Search This Blog

10.4.13

விதண்டாவாதம் - தந்தை பெரியார்




நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது, நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.
****
ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை கிண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜென்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.
****
நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!
****
அதிலும் மகம்மதியர்களுடைய கடவுளும், கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய்ப் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய்த் தீர்ப்புச் சொல்லிவிடுமாம்.
****
இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய்ப் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.
****
கிறித்துவ சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி, எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்.  அந்தப் பாவம் ஏசுகிறித்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்.  மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.
****
சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்.
****
வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.
****
ஆனால் சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக் கூடுமாம்.
****
அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்.
****
அப்புறம், ஒவ்வொரு மனிதனுக்கும் ஜென்மங்களும் உண்டாம்.
****
இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜென்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.
****
ஆகவே பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம்.
****
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்புமுண்டாம்.
****
ஆனால், கடவுளைப் பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.
****
அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்) கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா? மன்னிக்கப்படவே மாட்டாது.
****
ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவர்களுடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம்.
****
ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான -சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.
****
பாவம் நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்?  எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்.
-----------------------------------தந்தை பெரியார்- "பகுத்தறிவு", செப்டம்பர் 1935.

24 comments:

தமிழ் ஓவியா said...


சுனிதா வில்லியம்ஸ்


அமெரிக்காவில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண்மணி என்ற புகழுக் குரியவர் - இருமுறை பயணித்தவர்.

பெண்ணால் எதனை யும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர்.

ருசிய பெண் வாலண் டினா விண்வெளி சென்று வியக்க வைத்தார் அன்று.

சுனிதா வில்லியம்ஸின் தந்தையார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் - தாயாரோ அய் ரோப்பாவின் சுலோவேனி யாவைச் சேர்ந்தவர்.

இந்து மதமும், கிறித் துவ மதமும் இணைந்த குடும்பத்திற்குச் சொந்தக் காரர் - அதனால்தானோ என்னவோ சுனிதா வில்லி யம்ஸ் விண்வெளிக்குச் சென்றபோது கீதையையும், உபநிஷத்துக்களையும் எடுத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார்.

விண்வெளி தொடர் பான நுணுக்கங்கள் அவற் றில் நிரம்பி வழிகின்றன என்ற எண்ணத்தில் அவற்றை எடுத்துச் சென் றிருக்க முடியாது. இவற் றைப்பற்றிதான் உலகெங் கும் பறைசாற்றி வைத்துள் ளார்களே - அவற்றின் தாக்கமாக இருக்கக்கூடும்!

உண்மையைச் சொல்லப் போனால், கீதை பெண் களுக்கு உகந்த நூலே அல்ல.

பாவ யோனியில் பிறந்த வர்கள் பெண்கள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32) என்று கூறுவதுதானே கீதை - அதைப்பற்றி சரி யாகத் தெரிந்திருந்தால் இந்த வீராங்கனை கீதை யைத் தீண்டியிருக்கவே மாட்டார்.

வான்வெளியில் பறந்த ராகேஷ்சர்மா என்ற இந் தியன் விண்வெளிக் கலத் தில் காலடி பதித்தபோது காயத்ரி மந்திரம் உச்சரித் தார் என்பதற்காக உச்சிக் குடுமி பார்ப்பன ஏடான தாம்பிராஸ் (மே 1962) ஒரு முறை பூணூலை இழுத்துப் பார்த்து சந்தோஷப்பட்ட துண்டு.

அவ்வளவு தூரம் போவானேன்? முதல் மனி தன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ் மாசில் (Cosmos) சென் றதை விஞ்ஞானியான டாக்டர் சி.வி.இராமன் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத் திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் என்று சொல்ல வில்லையா?

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பெரும் பாலும் நாத்திகர்களாக இருந்தாலும், இதுபோன்ற இந்து சாயல் உடையவர்கள் அந்தச் சிறையிலிருந்து அறிவை விடுவித்துக் கொள்ளாதது இரங்கலுக் குரியதே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


அடே, அப்படியா?


அரசியல்வாதிகளுக்குத் தான் பிரதமர் பதவிமீது ஆசை ஏற்படும். நான் அரசியல்வாதி அல்ல. அரசியல் ஆசைகள் இல்லாத சாதாரண மனிதன். எனவே, பிரதமராக வேண் டும் என்ற ஆசை எதுவும் எனக்கு இல்லை.

- கொல்கத்தாவில் நரேந்திர மோடி, 9.4.2013

தமிழ் ஓவியா said...


பாடம் போதிப்பார்கள் பெண்கள்!


பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திர மோடி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற தகவல் பரவலாகத் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டது. இதில் மோடியைப் பொறுத்தவரை தந்திரசாலி - இதுபோல் காய்களை நகர்த்துவதில் வல்லவர்.

பி.ஜே.பி.யின் பார்லிமெண்ட் குழுவில் இடம் பிடித்துவிட்டார். அத்வானியின் மனதில் பிரதமர் நாற்காலி எண்ணம் இருந்ததில் தவறு இல்லைதான். கட்சியின் மூத்த தலைவர், துணைப் பிரதமர்வரை எட்டிப் பிடித்தவர்.

கடந்த முறை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுத் தேர்தலைச் சந்தித்த நேரத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட நிலையில், இந்த முறை மாற்று வேட்பாளரைத் தேடும் நிலைக்குப் பி.ஜே.பி. தள்ளப்பட்டு விட்டது.

தன்னை ஒதுக்கிவிட்டு மோடியை முன்னிறுத் தும் நிலையில், அத்வானி தன் மனக்கிலேசத் தையும் வெளிப்படுத்தத் தயங்கவில்லை. காங்கிரசைப் போல பி.ஜே.பி.யையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டதுடன் நிற்கவில்லை; இன்றைய பி.ஜே.பி.யின் செயல்பாடுகள் என் சிந்தனை களுக்கு ஒத்துப்போகவில்லை என்று பி.ஜே.பி. யின் 33 ஆம் ஆண்டு விழாவில் இந்தியாவின் தலைநகரில் முன்னணித் தலைவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மனந்திறந்துள்ளார் அத்வானி.

அதே கூட்டத்தில் மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கட்சியின் அகில இந்தியத் தலைவர் கூறியபோது, இல்லை இல்லை, அத்வானிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று டில்லி மாநில பி.ஜே.பி. தலைவர் விஜய்கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வருபவர்தான். மோடிக்குக் கொடுக்கும் முக்கியத் துவம் அவருக்குக் கொடுக்கப்படாததும் - பார்லிமெண்ட் போர்டில் அவருக்கு இடம் அளிக்கப்படாததும் இன்னொரு பக்கத்தில் அதிருப்திப் புயல் மய்யம் கொண்டுதானிருக்கிறது.

போலி என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப் பட்ட - மோடியின் நெருங்கிய சகாவான அமித்ஷா (முன்னாள் அமைச்சரும்கூட) பி.ஜே.பி.யின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதுவும் கட்சியில் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் மோடி என்றே சொல்ல வேண்டும்.

மக்கள் தொகையில் சரி பகுதி கொண்ட பெண்களின் வாக்குகளின்மீது குறி வைத்துள் ளார். பெண்களுக்காக, தானொன்றும் அதிகம் செய்திடவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறுவதுபோலக் கூறினாலும், உண்மையும் அதுதானே!

இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் குஜராத் 14 ஆம் இடத்தில்தானே இருக்கிறது. இந்நிலையில், பெண் கல்வியைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது?

குஜராத்தின் வளர்ச்சிபற்றி திட்டக் குழுவின் கணிப்பு என்ன? நுண்ணூட்டச் சத்துக் குறை பாட்டில் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே!

இது ஒருபுறம் இருக்கட்டும், மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் மாயா கோத்வானி, நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துள்ளதே!

இவ்வளவுக்கும் அந்தப் பெண் ஒரு டாக்டர். கொலை செய்யப்பட்டவர்களோ 97 பேர் - அதுவும் குழந்தைகள் 35 பேர் - என்ன கொடுமை!

இந்த லட்சணத்தில் பெண்கள் முன்னேற்றத் தில் அக்கறை கொண்டதுபோல பசப்புகிறார் மோடி.

யார் முறியடித்தாலும், முறியடிக்காவிட்டாலும் இந்தியப் பெண்கள் முன்னின்று தோற்கடிக்கப்பட வேண்டியவர் நரேந்திர மோடிதான் - நினைவிருக் கட்டும்!

தமிழ் ஓவியா said...


செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (2)



சிக்கன் சூப் தொகுதிகள் எழுதிய ஊக்கமூட்டும் எழுத்தாளர் ஒரு கருத் தரங்கில் - பயிற்சி முகாமில் பேசியதை நேற்றைய கட்டுரையில் வளர்தொழில் ஏட்டிலிருந்து எடுத்துக் குறிப்பிட் டிருந்தேன்.

நாள்தோறும் நாம் அய்ந்து செயல்களில் விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும்; அப்படிச் செய்தால் நிச்சயம் நமது இலக்கை அடைய முடியும் என்று மிகுந்த தன்னம்பிக்கை ததும்பும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

வெற்றி பெற விரும்பும் அனைவரும் முதலில் தங்களுடைய வெற்றிக்கு தாங்களே முழுப் பொறுப்பு என்பதை உணரவேண்டும். தாய், தந்தை பரிந் துரைப்பர்; உறவினர் கைகொடுப்பர் என்றெல்லாம் பிறரை நம்பி இருப்பதை விட நாமே சொந்தமாக முயற்சி செய்யவேண்டும்.

Event + Response = Out come என்ற ஃபார்முலாவைப் புரிந்துகொண் டால் உங்கள் பொறுப்புணர்வை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு நிகழ்வு (Event) நடைபெறுகிற போது, அதையொட்டி நீங்கள் மேற் கொள் கிற செயல்பாடே (Response) விளை வாக (Outcome) வெளிவருகிறது.

உலக நிகழ்வை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், விளைவை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்கள் செயல்பாடு களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

செயற்பாடுகளை நிர்ணயிப்பது மூன்று காரணிகள்தான்.

1. மனப்போக்கு (Behaviour) நடத்தை

2. எண்ணங்கள் (Thoughts)

3. மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தல் (Visualizing Images)

இந்த மூன்றும்தான் உங்கள் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன.

இந்த மூன்றையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

முதலில் மனப்போக்கை எடுத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அதை எப்படிச் சொல்ல விரும்புகிறீர்கள்? என்பது மிக முக்கியம்.

காலங்காலமாக நீங்கள் உங்களிடம் உள்ள பழக்கங்களையும், மனப்போக்கு களையும், திரும்பிப் பார்க்கவேண்டிய நேரம் இது.

எதையெல்லாம் முடியாது என்று எண்ணி இருந்தீர்களோ அதையெல்லாம் முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் அனைத்தை யும் நேர்மறைச் சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் நாள்தோறும் அதிகபட்சமாக தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய அய்ந்து பேரிடம் தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அந்த அய்வரையும் உங்களைப் போன்ற வெற்றி ஆர்வலராக இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

அயல்நாடுகளில் கார்களில் ஜி.பி.எஸ். என்ற கருவியைப் பொருத்தியிருப் பார்கள். நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த முகவரியை அதில் பதிவு செய்துவிட்டால், அக்கருவி இடது பக்கம் செல், வலது பக்கம் செல், நேராகப் போ என கட்டளையிட்டுக் கொண்டே வரும். அதுபோன்றுதான் மனமும். இலக்கைக் கொடுத்துவிட்டால் வழியை நமக்கு அது காட்டும்.

சரி, இதனை எப்படிச் செயல்படுத்து வது? இதோ... அதற்கு நான்கு நிலை களை நான் சொல்கிறேன்.

முதல் நிலை:

உங்கள் இலக்கை வரையறை செய்யுங்கள் (Set Your Goal)

நீங்கள் எங்கே செல்லவேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துக் கொள் ளுங்கள். அது ஒரு இலக்காகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெவ்வேறு வகையான தன்மை கொண்ட பல இலக்குகளாகக்கூட இருக்கலாம். இலக்கை நீங்கள் எப்போது அடைய விரும்புகிறீர்களோ, அதை தேதி மற்றும் நேரத்தோடு குறித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது நிலை:

இலக்கை சிறுசிறு கூறுகளாகப் பிரியுங்கள் (Break Your Goals)

அந்த இலக்குகளை அடைய ஒவ் வொரு ஆண்டும் நீங்கள் செய்யவேண் டிய பணிகளைத் திட்டமிடுங்கள்; பெரிய இலக்கை சிறுசிறு இலக்கு களாக மாற்றிக் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் அந்த இலக்கை அடைய ஏதாவது அய்ந்து செயல்களைச் செய்யுங்கள்.

மூன்றாவது நிலை:

உறுதிப்படுதல்
(Affirmations)

உங்கள் இலக்குகளை எல்லாம் உறுதியான சொல் தொடர்களாக எழுதி நாள்தோறும் அதைப் படியுங்கள்.

நான்காவது நிலை:

மனக் கண்களில் வெற்றியைக் காணுதல் (Visualization)

அந்த இலக்கு எட்டப்பட்டவுடன், நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பீர்கள் என்ற காட்சியை உங்கள் மனதிற்குள் கட்டாயப்படுத்தி, அதை நாள்தோறும் ஓட விட்டுப் பாருங்கள்.

இப்படிச் செய்தால் உங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

ஆம், நீங்கள் எதை விரும்பினாலும், அதை அடையக்கூடிய சக்தி மனதிற் குள் இருக்கிறது. எனவே, நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும்.

வாழ்க்கையில் சாதாரண மனித னாக வாழ்வதற்கும், சாதனை மனித னாக வாழ்வதற்கும் ஒரே அளவு நேரத் தையும், ஆற்றலையும்தான் செல வழிக்கப் போகிறீர்கள்.

அதற்கு ஏன் சாதாரண மனித னாக நாம் வாழவேண்டும்? சாதனை மனிதனாக வாழலாமே? என்றார் எழுத்தாளர் ஜேக் கேன்ஃபீல்ட்!

நண்பர்களே, இதனை செயல்படுத் தத் தொடங்குங்கள் - வெறும்படித்ததோடு கீழே போட்டுவிடாதீர்கள்!

தமிழ் ஓவியா said...


இன்பமுடன் வாழ 26 - கட்டளைகள்


1) காலையில் வழக்காக எழுவதற்கு 15 - நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுந்து விடுங்கள். வெளியே செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்ன தாகவே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

2) நாட்குறிப்பேட்டில் அன்றைய நாள் செய்ய வேண்டிய பணிகளையும் எப்போது செய்யப் போகிறோம், என்பதையும் குறித்து வைத்து விடுங்கள்.

3) அன்றாடப் பணிகளைத் தள்ளி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும், செய்யும் பணிகளை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். எதிலும் முன்னதாகவே திட்டமிடுங்கள், எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த பின் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

4) செல்ல வேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல வழக்கப்படுங்கள். பத்து நிமிடத்திற்குள் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

5) சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள்.

6) மன இறுக்கத்தை தளருங்கள், சில வேலைகள் தடைபடுவதாலோ, உலகம் முடிந்துவிடப் போவதில்லை என்பதை உண ருங்கள்.

7) தவறாப்போன ஒரு விடயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதைவிட சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

8) நாம் செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

9) சில நேரங்களில் கைப்பேசியையும், தொலைப்பேசியையும், அணைத்து வைத்துவிட்டு (ஸ்விட்ச் ஆப்) ஓய்வு எடுங்கள். எந்த தொந்தரவும் இன்றி இருக்கலாம்.

10) நாம் செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமின்மையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக் கவும்..... என்னால் செய்ய இயலாது என்று சொல்லப் பழகுங்கள்.

11) உணவு, உடை, உறைவிடம், தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

12) எளிமையாக வாழுங்கள்.

13) உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

14) நன்றாகத் தூங்குங்கள், முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள், தடையற்ற தூக்கத்திற்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள், அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருட்களால் தேவையற்ற மன அழுத்தம் தரும்.

15) ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும்.

16) பிரச்சனைகளை எழுதப் பழகுங்கள், கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை, குறைக்க எழுத்து வடிகாலாகும்.

17) குழப்பம், கவலைகளை மனதிற்குள் போட்டு குழம்பாமல் உங்களின் நம்பிக்கைக் குரியவர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

18) தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் ஏதேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

19) பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள், செய்யும் அனைத்துச் செயல்களையும், மனமார்ந்த அன்போடு செய்யுங்கள்.

20) என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே! எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

21) உங்கள் உடை, நடை, பாவணைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கை மிளிரட்டும். ஆடைகளை நன்றாக அணிவதன் மூலமாக தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

22) அதிகமாக வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள், ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

23) வாரத்தின் இறுதி நாள், விடுமுறை நாட்களை மிகச்சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

24) இன்றைய பணிகளை செவ்வனே செய்வதால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதிற் கொள்ளுங்கள்

25) பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்துவிடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

26) மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

தமிழ் ஓவியா said...


கோவைக்கு வாருங்கள் உரக்கப் பேசுவோம்!


நாளை மறுநாள் 13.4.2013 சனியன்று கோவை - சுந்தராபுரத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு நடைபெற உள்ளது. இது ஒரு மாநில மாநாடு எனும் அளவுக்குப் பெருமையும், தகுதியும் உடையதாக இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

மாநாட்டுக்குத் தீர்மானங்கள் வரவேற்கப்பட்டன. இந்தக் கால கட்டத்திற்குத் தேவையானதும், எதிர்காலத்தில் சந்திக்கப்பட வேண்டியதும் சிந்திக்கப்பட வேண்டியதுமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவின் தலைநகரில் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரம் உலகையே உலுக்கி எடுத்து பெண்கள் பாதுகாப்புப் பற்றி உரக்கச் சிந்திக்க வைத்தது.

பெண்களுக்குத் துப்பாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற அளவுக்குக்கூட கருத்துகள் உலா வந்தன.

இதுபோன்ற ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகம் நடத்தும் கோவை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.
என்னதான் கல்வி வாய்ப்புகள் பெண்களுக்குப் பெருகி இருந்தாலும் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வது, தேவைப்பட்டால் எதிர்தாக்குதல் கொடுப்பதெல்லாம் தேவைப்படுகிறது.

அதற்காகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய இடம் கல்விக் கூடங்கள்தாம்! உடற்பயிற்சி, கராத்தே போன்ற சிறப்புப் பயிற்சிகள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். உள ரீதியாக தன்னம்பிக்கை, துணிவு - இவை எல்லாம் அவசியம் தேவை. அதற்கான கல்வித் திட்டம் நம் நாட்டில் இல்லை என்பதை மரியாதையாக ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.

1929ஆம் ஆண்டிலேயே பெண்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறச் செய்தவர் தந்தை பெரியார்.

பெண்களுக்குக் கும்மி, கோலாட்டம் கற்றுக் கொடுப்பதும், கோலம் போடச் சொல்லிக் கொடுப்பதும் தேவையில்லை. மாறாக கைக்குத்து, குஸ்தி போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் காலத்திலேயே கோடிட்டுக் காட்டியுள்ளார் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
1987இல் கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தென் மாநில ஒடுக்கப்பட்டோர் சமூக நீதி மாநாட்டில் பெண்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் மிக முக்கியமாக பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு பெண் களுக்குத் தேவை என்று வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியர் பணிகளில் ஓரளவு இந்த வாய்ப்பு இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கென்று தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.

நாடாளுமன்றம், மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற மசோதா 1996 முதல் நிலுவையில் இருக்கிறது. கட்சிகளைக் கடந்து ஆண்கள் இதற்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். இதுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையும் முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து கோவை மாநாட்டில் முக்கியமாகக் கருத்துகள் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த மாநாட்டின் தனிச் சிறப்பு என்னவென்றால், காலை கருத்தரங்கமாக இருந்தாலும் சரி பிற்பகல் நடக்கும் பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் நடக்கவிருக்கும் திறந்த வெளி மாநாடாக இருந்தாலும் சரி அனைத்து நிகழ்விலும் பெண்களே கலந்து கொள்வார்கள். கழகத் தலைவர் என்கிற முறையில் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மட்டுமே விதி விலக்கு.

இந்திய அளவில்கூட இப்படி ஒரு மாநாடு இந்த வகையில் நடப்பது கோவை மாநாடே! இதற்கு முன்பு கடந்த ஆண்டு மே மாதத்திலும் வேலூரில் நடத்தப் பட்டது.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் இரு கண்கள் போன்றவை யாகும்.

இந்த இரு நிலைகளிலும் வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் சமத்துவம் ஏற்பட முடியும். ஏற்றத் தாழ்வுகள் பிளவுகள் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளும் கட்டுப்படுத்தப்படும்.

சமூக நிலையிலே இருக்கக் கூடிய இத்தகைய ஏற்றத் தாழ்வைப் போக்காத நிலையில், வேறு எந்த சீர்திருத்தம், மாற்றம் வந்தாலும் அது நிலைக்காது என்பது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.
உரக்கப் பேசுவோம் - வாருங்கள் - கோவைக்கு!

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம் - திராவிடர் எழுச்சி மாநாடு

சிறீரங்கத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.4.2013 அன்று மாலை வெகு எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

மாவட்டக் கழகத் தலைவர் வரவேற்புரை

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர் ச.கணேசன் நன்றி கூறினார். மாநாட்டுத் தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் முன்மொழிந்தார்.

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தமதுரையில் இதே சிறீரங்கத் தில் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். அதில் கிராமக் கோயில் பூஜாரிகள் மாநாடும் ஒரு நாள் நடைபெற்றது.

இதன் நோக்கமென்ன? கிராமக் கோயில் பூஜாரிகள் என்பவர்கள் பார்ப்பனர் அல்லாதார் தான். அவர்கள் நகரப் பகுதியில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக ஆகக் கூடாதா?

அந்த எண்ணம் - அந்த ஆசை அவர்களுக்கு எப்படியும் வந்து விடக்கூடாது என்பதுதான் இதற்குள்ளிருக்கும் சதி என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற் றினார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொடுத் தது என்று மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் தமது தெய்வத்தின் குரல் எனும் நூலில் (பக்கம் 266) குறிப்பிட்டுள்ளார். சிறீரங்கம் மாநாட்டில் பேசிய மாஜி சங்கராச்சாரியர் ராமன் கோயில் கட்டுவதன் அவசியம் பற்றி சிலாகித்துள்ளார்.

மக்களுக்கு இப்பொழுது முக்கிய பிரச்சினை ராமன் கோயில் கட்டுவது தானா? ராமன் கோயில்தான் சர்வரோக மருந்தா?

இதே ஊரில் பிராமணாள் என்ற பெயரில் ஒருவர் உணவு விடுதியை நடத்தி வந்தார். கழகம் களத்தில் குறித்த காரணத்தால் அந்தப் பெயர் நீக்கப்பட்டதோடு, கடையையே காலி செய்து விட்டார்.

சாஸ்திரப்படியே கேட்கிறோம் பிராமணர் ஓட்டல் நடத்தலாமா? உணவை விற்கலாமா? கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் கூறியுள்ளதே!

பார்ப்பான் பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்ய வேண்டும் என்று அதே மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளதே (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 112).

பார்ப்பனர்கள் சங்கீதக் கச்சேரிகளை நடத்து கிறார்களே. மனுதர்மத்தில் சங்கீதம், பார்ப்பனர் களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே (மனுதர்மம் 4, சுலோகம் 15).

மற்றவர்களுக்கு சாஸ்திரத்தை உபதேசிக்கும் பார்ப்பனர்கள் முதலில் தாங்கள் அவற்றைப் பின்பற்றட்டும் என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

சிறீரங்கத்தில் விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் இந்துக்கள் ஒற்றுமை யாக இருந்தால் விரைவில் ராமன் கோயிலைக் கட்டலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலீம் களின் வழிபாட்டுத் தலத்தை சங்பரிவார் பிஜேபி கும்பல் ஒரு பட்டப்பகலில் இடித்தது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், வினய் கட்டியார் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டுள்ள நிலையில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து கொண் டிருக்கக்கூடிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று பேசலாமா?

அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்றால் அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல, பாபர் மசூதி என்பது வெறும் கட்டடம்தான் - அதை இடித்தது குற்றமல்ல என்றும் பேசியதும் இதே சங்கராச்சாரியர்தான் இதன்மீதுகூட சட்டப்படி வழக்குத் தொடுக் கலாம் ஏன் செய்யவில்லை?

நாளைக்கு யாரோ ஒருவர் ஆத்திரப்பட்டு காஞ்சி மடத்தையோ ரங்கநாதர் கோயிலையோ இடித்தால் அது வெறும் கட்டடம்தான் - இடித்ததது குற்றமில்லை என்று சொன்னால் சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சங்கராச்சாரியார் கூறியிருப்பதால் அதற்குப் பதிலாக இதனைக் கூறுகிறோம். வன்முறையை தூண்டுவது கழகத்துக்கு உடன்பாடல்ல என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


அண்டப்புளுகு என்பது இதுதானோ!



2012 மார்ச்சில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப் பட்டது. போர்ப் படிப்பினை மற்றும் மறு சீரமைப்புக் கான குழு (L.L.R.C) என்னும் பெயரில் இலங்கை ராஜபக்சே அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் கண்டுள்ளவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போர்க் குற்றங்களைச் செய்த இலங்கை அரசின் அதிகார வர்க்கம்தான்.

2012 மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கண்டிருந்தபடி எல்.எல்.ஆர்.சி. மீது இலங்கை அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், மீண்டும் கடந்த 21.3.2013 ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மீண்டும் அதே பல்லவிதான்.

மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை 18 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திர பன்னாட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் இது மிக விழிப்பாக நீக்கப்பட்டு மறுபடியும் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருடன் கையில் சாவி கொடுத்த கதை என்று அப்பொழுதே விமர்சனம் எழுந்தது.

நேற்று வந்த ஒரு தகவல் அது உண்மைதான் என்பதை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகி விட்டது. எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டது. அதன்மேல் இலங்கையின் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியதாம். அந்த விசாரணையின் முடிவில் அது தெரிவித்திருக்கும் விடையங்கள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும், அய்.நா.வும் அமெரிக்காவும், உலக நாடுகளும் மனித உரிமை ஆணையமும் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனவே என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

சிங்கள இராணுவ வீரர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் எந்த ஒரு அப்பாவித் தமிழரும் இராணுவத்தால் கொல்லப்படவில்லை. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள்தான் சர்வதேச நெறிமுறைகள் அனைத்தையும் மீறியுள்ளனர் என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பாகவே கூறிவிட்டது.

பல்லாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம் அல்லாமல் வேறு எந்த நாட்டுப் படை கொன்று குவித்ததாம்?

பிரிட்டனின் சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் பொய் - சிங்கள ஓநாய்கள் - ஆட்டுக்குட்டிகளை எங்கள் மார்போடு அணைத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம் என்று சொன்னால் நம்பித் தொலைக்க வேண்டியதுதானே!

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் சொல்லுவதைத்தான் இலங்கை இராணுவ நீதிமன்றமும் சொல்லியுள்ளது.

இதற்குப்பின் அடுத்த கட்டம் என்ன? அய்.நா.வும், மனித உரிமை ஆணையமும் அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன?

நமக்கு ஒரு சந்தேகம்; அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் இந்தோனேசியா நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்ததே - அதன்மீது என்ன நடவடிக்கை என்பதுபற்றி மூச்சுப் பேச்சே இல்லையே - அவை வெறும் காகிதக் கட்டுகள் தானா?
அய்.நா. அமைத்த குழுவின் அறிக்கை நம்பகத் தன்மை உடையதா? கொலைகாரனே நீதிபதியாகி தீர்ப்பு சொன்ன இலங்கை இராணுவ நீதிமன்றத்தின் முடிவு நம்பகத்தன்மை உடையதா?

இதுபற்றி முடிவு செய்யும் தன்மையில்தான் உலகின் யோக்கியதாம்சமே அடங்கியுள்ளது.12-4-2013

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி


மதங்களுக்கு உயிர் நாடியாய் இருப்பது பிரச்சாரமும், பண முமேயல்லாமல் அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனப் பெண் மொட்டை அடிப்பதுண்டா?

ஆண்களும், பெண்களும் கோவில்களுக்கு சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடி கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணிய காரியம் என்கிறார்கள். எந்த பார்ப்பனராவது, பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?

தமிழ் ஓவியா said...


யாரால் அனுப்பப்பட்டார்கள்?


ஆழ்வார்கள், அவதார புரு ஷர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய் யர்கள், திருடர்கள், கொலைகாரர் கள், நம்பிக்கைத் துரோகம் செய் கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

(குடிஅரசு, 27.8.1949

தமிழ் ஓவியா said...


நாத்திகம் பற்றி வினோபா


நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக ஒருவர் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: பயிற்சி பெற்றோருக்கு உடனே பணி ஆணை வழங்குக! குடந்தையில் தமிழர் தலைவர்


குடந்தை, ஏப்.12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணி வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால், கட்சி வேறுபாடு, ஜாதி வேறு பாடின்றி பொதுமக்களைத் திரட்டி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடை பெறும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

குடந்தையில் 10.4.2013 அன்று மாலையில், மகாமகாக் குளம் மேல்கரையில், குடந்தை பெரு நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம், குடந்தை கழக மாவட்டம் ஆகியவற்றின் சார்பில், திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவரின் எழுச்சி உரை

இக்கூட்டத்தில், தமிழினம் சந்திக்கும் சவால்கள் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில், பார்ப்பன ஜாதி ஆதிக்கம், ஆணவம் என்பதனு டைய விளைவாக, இன்னமும் கோயில்களுக் குள்ளே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று ஏன் எதிர்க்கவேண்டும்.

கேரளாவில் பெரிய பெரிய கோவில் இருக்கின்றது. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இருக்கிறதே, அதனை எதிர்த்து யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லையே?

ஆனால், இங்கே அச்சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்களே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண் டும் என்று தி.மு.க. நிறைவேற்றிய அந்தச் சட்டம் மீண்டும் எழுந்து நடமாடக் கூடிய அளவிற்குச் செயல்படுத்தவேண்டும். அது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினரும் அவரவர்கள் பங்கிற்கேற்பத் தயாராக இருக் கிறார்கள். அதனை செயல்படுத்தவேண்டும்.

தமிழக அரசு, சுமுகத் தீர்வு என்கிறது ஏதோ புதிர் நாவல் மாதிரி சஸ்பென்ஸ் இருக்கக்கூடாது. சுமுகத் தீர்வு வந்தால் நல்லதுதான். இந்தச் சட்டத்தைப் நாங்கள் ஏற்கிறோம் என்று பார்ப்பனர்கள் சொல்லவேண்டிய கட்டத்தை இந்த ஆட்சி உரு வாக்கினால், நாங்கள் பாராட்டிச் சொல்வோம். நல்லது செய்யும்போது பாராட்டுவோம்; தவறு செய்யும்போது கண்டிக்கிறோம்.

நாங்கள் ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இல்லையே!

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், மனித நேயத்திற்கு எதிராகப் போனால், அதனைக் கண் டிக்கவேண்டியது மனிதநேயர்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான், தமிழக அரசுக்கு, அ.தி.மு.க. அரசுக்கு - ஏற்கெனவே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, எங்களிடத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 60 சதவிகித இட ஒதுக்கீடு, அதன்படி பயிற்சி நடைபெறும் என்று. அதற்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சி அந்தச் சட்டத்தை நிறைவேற்றி, 69 சதவிகித அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்தி, பயிற்சி கொடுத்திருக்கிறார் கள். அதை இப்பொழுதுள்ள ஆட்சி நடைமுறைப் படுத்தவேண்டும் அல்லவா!

பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் இப்பொழுது பணி யின்மையால் பட்டினியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இதில் என்ன நட்டம் வந்துவிடும்.

இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக, தெளிவாக தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சட்டத்தை, சுமூகத் தீர்வு என்ற பெயராலே என்ன செய்தாலும், நடத்தி வெற்றி காணவேண்டும்; அமுல்படுத்தவேண்டும்.

இல்லையென்றால், கட்சி வேறுபாடு இல்லாமல், ஜாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும். ஜூன் மாதம் முதற்கொண்டு அப்பணிகளைச் செய்யும் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


பி.பி. மண்டல்


பிற்படுத்தப்பட்ட மக்கள் தம் வாழ்நாளில் மறக்கக் கூடாத ஒரு பெருமகன் பி.பி. மண்டல் ஆவார். அவரின் நினைவு நாள் இந்நாள் (1982).

பீகார் மாநில முதல மைச்சராகவும் இருந்தவர். இவரின் தலைமையில்தான் 20.12.1978 அன்று பிரதமர் மெரார்ஜி தேசாய் அவர் களால் பிற்படுத்தப்பட்டோ ருக்கான நலக்குழு அமைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆவது பிரி வின்படி குடியரசு தலைவர் அவர்களால் இத்தகு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தொடக்கத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எவரும் உறுப்பினராக இல்லாத நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மான மிகு கி.வீரமணி அவர் களால் அன்று முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்ட தன் விளைவாக தமிழ் நாட்டைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த சுப்பிர மணியம் அவர்கள் நியமிக் கப்பட்டார்கள். அவர் கடைசி வரை கழகத் தோடும் தமிழர் தலைவ ரோடும் தொடர்பு கொண்ட வண்ணமாகவே இருந்தார்.

குழு அறிக்கைக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது, கலந்துரை யாடுவது என்பனவற்றில் பெரியார் திடலோடு நெருக் கமான உறவோடு இருந்து வந்தார்.

பி.பி. மண்டல் அவர் களும், சுப்பிரமணியம் உள்ளிட்ட உறுப்பினர்களும் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் (30.6.1979) சிறப்பான வர வேற்பும் அளிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பி.பி. மண்டல் மனந் திறந்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறேன்: நாங்கள் அரசுக்கு அறிக்கை அளிப் போம். ஆனால் அரசு அத னைச் செயல்படுத்தும் என்பதற்கு உறுதி யில்லை. அதனைச் செயல்படுத்தும் திறன் உறுதி பெரியார் மண் ணுக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இருக் கிறது! என்று முழங்கியது இன்னும் காதுகளில் ரீங் காரம் செய்கிறது!

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் தமிழர் தலைவர் அவர்கள், செயல் படுத்திக் காட்டுவோம் என்று சங்கநாதம் செய் தார். அதன்படி 42 மாநாடு களையும், 16 போராட்டங் களையும் நடத்தி கழகம் செயல்படுத்தியும் காட் டியதே!

ஆனாலும், பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில், ஏழு விழுக்காட்டைத் தாண்ட வில்லை - நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு. பயணம் செய் வோம் - பணி முடிப்போம் என்று மண்டலின் நினைவு நாளில் உறுதி கூறுவோம்! வாழ்க மண்டல்!

- மயிலாடன் 13-4-2013

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 13


ஏப்ரல் 13ஆம் நாளை தமிழ்நாட்டு மக்களால் மறக்கவே முடியாது. இந்நாளில்தான் 1954ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

எந்தச் சூழலில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்? உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் ஏற்றிப் போற்றப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் நான்காம் வகுப்பே படித்திருந்த காமராசர் அமர்ந்தார் என்பது சாதாரணமானதல்ல.

ஆச்சாரியார் ஏன் தூக்கி எறியப்பட்டார்? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மக் கண்ணோட்டத் தோடு - அரை நேரம் படிப்பு - அரை நேரம் அப்பன் தொழில் என்ற குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினாரே! 1952இல் மட்டுமல்ல; 1937இல் சென்னை மாகாண பிரதம அமைச்சராக வந்த போதும்கூட இதே ராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை இழுத்து மூடினாரே!

ஆச்சாரியாரின் இந்த மனப்பான்மையை மனதில் நிறுத்தினால் தான் 1954இல் இதே நாளில் காமராசர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன சூழ்நிலையையும், காலத்தின் கட்டாயத்தையும் அறிய முடியும்.

ஆச்சரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார்; அதே நேரத்தில் காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

கே.ஆர். விசுவநாதன் என்ற சட்டமன்ற உறுப் பினர் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். வல்லுநர் குழு ஒன்றை நியமித்து புதிய கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்: அறிக்கை வரும் வரை கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக (முதல் அமைச்சர் ராஜாஜிக்கு ஆதரவாக) 137 வாக்குகளும் கிடைத்தன. மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிபுணர் பருலேகர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க மறுத்து விட்டார் முதல் அமைச்சர் ஆச்சாரியார். கடும் எதிர்ப்புக் காரணமாக ராஜாஜி பதவி விலகினார்.

காமராசர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு எளிதில் இசையவில்லை. தந்தை பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களும் கொடுத்த அழுத்தமும் துணிச்சலும்தான் அவர் ஒப்புதலுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

மக்கள் எதிர்பார்த்தபடியே ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளை மளமளவென்று திறந்து மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இலவசக் கல்விக் கதவைத் திறந்து, தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் கல்விக் கண்களைத் திறந்து விட்ட வள்ளல் ஆனார்.

இன்றைக்குக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை கொள்ளவும் 69 விழுக்காடு இடஒதுக் கீட்டினை சட்டரீதியாகப் பெற்றிடவும் கால்கோள் போட்ட கருப்புத் தங்கம் காமராசர்!

ஆம், அவாள் ஆத்து ஆனந்தவிகடன் எழுதியதுபோல கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர்!

காமராசருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் கல்வி வளர்ச்சி செம்மாந்து ஓங்கியது என்பதில் அய்யமில்லை.

இன்னும் மத்திய அரசின் கல்வி நிறுவனங் களில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., முதலியவற்றில் ஒடுக்கப் பட்டோருக்குக் கதவடைப்பு எனும் நிலைதான் தொடர்கிறது அந்தக் கதவையும் உடைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிகரமாக வெளிவரும் நாள்தான் தந்தை பெரியார் அவர் களுக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் உண்மையான நன்றி தெரிவிக்கும் உன்னத நாளாகும்.

வாழ்க பெரியார்!
வாழ்க காமராசர்!

தமிழ் ஓவியா said...


எதிர்க்காமல்...


மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது.
(விடுதலை, 5.11.1967)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம்: திராவிடர் கழகக் கூட்டங்களும்; பார்ப்பனர்கள் ஒத்துழைப்பும்!



தமிழ்நாடு முழுக்கவும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திரா, கருநாடகா, மும்பை, புதுடில்லி என இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட பெரியார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சிறீரங்கத்தில் மட்டும் ஏதாவது சலசலப்பு கேட்கிறது. திராவிடர் கழக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு வேலையிலும் வந்துவிடுகிறது அந்தச் சலசலப்பு! எந்தச் சலசலப் புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிகள் நாங்கள், என பட்டுக்கோட்டை அழகிரி அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் அவர் சொன்னது இன்று வரை சிறீரங்கத்துப் பார்ப்பனர்களுக்குத் தெரியவில்லை போலும்!

தமிழ் ஓவியா said...

சிறீரங்கத்தில் நமது தோழர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தொடங்கும் அதே வேளை பார்ப்பனர்களும் தொடங்கிவிடுகிறார்கள் வேலை! இதில் இன்னொரு வியப்பு என்னவெனில், திராவிடர் கழக நிகழ்ச்சிகள் சிறீரங்கத்துத் தமிழர்களுக்குத் தெரிவதற்குள், அவாள்களுக்குத் தெரிந்து விடு கிறது.

இன்னும் சொன்னால், திருவெறும்பூர் கழகத் தோழர்களுக்குக்கூட தாமதமாகவே தெரியவரு கிறது. போகிற போக்கில் பார்ப்பனர்களைக் கைப்பேசியில் அழைத்து, ஏம்ப்பா! சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்வார் கள் போல! அவ்வளவு சுறுசுறுப்பு!

நம் தோழர்கள் ஏதோ சின்னதாய் ஒரு தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்வார்கள். பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்து அதைச்செய்து, இதைச்செய்து அல்லது எதையாவது செய்து தெருமுனைக் கூட்டத்தைப் பொதுக் கூட்டமாக மாற்றிவிடுவர். சரி! நம் தோழர்கள் நீண்ட நாள்கள் ஆச்சே, என ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயல்வார்கள். எட்டுப் பார்ப்பனர்கள் ஒன்றாய் சேர்ந்து, எட்டுத்திக்கும் பிரச்சினைச் செய்து பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிவிடுவார்கள். அண்மையில் கூட பிராமணாள் உணவகம் தொடர்பான கூட்டத் தைப் பார்த்து, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இது என்ன மாநகரக் கூட்டமா? மாநாட்டுக் கூட்டமா? என்று கேட்டார்கள்.

சிறீரங்கத்தில் கூட்டம் என்றால் அவ்வூர் தோழர்களை மட்டும் நாம் பார்க்க முடியாது. திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம் பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கைந்து மாவட்டத் தோழர்களையும் அங்கு காணலாம். அந்த அளவிற்குப் பெருமைச் சேர்க்கும் சிறீரங்கப் பார்ப்பனர்களுக்கு நன்றி தெரிவித்துக்கூட நாம் ஒரு கூட்டம் நடத்தலாம். இப்படியான சூழலில்தான் சென்ற 4ஆம் தேதியன்று சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. உடனே இச்செய்தி பார்ப்பனர்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படித் தெரியும் என்று கேட்டால், நாங்களும் விடுதலை படிப்போம்ல..... என வடிவேலு பாணியில் அனலாய்ப் பேசுகிறார்கள்.

தோழர்கள் மாநாட்டிற்கான வேலைகளை முடுக்கிவிட, அவாள்களும் வேட்டியை முறுக்கிவிட்டுப் போனார்கள். எங்கு போனார்கள்? சிறீரங்கம் காவல் நிலையம் நோக்கி! அதுதான் மாநாட்டிற்கு நாம் அனுமதி வாங்கி விட்டோமே! அவர்கள் ஏன் போனார்கள்? என்று கேட்காதீர்கள். நாம் வாங்கியது மாநாடு நடத்த! அவர்கள் போனது மாநாட்டைக் கடத்த!

ஒவ்வொரு முறையும் நாம் கூட்டம் நடத்தும் போதும் அவர்கள் மறக்காமல் செல்லுமிடம் சிறீரங்கம் காவல் நிலையம். அங்கு போய் ஆணையரிடம் முறையிடுவார்கள். ஏம்ப்பா! அரங்கநாதரிடம் முறையிட வேண்டியது தானே? என யாரும் கேட்கக் கூடாது. அவாள்களுக்குத் தெரியும் அது முழு மனிதனை படுக்கை வசத்தில் செதுக்கிய வெறும் பாறை என்று! சரி! காவல் நிலையம் போய் என்ன சொல் வார்கள்? சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் நடத்தக்கூடாது, அவர்கள் எங்களைப்பற்றி தவறாகப் (?) பேசுவார்கள், பிரச்சினை வர வாய்ப் பிருக்கிறது என்றெல்லாம் குறைப்பட்டு முறையிடு வார்கள். காவல் துறை ஆணையர் கொஞ்சம் மெத்தனமாக இருந்தால், எங்களுக்கு முதல்வரைத் தெரியும், பிரதமரைத் தெரியும், ஒபாமாவைத் தெரியும் என உலகளவில் சொந்த பந்தங்களைக் கூட்டுவார்கள்.

தமிழ் ஓவியா said...


இதென்னப்பா வம்பா போச்சு! எனக் காவல்துறை ஆணையரும் நம் தோழர்களை அழைப்பார், என்னப்பா கூட்டம் நடத்தப் போறீங்க? எனக்கேட்பார் (அது தான்! சென்ற வாரமே உங்களிடம் அனுமதி வாங்கிவிட்டோமே என்றெல்லாம் சொல்லக்கூடாது. கேட்ட கேள்விக் குப் பதில் சொல்ல வேண்டும்), கூட்டத்திற்கு யார் யாரையெல்லாம் வருகிறார்கள்? என்ன பேசு வார்கள் என எழுதிக் கொடுங்கள். குறிப்பா பிராமணர்கள் குறித்துப் பேசக்கூடாது. அதுவும் அவர்கள் மனம்(?) நோகப் பேசக்கூடாது, என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.

நம் தோழர்களும் வகுப்பு முடித்து வந்து விடுவார்கள் பிறகு மீண்டும் அழைப்பார்கள். விளம்பரப் பலகை இரண்டுதான் வைக்க வேண்டும். நான்கு வைக்கக்கூடாது, ஒலிபெருக்கி நான்குதான் வைக்க வேண்டும். எட்டு வைக்கக் கூடாது. என ஏதோ மாலத்தீவில் கூட்டம் நடத்துவது போல பேசுவார்கள். திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட வளைவு (ஆர்ச்) வைக்க அனு மதிக்க மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால், வளைவை யாராவது எரித்துவிட்டால் என்ன செய்வது? எனக் காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். என்ன செய்வது? என்கிற காவல்துறையினரின் வார்த்தை இன்றுவரை நமக்குப் புரியவில்லை.

சிறீரங்கத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறார்கள், மனசு வலிப்பதாய் துடிக்கிறார்களே! அரங்கநாதர் கோயிலில் தினமும் விழாக்கள் நடத்துகிறீர்களே? அதை நிறுத்த வேண்டும் என நாங்களும் புகார் செய்யவா? சமஸ்கிருதத்தில் பொய், பொய்யாய் உளறி, எங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறீர்களே... அதற்கும் சேர்த்துக் கிரிமினல் புகார் கொடுக்கலாமா? அவ்வாறு புகார் செய்தால் காவல்துறை அதை ஏற்றுக்கொள்ளுமா? அதன் மீது நடவடிக்கை எடுத்து, பார்ப்பனர்களையும், ஆன்மீகத் தமிழர் களையும் திருத்தி நல்வழிப்படுத்துமா?

தமிழ்நாட்டில்தான் திருவண்ணாமலை இருக்கிறது. ஆன்மீக ஊர் என்கிறீர்கள். பழனி இருக்கிறது, மேல்மருவத்தூர், கும்பகோணம் இருக்கிறது. அங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் வருவதில்லையே? சிறீரங்கம் மட்டும் என்ன கைபர், போலன், கனவாய் அருகிலா இருக்கிறது? எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் கொஞ்சம் அதிகம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வார்களா?

தமிழ்நாட்டின் மொத்தப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தும்கூட பெரியாரை, அவரது இயக் கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, தெரிந்து கொள்ளுங்கள். ஆணவத்தில் கூறவில்லை! நியாயத் தில் கூறுகிறோம்!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் எங்களால் எதிர்கொள்ள முடியும். உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நேர்மை வழி நடக்கிறோம்! எங்கள் செயல்களுக்குப் பின்னால் சூழ்ச்சி கிடையாது, வன்முறை கிடையாது, சமூகக்கேடு கிடையாது, மனித அழிவு கிடையாது. ஆனால் அத்தனையும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கிறது. அதை எதிர்த்த பயணம் தான் எங்களின் போராட்டங்கள்! எங்களின் நிகழ்ச்சிகள்!

நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்! ஒருபோதும் களைத்து ஓயமாட்டோம்! காரணம் எங்கள் பயிற்சியாளர் பெரியார்!!

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தில் சு.சாமிக்கு மூக்குடைப்பு


சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் செய்தியில் ஆரம்ப காலத் திட்டத்தின்படி, இத்தாலிய கடற்படை வீரர்கள் இந்தியாவிற்குத் திரும்ப மாட்டார்கள்; இத்தாலிய தூதர் நாடு கடத்தப்படுவார்; குடும்பத்தை இத்தாலி நாடு காட்டிக் கொடுக்காது என்று சொன்னார் அதே சமயத்தில் இத்தாலி அரசு தமது கடற்படை வீரர்களை திரும்ப அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.

நான் மட்டும் உச்சநீதிமன்றத் திற்குச் சென்று, இத்தாலிய தூதரை அடக்கி வைக்கவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இருக்காவிட்டால் இன்னேரம்... என்று சுவாமி பரபரக்க, அவரது தொண்டரடிப் பொடி டிவிட்டர், படையினர், தகுதியில்லாத நிலையில், அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு களைக் குவித்துள்ளனர். அதன்படி, சு.சாமியின் புதிய மந்திரக் கதைகளில், அவரின் பொது நல வழக்கு காரணமாகத்தான், உச்சநீதிமன்றம் இத்தாலிய தூதர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததன் விளைவாக இத்தாலிய அரசாங்கம் மண்டியிட்டது என்றெல்லாம் முழங்கி வரும் வேளையில், சு.சாமி யின் வெற்றிப் பவனியின்போது உச்சநீதிமன்றம் வெந்நீர் ஊற்றி விட்டது.

சு.சாமியின்மீது விழுந்த அதிரடி அறை, இத்தாலிய தூதர் இந்த நாட்டை விட்டு செல்லக் கூடாது என்ற தடையை நீக்கியபோது, விழுந்தது.

இத்தகைய தூதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றிய விண்ணப்பம் செய்வதற்கு சுப்பிர மணிய சுவாமி செயல்பட்ட பொழுது, அவருக்கு இந்த அடி விழுந்தது.

டெலிகிராப் பத்திரிகை கூறுவ தாவது:

நீர் யார்? என்று உங்கள் மன்ற முதன்மை நீதிபதி கேட்டார்.

தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வந்துள்ளதாக சுப்பிரமணியசாமி கூறினார். அதற்கு நீதிபதி, நீர் யாரென்று நான் கேட்கிறேன். நீர் ஒரு வழக்கறி ஞரில்லை; ஆகவே இதில் உமக்கு உரிமையுமில்லை; வாதிடவும் உரிமை யுமில்லை. வீதியில் போகிறவர்கள் எல்லாம் வந்து, நான் வழக்காட விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன ஆகும்? இதுபோல இதற்கு முன் நீர் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது

தமிழ் ஓவியா said...


நான் யார் என்று தெரியுமா? என்று கேட்பதன் மூலம் தனது அதி காரத்தை வலியுறுத்திக் கொள்ளும் இந்த நாட்டில், அதுவே மேலும் ஒரு அவமானகரமாக அமைந்து விட்டது.

உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி கபீர் அத்துடன் விட்டுவிடவில்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த சுப்பிரமணிய சுவாமியைப் பின் இருக்கைக்குப் போகச் சொன்னார். முதல் வரிசை வழக்கறிஞர்களுக் கானது; வழக்கில் சம்பந்தப்பட்டவர் களுக்கானது அல்ல; அங்கே உட்கார உமக்கு உரிமை இல்லை என்று சொன்னார்.

சுப்பிரமணியசுவாமி யாரோ ஆகிவிட்டார். முக்கியமானவர்கள் (பத்து) இருக்கையிலிருந்து வெளி யேற்றப்பட்டார்! சதி நடக்கிறது என்று கூக்குரலிட காரணம் கிடைத்து விட்டது. சுப்பிரமணிய சுவாமியும் அதைத்தான் செய்தார்.
இங்கு ஏதோ கூட்டு இருக்கிறது என்று சொல்லிய சாமி வேறு வழியின்றி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதிலிருந்து பெறப்படும் பாடம் என்ன? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திருடாதே; அவர்களுக் குண்டான நீதிக்கான புகழை பிறர் திருட அவர்கள் ஒருக்காலும் விட மாட்டார்கள்

சுப்பிரமணிய சுவாமியோ, தனது நிலைமையின் ஊடுருவலைச் சமா ளிக்க, டிவிட்டரில் பாரத மாதாவின் கவுரவத்தைக் காப்பதற்காக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியிடம் அவ மானப்படுவதை நான் ஒரு பொருட் டாகக் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில், இந்திய உச்ச மன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஊழல் படிந்த பரம்பரையின் பிற்காலத்தை பாதுகாக்க, சுப்பிர மணிய சுவாமியைப் பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திய இருக்கிறதென சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார் என ஆக்ட் இண் டியா கூறியுள்ளது. இரண்டு டிவிட்டர் செய்திகளுக்குப் பிறகு அவர் நேரிடையாக நீதிமன்றத்தைக் குறை கூறியுள்ளார். என்னுடைய நீதிமன்ற அவமதிப்பு விண்ணப் பத்தை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது ஒரு செயலற்ற தன்மையாகும் என்று கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள்மீது அவ தூறு குவிக்கும் தொல்லைக்காரரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ஆபத்து குறைந்த தந்திரத் திட்டம் அவரால் தாக்கப்படும் எந்த நபரும் அவர்மீது மான நஷ்ட வழக்குகளை தொடர் வதில்லை. தொடர்ந்தால் சுப்பிர மணியசாமி ஏங்கிக் கொண்டிருக்கும் கவன வெள்ளம் அவர்மீது பாய்ந்து வரும். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் மூக்கை நீட்டுவது ஆபத்தான விளையாட்டு அதுவும் தனது சட்டத் திறமைக்காக வெளிச் சத்தில் நிற்க விரும்பும் தனி மனித கட்சிக்கு!

உச்சநீதிமன்றம் நினைத்தால், சுவாமியை வெளியே தள்ளுவதற்கோ, உள்ளே வைத்துப் பூட்டுவதற்கோ ஏராளமான சட்டப்படியான வழிமுறைகள் உள்ளன.

உச்சநீதிமன்ற முதன்மை நீதி பதிகள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் அதுவும் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கும் போது; அதை இந்திய ஊடகங்கள் சமீப காலங்களில் அறிந்து வைத்துள்ளன.

ஆனால், தவறான அவமதிப்பு விண்ணப்பங்கள் வந்து, நீதிமன்றம் தன்னிச்சையான விசாரணைக்கு ஆட்படுத்தாத வரை எல்லாக் கதை களையும் டிவிட்டரில் சொல்லும் போது அது நல்ல பொழுது போக்காக இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே, பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமானுக்கு சமீபமாக இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள் கூர்ந்த பெருமான். தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக்கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29--_31