Search This Blog

6.4.15

நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது?-பெரியார்

பத்தினிக் கோட்டம் தேவையா?


இந்நிகழ்ச்சியானது இதுவரை நம்மிடை நடைபெற்று வந்த கல்யாணம் - விவாகம் - தாராமுகூர்த்தம் என்னும் பெயரால் நடந்து வந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் மாறான நிகழ்ச்சியேயாகும். இதுவரையிலும் நடந்து வந்த முறைகள் யாவும் மணமகன் சொன்னது போலக் காட்டுமிராண்டி முறைதான். அதையே பெரும்பாலான மக்கள் நடத்தி வருகின்றனர். அதை மாற்றி மானத்தோடு - பகுத்தறிவோடு, அறிவிற்கேற்ற முறையில் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தே இம்முறையினை ஏற்பாடு செய்தோம். பழைய முறை, விவாக முறை எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதைச் சிந்திக்க வேண்டும்.


திருமண முறை கல்யாண முறை, கணவன் - மனைவியாக வாழும் முறை தமிழனுக்கு இருந்தது கிடையாது. ஆணும், பெண்ணும் சம உரிமையோடு, நண்பர்களாக, காதலன் - காதலியாக வாழும் முறை தான் இருந்தது. இடையில் பார்ப்பான் வந்து புகுந்த பின்தான் தமிழன் அறிவு இழக்கவும், இதுபோன்ற முறைகள் பார்ப்பானால் புகுத்தப்பட்டது. நம் வாழ்க்கையில் பார்ப்பானுக்கு நிரந்தர அடிமையாக்க சூத்திரத்தன்மை எப்படிப் புகுத்தப்பட்டதோ அதேபோல, பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற நிரந்தர அடிமைகளாக்க புகுத்தப்பட்டதே திருமண முறையாகும். அடுத்து அதன் பலன் என்னவென்றால் பகுத்தறிவுள்ள மனிதனை மடையனாக சிந்தனையற்றவனாக ஆக்க வேண்டுமென்பதற்காகவே இம்முறையானது புகுத்தப்பட்டு விட்டது. மூன்றாவதாக ஜாதி இழிவைப் பற்றி மனிதன் கவலைப்படாமல் பழைமையைக் காப்பாற்ற வேண்டுமென்கிற முறையில் புகுத்தப்பட்டதேயாகும். எவ்வளவு பெரிய பணக்காரன் மகளானாலும், அரசன் மகளானாலும், அவளை இன்னொருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் அவள் அவனுக்கு அடிமைதான். இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமென்பதற்காக அறிவோடு அவசியத்திற்கு தேவையானவற்றைக் கொண்டு மனிதன் இழிவு நீங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதே இம்முறையாகும்.


நான் கடவுள் மறுப்புக் கூறுவது மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தி அவனது அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். மனிதனின் அறிவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே கூறுகின்றேன்.


இம்முறையில் இதுவரையில் பதினாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன என்றாலும், இதுவரை இருந்த அரசாங்கம் பார்ப்பன அரசாங்கமாகவும், பார்ப்பன அடிமை அரசாங்கமாகவும் இருந்ததனால் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றது என்று வைத்திருந்தது. இப்போது அமைந்திருக்கின்ற தமிழ்நாடு அரசானது பகுத்தறிவாளர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியானதால், இதுவரை இம்முறையில் நடைபெற்ற திருமணங்களும், இப்போது நடைபெறும் திருமணங்களும், இனி நடக்க இருக்கும் திருமணங்களும் சட்டபடிச் செல்லுபடியாகும் என சட்டமியற்றி இருக்கிறது. இம்முறையில் திருமணம் செய்யும் நாம் முதலில் இவ்வரசுக்கு நம் நன்றியினையும், பாராட்டுதலையும் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும்.


நான் சொல்கிற விஷயங்களைப் பொறுமையாக இருந்து கவனியுங்கள். உங்கள் அறிவிற்கு, சிந்தனைக்குச் சரி என்று தோன்றுபவற்றை மட்டும் ஏற்று நடவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் சொல்வதை இன்னொருவர் ஒப்புக் கொள்வது என்பது பகுத்தறிவாகாது. எனவே, நான் சொன்னதை உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்கு எது சரியென்று படுகின்றதோ அதனை ஏற்று அதன்படி நடந்து கொள்ள முயற்சியுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


இத்திருமண முறை தமிழர்களான நமக்கு இல்லையென்று சொன்னேன். நண்பர்கள் சொன்னது போலப் பார்ப்பான் வந்த பின்தான் நமக்கு இம்முறையானது பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டு நம்மிடையே புகுத்தப்பட்டதாகும்.


நேற்று ஒரு புலவன் என்னிடம் பெருமையாகச் சொன்னான், "மற்றவனெல்லாம் இலக்கியத்தை வைத்துத் தான் இலக்கணம் செய்தான். ஆனால், தொல்காப்பியன் வாழ்க்கையை வைத்து இலக்கணத்தை அமைத்திருக்கின்றான். இது தொல்காப்பியனுக்குள்ள பெரும் சிறப்பாகும்" என எடுத்துக் கூறினான் அந்தத் தொல்காப்பியனே தமிழனுக்குத் திருமண முறை கிடையாது. பார்ப்பானுக்குத்தான் இம்முறை என்பதைப் பல சூத்திரங்கள் மூலம் விளக்கி இருக்கின்றார்.


"மறையோர் தேயத்து மன்றல் எட்டினும்" என்கின்ற சூத்திரத்தின் மூலம் பார்ப்பான், நாட்டிலுள்ள கல்யாண முறை எட்டு என்பதை விளக்கி இருக்கிறார். அடுத்து "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" மேல் கூறிய முறைகளின்படி திருமணம் செய்து கொண்ட (பார்ப்பான்) மக்களிடையே ஒழுக்கக் கேடும், பொய்யும் அதிகமான பின் பார்ப்பான் சடங்குகளை ஏற்படுத்தினான் என்று குறிப்பிட்டிருக்கிறார். நம் தமிழ்ப் புலவர்கள் 'அய்யர்' என்பது பார்ப்பானைக் குறிப்பதல்ல, அறிவில் சிறந்தவரைக் குறிப்பிடும் சொல் என்று கூறுவார்கள். இதற்குப் பதில் சொல்வது போல, தொல்காப்பியனே இன்னொரு சூத்திரத்தில் "மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்ற சூத்திரத்தின் மூலம் மேல் ஜாதிக்காரர்களுக்காக ஏற்பாடு செய்த சடங்குகள், முறைகள் கீழ் ஜாதிக்காரர்களிடையே புகுத்தப்பட்ட காலமும் உண்டு என்று குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.


நேற்றுக் கூட எனக்கு ரொம்ப வேதனை; நம் நாட்டின் மந்திரி பூம்புகார் பத்தினிக் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். நம் நாட்டிலிருக்கிற கோடிக்கணக்கான பெண்களில் அவள் ஒருத்திதான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை, மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபசாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்.


என்ன காரியம் செய்தாவது நாம் அறிவு பெற வேண்டும். நம் பெண்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும். நம் மக்கள் மூன்று கோடி பேரும் அறிவாளியாக வேண்டும். நம் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இத்திருமணங்களைக் கிரிமினலாக்க வேண்டும். இப்போது எப்படிப் பெண்களுக்கு பொட்டுக் கட்டுவது கிரிமினலோ அது போன்று தாலி கட்டுவதைக் கிரிமினலாக்க வேண்டும். இன்னும் கொஞ்சக் காலத்தில் நிச்சயம் திருமணம் கிரிமினலாக்கப்படுமென்று கருதுகின்றேன்.


நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? 100-க்கு 90-தாலி அறுப்பதற்குத்தானே! பெண்ணை "முண்டச்சி"யாக்கவும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தான் பயன்படுகின்றன. ஆணை விட - பெண்ணிற்கு  குறைந்த வயது இருக்க வேண்டும். அப்படித்தான் திருமணம் செய்கின்றார்கள். இரண்டு பேருமே 100 வயது வரை வாழ்ந்தாலும் அதின வயதான ஆண் தான் முன்னால் இறப்பான். அப்போது பெண் தாலியை "அறுக்க வேண்டியது" தானே!


இராமன் - சீதை, அரிச்சந்திரன் - சந்திரமதி, கோவலன் - கண்ணகி, திரவுபதை இத்தனை பேருக்கும் ஜாதகம், ஜோசியம், நேரம், காலம், நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்துத் தான் திருமணம் செய்தார்கள். இவர்களில் யார் வாழ்வு உயர்ந்த வாழ்வாக இருந்தது? எல்லோரின் வாழ்வும் சீரழிந்த வாழ்வாக அமைந்தது என்று தான் எழுதி வைத்திருக்கின்றான். இதிலிருந்தாவது நம் முட்டாள்கள் இவையெல்லாம் பொய் என்பதை உணரவில்லையே!


நம் மக்கள் நமக்கு முன் நடப்பவற்றைப் பார்க்க வேண்டுமே ஒழிய, பழைமையைப் பார்க்கக் கூடாது. பின்னோக்கிப் பார்க்கக் கூடாது. மற்றவர்கள் அறிவைச் சுதந்திரமாக விட்டுச் சிந்திப்பதால் பல அரிய - அற்புத அதிசயங்களைக் கண்டவன்னமிருக்கின்றனர். மனிதனுக்கு ஏன் 100-வயது வரம்பு இருக்க வேண்டும். 200-வருடம் வாழக் கூடாது என்றெல்லாம் ஆராய்ந்து வருகின்றார்கள்.


மணமக்கள் வரவிற்குள் செலவிட வேண்டும். கோயில், குளங்களுக்குச் செல்லக் கூடாது. முட்டாள்தனத்தையும், ஒழுக்கக் கேட்டையும் வளர்க்கும் சினிமாவிற்குக் கூடச் செல்லக் கூடாது. அறிவிற்கு ஒவ்வாத முட்டாள்தனமான மூடநம்பிக்கையான காரியங்களைச் செய்யக் கூடாது. இருவரும் நண்பர்களைப் போல் பழக வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடப்பதற்குப் பெரிய காரணம் அவர்கள் வாழ்க்கைக்கேற்ற வருவாயைப் பெறக் கூடிய சக்தி இல்லாததால் ஆகும். அவளும் நன்கு படித்து ஒரு நல்ல உத்தியோகத்தில் இருந்தால் ஆண் அவளை அடக்கியாளவோ, அடிமையாகவோ கருத மாட்டான்.


-------------------------------------- 10.11.1968 அன்று நடைபெற்ற நடராசன் - யசோதா திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ”விடுதலை”, 15.11.1968

56 comments:

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரியப் பார்வையில் (தமிழ்த்) தேசியம்


- புனித பாண்டியன்,
ஆசிரியர், தலித் முரசு

நாம் ஒரு தேசிய இனம் என்று நம்புவதே மிகப் பெரியதொரு மாயை என்று நினைக்கிறேன். பல்லாயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரு தேசிய இனமாக முடியும்? இச்சொல்லின் சமூக மற்றும் உளவியல் ரீதியான பொருளில் நாம் இன்னும் ஒரு தேசிய இனமாக உருவாகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அந்தளவுக்கு நல்லது.

அப்பொழுதுதான் நாம் ஒரு தேசிய இனமாக மாற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அந்த இலக்கை அடைவதற்குத் தீவிரமாகச் சிந்திப்போம்.

இந்த இலக்கை அடைய நினைப்பது அமெரிக்காவில் நடைபெற்றதைவிட மிகவும் கடினமானதாக இருக்கும். அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சினை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் உள்ளன. ஜாதிகள் தேசிய இனத்திற்கு எதிரானவை. முதலில் சமூக வாழ்நிலையில் அவை பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஜாதிக்கிடையிலும் அவை வெறுப்பையும் பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசவிரோதமானவையாகின்றன. நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமெனில் இந்தத் தடைகளை எல்லாம் நாம் கடந்து வரவேண்டும்.

- டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 13, பக்கம்: 1217.

ஒரு தேசிய இனமாக உருவெடுப்பதற்குத் தடையாக இருப்பதாக அம்பேத்கர் சுட்டிக்காட்டும் ஜாதித் தடைகளை தமிழ்ச் சமூகம் (தன்னை தேசிய இனமாகக் கருதிக்கொள்ளும் வேறு எந்த சமூகமும்) கடந்து விட்டதா என்பதுதான் மிகமிக அடிப்படையான கேள்வி. இன்று தமிழ்த் தேசியம் குறித்து தீவிரமாக விவாதிப்பவர்கள் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ஜாதித் தடைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, திராவிடம்தான் தமிழ்த் தேசிய உருவாக்கத்திற்குத் தடையாக இருப்பதாகப் பரப்புரை செய்கிறார்கள். இதற்குப் பதில் சொல்பவர்களில் சிலரும் திராவிடக் கருத்தியல் தடையாக இல்லை என்பதற்குச் சான்றுகளைப் பகர்கிறார்களே தவிர, ஜாதிய முரண்களைச் சுட்டிக்காட்டத் தவறுகிறார்கள். பல நூறு ஜாதிகளாலான தமிழ்ச் சமூகத்தை ஜாதி நீக்கம் செய்யாமல் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம் என்பது சாணிக் குவியலின் மீது கட்டடம் எழுப்புவதற்கு ஒப்பானது.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்சினை, அண்டை மாநிலங்களிடையேயான நதிநீர்ப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, மாநில தன்னாட்சிப் பிரச்சினை என அரசியல் ரீதியாக அவ்வப்போது தமிழின உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வகையில் நடைபெறும் போராட்டங்களை வைத்து தமிழினம் ஓர்மை பெற்றுவிட்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இது தற்காலிகமானது. அரசியல் போராட்டம் முடிந்ததும் ஓர்மை காணாமல் போய்விடுகிறது. அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் தமிழின ஓர்மை குடும்பம் _ சமூகம் _ பண்பாடு என்ற எல்லைக்குள் கடத்தப்படுவதில்லை என்பதை உணர வேண்டும்.

அண்டை மாநிலத்தின் முரண்களை முன்வைத்தோ, இந்திய ஆட்சி அதிகார முரண்களை முன்வைத்தோ _ தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்பவன் _ சக தமிழனிடம் ஜாதிக்காரனாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். அரசியல் அரங்கில் எழுச்சி பெற்ற ஓர்மை சமூக அரங்கில் நீர்த்துப் போய்விடுகிறது.

தமிழ் ஓவியா said...

மொழிப் பிரச்சினையை முன்வைத்துப் போராடும் தமிழர்கள், ஏன் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பாகுபாட்டையும் வன்கொடுமைகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்? தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, எட்டாயிரம் கிராமங்களில் ஆதிதிராவிட தமிழனுக்கு மட்டும் ஏன் இன்னும் தனிக்குவளையில் தேநீர் வழங்கப்படுகிறது? தமிழன் ஓர்மை பெற்றது உண்மை எனில், ஏன் நாள்தோறும் லட்சக்கணக்கான திருமணத் தகவல்கள் _ தமிழன் என்ற அடையாளத்துடன் அறிவிக்கப்படாமல் _ தனித்தனி ஜாதிகளாக அறிவிக்கப்படுகின்றன? ஆதித்தமிழன் பேசும் மொழி ஏன் மீதித் தமிழர்களால் எள்ளி நகையாடப்படுகிறது? தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அண்டை மாநிலத்தவர்களால் அபகரிக்கப்பட்டது பற்றியும் தமிழ் மண்ணின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்புகின்றவர்கள், பல நூறு ஆண்டுகளாக சேரித் தமிழர்களை தமிழனின் ஊர் எல்லையிலிருந்து ஏன் அன்னியப்படுத்தி வைத்துள்ளனர்? ஆதிக்க மொழியான சமஸ்கிருதம் பேசுபவனைக் கோவில் கருவறைக்குள் அனுமதிக்கும் தமிழர்கள், தொல்குடித் தமிழனை மட்டும் கோவிலுக்கு வெளியே நிறுத்தும் இனப் பாகுபாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியமா? புறக்காரணிகளைக் கண்டு பொங்கி எழுகின்றவர்கள் தமிழனின் அகக் காரணிகளைக் கண்டு வெட்கப்பட வேண்டாமா? பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இத்தகைய முரண்பாடுகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டாமா? இத்தகு ஜாதிய முரண்பாடுகளை எல்லாம் தீர்ப்பதற்காகப் போராடும் பெரியார் இயக்கங்கள் மீது அவதூறுகளை வீசிவிட்டு, 'தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கும் போது ஜாதிய முரண்கள் எல்லாம் காணாமல் போய் விடும்' என்று பிதற்கிறார்கள்.

ஜாதியத்தை அழித்தொழிக்காமல் எந்த தேசியத்தையும் வென்றெடுக்க முடியாது என்பதுதான் அம்பேத்கரியலின் அரிச்சுவடி. ஜாதிய முரண்பாடுகளைத் தீர்க்காமல் கட்டப்படும் தேசியம் கண்டிப்பாக தமிழ்த் தேசியமாக இருக்காது; அது ஜாதி இந்து தேசியமாகத்தான் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

தமிழனின் அகமுரண்பாடுகளுக்குக் காரணமான இந்து உளவியலைத் தகர்த்து பகுத்தறிவை விதைத்து மாபெரும் இயக்கம் கண்டவர்தான் தந்தை பெரியார். தன்னை இந்துவாகக் கருதும்வரை தமிழன் ஓர்மை பெற முடியாது என்பதால்தான் இந்து கடவுள்கள், கோவில்கள் முதல் அதற்கு ஆதாரமான அனைத்து நூல்களையும் புனிதமானவை என்று சொல்லப்பட்ட வேதங்களையும் வேரறுக்க தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் அவர். தமிழனுக்கென ஒரு தேசத்தை உருவாக்குவதல்ல பெரியாரின் இலக்கு. அவனை ஜாதியொழிந்த தமிழனாக (சூத்திர அடையாள மறுப்பு) மாற்றுவதற்குத்தான் அவர் இறுதிவரை போராடினார். தமிழன் அல்லது திராவிடன் என்ற இனவரைவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல பெரியார் இயக்கம். தமிழர்களைச் சமத்துவமிக்க மக்களாக மாற்ற வேண்டும் என்ற மனிதநேயக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே பெரியார் இயக்கம்.

இந்திய நாடு அன்னியர்களிடமிருந்தபோது உருவானதற்குப் பெயர் நாட்டுப் பற்று. அது தேசிய உணர்வன்று. நாட்டுப்பற்றும்கூட ஆங்கிலேயர்கள் வெளியேறியவுடன் காணாமல் போய்விட்டது. அந்த அதிகாரத்தை இந்நாட்டின் ஆளும் வகுப்பினரான பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அதனால்தான் இன்றளவும் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அதிகாரமும் பொது வளங்களும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கப்படவில்லை. தன்னாட்சி மற்றும் அதிகார மாற்றம் போன்றவை தேசிய உணர்வை வளர்த்தெடுக்கப் பயன்படாது. ஆங்கிலேயர்கள் வெளியேறி அரை நூற்றாண்டு கடந்தும் எவ்விதப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இங்கு நேர் செய்யப்படவில்லை. இந்நிலையில்தான் மனுதர்மத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் பொருளாதார நிர்வாகத்தை அடியோடு வீழ்த்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் தீவிர அக்கறை செலுத்தினார் அம்பேத்கர். இதை ஓர் அரிய வாய்ப்பாகக் கொண்டு எந்தப் பாகுபாடுகளுமற்ற ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்காக அவர் அடித்தளமிட்டார். இது மொழி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால்தான் _

மதச்சார்பற்று இருக்கும் வகையில் _ அதை வடிவமைத்தார். அதுமட்டுமல்ல, சுதந்திரம் _ சமத்துவம் _சகோதரத்துவம் என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு தேசமாகத் திரண்டெழ வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதோடு அம்பேத்கரின் பணி நிறைவடைந்துவிடவில்லை. அதற்கு முன்பும் பின்பும் ஜாதிகளாலான சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்காகத்தான் அவர் போராடினார். அவர் உருவாக்கிய ஜாதியை அழித்தொழிக்கும் செயல்திட்டமும் இந்து மதத்தை முற்றாக மறுதலித்து பவுத்த பண்பாட்டு இயக்கத்தை அவர் மீட்டுருவாக்கம் செய்ததும் - இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பெண்கள் _ சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற உன்னதமான லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைச் செய்யும் பொழுதுதான் 2000 ஆண்டுகளைக் கடந்தும் உயிர்ப்போடு வாழும் ஜாதியையும் அது உருவாக்கியிருக்கும் பாகுபாடுகளையும் இழிவுகளையும் வேரறுக்க முடியும். வெறும் தேசிய உணர்வை ஊட்டுவதன் மூலம் இது சாத்தியமாகாது. ஆனால் இங்கு முன் வைக்கப்படும் தமிழ்த் தேசியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. சிக்கல் என்னவெனில், தமிழ் ஜாதி காப்பாற்றும் மொழியாக இருக்கிறது. மொழியே ஜாதி காப்பாற்றும் மொழியாக இருக்கும் போது - அதை ஜாதி நீக்கம் செய்யாமல் _ அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியம் என்னவாக இருக்கும் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை.

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமும்


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற குறளுக்கு ஏற்ப அண்ணல் அம்பேத்கர் மானுட சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அளவிடற்கரியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தன் பரந்துபட்ட படிப்பறிவையும், சட்ட அறிவையும், அண்ணல் அரசியல் சட்டம் எழுதுவதற்கு மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், அதற்கும் மேலாக இழிமொழிகள், ஏளனங்கள் ஆகிய-வற்றைப் பொருட்படுத்தாமல் அரசியல் சட்டத்தினை வகுத்தளித்தார். அரசியலமைப்புச் சட்ட வரைவு பற்றி பல்வேறு வகையான விவாதங்கள் வந்தபோது தனது நுணுக்கமான சட்ட அறிவைக் கொண்டு அதனை வடித்தெடுத்தார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று இந்து மதக் கொடுங்கோன்மையை எதிர்க்க வேண்டும் என்பது அண்ணலது பெருவிருப்ப மாகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்-குடியினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவது போல் பிற்படுத்தப்-பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அண்ணல் வலியுறுத்திய போது அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தமிழ் ஓவியா said...


இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பால், இனம், மொழி, ஜாதி, பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியக் குடிமக்களிடையே எந்தவிதமான வேறுபாடும் காட்டக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவில் கூறப்பட்டிருந்தது. அதே சமயத்தில் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29(2)இல் சிறுபான்மையினர் நலன் பற்றியும் குறிப்பிடப்-பட்டிருந்தது. தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் முதன்முதலாக வகுப்புவாரி உரிமை அரசாணை (சிஷீனீனீஸீணீறீ நி.ளி.) நடைமுறையில் இருந்தது.

அதன் அடிப்படையில் பெரும்-பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் மட்டுமல்லாமல் பார்ப்பனர் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவை நடைமுறையில் இருந்து வந்தன.

1937ஆம் ஆண்டு நீதிக்கட்சி தோல்வியடைந்து காங்கிரஸ் இராசகோபாலாச்சாரியார் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும்-கூட இந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ வகுப்பு உரிமையில் தலையிடவில்லை. இதற்கு வேட்டுவைப்பது போல் சென்னை உயர்-நீதிமன்றத்தில் 27.07.1950ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் (நீதிபதி பி.வி. இராசமன்னா, நீதிபதி விசுவநாத சாஸ்திரி மற்றும் நீதிபதி சோமசுந்தரம்) அடங்கிய அமர்வில் சென்னை இராச்சியத்தில் (தமிழ்நாட்டில்) அமலிலிருந்த விகிதாச்சாரப்படியிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவை மீறுவதாகக் கூறித் தீர்ப்பளித்தனர். ஸ்ரீமதி சண்பகம் துரைராஜன் எதிர் சென்னை மாகாண அரசு (கிமிஸி 1951 விணீபீ 120) என்ற வழக்கில்தான் மேற்படி தீப்பளிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டத்தினை இயற்பியல், வேதியியல் பிரிவில் படித்த சண்பகம் துரைராஜன் சென்னை அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு மனு செய்திருந்ததாகவும் தனக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்காமல் தன்னைவிட குறைவாக மதிப்பெண் பெற்றிருந்த பாப்பனரல்லாத சமூகத்தைச் சோந்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கொடுத்துள்ளதாகவும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி இனம், மொழி, ஜாதி அடிப்படையில் எந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கும் கல்வியில் வேறுபாடு காட்டக்கூடாது என்று சொல்லியிருப்பதற்கு மாறாக சென்னை மாகாண அரசாங்கம் வகுப்புவாரி இடஒதுக்கீடுச் சலுகை கொடுத்து வருவதாகவும், அந்த அரசாணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கே அதற்குக் காரணம். மேற்படி வழக்கில் ஆஜராவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் குழுவில் உறுப்பினராயிருந்த சா. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சண்பகம் துரைராஜனுக்கு ஆதரவாக வாதாடினார்.

தமிழ் ஓவியா said...


வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தும் அரசாணை எண். 1254 (கல்வி) நாள் 17.05.1948 செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பி மாபெரும் போராட்டத்திற்குப் பார்ப்பனரல்லாதார் அணியமாக வேண்டு-மென்று அறைகூவல் விடுத்தார். மேற்படி தீர்ப்பிற்கு எதிராக அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்தது. மேற்படி மேல்முறையீடு 09.04.1951 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. மேல்முறையீட்டிலும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே உச்ச நீதிமன்றத்தில் சண்பகம் துரைராஜனுக்கு வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நேரு அவர்களால் 12.05.1951 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்த மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரிவுகள் 15, 19, 85, 87, 174, 176, 341, 342, 372, 376 ஆகியவற்றில் திருத்தமும் புதிதாக 31கி, 31ஙி ஆகியவற்றைச் சேர்க்கவும் தாக்கல் செய்தார். இதில் மிக முக்கியமானது பிரிவு 15இல் உட்பிவு 3அய் இணைத்து கல்வியில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நாட்டிலுள்ள பிற்படுத்தப்-பட்ட மக்களுக்கு அளிக்கும் சலுகைகள் இனம், மொழி, பால், ஜாதிப் பாகுபாட்டிற்குப் பொருந்தாது என்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேற்படி அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்வதற்கு அண்ணல் அம்பேத்கர் முழுமை-யான ஆதரவினை அளித்து தன்னுடைய தேர்ந்த வாதத்திறமையினால் மிகப்பெரும்-பான்மையினர் ஆதரவளிக்க அண்ணல் அவர்கள் ஆற்றிய அரிய உரையே காரண-மாகும். கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கும் மேலாக தன்னுடைய உரையில் மிகவும் இடர்பாடான நுட்பமான அரசியல் சட்டம் மற்றும் சட்டங்கள் குறித்த சிக்கல்கள் பற்றி விளக்கி கூர்மையான அறிவு நுட்பத்துடனும் தெளிவுடனும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரைகளி-லெல்லாம் தலைசிறந்தது என்று 19.05.1951ஆம் நாளிட்ட தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெகுவாகப் பாராட்டியிருந்தது.

அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய உரையில் ஜாதிகளுக்கிடையே வேறுபாடுகளைக் காட்டுகிறது என்ற அடிப்படையில் சென்னை மாகாண அரசின் வகுப்புவாத ஆணையை உச்ச நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்திருப்பது எவ்வகையிலும் சரியானது அன்று என்றும் மேற்படி தீர்ப்பு அரசியல் சட்டவிதிகளின் அடிப்படையில் அமைய-வில்லை என்றும் கூறியபோது பெரும் கூச்சலையும், குழப்பத்தையும் நாடாளுமன்றம் சந்திக்க நேர்ந்தது. பொதுவாக அண்ணல் அமபேத்கரை விமர்சனம் செய்பவர்கள் அவர் ஒரு முன்கோபி, எளிதில் சினம் கொள்ளக்-கூடியவர் என்பார்கள். ஆனால் கடும் கூச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமைதியாக இருந்து பின்பு நிசப்தமான அமைதி ஏற்பட்ட-பின் அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாகக் கீழ்வருமாறு கூறினார்.

அரசியல் சட்டவிதி 29(2) மதம், இனம், ஜாதியின் பெயரைக் காரணம் காட்டி எந்த ஒரு குடிமகனுக்கும் எந்தவொரு கல்வி நிலையத்திலும் சேர்ந்திட அனுமதி மறுக்கக்கூடாது என்பதில் உச்ச நீதிமன்றம் மட்டும் என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது.

விதி 46இல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்-பட்டுள்ளது விதி 46இன் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமானால் விதி 16 (4) மற்றும் விதி 29(2) ஆகியவற்றைத் திருத்த வேண்டும். விதி 19(2)க்கான திருத்தம் என்பது பேச்சுச் சுதந்திரத்தில் கருத்தைக் கூறும் உரிமை, பொது அமைதி காத்தல், குற்றம் இழைக்கத் தூண்டுதல், அயல் நாடுகளுடான நட்புறவு ஆகிய மூன்று தலைப்பினங்களோடு தொடர்புடையதாக இருக்கின்றது. எனவே மேற்படி திருத்தங்கள் கொண்டு வருவதை ஆதரிக்கிறேன். மேற்படி அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரின் போராட்டத்தின் காரணமாகவும் அண்ணல் அம்பேத்கரின் வலுவான ஆணித்தரமான வாதத்தின் காரணமாகவும் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு, அதனடிப்படையிலே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவத்தோடு சமூக நீதியினைப் பெற்று வருகின்றனர்.

இப்போது சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் நல்லது செய்தாரா?

- சு.குமாரதேவன்

தமிழ் ஓவியா said...

அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்

- வே.மதிமாறன்

ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர் களாலும் புறக்கணிக்கப்-படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.

தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புதான் மிக நுட்பமானதாக, அவர்களைவிட ஆபத்தானதாக இருக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அம்பேத்கரை விடத் தங்களை மிக முற்போக்கானவர்களாகச் சொல்கிறவர்கள், இன்னொருபுறம் கை தேர்ந்த சந்தர்ப்பவாதிகளையும், பிற்போக் காளர்-களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்துத் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். தலித் அல்லாதவர்களிடமும் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, இன்னொரு புறம் அம்பேத்கரை தலித் மக்களிடம் இருந்தே அப்புறபடுத்துகிற வேலையும் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை போலவே, அவரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பும் மிக முக்கியமானது. இந்தியாவில் கிறிஸ்துவ மதமாற்றத்தில் தலித் மக்களின் பங்களிப்பு மிக அதிகமானது.

தலித் மக்களிடம் அம்பேத்கரின் எழுச்சி உருவாக்கி இருக்கிற அலை, அம் மக்களை இந்து மத எதிர்ப்புற்கும், கிறிஸ்துவப் புறக்கணிப்புக்கும் தான் கொண்டு செல்லும். இந்து மத எதிர்ப்பை ஆதரிக்கிற அல்லது ஒத்துக் கொள்கிற கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் அவைகளிடம் பணம் வாங்கிச் சேவை செய்கிற என்.ஜி.ஓ அமைப்புகள் ஒரு போதும் தலித் மக்களின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை ஒத்துக் கொள்ளாது. பல தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள்கூட அம்பேத்கரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை பற்றியும் அவரின் பவுத்தம் குறித்தும் மவுனம்தான் காக்கிறார்கள். அவர்களின் அந்த மவுனத்திற்கு பின் சம்மதமாக மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே. தமிழர்களுக்கு எதிராக ராஜாபக்சே தலைமையில் சிங்கள இனவாதம் கொலை-வெறியில் செயல்பட்டபோது, அதோடு பவுத்தத்தை முடிச்சு போட்டு பவுத்த மதவெறி என்று சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ முற்போக்காளர்கள்; ஈராக் மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்திய புஷ், இது இஸ்லாமுக்கும் கிறிஸ்துவத்திற்குமான போர் என்று பகிரங்கமாக அறிவித்துத் தனது ஏகாதிபத்திய வெறிக்குக் கிறிஸ்துவர்களிடம் ஆதரவு திரட்ட முயற்சித்து, ஈராக் மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை செய்தான். ராஜபக்சேவோடு இணைத்துப் பவுத்தத்தைச் சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள், கிறிஸ்துவத்துடன் முடிச்சு போட்டு, இது கிறிஸ்துவ மதவெறி என்று கொந்தளிக்கவில்லை.

அதை மட்டும் தெளிவாக, சரியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையாக உணர்ந்துதான் அதைக் கண்டித்தார்கள். இந்த நடவடிக்கைகளில் அம்பலமானது தலித் அல்லாத கிறிஸ்துவர்களின் மதவெறி மட்டுமல்ல; பவுத்த வெறுப்பின் வழியாக அம்பேத்கரின் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான். இன்று இந்தியா முழுக்க இனவாதம் பேசுகிறவர்களின் ஒப்பற்ற முன் மாதிரி, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்று முழுங்கிய பால்தாக்கரே என்கிற பயங்கரவாதிதான்.

இன்றைய இனவாத தத்துவத்தின் தலைவர் பால்தாக்கரே, தமிழர்-களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராகப் பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், மராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையைப் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அது போன்ற வன்முறையை அதற்கு முன்னும் பின்னும் இப்போதும் நடத்தியது இல்லை. அது, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள மரத்வாடா பல்கலை-கழகத்திற்கு, மராட்டிய மண்ணின் மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை. நெருக்கிப் பிடித்தால் மண்ணின் மைந்தர்கள் ஜாதியின் மைந்தர்-களாக, தலித் விரோதிகளாகத்-தான் பிதுங்குகிறார்கள்.

அப்பட்டமான ஜாதி வெறியர்களை மட்டுமல்ல, நுட்பமான ஜாதி உணர்வாளர்-களையும் அம்பலப்படுத்துவதற்கு அண்ணல் அம்பேத்கரைவிடக் கூரிய அறிவாயுதம் வேறு எது? டாக்டர் அம்பேத்கரின பிறந்த நாளை ஒட்டி அவரின் சிந்தனை வழிகளில் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்வோம். மிகக் குறிப்பாகத் தலித், தலித் அல்லாத முற்போக்காளர்கள், ஜாதி வெறியர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல, சவாலானதும்கூட. அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரின் மதமாற்றம் பாராட்டுக்குரியது! -- அறிஞர் அண்ணா


கருவூலத்திலிருந்து...

அம்பேத்கரின் மதமாற்றம் பாராட்டுக்குரியது!

- அறிஞர் அண்ணா


இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது.

ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியையும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம் முழுதும் ஒரே ஜனசமுத்திரமாகக் காணப்பட்டது என்றும் வரைந்துள்ளார்.

இந்து மதத்தைவிட்டு வெளியேறும் திருப்பணி இன்று நேற்று ஏற்பட்டதன்று. இவ்வெளியேற்றம் தொன்றுதொட்டு நடை-பெற்று வருகிறது.

இருந்தாலும், மூன்று இலட்சம் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கூடி, இந்து மதத்திலிருந்து நீங்கிப் புத்த மதம் புகுந்திருப்பது, இந்து மதப் பாதுகாப்பாளர்களுக்குப் பேரதிர்ச்சி தரும் சம்பவமாகும்.

இதற்குமுன் மதம் மாறி இருப்பவர்கள், பொன்னாசைக்கும் பொருளாசைக்கும் பலியாகியும், அந்தஸ்துக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகியும், மதம் மாறி இருப்பவர்களாகும் எனக் கூறுவது மிகைப்படக் கூறியதாகாது.

ஆனால், மூன்று இலட்சம் மக்களுடன் இன்று புத்த நெறியில் புகுந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் மதம் மாற்றச் செய்தி, அப்பட்டியலில் சேர்த்து எண்ணத்தக்கதன்று.

டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர்; அவர் கற்காத இந்துமதத் தொடர்புடைய வடமொழி வேதாகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக்-கூடிய அளவிற்கு சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர்.

அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மூன்று இலட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கிவிட்ட சம்பவம்போல் கருதக்கூடியது அல்ல.

புத்தநெறி தழுவிய டாக்டர் அம்பேத்கர்,

பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கபாலி, கணபதி மற்றும் இந்துமத தெய்வங்களைக் கடவுள்களாகக் கருதமாட்டேன். கடவுள் அவதாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த விதச் சடங்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. புத்தரை விஷ்ணு அவதாரமாக நம்பவில்லை, சடங்குகள் செய்விக்கப் பார்ப்பனர்களை அழைக்க மாட்டேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். பஞ்சசீலக் கொள்கையை அனுஷ்டிப்பேன்.

என உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த உறுதிமொழியே இந்து மதத்தின் உட்பொருளையும், புத்த நெறியின் கோட்-பாடுகளையும் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

இம்மதமாற்றச் சேதி, இந்துமதக் காப்பாளர்களிடம் என்றும் போல் சிந்தனையைத் தூண்டத் தவறிவிட்டது. வழக்கமாக அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல், இச்சேதி கேட்டு ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் ஆளவந்தார்களும், இம்மத-மாற்றத்தை வழக்கம்போல் நையாண்டி செய்வதிலும், இம்மத மாற்றத்தின் நடுநாயகமாக இருக்கும் டாக்டரைத் தூற்றுவதிலும் மனச் சாந்தி தேடிக்கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

இப்பெரும் வரலாற்றுச் சம்பவத்தை, மிகமிகச் சாதாரண சம்பவம்போல் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பாணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை, சிறிய சம்பவமெனக் காட்ட அவர்கள் எவ்வளவுதான் முயன்றபோதிலும், அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும்.

அவர்கள் இயல்பு அது; அதை மாற்ற எவரால் முடியும்? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ள ஒப்புமா?

இவர்கள் வாயுரையைக் கேட்டா உலக மக்கள், இம்மதமாற்றத்திற்குத் தரப்பட வேண்டிய மதிப்பின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருக்காலுமில்லை.

டாக்டர் அம்பேத்கரின் மத மாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறிவிடாது.

மூன்று இலட்சம் மக்களை உடனழைத்துக்-கொண்டு டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்-கொள்ளத்தான் போகின்றனர்.

தமிழ் ஓவியா said...

சட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது.

இந்தியத் துணைக் கண்டத்தில் மதமாற்றத்திற்காக வெளிநாட்டினர் ஒன்பது கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர் என நியோகியின் நியாயத்தை எடுத்துக்காட்டி காஞ்சி காமகோடி பீடத்தார் இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டினர் இவ்வளவு பெருந்-தொகையைச் செலவிட்டுள்ளனரே! எனப் பேசும் பேச்சு, மேற்குறிப்பிட்ட வினாவிற்குத் தக்க விடையாக அமைய முடியாது.

உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் மூன்று இலட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமை-யின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான், உலக மக்கள் முடிவு கட்டுவர். அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்ட சமரசப் பூச்சும், தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவை-களாகும்.

இந்து மதத்தைவிட்டு மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாக இப்பொழுதும் வெளியேறி வருகிறார்கள் என்பதற்கான மூல காரணத்தைத் தேடிக் கண்டறிந்து, அதைக் களைந்தெறிய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் ஆளவந்தார்-களுக்குக் குறைவாக இருக்கலாம்; அப்பணி தங்கள் பொறுப்பு அல்ல என்றுகூட அவர்கள் கருதலாம்.

ஆனால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் நிலை அதுவாக இருக்க முடியாது.

தனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்து மதத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவர், சங்கராச்-சாரியார்.

எப்பொழுதும்போல், சரிந்து வரும் தனது மதிப்பையும், குறைந்துவரும் தனது வருவாயையும், இருக்கும் நிலையளவாவது பாதுகாத்துக் கொள்ளும் போக்குடையதாகத்-தான், சங்கராச்சாரியாரின் இப்பொழுதைய செய்தியும் அமைந்திருக்கின்றதேயல்லாது, இந்து மதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர்களாவது தாங்கள் இறக்கும்வரை அதிலேயே ஒட்டிக்-கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடையதாக ஆக்கும் விருப்புக் கொண்டிருப்-பதாகத் தெரியவில்லை.

9 கோடி ரூபாய் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு இந்து மதத்திலிருப்-போரைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிடும் சங்கராச்சாரியார், இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, கோடிக் கணக்கு இருக்கட்டும் - எத்தனை இலட்சம் எத்தனை ஆயிரம் செலவிட்டிருக்கிறார்? புள்ளி விபரம் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.

அரேபியாவிலிருந்து இஸ்லாம் மார்க்கம்-தான் இறக்குமதியாயிற்றே தவிர, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வந்து குடியேறினவர்களன்று. என்றோ ஒரு நாள் இந்து மதத்திலிருந்தவர்கள்தான் இன்று முஸ்லிம்களாக இருப்பவர்கள் அனைவரும்.

அன்றொரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள், இன்று ஒன்பதுகோடி என்ற கணக்கில் பெருகி-விட்டனர் என்பதற்குரிய நியாயமான காரணத்தை இந்துமதத்தில்தான் கண்டு-பிடித்தாக வேண்டும்.

இதுபோலவே கிருத்துவ மதம் இங்கு ஏன் _ எப்படிப் பரவ முடிந்தது என்பதனை அம்பேத்கரின் மதமாற்றத்தை நையாண்டி செய்யும் போக்கினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்று இலட்சம் மக்களுடன் டாக்டர் அம்பேத்கர் மட்டுமல்ல, வேறு பல இலட்சக்கணக்கானவர்களும் வெளியேறிச் செல்லும் நிலை இருக்கத்தான் செய்கிறது.

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.

டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.

- திராவிட நாடு 21.10.1956

தமிழ் ஓவியா said...

Print
Email

சிறப்புச் சிறுகதை

ஆஃப்டர் ஆல் பொம்பளை!

- அதிஷா

அந்த அறையிலிருந்து அவசரமாக வெளியே வந்தான் அருண். வியர்த்திருந்த நெற்றியை கர்சீப்பால் துடைத்துக் கொண்டான்.

இடமும் வலமுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவசரமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். யாரோ பின்னாலிருந்து அவனை அழைப்பது போலிருக்க திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியே விடுவிடுவென எதிரில் வந்தவர்களின் முகம் பார்க்கவும்கூட முடியாமல் உரசிக்கொண்டே வெளியே நடந்தான். அந்த மாபெரும் துணிக்கடையின் வாசலுக்கு வந்ததும்தான் நிம்மதியாக இருந்தது. திரும்பி நிமிர்ந்து பார்த்தான். அது விழுங்கக் காத்திருக்கும் டைனோசரைப்போல கண்சிமிட்டிக் கொண்டு நின்றிருந்தது. அப்படியே அவசரமாக ஓடிப்போய் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். காலை வீட்டிலிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது இப்படியெல்லாம் ஆகும் என அவன் நினைக்கவேயில்லை. ரம்யாவின் முதல் குறுஞ்செய்தியிலிருந்துதான் அவனுக்குப் பித்தேறியது.

போதும் அருண் இனி இது எப்போதும் வேண்டாம், என்னால் உன்னோடு வாழ முடியாது, பிரிந்துவிடலாம் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தாள் ரம்யா. அருண் அதைப் படித்த அடுத்த நொடியிலிருந்து அவனுடைய இதயம் திரியில் தீப்பட்ட நாட்டு வெடிகுண்டாக வெடிப்பதற்குக் காத்திருந்தது.

தமிழ் ஓவியா said...

அந்த நொடியில் ரம்யா எதிரிலிருந்தால் அவளுடைய முடியைக் கற்றையாகப் பிடித்து இழுத்துப்போய் சுவற்றில் இடித்துக் கொலை செய்திருக்கக்கூடும். அல்லது ஒரு சுத்தியலால் அவளுடைய மண்டையைப் பிளக்கவும் செய்திருக்கலாம். அவனுக்கு அந்த நொடி அவளுடைய கதறலை_அழுகையைக் கேட்கவேண்டும் போல் இருந்தது. அவனுடைய விரல்கள் நடுங்குவதையும், முட்டிகளின் இணைப்புகள் சிலிர்ப்பதையும், மூக்கின் நுனிகள் வெடிப்பதையும் உணர்ந்தான்.

ரிசப்ஷனில் காத்திருந்தான். ரம்யா வெளியே இரண்டு கைகளில் காபியோடு வந்து எதிரில் அமர்ந்தாள். அருண் அவளை நேரில் பார்த்துவிடக்கூடாது என்பதில் உறுதியாயிருந்தான். ஆனால் ரம்யா எப்போதும் போல அதே மாறாத புன்னகையோடு கண்களில் அமைதி நிறைந்திருக்க காபி சாப்பிடு, லைட்டா சக்கரை கூடுதலா போட்டிருக்கேன் என்று நீட்டினாள்.

பரவக்காத்திருக்கும் காட்டுத்தீயென உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான். ரம்யாவைப் பார்க்காமல் காபியை மட்டும் வாங்கி எதிரில் வைத்தான். நிமிரவில்லை. மெசேஜ் பார்த்தியா என்றாள். அருண் தலையை ஆட்டினான். பதில் பேசவில்லை. என்னால உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடியாது அருண். நீ எதிர்பார்க்குற மாதிரி என்னால இருக்க முடியாது என்று கூறிவிட்டு காபியை உதட்டருகில் கொண்டு சென்றாள். அவளுடைய பார்வை நேராக இருந்தது. உடல் நிமிர்ந்திருந்தது. அவள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாள். அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அருண் நடுங்கிக் கொண்டிருந்தான். எதிரே-யிருந்த கண்ணாடியில் தன்னுடைய விரல்-களால் அழுந்தத் தேய்த்துக் கொண்டிருந்தான்.

காதலை எப்படி ஏத்துக்குறோமோ பிரிவையும் அதே மாதிரி ஏத்துக்கப் பழகிக்கணும் அருண். நீ என்ன டீன்ஏஜ் பையனா, பலமுறை சொல்லிட்டேன் நீ விரும்புற வாழ்க்கைக்கு நான் செட் ஆகமாட்டேன். என்னால அப்படி ஒரு வாழ்க்கையை வாழமுடியாது.

நான் உனக்கு நல்லதோழியா இருக்கணும்னு நினைக்கிறேன், ஒரு நல்ல பார்ட்னரா இருக்கணும்னு விரும்பறேன், உன்னோட பழகும்போதே ராஜீவையும் என்னால காதலிக்க முடியுது, வித்யாசாகரையும் விரும்பறேன். அதுக்குக் காரணம் எங்கிட்ட இன்னமும் மிச்சமிருக்கிற இந்தச் சுதந்திரம் மட்டும்தான், ஆனா உன் காதல் விலையா கேக்குறது அதைத்தான் என்று கூறிவிட்டு அருணையே பார்த்துக் கொண்டிருக்க, அருண் உனக்கு அசிங்கமா-யில்ல, ஒரு பொம்பள இரண்டு பேரை ஒரே நேரத்துல காதலிக்கறேனு கூசாமச் சொல்றியே வெக்காம இல்ல என்று திட்ட ஆரம்பித்தான்.

அவனுடைய சப்தம் நான்கு டெசிபல் அதிகமானதை ஆங்காங்கே இருந்தவர்களின் திடீர் பார்வை உணர்த்தியது. அதனால் அவன் தன்னுடைய சப்தத்தை உடனடியாகக் குறைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினான். உனக்குக் கண்டவனோடல்லாம் படுக்கணும், அதுக்கு நான் இடைஞ்சலா இருக்கக் கூடாது அதானே என்றான். ரம்யா புன்னகைத்தாள்.

காதல்னா என்ன அருண். ஒரே ஒருத்தனை மட்டும் நினைச்சுக்கிட்டு அவனையே வாழ்க்கை முழுக்கத் தெய்வமா நினைச்சு நினைச்சு ஏங்கிக்கிட்டு அவன் செத்துப்போகும்போது நாமளும் அவன் மடியிலேயே விழுந்து பிராண நாதானு சாகறதா! இப்போ நீ என்னை எவ்வளவு காதலிக்கிறியோ அதே மாதிரிதானே எனக்கு முன்னால நீ காதலிச்ச பிரேமாவைக் காதலிச்சிருப்ப, பிரேமாவுக்கு முன்னால காதலிச்ச திவ்யாவையும் எனக்குத் தெரியும், உன்னால எப்படி ஒவ்வொரு காதலா மாறி மாறி வரமுடிஞ்சது? நான் அதைச் செய்யக்-கூடாதா.. காதல்ன்றது உள்ளத்துக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு உணர்வுதான் அருண்! அது யாரையும் யாரும் அடிமைப்படுத்தக்கூடிய விலங்கா இருந்துடக்கூடாது. எனக்கு உன்னோட காதல் முழுமையான விலங்காதான் மாறிடுச்சு என்றாள். உன் வியாக்கியானத்தெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ, ஒருத்தன் பத்தல உனக்கு, இன்னும் பத்துப் பேர் வேணும் அதானே! என்று கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கினான்.

ரம்யா புன்னகையோடு அமர்ந்திருந்தாள்.

நீ அதை அப்படித்தான் புரிஞ்சிக்கிட்டேனா நான் ஒன்னும் செய்யமுடியாது. உண்மைல எனக்குப் பத்துபேர் வேணும்னாலும் அதுல என்ன தப்பிருக்கு. அது என்னோட உடல் தேவை. எனக்கு நிறையப் பசிக்கும்போது விரும்பினதச் சாப்பிட எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை நான் விரும்பினவங்களோட அவங்க அனுமதியோட செக்ஸ் வச்சிக்கவும் இருக்கு அருண்! உனக்கும் அந்த உரிமை இருக்கு. நீ இதுவரைக்கும் பத்துப் பேரோட-வாவது அப்படி இருந்திருக்கக் கூடியவன்தானே! நாளைக்கு நமக்குக் கல்யாணம் ஆனாலும் ஏகபத்தினி விரதனா எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பாக்காம இருந்துடுவியா?

அப்படியே இருந்தாலும் நீ அப்படி இருக்கன்றதுக்காக நானும் அப்படி இருக்-கணும்னு கட்டாயமா? நீ பண்ணும்போது சரியா இருக்கிற ஒரு விஷயம் நான் பண்ணும்போது எப்படித் தப்பாகுது அருண் என்றவள் காபியை ஒருமுறை குடித்துவிட்டு அருணின் பதிலுக்குக் காத்திருக்காமல் பேச ஆரம்பித்தாள்.

தமிழ் ஓவியா said...

காதல்ன்றது எனக்குக் காதலாதான் இருக்கணும், காதலை ஏன் காமத்தோட நீ கனெக்ட் பண்ணிக்கறேனு எனக்குப் புரியல அருண். காமம் வேற காதல் வேற. காமத்திற்-கான காரணங்களும் அதற்கான தேவைகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். எனக்கு எத்தனையோ ஆண்கள் மேல க்ரஷ் வந்திருக்கு, அவங்களோட இருக்க ஆசைப்பட்டிருக்கேன். சிலரோட அப்படி இருந்தும் இருப்பேன். அது வேற விஷயம். ஆனா காதலிச்சது சிலரை மட்டும்தான் அதுல நீயும் ஒருத்தன். ஏன்னா அது உணர்வு சம்பந்தப்-பட்டது. காதலில் ஒரு சின்ன இலவச இணைப்பு-தான் காமம்! நீ தேவையில்லாம இரண்டையும் போட்டுக் குழப்பிக்கற, நீ என்னைக்காவது என்கிட்ட கேட்டப்ப நான் முடியாதுனு சொல்லியிருக்கேனா, இத்தனைக்கும் எனக்கு ஒருமுறைகூட தோனினதே இல்ல. இருந்தாலும் உன் மேல இருந்த காதலாலதான் ஒத்துக்கிட்டேன் என்று சொல்லிவிட்டு அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருண் தன்னுடைய மூச்சை ஒருமுறை இழுத்துவிட்டுக்கொண்டு கடைசியா என்னதான் சொல்ல வர என்று கரகரப்பான குரலில் கொலைகாரனைப்போலக் கேட்டான்.

தமிழ் ஓவியா said...

இது வேண்டாம், அவ்ளோதான். இதை இத்தோட முடிச்சிக்குவோம். நாம இனி நண்பர்களா தொடரலாம். நீ விரும்புறபடி பொண்ணுங்க இங்கே நிறைய கிடைப்பாங்க, நாட் மீ! என்னை விட்ரு, அதுமாதிரி ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளோட ஹேப்பியா இரு, நான் நிச்சயமா உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன், முடிஞ்சா என்னையும் கூப்பிடு நானும் வந்து அட்சதை போட்டு வாழ்த்திட்டுப் போறேன் என்று காபியின் கடைசி சொட்டையும் உறிந்துவிட்டு டேபிளில் வைக்க, அருணின் காபி அப்படியே இருந்தது.

ப்ளீஸ் ரம்யா, என்னால உன்னை விடமுடியாது, நீ இல்லாத வாழ்க்கைய என்னால யோசிக்கவே முடியாது. என்னோட உயிர் நீதான். ப்ளீஸ்மா புரிஞ்சிக்கோ என்று திடீரென்று கெஞ்சத் தொடங்கினான்.

இங்க பாரு அருண், நான் ரொம்ப நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தேன். இங்கே உள்ள ஒவ்வொரு பொண்ணுக்கும் கல்யாணத்தை-விட காதலன்கள்தான் அதிகத் தடைகளைப் போடறவனா இருக்கான். நீயே யோசிச்சுப் பாரு, நான் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டா உன்னால அதை ஏத்துக்க முடியுமா, ஏன் இன்னைக்குத் துப்பட்டா போடாம வந்தனு எத்தனை முறை சண்டை போட்டிருக்க, ஸ்கூட்டில தனியா போகக் கூடாது, நைட் பத்துமணிக்கு மேல வெளிய சுத்தக்கூடாது, நைட் ஷிப்ட் பாக்கக்-கூடாது, பாய்பிரண்ட்ஸோட அவுட்டிங் போகக் கூடாது, செலவுக்குக் கணக்குச் சொல்லணும், நைட் ரொம்ப நேரம் வாட்ஸ்அப் பாக்கக் கூடாது, ஆனா நீ கூப்பிட்டா எப்போ வேணா நான் தயாரா இருக்கணும், எனக்கு உடம்பு சரியில்லைனு காரணம் சொன்னாக்-கூட அதுக்காக நீ கோபப்படுவ, என்னால அப்படி ஒரு வாழ்க்கைய வாழவே முடியாது என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னாள்.

அருண் அப்புறம் என்ன மயித்துக்குடி என்னைக் காதலிச்ச என்று எரிச்சலோடு கத்தினான். ரம்யா தன்னுடைய இருக்கையைச் சரிசெய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

தமிழ் ஓவியா said...

ஆமா காதலிச்சேன் அதுக்காக, நீ எப்படி இருந்தாலும் கல்லானாலும் காதலன்னு சகிச்சிக்கிட்டு வாழணுமா? இது ஓவர். இனி இதை ஒட்டவைக்க முடியாது ப்ளீஸ் என்று சொல்ல, அருண் கண்கலங்க ஆரம்பித்தான். ப்ளீஸ்மா, என்னால இதுலருந்து வெளிய போகவே முடியாதும்மா, போனா செத்துடு-வேன்மா.. உன்னோட நினைவுகளே என்னைக் கொன்னுடும்மா.. யோசிச்சுப்பாரு நான் எத்தனையோ பொண்ணுங்களக் காதலிச்சிருந்-தாலும் நீ மட்டும்தான் _ நீ ஒருத்தி மட்டும்தான் என் வாழ்க்கையையே மாத்தினவ, அம்மா இல்லாத எனக்கு அரவணைப்பையும் அன்பையும் கொடுத்தது நீதானம்மா என்று பேசும்போதே காலில் விழுந்துவிடுவதற்கும் தயாராயிருந்தான்.

இந்த சென்டிமென்ட் நான்சென்ஸ்லாம் வேண்டாம் அருண்.

ப்ராக்டிக்கலா திங்க் பண்ணிப்பாரு, இது நிச்சயமா சரியா வராது. எனக்கும் இப்படி ஒரு லைஃப் வேண்டாம். நாம பிரண்ட்ஸா இருக்கலாம், அப்பக்கூட என்னால உனக்கு உன்னோட அம்மாவோட அன்பையும், அரவணைப்பையும் முழுமையாத் தரமுடியும். அதுக்கு நான் உன் காதலியாவோ மனைவியாவோ இருக்கணும்னு அவசியமில்லை.

கடைசியா நீ என்னதான் சொல்ற, என்னையும் காதலிப்ப எவன்கூட வேணா போவ, ஆனா நான் கேக்கக் கூடாது, இதுக்கு என்ன பேர் தெரியுமா? அழகாருக்-கோம், சொடுக்குப்போட்டா பசங்க வந்து விழுவாங்கன்ற திமிருடி, ஒரு பாட்டில் ஆசிட் போதும் அழிச்சிருவேன், உன்னை மாதிரிப் பொண்ணுங்களையெல்லாம் ரேப் பண்ணி கொன்னு எரிச்சிடணும்டி என்று மிரட்டும் தொனியில் கடுமையான குரலில் கத்த ஆரம்பித்தான்.

ரம்யா புன்னகைத்தாள். பதிலேதும் பேசாமல் எழுந்து நின்றாள். இப்படியெல்லாம் சொன்னா பயந்துடுவேனு நினைச்சியா அருண், நீ இப்போ பேசின அத்தனையும் என் மொபைல்ல ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். அதை என்னோட கூகிள் ட்ரைவ்க்கும் சேவ் பண்ணிட்டேன். நாலு வருஷம் உள்ள தள்ளிடுவாங்க, தேவையில்லாம இதுமாதிரி மிரட்டற வழிய மறந்துட்டு, எப்படி பிரேமா, திவ்யா இவங்களையெல்லாம் மறந்துட்டு என்னை லவ் பண்ணத் தொடங்கினியோ அதேமாதிரி என்னையும் மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கோ. அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்றாள். அருண் அந்த இடத்திலேயே ரம்யாவைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப்-போகவும் தயாராயிருந்தான். ஏதோ ஒரு அச்சத்தில் அங்கிருந்து உடனே கிளம்பினான்.

தமிழ் ஓவியா said...

வழியெல்லாம் வண்டி ஓட்டும்போது ரம்யாவின் வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அவள் சொல்வதில் உண்மை இருப்பதாகவே அவனுக்குப் புரிந்தது.

காமத்தையும் காதலையும் ஏன் நம்முடைய மனது போட்டுக் குழப்பிக் கொள்கிறது. பெண்கள் ஏன் நமக்குக் கட்டுப்பட்டு நம்முடன் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டியவர்-களாக இருக்கவேண்டும்? அவர்களுக்கு உரிமை இல்லையா என்றெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தான்.

ஆனால் அவனுடைய சிந்தனையை அவன் அதுவரை கற்றுக்கொண்ட கற்பிதங்கள் போட்டு அழுத்தின.

அப்படிப்பட்ட எண்ணங்களை அவசரமாக அழித்தன.

ஆஃப்டர் ஆல் பொம்பளை அவளுக்கே அவ்ளோனா நான் ஆம்பளைடி என்கிற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே-யிருந்தது.

சினிமாவில் வருவதைப்போல அவளைப் பிடித்து இழுத்துவைத்து நாலு அறை விடவேண்டும். அவளிடம் வீராவேசமாக சவால்விட்டுக் காட்டவேண்டும். அல்லது தமிழ் சினிமாவில் வருவதைப்போல தனியாக மலைமேலிருக்கிற பங்களாவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய வேண்டும் என்-றெல்லாம் நினைத்துக்கொண்டே சென்றான். அவளைக் கற்பழிக்க வேண்டும். அவளுடைய யோனியில் கம்பிகளை நுழைத்துக் கிழிக்க வேண்டும் என்றெல்லாம் வெறிகொண்டான்.

இவ்வளவு கேவலமான பெண் உயிரோடே இருக்கக்கூடாது அவளைக் கொல்லத்தான் வேண்டும். எப்படிக் கொல்வது?

கொன்றால் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இவளுக்காக நாம ஏன் ஜெயிலுக்குப் போகணும், அவளுக்குச் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

நேராக அந்த மாபெரும் கடையின் ஆண்களுக்கான உடை பிரிவுக்குச் சென்றான். அங்கேயிருக்கிற உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே ஏற்கெனவே நிறைய ஆபாச வாக்கியங்களும் சில செல்போன் எண்களும் எழுதப்பட்டிருந்தன. தன்னுடைய பேகிலிருந்து பர்மெனென்ட் மார்க்கரை எடுத்தான். அதைச் சுவற்றில் வைத்து ரம்யாவின் எண்ணை எழுத முற்பட, கதவு தட்டும் சப்தம் கேட்டது. ஏய் ஜல்தியா என்று வெளியிலிருந்து குரல்.

அருண் அதிர்ச்சியாகி அதிர்ந்துபோய் திரும்பினான். அவளுடைய எண்ணைக் கரகரவென சொரசொரப்பான அந்தச் சுவற்றில் எழுதினான். மேலே அய்ட்டம் ரம்யா குட் கம்பெனி என எழுதிவைத்தான். அங்கே இதுபோல எண்ணற்ற எண்கள் இருந்தன. அதையெல்லாம் பார்த்தபோது நாட்டில் எத்தனை ரம்யாக்கள் என்று நினைத்து அந்தக் காதலன்களுக்காகவும் வருந்தினான்.

அவளுடைய வாழ்க்கையையே சீரழித்துவிட்ட திருப்தி எழுதி முடிக்கும்போது அருணிடம் இருந்தது. அவமானம் தாங்காமல் ரம்யா தற்கொலை செய்துகொள்ளட்டும். இவளுக்-கெல்லாம் இப்படித்தான் செய்ய வேண்டும். எழுதிவிட்டு வெளியே வந்து அப்படியே பைக்கை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்றான். அங்குள்ள கழிவறையில் எழுதினான். அங்கிருந்து ஒரு திரையரங்க வளாகத்திற்குள் நுழைந்தான்.

அங்குள்ள கழிப்பறையிலும் இதையே எழுதினான். பேருந்துநிலையத்தில், கடற்கரை கழிவறையில் என எங்கெங்கோ அலைந்தான்.

சென்ற இடங்களிலெல்லாம் அவளுடைய எண்ணை எழுதி வைத்தான்.

ஒவ்வொரு முறை எழுதும்போதும் ரம்யாவை விபச்சாரியாகவே மாற்றிவிட்ட திருப்தியுடன் குரூர மகிழ்ச்சியை அவனுடைய உள்ளம் எட்டியது. அன்றைக்கு இரவு நிறையக் குடித்துவிட்டு காற்றில் மிதந்து ஜனசமுத்திரத்தில் கரைந்தான்.

அடுத்த நாள் காலை ரம்யா தன்னுடைய சிம்கார்டைத் தூக்கிக் கழிவறையில் போட்டு தண்ணீரை ஊற்றினாள். ஊற்றும்போதும் புன்னகையோடுதானிருந்தாள்.

தமிழ் ஓவியா said...

ஆதிக் குடியிலிருந்து ஓர் அரு மருத்துவர்!

ஜாதியின் வெற்றிக்கான காரணம் அதன் படிக்கட்டு முறையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். இந்துமதத்தைப் பொருத்தளவில் எந்த இரண்டு ஜாதிகளும் இணையானவையல்ல; எல்லாமே மேல் அல்லது கீழ்தான்.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று என்ற இந்தப் படிக்கட்டு முறையின் காரணமாகத்தான், தனக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அவர்களால் தாம் நசுக்கப்பட்டாலும், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுகிறார்கள்; அவர்களை அடக்கியாளத் துடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் பிற ஜாதிகளையும், அதற்கடுத்த சூத்திரர்கள் (ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் இணைந்தது) தாழ்த்தப்பட்டோராகிய பஞ்சமர்களையும் அடக்கி கொடுமைகளில் ஈடுபட்டாலும், அத்தனை ஜாதிகளுக்கும் கீழாக, தாழ்த்தப்பட்டவரினும், தாழ்த்தப் பட்டவர்களாக இருக்கும் நிலை அருந்ததியர் இன மக்களுக்கு!

காலம் முழுக்க இழிநிலையில் வைக்கப்பட்ட ஆதிக்குடிகளான அம் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீட்டின் பலனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்ற சூழலில் தான் உள் ஒதுக்கீடு என்னும் கோரிக்கை எழுந்தது. போராட்டம் வெடித்தது.

அவசியமான இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல், அதை எதிர்த்தவர்களும் உண்டு. வழக்கு மன்றம் சென்றவர்கள் உண்டு. தெளிவாக விளக்கம் தந்து உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்தது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிலேயே 3 விழுக்காட்டினை உள் ஒதுக்கீடாக வழங்க, அத்தனை தடைகளையும் தாண்டி, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான 2006-2011 திமுக அரசில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உரிய வகையில் சட்டம் வகுக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையில் கிடைத்த இந்த உரிமையின் பலன் ஒன்று இப்போது கனிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் மூலம் படித்து வந்த முதல் மருத்துவராகியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆதித் தமிழர் பேரவையின் பொறுப்பாளராகவும் உள்ள தோழர் சுந்தரம் அவர்களின் மகள் இலக்கியா.

இரண்டாயிரமாண்டுக் கால அடிமைத்தனத்தை, ஒரு நூற்றாண்டுக்குள் கடக்கும் இந்த அளப்பரிய போராட்டத்தின் வித்துகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை நன்றியோடும், அவர்களின் உழைப்பாலும், திராவிட இயக்கத்தாலும் செழித்து வளர்ந்துள்ள சமூகநீதி என்னும் பெருமரத்தை யாராலும் வீழ்த்தமுடியாது என்ற நம்பிக்கையோடும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிறோம். இன்னும் ஏராளமான இலக்கியாக்கள் உருவாகட்டும்! சமத்துவம் ஓங்கட்டும்!

-சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு


தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்குத் தடை ஏன்?



பி.பி.சி. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் இந்தியாவில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்ட இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை இணைய தளத்தில் உலாவந்தபோது பார்க்க நேர்ந்தது.

மருத்துவக் கல்லூரி மாணவியான ஜோதி தன் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு பேருந்து ஒன்றில் வரும்போது நிகழ்ந்த அந்தக் கொடூரமான பாலியல் வன்கொடுமை யார் யாரால் எந்த மாதிரியான சூழ்நிலையில் நடந்தது என்பதனைச் சொல்லும் ஒரு ஆவணப் படம் அது.



பொருளாதாரத்தில் நடுநிலையில் உள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த ஜோதியின் விருப்பத்தினை நிறைவேற்றத் துணிந்த அவள் தந்தை தன்னிடம் இருந்த சிறிய பங்கு நிலத்தினை சகோதரர்களின் அறிவுரையையும் மீறி விற்று மருத்துவப் படிப்பில் சேர்க்கிறார்.

அந்தப் பணமும் போதாது என்ற நிலையில் இரவில் (இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) கால்சென்டரில் வேலைக்குச் சென்று தனது மருத்துவப் படிப்பை முடித்தார் ஜோதி. அடுத்த நாளிலிருந்து Internship என்று சொல்லக்கூடிய பயிற்சி மருத்துவராகச் செல்லவேண்டிய நிலையில் இருந்த ஜோதியை, தன் கிராமத்தில் மருத்துவமனை நிறுவி உதவிபுரிய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கினை தன்னிடத்தில் கொண்டிருந்த ஜோதியை, ஒருமுறை கடைவீதியொன்றில் தன்னிடம் இருந்த பணப்பையை திருடிச் சென்ற சிறுவனை, காவலர் ஒருவர் பிடித்து அடித்தபோது அவனை அவரிடமிருந்து விடுவித்து அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து இனிமேல் இந்த மாதிரி திருட்டு வேலைகளைச் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி அவன் தேவைகளை நிறை-வேற்றியதாக அவருடைய நண்பரால் புகழப்படும் ஜோதியைத்தான் பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்ற உண்மையைக் காட்டுகிறது பி.பி.சி.

தமிழ் ஓவியா said...


இந்(திய)துச் சமூகம் பெண்களை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்காது. அப்படிச் செல்லும் இன்றைய பெண்கள் சினிமாக் கலாச்சாரத்தினைப் பின்பற்றுகிறார்கள்.

என் பெண் இப்படி வெளியில் சென்றால் நான் என் உறவினர்கள், சமூகத்தினர் முன்னிலையில் என் பெண்ணை எரித்து விடுவேன் என்று ஒரு வழக்குரைஞர் சொல்கிறார். பெண்கள் பூ போன்றவர்கள் அழகு, மென்மை உடைய இவர்கள் வீட்டில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கோவிலில் வைக்கப்பட்ட மலர்போல் பூஜிக்கப்படுவார்கள், தெருவிற்கு வந்தால் மிதித்து நாசம் செய்யப்படுவார்கள் என்றும், வைரம் போன்றவர்கள் வீட்டிற்குள் இருந்தால் மதிக்கப்படுவார்கள். வெளியே கிடந்தால் நாய்கள் தூக்கித்தான் செல்லும் என்றும் இன்னொரு வழக்குரைஞர் சொல்கிறார். கொஞ்சம்கூட வெட்கமோ குற்ற உணர்ச்சியோ இன்றி மிக்க பெருமையுடன், இங்கு இருபது சதவீதம் பெண்களே நல்லவர்கள். இதற்கு (பாலியல் வன்கொடுமைக்கு) அந்தப் பெண்ணே முழுக் காரணம் என்று இவ்வழக்கில் குற்றம் புரிந்த ஒருவர் கூறுகிறார். இவையெல்லாம் இந்த ஆவணப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறாள் என்ற புள்ளி விவரம் அனைத்து நாடுகளும் அறிந்த ஒன்றுதான். இதுபோன்று இந்தியாவின் பல இடங்களில் குழு வன்புணர்வுக் குற்றங்கள் நடைபெற்றிருந்தாலும் நாட்டின் தலைநகரமான டெல்லியில் நடைபெற்றதால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தெரிந்து, நாறிப்-போன நிகழ்ச்சியாகி விட்டது என்பது நமக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் எதற்காக இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது?

தடை ஏன்?

ஒரு பெண்ணின் குடல் பகுதியின் ஒரு துண்டு, பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் அளவிற்கு குழுவாக வன்புணர்வு செய்யும் மிருகத்தனமான வலிமையுள்ள இளைஞர்-களைக் கொண்டது எங்கள் பாரதம் என்பதை மற்ற நாடுகளில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளக் கூடும் என்பதனாலா? மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படிக்கும் அளவிற்கு பெண்களுக்கு வாய்ப்பளித்தாலும் அவளை பாலுறவுப் பண்டமாகவே பார்க்கும் உயர்ந்த நோக்கினை மற்ற நாடுகளும் பின்பற்றினால் வல்லரசாக மாற நடக்கும் போட்டியில் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்ற நோக்கிலா?

தமிழ் ஓவியா said...

எங்கள் நாட்டில் வழங்கப்படும் கல்வி வருமானத்தைப் பெறுவதற்காக மட்டுமே _ மற்ற மனிதர்களை மதிக்கும் நோக்கில் அல்ல; குறிப்பாக பெண்களை! கல்வியறிவு பெற்றவர், பெறாதவர், உயர்பதவிகளில் இருப்பவர், உயர் பொறுப்புகளில் உள்ளவர் என்று யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றிய பார்வையில் _ உடல், நிறம், உடை போன்ற கருத்துகளில் ஒரே மாதிரிதான் சிந்திப்போம் என்பதனை குற்றம் செய்தவன் என்று நீதிமன்றத்தால் காட்டப்பட்டு சிறையில் இருப்பவன் கூறுவது மட்டுமல்லாமல், வழக்குரைஞராகப் பணியாற்றும் இருவரும் அதே முறையில் கூறுவதை மற்ற நாட்டவர் மட்டும் அல்லாது இங்கு உள்ள கொஞ்சம் உணர்ச்சி உள்ள பெண்கள் சிலரும் உணர்ந்துவிட்டால் இவர்கள் கட்டிக்காக்க நினைக்கும் பாரதப் பண்பாட்டுப் பெருமை சிதைந்துவிடும் என்ற காரணத்தாலா?

பதினாறு வயதுள்ள ஓர் ஆண் இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டபோது, சட்டப்படி அவன் ஒரு சிறுவன். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை சிறுவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற வாதம் சிலரால் எழுப்பப்பட்டது. 12, 13 வயதில் சட்டப்படி (இந்து தர்மப்படி வடநாட்டில் இன்னும் குறைந்த வயதுத் திருமணங்கள் நடக்கின்றன) திருமணம் நடத்தப்படுகிறதே, அது சரி என்றால் 15-_16 வயதுடைய பையன் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு அல்லது துன்புறுத்தியதற்கு ஏன் தண்டிக்கப்படக் கூடாது? என்று ஜோதியின் தாய் எழுப்பும் கேள்வி இந்து தர்மத்தின்மீது கேட்கப்படும் கேள்வி என்பதாலா?

இவர்கள் கூறுவது போல ஒழுக்கமுள்ள பெண் இரவில் ஆண் நண்பருடன் தனியாக(!) வரமாட்டாள்.

ஆண் நண்பருடன் சென்றதுதான் காரணம் என்றால் ஒருவேளை கூடச் சென்றவர் ஆண் நண்பர் இல்லை; அவர் அப்பெண்ணின் மாமா, சகோதரர், கணவர், தாத்தா என்பதற்கு சான்றிதழ் அளித்து-விட்டால் இத்தகைய கொடுமைகள் நிகழ்த்தப்படாதா? எத்தனையோ பெண்களின் கணவன், தாத்தா, சகோதரனை அடித்துப் போட்டுவிட்டு அவர்களின் கண் எதிரே பாலியல் சித்திரவதைக்கு ஆளாவதில்லையா?

இவர்கள் கூறும் உறவினர்கள் எனப் படுபவர்களாலேயே வீட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்-படுவதில்லையா? போன்ற வினாக்கள் எழும் என்பதனாலா?

ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த வேண்டும் என்றால், அவளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற கலாச்சாரம் அங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கெப்லெ கல்லூரியின் வரலாற்றாளரும், எழுத்தாளரு-மான முனைவர் மரியா மிஸ்ரா எடுத்துரைக்கிறார். ஓர் ஆணை அடிப்பதில்லையா அப்படித்தான் இதுவும் என்கிறார் குற்றவாளிகளின் வழக்குரைஞர். இது தான் இந்திய மனநிலை. இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் வன்கொமைக்கு உள்ளாக்கப்படுவதையும் இதனோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பெயர் வெளியே தெரியவேண்டாம் என்பதற்காக நிர்பயா என்று பரவலாக அழைக்கப்பட்ட ஜோதி சிங் பாண்டே மீதான கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கும், கொலைக்கும் காரணம் அந்த அறுவர் மட்டும் தான் என்று இந்த ஆவணப்படம் குற்றம் சாட்டவில்லை; மாறாக, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீதும், பண்பாடு - பழக்கவழக்கம் - ஒழுக்க நெறிமுறைகள் மீதும் கேள்வி-யெழுப்புகிறது. (அதைத் தான் & அதனால் தான் இப்படம் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசுவதாகப் பலர் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.) அந்த அறுவரின் பின்னாலும் ஒளிந்திருக்கும் இந்திய சமூகத்தை, அவர்களுக்கு இந்த மனநிலையைத் தந்த பண்பாட்டு வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது என்பதுதான் இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்வதைப் போலத்தான் அது. இந்தப் படத்தின் மீதான தடையெல்லாம் நடப்பிலும், வருங்காலத்திலும் நிகழும், நிகழவிருக்கும் பாலியல் கொடுமைகளைத் தடுக்க எள்ளளவும் பயன்படாது. இந்த ஆவணப்படம் சுட்டிக் காட்டும் இந்து - சனாதன தரும - மனுதர்ம _ ஆணாதிக்க _ இந்திய மனநிலையை மாற்றும்வரை எந்த மாற்றமும் நிகழாது.

- இறைவி

தமிழ் ஓவியா said...

இந்து ராஜ்யம் என்ற ஒன்று அமைந்தால் அது பெரும்சோகமாக முடியும் அம்பேத்கரின் கணிப்பு

இந்துத்வ கொடுங்கோன்மை ஆட்சிக்கான வித்து தேர்தல் என்னும் அமைப்பு முறையின் வழியாக மத்தியில் நிறுவப்பட்டிருக்கிற நிலையில், அம்பேத்கரை இன்னும் ஆழமாகக் கற்றுணர்வதும், அவரைக் காவிகளுக்கெதிரான கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்தவல்ல அறிவாற்றல் கொண்டவர்களாக மாற வேண்டியதும் நம் கடமையாகிறது. அதற்கு அம்பேத்கரைப் புரிந்து கொள்வது மிகவும் அடிப்படைத் தேவை. ஆனால், அம்பேத்கரை ஜாதியாகப் பார்க்கும் மனோபாவத்தால் அம்பேத்கர் என்றாலே பலருக்கும் இந்தியாவில் ஒவ்வாமை, சிலருக்குக் கடவுள், சிலருக்குப் புரட்சியாளர், சிலருக்கு ஜாதித் தலைவர், சிலருக்கு அவர் மராத்தியர், தமிழ்த்தேசிய மணியரசன்களுக்கு இந்துக் கலாச்சாரவாதி. உண்மையில் அம்பேத்கர் யார்?

நாம் இதில் குறிப்பாக தமிழ்த்தேசியத்தின் பெயரால் அண்ணல் அம்பேத்கர் மீது மணியரசன் வகையறாக்கள் அள்ளி வீசும் அவதூற்றை எதிர்கொள்வதோடு, சமகாலத்தில் நாம் சந்திக்கும் இந்துத்வ பெரும்பான்மை-வாதத்தைச் சந்திப்பது தொடர்பாக அம்பேத்கர் முன்வைக்கும் உத்தியைப் புரிந்து கொள்ள முயலலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

பௌத்தம் இந்திய மதமென்பதால் மதமாற்றத்திற்கு அதைத் தேர்வு செய்தார் என்பதும், இந்தியத் தன்மையையும் திணிக்கும் முயற்சி அது என்னும் அவதூறு குறித்து...

அண்ணல் அம்பேத்கர் மதமாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அதற்கு முன்னரும், பின்னரும் சனாதன இந்து மதத்தை மிகக்கடுமையாகச் சாடினார். அதை எதிர்கொள்ளத் துணி-வில்லாமல் இன்றைய இந்துத்வவாதிகள் போலவே, இஸ்லாத்தை விமர்சிக்கும் துணிச்சல் இருக்கிறதா? கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் துணிச்சல் இருக்கிறதா? என்று என் ஏரியாவுக்கு வா, என் வீட்டுப் பக்கம் வந்து பார் வகையிலான வடிவேலு பாணியிலேயே அண்ணல் அம்பேத்கரை நோக்கி சாவர்க்கர் சவடால் அடிக்கிறார்.

கூடவே, மணியரசன் போலவே, இந்துத்வ எல்லையை அம்பேத்கரால் மீற முடியவில்லை என்று சமாதானப்பட்டுக் கொண்டு, தொடக்கத்திலிருந்தே, இப்படியான மதமாற்றம் போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் குறித்து, நாம் மீண்டும் குருட்டுத்தனமாக தவறுகள் செய்யாதிருக்கும்படிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதை ஒரு பேரிடராகக் கருதி எதிர்க்க வேண்டும். வெளிநாட்டில் ஊக்குவிக்கப்படும் அரசியல்வாதி இங்கே வந்து, புத்தனைத் தோண்டி எடுத்து, அம்பேத்கர் அவன் பாதத்திலிருந்து வளர்த்-தெடுப்பதைக் குறித்து நாம் மத மற்றும் தேசியக் கண்ணோட்டத்தோடு தீர்க்கமாக ஆராய வேண்டும். அந்நியப் படையெடுப்பாளர்களோடு ஒரு கூட்டு நடவடிக்கையாகச் சேர்ந்து கொண்டு இந்திய நாட்டுக்கு இந்த பௌத்த ஆட்சியாளர்கள் துரோகம் செய்தார்கள். புத்தனின் வரலாற்றை மீளாய்வு செய்ய வேண்டும். பரிசோதனைக்கு அப்பாற்பட்டு இது நஞ்சுதான், அதை விழுங்காமல் இருப்பதே சிறந்தது. (சாவர்க்கர்-1956)

தமிழ் ஓவியா said...

இந்துத்வ பிதாமகர் என்று இன்றளவும் மோடி கும்பலால் போற்றப்படும் சாவர்க்கர் அம்பேத்கரின் முடிவை நஞ்சென்கிறார். ஆனால், தனஞ்செய் கீர் என்னும் நபர் அண்ணல் அம்பேத்கரின் வரலாறு என்னும் பெயரில் தேவையே இல்லாது அண்ணல் அம்பேத்கரை நூலெங்கும் சாவர்க்கரோடு ஒப்பிட்டு எழுதிய ஒரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை அதுவும் 1936இல் நடந்த சந்திப்பை வைத்து மணியரசன் ஜாதிய இந்து மனநிலையிலிருக்கும் தமிழ்த்தேசிய இளைஞர்களிடம் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்கிறார். 1938ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கண்டேஷ் மாவட்டத்தில் அம்பேத்கர் முதன்மைப் பேச்சாளராகக் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று இந்து மகாசபை, காங்கிரஸ், ஆரிய சமாஜம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியது. அண்ணல் அம்பேத்கர் இந்து மகாசபை உள்ளிட்ட இந்துத்வ கோஷ்டிகளின் இந்துத்வ முழக்கத்தைக் குறித்து இந்துஸ்தான் இந்துக்களுக்கே என்று இந்து மகாசபைத் தலைவர் முன்வைத்த கோஷம் தான்தோன்றித்தனமானது மட்டுமல்ல, பெரும் கேடு விளைவிக்கும் அறிவீனமான கோஷமாகும். அதேபோல, 1935 அக்டோபர் 13 அன்று அண்ணல் அம்பேத்கர் யோலா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன் என்று முழங்கியதையும், பின்னர் 10 லட்சம் மக்களோடு இணைந்து இந்து மதத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை மேற்கொண்டதையும், அதன் பொருட்டுதான் சாவர்க்கர் போன்ற இந்துத்வ ஆசான்கள் கொதித்திருப்பதையும் லாவகமாக மறைக்கிறார். கேட்டால் திறனாய்வு செய்கிறாராம். திறனாய்வுக்கு உட்படுத்தாது கொண்டாடும் தலைவர்களைக் கொண்டிருப்-பதும், அவர்களின் புகழைத் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருப்பதையும் குறித்து அவருடைய கட்சியிலிருந்து கலகக் குரல் எழுப்ப ஒருவருமா இல்லை?

தமிழ் ஓவியா said...

இப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள் சாவர்க்கர், அருண்ஷோரி, தாக்கரே வகையறாக்களை வைத்து அம்பேத்கரை அவதூறாகப் பேசிவிட்டு, அம்பேத்கரைத் தங்களது வந்தனப் பாடலில் சேர்த்துள்ளது ஆர்.எஸ்.எஸ். ஆனால், அம்பேத்கர் வலியுறுத்தியது இந்து பண்பாடுதான் என்கிறார் மணியரசன். அது இந்து பண்பாடாக இருந்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தை அங்கீகரிக்கிறாராம். இந்த அங்கீகாரத் தெனாவட்டுதான் இந்துத் தன்மை என்பதே நமது குற்றச்சாட்டு. அடுத்து அம்பேத்கரியத்தில் பொதிந்திருப்பது இந்திய ஏகாதிபத்திய ஆதரவு கருத்துகள், அதன் தொடர்ச்சிதான் தலித்தியம் என்பது...

அண்ணல் அம்பேத்கர் இந்தியாவை ஒற்றை நாடாகக் கருதினார் என்பதே பெரும் மோசடி. அண்ணல் அம்பேத்கர் இந்தியாவை எப்படி ஒரு நாடாகக் கருதவில்லையோ, அப்படியே தேசிய இனம் என்று கருதத்தக்க தகுதியோடு இன்றுவரை இந்தியாவில் ஒற்றை தேசிய இனம் இல்லை என்பது என் கருத்து. இது சர்ச்சைக்குள்ளாகலாம். விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், அதுதான் உண்மை. அம்பேத்கரின் மொழியில் சொல்வதானால், இங்கே ஒவ்வொரு ஜாதியும், ஒரு தேசமாக இருக்கிறது. நாம் என்ற உணர்வு இங்கே தம்பட்டம் அடிக்கும் தேசிய இனங்களில் இல்லை. காஷ்மீரிலோ, வடகிழக்கு மாநிலங்களிலோ இராணுவத்தின் அச்சுறுத்தலின் காரணமாக ஒற்றை உணர்வு இருக்கலாமேயொழிய, மற்றபடி ஜாதி குறிப்பிடத்தக்க பாத்திரம் வகிக்கும் இந்தச் சமூகத்தில் தேசிய இன வாய்ச்சவடால் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். அம்பேத்கர் கூறுகிறார் கேளுங்கள்:
நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது... அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சினை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை. ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்.'' (டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுப்பு 13, பக்கம்: 1217).

ஆனாலும், அண்ணல் அம்பேத்கர் இந்திய தேசிய மயக்கத்தில் இருந்தார் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முனைவதன் மூலம், தமிழ்த்தேசிய மயக்க ஊசியை சேரியில் பரவலாக்கி, இன்றளவும் சேரிகளின் கடவுச்சீட்டாக இருக்கக் கூடிய அண்ணல் அம்பேத்கரை களநீக்கம் செய்ய முனைகிறார் என்ற சந்தேகம்தான் ஆழமாக எழுகிறது. இந்த சந்தேகம் மேலும் வலுக்கக் காரணம் இன்றைய தலித் அரசியலோடு அம்பேத்கரின் கண்ணோட்டத்தை இணைத்திருப்பது. தலித் அரசியல் அடிப்படையிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டது, அதுதான் ஜாதியத்தை வீழ்த்த வல்லது என்ற நம்பிக்கையில் நானில்லை என்றாலும், அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழுந்த தீண்டப்படாத மக்களின் எழுச்சியை ஆளும் வர்க்கம் தலித் அரசியல் என்னும் சிமிழுக்குள் அடைக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தமிழ் ஓவியா said...

ஆனால், இதற்கும் அம்பேத்கரின் சிந்தனைக்கும் என்ன தொடர்பு? தொடர்பே இல்லையென்றாலும், தொடர்பிருப்பதாகத் திரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. எடுத்துக்காட்டுக்கு, அண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய தலித் கட்சி ஒன்று பா.ஜ.க. கும்பலின் மக்கள் விரோத சீர்திருத்தங்களை ஆதரித்து நிற்கிறது. ஆனால், அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதான இரண்டு எதிரிகளில் ஒன்றாக முதலாளித்துவத்தை அடையாளம் காட்டினார். ஆனாலும், தொடர்புபடுத்தும் அவசியம் வருவதற்கு காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமானதல்ல. சொந்தச் சகோதரர்களை வதைத்துக் கொண்டு, சேரியில் முடக்கிவைத்துக் கொண்டு விடுதலை கோருவதற்கு 1947க்கு முந்தைய தேசிய-வாதிகளுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேட்டார்.

அந்த அலைவரிசைக்கு வெகு அருகில் நின்று கொண்டு ஜாதியத்தின் விளைநிலமாக இருந்து கொண்டு தேசிய விடுதலை கோருவதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கேட்பது அவர்களுக்குக் குத்துது, குடையுது. அதனால், இந்தக் கேள்வியே ஏகாதிபத்திய சதித்தன்மை கொண்ட தன்மை கொண்டது என்று அவதூறு பரப்புவதன் மூலம், அந்தக் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மணியரசன் வகையறாக்கள் நினைக்கிறார்கள். தேசியத்தைக் கருவிலேயே சிதைக்கும் ஜாதியத் தீச்சட்டியின் மீது அமர்ந்து கொண்டு தேசிய விடுதலை அடைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதால், பின்விளைவுகளையே அவர்கள் சந்தித்துத் தொலைவார்கள். அவர்களை நாம் விட்டுத் தொலைத்துவிட்டு, அம்பேத்கரை மணியரசனின் இந்திய உறவான இந்துத்வக் கும்பல் அம்பேத்கரைத் திரிப்பதைக் குறித்து கொஞ்சம் அலசி உண்மை அறிய முனைவோம்.

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தார், இந்திய தேசியவாதத்தின் ஆதரவாக இருந்தார். ஆகவே, இந்து ராஜ்யத்திற்கு ஆதரவாக இருந்தார் என்பது போன்ற பரப்புரைகளை எப்படி எதிர்கொள்வது?

அதை அறிந்து கொள்வதற்கு, அம்பேத்கர் இந்திய இஸ்லாமியர்கள் குறித்து என்ன கண்ணோட்டம் கொண்டிருந்தார் என்பது மிக, மிக அவசியமானது. பிற நாடுகளில் இஸ்லாமியர்களிடையே நடந்த சீர்திருத்தங்களை அங்கீகரிக்கும் அம்பேத்கர், இந்தியாவில் அப்படி நடக்காமல் இருப்பதைக் குறித்துப் பேசும்போது மிகுந்த கருணையோடும், அக்கறையோடும்தான் அணுகுகிறார். இந்துக்கள் மிகப்பெரும்பான்மையாக இருக்கும் சமூகச் சூழலில் வசித்து வரும் சூழலில் இஸ்லாமியர்கள் மீது எப்போதும் இச்சூழல் ஆக்கிரமிப்பு நிகழ்த்தி வருகிறது. அது தன்னை இஸ்லாமியனல்லாதவனாக மாற்ற முயற்சி செய்து வருகிறது என்று இஸ்லாமியர்கள் அச்சம் கொள்கிறார்கள். இந்துக்கள் படிப்படியாக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவன் தீவிரமாக முனைகிறான்; இஸ்லாம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பேணிப் பாதுகாக்கும் உணர்வை அது அவனுக்கு ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தாங்கள் ஒடுக்கப்படுவோம் என்று இஸ்லாமியர்கள் அஞ்சுகிறார்கள்.- (தொகுதி 15, பக்கம் 338, 339)

இன்று இஸ்லாமியர்கள் கொள்ளும் அச்சத்தின் வேரை, அவர்கள் மூடுண்ட சமூகமாக இருக்கும் வேரை எவ்வளவு கச்சிதமாகக் குறிவைத்து கண்டறிகிறார் பாருங்கள். இதே கண்ணோட்டத்தோடுதான் இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்றைவிட, மதப்பற்றுதான் பிரதானம் என்று கூறுகிறார். இதை இஸ்லாமியர்களே மறுக்க மாட்டார்கள். இதன் பொருள் தான் வாழும் பிரதேசத்தை ஏகாதிபத்திய நலன்களுக்காக, மதப் பற்றிற்காக விட்டுக் கொடுப்பார்கள் என்பது கிடையாது. ஆனால், அம்பேத்கர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார் என்று அவருடைய சொற்களுக்குப் பொருளேற்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்துத்வ வெறியேற்ற முனைகிறது இந்துத்வ கும்பல்.

இன்னும், சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நண்பர்களாக இருக்க முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதாக பரப்புரை செய்வதோடு, தங்கள் காலாட்படையாக மதக்கலவரங்களில் பயன்படுத்துகிறார்கள். பதவியின் பொருட்டு, இந்தக் காலாட்படையின் தலைமை முகவர்களாக, ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அதாவ்லே போன்ற தலித் கட்சிகளின் தலைவர்கள் இருப்பதுவும் சமகாலச் சான்று.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் நண்பர்களாக ஆக முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் கருதினாரா? அண்ணல் அம்பேத்கரைத் திரிக்கப் பயன்-படுத்தும் பாகிஸ்தான் தொடர்பான நூல் தொகுதி 15இன் இறுதியில் அண்ணல் அம்பேத்கர் என்ன கூறுகிறார் என்பதனைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

இந்து சமுதாயத்தில் பல கீழ்மட்டப் பிரிவுகள் உள்ளன. அவர்களுடைய பொருளாதார அரசியல், சமூகத் தேவைகள் பெரும்பாலான முஸ்லீம்களின் தேவைகளைப் போன்றவையேயாகும். பல நூற்றாண்டுகளாக தங்களுக்குச் சாதாரண மனித உரிமைகளை மறுத்தும், பறித்தும் வந்த உயர்ஜாதி இந்துக்களுடன் இணங்கிப் போவதைவிட பொதுவான இலக்குகளை எய்துவதற்காக முஸ்லீம்களுடன் ஒரு பொதுவான லட்சியத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள். இத்தகைய ஒரு போக்கைப் பின்பற்றுவதை அபாயகரமான செயல் என்று கருத முடியாது. இப்பாதை நன்று பழகிய பாதைதான். பெரும்பாலான மாநிலங்களில் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் முஸ்லீம்களும் பிரமாணர் அல்லாதோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒன்றாக இணைந்து 1920 முதல் 1937 வரை ஒரே குழுவின் உறுப்பினர்களைப் போன்று சீர்திருத்தங்-களுக்காகப் பாடுபட்டது உண்மை-யில்லையா? என்று கேட்டுவிட்டு, கூடுதலாக ஒரு விசயத்தைக் குறிப்பிடுகிறார்.

அது என்னவென்றால், முஸ்லீம்களுக்கென்று தனிக்கட்சி அமைப்பதைத் தவிர்த்துவிட்டு, இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்த ஒரு கட்சியை உருவாக்குவதுதான் இந்து ராஜ்யம் என்ற ஒரு பூதத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்கான, ஒரு பயனுறுதியுள்ள வழியாகும் என்கிறார்.

கூடவே, தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு உழைக்கும் மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி இந்து ராஜ்யம் நிஜமாகும் பட்சத்தில் அது இந்த நாட்டில் மிகப்பெரிய சோகமாக அமையும் என்பதில் அய்யமில்லை. இந்துக்கள் என்ன சொன்னாலும், இந்து மதம் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு ஒரு பேரிடராகவே இருக்கும். இந்த விசயத்தில் அது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. இந்து ராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டும்.

- மகிழ்நன்

தமிழ் ஓவியா said...

கூவி அழைத்த வண்டிக்காரர்களும் தடைக்கற்கள் தகர்த்த தளகர்த்தர்களும்


நண்பர் ஒருவர் சென்னைக்குச் செல்ல வாடகைக் கார் ஒன்றை ஏற்பாடு செய்து தரச்சொல்லிக் கேட்டார். அவரை அழைத்துக் கொண்டு திண்டிவனம் டாக்சி ஸ்டாண்டு போனேன்.

நான் வர்றேன், நான் வர்றேன் நான் வர்றேன் என்று ஒரே போட்டி. மனதுக்குள் இன்றைய நிலைமையையும் அன்றைய நிலைமையையும், இன்றைய நிலைமை வருவதற்குக் காரணமானவர்களையும் நினைத்துப் பார்த்தேன்.

பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் அண்ணல் அம்பேத்கரை சிறுவயதில் மாட்டு வண்டிக்காரன் குடைசாய்த்துக் குப்புறத்தள்ளி விழ வைத்ததை நினைத்துப் பார்த்தேன்.

பிரசவ வலியால் துடித்த அருந்ததி இனப் பெண்ணை கலெக்டர் ஆஷ்துரை தன் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அக்ரகாரம் வழியே செல்ல முற்பட்ட போது வண்டி தடுக்கப்பட்டதையும் ஆஷ்துரையின் சாட்டை சுழன்றதையும் நினைத்துப் பார்த்தேன்.

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

சௌதார் பொதுக்குளத்தில் ஜாதிவெறியர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நீர் அருத்த பொதுமக்களோடு சென்ற போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

அப்பப்பா... எத்தனைத் தடைகற்களைக் கடந்து வந்திருக்கிறோம்!

நான் வர்றேன் என்று கூவிய ஓட்டுநர்கள் எல்லாம் வெவ்வேறு ஜாதியினராக இருந்தும் எங்கும் எவரையும் அழைத்துச் செல்லத் தயாராக இருந்தனர்.

இந்த நிலைமைக்குக் காரணமான மகத்தான மாமனிதர்களையும், அவர்களின் போராட்டங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

- முகநூலில் யுவான்சுவாங்

தமிழ் ஓவியா said...

திராவிடம் என்பது பொய்யா?


"நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது 'தமிதா' என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் 'தமில்லா' ஆகி முடிவில் 'திராவிடா' என்று உருத்திரிந்தது. 'திராவிடா' என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது.

அதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று.

தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது பண்பாட்டுப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.

தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான்; அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்.

- டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7, பக்கம்: 300

தமிழ் ஓவியா said...

நானே எழுதினேன்... நானே கொளுத்துவேன்!

- சு.அறிவுக்கரசு

புத்தியை வளர்த்துக் கொள்வதற்குப் பதில் பக்தியை வளர்க்கும் தீண்டத்தகாத மக்களைப் பார்த்துச் சொன்னார், உங்கள் கழுத்தில் சூட்டிக் கொண்டுள்ள துளசிமாலை வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றாது. ராம நாம பஜனை பாடுவதாலேயே உங்கள் வீட்டுச் சொந்தக்காரர் வாடகையைக் குறைக்க மாட்டார். பண்டரிபுரக் கோவிலுக்குப் போய் வருவதாலேயே உங்களுக்கு மாதக் கடைசியில் சம்பளம் கொடுக்க-மாட்டார்கள்.


தமிழ் ஓவியா said...


சமுதாயத்தின் பெரும்பகுதி மக்கள் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பதால், குதர்க்கமான சுயநலங் கொண்டவர்கள் இவர்களை ஏமாற்றித் தங்களின் சமூக விரோதச் செயல்களை அரங்கேற்றிக் கொள்கிறார்கள். எனவே, உங்களுக்கு நான் சொல்வதெல்லாம், சிறிதளவு அரசியல் அதிகாரம் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற முயல வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் துன்பங்களும், துயரங்களும் உங்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சக்திகள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும் என்ற அறிவுரை எத்தனைபேர் காதுகளில் தைத்து மனதில் மாற்றத்தை, விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

வரைவுக்குழு முழு சுயேச்சை பெற்ற அமைப்பாக இல்லை. தொடக்கத்திலிருந்தே பல வகைகளில் எங்கள் பணிக்கு ஊனங்கள் உருவாக்கப்பட்டன. அவர்கள் சில வரையறைகளை எங்களுக்குக் கொடுத்து அதன் நான்கு மூலைகளுக்குள் அடங்குமாறு அரசமைப்புச் சட்டத்தை எழுதித் தருமாறு சொன்னார்கள். வரைவுக் குழுவில் 7 பேர், அரசியல் நிர்ணய சபையில் 308 பேர்கள் வரைவுக்குழுவுக்கு மேல் அதிகாரம் பெற்ற சக்திகள் இருந்தன. அவற்றிற்குத் தக்காற்போல வரைவுக்குழு செயலாற்ற வேண்டி நேரிட்டது. வரைவு அரசமைப்புச் சட்டம் ஏழு முறைகளுக்குமேல் அடித்து, மாற்றி எழுதப்பட்டது. அரசாங்க அமைச்சரவையைச் சேர்ந்தவர்களும் காங்கிரசு பார்லிமெண்டரிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் சொன்ன மாதிரியெல்லாம் எழுத வேண்டி நேரிட்டது; அவர்கள்தானே அரசமைப்புச் சட்டத்தை சபை அங்கீகரிப்பதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் பெற்றவர்கள்? அவர்கள் சொன்னதையெல்லாம் சட்டப்பூர்வ வார்த்தைகளில் எழுதும் பணி வரைவுக் குழுவுடையதாகிவிட்டது.

* * *

தமிழ் ஓவியா said...


2.9.1953இல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது அரசமைப்புச் சட்டத்தின் குறைகளுக்குக் காரணம் அம்பேத்கர்தான் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவ்விவாதத்தின் முடிவில் டாக்டர் அம்பேத்கர் பிரகடனப்படுத்தினார். அய்யா, நான்தான் அரசமைப்புச் சட்டத்தை எழுதினேன் என என் நண்பர்கள் சொல்கின்றனர்; ஆனால் நான் கூற விரும்புகிறேன், அதைக் கொளுத்தும் முதல் ஆளாகவும் நானே இருப்பேன். எனக்கு அச்சட்டம் வேண்டாம். அது யாருக்குமே பொருந்துவதாக இல்லை

SIR, MY FRIENDS TELL ME THAT I HAVE MADE THE CONSTITUTION. BUT I AM QUITE PREPARED TO SAY THAT I SHALL BE THE FIRST PERSON TO BURN IT OUT. I DO NOT WANT IT; IT DOES NOT SUIT ANYBODY...”)

நேர்மையானவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசமைப்புச் சட்டம் தவறாகப் பயன்-படுத்தப்பட மாட்டாது. நேர்மையற்றவர்கள் ஆண்டால்...? அவரே மிகக் குறுகிய காலத்தில் பார்த்துவிட்டார், பார்ப்பன பனியா கூட்டாட்சியால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் ஒரு நன்மையையும் பெற முடியாது என்பதும் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற முடியாது என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்து சீர்திருத்தச் சட்ட முன்வரைவு (HINDU REFORM BILL) பண்டித நேரு, பாபு ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப பந்த் ஆகியோரால் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட்டது என்ற விஷயமும் அவரது கருத்தை உறுதி செய்தன.

* * *

பதினான்காம் பிள்ளையாக அவர் பிறந்தார் என்றாலும் பாதிக்கு மேற்பட்ட பிள்ளைகளை அவர் தந்தை பறிகொடுத்தார் என்பதற்குக் காரணம் வறுமைதான். இவரும் தமக்குப் பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் வளர்க்க வசதியற்று இருந்ததால்தான், இறப்புக்கு ஆளாக நேரிட்டது. அத்தகைய கொடுமையான வறுமைச் சூழலிலும், வளமாக வாழ்ந்திட எண்ணினாரில்லை. தாம் படித்த படிப்புக்குப் பெரும் பெரும் பதவிகள் அவரை அடைந்திடும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் அவர் அதனை விரும்பவில்லை, நாடிப் போகவும் இல்லை. மாறாக, தாம் எழுந்த சமுதாயத்தின் மேன்மைக்காக உழைப்பதையே கடமையாகக் கொண்டார்.

வறுமையோடு வாழ்ந்த நிலையில் கார்ல் மார்க்சின் வாழ்க்கையோடு ஒப்பிடக் கூடியவாறு வாழ்ந்தவர் அம்பேத்கர். தம் குழந்தைகளை வறுமைக்கு வாரிக் கொடுத்தவர்கள் இருவருமே! அதிலும் அம்பேத்கரின் நிலை சற்றுக் கூடுதல். மார்க்சுக்கு உதவிட மனமும், பொருளும் படைத்த எங்கல்ஸ் கிடைத்திருந்தார். இவருக்கு யாரும் இல்லை. ஆனாலும் அவர் வளமையை நாடி ஓடிப் போகவில்லை.

இங்கே, எவ்வளவு பேர் அவரால் உயர்ந்தார்கள். எவ்வளவு பேர் அதிகாரம், அந்தஸ்து பெற்றார்கள்! அத்தனை பேரும் சமுதாயத்திற்குச் செய்தது என்ன? தன் பெண்டு, பிள்ளை, சம்பாத்தியம், தானுண்டு என்கிற வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தானே! ஆட்சி அதிகாரிகளாக வந்தவர்கள்கூட, பிரதிலோம விவாகம் (புறமணம்) செய்து கொண்டு அவாள் ஆகிப்போய்த் தொலைந்தவர்கள்தானே!

நூல்: அம்பேத்கர் வாழ்வும் பாடமும்

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!

உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து...

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஊன்றிப் படிக்க : உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஆசை

இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.

மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.

பூசை

இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.

பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?

பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.

நாடகம்

இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று. நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்தி வினைத்தொகை நிலைத்தொடர் என்பர் தொல்காப்பியர்.

இனி அகம் என்ற சொல்லுக்கு
அகம், மனம், மனையே, பாவம்
அகவிடம் உள்ளும் ஆமே

என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு புகலிடம் என்று பொருள் கொண்டு (மன) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக் கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம். அதாவது மெய் எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை எனப் பொருள் கொள்க.

எவ்வாறாயினும் நாடகம் என்றது தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயம் வேண்டா.

- (குயில், 28.6.58)

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களின் செவ்வி


ஆழமும் செறிவும் மிக்க சிந்தனையாளரும், தலை சிறந்த எழுத்தாளரும், காலத்தை வென்ற ஆய்வு நூல்களின் படைப்பாளருமான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களின் செவ்வி ஒன்று ஆனந்த விகடன் இதழில் (8.4.2015) வெளியாகியுள்ளது.

கேள்வி: திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சி அரசியல் தலைமைக்கு வர வேண்டும் என்பது, இன்று தொடர்ச்சியான விவாதப் பொருள் ஆகிவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சில தமிழகக் கட்சிகள் பா.ஜ.க.-வை முன்னிறுத்தினார்களே?

பதில்: எண்ணெய்ச் சட்டிக்குப் பயந்து, எரியும் நெருப்பிலே விழுவதைப்போலதான் இது. என்ன விலை கொடுத்தாவது திராவிடக் கட்சிகளை ஒழிக்க நினைப்பது சரியான நிலைப்பாடு அல்ல. அந்த முயற்சி தமிழகத்தில் எடுபடாது. என்றாலும், சிந்தனை அளவில் கூட அத்தகைய முயற்சி தவறுதான். வேத எதிர்ப்பு, வேதியர் எதிர்ப்பு என்பது, தமிழர்களின் சிந்தனையில் அழுந்தப் பதிந்துவிட்ட ஒன்று. அவற்றை ஆதரிக்கும் பா.ஜ.க., தமிழகத்தில் என்றைக்குமே வேர் பிடிக்காது

என்று கூறியுள்ளார் பேராசிரியர் தொ. பரமசிவம்

தமிழ் ஓவியா said...


நாட்டில் பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர் களுக்கும் பஞ்சமேயில்லை. ஆனால் இதுபோன்ற தனித்தன்மை வாய்ந்த அறிஞர்களைக் காண்பது அரிதினும் அரிது.


திராவிடர் கட்சிகளை ஒழிக்க நினைப்பது என்பது- எண்ணெய்ச் சட்டிக்குப் பயந்து எரியும் நெருப்பில் விழுவது என்கின்ற அருமையான உவமானத்தையும் எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாமல், அத்தகைய கருத்து என்பது சிந்தனை அளவில்கூட தவறானதுதான் என்று அழுத்தம் திருத்தமாகவே கூறியுள்ளார்.

வேத எதிர்ப்பு, வேதியர் எதிர்ப்பு என்பது தமிழர்களின் சிந்தனையில் அழுந்தப் பதிந்து விட்ட ஒன்று என்றும் கூறுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவம்.

வேத எதிர்ப்பு ஏன்? அதுதான் நான்கு வகை வருணங்களையும் உருவாக்கியது. அது பிறப்பின் அடிப்படையிலானது; அதனை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையாம்

ஓர் அரசனின் கடமை என்பதைச் சொல்லும் பொழுதுகூட வருணாசிரமத்துக்குப் புறம்பாக நடப்பவர் களை தண்டிக்க (தண்டம்) வேண்டும் என்றே அறுதியிட்டுக் கூறுகிறது.

மகாபாரதம் சாந்தி பருவம் 59ஆம் அதிகாரம் பக்.94-99 என்ன கூறுகிறது?

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக் கினான் என்றும் ஆனால், அவன் பின்னோர்கள் உலகப் பற்று நீங்கினர் என்றும், அதனால் வேணனின் கொடுங்கோலாட்சி ஏற்பட்டதாயும் சொல்லப்பட்டி ருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர் என்றும் அவனுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி, எந்த அடிப்படையில் பிருது, வைன்ய என்பவன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கலாம் என்பதை முனிவர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள்.

(1) தண்ட நீதிக் கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர் களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்க மாட்டேன் (3) சாதிக் கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் - என்று மூன்று உறுதிமொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை வேண்டி னார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப் பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது முனிவர் களிடம் கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயலுக்கு ஏற்பவும் நியாயமாகவும் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கனவே உறுதிமொழி கொடுத்திருந்தான் என்று மகாபாரதம் கூறவில்லையா!

இன்னும் சொல்லப் போனால் இந்து மதத் தத்துவப் படி கடவுள் மறுப்பு என்பதுகூட நாத்திகம் அல்ல - வேதமறுப்புதான் நாத்திகமாகும் இதனை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ் வதியே ஏற்றுக் கொள்கிறார்.

மனுதர்ம சாஸ்திரமும் அதைத்தான் கூறுகிறது. வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண் டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ் திகனாவான் (மனுதர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 11)

இந்த நிலையிலே மனித சமத்துவத்தை விரும்புகின் றவர்கள் யாராக இருந்தாலும், பிறப்பின் அடிப்படை யிலே பேதம் கூடாது என்று எண்ணுகிறவர்கள் யாராக இருந்தாலும் வேதத்தையும், அவற்றைப் போற்றும் வேதியர்களையும் எதிர்க்க வேண்டியது கட்டாய மாகும். அவசியமும் ஆகும்.

இதனைச் செய்தது புத்தர் இயக்கம், 2500 ஆண்டு களுக்குப்பின் செய்து வருவது தந்தை பெரியார் அவர்களின் தலைமையிலான திராவிடர் இயக்கமாகும்.

பார்ப்பனர் எதிர்ப்பு என்பது தான் எனக்கு ஏ.பி.சி.டி. யாக இருந்தது. அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாகவும் ஆக்கியது என்ற தந்தை பெரியார் அவர்கள் கூறிய கருத்தையும் இந்த இடத்தில் எண்ணிப் பார்த்தால், பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்கள் பேட்டியில் கூறிய கருத்தின் அருமை புரியும்.

இன்றைக்குப் பிஜேபி என்பதை அந்த வேத சாத்திர மரபைக் கட்டிக் காக்கப் புறப்பட்டுள்ள வருணாசிரமக் கொள்கையுடைய அமைப்பாகும். கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிப்போம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறிய கருத்தையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்க!

பிஜேபி ஆளும் அரியானாவில் கீதை பாட நூலாக ஆக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் நடக்காது - வேர்ப் பிடிக்காது என்றும் தொ. பரமசிவம் அவர்கள் சொல்லியிருப்பதும் முக்கியமாகும்.

இது போன்ற சிந்தனைகள் இந்தக் கால கட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/component/content/article/71-headline/99224-2015-04-06-11-23-47.html#ixzz3WWmynNU8

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/99222.html#ixzz3WY4O6pDa

தமிழ் ஓவியா said...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால்கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால்கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Read more: http://viduthalai.in/page-4/99239.html#ixzz3WY5IMSNM

தமிழ் ஓவியா said...

கணினியில் இருந்து கண்களைக் காக்க...

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச் சினைகள் ஏற்பட்டு விடுகிறது. அதா வது கணினியில் வேலை செய்யும் போது கண் இமை கள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களை சுழலவிட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.

Read more: http://viduthalai.in/page-4/99243.html#ixzz3WY5YZtPz

தமிழ் ஓவியா said...

அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!

அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருள்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்சினையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.

ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சினைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

Read more: http://viduthalai.in/page-4/99243.html#ixzz3WY5fZB4W

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில்
தீக்குழியில் விழுந்த பெண் சாவு

விருதுநகர், ஏப் 6 -விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூரில் நடைபெற்ற பெரியமாரியம்மன் கோவில் தீக்குழி உற்சவத்தில், தீயில் விழுந்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது பொட்டல்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சக்கரைத்தாய் (40). இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் தீக்குழி உற்ச வத்தில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி நடைபெற்ற தீ மிதித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீ மிதித்தார். அப்போது கால் சறுக்கி கீழே விழுந்தார். இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதை யடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சக்கரைத்தாய் ஞாயிறன்று உயி ரிழந்தார்.திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99237.html#ixzz3WY6dvFvG

தமிழ் ஓவியா said...

கொல்லிமலை அருகே திருவிழா வெடிவிபத்தில் நான்கு பேர் சாவு

நாமக்கல், ஏப்.6-_ நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் நான்கு பேர் பலியாயினர். கொல்லிமலை அருகே உள்ள தின்னனூர்நாடு ஊர்ப்புரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவில் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டது. பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் நான்கு பேர் பலியாயினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99237.html#ixzz3WY6kuGlU

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WciorbDv

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம்


மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி யாக ஆக்குவதுதான் என் றார் ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ்.கோல் வால்கர்.

ஜனகல்யாண் - ஜன ஜாக்ரன் என்ற ஓர் அமைப்பை காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி துவங்கினார் அல்லவா - அதன் குறிக் கோள்கள் என்ன தெரி யுமா? பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், இந்தியாவை ஹிந்துஸ்தான் ஆக்க வேண் டும், சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண் டும். சத்யமேவ ஜயதே என்ற வாசகத்துடன் தர் மோர க்ஷ்தி, ரக்ஷ தஹ என்ற வாக்கியமும் அரசு இலச்சினையில் இடம் பெற வேண்டும். அனைவருக் கும் பொதுவான சிவில் சட்டப்படி இயற்றப்பட வேண்டும் என்பதுதான் ஜெயேந்திர சரஸ்வதியால் தொடங்கப்பட்ட அந்த அமைப்பின் நோக்கம். அதுபற்றி தினமணி அன்று எழுதிய தலையங்கத்தில் (5.101987) இவ்வாறு குறிப் பிடப்பட்டிருந்தது.

இந்த அம்சங்களை உற்று நோக்கினால், விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற தீவிர மதவாத இயக்கங்களின் கொள்கையின் தாக்கம் இத்திட்டத்தின்மீது ஏற்பட் டுள்ளது தெளிவாகத் தெரி கிறது என்று தினமணியே தலையங்கத்தில் ஆதங்கப் பட்டு எழுதி இருந்தது.

இப்பொழுதுகூட மத்திய பிஜேபி அரசு இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் சமஸ்கி ருதத் துறையைத் துவக்கு கிறது - மத்திய அமைச்சர் ஸ்ருதிராணியே அறிவித் தார். உண்மையிலேயே இப்படி தொடங்கப்படும் சமஸ்கிருதத் துறைகளின் நிலைதான் என்ன? இதோ ஓர் எடுத்துக்காட்டு.

தேஜ் நாராயணன் டண் டன் என்பவர் லக்னோ வைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெய கிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங் கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் டாக்டர் நரசிம்மாச் சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உட்பட 12 ஆசிரியர்கள் இருந்தார் கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900, மாதம் ஒன் றுக்குச் சம்பளம் மட்டம் ரூ.11,100. ஒரு முறை பல் கலைக் கழகத்தில் சமஸ் கிருதம் படிக்க ஒரு மாண வர்கூட இல்லையாம். 12 ஆசிரியர்களும் வேலை யின்றிச் சம்பளம் பெற்று வந்தனர். துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே - என்ன செய்ய? என்று குறைபட் டுக் கொண்டார்கள்.

துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக் கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமா னால், பல்கலைக் கழகத் தில் உள்ள பெரிய சமஸ் கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்!

எப்படி? செத்த மொழி பெயரால் எவ்வளவுப் பணம் விரயம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/99288.html#ixzz3Wcj5vqH2

தமிழ் ஓவியா said...

பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் லட்சணம் இதுதான்!


ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வட்டியில்லாக் கடன் கிடைக்குமாம். பிஜேபியில் சேருவதற்குக் கொள்கைகள் தேவையில்லை. வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படு மாம்!

அப்படி கொடுப்பவர்கள் யார்? ஆட்சியின் வங்கிகளே இத்தகைய கடனைக் கொடுக்குமா? அல்லது பிஜேபி குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்திலிருந்து வட்டியில்லாக் கடன் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/99290.html#ixzz3WcjY1KBi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

பாம்பின்மீது உள்ள பயத்தால் பாம்பை நாக ராஜனாக்கிக் கும்பிட ஆரம் பித்தார்கள். பேராசைமீது கொண்ட ஆர்வத்தால் கற்பனை சொர்க்கத்தை உருவாக்கி விட்டார்கள் ஆக பயமும் பேராசையும் சேர்ந்த கவலை தான் பக்தி ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/99293.html#ixzz3Wcjmpi4m

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WckICcdO

தமிழ் ஓவியா said...

ஆரியர் - திராவிடர் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியாழனன்று நிறுவனங்கள் விவகாரத்துறை இந்தி நாள் கொண்டாடியிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14இல் தான் இந்தி நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண்டாடியிருக்கிறது.

அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் பி.கே. பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார். இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாட வேண்டும் என்றும், இந்தி தெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை தமிழ் மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.

இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பதுடன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின் படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள்ளார்.

2014 மே 22ஆம் தேதி மத்தியில் ஆட்சி அமைத்த பிஜேபி அரசு அடுத்த அய்ந்தாம் நாளிலேயே (மே 27) இந்தி மொழி பற்றிய ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் அனுப்பியது.

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், சமூக ஊடகங்களைக் கையாளும் அதி காரிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் முழுக்க இந்தி மொழியையே பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். இது முதல் சுற்றறிக்கை அதற்கு அடுத்த மாதம் ஜூனில் (2014) வெளிவந்த அறிவிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளுக்குச் சிறப்பு இந்தி பயிற்சி, சுற்றறிக்கைகள் இந்தியில் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த மாதமான ஜூலையிலோ மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சமஸ்கிருத மொழி பற்றி தங்களது அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் சுற்றறிக்கை கூறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழியியல் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இத்தகு சமஸ்கிருத வாரக் கொண் டாட்டங்கள் உதவும் என்றும், அதனால் நெறி முறைப்படுத்தப்பட்ட கல்வி தரத்தை உயர்த்திட அது வழி வகுக்கும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் வியாக்கியானமும் செய்யப்பட்டு இருந்தது.

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்டில் ஓர் அறிவிப்பு. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் கொண்டாட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

அவ்வப்போது கடும் எதிர்ப்பு குறிப்பாக தமிழ் நாட்டில் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் பொருத்த மில்லாத வகையில் வெண்டைக்காய் விளக்கெண் ணெய் வழ வழா குழ குழா விளக்கங்கள் மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

சமஸ்கிருதம், சீனம், ருசிய மொழி, உருது, அய்ரோப் பிய மொழிகள் ஆகியவற்றைப் பயிற்றுவிப்பதற்கான மய்யங்களை அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்கிறதா என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் உதாசி வினா ஒன்றை எழுப்பினார்.

அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் கவனிக்கத் தக்கது.

சமஸ்கிருதத் துறை இல்லாத மத்தியப் பல்கலைக் கழகங்களில் அத்துறையை உருவாக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அய்ந்து சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களுக்கும் இரண்டு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் திட்டம் சார்ந்த, திட்டம் சாராத மானியங்களை பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இன்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

இந்தப் போக்குகள் எல்லாம் எதை நோக்கி என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பனீய ஆதிக்கக் கலாச்சாரத்திற்கான கால்கோள் விழாக்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பாரதிய ஜனதா என்றாலே பார்ப்பனீய ஆதிக்க நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்ட ஆரிய ஆட்சி என்பதை உணர்ந்து, ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதை அய்யமறந் தெளிந்து, களத்தில் சந்திக்கத் தயாராக வேண்டும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்று தந்தை பெரியார் அழுத்தத்திருத்தமாகச் சொன்னதை இப்பொழுது பொருத்திப் பாருங்கள் - புரியும்.

Read more: http://viduthalai.in/page-2/99280.html#ixzz3WckdE72f

தமிழ் ஓவியா said...

நான் பசுமாமிசம் சாப்பிட்டவன், இன்றும் சாப்பிடுவேன், தேவைப்பட்டால் நாளையும் சாப்பிடுவேன்

மார்கண்டேய கட்சு பேச்சு


புதுடில்லி, ஏப்.7_ பசு மாமிசத்தில் அதிகப்படி யான புரதச்சத்து உள்ளது, என்னிடம் யாரும் நீ இதைச்சாப்பிடாதே, நான் சொல்வதை மாத்திரம் சாப்பிடு என்று கூற உரிமையில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுமாமிசம் தொடர்பான சர்ச்சைகிளம்பிக்கொண்டு இருக்கும் போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்சு பரபரப் பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு பசுமா மிசத்தில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவரது தனிப் பட்ட உரிமையாகும். இந்த அரசியல் சாசனம் இந்தி யாவில் உள்ள அனைத்து மக்களின் தனிப்பட்ட உணவு விவகாரம் குறித்து சிறப்பான விதிகளை வகுத் துள்ளது. அரசு சட்ட மியற்றி ஒருவரின் தனிப் பட்ட உணவு விவகாரத் தில் தலையிடமுடியாது. நான் பசுமாமிசம் சாப் பிட்டு இருக்கிறேன், இன்றும் சாப்பிடுகிறேன், வாய்ப்பு கிடைத்தால் நாளையும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை தவ றானது என்று குறிப்பிட் டுள்ளார்.

உலகில் அதிகம் பேர் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சியாகும் மாட்டிறைச்சி உண்பதில் தவறு ஒன்றுமில்லை. மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இதை அதிக மானோர் உண்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக உண்ணப்படு கிறது. நான் பசுமாமிசம் சாப்பிடுபவன் தான், எனது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதால் வீட்டில் சாப்பிடமாட்டேன் ஆனால் உணவகங்களில் நான் செல்லும் போது எனது முதல் தேர்வு மாட் டிறைச்சியில் செய்யப்பட்ட உணவுதான் இருக்கும் மத ரீதியான விவகாரங்களில் நுழைந்து மாட்டிறைச்சியை தடைசெய்வது தவறான தாகும் வேண்டுமென்றால் உலகமெங்கும் உங்கள் பிரச் சாரத்தை முன்னிலைபடுத்தி மாட்டிறைச்சி சாப்பிடு வதை கைவிட முயற்சி செய்யலாம், ஆனால் அது இயலாத காரியம் மட்டு மல்ல சர்வதேச அளவில் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் பசு மாமிசம் தொடர்பாக தொண்டை வற்ற கத்தும் நபர்கள் முதலில் பட்டினி யால் குப்பைகளையும் சில சமயங்களில் அசிங்கமான வைகளையும் உண்ணும் பசுக்கள் பற்றி கவலையடை யட்டும். நான் பலமுறை பசுக்கள் குப்பைகளை தின்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குப்பைகள் மூலம் அசிங்கங் களும் பசுக்களின் வயிற்றில் செல்கிறது.

நரேந்திர மோடி தலை மையில் ஆன அரசு முக்கிய மாக அரசியல் காரணத் தினால் மாத்திரமே இந்த பசு வதை தடைச்சட்டம் கொண்டு வரப்பார்க்கிறது. 1950-களிலேயே நீதிமன்றம் தனிமனித உணவு விவகா ரத்தில் அரசின் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மாட் டிறைச்சி தடைச்சட்டத் தால் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/99298.html#ixzz3Wcli6aS6

தமிழ் ஓவியா said...

தாலிபற்றி தகர டப்பா சத்தம் போடுவோர்க்கு அர்ப்பணம்!

அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!

வேத சடங்குகளுடன் தாலி கட்டி நடைபெற்ற கூத்து!

கேரளாவைச் சேர்ந்த 2 ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின்மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பார்ப்பனர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நட்பாக தொடங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்ததையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதையடுத்து இந்த மாதம் கலிஃபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், புரோகிதர் வேத சடங்குகளுடன் தாலி கட்டித் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99323.html#ixzz3Wie5vJWp

தமிழ் ஓவியா said...

யார்வீட்டுப் பணம்?

திருப்பதி தரிசனத்துக்காக ரூ.4 கோடி செலவு செய்த ஆளுநர்


ஆந்திரம், ஏப்.8_ ஆந் திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பதவியேற்றது முதல் 37 முறை திருப்பதிக்குப் பய ணம் செய்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். இதற் காக அரசின் பணம் ரூ. 4 கோடி செலவிடப்பட்டுள் ளது தெரியவந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலம் பிரிக்கப்படு வதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுந ராக நியமனம் செய்யப் பட்டவர் ஈ.எஸ்.எல்.நரசிம் மன். ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலத்தின் கடைசி ஆளுநரான நரசிம்மன், திருப்பதி ஏழுமலையா னின் தீவிர பக்தர். இவர் தான் பதவியேற்ற பிறகு மட்டும் 37 முறை திருப் பதிக்கு வந்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். ஆந் திர ஆளுநர்களாக இருந்த வர்களிலேயே அதிக முறை திருப்பதி கோயிலுக் குச் சென்றவர் இவர்தான்.

ஆளுநர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. எனவே, நரசிம்மன் திருப்பதிக்கு வரும்போதெல்லாம் குண்டு துளைக்காத 3 கார் கள், காவல்துறை பாது காப்பு, ஆம்புலன்ஸ், தீய ணைப்பு வாகனம், மருத் துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடனி ருப்பர்.

இந்நிலையில், இசட், இசட் பிளஸ் பிரிவில் உள்ள விவிஅய்பிகள் திருப்பதி வருவதால் அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதாக பெயர் வெளியிட விரும் பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வந்தால், சுமார் ரூ.30 லட்சம் முதல் 70 லட்சம்வரை செல விடப் படுகிறது. ஆளுநர் பதவி யில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம்முதல் ரூ.10 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம் மன் இதுவரை திரு மலைக்கு 37 முறை வந் துள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.3.70 கோடி அவரின் வருகைக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் நரசிம்மன் தன்னுடன் தனது குடும் பத்தினர், ராஜ்பவன் அதி காரிகள் என குறைந்தது 5 பேரை அழைத்து வரு கிறார். அய்தராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருப்பதிக்கு 5 பேர் சென்று வர (எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்) டிக்கெட் விலை ரூ.72 ஆயிரம். இதுவரை 37 முறை வந்துள்ளதால் சுமார் ரூ.26.6 லட்சம் செலவாகியுள்ளது. ஆக ஆளுநர் நரசிம்மனின் திருப்பதி தரிசனங்களுக் காக மட்டும் ஆந்திர அரசு சுமார் ரூ.4 கோடிக் கும் அதிகமாக செலவிட் டுள்ளது. _ இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/99318.html#ixzz3WieCXaeu

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி தடை விவகாரம்: ஜனநாயகமா?

பாஜக தோல்வியுற்ற ஏராளமான மாநில மக்களின் கருத்துக்கு என்ன மரியாதை?

மும்பை, ஏப்.8_ மாட்டிறைச்சி விவகாரத்தில் தொடக்கத்திலேயே மற்றவர்கள் பேசாமல் இருந்ததாலேயே பாஜகவினர் மாட்டிறைச் சியைத் தடைசெய்கின்றனர் என்று மும்பை யிலிருந்து வெளிவரக்கூடிய ஆங்கில இதழான டி.என்.ஏ.காம் கூறுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கையில்...

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேர்தல் அறிக்கையில் பசு மற்றும் அதன் கன்றுகளைப் பாதுகாப்ப தற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மணிப்பூர், மிசோரம், நாகாலந்து, ஒடிசா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் பாஜக கடும் தோல்வியைத் தழுவியது.
30.32015 அன்று ராஜ்நாத்சிங் கூறுகையில் பசுவை இறைச்சிக்குக் கொல்வதை இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதில் அதிகப்படியான முயற்சியை அரசு மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடுகிறார்.

மேற்கூறப்பட்ட மாநிலங்கள் ராஜ்நாத்சிங் பார்வையில் இந்தியாவின் அங்கங்களாக இல்லையா? அல்லது ஜனநாயகரீதியில் அம் மாநில மக்களின் கருத்துகளை ஒரு பொருட் டாக எடுத்துக்கொள்ள மாட்டாரா?

இதுபோன்ற மாட்டிறைச்சியே இல்லாதவாறு தடைசெய்வது என்பதில், டில்லி தொடங்கி பாஜக அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில் இந்தி, இந்து, இந்துஸ்தானி என்பதன்கீழ் நாட்டை ஒன்றுபடுத்துவதாகக் கூறுவது நாடு குறித்த அக்கறை மற்றும் புரிதலைக் கேலிக் கூத்தாக்குவதாகும். இதில், நீரோட்டத்துக்கு பல முகத்துவாரங்கள் உள்ளதுபோல், சிலர் மாட்டிறைச்சித் தடைகுறித்தும், சிலர் இணைய சுதந்திரம் குறித்தும், இன்னும் இந்தியாவுக்கான கொள்கை என்றும் நீண்டுகொண்டே இருக்கிறது.

மத்திய அரசின்கீழ் இயங்கும் ஏர்_இந்தியா விமான சேவையில் முட்டை இல்லாத கேக், வெங்காயம் இல்லாத பாலாடைக்கட்டி(பனீர்) பஃப்ஸ் ஆகியவைகளை எந்த கருத்துகளும் இல்லாத பொதுவானவர்களுக்கும் வழங்கப் பட்டது. அவர்கள் புனிதம் என்று சொல்லி விடுவதாலேயே மாட்டிறைச்சியையோ, மாட்டிறைச்சி உணவையோ தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆகவேதான் அவர்கள் மாட்டிறைச்சியைத் தடைசெய்வதை முதலில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில் பாஜக தோல்வியுற்ற ஏராளமான மாநிலங்களில் உள்ள மக்களின் கருத்துக்கு என்ன மரியாதை? ஜனநாயகமா?

Read more: http://viduthalai.in/e-paper/99316.html#ixzz3WieKQUf2

தமிழ் ஓவியா said...

ஏழைகளின் புரோட்டின் சத்துணவு மாட்டிறைச்சியைத் தடை செய்வதா?
மகாராட்டிர பால்வளர்ச்சித் துறையின் எதிர்ப்பு

மும்பை, ஏப்.8_ ஏழை களின் சத்துணவு மாட்டி றைச்சியைத் தடை செய்வதா? என்று மகாராட் டிர மாநிலத்தில் மாட்டி றைச்சித் தடைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும்வகையில் கேரளாவிலும், டில்லியிலும் இளைஞர்கள் மாட்டி றைச்சித் திருவிழா நடத்தி உள்ளனர்.

மாட்டிறைச்சித் திரு விழா கடந்த மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்அய்) கேரளா வைத் தொடர்ந்து டில்லி யிலும் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப் பட்டுள்ள விற்பனை மற்றும் நுகர்வுக்கான தடையை எதிர்த்தே மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரளா, டில்லி கடந்த மாதம் பத்தாம் தேதி அன்று கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று டில்லியிலும் மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

மாட்டிறைச்சித் திரு விழா, சுதந்திரம்குறித்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தலைவருமாகிய எம்.பி. ராஜேஷ் கூறும்போது, எதை ஒருவர் உண்பது? எதை உடுப்பது? அல்லது எந்த மொழியில் பேசுவது-? என்பதை தாங்களாக தேர்வு செய்து கொள்வ தாகும். அதை எவரும் திணிக்கக் கூடாது. எங்களு டைய கவலை எல்லாம் இத்தடை நாடுமுழுவதும் பரவிவிடக்கூடாது என்பது தான் என்றார்.

மனுஸ் மிருதியில் மாட்டிறைச்சி

மேலும், எம்.பி.ராஜேஷ் கூறும்போது, இந்த மாட் டிறைச்சித் திரு விழாவுக்கு கட்சிகளைக் கடந்து அனைத்துதரப்பினரையும் அழைத்தோம். பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாட்டி றைச்சித் திருவிழாவில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம். காய்கறி உண வை மட்டுமே உண்ணக் கூடியவர்களுக்குகூட இந்தப் பிரச்சினையில் ஒற் றுமையைக் காட்டும்வகை யில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். மாட்டிறைச்சித் தடை என்பது மதத்தின் அடிப் படையில் விதிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமான தாக இல்லை.

மனுஸ்மிருதியில், ஒட் டகத்தைத் தவிர, அனைத்து விலங்குகளையும் உண்ண லாம் என்று வெளிப்படை யாகவே கூறப்பட்டுள்ளது. வலதுசாரிகளின் தலைவர் வினாயக் தாமோதர் சா வர்க்கார் மாட்டிறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தர்ம சாஸ்திரங்களிலும்கூட மாட்டிறைச்சி உண்பது குறித்து குறிப்புகள் உள் ளன என்று கூறினார்.

மாட்டிறைச்சிகுறித்த ஆய்வு அரசியல்தான்: கோல்வால்கர்

கேரளாவின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பி னரான வழக்குரைஞர் ஜாய்ஸ் ஜார்ஜ் கூறும் போது, ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஏ.கே.சர்க்கார் குழுவை அமைத்தார். அக்குழுக் கூட்டத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரும் கொள்கை வகுத்தவருமான எம்.எஸ்.கோல்வால்கர் அதில் ஒன்றுமே கிடை யாது. முற்றிலும் அரசியல் தான் உள்ளது என்று கூறியது புகழ்பெற்றதாகும் என்று கூறினார்.

ஏழைகளின் புரோட்டின் சத்து

அண்மையில் மாநிலங் களவையில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரான தேரேக் ஓபி ரையன் மாட்டிறைச்சி குறித்து பிரச்சினை எழுப் பியபோது, இந்த பிரச்சி னையில் மதக் கண்ணோட் டத்துடன் பார்க்கக்கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான சிறு பான்மை மக்கள், தாழ்த் தப்பட்டவர்கள் மாட்டி றைச்சியை சாப்பிடுகி றார்கள். இது ஏழைகளின் புரோட்டின் சத்தாகும் என்றார்.

மாடுகளைப் பராமரிக்கும் கோகுல் கிராமம்

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பால் வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறும்போது, மகாராட்டிர மாநிலத்தில் கோரேகான் கிழக்குப்பகுதியில் உள்ள ஆரே குடியிருப்புப் பகுதி யில், பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் கோகுல் கிராமம் எனும் பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பழைய பசுக்கள், எருதுகள் ஆகிவைகளுக்கு மறுவாழ்வு அளித்திட, அவைகளின் பராமரிப்புக்காக பயன் படுத்துவதற்காக ஒதுக்கப் பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கோகுல் கிராமம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்லபடுத்தப் பட உள்ளது. மாட்டிறைச் சித் தடையால் வயதான மாடுகள் தொடர்பாக அரசு அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய தாகவுள்ளது.

வீண் வேலை கோகுல் கிராமம் திட்டம் ஆரே பாது காப்புக்குழுவின் சார்பில் விமர்சனம் முன் வைக்கப் பட்டுள்ளது. வயதான மாடு களைவைத்து பராமரிப்பது, பசும்புல் வளர்ப்பது வீணான வேலை என் கிறார்கள். கட்சே கூறும் போது, பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ள தானே மற்றும் பால்கர் மாவட்டங் களில் தப்சேரி பகுதிகளில் கோகுல் கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99346.html#ixzz3Wifbkm7x