Search This Blog

16.7.22

காதல் திருமணங்கள் வளரட்டும்! - பெரியார்

காதல் திருமணங்கள் வளரட்டும்!

இங்குக்  கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்கு முன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகிறேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்லப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்திவிட்டுப் பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.

இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொள்ளும் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்திருமணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன்னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகிறேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்களுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார்கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் பெற் றோர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ, எனக்குத் தெரியாது. என்னிடம் வந்தார்கள், இம்மாதிரி நாங்கள் வாழ்க்கைத் துணை வர்களாக ஏற்றுக் கொள்ள இருக்கிறோம், நடத்திக் கொடுங்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்.

இம் மணமக்கள் யார் என்றால், மணமகன் சனார்த்தனம் அவர்கள் திருச்சி நகர திராவிட கழகத் தலைவர் டி.டி.வீரப்பா அவர்களுடைய மகன். இவர் பி.யு.சி. படித்திருக்கிறார். சோழிய வெள்ளாளர் வகுப்பு. மணமகள் தோழி கிருஷ்ணாபாய், கோயம்புத்தூர் மணவாள நாயுடு என்பவரின் மகள். அவர் ஒரு சர்க்கார் அதிகாரி என்று கேள்விப்பட்டேன். நாயுடு வகுப்பு மணமகள் பி.எஸ்சி. படித்திருக்கிறது. அவர்கள் கதையை இனிமேல்தான் நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்.

மணமகனுக்கு வயது என்ன என்று கேட்டேன். 23 முடிந்து 24ஆவது வயது நடக்கிறது என்றார். மணமகளுடைய வயது 21 முடிந்து 22 நடக்கிறது. சும்மா கூறவில்லை, பரீட்சை சர்டிஃபிகேட்டில் உள்ளபடியாகும். ஆக வயது வந்தவர்கள்தான். எப்படியோ இரண்டு பேர்களும் நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலராக ஆகி வந்து விட்டார்கள். இங்கே இது இரண்டு பெற்றோர்களுக்கும் தெரியாது என்று கருதுகிறேன். எனக்குக் கவலையில்லை. இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கிறதா என்பதுதான் எனலாம். மணமகன் வசதியான இடத்தைச் சார்ந்தவர்தான். வீரப்பா அவர்கள் எனக்கு முக்கியமாக வேண்டியவர்தான்/ அவர்கள் ஒரு சமயம் என்னைக் கேட்கக் கூடும்.

என்ன என்னைக் கூடக் கேட்காமல் இப்படிச் செய்து விட்டீர்களே என்று அதற்கு நான் என்ன செய்வது? அவர்கள் வயது வந்தவர்கள், படித்தவர்கள். அவர்களாக வந்து காதலராகி விட்டோம். திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். நடத்தித் தாருங்கள் என்றார்கள். நான் நடத்தித் தந்தேன்.

மேல்நாட்டில் எல்லாம் இப்படித்தான். மணமக்கள் இருவரும் தங்களுக்குள் பார்த்து முடித்துக் கொண்ட பிறகுதான் பெற்றோர்களுக்குத் தெரியும். மேல்நாட்டில் ஒருவனிடம், உன் பெண்ணுக்கு எப்போது அய்யா கல்யாணம் என்று கேட்டால், அதற்கு அவன் என்ன அய்யா என் பெண் திருமணம் பற்றி என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? பெண்ணையே போய்க் கேள் என்பான். அப்படி அங்கெல்லாம் அவர்களுக்குச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது.

அந்நிலை இந்நாட்டிலும் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். என் அண்ணார் மகன் சம்பத் கூட அப்படித்தான் அவனாகவே பெண் பார்த்து விட்டு, பிறகுதான் எங்களிடம் கூறினான். மற்றும் எங்கள் குடும்பத்தில் அநேக திருமணங்கள் இப்படி மணமக்களே பார்த்து முடித்துக் கொண்டது உண்டு.

-------------------------------15.4.1962 அன்று சிதம்பரத்தில் வீ.சனார்த்தனம் - கிருஷ்ணாபாய் வாழ்க்கை ஒப்பந்த விழாவில் பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை "விடுதலை" 18.4.1962

 

0 comments: