபுரமும் - குறிச்சியும்
கொடுக்கும் எழுச்சிமிகு மாநாடு
கோவை குதுகலமாக்கும்
சுயமரியாதை களங்காணும்
கண்ணிய மாநாடு
ஆணுக்குப் பெண் சமநிலைதனை
உயர்த்தும் புரட்சிப் பெண்கள் மாநாடு

பிளக்கும் மாநாடு - நமது
மூளைக்கிட்ட விலங்கினை உடைத்து
சுயமரியாதை வித்தினை
விதைக்கும் - இது
பெண்கள் மாநாடு
மாதர் நெஞ்சத்துப்
புரட்சி வெடிக்கும்
பேதமை நீக்கும் மாநாடு
கோவை குலுக்கும் மாநாடு
இது பெண்கள் மாநாடு
பெண்ணுரிமை நிலைக்கும் நாடு!
பேரிகை முழங்குவோம்
வாரீர்! வாரீர்!!

- மா.கவிகிருட்டிணன், கோவை மாவட்ட துணைத் தலைவர்

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் - திராவிடர் எழுச்சி மாநாடு

சிறீரங்கத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.4.2013 அன்று மாலை வெகு எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

மாவட்டக் கழகத் தலைவர் வரவேற்புரை

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர் ச.கணேசன் நன்றி கூறினார். மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் முன்மொழிந்தார்.

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தமதுரையில் இதே சிறீரங்கத் தில் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். அதில் கிராமக் கோயில் பூஜாரிகள் மாநாடும் ஒரு நாள் நடைபெற்றது.

இதன் நோக்கமென்ன? கிராமக் கோயில் பூஜாரிகள் என்பவர்கள் பார்ப்பனர் அல்லாதார் தான். அவர்கள் நகரப் பகுதியில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக ஆகக் கூடாதா?

அந்த எண்ணம் - அந்த ஆசை அவர்களுக்கு எப்படியும் வந்து விடக்கூடாது என்பதுதான் இதற்குள்ளிருக்கும் சதி என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற் றினார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத் தது என்று மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் தமது தெய்வத்தின் குரல் எனும் நூலில் (பக்கம் 266) குறிப்பிட்டுள்ளார். சிறீரங்கம் மாநாட்டில் பேசிய மாஜி சங்கராச்சாரியர் ராமன் கோயில் கட்டுவதன் அவசியம் பற்றி சிலாகித்துள்ளார்.

மக்களுக்கு இப்பொழுது முக்கிய பிரச்சினை ராமன் கோயில் கட்டுவது தானா? ராமன் கோயில்தான் சர்வரோக மருந்தா?

இதே ஊரில் பிராமணாள் என்ற பெயரில் ஒருவர் உணவு விடுதியை நடத்தி வந்தார். கழகம் களத்தில் குறித்த காரணத்தால் அந்தப் பெயர் நீக்கப்பட்டதோடு, கடையையே காலி செய்து விட்டார்.

சாஸ்திரப்படியே கேட்கிறோம் பிராமணர் ஓட்டல் நடத்தலாமா? உணவை விற்கலாமா? கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் கூறியுள்ளதே!

பார்ப்பான் பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்ய வேண்டும் என்று அதே மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளதே (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 112).

பார்ப்பனர்கள் சங்கீதக் கச்சேரிகளை நடத்து கிறார்களே. மனுதர்மத்தில் சங்கீதம், பார்ப்பனர் களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே (மனுதர்மம் 4, சுலோகம் 15).

மற்றவர்களுக்கு சாஸ்திரத்தை உபதேசிக்கும் பார்ப்பனர்கள் முதலில் தாங்கள் அவற்றைப் பின்பற்றட்டும் என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

சிறீரங்கத்தில் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் இந்துக்கள் ஒற்றுமை யாக இருந்தால் விரைவில் ராமன் கோயிலைக் கட்டலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலீம் களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார் பிஜேபி கும்பல் ஒரு பட்டப்பகலில் இடித்தது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், வினய் கட்டியார் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டுள்ள நிலையில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து கொண் டிருக்கக்கூடிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று பேசலாமா?

அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்றால் அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல, பாபர் மசூதி என்பது வெறும் கட்டடம்தான் - அதை இடித்தது குற்றமல்ல என்றும் பேசியதும் இதே சங்கராச்சாரியர்தான் இதன்மீதுகூட சட்டப்படி வழக்குத் தொடுக் கலாம் ஏன் செய்யவில்லை?

நாளைக்கு யாரோ ஒருவர் ஆத்திரப்பட்டு காஞ்சி மடத்தையோ ரங்கநாதர் கோயிலையோ இடித்தால் அது வெறும் கட்டடம்தான் - இடித்ததது குற்றமில்லை என்று சொன்னால் சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சங்கராச்சாரியார் கூறியிருப்பதால் அதற்குப் பதிலாக இதனைக் கூறுகிறோம். வன்முறையை தூண்டுவது கழகத்துக்கு உடன்பாடல்ல என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு ஏன்? தமிழக அரசுக்கு தொல். திருமாவளவன் வினா


சென்னை, ஏப்.11- தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது ஏன்? என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வினா எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு 2012 ஆம் ஆண்டில் தலித் மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக மது ரையைச் சேர்ந்த 'எவிடன்ஸ்'என்ற அமைப்பு ஆதாரங்களோடு அம்பலப் படுத்தியிருக்கிறது. விழுப்புரம், தருமபுரி மாவட்டங்கள் சாதி வெறியாட்டத்தில் முன்னணியில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டில் 2048 வழக்கு கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அர சாங்கத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் அந்த வழக்குகளில் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பெண்கள்மீதான பாலி யல் வன்முறைகளுக்கு எதிராக போராட் டங்கள் நடைபெற்ற கடந்த 2012 ஆம் ஆண்டில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக தமிழ்நாட்டில் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .

ஆனால் அதில் ஒரு குற்றவாளிகூடத் தண்டிக்கப்படவில்லை. பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க இந்தி யாவிலேயே முதல் மாநிலமாக முந்திக் கொண்டு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் தலித் பெண்கள்மீதான வன்கொடு மைகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?

குற்றங்கள் அதிகரிப்பு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண் டும் என்று சட்டம் இருந்தபோதிலும் நீதிமன்றம் தலையிட்டு ஆணைப் பிறப்பித்த தருமபுரி வழக்கில் மட்டும்தான் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகளில் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்கள் மீதான வன்கொடு மைகள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதைத் தமிழக அரசு ஆராய்ந்து பார்க்கவேண்டும். தலித் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் சாதிவெறியர்களை அரசு கட்டுப்படுத் தாததே இதற்கு முதன்மையான காரணம்.

அவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக தமிழக அரசு அவர்களின் வெறுப்புப் பிரச்சாரத்தை சுதந்திரமாக அனுமதித்து வருவது வேதனை அளிக்கிறது.இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டின் அமைதி கெடுவதோடு மாநிலத்தின் வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கும் என்பதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சாதிவெறியர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறதோ என்ற அய்யம் நமக்கு எழுகிறது.

அத்தகைய குறுகிய நோக்கத்தில் செயல்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும் என்பதைத் தான் இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஈழத் தமிழர் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவும், தமிழக உரிமை களைப் பாதுகாப்பதற்காகவும் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சூழலில் அவர்களிடையே பகையை ஏற்படுத்திப் பிரிவினையைத் தூண்டும் சாதி வெறியர்களைத் தனிமைப் படுத்த வேண்டுமென்றும், நலிந்த பிரிவின ரான தலித் மக்களைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக போராட முன்வரும்படி இடதுசாரிகளை யும், ஜனநாயக சக்திகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைக் கிறது என்று தொல்.திருமாவளவன் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மனிதர்கள் மட்டுமல்ல, மொழிகளும் குரங்கிலிருந்தே தோன்றியவையே!


இன்றைய மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தன என்பதை தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்குக்கு நெருங்கிய பிரிவான கெலாடா ரக குரங்குக்கு சொந்தமான சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். குரங்கினங் களிலேயே, மிகவும் சிக்கலானதாக கருதப்படும் கெலடா குரங்கின் ஒலிகள், மனிதர்களிடம் மொழிகள் தோன்றிய விதத்தை விளக்கப் பயன்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

கரண்ட் பயாலஜி என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வின் முடிவுகளின்படி, இந்த கெலடா குரங்குகளின் ஒலிகள், மனிதர்களின் பேச்சு ஒலிகளின் அம்சங்களுக்கு மிகவும் நெருங்கி வருகிறது. கெலடா குரங்குகள் எழுப்பும் ஒலிகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, சிக்கலானவையும் கூட.

கிப்பன்ஸ், சிம்பன்சி உள்ளிட்ட பெரும்பான்மை குரங்குகள் வெறும் அடிப்படை ஒலிகளை மட்டுமே எழுப்ப வல்லவை. இது பரிணாமவியல் அறிஞர்களுக்கு பல நாள்களாகப் புரியாத புதிராகவே இருந்தது. அதாவது பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக நெருங்கிவரும் குரங்கினம், மனிதர்களின் வாய்மொழி ஒலிகளைப்பொறுத்தவரை மிகவும் விலகி இருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு விஞ்ஞானிகளால் இதுவரை விடைகாண முடியவில்லை.

ஆனால் தற்போது தங்களின் இந்த நெடுநாள் கேள்விக்கு விடை காண்பதில் கெலெடா குரங்குகளின் ஒலிகள் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்த கெலடா குரங்குகளின் வித்தியாசமான ஒலிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, மனிதர்களின் வாய்மொழி ஒலிகளின் பொதுவான ஒலிவடிங்களோடு, இந்த கெலடா குரங்குகளின் வாய்மொழி ஒலி அலைகள் மிகவும் ஒத்துப் போவதை இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மேலும் மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவே, இந்த கெலடா குரங்குகள் ஒலியெழுப்பும்போது, அவற்றின் தாடைகளும், உதடுகளும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள்.

குரங்கினங்களில் இப்படியான வாயசைவுகளை தாங்கள் கவனிப்பது இதுவே முதல்முறை என்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் முனைவர் தோர் பெர்கம். மனிதர்களின் பேச்சுவடிவத்தின் ஆரம்பகட்ட ஒலிகள் இந்த கெலடா குரங்குகளின் ஒலிகளை ஒத்து இருப்பதாக கருதுகிறார் அவர்.

தங்களின் ஆய்வின் அடுத்த கட்டமாக, கெலடா குரங்குகளின் ஒலிகளுக்கு குறிப்பாக அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராயவிருக்கிறார்கள்.

மனிதர்கள் குழுக்களாக வாழும்போது ஒருவர் மற்றவருடன் நெருக்கமாவதற்கு தங்களின் பேச்சை பயன்படுத்துவதைப் போலவே, பெருங்கூட்டமாக வாழும் இந்த கெலடா வகை குரங்குகளும் தங்களுக்குள் ஒன்றோடொன்று நெருக்கமாவதற்கு தமது வாயொலிகளை பயன்படுத்துவதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


அண்டப்புளுகு என்பது இதுதானோ!



2012 மார்ச்சில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப் பட்டது. போர்ப் படிப்பினை மற்றும் மறு சீரமைப்புக் கான குழு (L.L.R.C) என்னும் பெயரில் இலங்கை ராஜபக்சே அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் கண்டுள்ளவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போர்க் குற்றங்களைச் செய்த இலங்கை அரசின் அதிகார வர்க்கம்தான்.

2012 மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கண்டிருந்தபடி எல்.எல்.ஆர்.சி. மீது இலங்கை அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், மீண்டும் கடந்த 21.3.2013 ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மீண்டும் அதே பல்லவிதான்.

மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை 18 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திர பன்னாட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் இது மிக விழிப்பாக நீக்கப்பட்டு மறுபடியும் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருடன் கையில் சாவி கொடுத்த கதை என்று அப்பொழுதே விமர்சனம் எழுந்தது.

நேற்று வந்த ஒரு தகவல் அது உண்மைதான் என்பதை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகி விட்டது. எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டது. அதன்மேல் இலங்கையின் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியதாம். அந்த விசாரணையின் முடிவில் அது தெரிவித்திருக்கும் விடையங்கள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும், அய்.நா.வும் அமெரிக்காவும், உலக நாடுகளும் மனித உரிமை ஆணையமும் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனவே என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

சிங்கள இராணுவ வீரர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் எந்த ஒரு அப்பாவித் தமிழரும் இராணுவத்தால் கொல்லப்படவில்லை. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள்தான் சர்வதேச நெறிமுறைகள் அனைத்தையும் மீறியுள்ளனர் என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பாகவே கூறிவிட்டது.

பல்லாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம் அல்லாமல் வேறு எந்த நாட்டுப் படை கொன்று குவித்ததாம்?

பிரிட்டனின் சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் பொய் - சிங்கள ஓநாய்கள் - ஆட்டுக்குட்டிகளை எங்கள் மார்போடு அணைத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம் என்று சொன்னால் நம்பித் தொலைக்க வேண்டியதுதானே!

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் சொல்லுவதைத்தான் இலங்கை இராணுவ நீதிமன்றமும் சொல்லியுள்ளது.

இதற்குப்பின் அடுத்த கட்டம் என்ன? அய்.நா.வும், மனித உரிமை ஆணையமும் அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன?

நமக்கு ஒரு சந்தேகம்; அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் இந்தோனேசியா நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்ததே - அதன்மீது என்ன நடவடிக்கை என்பதுபற்றி மூச்சுப் பேச்சே இல்லையே - அவை வெறும் காகிதக் கட்டுகள் தானா?
அய்.நா. அமைத்த குழுவின் அறிக்கை நம்பகத் தன்மை உடையதா? கொலைகாரனே நீதிபதியாகி தீர்ப்பு சொன்ன இலங்கை இராணுவ நீதிமன்றத்தின் முடிவு நம்பகத்தன்மை உடையதா?

இதுபற்றி முடிவு செய்யும் தன்மையில்தான் உலகின் யோக்கியதாம்சமே அடங்கியுள்ளது.12-4-2013

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி


மதங்களுக்கு உயிர் நாடியாய் இருப்பது பிரச்சாரமும், பண முமேயல்லாமல் அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனப் பெண் மொட்டை அடிப்பதுண்டா?

ஆண்களும், பெண்களும் கோவில்களுக்கு சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடி கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணிய காரியம் என்கிறார்கள். எந்த பார்ப்பனராவது, பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?

தமிழ் ஓவியா said...


யாரால் அனுப்பப்பட்டார்கள்?


ஆழ்வார்கள், அவதார புரு ஷர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய் யர்கள், திருடர்கள், கொலைகாரர் கள், நம்பிக்கைத் துரோகம் செய் கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

(குடிஅரசு, 27.8.1949

தமிழ் ஓவியா said...


நாத்திகம் பற்றி வினோபா


நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக ஒருவர் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: பயிற்சி பெற்றோருக்கு உடனே பணி ஆணை வழங்குக! குடந்தையில் தமிழர் தலைவர்


குடந்தை, ஏப்.12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணி வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால், கட்சி வேறுபாடு, ஜாதி வேறு பாடின்றி பொதுமக்களைத் திரட்டி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடை பெறும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

குடந்தையில் 10.4.2013 அன்று மாலையில், மகாமகாக் குளம் மேல்கரையில், குடந்தை பெரு நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம், குடந்தை கழக மாவட்டம் ஆகியவற்றின் சார்பில், திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவரின் எழுச்சி உரை

இக்கூட்டத்தில், தமிழினம் சந்திக்கும் சவால்கள் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில், பார்ப்பன ஜாதி ஆதிக்கம், ஆணவம் என்பதனு டைய விளைவாக, இன்னமும் கோயில்களுக் குள்ளே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று ஏன் எதிர்க்கவேண்டும்.

கேரளாவில் பெரிய பெரிய கோவில் இருக்கின்றது. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இருக்கிறதே, அதனை எதிர்த்து யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லையே?

ஆனால், இங்கே அச்சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்களே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண் டும் என்று தி.மு.க. நிறைவேற்றிய அந்தச் சட்டம் மீண்டும் எழுந்து நடமாடக் கூடிய அளவிற்குச் செயல்படுத்தவேண்டும். அது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினரும் அவரவர்கள் பங்கிற்கேற்பத் தயாராக இருக் கிறார்கள். அதனை செயல்படுத்தவேண்டும்.

தமிழக அரசு, சுமுகத் தீர்வு என்கிறது ஏதோ புதிர் நாவல் மாதிரி சஸ்பென்ஸ் இருக்கக்கூடாது. சுமுகத் தீர்வு வந்தால் நல்லதுதான். இந்தச் சட்டத்தைப் நாங்கள் ஏற்கிறோம் என்று பார்ப்பனர்கள் சொல்லவேண்டிய கட்டத்தை இந்த ஆட்சி உரு வாக்கினால், நாங்கள் பாராட்டிச் சொல்வோம். நல்லது செய்யும்போது பாராட்டுவோம்; தவறு செய்யும்போது கண்டிக்கிறோம்.

நாங்கள் ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இல்லையே!

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், மனித நேயத்திற்கு எதிராகப் போனால், அதனைக் கண் டிக்கவேண்டியது மனிதநேயர்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான், தமிழக அரசுக்கு, அ.தி.மு.க. அரசுக்கு - ஏற்கெனவே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, எங்களிடத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 60 சதவிகித இட ஒதுக்கீடு, அதன்படி பயிற்சி நடைபெறும் என்று. அதற்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சி அந்தச் சட்டத்தை நிறைவேற்றி, 69 சதவிகித அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்தி, பயிற்சி கொடுத்திருக்கிறார் கள். அதை இப்பொழுதுள்ள ஆட்சி நடைமுறைப் படுத்தவேண்டும் அல்லவா!

பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் இப்பொழுது பணி யின்மையால் பட்டினியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இதில் என்ன நட்டம் வந்துவிடும்.

இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக, தெளிவாக தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சட்டத்தை, சுமூகத் தீர்வு என்ற பெயராலே என்ன செய்தாலும், நடத்தி வெற்றி காணவேண்டும்; அமுல்படுத்தவேண்டும்.

இல்லையென்றால், கட்சி வேறுபாடு இல்லாமல், ஜாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும். ஜூன் மாதம் முதற்கொண்டு அப்பணிகளைச் செய்யும் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


பி.பி. மண்டல்


பிற்படுத்தப்பட்ட மக்கள் தம் வாழ்நாளில் மறக்கக் கூடாத ஒரு பெருமகன் பி.பி. மண்டல் ஆவார். அவரின் நினைவு நாள் இந்நாள் (1982).

பீகார் மாநில முதல மைச்சராகவும் இருந்தவர். இவரின் தலைமையில்தான் 20.12.1978 அன்று பிரதமர் மெரார்ஜி தேசாய் அவர் களால் பிற்படுத்தப்பட்டோ ருக்கான நலக்குழு அமைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆவது பிரி வின்படி குடியரசு தலைவர் அவர்களால் இத்தகு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தொடக்கத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எவரும் உறுப்பினராக இல்லாத நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மான மிகு கி.வீரமணி அவர் களால் அன்று முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்ட தன் விளைவாக தமிழ் நாட்டைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த சுப்பிர மணியம் அவர்கள் நியமிக் கப்பட்டார்கள். அவர் கடைசி வரை கழகத் தோடும் தமிழர் தலைவ ரோடும் தொடர்பு கொண்ட வண்ணமாகவே இருந்தார்.

குழு அறிக்கைக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது, கலந்துரை யாடுவது என்பனவற்றில் பெரியார் திடலோடு நெருக் கமான உறவோடு இருந்து வந்தார்.

பி.பி. மண்டல் அவர் களும், சுப்பிரமணியம் உள்ளிட்ட உறுப்பினர்களும் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் (30.6.1979) சிறப்பான வர வேற்பும் அளிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பி.பி. மண்டல் மனந் திறந்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறேன்: நாங்கள் அரசுக்கு அறிக்கை அளிப் போம். ஆனால் அரசு அத னைச் செயல்படுத்தும் என்பதற்கு உறுதி யில்லை. அதனைச் செயல்படுத்தும் திறன் உறுதி பெரியார் மண் ணுக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இருக் கிறது! என்று முழங்கியது இன்னும் காதுகளில் ரீங் காரம் செய்கிறது!

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் தமிழர் தலைவர் அவர்கள், செயல் படுத்திக் காட்டுவோம் என்று சங்கநாதம் செய் தார். அதன்படி 42 மாநாடு களையும், 16 போராட்டங் களையும் நடத்தி கழகம் செயல்படுத்தியும் காட் டியதே!

ஆனாலும், பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில், ஏழு விழுக்காட்டைத் தாண்ட வில்லை - நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு. பயணம் செய் வோம் - பணி முடிப்போம் என்று மண்டலின் நினைவு நாளில் உறுதி கூறுவோம்! வாழ்க மண்டல்!

- மயிலாடன் 13-4-2013

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 13


ஏப்ரல் 13ஆம் நாளை தமிழ்நாட்டு மக்களால் மறக்கவே முடியாது. இந்நாளில்தான் 1954ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

எந்தச் சூழலில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்? உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் ஏற்றிப் போற்றப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் நான்காம் வகுப்பே படித்திருந்த காமராசர் அமர்ந்தார் என்பது சாதாரணமானதல்ல.

ஆச்சாரியார் ஏன் தூக்கி எறியப்பட்டார்? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மக் கண்ணோட்டத் தோடு - அரை நேரம் படிப்பு - அரை நேரம் அப்பன் தொழில் என்ற குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினாரே! 1952இல் மட்டுமல்ல; 1937இல் சென்னை மாகாண பிரதம அமைச்சராக வந்த போதும்கூட இதே ராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை இழுத்து மூடினாரே!

ஆச்சாரியாரின் இந்த மனப்பான்மையை மனதில் நிறுத்தினால் தான் 1954இல் இதே நாளில் காமராசர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன சூழ்நிலையையும், காலத்தின் கட்டாயத்தையும் அறிய முடியும்.

ஆச்சரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார்; அதே நேரத்தில் காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

கே.ஆர். விசுவநாதன் என்ற சட்டமன்ற உறுப் பினர் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். வல்லுநர் குழு ஒன்றை நியமித்து புதிய கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்: அறிக்கை வரும் வரை கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக (முதல் அமைச்சர் ராஜாஜிக்கு ஆதரவாக) 137 வாக்குகளும் கிடைத்தன. மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிபுணர் பருலேகர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க மறுத்து விட்டார் முதல் அமைச்சர் ஆச்சாரியார். கடும் எதிர்ப்புக் காரணமாக ராஜாஜி பதவி விலகினார்.

காமராசர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு எளிதில் இசையவில்லை. தந்தை பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களும் கொடுத்த அழுத்தமும் துணிச்சலும்தான் அவர் ஒப்புதலுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

மக்கள் எதிர்பார்த்தபடியே ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளை மளமளவென்று திறந்து மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இலவசக் கல்விக் கதவைத் திறந்து, தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் கல்விக் கண்களைத் திறந்து விட்ட வள்ளல் ஆனார்.

இன்றைக்குக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை கொள்ளவும் 69 விழுக்காடு இடஒதுக் கீட்டினை சட்டரீதியாகப் பெற்றிடவும் கால்கோள் போட்ட கருப்புத் தங்கம் காமராசர்!

ஆம், அவாள் ஆத்து ஆனந்தவிகடன் எழுதியதுபோல கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர்!

காமராசருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் கல்வி வளர்ச்சி செம்மாந்து ஓங்கியது என்பதில் அய்யமில்லை.

இன்னும் மத்திய அரசின் கல்வி நிறுவனங் களில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., முதலியவற்றில் ஒடுக்கப் பட்டோருக்குக் கதவடைப்பு எனும் நிலைதான் தொடர்கிறது அந்தக் கதவையும் உடைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிகரமாக வெளிவரும் நாள்தான் தந்தை பெரியார் அவர் களுக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் உண்மையான நன்றி தெரிவிக்கும் உன்னத நாளாகும்.

வாழ்க பெரியார்!
வாழ்க காமராசர்!

தமிழ் ஓவியா said...


எதிர்க்காமல்...


மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது.
(விடுதலை, 5.11.1967)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம்: திராவிடர் கழகக் கூட்டங்களும்; பார்ப்பனர்கள் ஒத்துழைப்பும்!



தமிழ்நாடு முழுக்கவும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திரா, கருநாடகா, மும்பை, புதுடில்லி என இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட பெரியார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சிறீரங்கத்தில் மட்டும் ஏதாவது சலசலப்பு கேட்கிறது. திராவிடர் கழக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு வேலையிலும் வந்துவிடுகிறது அந்தச் சலசலப்பு! எந்தச் சலசலப் புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிகள் நாங்கள், என பட்டுக்கோட்டை அழகிரி அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் அவர் சொன்னது இன்று வரை சிறீரங்கத்துப் பார்ப்பனர்களுக்குத் தெரியவில்லை போலும்!

சிறீரங்கத்தில் நமது தோழர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தொடங்கும் அதே வேளை பார்ப்பனர்களும் தொடங்கிவிடுகிறார்கள் வேலை! இதில் இன்னொரு வியப்பு என்னவெனில், திராவிடர் கழக நிகழ்ச்சிகள் சிறீரங்கத்துத் தமிழர்களுக்குத் தெரிவதற்குள், அவாள்களுக்குத் தெரிந்து விடு கிறது.

இன்னும் சொன்னால், திருவெறும்பூர் கழகத் தோழர்களுக்குக்கூட தாமதமாகவே தெரியவரு கிறது. போகிற போக்கில் பார்ப்பனர்களைக் கைப்பேசியில் அழைத்து, ஏம்ப்பா! சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்வார் கள் போல! அவ்வளவு சுறுசுறுப்பு!

நம் தோழர்கள் ஏதோ சின்னதாய் ஒரு தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்வார்கள். பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்து அதைச்செய்து, இதைச்செய்து அல்லது எதையாவது செய்து தெருமுனைக் கூட்டத்தைப் பொதுக் கூட்டமாக மாற்றிவிடுவர். சரி! நம் தோழர்கள் நீண்ட நாள்கள் ஆச்சே, என ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயல்வார்கள். எட்டுப் பார்ப்பனர்கள் ஒன்றாய் சேர்ந்து, எட்டுத்திக்கும் பிரச்சினைச் செய்து பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிவிடுவார்கள். அண்மையில் கூட பிராமணாள் உணவகம் தொடர்பான கூட்டத் தைப் பார்த்து, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இது என்ன மாநகரக் கூட்டமா? மாநாட்டுக் கூட்டமா? என்று கேட்டார்கள்.

தமிழ் ஓவியா said...


சிறீரங்கத்தில் கூட்டம் என்றால் அவ்வூர் தோழர்களை மட்டும் நாம் பார்க்க முடியாது. திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம் பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கைந்து மாவட்டத் தோழர்களையும் அங்கு காணலாம். அந்த அளவிற்குப் பெருமைச் சேர்க்கும் சிறீரங்கப் பார்ப்பனர்களுக்கு நன்றி தெரிவித்துக்கூட நாம் ஒரு கூட்டம் நடத்தலாம். இப்படியான சூழலில்தான் சென்ற 4ஆம் தேதியன்று சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. உடனே இச்செய்தி பார்ப்பனர்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படித் தெரியும் என்று கேட்டால், நாங்களும் விடுதலை படிப்போம்ல..... என வடிவேலு பாணியில் அனலாய்ப் பேசுகிறார்கள்.

தோழர்கள் மாநாட்டிற்கான வேலைகளை முடுக்கிவிட, அவாள்களும் வேட்டியை முறுக்கிவிட்டுப் போனார்கள். எங்கு போனார்கள்? சிறீரங்கம் காவல் நிலையம் நோக்கி! அதுதான் மாநாட்டிற்கு நாம் அனுமதி வாங்கி விட்டோமே! அவர்கள் ஏன் போனார்கள்? என்று கேட்காதீர்கள். நாம் வாங்கியது மாநாடு நடத்த! அவர்கள் போனது மாநாட்டைக் கடத்த!

ஒவ்வொரு முறையும் நாம் கூட்டம் நடத்தும் போதும் அவர்கள் மறக்காமல் செல்லுமிடம் சிறீரங்கம் காவல் நிலையம். அங்கு போய் ஆணையரிடம் முறையிடுவார்கள். ஏம்ப்பா! அரங்கநாதரிடம் முறையிட வேண்டியது தானே? என யாரும் கேட்கக் கூடாது. அவாள்களுக்குத் தெரியும் அது முழு மனிதனை படுக்கை வசத்தில் செதுக்கிய வெறும் பாறை என்று! சரி! காவல் நிலையம் போய் என்ன சொல் வார்கள்? சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் நடத்தக்கூடாது, அவர்கள் எங்களைப்பற்றி தவறாகப் (?) பேசுவார்கள், பிரச்சினை வர வாய்ப் பிருக்கிறது என்றெல்லாம் குறைப்பட்டு முறையிடு வார்கள். காவல் துறை ஆணையர் கொஞ்சம் மெத்தனமாக இருந்தால், எங்களுக்கு முதல்வரைத் தெரியும், பிரதமரைத் தெரியும், ஒபாமாவைத் தெரியும் என உலகளவில் சொந்த பந்தங்களைக் கூட்டுவார்கள்.

இதென்னப்பா வம்பா போச்சு! எனக் காவல்துறை ஆணையரும் நம் தோழர்களை அழைப்பார், என்னப்பா கூட்டம் நடத்தப் போறீங்க? எனக்கேட்பார் (அது தான்! சென்ற வாரமே உங்களிடம் அனுமதி வாங்கிவிட்டோமே என்றெல்லாம் சொல்லக்கூடாது. கேட்ட கேள்விக் குப் பதில் சொல்ல வேண்டும்), கூட்டத்திற்கு யார் யாரையெல்லாம் வருகிறார்கள்? என்ன பேசு வார்கள் என எழுதிக் கொடுங்கள். குறிப்பா பிராமணர்கள் குறித்துப் பேசக்கூடாது. அதுவும் அவர்கள் மனம்(?) நோகப் பேசக்கூடாது, என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.

நம் தோழர்களும் வகுப்பு முடித்து வந்து விடுவார்கள் பிறகு மீண்டும் அழைப்பார்கள். விளம்பரப் பலகை இரண்டுதான் வைக்க வேண்டும். நான்கு வைக்கக்கூடாது, ஒலிபெருக்கி நான்குதான் வைக்க வேண்டும். எட்டு வைக்கக் கூடாது. என ஏதோ மாலத்தீவில் கூட்டம் நடத்துவது போல பேசுவார்கள். திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட வளைவு (ஆர்ச்) வைக்க அனு மதிக்க மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால், வளைவை யாராவது எரித்துவிட்டால் என்ன செய்வது? எனக் காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். என்ன செய்வது? என்கிற காவல்துறையினரின் வார்த்தை இன்றுவரை நமக்குப் புரியவில்லை.

சிறீரங்கத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறார்கள், மனசு வலிப்பதாய் துடிக்கிறார்களே! அரங்கநாதர் கோயிலில் தினமும் விழாக்கள் நடத்துகிறீர்களே? அதை நிறுத்த வேண்டும் என நாங்களும் புகார் செய்யவா? சமஸ்கிருதத்தில் பொய், பொய்யாய் உளறி, எங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறீர்களே... அதற்கும் சேர்த்துக் கிரிமினல் புகார் கொடுக்கலாமா? அவ்வாறு புகார் செய்தால் காவல்துறை அதை ஏற்றுக்கொள்ளுமா? அதன் மீது நடவடிக்கை எடுத்து, பார்ப்பனர்களையும், ஆன்மீகத் தமிழர் களையும் திருத்தி நல்வழிப்படுத்துமா?

தமிழ்நாட்டில்தான் திருவண்ணாமலை இருக்கிறது. ஆன்மீக ஊர் என்கிறீர்கள். பழனி இருக்கிறது, மேல்மருவத்தூர், கும்பகோணம் இருக்கிறது. அங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் வருவதில்லையே? சிறீரங்கம் மட்டும் என்ன கைபர், போலன், கனவாய் அருகிலா இருக்கிறது? எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் கொஞ்சம் அதிகம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வார்களா?

தமிழ்நாட்டின் மொத்தப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தும்கூட பெரியாரை, அவரது இயக் கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, தெரிந்து கொள்ளுங்கள். ஆணவத்தில் கூறவில்லை! நியாயத் தில் கூறுகிறோம்!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் எங்களால் எதிர்கொள்ள முடியும். உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நேர்மை வழி நடக்கிறோம்! எங்கள் செயல்களுக்குப் பின்னால் சூழ்ச்சி கிடையாது, வன்முறை கிடையாது, சமூகக்கேடு கிடையாது, மனித அழிவு கிடையாது. ஆனால் அத்தனையும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கிறது. அதை எதிர்த்த பயணம் தான் எங்களின் போராட்டங்கள்! எங்களின் நிகழ்ச்சிகள்!

நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்! ஒருபோதும் களைத்து ஓயமாட்டோம்! காரணம் எங்கள் பயிற்சியாளர் பெரியார்!!

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தில் சு.சாமிக்கு மூக்குடைப்பு


சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் செய்தியில் ஆரம்ப காலத் திட்டத்தின்படி, இத்தாலிய கடற்படை வீரர்கள் இந்தியாவிற்குத் திரும்ப மாட்டார்கள்; இத்தாலிய தூதர் நாடு கடத்தப்படுவார்; குடும்பத்தை இத்தாலி நாடு காட்டிக் கொடுக்காது என்று சொன்னார் அதே சமயத்தில் இத்தாலி அரசு தமது கடற்படை வீரர்களை திரும்ப அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.

நான் மட்டும் உச்சநீதிமன்றத் திற்குச் சென்று, இத்தாலிய தூதரை அடக்கி வைக்கவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இருக்காவிட்டால் இன்னேரம்... என்று சுவாமி பரபரக்க, அவரது தொண்டரடிப் பொடி டிவிட்டர், படையினர், தகுதியில்லாத நிலையில், அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு களைக் குவித்துள்ளனர். அதன்படி, சு.சாமியின் புதிய மந்திரக் கதைகளில், அவரின் பொது நல வழக்கு காரணமாகத்தான், உச்சநீதிமன்றம் இத்தாலிய தூதர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததன் விளைவாக இத்தாலிய அரசாங்கம் மண்டியிட்டது என்றெல்லாம் முழங்கி வரும் வேளையில், சு.சாமி யின் வெற்றிப் பவனியின்போது உச்சநீதிமன்றம் வெந்நீர் ஊற்றி விட்டது.

சு.சாமியின்மீது விழுந்த அதிரடி அறை, இத்தாலிய தூதர் இந்த நாட்டை விட்டு செல்லக் கூடாது என்ற தடையை நீக்கியபோது, விழுந்தது.

தமிழ் ஓவியா said...


இத்தகைய தூதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றிய விண்ணப்பம் செய்வதற்கு சுப்பிர மணிய சுவாமி செயல்பட்ட பொழுது, அவருக்கு இந்த அடி விழுந்தது.

டெலிகிராப் பத்திரிகை கூறுவ தாவது:

நீர் யார்? என்று உங்கள் மன்ற முதன்மை நீதிபதி கேட்டார்.

தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வந்துள்ளதாக சுப்பிரமணியசாமி கூறினார். அதற்கு நீதிபதி, நீர் யாரென்று நான் கேட்கிறேன். நீர் ஒரு வழக்கறி ஞரில்லை; ஆகவே இதில் உமக்கு உரிமையுமில்லை; வாதிடவும் உரிமை யுமில்லை. வீதியில் போகிறவர்கள் எல்லாம் வந்து, நான் வழக்காட விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன ஆகும்? இதுபோல இதற்கு முன் நீர் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது

நான் யார் என்று தெரியுமா? என்று கேட்பதன் மூலம் தனது அதி காரத்தை வலியுறுத்திக் கொள்ளும் இந்த நாட்டில், அதுவே மேலும் ஒரு அவமானகரமாக அமைந்து விட்டது.

உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி கபீர் அத்துடன் விட்டுவிடவில்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த சுப்பிரமணிய சுவாமியைப் பின் இருக்கைக்குப் போகச் சொன்னார். முதல் வரிசை வழக்கறிஞர்களுக் கானது; வழக்கில் சம்பந்தப்பட்டவர் களுக்கானது அல்ல; அங்கே உட்கார உமக்கு உரிமை இல்லை என்று சொன்னார்.

சுப்பிரமணியசுவாமி யாரோ ஆகிவிட்டார். முக்கியமானவர்கள் (பத்து) இருக்கையிலிருந்து வெளி யேற்றப்பட்டார்! சதி நடக்கிறது என்று கூக்குரலிட காரணம் கிடைத்து விட்டது. சுப்பிரமணிய சுவாமியும் அதைத்தான் செய்தார்.
இங்கு ஏதோ கூட்டு இருக்கிறது என்று சொல்லிய சாமி வேறு வழியின்றி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதிலிருந்து பெறப்படும் பாடம் என்ன? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திருடாதே; அவர்களுக் குண்டான நீதிக்கான புகழை பிறர் திருட அவர்கள் ஒருக்காலும் விட மாட்டார்கள்

சுப்பிரமணிய சுவாமியோ, தனது நிலைமையின் ஊடுருவலைச் சமா ளிக்க, டிவிட்டரில் பாரத மாதாவின் கவுரவத்தைக் காப்பதற்காக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியிடம் அவ மானப்படுவதை நான் ஒரு பொருட் டாகக் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில், இந்திய உச்ச மன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஊழல் படிந்த பரம்பரையின் பிற்காலத்தை பாதுகாக்க, சுப்பிர மணிய சுவாமியைப் பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திய இருக்கிறதென சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார் என ஆக்ட் இண் டியா கூறியுள்ளது. இரண்டு டிவிட்டர் செய்திகளுக்குப் பிறகு அவர் நேரிடையாக நீதிமன்றத்தைக் குறை கூறியுள்ளார். என்னுடைய நீதிமன்ற அவமதிப்பு விண்ணப் பத்தை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது ஒரு செயலற்ற தன்மையாகும் என்று கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள்மீது அவ தூறு குவிக்கும் தொல்லைக்காரரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ஆபத்து குறைந்த தந்திரத் திட்டம் அவரால் தாக்கப்படும் எந்த நபரும் அவர்மீது மான நஷ்ட வழக்குகளை தொடர் வதில்லை. தொடர்ந்தால் சுப்பிர மணியசாமி ஏங்கிக் கொண்டிருக்கும் கவன வெள்ளம் அவர்மீது பாய்ந்து வரும். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் மூக்கை நீட்டுவது ஆபத்தான விளையாட்டு அதுவும் தனது சட்டத் திறமைக்காக வெளிச் சத்தில் நிற்க விரும்பும் தனி மனித கட்சிக்கு!

உச்சநீதிமன்றம் நினைத்தால், சுவாமியை வெளியே தள்ளுவதற்கோ, உள்ளே வைத்துப் பூட்டுவதற்கோ ஏராளமான சட்டப்படியான வழிமுறைகள் உள்ளன.

உச்சநீதிமன்ற முதன்மை நீதி பதிகள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் அதுவும் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கும் போது; அதை இந்திய ஊடகங்கள் சமீப காலங்களில் அறிந்து வைத்துள்ளன.

ஆனால், தவறான அவமதிப்பு விண்ணப்பங்கள் வந்து, நீதிமன்றம் தன்னிச்சையான விசாரணைக்கு ஆட்படுத்தாத வரை எல்லாக் கதை களையும் டிவிட்டரில் சொல்லும் போது அது நல்ல பொழுது போக்காக இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே, பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமானுக்கு சமீபமாக இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள் கூர்ந்த பெருமான். தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக்கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29--_31

தமிழ் ஓவியா said...

சட்டப் பேரறிஞர்


நம் நாடு சுதந்திரம் அடைந்த சில நாள்களில் அரசியல் நிர்ணய சபை கூடியது. அக்கூட்டத்தில் அரசியல் சட்டத்தை வரைவதற்காக வரைவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தக் குழுவின் தலைவரானார். அவருக்கு உதவி செய்ய உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த எழுவரில் ஒருவர்கூட அம்பேத்கருக்கு உதவி செய்யவில்லை.

ஆனாலும், அம்பேத்கர் தளர்ந்துவிடவில்லை. அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அரசியல் சட்டம் முழுவதையும் தனி மனிதராக இருந்து வகுத்துக் கொடுக்க முயன்றார். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அம்பேத்கர். பல மாதங்கள் கடுமையாக உழைத்துத் திறம்படச் செய்து முடித்தார்.

அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொதுமக்களின் முன்பு வைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபை கூடியது. அரசியல் சட்டத்தின் விதிகள் ஒவ்வொன்றையும் படித்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்டம் மும்முறை படித்து ஆராயப்பட்டது. அப்போது அவரது உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. சட்டச் சிற்பி செதுக்கிய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நியூயார்க் நகரத்திற்கு வரும்படி அமெரிக்கர்கள் அழைத்த அழைப்பினை ஏற்று நியூயார்க் சென்றார் அம்பேத்கர். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு சட்டப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

காலை உணவைத் தவிர்ககாதீர்!


பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே!

நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நன்றாகப் படிப்பது, நன்றாக விளையாடுவது, அளவான நேரத்திற்கு நண்பர் - நண்பிகளுடன் இருப்பது - உரையாடுவது, பிறகு நன்றாகத் தூங்கி எழுந்து, அன்றன்றாடக் கடமைகளைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

பெரியார் பிஞ்சுகளான, உங்களுக்கா சொல்ல வேண்டும்? எள் என்பதற்குள் எண்ணையாக இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களான தேனீக்கள் அல்லவா எம் தங்கங்கள்!

ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு வேண்டுகோளாக சொல்லப் போகிறேன்.

ஏனென்றால் உங்கள மாதிரிப் பிள்ளைகள் அறிவுரை, ஆலோசனை என்றாலே முகம் சுளிக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் வேண்டுகோள் என்றேன்.

சரி தாத்தா விஷயத்திற்கு வாங்க; எங்களுக்குப் பொறுமை இல்லே - உடனே சொல்லுங்க..... அப்படின்னுதானே சொல்றீங்க.

ம் சரி இதோ சொல்றேன் - கேளுங்க பிள்ளைகளே!

உங்கள்ல பலரும் பள்ளிக்குப் புறப்படும்முன் காலை உணவை - சிற்றுண்டியை - (Break fast) சரியாகச் சாப்பிடாமல் உரிய நேரத்தில் அதிகாலையிலே எழாமல், தாமதித்து எழுந்து, உங்கள் அம்மாவைப் போட்டு வதைக்கிறீங்க - சாப்பிடாமலேயே - பஸ் வந்ததும் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நெருக்கிக் கூறி, பட்டினியாகவோ, அல்லது அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு அரக்கப்பறக்க ஓடுகிறீர்கள்!

அது சரியில்லே. சரியேயில்லை.....! ஏன்னா அது உங்க வளர்ச்சியை ரொம்ப ரொம்பப் பாதிக்கும்.

உடல் வளர்ச்சியை மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி, வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்டு உள்வாங்கி மனதில் பதியவைப்பதற்கு - காலை உணவைத் தவிர்த்தல் உதவவே உதவாது - மாறாக, வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை மூளை ஏற்பதில் சுறுசுறுப்பு காட்ட இயலாது. ஏன் தெரியுமா? நமது உணவு - உங்களுக்குத் தெரியுமா? செரிமானமாகும்போது, அதனைச் சர்க்கரையாக மாற்றித்தானே நமது மூளையை இரத்த ஓட்டத்தின் மூலம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

காலை உணவை - முதல்நாள் இரவோ, மாலையோ சாப்பிட்டு பொழுது விடிந்து எழுந்தவுடன், வயிறு மிகவும் காலியாகி இருக்கும். அதனை நன்கு உண்டு நிரப்புவது அவசியமோ அவசியம்! தெரிகிறதா தம்பிகளே, தங்கைகளே?

ஒழுங்காக காலைச் சிற்றுண்டி உணவை, சரியாகச் சாப்பிட்ட பல பள்ளிக் குழந்தைகள் நல்ல நினைவு வன்மை - Memory - ஏற்படுவதால் பாடங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல முறையில் உள்வாங்கி, மனதில் நிலைநிறுத்த முடிகிறது.

எனவே, நீங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு காலை உணவை ஒழுங்காக நல்ல முறையில் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்; நன்றாகப் படிக்கவும், தேர்வில் ஏராளமான மதிப்பெண் பெறவும், வீட்டில் தாய், தந்தை மகிழும் நிலை உங்களுக்கு ஏற்படும் - செய்வீர்களா செல்லங்களே,,,,,,,!

அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

தோல்வியா? துவளாதீர்!


-சிகரம்

ஓர் உண்மையைச்- சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். நாம் தோல்வி என்று நினைப்பது, சொல்வது எல்லாம் முழுக்க முழுக்கத் தப்பு.

ஒரு மாமரத்தில் தொங்கும் மாங்காயை அடிக்க ஒருவன் கல் விடுகிறான். மாங்காய் விழவில்லை. கல் குறி தவறிச் சென்றுவிட்டது. இது தோல்வியா?

அடுத்தமுறை ஒரு கல் விடுகிறான், மாங்காய் விழுந்துவிட்டது. இது வெற்றி என்போம். மாங்காய் அடித்ததில் வெற்றி, தோல்வி என்று இரு முடிவுகள் எப்படி வரமுடியும்? ஆக, நாம் நினைப்பதில் தப்பு உள்ளது என்பது புரிகிறதா? ஆம். உண்மையில் தப்புதான்.

முதல் கல்லில் மாங்காய் விழாதது தோல்வி அல்ல. -நிறைவேறாமை என்பதே உண்மை. முதல் முயற்சியில் இலக்கு நிறைவேறவில்லை.

இரண்டாவது முயற்சியில் இலக்கு நிறைவேறியது என்பதே உண்மை. மாறாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. நாம் முதல் முயற்சியில், இரண்டாம் முயற்சியில் அல்லது சில முயற்சிகளில் ஒரு செயல் நிறைவேறவில்லையென்றால் அதைத் தோல்வி என்கிறோம்.

தோல்வி என்றால் வெற்றிபெறவே முடியாது என்பது மட்டுமே-! வெற்றிபெற வாய்ப்புள்ள எதற்கும் தோல்வியில்லை-! விண்வெளிக்கு ராக்கெட் ஏவியதும் வெடித்துச் சிதறியது. அது தோல்வியா? அடுத்தடுத்து ஏவி செவ்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்டோமா! தோல்வியென்றால் விண்வெளிப் பயணமே முற்றுப் பெற்றுப் போயிருக்கும். அடுத்தடுத்த முயற்சி வந்திருக்காது.

எனவே, முயற்சிக்கு வாய்ப்பு உள்ள எச்செயலுக்கும் தோல்வியில்லை. முடியவே முடியாது என்ற முடிவு மட்டுமே தோல்வி-! முயற்சியின் முனைப்பில் தோல்வி முடிவாவதில்லை; முயற்சிகளின் முடிவிலேதான் தோல்வி உறுதியாகிறது. எனவே, முதல் முயற்சி நிறைவேறாதது தோல்வியென்று எண்ணித் துவளுவது அறியாமையாகும்.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க வேண்டியவர்கள். எதிர்காலத்தை வடிவமைத்து, நாளைய உலகை நடத்திச் செல்ல வேண்டியவர்கள். எனவே, இதை நன்றாக மனதிற்கொண்டு, முயன்றால் முடியாதது இல்லை; இயலாது என்பது முட்டாள்களின் முடிவு என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

அதேபோல் வெற்றியென்பது நிரந்தரமானது அல்ல. ஓட்டப்பந்தயத்தில், கிரிக்கெட் விளையாட்டில், அம்பு எய்வதில் என்று எந்தப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்த போட்டியில் தோற்கிறார்கள். ஒருமுறை 100 ஓட்டங்கள் பெறும் வீரர், அடுத்தமுறை 2 ஓட்டங்களில் வெளியேறுகிறார். இவர்களெல்லாம் வெற்றிவாய்ப்புக் கிட்டாதபோது (கிடைக்காதபோது) துவண்டால் சாதிக்க முடியுமா-?


தாமஸ் ஆல்வா எடிசன்

மின்சார பல்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி முதல் பலரும் பலமுறை முயன்றே வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் வழிகளில் முயன்றே இறுதியில் மின்சார பல்பு ஒளிர வழிகிடைத்தது என்பதை உணர்ந்து பிஞ்சுகள் நெஞ்சு நீதியுடன் நிமிர்ந்து நின்றால், வாழ்வில் ஒளிரலாம், உயரலாம்-!

அதேபோல் மாணவர்கள் இன்னொரு கருத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒரு செயலில் சாதிக்க முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்க முடியாது என்பது இல்லை. படிப்பில் உயர்நிலை எட்ட முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்கலாம்.


இராபர்ட் கிளைவ்

இராபர்ட் கிளைவ் சிறுவயதில் படிக்கமாட்டார். அளவற்ற குறும்பு செய்வார். அவரது செயல்களைப் பொறுக்கமுடியாத அவரது பெற்றோர், இராணுவத்தில் சேர்த்தனர். அப்படி உருப்படாதவன் என்று துரத்தப்பட்ட இராபர்ட் கிளைவ்தான், ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் வேரூன்ற -- நிலைக்க வழிசெய்தார்.


கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் மூன்று முறை பள்ளி இறுதித் தேர்வு எழுதித் தோல்வியுற்றார் (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அவர்தான் இலக்கிய மேதையாக, எத்தனையோ திரைப்படங்களுக்கு எழுத்தாளராய், அரசியல் விற்பன்னராய், தலைசிறந்த நிர்வாகியாய், பேச்சாளராய், கவிஞராய் பன்முகத்திறன் பெற்று, அய்ந்து முறை தமிழக முதல்வராயும் ஆனார்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாதிப்பதைவிட, சராசரியாய் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான், எதிர்காலத்தில் உயர்நிலையை எட்டி பல்திறன் பெற்று பளிச்சிடுவதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே, தோல்வியில் துவளாமல், தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டும்! சரித்திரம் படைக்க வேண்டும்-!