Search This Blog

31.7.22

காதலோ காதல்! உண்மைக் காதல்!!

 

காதலோ காதல்! உண்மைக் காதல்!!


 

காதலில் "இரண்டு வித"மாம். ஒன்று உண்மைக் காதலாம்; மற்றொன்று வெறும் காதலாம். அல்லாத வஸ்துவுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாலென்ன? இந்தப் பெயரைக் கொண்டு ஆவதொன்றுமில்லை? வஸ்து உண்டா? இல்லையா? என்பது தான் கேள்வி.

 

கடவுளுக்குக் கூட ஆயிரம் பெயர்கள் உண்டு. கண்டவன் என்ன? காணவாவது முடிந்ததா? இப்படிப்பட்டவர் என்று கருதுவதாவது முடிந்ததா?அதனால் தான் "கடவுளுக்கும், அல்லாததற்கும் வித்தியாசமில்லை" என்று கூத்தாடிகள் சொல்லுகிறார்கள் போலும்.

 

காதல் என்றால் சாதாரணத் தமிழ் மொழியில் அவா அல்லது ஆசை என்று பொருள் கொள்ளுவது நியாயமாகும். அன்பு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். "அதனிடம் எனக்கு அன்பு", "அவளிடம் எனக்கு அன்பு," இது ஒருவரை ஒருவர் விரும்பாமல் (பற்றை) காட்டும் குணம். அவா அல்லது ஆசை என்பது விரும்பத்தக்கக் கொண்டதற்குச் சொல்லும் மொழி. இவற்றை வட மொழியில் கூறுவது தான் காதலாகி விடுகிறது.

 

இந்தக் காலப் பண்டிதர்கள் பெரிய தொல்லையாக ஆக்கிவிட்டார்கள். கூத்தாடிகள் இன்னும் கெடுத்து விட்டார்கள். அதுவும் ஆண் - பெண் பிணையலுக்கே சம்பந்தப்படுத்தி விட்டார்கள். காதல் சம்பந்தமாகப் பல கதைகளைக் கட்டி வைத்து ஆண் - பெண் வாழ்க்கையையும் கெடுத்து விட்டார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒருவித பலவீனத்தைத் (Weakness) தவிர காதலுக்கு வேறு குணமோ, சக்தியோ இருப்பதாகத் தெரியவில்லை.

 

காதல் மணம் என்பதற்குப் பலவீனத்தில், அவசரத்தில் மாட்டிக் கொண்டு பின்னால் தொல்லை அல்லது அதிருப்தி அல்லது சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றை அடைவதைத் தான் பொருளாகச் சொல்லலாம்.

 

உதாரணம், "சகுந்தலை துஷ்யந்தன் திருமணத்தையே" எடுத்துக் கொள்ளலாம்.

 

ஏனெனில், காதல் மணத்துக்கு அதையே பெரிதும் எடுத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கதையை எடுத்துக் கொண்டால், இதில் இழிவு நன்றாய் விளங்கும். சகுந்தலையின் தகப்பன் விஸ்வாமித்திரன். அவன் மேனகை மீது காதல் கொண்டான். இந்தக் காதல் சாதாரணமான காதல் அல்ல. விஸ்வாமித்திரன் ஒரு ரிஷி அல்லது முனிவன். அப்படியென்றால், சிரேஷ்டமான மனிதர் என்பது பொருள். அவர் காதல் கொண்ட பெண் மேனகை. இவளோ தெய்வக் கன்னிகை; தேவர்களின் விலை மாது; ரிஷியை ஏமாற்ற வந்தவள். ஆகவே, கெட்ட எண்ணமுடைய விலை மாதுப் பெண்களிடத்தில் சிரேஷ்டமான மனிதத் தன்மைக்கும் மீறிய மனிதருக்குக் காதல் ஏற்பட்டது என்றால், அந்தக் காதலின் இழித்தன்மைக்கு - பலமற்ற தன்மைக்கு - போலித்தன்மைக்கு வேறு என்ன உதாரணம் சொல்ல வேண்டும்?

 

அதுதான் போகட்டும், அந்தக் காதலினால் பெறப்படும் சகுந்தலை சங்கதியைப் பார்ப்போம். அவள் ஒரு ரிஷியால் வளர்க்கப்பட்டவள். அவள் மீது இராஜ குமாரனாகிய துஷ்யந்தன் என்பவன் காதல் கொண்டான். உடனே காதல் (கந்தர்வ) மணம் என்ன ஆயிற்று? துஷ்யந்தனுடைய பலவீனமான புணர்ச்சி (தற்கால காதல்) இச்சை தீர்த்த உடன் அவனுக்கு அவளே மறந்து போய் விட்டான். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு துஷ்யந்தனைத் தேடிப் போய் அங்குப் பிள்ளையையும், தன்னையும் அவனுக்குக் காட்டியும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை.

 

கடைசியாக ஒரு மோதிரத்தால் (அதாவது சட்ட நிபந்தனையால்) ஞாபகம் வருகிறது

 

இந்தக் காதல் மணத்தில் என்ன சக்தி இருக்கிறது? என்ன நீண்ட சுகம் இருக்கிறது? காட்டில் திரியும் மிருகங்கள் அல்லது வீட்டில் திரியும் சுணங்கங்(நாய்)களின் காதலுக்கும் இதற்கும் அதாவது இந்தத் "தெய்வீக"க் காதலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று நமக்கு விளங்கவில்லை; தெய்வீகக் காதல், தெய்வீகத் தன்மை படைத்தவர்களின் காதல் என்று சொல்லும்படியான இந்தக் காதலே இந்தக் கதியானால்  மனுஷீகக் காதல் சந்திலும், பொந்திலும், தேரிலும், திருவிழாவிலும் காணுவதாலும், தெருவில் போகிறவர் வருகிறவர் பேச்சைக் கேட்டு நாக்கில் தண்ணீர் சொட்ட விடுவதாலும், கூட்டி வைப்போரின் அளப்பினாலும் ஏற்படும் காதல் என்ன தன்மையுடையதாய் இருக்கும் என்பதை அறிஞர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!

 

பத்திராதிபர் குறிப்பு: காஞ்சீபுரம் ஏகாம்பரம், மனோன்மணி திருமணத்தில் காதலை அதாவது காந்தர்வமணத்தைக் காட்டுமிராண்டித்தனம் என்றும் அவசரப் புத்தி என்றும் பெரியார் அவர்கள் சொன்னதை மறுத்துச் சில தோழர்கள் எழுதியதால் அவற்றிறிகுப் பதிலாகச் சித்திரப் புத்திரனால் எழுதப்பட்டதாகும். பெரியார் சொன்னதை ஆதரித்து எழுதியவர்களும் உண்டு.

 

                          --------------- 11.05.1943- "விடுதலை" இதழில் 'சித்திர புத்திரன்' என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: