Search This Blog

12.9.15

கலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூடாது!-பெரியார்

ஜாதிகளை ஒழிப்பது எப்படி?

ஸ்தல ஸ்தாபனங்களின் வாக்காளர் பட்டியலிலும் சர்க்கார் 'ரிக்கார்டுகள்' கல்விச்சாலை, கோர்ட் முதலிய 'ரிக்கார்டுகள்' ஆகியவற்றிலும் ஜாதி உட்பிரிவின் பெயர்களைக் குறிக்க வேண்டியதில்லை யென்று அய்க்கிய மாகாண சர்க்கார் உத்தரவிட்டிருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இந்த உத்தரவு பாராட்டப்படக் கூடியதுதான். இனிமேல் வாக்காளர்கள் யாவரும் "இந்து," "முஸ்லிம்," சீக்கியர்," என்ற பெரும் பிரிவுகளிலேயே அடக்கப்படுவர் என்று இந்த உத்தரவு கூறுகிறது.

முஸ்லிம்களின் அரசியல் கிளர்ச்சி அதிகப்பட்ட பிறகும், மதமாற்றம் செய்யும் வேலைகளும், மக்களைக் குடியேற்றும் முயற்சிகளும் தீவிரப்பட்ட பிறகும், தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லிம்கள் ஆவதா? அல்லது சீக்கிரயர்களாவதா? என்று பெரிய பிரச்சனை கிளம்பிய பிறகுந்தான், காங்கிரஸ் தலைவர்கள் இந்து மதத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும், சென்னை சர்க்கார் மட்டும் இவ்விஷயத்தில் குட்டையிலிருந்து எழுப்பாமலே படுத்துக் கொண்டிருக்கிறது!

காங்கிரஸ் இயக்கம் ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் தலையிடுவதேயில்லை. சுயராஜ்யக் கூச்சலைவிடக் கஷ்டமான பிரச்சனை இது என்பது காந்தியாருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும், அவருக்கு முன்பிருந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஜாதியை ஒழிப்பதைக் காட்டிலும் சுளுவான முறையில், "தேசபக்தர்" பட்டமும், "வீரர்" பட்டமும், "தியாகி" பட்டமும் கிடைக்கும் வழிகள் எத்தனையோ இருக்கும்போது செங்குத்தான மலைமீது தலைகீழாக ஏறுவது போன்ற ஜாதி ஒழிப்பு வேலையை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல; பொருளாதார சமத்துவம் உண்டாக்க வேண்டும் என்று போராடும் கட்சிகள் கூட ஜாதி ஒழிப்பைப் பற்றிக் கனவு கூடக் காண்பதில்லை. வெளியே கூறவும் நடுங்குகின்றன! மனிதனுக்கு மனிதன் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டிருந்தால் என்ன? அல்லது ஜாதியால் அடிமைப்பட்டிருந்தால் என்ன? என்ற உண்மை இந்தப் பொருளாதாரச் சமத்துவம் கிளர்ச்சிக்காரர்கள் சிந்தனையில் படுவதேயில்லை.

காங்கிரஸ்காரர்களோ, வெளிநாட்டானின் ஏகாதிபத்தியம் ஒழிந்தால் எல்லாம் பிறகு சரிப்பட்டுவிடும் என்று கூறி வருகிறார்கள். இந்த நாட்டில் வெளி நாட்டான் எவனும் நுழைவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஜாதிக் கொடுமை இருந்து வருகிறது என்பதையும், இது ஒழிந்தவுடனேயே வெளிநாட்டான் தானாகவே ஓட ஆரம்பிப்பானே என்பதையும் இவர்கள் உணர்வதில்லை.

ஜாதியை ஒழிக்கும், வேலை சாமான்யமானதல்ல. அய்.மா.சர்க்காரின் உத்தரவு அற்ப அளவுக்குத்தான் பயன்படுமே தவிர ஜாதியை அறவே ஒழிப்பதற்குப் பயன்படாது என்பது உறுதி. எப்படியெனில், ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப்பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாய்க்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்டபூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும். புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் "கலப்பு மணம்" செய்யுமாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும், கட்டுத் திட்டங்களையும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களையும், சட்டபூர்வமாகத் தடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஜாதிகள் அடியோடு ஒழியும்.

இவை மட்டுமல்ல, ஜாதிக்கு அடிப்படையாயிருப்பது எது? 'ஹிந்து' மதம்! அதை ஆதரித்து நிற்பவை எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவற்றுக்கு அடிப்படையாக உள்ளவை எவை? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள். எனவே, இவ்வளவையும் ஆணி வேருடன் பிடுங்கி எறிந்தாலொழிய ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்? இவ்வளவையும் காப்பாற்றுவதற்காக உள்ள ஒரு சமுதாயமான பார்ப்பனர்களின் வைதீக மனப்பான்மையை மாற்றியாக வேண்டும். அல்லது அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்க வேண்டும்! ஏன்?

ஜாதிகள் ஒழிவதனால் பாதிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களேயாவர். "ஜாதி உயர்வு", என்ற அடிப்படையினாலேயே அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு கால்நடையாக வந்த இந்தக் கால்நடைகள் இன்று இந்நாட்டுக் குடிமக்கள் எல்லோரையும் விட ஆயிரமடங்கு உயர்ந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன? அது மட்டுமா? இன்று பெரிய பெரிய புரட்சிக்காரன் முதல், மாகனம் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கைக்கூலி வரையில், எல்லா இயக்கங்களிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே ஒழிய ஜாதியை ஒழிப்பது என்பதைக் கொள்கையாகக் கொண்டு இடைவிடாத தொண்டாற்றக் கூடிய ஒரு பார்ப்பனராவது இன்று இந்த நாட்டில் இருப்பதாக யாராவது எடுத்துக் கூற முடியுமா என்று அறை கூவிக் கேட்கிறோம். ஹிந்து மதம் ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும். ஹிந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் அழிந்து போகும். இதை பஞ்சமா பாதகம் செய்யும் பார்ப்பான் கூட விரும்பமாட்டான்!

"இங்கிலீஷ் அரசியல் அமைப்பு" என்ற நூலை எழுதிய புரொபசர் டிசே என்பவர் "புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்; போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பமாட்டான்," என்று கூறியிருக்கிறார். அதுபோலவே, பார்ப்பனனாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்கு உள்ள அதிகாரம், ஆதிக்கம், இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கின்றன! இவர்கள் இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, "பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா?" என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டில் இருக்கும் வரையில் இங்கிலீஷ்காரரைப் பின்பற்றி இந்தப் பிரித்தாளும் பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பான்! ஜாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை என்பதையும் பார்ப்பனர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் பகுத்தறிவுக்கு ஹிந்து சாஸ்திரங்கள் 144-உத்தரவு பிறப்பித்திருக்கின்றன.

"எந்தப் பிராமணன் தர்க்க சாஸ்திர பலத்தைக் கொண்டு வேதத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகிக்கின்றானோ, அப்பேர்ப்பட்ட வேத நித்தகன் சாதுக்களால் நாஸ்திகன் என்று பகிஷ்கரிக்கப்படுகிறான்" என்று மகாபாரதம் கூறுகிறது. எனவே, பார்ப்பான் மட்டுமல்ல எந்த "இந்து"வுமே பகுத்தறிவுக்கு இடந்தர மாட்டான். இடந்தர முடியாது. இடந்தந்தால் இந்துவாக இருக்க முடியாது!

"யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம் என்று சர். ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வானதாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே எலி, கொசு, ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன. மனித சமுதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவையெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா? என்று கேட்கிறோம்.

இறுதியாக ஒன்று கூறுகிவோம். ஜாதிகளை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது! கலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூடாது. புத்தரும் குருநானக்கும் கூறியதுபோல் வேதமும், சாஸ்திரங்களும் முழுப்பொய் என்று பச்சையாகக் கூறவேண்டும். இவற்றைச் செய்யக்கூடிய ஆற்றலும், துணிவும், தியாக உணர்ச்சியும் படைத்த இனைஞர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியும்? இந்த வேலையைச் செய்பவை தான் நமது திராவிடர் கழகமும் சுயமரியாதை இயக்கமும்.

-------------------------- 10.01.1947-இல் 'விடுதலை'யில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.

0 comments: