Search This Blog

14.4.13

பாசிசம் சீறுகிறது - பார்ப்பனர் அல்லாதாரே எச்சரிக்கை!

பாசிசப் பட்டம் பறக்கிறது!
பாசிஸ்டுகள் தங்கள் எதிரிகளின் பண்பாட்டுத் தளத்தைத் தவிடு பொடியாக்கித் தாகம் தீர்த்துக் கொள்வார்கள்.
பவுத்தர்களின் நாலாந்தா பல்கலைக் கழகத்தை தீயிட்டுத் தீர்த்தம் ஆடியது ஆரியவர்த்தனம் தானே? யாழ் நூலகத்தை பாழ்படுத்தியது சிங்களப் பாசிசம்தானே!

ஆகஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைக் குறி பார்த்துக் குண்டு வீசியதே ஜெர்மன் அந்தப் புத்திக்கு என்ன பெயர்?
தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெயர்களைச் சிங்கள மொழியில் மாற்றியதெல்லாம் பாசிஸ்டுகளின் பரவலான கீழ்மைப் புத்தியே!
தமிழ்நாட்டில் இப்பொழுது என்ன நடக்கிறது? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனும் பண்பாட்டுத் தளம், சித்திரையை முதன்மைப் படுத்தும் ஆரிய ஆண்டு; பெயர் களைப் பிறைசூடியிருக்கும் ஆரியத் தனத்தோடு தகர்க்கப்படவில்லையா!
தந்தை பெரியார் போன்ற மக்கள் தலைவர்கள் மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது மானமிகு கலைஞர் அவர்களால் சட்டமாக்கப்பட்டதை சட்டை செய்யாமல் சல்லடைக் கண்களாக பொத்தல் போட்டு வெளியே தள்ளியது ஆரியப் பாசிசம் அல்லாமல் வேறு என்னவாம்?
அண்ணா பெயரால் அவர்தம் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில் நிமிர்ந்து நிற்கும் நூலகத்தை நோய் கொண்ட பார்வையில் பார்த்தற்கு என்ன பெயர் சூட்டலாம்?
நீதிமன்றத்தின் நெருப்புக் கண்கள் அல்லவா அதனை நிலை பெற வைத்துள்ளது. ஆனாலும் அந்த எழிலார்ந்த நூலகம் இன்று எந்த நிலையில் நிலை குலைந்து நிற்கிறது? கண்ணுள்ளோர் காணட்டும் - 
 கண்ட பின் கருத்துக் கூறட்டும்!

சென்னை அண்ணாசாலையில் காண்போர் கண்களைக் கைது செய்யும் பல கோடி ரூபாயில் திட்ட மிட்டுக் கட்டப்பட்டதும், ஒரு நாட்டின் பிரதமரால் திறக்கப்பட்டதுமான சட்டப் பேரவையை பாழடைந்த மண்டபமாக ஆக்கி ஆனந்திப் பதில் உள்ள அழுக்காறு என்னவென்று புரியாதா?
பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகம் எங்கே? எங்கே? அதனை அணி செய்த நூல்களும், சுவடிகளும், ஆவணங்களும், ஆரியக் கரையான்களால் அரிக்கப் பட்ட கொடுமையை சீரணித்துக் கொள்ள முடியுமா?
அண்ணா மேம்பாலம் அருகே எட்டு ஏக்கர் பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழி பூங்காவில் உள்ள செம்மொழி மறைக்கப்பட்டது எந்த நோக்கத்தில்?
செந்தமிழர் மொழிக்கும், ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்துக்கும் நடைபெற்ற நெடு நாள் பகையின் நெடுமூச்சு நீறு பூத்ததாக இருக்கிறதே!
செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் அறிவிக்கப்பட்ட செம் மொழிப் பூங்கா திட்டம் கருச் சிதைவு ஆகிவிட்டதே!
தொல் காப்பியப் பூங்கா போய் அடையாறு பூங்கா என்று ஆனதில் உள்ள அர்த்தம் என்ன?
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் மறைக் கப்பட்டதும் மறையவர் சிந்தனையின் புழுக்கம்தானே?
கீதையிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் குறள் என்று சொல்லும் சிறுமதியினர் இன்னும் அக்ரகாரத்தில்தானே திரிகிறார்கள்.
குமரி முனையில் நிற்கும் வள்ளுவர் சிலையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகூட போராட்ட அறி விப்புக்குப்பின் தானே அசைந்தது? வள்ளுவர் கோட்டம் எந்தக் கதியில் உள்ளது? பூம்புகார் போன இடம் எங்கே? பெரியார் நினைவு சமத்துவ புரத்தை தனித்தன்மையான சிந்தனை யோடு நாடெங்கும் உருவாக்கி, ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் தந்தை பெரியார் சிலையை நிறுவிய கலைஞரின் அந்தச் சீலம் எங்கே? ஆட்சிக்கு வந்தபின் அதனை விரிவாக்க மனமில்லா ஆரியத்தனம் எங்கே?
உழவர் சந்தை எங்கே போனது? உழவர்கள் பஞ்சமர்கள், சூத்திரர்களும் தானே?
அவாள் கணிப்புப்படி ஏர் உழுதல் பாவத் தொழிலாயிற்றே -_ மனு தர்மம் அப்படித்தானே சொல்லுகிறது!
உழவர் சந்தை முடக்கப்பட்டதன் உள்ளர்த்தம் இதற்குள் உறைந்து கிடக்கவில்லையா?
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சீரமைக்கத் தெரிந்தவர்களுக்கு அண்ணா சதுக்கம் நினைவிற்கு வரவில்லையே - ஏன்? அண்ணா ஆரிய மாயை எழுதியவர் ஆயிற்றே! ஆத்திரம் இருக்காதா?
இந்த ஆட்சி வந்து, தந்தை பெரியார் அவர்களுக்காக செய்தது என்ன? அய்யா பிறந்த நாள், நினைவு நாள் என்பதாவது தெரியுமா?
வெளியில் வந்து திராவிடர் இயக்கத்தின் அந்த சிற்பியின் சிலைக்கு மாலை அணிவித்ததுண்டா? நினைவிடத்தில் மலர் வளையம் வைத்ததுண்டா?
அதே நேரத்தில் விவேகானந்தர் இல்லத்துக்கு 99 ஆண்டுகள் குத் தகையை நீட்டி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதே!
செம்மொழி அலுவலகம் அங்கு வரும் என்ற வதந்தி கிளப்பிய நேரத்தில் அடேயப்பா இந்த ஆரியம் எப்படி எல்லாம் எகிறிக் குதித்தது?
விவேகானந்தர் பெயரில், ஒன்பது பல்கலைக் கழகங்களில் உயர் ஆய்வு மய்யமாம்; - அதற்கு அஇஅதிமுக அரசு சார்பில் ரூ.25 லட்சம் தாரை வார்ப்பாம்.
அய்யா பெரியாருக்கோ, அண்ணாவுக்கோ எத்தனை பல்கலைக் கழகங்களில் இந்த உயராய்வு மய்யம் உண்டு?
இராம கிருஷ்ண மடத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் இரண்டு கோடி தூக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதே!
இராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்டு வது என்ற வினாவை எழுப்பியவர் அல்லவா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்?
அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பியவருக்குத்தான் அண்ணா பெயரையும், திராவிட பெயரையும் தாங்கியுள்ள கட்சியின் ஆட்சியில் முதல் மரியாதை என்றால் இதன் பொருள் என்ன?
அன்று புத்த மார்க்கத்தில் ஆரிய நுழைவு என்றால் இன்று திராவிடர் இயக்கத்தில் திரிநூல் தத்துவம் நுழைந்து விட்டதன் விபரீத விளைவு கள்தான் இவை.
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் மட்டுமல்ல புலிக்குட்டிகளுக்குப் பெயர் சூட்டினாலும் சமஸ்கிருத மழைதான்.
எந்த காலத்திலாவது தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வு ஆணை யத்திற்குப் பார்ப்பனரை தலைவராக நியமித்ததுண்டா?
நண்டைச் சுட்டு, நரியைக் காவல் வைத்ததுபோல, நட்ராஜ் அய்யர் தம் பங்குக்கு பொதுத் தமிழ்த் தேர்வைத் தானே தூக்கி வெளியில் எறிந்தார்?
பாசிசம் சீறுகிறது  - பாசிசப் பட்டம் பறக்கிறது - பார்ப்பனர் அல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை!!!
திராவிட இயக்கத்தின் வேரை வெட்டி வீழ்த்த திராவிட இயக்கத்தின் வேடம் அணிந்தே வெட்டரிவாள்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!


************************************************************************

தீ பரவட்டும்! எங்கே?

கம்பனைப் பற்றிய திராவிடர் இயக்கத்தின் கருத்து வெளிப்படையானது.
தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவன் கம்பன் என்பது திராவிடர் இயக்கத்தின் நிலைப்பாடு.
கம்ப இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று டாக்டர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களோடும், நாவலர் சோம சுந்தர பாரதியாரோடும் வாதிட்டு வென்றவர் அண்ணா (அந்த விவாதங்கள் தீ பரவட்டும் என்று நூலாகவே வெளிவந்துள்ளது) கம்பராமா யணத்தில் இலக்கிய அழகைத் தேடுவது மலத்தில் அரிசி பொறுக்குவதற்குச் சமம் என்றார் தந்தை பெரியார். 

ஆனால் இன்றைய அண்ணா தி.மு.க. ஆட்சி அதன் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப் பாடு என்ன தெரியுமா?
ஆண்டுதோறும் கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும், சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்பட அதிமுக அரசின் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இவ்வாண்டு கம்பர் விருது முனைவர் பால. இரமணிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குள் குடி கொண்டிருக்கும் ஆரிய வன்மத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கம்ப இராமாயணத்தை எதிர்த்துத் தீ பரவட்டும் என்றார் அண்ணா அந்தக் கம்பருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது ஒருபுறம்.
இந்த விவாதத்தில் அண்ணாவை எதிர்த்து பேசியவர் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இரா.வி. சேதுப்பிள்ளை.
அப்படிப்பட்ட நிலையில் சொல்லின் செல்வர் விருது ஒன்றும் இலக்கியப் பேச்சாளருக்கு வழங்கப் படுகிறதாம். அண்ணாவைக் கொச்சைப்படுத்த வேண்டும் -அண்ணாவை எதிர்த்துப் பேசியவரைப் பாராட்ட வேண்டும் என்ற பார்ப்பனத்தனம் இதில் பள்ளி கொண்டுள்ளது _ என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
***********************************************************************************
பூணூல் புகுந்தது!

அண்ணா பெயரால் ஒரு கட்சி திராவிட என்ற முத்திரையும், கட்சியின் பெயரில், இந்தக் கட்சியின் அதிகாரபூர்வமான நாளேடுதான் Dr.. நமது எம்.ஜி.ஆர்.
அண்ணா பெயரால் ஒரு கட்சி திராவிட என்ற முத்திரையும், கட்சியின் பெயரில், இந்தக் கட்சியின் அதிகாரபூர்வமான நாளேடுதான் Dr.. நமது எம்.ஜி.ஆர்.
அனேகமாக அன்றாடம் ஆன்மீகச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள்தான்! அதையும் கடந்து பூணூல் அணிவதன் தத்துவம் என்று சிறப்புக் கட்டுரை தீட்டும் அளவுக்கு அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றுகிறது. (?) இந்த ஏடு!
என்ன எழுதுகிறது தெரியுமா?
இன்றைய சீர்திருத்தக்காரர்கள் பூணூல் அறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, எல்லார்க்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவு ஏற்படுத்தும்?
---------------------------------------(நமது எம்.ஜி.ஆர். 2.10.2012 பக்கம் 11)
சீர்திருத்தக்காரர்கள் என்று யாரைக் கிண்டல் செய்கிறது அ.இ.அ.தி.மு.க. ஏடு? தந்தை பெரியாரை, அறிஞர் அண்ணாவை _ -அப்படித்தானே?
திராவிட இயக்கத்தில் பூணூல் புகுந்து விட்டது ஆரியம் ஊடுருவி விட்டது என்பதற்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்?
விபூதி வீரமுத்து சாமிகளும், அணுகுண்டு அய்யாவுகளும் திராவிடர் இயக்கத் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தையும்  கொச்சைப்படுத்தினார்கள் அல்லவா?
அந்த நிலைப்பாட்டை திராவிட இயக்கம் என்ற பெயரால் அண்ணா என்ற பெயரால் அ.இ.அ.தி.மு.க. செய்து வருகிறதே!

-------------------------மின்சாரம் அவர்கள் 13-4-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

வடதுருவம், தென்துருவம் ஆகியன எப்போதும் பனியால் மூடப்பட்டுள்ளன - ஏன்?


பூமி உருண்டையாக இருப்பதும், பூமி தனது அச்சில் சாய்வாக இருந்தபடி சுற்றுகிறது என்பதும் இதற்குக் காரணம்.

சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து படும்போது சூடு உறைக்காது. அதுவே செங்குத்தாக வந்து விழும்போது வெயில் வாட்டும். காலையில் சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து விழுவதாலும், காற்று மண்டலத்தின் வழியே அதிகத் தொலைவு கடக்க வேண்டியிருப்பதாலும் காலையில் வெயிலின் கடுமை தெரியாது. மதிய வேளையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக வந்து விழுவதால் வெயில் உறைக்கிறது.

பூமி கோள வடிவில் உள்ளதால் தெற்கு, வடக்குத் துருவங்களில் சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து விழுகின்றன. இரு துருவப் பகுதிகளிலும் சூரியன் ஒரு போதும் உச்சிக்கு வருவதில்லை.

மேலும் தென்துருவத்திலும், வடதுருவத்திலும் மாறி மாறி 6 மாதம் பகலாகவும், 6 மாதம் இரவாகவும் உள்ளதால் வடதுருவப் பகுதிகளில் கடுங்குளிர் எப்போதும் நிலவுகிறது. இவை எப்போதும் உறைபனி படிந்தே விளங்குகின்றன.

- க.ம.ரா.கந்தன்

தமிழ் ஓவியா said...

சட்டப் பேரறிஞர்


நம் நாடு சுதந்திரம் அடைந்த சில நாள்களில் அரசியல் நிர்ணய சபை கூடியது. அக்கூட்டத்தில் அரசியல் சட்டத்தை வரைவதற்காக வரைவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தக் குழுவின் தலைவரானார். அவருக்கு உதவி செய்ய உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த எழுவரில் ஒருவர்கூட அம்பேத்கருக்கு உதவி செய்யவில்லை.

ஆனாலும், அம்பேத்கர் தளர்ந்துவிடவில்லை. அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அரசியல் சட்டம் முழுவதையும் தனி மனிதராக இருந்து வகுத்துக் கொடுக்க முயன்றார். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அம்பேத்கர். பல மாதங்கள் கடுமையாக உழைத்துத் திறம்படச் செய்து முடித்தார்.

அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொதுமக்களின் முன்பு வைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபை கூடியது. அரசியல் சட்டத்தின் விதிகள் ஒவ்வொன்றையும் படித்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்டம் மும்முறை படித்து ஆராயப்பட்டது. அப்போது அவரது உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. சட்டச் சிற்பி செதுக்கிய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நியூயார்க் நகரத்திற்கு வரும்படி அமெரிக்கர்கள் அழைத்த அழைப்பினை ஏற்று நியூயார்க் சென்றார் அம்பேத்கர். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு சட்டப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

காலை உணவைத் தவிர்ககாதீர்!


பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே!

நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நன்றாகப் படிப்பது, நன்றாக விளையாடுவது, அளவான நேரத்திற்கு நண்பர் - நண்பிகளுடன் இருப்பது - உரையாடுவது, பிறகு நன்றாகத் தூங்கி எழுந்து, அன்றன்றாடக் கடமைகளைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

பெரியார் பிஞ்சுகளான, உங்களுக்கா சொல்ல வேண்டும்? எள் என்பதற்குள் எண்ணையாக இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களான தேனீக்கள் அல்லவா எம் தங்கங்கள்!

ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு வேண்டுகோளாக சொல்லப் போகிறேன்.

ஏனென்றால் உங்கள மாதிரிப் பிள்ளைகள் அறிவுரை, ஆலோசனை என்றாலே முகம் சுளிக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் வேண்டுகோள் என்றேன்.

சரி தாத்தா விஷயத்திற்கு வாங்க; எங்களுக்குப் பொறுமை இல்லே - உடனே சொல்லுங்க..... அப்படின்னுதானே சொல்றீங்க.

ம் சரி இதோ சொல்றேன் - கேளுங்க பிள்ளைகளே!

உங்கள்ல பலரும் பள்ளிக்குப் புறப்படும்முன் காலை உணவை - சிற்றுண்டியை - (Break fast) சரியாகச் சாப்பிடாமல் உரிய நேரத்தில் அதிகாலையிலே எழாமல், தாமதித்து எழுந்து, உங்கள் அம்மாவைப் போட்டு வதைக்கிறீங்க - சாப்பிடாமலேயே - பஸ் வந்ததும் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நெருக்கிக் கூறி, பட்டினியாகவோ, அல்லது அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு அரக்கப்பறக்க ஓடுகிறீர்கள்!

அது சரியில்லே. சரியேயில்லை.....! ஏன்னா அது உங்க வளர்ச்சியை ரொம்ப ரொம்பப் பாதிக்கும்.

உடல் வளர்ச்சியை மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி, வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்டு உள்வாங்கி மனதில் பதியவைப்பதற்கு - காலை உணவைத் தவிர்த்தல் உதவவே உதவாது - மாறாக, வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை மூளை ஏற்பதில் சுறுசுறுப்பு காட்ட இயலாது. ஏன் தெரியுமா? நமது உணவு - உங்களுக்குத் தெரியுமா? செரிமானமாகும்போது, அதனைச் சர்க்கரையாக மாற்றித்தானே நமது மூளையை இரத்த ஓட்டத்தின் மூலம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

காலை உணவை - முதல்நாள் இரவோ, மாலையோ சாப்பிட்டு பொழுது விடிந்து எழுந்தவுடன், வயிறு மிகவும் காலியாகி இருக்கும். அதனை நன்கு உண்டு நிரப்புவது அவசியமோ அவசியம்! தெரிகிறதா தம்பிகளே, தங்கைகளே?

ஒழுங்காக காலைச் சிற்றுண்டி உணவை, சரியாகச் சாப்பிட்ட பல பள்ளிக் குழந்தைகள் நல்ல நினைவு வன்மை - Memory - ஏற்படுவதால் பாடங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல முறையில் உள்வாங்கி, மனதில் நிலைநிறுத்த முடிகிறது.

எனவே, நீங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு காலை உணவை ஒழுங்காக நல்ல முறையில் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்; நன்றாகப் படிக்கவும், தேர்வில் ஏராளமான மதிப்பெண் பெறவும், வீட்டில் தாய், தந்தை மகிழும் நிலை உங்களுக்கு ஏற்படும் - செய்வீர்களா செல்லங்களே,,,,,,,!

அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

தோல்வியா? துவளாதீர்!


-சிகரம்

ஓர் உண்மையைச்- சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். நாம் தோல்வி என்று நினைப்பது, சொல்வது எல்லாம் முழுக்க முழுக்கத் தப்பு.

ஒரு மாமரத்தில் தொங்கும் மாங்காயை அடிக்க ஒருவன் கல் விடுகிறான். மாங்காய் விழவில்லை. கல் குறி தவறிச் சென்றுவிட்டது. இது தோல்வியா?

அடுத்தமுறை ஒரு கல் விடுகிறான், மாங்காய் விழுந்துவிட்டது. இது வெற்றி என்போம். மாங்காய் அடித்ததில் வெற்றி, தோல்வி என்று இரு முடிவுகள் எப்படி வரமுடியும்? ஆக, நாம் நினைப்பதில் தப்பு உள்ளது என்பது புரிகிறதா? ஆம். உண்மையில் தப்புதான்.

முதல் கல்லில் மாங்காய் விழாதது தோல்வி அல்ல. -நிறைவேறாமை என்பதே உண்மை. முதல் முயற்சியில் இலக்கு நிறைவேறவில்லை.

இரண்டாவது முயற்சியில் இலக்கு நிறைவேறியது என்பதே உண்மை. மாறாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. நாம் முதல் முயற்சியில், இரண்டாம் முயற்சியில் அல்லது சில முயற்சிகளில் ஒரு செயல் நிறைவேறவில்லையென்றால் அதைத் தோல்வி என்கிறோம்.

தோல்வி என்றால் வெற்றிபெறவே முடியாது என்பது மட்டுமே-! வெற்றிபெற வாய்ப்புள்ள எதற்கும் தோல்வியில்லை-! விண்வெளிக்கு ராக்கெட் ஏவியதும் வெடித்துச் சிதறியது. அது தோல்வியா? அடுத்தடுத்து ஏவி செவ்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்டோமா! தோல்வியென்றால் விண்வெளிப் பயணமே முற்றுப் பெற்றுப் போயிருக்கும். அடுத்தடுத்த முயற்சி வந்திருக்காது.

எனவே, முயற்சிக்கு வாய்ப்பு உள்ள எச்செயலுக்கும் தோல்வியில்லை. முடியவே முடியாது என்ற முடிவு மட்டுமே தோல்வி-! முயற்சியின் முனைப்பில் தோல்வி முடிவாவதில்லை; முயற்சிகளின் முடிவிலேதான் தோல்வி உறுதியாகிறது. எனவே, முதல் முயற்சி நிறைவேறாதது தோல்வியென்று எண்ணித் துவளுவது அறியாமையாகும்.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க வேண்டியவர்கள். எதிர்காலத்தை வடிவமைத்து, நாளைய உலகை நடத்திச் செல்ல வேண்டியவர்கள். எனவே, இதை நன்றாக மனதிற்கொண்டு, முயன்றால் முடியாதது இல்லை; இயலாது என்பது முட்டாள்களின் முடிவு என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

அதேபோல் வெற்றியென்பது நிரந்தரமானது அல்ல. ஓட்டப்பந்தயத்தில், கிரிக்கெட் விளையாட்டில், அம்பு எய்வதில் என்று எந்தப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்த போட்டியில் தோற்கிறார்கள். ஒருமுறை 100 ஓட்டங்கள் பெறும் வீரர், அடுத்தமுறை 2 ஓட்டங்களில் வெளியேறுகிறார். இவர்களெல்லாம் வெற்றிவாய்ப்புக் கிட்டாதபோது (கிடைக்காதபோது) துவண்டால் சாதிக்க முடியுமா-?


தாமஸ் ஆல்வா எடிசன்

மின்சார பல்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி முதல் பலரும் பலமுறை முயன்றே வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் வழிகளில் முயன்றே இறுதியில் மின்சார பல்பு ஒளிர வழிகிடைத்தது என்பதை உணர்ந்து பிஞ்சுகள் நெஞ்சு நீதியுடன் நிமிர்ந்து நின்றால், வாழ்வில் ஒளிரலாம், உயரலாம்-!

அதேபோல் மாணவர்கள் இன்னொரு கருத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒரு செயலில் சாதிக்க முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்க முடியாது என்பது இல்லை. படிப்பில் உயர்நிலை எட்ட முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்கலாம்.


இராபர்ட் கிளைவ்

இராபர்ட் கிளைவ் சிறுவயதில் படிக்கமாட்டார். அளவற்ற குறும்பு செய்வார். அவரது செயல்களைப் பொறுக்கமுடியாத அவரது பெற்றோர், இராணுவத்தில் சேர்த்தனர். அப்படி உருப்படாதவன் என்று துரத்தப்பட்ட இராபர்ட் கிளைவ்தான், ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் வேரூன்ற -- நிலைக்க வழிசெய்தார்.


கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் மூன்று முறை பள்ளி இறுதித் தேர்வு எழுதித் தோல்வியுற்றார் (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அவர்தான் இலக்கிய மேதையாக, எத்தனையோ திரைப்படங்களுக்கு எழுத்தாளராய், அரசியல் விற்பன்னராய், தலைசிறந்த நிர்வாகியாய், பேச்சாளராய், கவிஞராய் பன்முகத்திறன் பெற்று, அய்ந்து முறை தமிழக முதல்வராயும் ஆனார்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாதிப்பதைவிட, சராசரியாய் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான், எதிர்காலத்தில் உயர்நிலையை எட்டி பல்திறன் பெற்று பளிச்சிடுவதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே, தோல்வியில் துவளாமல், தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டும்! சரித்திரம் படைக்க வேண்டும்-!

தமிழ் ஓவியா said...

வருஷப் பிறப்பை கொண்டாடலாமா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்கு கண்ணன், நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு, நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்! என்றனன்.



கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.



-------------------------------------(ஆதாரம்: அபிதான சிந்தாமணி)



இவ்வளவு கேவலமான, ஆபாசமான, அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடு பவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது? குறிப்பு: கேவலமான, ஆபாசமான, அறிவுக்கு பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பாக இருப்பதால்தான் தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் தலைமையிலான அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இருந்தாலும் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி பழைய ஆபாச வருஷப்பிறப்புக்காகச் சிறப்பிதழ் வெளியிடுவது வெட்கம்! மகா வெட்கம்!!

11-4-2010

தமிழ் ஓவியா said...


அந்த மாமனிதர் அம்பேத்கர்!



கிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய்; தாழ்ந்து

கிடந்தமக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ!

விழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும்; பேச

வாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும்; வாழ

வழியின்றி ஆண்டாண்டாய் ஒடுக்கப்பட்டு

வறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்

எழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த

இருள்முழுதும் விலகியதோ? இன்னும் இல்லை!

பிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்

பன்றிகட்கும் நாய்களுக்கும் கீழாய் சொந்தத்

திருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்;

தீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்!

அரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்

அழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்!

திரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்

துயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்!

அறியாமை எனும்இருட்டில் கிடந்தும்; ஜாதி

ஆதிக்கத்தின்பிடியில் உழன்றும்; கூட்டில்

சிறைப்பட்டப் பறவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்

கேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப்பட்டும்

தரித்திரராய் வாழ்ந்துமடிந் தழிந்தார்! தங்கற்

தலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி

உரிமையொடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்

உண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை!

ஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க

உயர் ஜாதி மக்களாலே மறுக்கப் பட்டார்!

சேரி மக்கள் தொட்டுவிட்டால் தீட்டாம் என்றே

தெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப்பட்டார்!

வேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு

மற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்

சீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்துத்

தவித்தார்கள்! அவர்களையார் நினைத்துப் பார்த்தார்?

பள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து

படியேற நினைக்கையிலும் உதவி டாமல்

தள்ளிவிடப் பட்டார்கள்! கல்வி என்னும்

தருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்!

எல்லார்க்கும் பொதுவென்னும் கோயிலுக்குள்

இம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை!

கல்லாக இருக்கின்ற காரணத்தால்

கடவுள்களும் கண் திறந்து பார்த்ததில்லை!


ஜாதிமதத்தின் பேரால் கடவுள் பேரால்

தன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்

நீதிபெற முடியாமல் பட்ட துன்பம்

நிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே

நாதியற்றும் நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்

நிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்!

ஆதிநாளின் கொடுமை இன்று இவையென்றாலும்

அடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை!


செந்தாமரைசேற்றில் மலர்ந்த தைப்போல்

தோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்

வந்துபிறந் தாயேஇச் சமுதாயத்தில்!

விடிவெள்ளியாய் உன்னைக் காண்ப தற்கு

நொந்துதவம் செய்தாரோ அந்த மக்கள்!

நெடுவாழ்வின் துயர்போக்கும் மருந்தே நீதான்!

இந்தபிறப்பில் மட்டும் இன்றி என்றும்

இறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே!



- கா. முருகையன்

சென்னை -72