Search This Blog

21.4.13

மறியலால் கள் குடியை நிறுத்த முடியுமா? பெரியார் பதில்

நாகை முதலாவது சுயமரியாதை மகாநாடு
தலைவர் அவர்களே! நண்பர்களே!! *இத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர்களால் தான் இத்தீர்மானத்திற்கு பெருத்த ஆதரவளிக்கப் பட்டதாக கருதுகின்றேன். திரு.சிவஞானம் எதிர்த்ததால் தான் அத் தீர்மானத்தை உங்களுக்கு விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு சமயம் ஒருவர் இருவராவது தாக்ஷண்ணியத்திற்காக கைதூக்கவேண்டியிருக்கும். ஆதலால் நான் சொல்வதை நன்றாய் கவனித்து உங்கள் இஷ்டத்தை தெரிவியுங்கள். தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் மீது கோபிப்பது கோழைத்தனமாகும். தீர்மானத்தில் உண்மையும், வீரமும் இல்லை என்று கருத வேண்டியதாகும்.

தவிர எதிர்ப்பவர்கள் அநேகர் உண்மையாகவே அவர்களுக்கு விளங்காமல் எதிர்த்தாலும் எதிர்க்கலாம். அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது நமது கடமை. அதனால் மற்றவர்களுக்கும் விளங்கும். அன்றி யும் அவ்விளக்கம் மற்றவர்களுக்கு பிரசாரம் செய்யவும் உதவும்.

நண்பர்களே! கள்ளுக்கடை மறியலானது குடி நிறுத்துவற்காக செய்யப்படுவதில்லை என்பது எனது அனுபவ ஞானமான முடிவு.

நான் தென்னாட்டில் மறியலை நடத்தி இருக்கின்றேன். என் மனைவி யையும், சகோதரியையும், என் பந்து சிநேகிதர்களின் தாயார், மகள் முதலிய வர்களையும் கொண்டு நடத்தினேன். அநேக கடைகளை மூடினேன். எனது 600 தென்னை மரங்களை வெட்டினேன். 300,400 மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் தானகவே காய்ந்து போகும்படி செய்தேன். மறியலுக்காக நானும் எனது ஈரோட்டு நண்பர்கள் சுமார் 100 பேரும் ஜெயிலுக்குப் போனோம். திருச்சியில் நூற்றுக்கணக்கான பேர்களை எம்.ஏ., பி.எல்., உட்பட சிறைக்கு அனுப்பினேன். கையில் 500 தொண்டர்களை வைத்துக் கொண்டு, ஆயிரம் தொண்டர்களை லிஸ்டில் வைத்துக் கொண்டு நானும் நண்பர் திரு.இராமநாதனும் மதுரையில் தினம் நான்கு நான்கு பேர்களாக 100 தொண்டர்கள் வரை ஒவ்வொரு வருஷ தண்டனைக்கு அனுப்பினேன். மதுரை சர்க்காரார் தினறினார்கள். அந்த சமயத்தில் திடீரென்று திரு.சி.இராஜ கோபாலாச்சாரியார் மறியலை நிறுத்தும்படி உத்திரவு செய்தார். அடிதடி, வசவு, பலாத்காரம் ஒன்றுமே நாங்கள் செய்யவில்லை. தொண்டர்கள் தண்டிக்கப்பட்டவுடன் அதிகாரி என்னிடம் வந்து பேசுவார். போலீசார் எனக்கு வெகுமரியாதை செய்வார்கள். அதிகாரிகள் வெட்கப்படுவார்களே யொழிய நம்மீது குரோதமோ, துவேஷமோ இல்லை. அப்படிப்பட்ட சமயத்தில் மறியலை நிறுத்த நானும் திரு.இராமநாதனும் சம்மதிக்க வில்லை. அப்படியிருக்க நாங்கள் மறியலை நிறுத்த சம்மதிக்காவிட்டால் தான் இராஜினாமா செய்து தனது தலைவர் பதவியை திரு.எஸ்.சீனிவாசய் யங்காருக்கு அளித்து விடப்போவதாய்ச் சொல்லி பயமுறுத்தி மறியலை நிறுத்தி விட்டார். 100 பேர் சிறையில் ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டிருக்க, 500 பேர் தயாராய் இருக்க மறியலை நிறுத்திய உடன் எங்கள் மனம் கஷ்டப் பட்டு விட்டது. காரணம் என்ன என்று பார்த்தபோது நாகப்பூர் கொடி சத்தியாக்கிரகத்திற்கு தொண்டர்கள் போதவில்லை என்றும் ஜமநாத பஜாஜ் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் தோல்வி அடைந்ததால் அவருக்கு அவ மானம் என்றும், அவர் வேலையை விட்ட வக்கீல்களுக்கு பல லக்ஷ ரூபாய் கொடுத்தவர் என்றும் திரு.இராஜகோபா லாச்சாரியார் சமாதானம் சொன்னார். அந்தக் காரணமாக எல்லா மறியலும் நிறுத்தப்பட்டது. இதனால், மறியலுக்கு பயந்து கள்ளுக்கடை ஏலமெடுக்காதவர் நஷ்டப்படவும், துணிந்து குறைந்த துகைக்கு ஏலத்தில் எடுத்தவர் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் சர்க்காரார் இந்த நஷ்டத்தின் சாக்காய் இந்திய மக்களின் ஆரம்பக்கல்வியின் வாயில் மண்ணைப் போடவுமே ஏற்பட்டது. மற்ற பெரிய கல்வி இலாகா அதிகாரி கள் சம்பளம் சிறிதும் குறையவில்லை. மறியலால் கள்குடி குறைபாடு குறை யாது, முக்காலும் குறையாது என்று உறுதி கூறுவேன்.

இத்தீர்மானத்தை எதிர்த்தவரே தான் பேசும் போது ஒரு வார்த்தை சொன்னார். அதாவது தங்கள் மறியலால் கடையில் வியாபாரம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தெருக்களில் பலகாரம் விற்பதுபோல் பாட்டல் பாட்டல்களாய் எடுத்துச் சென்று விற்கப்படுகிறதென்றும் சொன்னார். ஆகவே மறியல்காரர்களை நான் ஒன்று கேட்கின்றேன், அதாவது தங்கள் மறியலின் காரணமாக கள்ளுக்கடைகளில் கள்ளு விற்பதைத் தடுத்து, வீதி வீதியாய் விற்கும்படியான நிலைமை ஏற்பட்டதற்கு மறியல் தொண்டர் களோ அவர்களது “உலகம் போற்றும்” ஒப்பற்ற தலைவரோ என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள்? என்று கேட்கின்றேன். கள்ளு இலாகாவை நடாத்தும் மந்திரியையாவது, கள்ளு இலாகா அதிகாரிகளையாவது வீதியில் கள் விற்கும் மக்களையாவது இந்த மறியலின் மூலமாக அசைக்க முடியுமா? என்று கேட்கின்றேன். கள்ளுக்கடை மூடிவிட்டால் தெரு விற்பனைகள் எங்கு போய்விடும்? லைசென்சு இல்லாமல் மரம் கட்டி இறக்கும் கள் எங்கு போய்விடும்? ஆகவே, மறியல் குடியை நிறுத்துவதற்காகவா? அல்லது வயிற்றுப் பிழைப்புக்கோ விளம்பரத்திற்கோ, கள்ளுக் கடைக்காரரிடம் வியாபாரம் பேசி, ஆச்சிரமம் வைத்து, கொடிதூக்கிக் கொண்டு திரிந்து, பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கி கொடுப்ப தற்காகவா? என்று உங்களை கேட்கின்றேன்.

மறிய லால் கள் குடி நிறுத்த முடியாது என்று நான்மாத்திரம் சொல்ல வரவில்லை, திரு. இராஜகோபாலாச்சாரியார் சொன்னதையும் இப்போது நான் சொல்ல வரவில்லை. ஆனால் திரு.காந்தி- உங்களால் ‘மகாத்மா’ என்று சொல்லப் படும் உங்கள் தலைவரான திரு.காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தருளி யதை சொல்லுகின்றேன் கேளுங்கள்.

அதாவது “குடிகாரர்கள் தாங்களாகவே குடியை விட்டாலொழிய குடியை நிறுத்த முடியாது. கள்ளுக்கடைகளை மூடிவிடச் செய்வது நம் வேலை அல்ல. மூடினாலும் திருட்டுத்தனமாக இப்பொழுது இருப்பது போலவே வியாபாரமும், குடியும் இருந்துதான் வரும். சரீரத்தால் தொழில் செய்கிற மிருகங்களைப்போன்ற உழைப்பாளிகட்கு கள்ளு அவசியமானது. நானே வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்று திரு.காந்தியே சொல்லியிருக் கிறார். இதிலிருந்து சட்டங்களின் மூலம் கூட மதுபானத்தை நிறுத்தி விட முடியாது என்பதே அவரது அபிப்பிராயமாகும். இப்படியிருக்க இந்த மறியல் என்பது நாடகம் என்றும், பாமரமக்களை ஏய்ப்பதின் மூலம் தாங்கள் தலைவர்களாகவும், தேசபக்தர்களாகவும் ஆவதற்கு செய்யப்படும் சூக்ஷி என்பதல்லாமல் வேறு என்ன வித உண்மையோ, நாணையமோ இந்த மறியலில் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

 இப்பொழுது அநேக ஊர்களில் கள்ளு குத்தகைக்காரர்களுடன் வியாபாரம் பேசிக் கொண்டு மறியலை நிறுத்திக் கொண்டார்கள். சிலர் பலாத்காரத்திற்கு பயந்து கொண்டு நிறுத்தி விட்டார்கள். சிலர் பொதுஜனங்களிடம் வாங்கிய பணத்தை பங்கு போடுவதில் சண்டை போட்டு கொண்டு நிறுத்திவிட்டார் கள். சிலர் தேர்தலில் ஓட்டு பெற கூலி கொடுத்து நடத்துவதால் எதிர் அபேக்ஷகர்கள் உண்மையை வெளிப்படுத்துவதால் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் ‘மறியல், மறியல்’ என்று ஏன் இளம் வாலிபர்களை அயோக்கியர்களாகவும் வாழ்க்கைக்கு உதவாதவர்களுமாகவும் ஆக்க வேண்டும்? என்று கேட்கின்றேன். தவிரவும் இந்துமதக் கடவுள்களில் சிலவற்றிற்கு குடம் குடமாய் கள் வைத்துப் படைத்து குடிப்பவர்களை எப்படி நிறுத்தி விட முடியும்? தவிர வட்டமேஜை மகாநாடு திரு.காந்தி இஷ்டப்படி முடிவு பெற்று விட்டால் மறியல் நடக்குமா?என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது இவர்கள் என்ன சொல்லுவார்கள்? “சர்க்காரா ரோடு ராஜி ஏற்பட்டு விட்டது. ஆதலால் மறியல் வேண்டாம். மறியலால் மது நின்று விடாது. ஒன்றோ சட்டத்தாலோ அல்லது வேறு உபாயத்தாலோ நிறுத்தலாம்” என்று தானே சொல்லுவார்கள். மற்றும் சமூக சம்பந்தமான குறைகளைப் பற்றி பேசி காங்கிரசுக்காரர் ஏன் அவ்விஷயத்திற்குப் பொது ஜனங்களிடம் வசூலிக்கும் 10 லக்ஷக்கணக்கான பணத்தில் ஒரு காசும் செலவு செய்வதில்லை என்றும், ஒரு வேலையும் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை திட்டத்தில் இல்லை என்றும் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்பதை கவனியுங்கள். “அதெல்லாம் சுயராஜ்ஜியம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றும் “ஒரு வரியில் சரிப்படுத்தி விடலாம்” என்றும் சொல்லுகின்றார்கள். அப்பேற்பட்ட சமூக சம்பந்தமான பழக்க வழக்கங்களை சுயராஜ்ஜியம் வந்த பிறகு ஒரு வரியில் சரிப்படுத்தி விடுவதானால், அது சாத்தியமானால் - உண்மையானால் கள்ளு குடியை நிறுத்த மாத்திரம் தானா பல வரிகளாலும் முடியாமல் போய் விடும்? என்று கேட்கின்றேன்.

தவிரவும் தீர்மானமானது யாரையும் குடிக்கும்படி சொல்லவில்லை. கள்ளுக்கடைக்கு குடிகாரர்களை கூட்டிக் கொண்டு போகும்படியும் சொல்லவில்லை. மறியல் மறியல் என்று சொல்லிக் கொண்டு செய்யும் முட்டாள்தனமான காரியத்தால் கள்ளு வியாபாரிகளை கொள்ளையடிக் கும்படியாகவும், தெருக்களில் எல்லாம் கள்ளு சாராயம் விற்கும் படியாக வும், பாமர ஜனங்கள் இந்த முட்டாள் தனமும் சூட்சி நிரம்பியதுமான வார்த்தை களை நம்பி பொறுத்தமும், நாணயமும், யோக்கியப் பொறுப்பும் அற்ற சுயநலமிகளை ஜனப் பிரதிநிதியாக்க விடாமலும் செய்ய வேண்டு மென்பதுதான் இத்தீர்மானத்தின் தத்துவமாகும். நமது மக்கள் பாமர மக்களானதினாலும், 100 க்கு 90 பேர் எழுத்து வாசனை அறியாத மக்களான தினாலும், அவர்களை மூட நம்பிக்கையிலும், பகுத்தறிவற்ற தன்மையிலும் பார்ப்பனர்களும், அரசாங்கத்தாரும் வைத்திருக்கின்றார்களானதினாலும், காந்தி, காங்கிரஸ், கதர், பகிஷ்காரம், தேசீயம், மறியல் முதலிய காரியங்க ளால் ஏமாந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றதே தவிர வேறில்லை என்று சொல்லுகின்றேன். நமது வாலிபர்களிடமிருக்கும் அபிமானமே என்னை இப்படிச்சொல்லச் செய்கின்றது. எழுச்சியான-வேடிக்கையான- பரபரப்பை உண்டாக்கத் தக்க எதுவானாலும் இளம் வாலிபர்களின் மனதைக் கவர்வது இயற்கை. புரட்டாசி மாதம் வந்தால் அநேக வாலிபர்கள் நாமம் போட்டு, பஜனைக்குப் போய் விடுவார்கள். அல்லா பண்டிகை வந்தால் அநேக வாலிபர்கள் தங்களை மிருகமாக்கி புலிவேஷம் போட்டுக் கொள்ளு வார்கள். வேடிக்கைப் பார்த்த ஒன்றுமறியா சிறு குழந்தைகளும் பண்டிகை நின்று ஒரு மாதம் வரை இவர்களைப் போல் ஆடிக்கொண்டே இருப்பார்கள். ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் அறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்து சரியென்று தோன்றியபடி நடவுங்கள்

--------------------------- 03,04.10.1931 நாட்களில் நடைபெற்ற நாகை வட்ட முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தை விளக்கி தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை.”குடி அரசு ”- சொற்பொழிவு - 18.10.1931

11 comments:

இறைகற்பனைஇலான் said...

சரி,தோழரே இப்போது என்ன சொல்லவருகிறீர்கள்.நீங்கள் உட்கார்ந்து எழுதி வாழும் இடம் சாராயக்குடியால் பாதிக்கமல் இருக்கலாம். ஊருக்குள் வந்து பாருங்கள். சாராயம் விற்பவன்தான் நாட்டண்மைக்காரத்தனம் பண்ணுகிறான்.அரசாங்கம் கல்விக்கூடம் நடத்துவதை தனியாருக்கு விட்டுவிட்டு சாராயத்தை அரசு விற்பது பார்த்தும் பாராமல் இருக்க வேண்டுமா? இன்று உடல் உழைப்பாளர்கள் குடித்து உடல் சக்தியற்றவர்களாகவும்.சுயமரியாதை இல்லாதவர்களாகவும் ஆகிவிட்டனர்.சமூக பொறுப்புணர்வு கொஞசமும் இல்லாதவர்களாகவும் ஆகிவிட்டனர். பெரியாரிஸ்டுகள் இந்தக் கருத்தில் தமது தலைமைக்கு லொஞ்சம் பேர் இருந்தால் போதும் என்று உழைக்கும் சமுதாயத்தை உயர்த்தும் உண்மையற்றவர்களாகவே ஆகிவிட்டனர். இரு குரிப்பிட்ட சாதிக்கூட்டத்தாரை அழியவைக்கும் ஆயுதமாக சாராயம்,டாச்மாக் பயன்படுத்திவருவது நாற்காலி பெரியாரிஸ்டுகளுக்குத் தெரியாது. “ இந்தக் குடி இல்லையானால் இந்தப் பயல்களை கையில் பிடிக்க முடியாது, அடக்கவும் முடியாது” என்று மற்ற சாதிக்காரர்கள் ஒரு அரசியலே செய்வது உங்களுக்குத்தெரியாது.அது மட்டுமல்ல சமூகப் போர்களுக்குக்கூட இவர்கள் வரமுடியாது ,.அதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.இப்போது போதை விற்பது தவறல்ல என்பதாகக் கருத்து பரப்புவது பெரியாரியலில் பொறுப்பற்றத்தனம் ஆகும்.

தமிழ் ஓவியா said...


குறள் - தந்தை பெரியார்


நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.

நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்? நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு,

தமிழ் ஓவியா said...

அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.

நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும்.

தமிழ் ஓவியா said...

அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். - குடிஅரசு - துணைத் தலையங்கம் 14.02.1926

தமிழ் ஓவியா said...


என்னதான் முடிவு?


பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் தலைநகரமான புதுடில்லி என்பது இந்தப் பிரச்சினையில் முதல் இடத்தில் இருக்கிறது.

கொஞ்ச காலத்துக்கு முன் (16.12.2012) மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு உட் படுத்தப்பட்டது குறித்துப் பெரும் புயல் நாடு தழுவிய அளவில் வெடித்துக் கிளம்பியது. சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எவ்வளவோ மருத்துவ உதவிகளை மேற்கொண்டும் பாதிக்கப்பட்ட பெண் உயிர் பிழைக்கவில்லை.

ஊடகங்கள் உறுமின - ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப் பட்டது. அவரும் பல யோசனைகளை அளித்துள்ளார்.

ஏற்கெனவே பல சட்டங்களும், விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சட்டமும், நிருவாகத் துறையும் நீதிமன்றமும் எந்தக் கதியில் இயங்குகின்றன என்பதுதான் முக்கியம்; கடந்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் பாலியல் வன்முறை வழக்குகளில் 16 ஆயிரம் வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்திருக்கிறது.
காவல்துறையின் கட்டப் பஞ்சாயத்து காரண மாகவோ, அல்லது காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயோ புதைக்கப்பட்ட வழக்குகளுக்குக் கணக்கு இல்லை.

டில்லியில் கடந்த டிசம்பரில் கயவர்களால் மருத்துவக் கல்லூரி மாணவி வேட்டையாடப்பட்ட நிலையில் வெகு மக்களும் குமுறி எழுந்த நிலையில் இது போன்ற குற்றங்கள் பெருகி வருவதுதான் அதிர்ச்சிக்கு உரியதாகும். தமிழ்நாட்டில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வன்புணர்ச்சிகள் நடந்துள்ளன. நம் நாட்டு ஊடகங்களின் ஒரு சார்புத் தன்மையால் அவை வெளிச்சத்துக்கு வராமல் போய் விட்டன. அரசாங்கமும் ஒன்றும் நடக்காதது போல காய்களை நகர்த்திக் கொண்டது.

நேற்று ஏடுகளில் வெளிவந்த இன்னொரு சேதி - இதுநாடா கடும் புலி வாழும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறது.

5 வயது சிறுமி புதுடில்லியில் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் துடியாய்த் துடிக்கிறார்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான திருமதி சோனியா காந்தி வார்த்தைகள் போதாது - செயல்கள் தேவை! என்று கோபமாகச் சொன்ன தாக ஏடுகள் சொல்லுகின்றன.

அவ்வப்பொழுது இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடப்பதும், அந்த நேரங்களில் மட்டும் வீராவேசமாகத் துள்ளிக் குதிப்பதும் பழகிவிட்ட ஒன்றாகவே ஆகி விட்டது. மக்களின் மனதும் மரத்துப் போகும் நிலைதான்.

நீதிபதி வர்மா ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையைக்கூட மத்திய அரசு நீர்த்துப் போகத்தான் செய்திருக்கிறது.

கீழ்நிலையில் உள்ள காவல் அல்லது ராணுவ ஊழியர் அல்லது அதிகாரி வன்புணர்வில் ஈடுபட்டால் அதற்கு அவருக்கு மேலுள்ள அதிகாரியே பொறுப் பேற்க வேண்டும் என்ற வர்மா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரையையும் அரசு புறந்தள்ளி விட்டது.

நீதிபதிகள், பொது மக்கள், ஊழியர்கள் போன் றோர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தனி அனுமதி தேவையில்லை எனும் நீதிபதி வர்மாவின் பரிந்துரைகூட ஏற்கப் படவில்லை.

பாலியல் குற்றம் செய்தவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற சிபாரிசுகள் ஏற்கப் படவில்லை.

ஆணுக்குப் பெண் அடிமை எனும் மனப்பான்மை தகர்த்தெறியப்பட கடுமையான சட்டங்கள் தேவை. பாம்புக்கும் நோகாமல், பாம்பு அடித்த கொம்புக்கும் நோகாமல் சட்டம் செய்தால் அது நாக்கை வழித்துக் கொள்ளத்தான் பயன்படும்.

பெண்களுக்குப் போதிய கல்வி தந்து ஆட்சி அதிகாரத்தில் 50 விழுக்காடு இடம் தந்து, பெண்ணென்றால் பலகீனமானவர் என்ற நிலை மாற்றப்படுவதற்கான போதிய உடல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுவது போன்ற தொலை நோக்குகள் தேவை.

ஊடகங்கள் மூலம் எச்சரிக்கும் ஏற்பாடுகள் தேவை; இல்லை என்றால் அவ்வப்போது பேசப்படும் வெட்டிப் பேச்சாகவே அது முடிந்து போய்விடும்.

பெண்களும், ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு விடாமல் வீதிக்கு வந்து போராட வேண்டும் - இது மிகவும் முக்கியம். 22-4-2013

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 22: புவி தினம்


நாம் வாழும் பூமியைக் காப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியை 'புவி தினம் என அனுசரிக்கிறோம். 1969இல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மெக்கன்னல் என்பவர்தான் இப்படி ஒரு தினத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை முன்மொழிந்தார்.

இந்த தினத்தை 192 நாடுகள் கடைபிடிக்கப்படுகின் றன. பூமியைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த தினம், சுற்றுச்சூழல் மாசு அடையாமல் காப்பது, போர், வறுமை மற்றும் அநீதிகளுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தயும் உணர்த்துகிறது.

தமிழ் ஓவியா said...


விகடன் கச்சேரி

இந்த வார ஆனந்தவிகடன் (24.4.2013) தலையங்கமும், அதனைத் தொடர்ந்து கூட்டணி பவன் எனும் அரசியல் சிறப்புக் கட்டுரையும் அனேகமாக பார்ப்பனர்களின் மனப்பான்மையும், முதலாளித்துவ மனப் பான்மை கொண்டவர்களின் சிந்தனையும், எந்தத் திசையில் பயணிக்கின்றன என்பதற் கான கண்ணாடியாகும்.

மதச் சார்பற்றச் சிந்தனை கொண்ட ஒருவரைத் தான் பிரதமர் வேட்பாளராக எதிர் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கருத்துகளைப் பரப்பி, எதிர் அணியினரைக் குழப்பும் காங்கிரஸின் வியூகம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்திய தேசத்தை வழி நடத்தக் கூடிய பிரதமர் மதச் சார்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே சமயம் அந்த ஒற்றைத் தகுதி மட்டுமே பிரதமர் வேட்பா ளருக்குப் போதும் என்ற பிரஸ்தாபிக்க முனையும் காங்கிரஸின் துடிப்பு வடிகட்டிய முட்டாள்தனம் என்கிறது. ஆனந்தவிகடன் தலையங்கம்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மதச் சார்பின்மை என்னும் பிரச்சினை ஏதோ காங்கிரஸ் சம்பந்தப்பட்டது போலவும் மற்ற வர்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பது போலவும் எழுதுவது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா!

இன்னும் சொல்லப் போனால் காங்கிரசை விட பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமான அய்க்கிய ஜனதா தளம் அதன் சார்பில் பிகாரில் முதல் அமைச்சராக இருக்கக் கூடிய நிதிஷ்குமார்தான் மதச் சார்பின்மை என்னும் குரலை வெண்கல நாதமாக ஒலிக்கிறார்.

அந்த ஒற்றைத் தகுதி மட்டும் போதுமா என்று ஆனந்தவிகடன் எழுப்பும் வினாவில் மோடி என்னும் மிக மோசமான இந்துத்துவா வெறியரின் நச்சுக் காற்றுக் குடிகொண்டு இருக்கிறது.

குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப் பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை - பிஜேபியின் கதா நாயகரான வாஜ்பேயியே அதிரச் செய்துவிட்டதே! இனி எந்த முகத்துடன் வெளி நாட்டுக்குச் செல் லுவேன்? என்று அவரைப் புலம்ப வைத்ததே!

ஆனந்த விகடன் மிகச் சாமர்த்தியமாக கூறும் அந்த ஒற்றைத் தகுதி என்பது மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) முக்கியமே!

காங்கிரஸின் சாதனைகளைப்பற்றி விகடன் குறை கூறியுள்ளது. காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குவது நமது நோக்கம் இல்லை.

அதே நேரத் தில் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன பெரிய வேறுபாடு? வெளியுற வுக் கொள்கைதான் ஆகட்டும் என்ன வித்தியாசம்?

பி.ஜே,பி.யின் மதச் சார்பு தன்மைக்கு நேரிடையாக வக்காலத்து வாங்குவதில் ஜகா வாங்கும் விகடன், சாதனைகள் என்ற ஒன்றைக் காட்டித் திசை திருப்பப் பார்க்கிறது.

தலையங்கத்தை ஒட்டி எடுக்கப்பட்ட சிறப்புக் கட்டுரையின் சாராம்சம் அதிமுகமீது குற்றப் பத்திரிகை படிக்காமல், சில குறைகளைச் சொல்லு வதுபோலச் சொல்லி, அதிலிருந்து அது திருத்திக் கொண்டு செயல்படுவது நல்லது என்னும் அக்கறையுடன் நயமாக நல்லுரைகள் பரிமாறப் பட்டுள்ளன. துக்ளக் ராமசாமிகள் கடைப்பிடிக்கும் பாணி இது.

ஒரு பக்கத்தில் இந்திய முதலாளிகள் மோடி வர வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்;

இன்னொரு பக்கத்தில் இந்துத்துவாவாதிகள் பிஜேபியும், அதிமுகவும் அதிகாரபீடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கன்னத்தில் அடக்கிக் கொண்டு எழுது கிறார்கள்.

இதுதான் நாட்டின் நிலைமை!

வெகு மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


உலகப் புத்தக நாள்


இன்று உலகப் புத்தக நாள் (1995) இதனையொட்டி சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இணைந்து சென்னை புத்தகச் சங்க மத்தை இம்மாதம் 18 முதல் 27 முடிய நேர்த்தியாக நடத்திக் கொண்டு இருக்கின்றன.

இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்கை ஏற்படுத்திக் கொண்டு இயக்க நூல்களை விற்பனை செய்து கொண்டு இருக்கிறது என்றாலும் இயக் கமே இத்தகைய சங்கமத்தை நடத்துவது இதுவே முதல் தடவையாகும். சென்னை பெரியார் திடலில் அமைக்கப் பட்டுள்ள 68 அரங்குகளின் நேர்த்தியையும், எழிலையும் மனந்திறந்து பாராட்டுகின் றனர். ஆண்டுதோறும் இது தொடர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் வைத்துள்ளனர். தொடரும் என்றும் கழகத் தலைவர் உறுதிப்படுத்தியும் உள்ளார்.

வெறும் நூல்கள் விற்பனை அரங்கு மட்டுமல்ல; மாலை நேரத்தில் சிந்தனை அரங்கம் என்பது பல புதிய அறிமுகங்களின் அணி வகுப்பாக அமைந்து வருகை யாளர்களின் ஆர்வத்தை வாரி அணைத்துக் கொள் கிறது. கவினுறு கலை நிகழ்ச் சிகள் கூத்தாடுகின்றன. பொம்மலாட்டம் வீதி நாடகம், கதை சொல்லுதல், மேஜிக் காட்சிகள் என்று ஒவ்வொன் றும் கட்டம் கட்டிப் போட வேண்டிய கற்கண்டு விருந்து! காணாதார் கண்கள் இருந்து என்ன பயன்? கேட்காதார் காது களாலும் யாது பலன்? என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஒரு பகுத்தறிவு இயக் கத்தை உருவாக்கியதோடு அல்லாமல், நூல் வெளி யீட்டுக் கழகம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி நூல்களை வெளியிட்டுக் கருத்துப் பிரச்சாரம் செய்த திலும் தந்தை பெரியார்தான் முன்னோடி!

இன்று அது மேலும் வளர்ந்து நூற்றுக்கணக் கான வெளியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அறிவுப் பசியைத் தூண்டி விருந்தும் படைக்கிறது.

வணிக நோக்கில் அல்ல- கருத்துப் பிரச்சாரமே அதன் இலக்கு. இன்றுகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல்கள் அளவுக்கு வேறு யாராலும் மலிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவ தில்லை. காரணம் கருத்துப் பிரச்சார லாபமே அதன் குறிக்கோள்!

குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் எனும் இயக்க ஆர்வலர் தந்தை பெரியார் அவர்களிடத்தில் குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தா சேரும் வரை ராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரை களை நிறுத்தி வைப்பது நல்லது என்று ஆலோசனை சொன்ன நேரத்தில் நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை. ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும், நான் என் கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா? என்று பளிச் சென்று பதில் சொன் னாரே! (விடுதலை 17.5.1959).
உலகப் புத்தக நாளில் இந்தச் சிந்தனை முக்கியம் அல்லவா!

- மயிலாடன் 23-4-2013

தமிழ் ஓவியா said...


புத்தகச் சிந்தனை
int

உலகில் நொடி ஒன்றுக்கு 16121 நூல்கள் வாங்கப்படுகின்றன.

இந்திய மொழிகளுள் முதன் முதலாக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது தமிழில்தான். நூல்: தம்பிரான் வணக்கம்

தமிழ் ஓவியா said...


அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவ னுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)