Search This Blog

17.7.22

மதம் என்றால் என்ன? எது உண்மை மதம்? - பெரியார்

 

மதம் என்றால் என்ன? எது உண்மை மதம்?


தலைவர் அவரகளே! தாய்மார்களே! தோழர்களே!

இன்றைய இந்தக் கூட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு போற்றற்குரிய புனிதமான நாளில் கூட்டப்பட்டதாகும். உலகத்தில் உள்ள சுமார் 60 கோடி மக்களுக்கு மேலாகவே மத சம்பந்தமான வழிகாட்டியாயும், ஒப்பற்ற மத குருவாகவும் உள்ள ஒரு பேரறிஞர், பொதுநலத் தியாகி, நல்லதொரு தீர்க்க தரிசி என்று கொண்டாடப்பட்ட ஓர் உண்மைப் பெரியார்  பிறந்தநாள் கொண்டாட்ட நாளாகும். 

இப்படிப்பட்ட இந்த மத சம்பந்தமான நாளில் அந்த மதத்தை சேர்ந்தவனல்லாதவன் என்றும், பொதுவாகவே மதங்களுக் கெல்லாமுமே விரோதி என்றும், கடவுளையே மறுப்பவன் என்றும் பலரால் சொல்லப்படுகிற என்னை அழைப்பதும், இந்தக் கொண்டாட்ட விழாவில் பங்கு கொண்டு மக்களுக்குச் சொற்பொழிவாற்ற விரும்புவதுமான காரியத்தைக்குறித்து எவரும் அதிசயப்படாமல் இருக்க முடியாது; இந்த அதிசயப் படத்தக்க காரியத்திற்கு உண்டான பெருமை யாருக்குச் சேரும் என்று பார்த்தால் அது இஸ்லாத்துக்கே சேரும். 

மத சம்பந்தமான கருத்துக்களை எடுத்துக்கொண்டால் இஸ்லாம் மதம் என்பது தான் தாராளமான நோக்கத்தைக் கொண்டு  இருக்கிறது. ஒரு மதம் என்பது மக்களுக்குள் என்ன கருத்தை உண்டாக்க வேண்டுமோ அந்தக் கருத் தையும் மக்களுக்கு என்ன தொண்டு செய்யவேண்டுமோ அந்தத் தொண்டையும் ஒரு நல்ல அளவுக்கு உண்டாக்கி இருக்கிறது. 

தெளிவுபடச் சொல்லவேண்டுமானால் மதம் என்பது மனித ஜீவன்களுக்குத்தான் இருந்து வருகின்றது. உலகில் எத் தனையோவித ஜீவராசிகள் இருக்கும்போது மனிதனுக்கு மாத்திரம் ஏன் மதம்? என்றால் மனிதனுக்கு மதம் வேண்டி இருக்கிறது என்று சொல்லலாம். மனிதன் கூடிவாழும் பிராணி, மனிதன் அதிகச் சிந்தனையாளி என்பதோடு அதற்கேற்ற பகுத்தறிவு அதிகம் உடையவன் ஆதலால்,  மனித சமுதாய கூட்டுவாழ்வுக்கு ஒரு நியதி - திட்டம் - விதி கொள்கை என்பதான ஏதாவது ஒன்று தேவை இருக்கிறது. அதைத்தான் மக்கள் எப்படியோ மதம் என்று அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் மதம் என்பதை மார்க்கம் என்றுதான் (இஸ்லாம் மார்க்கம்) அழைக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மார்க்கம் என்றழைக்கிறார்கள். சைவ - வைணவ மார்க்க வினா விடை என்றுதான் நூல்களுக்குப் பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழர் பெரிதும் மதத்தைச் சமயம் என்றே சொல்லுகிறார்கள். ஆரியமும் வேதமார்க்கம் என்றுதான் சொல்லப்படுகின்றது. எனவே மதம் என்கின்ற சொல் எந்தமொழி? எப்படி வந்தது? அதற்கு மூல இடம் எது? என்பனவாகிய ஒன்றும் பெரும் பாலோருக்குப் புரிவதற்கில்லாத சொல்லாகவே இருக்கிறது.

ஆனால் சிலர் மதம் என்பது கடவுளையும் மனிதனையும் சம்பந்தப்படுத்துவது;  கடவுளை மனிதன் அடையச் செய்வது என்றெல்லாம் என்ன என்னவோ கட்டுக் கட்டுகிறார்கள். இது மகா பயித்தியக்காரத்தனம் அல்லது பித்தலாட்டம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் மாத்திரம் சம்பந்தம் ஏற்படுவானேன்? ஆடு, மாடு, நாய், கழுதை, குதிரை, ஈ, எறும்பு, தேள்,பாம்பு, மீன், பூச்சி, புழு இவைகளுக்குக் கடவுள் சம்பந்தம் வேண்டாமா? கடவுளை அடையவேண்டாமா? அவை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை அல்லவா? அல்லது மதமில்லாமலே கடவுளை அடையத்தக்க அவ்வளவு அறிவுள் ளவைகளா? மனிதனுக்கு மாத்திரம் ஏன் இந்தத்தொல்லை? என்று நன்றாய்ச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனுக்கு மதம் மற்ற மனிதனிடம் நடந்துகொள்ள வேண்டிய தன்மைக்கு வழிகாட்டுவது, கொள்கை விதிப்பது ஆகியவற்றிற்கே மதம் என்பதும் நன்றாய் விளங்கும்.அதை விட்டுவிட்டு, மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை அலட்சியப் படுத்திவிட்டு, தனக்கும் கடவுளுக்கும் மாத்திரம் என்றும், தன்னுடைய நலனுக்கு மாத்திரமே அதாவது, தான் மோட்சம் போகவும், தான் நல்லகதி அடையவும், தனக்கு நல்ல பிறவி, நல்ல செல்வம் ஏற்படவும் என்றும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இது மாயா உலகம், இதுபொய்யான உலகம், இது அநித்தியமான உலகம் இதைப்பற்றிக் கவலை இல்லை; மெய்யான  நித்தியமான பயனளிக்கக்கூடிய உலகம் வேறு இருக்கிறது; அதில் மேனிலை அடையவே மனிதன் பிறக்கிறான், இருக்கிறான், இறக்கிறான் என்ற கற்பனைகளைப் புகுத்தி இதற்குஆக இயக்கத்தில் என்ன காரியத்தையானாலும் செய்து பரத்தில் இடம் பிடித்து வை என்கின்ற மதம், மடமையும் கொடுமையும், பித்தலாட்டமும் நிறைந்த மதம் என்று சொல்லுவேன். அப்படி நான் சொல்லுவதால்தான் என்னை மத விரோதி என்று சில மதவாதிகள் சொல்லுகிறார்கள். மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று நான் சொல்லுவதும் இப்படிப் பட்ட மதங்களைத்தானே ஒழிய மனிதனிடம் மனிதன் அன்பாய், உபகாரியாய், சமுதாயத்திற்கு ஏற்ற ஒழுக்கமாய், நாணயமாய், பிறர் நலத்தில் பற்றுள்ள அன்பனாய், மற்றவர்களுக்குத் தொல்லை இல்லாதவனாய் நடந்துகொள்ளும் தன்மையை மதம் என்றால் அதைப் போற்றுகிறவனேயாவேன். நானும் கூடுமானவரை அப்படிப்பட்ட மதவாதியேயாவேன்.

மக்கள் உழைப்பை கொள்ளையடிக்கும் ஆரிய மதம்

ஆனால், இன்று மதங்கள் அப்படிப் பெரிதும் காணப் படுகின்றனவா? நீங்கள் தனித்தனியே மதவாதிகள் நடத்தையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

முதலாவதாக,

என்பேரில் சுமத்தப்பட்ட (இந்து மதம் என்னும்) ஆரிய மதத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நான் மேலே சொன்ன குணங்களில் எது காணப்படுகிறது? அல்லது காரியத்தில் நடைபெறுகிறது? ஆரிய மதத்தில் பிராமணன், சூத்திரன், சண் டாளன், தேவடியாள் உண்டு. ஆரிய மதத்தில் மோட்சத்திற்காகத் திருடலாம்; விபசாரித்தனம் செய்யலாம், கொலை செய்யலாம், பாட்டாளி மக்களை வஞ்சித்து அவர்கள் உழைப்பைக் கொள்ளை கொள்ளலாம், கொடுமைப்படுத்தலாம். பிறவி இழிவு கற்பித்து, மக்களைப் பிரித்துவைத்துச் சோம்பேறிகளும், சூழ்ச்சிக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தலாம். இன்னும் எத்தனையோ இழிவு கொடுமை அக்கிரமம் செய்யலாம். இவை மததர்ம சாஸ்திரங்களின்படி என்றும் சொல்லலாம். இது எப்படி மக்களுக்குப் பயன்படும்படியாக, வாழ்க்கைக்கு நலந் தரும்படியாக ஏற்படுத்தப்பட்ட அல்லது ஏற்பட்ட மதமாகும் என்றும் இப்படிப்பட்ட மதங்கள் ஒழிக்கப்படவேண்டாமா? என்றும் மதவாதிகளைக் கேட்கின்றேன். ஆகவே இப்போ தாவது நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் ஏன் மதம் ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பதை.

மதம் மக்களிடம் அன்பு செலுத்த என்று இருக்குமானால் இன்று இந்தநாடு இமயமலைமுதல் குமரிவரை குழப்பத்தில், கொள்ளையில், கொலையில், படுநாசவேலையில் அல்லல் படுவதின் காரணம் என்ன? அரசியல் குழப்பம் என்று சொல்லி மக்களை வஞ்சித்து மதவெறியைக் கிளப்பிவிட்டு, மதத்திற்காக வென்று, மதவெறி கொண்டு, போராடிக் கொள்வதல்லாமல் வேறு எதற்காக என்று யாராவது சொல்ல முடியுமா?

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இன்றைய கலவரம் ஆரியத்துக்கும் ஆரியமல்லா ததற்கும் என்பதல்லாமல் வேறு என்ன? தெளிவாய்ச்சொல்கிறேன், இந்து - முஸ்லிம் என்றால் என்ன? ஆரியர்-அனாரியர் என்பதல்லாமல் வேறு என்ன? பிராமணர்-பிராமணரல்லாதார் அல்லது ஆரியர் - திராவிடர் என்றால் ஆரியர் அனாரியர் என்பதல்லாமல் வேறு என்ன? ஜாதி இந்துக்கள், ஷெடியூல் வகுப்பார் சண்டை என்றால் என்ன? ஆரியமதக் கொள்கைப்படி மேல் ஜாதியார் ஆரியமதக் கொள்கை ஏற்றுக்கொள்ளாத கீழ் ஜாதியார் எனப்படும் ஆரியரல்லாதார் என்பதல்லாமல் வேறு என்ன? இதுபோலவே  சீக்கியர் கூப்பாட்டுக்கும், பார்சி கூப்பாட்டுக்கும், கிறிஸ்தவர் கூப்பாட்டுக்கும்,  ஆரிய-அனாரிய மதச்சண்டை என்பதல் லாமல் வேறு என்ன? இந்த இலட்சணத்தில் இவர்கள் ஒவ் வொருவரும் சண்டையிடக் காரணம் அவரவர்கள் மதப் (கலாச்சாரத்தின்)படி நாடு ஆளப்படவேண்டும் என்பதுதானே முன்னணியில் இருக்கிறது?

 ஆகவே, அரசியல் போராட்டத்துக்கும் சமுதாயப் போராட்டத்திற்கும் மதம் காரணமல்லாமல் திட்டம் காரணம் என்று எதைச் சொல்லமுடியும்? 

 

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை மதம் காரணமாக முஸ்லிம்களிடத்தில் யாதொரு தகராறும் இல்லை என்று சொல்லுவேன். இஸ்லாத் துக்கும் திராவிடத்துவத்திற்கும் வேஷம்தான் பேதமே தவிர  மதத்துவத்தில் பேதமில்லை. திராவிடர் கழகம் ஒரு ஜாதி, ஒரு கடவுள் என்கின்றதை ஆட்சேபிப்பதில்லை. இஸ்லாமும் ஒரு ஜாதி, ஒரு கடவுள் என்கின்றதை ஆட்சேபிப்பதில்லை.இரு மார்க்கங்களும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு பேதம் இல்லை என்கின்றன. நம் திராவிடநாட்டை பொறுத்தவரை பேசப்போனால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், திராவிடர் ஆகிய முப்பிரிவாரும் ஒரே இனத்தவர், ஒரே வழிவந்தவர்கள் என்று சொல்லலாம், இப்படிப்பட்ட நாட்டில் இன்று குழப்பமும், கொள்ளையும், கொலையும், கொடுமையும் நடைபெறவும் நடக்குமோ என்று பயப்படவுமான நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் ஆரிய மதத் தூண்டுதல் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கமுடியும்? ஒரு இஸ்லாம் திராவிடனும், கிறிஸ்துவ திராவிடனும், முஸ்லிம் கிறிஸ்துவ அல்லாத திராவிடனும்; இந்தநாட்டு இனத்தவன், இந்த நாட்டில் பிறந்தவன், இந்த நாட்டில் வாழ்கிறவன், இந்த நாட்டில் சாகிறவன், இந்த நாட்டில் தேடிய பொருளையும், வேறு நாட்டில் தேடிய பொருளையும் இந்த நாட்டிலேயே வைத்துவிட்டுச் சாகிறவன். இப்படிப்பட்டவர் களுக்கு இந்த நாட்டின் பூரண சுதந்திரத்திற்கோ விடுதலைக்கோ விரோதமாக இருக்கவும் இந்தநாட்டு மக்களை வெறுக்கவும் என்ன காரணம் இருக்கமுடியும்? ஆரிய மதத்தில், உழைக்க ஒரு ஜாதி, ஊரார் உழைப்பிலேயே உண்டு பாடுபடாமல் வாழ ஒரு ஜாதி என்று ஏற்பட்டுவிட்டதால் இந்தத் தத்துவத்துக்கு மாறான மதங்களோடு சதா போர் தொடுத்துக் கலகமூட்டித் தங்கள் நலனைப் பாதுகாக்கவேண்டி இருப்பதால் இப்படிப்பட்ட சமுதாய சமதர்ம மக்களும் மதமும் 100-க்கு 95 பேர் இருக்கும் நாட்டில் இந்த மதப்போராட்டக் கொடுமை இருந்து வருகிறது. 

மதம் மக்களுக்குத் தொண்டு செய்ய, அன்பு செலுத்த ஏற் பட்டது என்றும், மதம் மக்களை ஒன்று சேர்த்து சமத்துவமாய் நடத்தவே ஒழிய, வேறுபடுத்தி மேல்கீழ் பிறப்பாய், வகுப்பாய் நடத்த அல்ல என்றும் ஆரிய மதம் உணருமானால் இன்று இந்த  நாட்டில் கலவரத்துக்கு, மதப்போராட்டத்திற்கு இடமே இருக்காது. நானும்  பார்க்கிறேன் மதத்துக்காக உயிர்விடுங்கள்! மதத்தைக் காப்பாற்றுங்கள்! மதத்தைப் பழிக்காதீர்கள்! என்றெல்லாம்  காட்டுமிராண்டிப் பிரசாரம் தான் மதத்தின் பேரால் மகான்கள் என்பவர்கள் எல்லாம் பிரசாரம் செய் கிறார்களே தவிர இந்தக் கொள்கைகளால்தான் மதம், காப்பாற்றப்படமுடியும் என்று கருதப்படுகின்றதே தவிர மதத்தில் அன்பு, உபச்சாரம், மற்றவன் மனம் நோகாமல் நடத்தல் ஆகிய காரியங்கள் எங்கே கற்பிக்கப்படுகின்றன என்று கேட்கிறேன்.

மதத்துக்காக உயிரை விடுங்கள் என்று உபதேசித்த உபதேசம்தான் காலித்தனத்துக்கும் கயவாளித்தனத்துக்கும் பெரிதும் காரணம் என்று சொல்லுவேன். மதத்தைக் காப்பாற்ற உயிர் விடுங்கள் என்றால் என்ன அருத்தம்?

இழிவைக் களைய வேண்டும் 

"என் மதம் அன்பு மதம், அன்பே கடவுள், கடவுளே அன்பு. ஆனால் என் மதத்தையோ, கடவுளையோ எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் ஒரே பாய்ச்சல், ஒரே குத்து ஒன்று அவன் சாவது அல்லது அந்த வேலையில் நான் சாவது" என்பது எப்பேர்ப்பட்ட அன்பு மதம் என்று யோசித்துப்பாருங்கள்.

மதத்துக்கு உள்ள இந்த கருத்து, இந்த தத்துவம் மாறினா லொழிய நம்நாட்டில் மக்களுக்குள் சாந்தி, சமாதானம் ஒரு நாளும் நிலவாது என்று தைரியமாய்ச் சொல்லலாம். மதத் தத்துவம் என்றால் என்ன? மதம் எதற்காக என்பதை மக்களுக் குச் சரியானபடி போதிக்க வேண்டும். அந்த மாதிரி உண்மை யாகவும் உறுதியாகவும் போதிக்கப்படுமானால் திராவிடநாட்டில் இஸ்லாம் திராவிடர்கள் என்றும், இஸ்லாம் அல்லாத திராவிடர்கள் என்றும் பிரிவு உணர்ச்சி இருக்க இடமே இருக்காது. மதத்துக்கும் நடத்தைக்கும் எண்ணத்துக்கும்தான் சம்பந்தமே ஒழிய, வேஷத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கருதப்படுமானால் திராவிடர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களே ஆவார்கள். இஸ்லாமியர்கள் எல்லோரும் திராவிடர்களே ஆவார்கள். உண்மையில் இருவருக்கும் பேதம் இல்லை. ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணவும், ஒருவர் வீட்டில் மற்றவர் சம்பந்தம் செய்துகொள்ளவும் தடையில்லை என்று ஆகிவிட்டால் மற்றபடி மதப்பேதத்துக்கு வேலை என்ன இருக்கமுடியும்? ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடக்கூடாது, ஒருவரை ஒருவர் தொடக்கூடாது, ஒருவருக்குள் ஒருவர் சம்பந்தம் செய்து கொள்ளக்கூடாது  என்ற நிபந்தனை வைத்துக்கொண்டு யாரும் ஒரே மதமாய் இருந்தாலும் இது பித்தலாட்டம் அல்லது சிலர் சுயநல வஞ்சகம் என்பதல்லாமல் ஒரு மதம் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

உண்மையிலேயே நம்மைப் பொறுத்தவரையில், அதாவது திராவிட நாட்டில் உள்ள திராவிடர்களைப் பொறுத்தவரையில் மதச்சம்பந்தமாகப் பேசவேண்டுமானால் இங்குள்ள திராவிடர் களுக்குள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்பவர்களைத் தவிர மற்ற மக்களுக்கு மதம் என்பதாக ஒரு குறிப்பிட்ட கொள்கையோ கருத்தோ ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

இஸ்லாம், கிறிஸ்தவர் அற்ற மக்களைப் பொதுவாக இந்துக்கள் என்று பெயரளவில் சொல்லுவதைத் தவிர அந்த இந்து என்பது சமுதாயப் பெயரா? இனப்பெயரா? மதப்பெயரா? என்பதற்கு   யாதொரு விளக்கமும் இல்லை. இந்து என்றால் இந்தியன் என்ற வார்த்தையின் சுருக்கச்சொல் என்பதல்லாமல் அதற்கு வேறு கருத்து எதுவும் இருக்க இடமில்லை. அரபு தேசத்தவனை அரப் அல்லது அரபு  என்பது போலவும், ரஷ்யனை ரஷ்ஷி என்பது போலவும், ஒரு சிந்தியனை அதாவது சிந்து மாகாணத்தவனைச் சிந்தி அல்லது சிந்து என்பது போலவும், இந்திய நாட்டவனை அதாவது இந்தியனை இந்து என்று அழைக்கப்படுகிறது என்பதல்லாமல், இந்து என்கிற சொல்லில் மத சம்பந்தம் இருப்பதற்கு இடமே இல்லை அன்றியும் இந்து என்கின்ற ஒரு சொல்லுக்கு ஆராய்ச்சியாளர்கள் பல கருத்து சொல்லுகிறார்களே தவிர மதம் என்பதில்லை. இந்து என்பது ஒரு மதத்திற்கு என்று சொல்லப்படுமானால் அதற்கு ஏதாவது ஆதாரமோ அல்லது மத சம்பந்தமான இலட்சணமோ இருந்திருக்கவேண்டும், அல்லது இருந்தாகவேண்டும். அந்த முறையில் இந்து மதம் என்பதற்கு எவ்விதமான மத இலட் சணமும் இல்லை, பவுத்த, கிறிஸ்து, மகமது முதலிய மதங்களுக்கு மதக் கர்த்தாக்களின் பெயர்கள் இருக்கின்றன. சைவம், வைணவம் என்னும் மதங்களுக்குச் சிவன், விஷ்ணு என்ற மதக்கடவுள்கள் பெயர்கள் இருக்கின்றன. வைதிக மதம், ஸ்மார்த்த மதம் என்பவற்றிற்கு வேதம், ஸ்மிருதி என்ற நூல்கள் இருக்கின்றன.  மதக்கர்த்தாக்கள் பெயர் இல்லாமல் கடவுள்கள் பெயர் இல்லாமல், சம்பந்தப்பட்ட நூல்கள் இல்லாமல் குறிப் பிடத்தகுந்த ஆதாரங்களுமில்லாமல் ஒரு மதம் இருக்கிறது என்றால் அதுதான் இந்துமதம் என்றால் இந்த இந்து என்கின்ற சொல் மதத்தைக் குறிப்பது என்று யார்தான் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆதாரம் இல்லை

தவிரவும், இந்து மதம் என்ற சொல்  எந்த மத ஆதாரங்களிலும் காணப்படுவதே இல்லை. இந்து மதத்தின் கொள்கை இன்ன தென்று சொல்வதற்கும் ஆதாரங்கள் கிடையா. சரியாகவோ, தப்பாகவோ, சூழ்ச்சியாகவோ, முட்டாள்தனமாகவோ ஏற் பட்டுப் பழக்கவழக்கத்தில் தந்திர சாலிகளுக்கு அனுகூல மாகவும், அறியாத பாமரமக்களுக்குக் கேடாயும் இழிவாயும் தலையெடுக்க வசதி இல்லாததாயும் இருக்கிற ஒரு நடவடிக் கைக்கு இந்துமதம் என்ற பெயர் இருக்கிறது என்று சொல் லுவதற்கு அல்லாமல் வேறு என்ன பொருளில் என்ன பயனுக்கு இந்துமதம் இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா? இந்து மதத்தால் மேன்மையும் பயனும் அடைகின்ற பிரா மணர்கள் என்னும் பார்ப்பனர்கள் இந்துமதம் என்பதாக ஒரு மதம் கிடையாது, ஆரியர் கொள்கைகளும் பழக்க வழக்கங் களும்தான் இந்து மதம் என்பது; ஆகையால் ஆரியமதமே இந்துமதம் என்று தைரியமாய் சொல்லுகிறார்கள்.

மற்றொரு பார்ப்பனசாரார் வேதமும் ஸ்மிருதிகளும் புராணங்களும்தான் இந்துமதம் என்பதோடு மனுதர்ம சாஸ்திரம்தான் இந்து மதத்திற்குச் சாஸ்திரம் (சட்டம்) என்றும் சொல்லி அதை நடப்பாக்கி வருகிறார்கள், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வருணாசிரமதர்மம் என்பதாக ஒருமுறை இல்லாவிட்டால் மற்றபடி இந்துமதம்  என்று சொல்ல இடம் இல்லை என்றே சொல்லலாம். அம்மதத்தில் கடவுளைப்பற்றிய கவலையோ, நிர்ப்பந்தமோ கிடையாது என்பதோடு ஆச்சார அனுஷ்டான பழக்கவழக்க நடைஉடை பாவனை என்பவை களுக்கும் எவ்வித நிர்ணயமோ, நிர்ப்பந்தமோ கிடையாது என்றும் சொல்லலாம்.

உதாரணமாக, எதை வணங்குபவனும், எதை வணங்காத வனும் ஒரு கடவுள்காரனும், பலகடவுள்காரனும், தானே கடவுள் என்கின்ற ஸ்மார்த்தனும் கடவுளே கிடையாது என்கின்ற நிரீச்சுவரவாதியும் சுவர்க்க நரகம் பாவபுண்ணியம் இல்லை என்கின்ற லோகாயுதவாதியும், எல்லாம் பொய் என்கின்ற மாயாவாதியும் ஆண் பெண் குறிகளே கடவுள் என்கின்ற சக்திவாதியும் மற்றும் மதச்சம்பந்தமாய் எந்தவிதமான கொள்கை கொண்டவனும் (அதாவது தான் கிறிஸ்தவனல்ல; மகமதியனுமல்ல என்று சொல்ல விடுவானேயானால்) எவனும் இந்துவே ஆவான். அதனால்தான் நான்மேலே இல்லாமல் கிறிஸ்தவன் அல்லாத மக்களைக் குறிப்பிடும் சொல் இந்து என்ற சொல்லாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்டேன். 

இப்படிப்பட்ட இந்து என்கிற பதம் இருக்கும் காரணத் தாலேயே நாட்டில் மதச்சண்டை நடக்கின்றது என்பதல் லாமல் மற்றபடி இந்த நாட்டில் இந்தியாவில்  மதச்சண்டை ஏற்படச் சிறிதும் இடமே இல்லை. 

ஆகையாலேயே இந்துக்கள் என்றழைக்கப்படும் திராவிடமக்கள் இந்நாட்டின் நலங்கருதி நாட்டின் விடுதலை யும், மக்கள் சுயமரியாதையும் கருதியும் பெரும்பாலான மக்களுக்குப் பிறவியின் காரணமாகவே சுமத்தப்பட்ட இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பது கருதியும் முதலாவதாகச் செய்யப்பட வேண்டிய வேலை இந்துமதம் என்கின்ற புரட்டை விளக்கி மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி அந்தச் சிறையிலிருந்து வெளியேறும்படி செய்வதேயாகும். 

இன்று இந்திய மனிதச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் திராவிடநாட்டிற்கும், திராவிட சமுதாயத்திற்கும் இருந்து வரும் பெருநோய் இந்துமதம் என்பதேயாகும். இந்த இந்து மதம் என்ற பெருநோய் திராவிடர் களுக்கு சயரோகம் என்றும் குஷ்டநோய் என்றும் உறுதியாய் சொல்லலாம். இந்துமதம் இல்லாவிட்டால் 4ஆம் 5ஆம் ஜாதி (பிறவி) மக்களும், அவற்றால் ஏற்பட்டுவந்த - வருகிற வரும் படியான கேடுகளும் - நடக்க ஏற்பட இடம் உண்டா? என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறேன்.

இப்படி நான் சொல்லுவதால்தான் இதைச் சுமார் 25 வருடகாலமாக முரட்டுத்தனமாக அச்சமின்றி பிரசாரம் செய்து வருவதால்தான் மத விரோதி, மதங்களை ஒழிப்பவன், கடவுள் விரோதி, கடவுள் இல்லை என்பவன் என்றெல்லாம் என்மீது பழி சுமத்துகிறார்கள், மதமும் கடவுளும் இல்லை என்று ஒருவன் உண்மையாகவே சொல்லுவதனாலும் அதனால் உலகத்துக்கு எப்படிப்பட்ட கேடும் வந்துவிடாது.

மதம் தோன்றிய காலம் முதல் மதப்போராட்டமும், கடவுள் கண்ட கால முதல்  கடவுள் மறுப்பும் நடந்துதான் வந்திருக்கின்றன.  அதனால் உலகம் அழிந்து மறைந்து எங்கும் நாத்திகமும் பொதுவுடைமையும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் சில பித்தலாட்டங்கள் சில வஞ்சகங்கள் ஒரு அளவுக்காவது பலமற்று வருகின்றன என்பது மாத்திரம் உண்மை. ஆதலால் ஏமாற்றுதலில் வஞ்சகத்தில் பிழைக்கும் மக்களுக்கு நம்மீது ஆத்திரம் வந்து அவர்கள் பாமர மக்களையும் மூடர்களையும் கிளப்பி விட்டு நம் பிரசாரத்தை அடக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். 

                          ----------------------------04.02.1947 அன்று ராமநாதபுரம் ஜில்லா கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- 'குடிஅரசு' - சொற்பொழிவு - 15.02.1947  - 22.02.1947

0 comments: