Search This Blog

10.2.13

அய்ரோப்பாவில் பெரியார்

அய்ரோப்பாவை அலசிப் பார்த்த ஈரோட்டுத் தமிழர்


இளமைதான் அழகு என்போர், பெரியாரின் நிழல் படங்களைப் பார்த்தால் போதும். தங்கள் முடிவை மாற்றிக் கொள்வர். அந்த ஞானக் கிழவரின் ஒவ்வொரு தோற்றமும் அழகுதான். அதனைப் பார்க்கும் போதெல்லாம் மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ்பாடி குமரகுருபரர் திருஉள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்த உயிர் ஓவியமே, மலையத்து வஜன் பெற்ற பெரு வாழ்வே! என்று பாடியதைத் திரு உள்ளத்தில் அழ கொழுக எழுதிப் பார்த்த உயிரோவி யமே, வெங்கட்ட நாயக்கர் பெற்ற பெரு வாழ்வே என்று மாற்றிப் பாட வேண்டும் போலிருக்கும்.
அழகர் பெரியார்
அந்த அளவிற்கு அய்ரோப்பாவில் பயணித்த பெரியாரின் அழகிய, இதுவரை தமிழர் பார்த்திராத கோட்டும் சூட்டும் மாட்டித் தலையில் எடுப்பான டர்பனும் மாட்டி ஏறக்குறைய பஞ்சாபிய சிங்கம் போன்ற பெரியாரின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்றிருக்கிறது. தமிழர் தலைவர் கி.வீரமணி தொகுத்த, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அய்ரோப்பாவில் பெரியார் எனும் நூல்.
வெல்லக்கட்டி
இந்நூலின் தொகுப்பாசிரியர் ஆசிரியர் வீரமணி அவர்களை இந் நூலைத் தொகுத்ததற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியார் அய்யா,  கல், மண், கசடு இல்லாத அசல் வெல்லக்கட்டி அதனை எந்தப் பக்கம் பிட்டுத் தின்றாலும் இனிக்கும். பக்தர்கள் வேண்டுமானால் வெல்லப் பிள்ளையார் என்று சொல்லிக் கொள் ளட்டும் நமக்குப் பெரியார் வேலூர்க் கட்டி வெல்லம்.
இரண்டாம் மேலைப் பயணம்
1929 டிசம்பர் 15இல் பெரியார் மேற் கொண்ட மலாயா சுற்றுப் பயணத்துக்குப் பின், போதி மரத்தைத் தேடாத புத்தன் பெரியார் 13.12.1931 முதல் 11.11.1932 வரை புதியதோர் உலகம் காணப் புறப்பட்டார். ஆங்கில அறிவு, பிரெஞ்சு அறிவு, கிரேக்க, லத்தீன் மொழி என்று எம்மொழியும் அறியாத பெரியார், தமிழ் மட்டும் அறிந்த பெரியார் ( 82 ஆண்டுகளுக்குப்பின்) அய்ரோப்பாவை எட்டிப் பார்த்து வலம் வந்து அந்தந்த நாட்டுக் கொள்கைகளை உள் வாங்கித் தம் சமதர்ம, சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைத் தீயில் புடம் போட்டு, பக்குவமாய்க் காய்ச்சி எடுத்து அழகுற வடித்துத் தந்த ஆசிரியர் வீரமணி தரும் அற்புத வரலாறு இது.
உடன் சென்றவர்கள்
1931ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் சென்னையில் கப்பலேறிய பெரியாருடன், தோழர்கள் எஸ். ராமநாதனும், ஈரோடு ராமுவும் உடன்  சென்றனர். பெரியார் இவர்களுடன் எகிப்து, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்சு, போர்ச்சுக்கல், கொழும்பு முதலிய பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தமிழகத்  தலைவர்களிலே இத்தனை நாடுகளை இவ்வளவு காலம் போய்ச் சுற்றி வந்த தலைவர் யாராவது இருக் கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது.
பொது இயக்கங்கள்
பெரியார் இத்தனை நாடுகளையும் சுற்றுலாப் பயணிகளாக இங்கே போனேன், இந்த நாளில் இதைப் பார்த்தேன் என்று பட்டியலிடும் பயணி யாக அல்லாது பல பொது இயக்கங் களைக் கண்டறிந்தார். அவ்வியக்கத் தலைவர்களுடன் அளவளாவி உலக நாடுகளின் உண்மைகளை உணர்ந்தார்.
ரஷ்யாவைப்பற்றி..
இந்தப் பயணத்தில் நீண்ட நாள் மூன்று மாதங்கள் சுற்றுப் பயணம் செய்த நாடு ரஷ்யாதான். அப்படியானால் மூன்று மாத காலம் அவர் என்னதான் செய்தார் இரும்புத் திரை நாட்டில். என்ன என்ன பார்த்தார்

அங்கே சமதர்ம ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? அவ்வாட்சியால் அந் நாடு அடைந்த பயன் என்ன? அந்நாட்டு மக்களின் நிலை எவ்வாறுள்ளது? அவர்கள் தங்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? என்பவற்றைத் தெரிந்து கொள்ளவே நீண்ட நாள் தங்கி அரசாங்க விருந்தினராக இருந்து அந்நாடு முழுவதும் - சுமார் 15,20 பிரபல நகரங்கள் உள்படச் சுற்றிப் பார்த்தனர். அரசாங்க அலுவலகங்களையெல்லாம் பார்வையிட்டனர். பெரிய தொழிற்சாலை களுக்கெல்லாம் சென்றனர் கல்வி நிலையங்களையெல்லாம் கண்டனர். நாடக அரங்குகள், சுவடி நிலையங்கள், படிப்பிடங்கள் ஆகியவற்றையெல்லாம் பார்த்தனர். தொழிலாளர் சங்கங்களைப் பார்வையிட்டனர். விவசாயப் பண்ணை களுக்கும் சென்றார்கள். அவை அறி வியல் முறையில் எவ்வாறு நடைபெறு கின்றன என அறிந்து கொண்டனர். அந்நாட்டு அரசாங்கத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளைச் சந்தித்தனர். அவர்கள் வாயிலாகப் பல உண்மைகளையும் கேட்ட றிந்தனர். இவர்கள் அந்நாட்டுப் பொது மக்களாலும், தொழிலாளர்களாலும், அரசாங்கத்தார்களாலும் அரசாங்க விருந்தினர்களாகவே நன்கு வரவேற் கப்பட்டனர். பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.  பல பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அவற்றில் சுயரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப்பற்றிக் கூறினர்.
மிகுந்த பயன் விளைந்திருக்குமா?

இப்படிப்பட்ட பயணங்களினால் பட் டறிவு பெற்ற பெரியார், அவர் காலடியில் அமைச்சர் பதவி, ஏன், இந்த நாட்டின் முதல்வர் பதவி வந்து தட்டியபோது அதனை ஏற்றுப் பதவிக் கட்டிலில் அமர்ந்து இருப்பாரேயானால் காமரா சரைப் போல மக்களை உணர்ந்து நல்லாட்சி  செலுத்தி மகாராசன் என்று மக்கள் போற்றும் வேறு வகையான பெருமை பெற்றிருப்பார்.

ஜெர்மனியிலும் சமதர்மம்

ரஷ்யாவில் மட்டுமல்லாது எங்குச் சென்றாலும் அவர் உல்லாசப் பயணம், பொழுதுபோக்குப் பயணமாய்ச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.
இட்லர் ஆட்சிக்கு வராத காலத்தில் பிளவுபடாத ஜெர்மனியில் -குடிஅரசு அரசாய் இருந்த ஜெர் மனியில் பல சமதர்மச் சங்கங்களுக்குச் சென்று வந்தார். அரசாங்கத்துடன் கலந்து பழகினார். அவர்களுடைய கொள்கை, கோட்பாடுகளைத் தெள் ளத் தெளிவாக அறிந்து கொண்டார்.
ஜெர்மனியில் நிர்வாணச் சங்கங் களுக்கும் சென்று அவர்களுடன் நிர்வாணமாய் நின்று  ஆடை தான் மனிதனைப் பிரிக்கிறதா, ஆட்களைப் பிளவுபடுத்துகிறதா என்பதையும் உணர்ந்து வந்த உன்னதத் தலைவர் தந்தை பெரியார்.

இங்கிலாந்து -சக்லத்வாலா

இந்தியாவை அடிமை கொண்ட அந்நாளில் ஆதவன் மறையாத அரசுக்குச் சொந்தமான நாடு என்று கொண்டாடப்பட்ட இங்கிலாந்து எனும் இன்பபுரிக்கு  இன்பமாய்ப் பொழுதைக் கழிக்க எண்ணாமல் அங்கு மறைந்த தொழிலாளர் தலைவர் சக்லத் வாலாவைக் கண்டு உரையாடினார். அது மட்டுமல்லாது அந்நாட்டுத் தொழிலாளர் இயக்கம் பற்றிய உண்மை களையும் அறிந்தார்.

கூட்டம் என்றால் அப்படிப்பட்ட கூட்டம்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் 26.6.1932-இல் இங்கிலாந்தில் மெக்ஸ் பரோ லேக் பூங்காவில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் கூட்டம் என்றால் பத்து, இருபது, நூறு, இருநூறு பேர் கூடிய கூட்டமல்ல அது. 50,000-த்துக்கும் மேற்பட்ட தொழி லாளர் கூடிய கூட்டம்.அக்கூட்டத்தில் அந்நாட்டுத் தொழிற்சங்கத் தலைவர், தொழிலாளர் தோழர் லான்ஸ்பரி என்பவர் சொற்பொழிவாற்ற, இந் நாட்டுப் பொதுவுடைமைவாதிகளும் கார்ல் மார்க்சு, லெனின், ஸ்டாலின் படத்தருகே இடம் பெறச் செய்ய வேண் டிய படமாக மாட்டப்பட வேண்டிய பெரியார் சொற்பொழிவாற்றினார் ஆம்! அவர் பகுத்தறிவாளர் மட்டு மல்லர். உலகச் சமதர்மச் சிந்தனை யாளர்களில் ஒருவர்.
                            --------------------- தொடரும் 9-2-2013

அய்ரோப்பாவை அலசிப் பார்த்த ஈரோட்டுத் தமிழர் (2) முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
உலகத் தொழிலாளர் ஒற்றுமை
சுகபோக வாழ்க்கையைத் துறந்த இந்த இருபதாம் நூற்றாண்டுப் புத்தன் துணிவோடு முழங்கியதில் ஒரு துளியை மட்டும் எடுத்துக் கூறினால், செங்கொடிப் படையாளர் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று முழங்கும் முழக்கத்தை எண்பது ஆண்டுகளுக்கு முன் எடுத்து வைத்தவர் எம் தலைவர் ஈ.வெ.ரா. என்னும் பெருமை பிடிபடும்.
கூவமான அருவிகளின் கூக்குரல்
இந்திய விடுதலையை மட்டும் கேட்கவில்லை பெரியார். இந்தியத் தொழிலாளர் விடுதலையை, அடிமைத் தளையை அகற்றவும், வாழ்வு மேம் படவும், குரல்  எழுப்பினார் என்றால் அதை உணராத அருவி என்று பேர் வைத்துள்ள கூவங்களுக்கு அவர் அருமை, அவர் கொள்கையை ஏந்தித் தடம் புரளாமல் செல்லும் தலைவர் வீரமணியின் பெருமை மட்டும் உணர முடியுமா என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது. சிலர் வீரமணியைத் தொட்டுப் பெரியாரைக் கொச்சைப் படுத்த முயல்வது புரிகிறது.
லண்டனில் பேசினார் பெரியார்
பெரியார் பேசுகிறார்; பொதுக் கூட்டத்தில் இங்கிலாந்தில் லண்டனில், 1932இல்  இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூக மாகக் கருதலாம். ஆனால் நாங்கள், பிரிட்டிஷ் தொழிற் கட்சியை மிக மிகப்  பரிகசிக்கத்தக்க விஷயமாய்க் கருது கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு எட்டு அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்து அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் நிறுத்தத் தொழிற் கட்சி அரசாங்கம் என்ன செய்தது? என்று கேட்டு விட்டு இறுதியாகக் கூறுகிறார்.
ஆதலால், யார்க்ஷையர் தொழி லாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்று மையை எதிர் நோக்கிக் கொண்டி ருங்கள்
தொழிற்கட்சி அரசு இப்படி இங்கிலாந்து எனும் அவனு டைய நாட்டில் போய் இங்கிலாந்தில் அப்போது தொழிற்கட்சி அரசாங்கம் நடந்து கொண்டிருக்கையில் முழங்க வேண்டுமானால் எவ்வளவு துணிச் சலும், தைரியமும் வேண்டும். இது வேறு யாருக்கும் வராது. அவர் ஒரு வருக்கு மட்டும் தான் வரும். அவர்தாம் பெரியார். இது சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று அதன் பிடரி யைப் பிடித்துப் புரட்டிப் போடும் துணி கரச் செயல் எவ்வித அச்சமும் இல்லாது முழங்கிய அற்புதச் சிங்கத்தின் கர்ச் சனை அது.

இலங்கையில்

தம் சுற்றுப் பயணத்தை முடித்து இலங்கை வழியாக இந்தியாவந்த பெரியாரை இலங்கையிலிருந்த தலை வர்கள் எல்லாம் வரவேற்றனர். இலங் கையின் பல பகுதிகளுக்கும் சென்றார். பல பொதுக் கூட்டங்களில் சொற் பொழிவாற்றினார். பல தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். இப்பேச்சுக் களில் தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம், மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் அடைந் துள்ள உயர்ந்த நிலைமை, அவர்கள் ஒன்றுபட்டுழைத்து நன்மை பெறும் வழி, முதலாளிமார்களால், தொழி லாளிகளுக்கு உண்டாகும் துன்பங்கள், அத்துன்பங்களை நீக்கி முன்னேறும் வழிகள் ஆகியவை குறித்துப் பேசினார். இலங்கைச் சொற்பொழிவு எனும் சிறு நூலாய் அவை வெளி வந்தன. சுமார் 20000 படிகள்  6 பைசா வீதம் விற்பனை ஆயிற்று. அதன் பின்னர் தான் 11.11.1932இல் ஈரோடு திரும்பினார்.

நாகம்மை இணைந்தார்

ஓராண்டுக் காலம் உற்ற கணவரை அதுவரையில் ஒருபோதும் பிரியாமல் பிரிந்திருத்த அன்னை நாகம்மையாரும், தோழர் மாயவரம் நடராசனும் இலங்கை சென்று பெரியாருடன் கலந்து கொண்டனர். ஓராண்டு காலம் உற்ற கணவரை, உடல் நலம் இல்லாத போதும் பயணித்து கணவரைச் சந்தித்த நாகம்மை யார் மனம் எவ்வளவு மகிழ்ச்சிக் கடலில் இலங்கையில் மூழ்கி இருக்கும்.

அரிய தகவல்கள் - அறிந்து கொள்வீர்

தந்தை பெரியாரின் அய்ரோப்பியப் பயண அனுபவங்களை மட்டுமல்லாமல் அய்யாவின் பொதுவுடைமைப் பாதை அதற்கும் முற்பட்டது எனும் அரிய தகவலை ஆழமாகவும், அகலமாகவும் அளிக்கிறார் தொகுப்பாசிரியர் ஆசிரி யர் வீரமணி அவர்கள் அதற்காக வேனும் ஒவ்வொருவரும் அய்ரோப் பாவில் பெரியார் எனும் நூலை வாங் கிப் படித்துப் பாதுகாக்க வேண்டும்.

பொதுவுடைமைக் கொள்கை அறிக்கை

சோவியத் ஒன்றியத்திற்குப் பயணிக்கும் முன்பே ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கையை Communist Manifesto
தந்தை பெரியார் அவர்கள் தமிழில் வெளி யிட்டு ஒரு தனி வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்த மண்ணை மணந்த மணாளர் (வ.ரா.சொன்னது) பெரியார் பொதுவுடைமைவாதிகளே, கொஞ்சம் உங்கள் பார்வையை இந்த மாமனிதர் பக்கம் திருப்புங்கள். ஏனென்றால்

பொது உரிமை

நம் நாட்டுச் சமூக அமைப்பை மாற்றுவதற்கு முதலில் தேவை பொது உரிமை அடுத்த கட்டம் பொதுவுடைமை என்பதைத் தம் வாழ்வின் பல்வேறு பட்டறிவை வைத்துத் தாமும் புரிந்து மற்றவர்களுக்கும் புரிய வைத்தவர் பெரியார் அது மட்டும்தானா?

பயணத்திற்கு முன்பேயே

சோவியத் நாடு, இங்கிலாந்து உள்ளிட்ட பல அய்ரோப்பிய நாடுகள் பய ணத்தை 1931-1932-இல் மேற்கொள் ளும் முன்பே அவர்கள் கூறிய பல புரட்சிகரமான கருத்துக்களை 1930-லேயே எழுதத் துணிந்தவர் பெரியார். அதற்குஎடுத்துக்காட்டு அவர் 23.11.1930 குடிஅரசு ஏட்டில் எழுதிய கட்டுரையாகும். அதில் சில துளிகள் எவ்வளவு உயர்ந்த புரட்சிகரச் சிந் தனைக்கு இந்தப் பெரியவர் சொந் தக்காரர் என்று காட்டும்.

புரட்சிச் சிந்தனை இது

இத்தனை ஏக்கர் பூமி உடைய வனுக்கு இன்ன விகிதம் வரி என்ப தாகக் கணக்குப் போட்டு வரி விதிக்க வேண்டும். அதாவது 5 ஏக்கர் நஞ்சைக் கும் (தண்ணீர் பாயும் பூமிக்கும்) 25 ஏக்கர் புஞ்சை அதாவது மழையை எதிர்பார்த்து விளையும் பூமிக்குக் குறைவாக இருக்கும் வரி தீர்வை விகிதத்தில் பகுதியாக்கி 500 ஏக்கர் காரருக்கு மேல்பட்டவர்களிடமிருந்து இப்போதிருப்பதில் இரட்டிப்புப் பாகம் வரி உயரும்படியாக படிப்படியாக உயர்த்துவதற்கான ஒரு திட்டம் ஏற்பாடு செய்தால் அல்லது இந்தக் கொள் கையை அனுசரித்து சற்றேறக் குறைய திட்டம் ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக வரிக் கஷ்டம் நீங்குவதோடு பூமிகள் ஒரே பக்கத்தில் போய்ச் சேர்ந்து விடாமல் இருப்பதற்கும் வரி முறை கொடுமையில்லாமல் பயன்படுவதற்கும் அனுகூலமாயிருக்கும்.

அப்படிக்கில்லாமல் ஒரு ஏக்கர் காரனுக்கும் 5000, 10000 ஏக்கர் கார னுக்கும் ஒரே வரி விகிதம் இருப்பதால் பூமி எல்லாம் ஒரே  பக்கம் போய்ச் சேரவும் மற்றும் அநேகக் கெடுதிகள் ஏற்படவும் அனுகூலமாயிருக்கின்றது
எனவே சோவியத் ரஷ்யாவிற்குச் செல்லும் முன்பே அவருக்குச் சமதர்ம உரிமைக் கருத்துகள் அவருள் பதிவான லட்சியங்களாகி விட்டன என்பதைத் தம் முகவுரையில் பதிப்பா சிரியர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தெளிவாக இந்நூலில் எடுத்துக் காட்டுகிறார்.

சமதர்ம அறிக்கை

ஆக, பெரியாருக்கு சோஷியலிசம், கம்யூனிசம் ஆகிய கொள்கைகளில் ஏற்பட்ட ஈர்ப்பு சோவியத் ரஷ்யாவைச் சென்று காண்பதற்கு முன்பே என்ப தற்கு, 4.10.1931 குடிஅரசு இதழில், ரஷ்யப் பொதுவுடைமைக் கட்சிக் கொள்கை அறிக்கையைக் குடிஅரசு ஏட்டில் சமதர்ம அறிக்கை எனும் தலைப்பில் அறிமுக உரையுடன் தொடர் வெளியீடாகத் தமிழாக்கம் செய்து வெளியிட்டதில் வெளிப்படுகிறது. நூலைப் படித்தால் சமதர்ம அறிக்கை யும் அறிமுக உரையும் வாசித்து மகிழலாம்.

அது மட்டுமல்லாது சமதர்ம அறிக்கை எனும் கட்டுரைக்கு ஒரு முன்னுரை எழுதியுள்ளார் பெரியார் அதில் தந்தை பெரியாருக்குள்ள சமதர்மம், பொதுவுடைமை பற்றிய தெளிவு எவருக்கும் விளங்கும். அந்த அறிமுக உரையைப் படித்து அய்யா வைப் படிக்க வேண்டுமானால்கூட ஒவ்வொருவர் கையிலும், அய்ரோப் பாவில் பெரியார் நூல் இருக்க வேண் டும். இது உண்மையான கலப்பட மில்லாத வாக்கு.

ஆராய்ச்சியாளர் வீரமணி

நாமெல்லாம் ஆராய்ச்சியாளர் என்று ஆய்வு செய்து பெற்ற பட் டத்தைப் பெரியார் எனும் மாமனிதரை அவருடைய படைப்புகளை, எழுத்து களை, உள் வாங்கி நடமாடும் ஆராய்ச் சியாளராக விளங்குபவர் தமிழர் தலைவர் என்றே கூற வேண்டும். ஏனெ னில், எந்தக் கொம்பனும், எந்த வம் பனும் பெரியாரைப் பற்றி அரை குறையான, அரை வேக்காட்டுத்தன மான, விமர்சனப் பதாகையை வீசி விட்டுத் தப்பி விட முடியாது; அவரிட மிருந்து அதற்கு ஒரு சான்று இந்நூலில் காணக் கிடைக்கிறது.

தவறான தகவல்

தந்தை பெரியாரின் சோவியத் ரஷ்யப் பயணம் ஒரு ரகசியப் பயணம் என்ற ஒரு தவறான தகவலை, பெரி யாரின் சோவியத் பயணக் குறிப்பை வெளியிட்ட திரு.வே. ஆனைமுத்து அந்த நூலின் முன்னுரையில் குறிப் பிட்டது தவறான தகவலாகும்.
குடிஅரசுத் தகவல்

13.12.1931 தேதியிட்ட குடிஅரசு வெளியிட்ட பெரியாரின் அய்ரோப்பியப் பயணம் குறித்த தகவல் இது. தலைப்பே நமது ஆசிரியரின் அய்ரோப்பா பயணம்.
13.12.1931 அன்று நமது ஆசிரியர் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்கள் திரு. இராமநாதன் அவர்களுடன் Ambosie அம்போய்சி எனும் பிரெஞ்சு கப்பலில் அய்ரோப்பா முழுவதும் சுற்றுப் பிர யாணம் செய்வதற்குப் புறப்பட்டு  விட்டனர். திரு. இராமசாமி அவர்கள் உடல் நிலை தொடர்ந்து பிரயாணத் திற்கு இடம் கொடுக்க முடியாத நிலை யிலிருப்பினும் இயக்க வளர்ச்சியை முன்னிட்டு என்ன நேர்ந்த போதிலும் தமது சுற்றுப் பிரயாணத்தைமுடித்து வருவதென்ற எண்ணத்துடனேயே புறப்பட்டு விட்டார். சுற்றுப் பிரயா ணத்தை முடித்துவிட்டு மீண்டும் நம் நாடு திரும்புவதற்கு ஏறக்குறைய 34 மாதங்கள் செல்லுமெனத் தெரிய வருகின்றது. இவர்களது சுற்றுப் பிரயாண நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நமது இயக்க சம்பந்தமான கட்டுரை களும் நமது பத்திரிகையில் வெளி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

20.12.1931இல் குடிஅரசு

20.12.1931-ல் குடிஅரசு வெளியிட்ட செய்தி இது. திரு ஈ.வெ.இராமசாமி அவர்களும் திரு. எஸ். இராமநாதன் எம்.ஏ., பி.எல்., அவர்களும் 13.12.1931இல் சென்னைத் துறைமுகத்தில் அம் போய்சி (Amboise) என்னும் கப்பலில் ஏறினார்கள். அன்றிரவே கப்பல் புதுவைத் துறைமுகத்தை அடைந்தது. ஏற்கெனவே இச்சேதி அறிந்திருந்த புதுவைப் பிரமுகர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் 14ஆம் தேதி காலை படகுகளில் ஏறி இராமசாமிக்கு ஜே! இராமநாதனுக்கு ஜே! என்ற கோஷத் துடன் கப்பலில் வரவேற்புப் பத்திரம், புஷ்ப மாலைகள் சகிதம் அளவளா வினர், கப்பல் அதிகாரிகள் அனை வருக்கும் பேராச்சரியமும், தலைவர் களின் விஷயத்தில் பெருமதிப்பும் ஏற்பட்டது. இதன் பிறகு கூட்டத்திற்குத் தலைமை வகித்த பிரஞ்சிந்திய சட்டசபை மெம்பரும், வக்கீலுமாகிய திரு. பெருமாள் கப்பல் உயர்தர அதிகாரிகளுக்கு திரு. ஈ.வெ. இராமசாமி, திரு. எஸ். இராமநாதன் ஆகிய இரு தலைவர்களையும் அறி முகப்படுத்தினார்கள். அய்யா வசதியாக முதல் வகுப்பில் பயணித்து உல்லாச மாகச் சென்றிருக்கலாம். மாறாக நான்காம் வகுப்பில் பயணித்துச் சிரமம் பாராத சிக்கனக்காரர் அவர்.

பிறகு பிரான்சு தேசத்திலுள்ள அநேக தலைவர்களுக்கும், பல சங்கங் களுக்கும் நமது தலைவர்களை அறிமுகப்படுத்தக் கூடியதும், ஆதரவு செய்யுக் கூடியதுமான அமோக சிபாரிசு லெட்டர்கள் ஒரு சிறிய தங்கச்சிமிழில் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. அந்தச் சிபாரிசு கடிதங்கள் பிரஞ்சிந் தியத் தலைவர்களால் அளிக்கப்பட்டன. அதன்பிறகு கையோடு கொண்டு போயிருந்த சிற்றுண்டி அனை வருக்கும் வழங்கப்பட்டது. நடுப்பகல்  ஒரு மணிக்கு தன் பிரயாணம் ஆகட் டும் என்ற கோஷத்துடன் அனைவரும் படகேறி கரைக்கு வந்தனர்.
இதற்கிடையில் தோழர்கள் பாரதி தாசன் அல்போன்ஸ்லகாஷ், ம.ரோ யெல், பெருமாள், சட்டசபை மெம்பர் ஆகியோர் தலைவர்களிடம் தனி மையில் பேசியிருந்தனர்.

தவறு அல்ல விஷமத்தனம்

இவ்வளவு உண்மை இருக்கத் தந்தை பெரியாரின் சோவியத் ரஷ்யப் பயணம் என்ற ஒரு தவறான தகவல்- விஷமத்தனமான தகவலைப் பெரி யாரின் சோவியத் பயணக் குறிப்பை வெளியிட்டவர், வெளியிட்டார் எனில் அது நாணயக் குறைவு என்பதைவிட,  பெரியாரை இழிவுபடுத்துவது என்போம்.
தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை எந்த ரகசிய நடவடிக் கைகளிலும் எப்போதும் ஈடுபடாதவர் அவர், என்பதும் எதையும் வெளிப் படையாகச் சொல்லியும் செய்துமே பழக்கப்பட்ட தலைவர் என்பதும் அவர்களை அறிந்தவர்களாலும், ஆய்ந் தவர்களாலும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

அய்யாவின் கடவுச்சீட்டு என்டார்ஸ்மென்ட்

அத்தகைய தலைவர் ரகசியமாக ஒரு சரக்குக் கப்பலில் ஒளிந்து கொண்டு சென்றார் என்பதுபோன் றும், பாஸ்போர்ட் இல்லாது சென்றார் என்பது போன்றும் ஆனைமுத்து எழுதுவது நம் அறிவு ஆசானைக் கொச்சைப்படுத்தும் அதி மேதா வித்தன ஆராய்ச்சியாகும் உண்மைக் கும் இக்கூற்றுக்கும் வெகுதூரம். பழைய பாஸ்போட்டைக் கையில் வைத்துள்ள நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும் என்று பதிப்பாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

அவர் எழுதிய நூலிலேயேகூட

அதற்குமுன் ஒரு செய்தி: தந்தை பெரியார் அவர்கள் பாஸ்போர்ட் இன்றி  ரகசியப் பயணம் செய்தார் என்று திரு. ஆனைமுத்து அவர்கள் எழுதிய அதே நூலில் பக் 298இல் 4.7.1932 அன்று மீட்டிங் முடிந்ததும் ஒரு போலீஸ்காரர் வந்து 9116 பாஸ்போர்ட்டைப் பார்த்துக் குறித்துக் கொண்டான் என்றும் பக்.300இல் 5.7.1932 அன்று மறு படியும் காலை 10 மணிக்கு வழியில் போலீஸ்காரன் வந்து பாஸ்போர்ட்டைக் கேட்டு அதில் உள்ள மற்ற ஊர்களைக் குறித்துக் கொண்டான் என்றும் பாஸ்போர்ட் ஆதாரம் உள்ளது இவ்வாறு அரிய தகவலைத் தெரிவித்த ஆசிரியர் இறுதியில் பண்பாட்டுடன்
எனவே தந்தை பெரியார் அவர் களைப் பற்றி இது போன்று முற்றிலும் தவறான தகவல்களைப் பதிவு செய்வதும் பரப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரியார் பற்றா ளர்களின் விருப்பமாக உள்ளது என் பதை இவர் போன்றவர்கள் உணர வேண்டும்

வெளிநாட்டுப் பயணம் குறித்து - நெய்வேலியில்

நெய்வேலியில் நடைபெற்ற தந்தை பெரியார் குறித்த நிகழ்வு ஒன்றைத் தஞ்சை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் நெய்வேலி ஜெயராமன் அவர்கள் குறிப்பிட்டார். இது பதிவு செய்யப்பட வேண்டிய செய்தி ஏனென்றால் பெரியாரின் உயர்ந்த பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வும் கூட. சங்கராச்சாரியாரை நெய்வேலி யில் தெர்மல் ஸ்டேஷன் உள்ளே பார்ப்பனர்கள் அழைத்துச் சென்றனர் தந்தை பெரியாரையும் அதுபோல் தெர்மல் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று உள்ளே மின் உற்பத்தி யாவதைக் காட்ட வேண்டும் என நம் தோழர்கள் விரும்பி அதற்கு ஒரு வாய்ப்பாகத் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினர். அப்போது நெ.லி.கா-வின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பிர மணியனின் மகள் கோபால் குமார மங்கலம் இதற்கு அஞ்சினார். ஏனென் றால் படத்திறப்பு விழாவின் போது நம் தொழிலாளர்கள் கூடி விடுவர். இதனால் டிரிப் ஆகி மின் உற்பத்தி தடையாகி விடுமே என்று அஞ்சினார்.
நெய்வேலி நிறுவனத் தலைவர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி வாயிலாக இவ்விவரத்தைப் பெரியா ருக்குத் தெரிவிக்கக் கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார். அப்போது ஆசிரியரும் பெரியாருடன் இருந்தார். எனவே அக்கடிதத்தை ஆசிரியரிடம் கொடுத்து அவர் படித்துப் பார்த்து அய்யாவிடம் சேர்த்து விட்டார்.  கடிதத்தைப் படித்த பெரியார் பதில் சொல்லாமல் பையில் வைத்துக் கொண்டு பதில் ஏதும் சொல்லவில்லை. பெரியார் வருவாரா வர மாட்டாரா என்று நிருவாகத்திற்குக் குழப்ப மேற்பட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த அய்யாவிடம் எடுத்துச் சொல்ல இரண்டு அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அவர்களிடம் பெரியார், நீங்கள் தைரியமாகப் போய் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். தெர்மல் ஸ்டேஷனுக்கு எவ்விதச் சேதமும் நேராது என்று சொல்லிவிட்டார். நம் இயக்கத்தவர்கள் அய்யாவிடம் அய்யா, சங்கராச்சாரியாரை அழைத்துச் சென்று மின் உற்பத்தி நடைபெறு வதைக் காண்பித்திருக்கிறார்கள். அதுபோல் நீங்களும் வர வேண்டும் அய்யா என்று வற்புறுத்தினர்.

சிம்மம் உறுமியது

அய்யா அவர்களிடம் கோபமாக, உங்களுக்கு மூளையிருக்கா. சங்க ராச்சாரியார் வந்தால் நான்கைந்து பேர் அவர் பின்னாலே போவான். ஆனால் நான் வந்தால் நம் ஆட்கள் ஆயிரக் கணக்கில் வருவார்கள். அது சென் சிடிவ்  (அய்யாவே பயன்படுத்திய ஆங்கிலச் சொல்) ஆன இடம் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் பெரியார் வந்தார், டிரிப் ஆகி விட்டது என்று எனக்குத் தானே கெட்ட பெயர்.
உனக்குத் தெரியுமா? நான் அமெரிக்கா தவிர அய்ரோப்பாவில் பெரிய பெரிய நகரங்களையெல்லாம் பார்த்து வந்திருக்கிறேன். இதைவிடப் பெரிய தெர்மல் ஸ்டேஷன் எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று அய்ரோப் பாவில் தாம் பார்த்தவற்றைச் சொல்லி யிருக்கிறார்.

திருவள்ளுவர் படம் திறப்பு

பின்னர் தெர்மல் ஸ்டேஷனுக்கு வெளியே வெப் எனும் ஆங்கிலோ இந்தியர், பொறியாளர் தலைமையில் படத்தைத் திறந்துவைத்தார். பிறகு மாலையில் கூட்டம் நடைபெற்ற போது, வழக்கத்திற்கு மாறாகப் பல்லாயிரக் கணக்கானவர் கூடினர். எப்போதும் உள்ள கூட்டத்தைவிட அதிகக் கூட்டம் பார்த்த பெரியாருக்குப் பெரியார் வருகையை முன்னிட்டு அரைநாள் விடுமுறையை, சங்கராச்சாரியார் வந்த போது வழங்கியதுபோல் வழங்கியது.

அரை நாள் விடுமுறை

தமது வருகைக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்ட செய்தியறிந்து பெரியார் சீறிய சிங்கமானார். மைக் கிலேயே கேட்கும்படியாக விடுமுறை, விட்ட நிருவாகத்தையும் தோழர் களையும் கோபித்துக் கொண்டார். தமது சொற்பொழிவு கேட்க இவ்வளவு கூட்டமா என்று அய்யுற்று உண்மை தெரிந்து,
நான் உள்ள விடுப்பையே குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண் டிருக்கிறேன். அரைநாள் விடுப்பு உங்களைக் கேட்கச் சொன்னது யார்? அரைநாள் விடுப்பு என்றால் எவ்வளவு உற்பத்தி பாதிக்கும்? இது நேஷனல் வேஸ்ட் உங்களுக்கு மூளை வேண் டாமா? என்று கோபித்த பெரியாரை, எப்படியோ, நிர்வாகமாக விடுப்புக் கொடுத்தது என்று கூறிச் சமாளித் தனர். இங்கும் பெரியார் பேசிய பேச்சு பின்னர் சிறிய நூலாக வெளி வந்துள் ளது என்பதும் பெரியார் நிறுவனம் வெளியிட்ட அங்குக் கொண்டு வந்த நூல்கள் அத்தனையும் விற்றுச் சாதனையும் ஏற்பட்டிருக்கிறதாம்.

ஆசிரியர் முகவுரையின் வாக்கு

ஆசிரியர் முகவுரையில் குறிப் பிட்டதுபோல் சாதி மத பேதங்கள் மூட வழக்கங்கள் தாங்கி நடைபெற்று வரும் சண்டையுலகுதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்! புதியதோர் உலகம் செய்வோம். பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப் பேசு சுயமரியாதை உலகு எனப் பேர் வைப்போம் ஈதே காண் சமூகமே, யாம் சொன்ன வழியில் ஏறு நீ! ஏறு நீ! ஏறே! என்ற லட்சியப் பயணத்திற்கு அய்யா அவர்தம் மேலை நாட்டு சுற்றுப் பயணக் குறிப்பு ஒரு நல்ல உரம் ஆக, ஊக்க மாக அமைந்தது; தமிழ் மக்களுக்கு அவ்வுலகைக் காட்டி ஒரு புத்துணர்வை உருவாக்கப் பயன்பட்டது என்றால் அது மிகையல்ல.

பெரியாரின் பாஸ்போர்ட்

இந்நூலில் புனிதர் பெரியாரின் பாஸ்போர்ட் நகலைப் பார்க்கிறோம். அதன்எண் 9116. Given at Fort. St. George on 9th day of April 1931 signed by secretary to the Government of Madras Law Department என்று உள்ளது.

சுதந்திர உணர்ச்சி

எந்தச் சந்தர்ப்பத்திலும் கொள்கை களை மாற்றிக் கொள்ளாத தலைவர் பெரியார் நான் இதுவரை எனது உடைகளை மாற்றிக் கொள்ளவில்லை. தலைக்கு மாத்திரம் ஒரு குளிர் (மங்கிகேப்) குல்லாப் போட்டுக் கொண்டேன். ஆகாரம் ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தான் முக்கி யமாய் உபயோகிக்கிறேன். இவ்விடம் மிக மலிவு 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது.

இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு நான் ஒருவரே தாடி வைத்தவனாகவும், ஒரு புது மாதிரி மனிதனாயும் காணப் படுவதால் யாரும் குறிப்பாய்ப் பார்ப் பதும் மற்றும் மரியாதை செய்வதுமாய் இருக்கிறார்கள். கூடுமான வரையில் ஜனங்கள் நமது ஜனங்களைவிட நல்ல குணமுள்ளவர்களாகவும் விவேகிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்தியன் என்றால் மிகப் பிரிய மாய்ப் பேசுகிறார்கள். அய்ரோப்பியரிடம் வெறுப்பாய் இருக்கிறார்கள். இவ்வி டத்தில் பெண்கள் மிகவும் சுறுசுறுப் பாகவும், சுதந்திர உணர்ச்சியும் தைரியமும் துணிவும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவர் கள் ஆகியவர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளைவிட அதிக புத்தியும் சுதந்திர உணர்ச்சியும் துணிவும் இருக்கின்றன.

பெரியார் கண்ட ரஷ்யா

பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அய்க்கிய தேசம் முதலியனவெல்லாம் குடியரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலையில்லாத் திண்டாட்டமே கிடையாது. ஒரு சில பிச்சைக்காரர்கள் தான் இருக்கிறார் கள். அவர்களெல்லாம் வயது சென்ற வர்களும், அங்கஹீனர்களுமே அவர் களை அரசாங்கம் போஷிக்கிறது உண்மையில் அது ஒரு புதிய உலகம் அதுபோல் முன்னெப்போதும், எந் நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதே யில்லை. அந்நாடு தொழிலாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப் படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படுகின்றனர். மக் களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே இல்லை.

நன்றி உணர்விற்கு

இந்நூலில் உள்ள தகவல்களைச் சுவைமிகுந்த செய்திகளை அடுக் கினால் இங்கு இடம் போதாது எனினும் இறுதியாக நூலின் முகவுரையில் பதிப்பாசிரியரின் நாணயம், உண்மை யான நன்றி அறிவிப்பு உள்ளது.
இந்தச் சுற்றுப் பயண நிகழ்வு களை எடுத்துத் தொகுக்க எனக்கு உதவிய தோழர்கள் மானமிகு சைதை மு.ந. மதியழகன், வை. கலையரசன், ஒருங்கிணைந்த பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க. சரவணன், நூலகர் கோவிந்தன், இசையின்பன், தட்டச்சு செய்த சங்கர், ச. பாஸ்கர், ஆனந்தன் நூலினை அழகுற வடிவமைத்த ஆர்.பி. நாராயணன் ஆகியோருக்கு நமது நன்றியினை உரித்தாக்குகிறோம் என்று குறிப்பிட்ட பாங்கு பாராட்டுக் குரியதாய் அமைகிறது. நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்ட இந்நூலில் ரஷ்யாவைப்பற்றி மட்டும் 11 கட்டுரைகள் உள்ளன. இது பலருக்கும் பயன ளிக்கும்.
 - முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் --"விடுதலை” 10-2-2013

16 comments:

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் அறிவுரையான சிக்கனத்தைக் கடைப்பிடித்து தொண்டறத்தில் ஈடுபட்டு சிறப்பாக வாழுங்கள்!


துபாய் அமீரக தமிழர்களின் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

அமீரகத் தமிழர்கள் அமைப்பு (துபாய் அஜ்மான்) சார்பில் துபாய் ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா 2013 விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அஜ்மான் அமீரகத் தமிழர்கள்அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் ஏ.எஸ். மூர்த்தி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார். அருகில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், அஜ்மன் அமீரகத் தமிழர்கள்அமைப்பின் பொருளாளர் எஸ். அப்துல் லத்தீப், ராஜேஷ் சதாசிவம், குடந்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளனர். (9.2.2013).

துபாய், பிப்.10- தந்தை பெரியார் அறிவுரையான சிக்கனத்தைக் கடைப்பிடித்து, சேமித்து தொண்டறத் திலும் ஈடுபட்டு சிறப்பாக வாழுங்கள் என்று துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நேற்று (9.2.2013) சனிக்கிழமை துபாய் ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற அமீரக தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 நிமிடங்கள் எழுச்சியுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில்:

திரைகடல் ஓடி திரவியம் தேடும் அமீரக தமிழர்கள் மொழியால் மட்டுமல்ல, வழியாலும் விழியாலும் (பார்வையாலும்) தமிழர்களாகவே வாழுங்கள். தந்தை பெரியார் அவர்களின் அறிவுரையான சிக்கனத்தை கடைப்பிடித்து சேமித்து தொண்டறத்திலும் ஈடுபடுங்கள், மனிதநேயத்துடனும், பகுத்தறிவுடனும், சுயமரியாதை உணர்வுடனும் வாழக் கூடிய வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் எனத் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

காலை 7மணியளவில் தொடங்கிய இவ்விழா இரவு 11 மணி வரை மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் ஏ.எஸ். மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் சிறப்ப விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார், மற்றும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், அஜ்மான் பின் பக்கீத் குழுமத்தின் தலைவர் சுல்தான் அப்துல்லா, ரஷீது பக்கீத் அல் மத்துருஷி, துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பு தலைவர் சே. அமுதரசன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

இம்முப்பெரும் விழாவில் நகைச்சுவை அரசு தொலைக் காட்சி பிரபலம் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தேவக்கோட்டை இராமநாதன் தொகுப் புரை வழங்கினார். (தமிழர் தலைவர் அவர்களின் விரிவான உரை பின்னர் வெளிவரும்.)

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அமைத்துக் கொடுத்த பாதையில் சாதி சமய வேறுபாடற்ற சமுதாயமே எங்கள் குறிக்கோளாகும் துபாய் முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு


அமீரகத் தமிழர்கள் அமைப்பு (துபாய் அஜ்மான்) சார்பில் துபாய் ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா - 2013 விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு.சே. அமுதரசன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி, டாக்டர் அருள் முருகன், முனைவர் ஏ.எஸ். மூர்த்தி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சாக்கோட்டை க. அன்பழகன், அபுதாபி நோபல் குரூப் நிறுவனர் ஷாகுல் அமீது ஆகியோர் உள்ளனர். (9.2.2013)

தமிழ் ஓவியா said...

துபாய், பிப்.10- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அமைத்துக் கொடுத்த பாதையில், சாதி சமய வேறுபாடற்ற சமுதாயமே எங்கள் குறிக் கோளாகும் என துபாயில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் எழுச்சியுரையாற்றினார்.

துபாய் அஜ்மான், அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில் 9-2-2013 அன்று மாலை 6.00 மணியளவில் துபாய், சேக் ரசீத் அரங்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

பாரசீக வளைகுடாவில் துபாய் - அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு, உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்கு அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் அமைந்தது, நமது தமிழர் பண்பாடு.

இன்று உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், உலகம் சுருங்கி, உலகமே ஒரு கிராமமாக மாறி விட்டது என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நமது முன் னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, நாமெல்லாம் பெருமிதம் கொள் கிறோம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கிணங்க, இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழர்கள், தமது அறிவாற்றலினாலும், உழைப்புத் திறத்தாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அய்க்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களைக் கொண்ட ஒரு நாடு. 1960களின் தொடக்கத்தில் அபுதாபியில் எண்ணெய் கண்டுபிடிக் கப் பட்டது. இதுதான் கூட்டமைப்பை உருவாக்கும் கோரிக்கைக்கு வழிவகுத்தது. அய்க்கிய அரபு அமீரகத் தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33 சதவீதத்தைக் கொண்ட எண்ணெய், எரிவாயு இவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது.

வளைகுடாவில் சவுதி அரபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, மூன்றாவது பெரிய எண் ணெய் உற்பத்தி செய்யும் நாடு, அய்க்கிய அரபு அமீரக மாகும். 1973-லிருந்து, பாலைவன, சிறுநாடுகளைக் கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, படிப்படியாக முன்னேற்றம் கண்டு, இன்று உயர் வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. வெளிநாட்டில் பிறந்தவர்கள், அதிக அளவில் வாழும் நாடுகளில், அய்க்கிய அரபு அமீரகமும் ஒன்று என்று கூறப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய அய்க்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன், உறுதியான பிணைப்பினைக் கொண்டுள்ளது. அர சாங்கம் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங் களைப் பேணுவதில் அக்கறையோடு இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகிறது. துபாய் என்பது அய்க்கிய அரசு அமீரகத்தின் ஏழு அமீரகங் களில் இரண்டாவது பெரியது. கடந்த சில ஆண்டுகளில் காண்போர் வியந்திடும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

துபாய் மட்டுமல்லாமல், அய்க்கிய அரபு அமீரகம் என்ற நாடே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் நாடாகும். இந்த நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் இஸ்லாமியர், கிறித்துவர்கள், இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அய்க்கிய அரபு அமீரகம் இஸ்லாமிய நாடாக இருந்த போதும், இங்கு வசிக்கும் பிற மதத்தினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அனைத்து மதங்களின் மக்களும் மனிதநேயம் போற்றி, மத நல்லிணக்கத்தோடு கூடிவாழ்கின்றனர்.

துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போது மானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கும் போதுமானதாக இருக்காது என்பதை, இந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்துப் பெருக்கிடும் பொருட்டு, அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக, துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பலமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மென்றால், 2005ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில், சொத்து வாங்க அனுமதி அளித்தது, வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...


கடந்த மாதம் என்று நினைக்கின்றேன், பல ஆங்கில நாளேடுகளில் ஒரு செய்தி வெளி வந்தது. அதாவது, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள முதுமக்கள் தமிழகத்தி லிருந்து சென்றவர்கள் என்பதையும், ஆஸ்திரேலி யாவில் மிகவும் பிரபலமான டிங்கோ என்ற வகை நாய்களும் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதையும் அறிவியல் ரீதியாகக் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்க்குடி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சென்றிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டு மென்றால்; பாரசீக நாடுகளைப் பொறுத்த வரையில், பாரசீக நாடுகளுக்கும், தமிழகத்திற்கும் பல்லாண்டுகளாகத் தொடர்பு இருந்ததை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித் துள்ளன. அண்மையிலே கூட; இன்று கேரளமாக விளங்கும் பகுதிகளில், ரோமானிய நாணயங்களும் பழைய தமிழ் எழுத்துடன் கூடிய கல்வெட்டுகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. யவனர்கள் பற்றிய குறிப்புகள் சங்ககால இலக்கியங்களில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. இதுபோன்ற தொன்மையான தொடர்புகள் இன்று மேலும் வலுப்பெற்றிருப்பதை நாம் காணமுடிகிறது. இன்று இந்தியா, இலங்கை, மலேசியாவுக்கு அடுத்தபடியாக, மிக அதிகஅளவில் தமிழ் மக்கள் வசித்து வரும் பகுதியாக, இந்த பாரசீக வளைகுடா திகழ்கிறது.

எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தமிழகத் தின்பால் தமிழ்ப்பண்பாட்டின்பால் நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பும், உறுதியும், பற்றும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. இன்னும் சிறப் பாக கூற வேண்டும் என்று சொன்னால், தமிழகத்திற்கு

இணையாக, ஏன் தமிழ்நாட்டிற்கும் மேலாக தமிழ் கலாச்சாரம், கலை, பண்பாடு போன்றவற்றை பேணிக் காக்கும் இடங்களாக அவற்றைப் போற்றிப் பின் பற்றும் இடங்களாக வெளிநாடுகள் உள்ளன என்றுகூடச் சொல்லலாம். இது மட்டுமின்றி, இவ்வாறு தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதால் தங்களுடைய வாழ்வாதாரங்களை மட்டும் மேம் படுத்திக் கொள்ள வில்லை. அவர்களின் அயராத உழைப்பு தமிழக பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பயன்பட்டு வருவதை, இங்கு நான் பெரு மையோடு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று இந்தியாவைப் பொறுத்தவரை வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் வருவாய் என்று பார்த்தால், அதிலே தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்தவருவாய் காரணமாகத் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்குக் காரணமாக உள்ள உங்களை இங்கு சந்திப்பதிலும், உங்களோடு அளவளாவி மகிழ்வதிலும் நான் பூரிப்பு அடைகிறேன்.

இன்று, முப்பெரும் விழாவாக இந்தவிழா நடைபெற்று வருகிறது .தைப்பொங்கல் விழா, கிறிஸ்துமஸ் விழா, பக்ரீத் பெருநாள் என்ற முப்பெரும் விழா, இங்கு நடைபெறுகிறது. எதையுமே மூன்று மூன்றாக வகைப்படுத்திப் பார்ப்பது என்பது தமிழர்களின் மரபு, பண்பாடு. அய்யன் திருவள்ளுவர் வாழ்க்கையையே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்றாக வகைப்படுத்தி எக்காலத்திற்கும் எந்நாட்டிக்கும் பொருந்தும் குறட்பாக்களை வடித்துத் தந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

ஏன் தமிழேகூட முத்தமிழ் தானே! மூவேந்தர் - முத்தமிழ் - முச்சங்கம் என்ற பெருமை தமிழ் இனத் துக்குத் தனிச் சிறப்பாகும். இயல், இசை, நாடகம் என்று மூன்றாகப் பகுத்துப் பார்த்து இலக்கணங்கள் வகுத்தது முதலில் நம் தமிழர்கள்தான். ஏன் தமிழகத்தின் எண்ணப் போக்கையே மாற்றி அமைத்த அறிஞர் அண்ணாவும் மூன்றெழுத்து, அவர் தோற்றுவித்த தி.மு.க.வும் மூன்றெழுத்து. அவர் தந்த கட்டளைகளும் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்பதும் மூன்று.

இத்தருணத்தில் வேறொன்றும் நினைவுக்கு வருகிறது. தி.மு. கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் முதலாவதாகப் பேசிய கலைஞர் அவர்களுடைய பேச்சினையும் இங்கு கோடிட்டுக் காட்ட விரும்பு கிறேன். தலைவர் கலைஞர் மூன்றெழுத்துக்குள்ள மகத்துவத்தை வருணித்துள்ளார்.
மூன்று கடல் சூழ்ந்த தமிழ் நிலத்தில் மும்முரசு கொட்டி மூன்று கொடிகட்டி முக்கனியாம் முத் தமிழை வளர்த்த மூவேந்தர் பரம்பரையில் வந்தவர்கள் நாம் - நமது மொழிக்குப் பெயர் தமிழ் - மூன்றெழுத்து! தமிழர்க்குரிய தனிப் பண்பு -மூன்றெழுத்து! பண்பில் எழுந்திடும் அன்பு - மூன்றெழுத்து! அன்பில் விளையும் காதல் - மூன்றெழுத்து! காதலர் விரும்பும் வீரம் - மூன்றெழுத்து! வீரர்கள் விழுப்புண் ஏந்தும் களம் - மூன்றெழுத்து! களத்தில் காணும் வெற்றி - மூன்றெழுத்து! வெற்றிக்கு விதையான அறிவு - மூன் றெழுத்து! அந்த அறிவுப் பெட்டகமாய் வந்துதித்த அண்ணா மூன்றெழுத்து அந்த அண்ணன் கண்ட கழகமும் தி.மு.க. - மூன்றெழுத்து!

என்று மூன்றெழுத்தின் பெருமையை மோகனத் தமிழில் முழங்கியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகமும் ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தி.மு.கழகம் பிறந்த நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருவது உங்களுக்கு தெரியும்.
இங்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் இஸ் லாமியருக்கான விழாவையும், கிறித்துவர் களுக்கான விழாவையும் பொதுவாக தமிழர்களுக்கான விழா வையும் இணைத்துக் கொண்டாடுவது, மக்கள் அனைவரும் எவ்வாறு ஒன்றுபட்டு வாழவேண்டும்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்த்திடும் விதமாக அமைந்திருக்கிறது.

இஸ்லாமியச் சான்றோர்களும், கிறித்துவப் பெரி யோர்களும் - அறிஞர் களும் தமிழ்மொழியின் வளர்ச் சிக்கு ஆற்றியிருக்கும் அரும் பணிகளை அளவிட முடியாது.
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மையாகும். தைத் திங்கள் முதல்நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று நடைமுறைப் படுத்திட, 2008ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, தமிழகச் சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதல் தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாளென தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாள் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள், தைத்திங்கள் உழவர் திருநாள் என தமிழகப் பெருமக்கள் அனை வராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று தமிழ்நாட்டில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத் தோடும் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அதற்கு நமது கலாச்சாரம் மட்டும் அல்ல தந்தை பெரியார் அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையும், அறிஞர் அண்ணா அவர்கள் தந்த கொள்கையும், தலைவர் கலைஞர் அவர் களின் இடைவிடா நடவடிக்கைகளும் காரண மல்லவா?

இந்தச் சமயத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் சில கருத்துக்களைக் கூற விரும்பு கிறேன். இன்றைக்கு, உலகளாவிய பொருளாதாரக் கொள்கை என்பதும் பன்னாட்டு வணிகம் என்பது தவிர்க்க முடியாதவை. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி, நமது இந்தியத் திருநாட்டை முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்துள்ளது.

தமிழ் ஓவியா said...


ஆயினும், இந்த வளர்ச்சியின் பயன்கள் பாகுபாடின்றி அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதிலே நாம் மிகுந்த கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது ஒருசில மேல்தட்டு மக்களுக்கு மட்டும் உரியது என்று இல்லாமல் நலிந்தோருக்கும் ஏழை எளி யோருக்கும், பேரறிஞர் அண்ணா கூறியதைப் போல கடைக்கோடி மனிதனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அதற்காகத் தான் எப்பொழு தெல்லாம் தி.மு.கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொதெல்லாம் நலிந் தோருக்கான பல்வேறு நலத் திட்டங்களை முனைப் போடு செயல்படுத்தி வந்துள்ளது.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள தி.மு.கவும் பெரும் பங்காற்றி யுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மறைந்த முரசொலி மாறன் அவர்கள் புதிய பொரு ளாதாரக் கொள்கையின் சிற்பி என்றுகூடக் குறிப் பிடலாம். வளர்ந்து வரும் நாடுகளுக்கான மாநாட்டில் அவர் ஆற்றிய ஆக்க பூர்வமான பங்களிப்பு அனை வரின் பாராட்டையும் பெற்றது.

ஒரு காலத்தில் நகரெங்கும், வீட்டுத் தொலைபேசி இணைப்புகள் மிகச் சிறிய எண்ணிக்கையிலே இருந்தன; அதைப் பெறுவதற்கு நீண்ட காத்திருப்போர் வரிசை இருந்தது. ஆனால் இன்றோ ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் செல்பேசிகள்; மொத்த எண்ணிக்கையோ வியத்தகு அளவில்! உன் கையில் உலகம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, அறிவியல் முன்னேற்றம் உலகத்தை ஆச்சரியப்படத்தக்க வகையில் சுருக்கிவிட்டது.

உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரையும் ஒரு வினாடியில், நினைத்த மாத்திரத்தில், தொடர்பு கொள்ளக் கூடிய அளவிற்கு, தொலைபேசி - கைபேசி மூலமாகப் பேசிடவும், பார்த்துக் கொண்டே பேசிடவும் வசதியினையும், வாய்ப்பினையும் இன்று நாம் பெற்றிருக்கிறோம். இந்தியத் திருநாட்டில், மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் தி.மு. கழகத்தைச் சார்ந்த அமைச்சர்களினால் தொலைபேசித் துறை அபாரமான வளர்ச்சியை, நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும், பிற நாடுகளோடு எப்பொழுது வேண்டு மானாலும் தொடர்பு கொள்ளலாம் என்ற அளவிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

தொலைபேசி என்பது சாதாரண மனிதனுக்கு கிடைக்காது என்ற நிலையை மாற்றி, ஒவ்வொரு நபரும் கையில் ஒரு கைபேசி குறைந்த செலவில், குறைந்த கட்டணத்தில் வைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கியது இந்தியத் திருநாட்டில் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.கழகத்தைச் சார்ந்த அமைச் சர்கள்தான் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். 2004ஆம் ஆண்டில், தொலைபேசி தரைவழி இணைப்பு மற்றும் செல்பேசி இணைப்பு எண்ணிக்கை சுமார் 5 கோடி ஆக இருந்தது.

2007ஆம் ஆண்டில் செல்பேசிகள் எண்ணிக்கை 27 கோடியாக வளர்ந்து; அது, 2010ஆம் ஆண்டில் 73 கோடியாக உயர்ந்து, 2012இல் இந்த எண்ணிக்கை சுமார் 93 கோடியாக வளர்ச்சி பெற்றுள்ளதென்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, 2004-2007இல் செல்பேசிக் கட்டணம் ரூ.3லிருந்து இந்தியா முழுமைக்கும் 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இன்றைக்கு ஒரு லோக்கல் கால் 30 பைசாவிற்குப் பேசும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெளி நாடு களுக்கு பேசும் கட்டணமும் வெகுவாகக் குறைந் துள்ளது.

எண்ணிக்கை மட்டுமல்ல தொலைத் தொடர்புக் கட்டணங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன. செல்பேசி வந்தபோது ஒரு நிமிடத்திற்கு 14 ரூபாய் 15 ரூபாய் கட்டணம் என்ற நிலைமாறி, இன்றைக்கு எங்கு பேசினாலும் 50 பைசா, 60 பைசா என்ற அளவில் கட்டணங்கள் குறைந்துள்ளன.

தமிழ் ஓவியா said...

ஆரம்பகாலத்தில் அயல்நாடுகளுக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் என்ற நிலை மாறி இன்று மொபைல் சேவையில் 6 ரூபாய் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதுவும் இன்டர்நெட் சேவையில் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களை உலகிலேயே மிகக் குறைவான அளவிற்கு கொண்டு வந்ததும், இந்திய மக்களின் 75 கோடி பேர் இச்சேவையை பெறுவதற்கு வழிக் கண்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்களே!

இதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால் முன்பெல்லாம் உங்களின் மனைவியோ, பெற்றோரோ, குழந்தை களோ, சகோதர - சகோதரிகளோ, நண்பர் களோ தமிழகத்திலிருந்து உங்களோடு பேச வேண்டும் என்றால் பக்கத்திலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று டிரங்கால் புக் செய்து மணிக்கணக்கில் காத்திருந்து எப்படி இருக்கீங்க என்று கேட்பதற்கு முன்பாகவே கட்டணம் உயர்ந்து விடுமோ, இணைப்பு துண்டிக் கப்பட்டு விடுமோ என்ற பயத்தோடு இருந்த நிலைமை இருந்தது. ஆனால் இன்றோ நினைத்த நேரத்தில் நீண்டநேரம் உரையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. இது ஒரு மாபெரும் சாதனை தான். ஆனால், உங்களில் சிலர், ஏன் இப்படி கட்டணத்தைக் குறைத்து விட் டனர், எங்களை தூங்கக்கூட விடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்து தொலைபேசி தொல்லைபேசி ஆகி விட்டதே என்றுகூட நினைக்கலாம். நீங்கள் நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்கின்ற வழி இன்றைக்கு கிடைத்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தமிழர்கள் உழைப்பதற்கு என்றும் சளைத்தவர்கள் அல்லர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற அடிப்படையில் தமிழர்களின் சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் மலேசியா நாட்டின் காடுகளைத் திருத்தி ரப்பர் தோட்டங்களை அமைத்ததும் தமிழர்களின் உழைக்கும் கைககள்தான். அதேபோல் இலங்கைக் காடுகளை மாற்றி அமைத்து அங்கு தேயிலைத் தோட்டத்தை அமைத்ததும் தமிழர்கள்தான். சிங்கப்பூர் இன்று சிங்கார சிங்கப்பூர் என்று விளங்குகிறது என்றால் அதற்கு தமிழர்களின் பங்கு சாமான்யமானதா என்ன? இதைப் போன்று மொரிசியசிலும் சரி, தென்னாப் பிரிக்காவிலும் சரி, கரும்புத்தோட் டங்களை அமைத்ததிலும் தமிழர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகத் தான் இன்று இந்தபாலைவனப் பகுதிகளில் மிகக் கடினமாக வேலைகளில் உங்கள் உன்னதமான உழைப்பினையும் இங்கு ஆற்றி வருகின்றீர்கள்.

பொருளாதார வளர்ச்சியோடு, சமூக வளர்ச்சியும் கைகோர்த்து வளரவேண்டும் என்பது எங்கள் குறிக்கோளாகும். சிறுபான்மையினர் நலன், பெண்கள் முன்னேற்றம், சாதி சமய வேறுபாடற்ற சமுதாயம் போன்றவை எல்லாம் கழகம் என்றுமே தீவிரமாகச் செயல்படுத்திச் வருபவை.

தமிழ் ஓவியா said...

முஸ்லீம் மக்கள் தொகை அடிப்படையில், ஹஜ் பயணத்திற்கு ஒவ்வொரு நாட்டிற்கான ஒதுக்கீட்டை சவூதி அரசு நிர்ணயிக்கிறது. இந்த ஒதுக்கீட்டிலிருந்து 2001ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி, அந்தந்த மாநில முஸ்லிம் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு ஹஜ் பயணத் திற்கான ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. சில ஆண்டு களாக ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், கூடுதல் ஒதுக்கீடு வழங்கக் கோரி, தலைவர் கலைஞர் அரசு, இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதன்பேரில், மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த அய்ந்து ஆண்டுகளில் நிர்ணயித்த 13 ஆயிரத்து 626 பேருக்கும் அதிகமாக 5611 பேரைக் கூடுதலாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுப்பி, இஸ்லாமிய மக்களுக்குத் துணை நின்றுள்ளது. இது தலைவர் கலைஞர் கடந்த முறை முதலமைச்சராக இருந்தபோது இந்திய அரசிடம் முறையிட்டு தமிழக இஸ்லாமிய மக்களுக்கு துணை நின்றார் என்பதை இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள், குறிப்பாக துபாய் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும், திட்டங்கள் வகுத்து செயல்படுத்த ஏதுவாக தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை 2011 தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றி, அந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநரின் ஒப்புதலையும், 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பெற்றோம்.

ஆனால், அதற்குப் பின்பு தேர்தல் நடைமுறை விதிகள் செயல்பாட்டுக்கு வந்ததால், அந்தச் சட்டத் தின்கீழ் விதிகளை உருவாக்கும் பணியையும் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் பணிகளையும் செய்ய இயலாமல் போயிற்று. இந்தச் சட்டத்தின்படி இதுவரையிலும் எந்தவிதமான நலத்திட்டங்களும் ஏற்படுத்தப் படவில்லை என்பது இன்றைய நிலையாக உள்ளது. ஆயினும், நீங்கள் விரும்பும் வண்ணம், மீண்டும் கழகம் ஆட்சிக்கு வருமானால், உங்களுக் கெல்லாம் பயனளிக்கும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழிக்கும் - தமிழ்நாட்டிற்கும் ஆற்றிய பணிகள் ஏராளம். அதில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்:-

தமிழ் ஓவியா said...

ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய திருக்குறள் நூல்கள் 1 இலட்சம் ரூபாய்ச் செலவில் வாங்கப்பட்டு நட்சத்திரத் தகுதி பெற்றுள்ள தனியார் உணவக அறைகளில் வைக்கப் பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சிக்கெனத் தனியே அமைச்சகம் உருவாக்கப்பட்டது. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்திடவும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பெயரில் விருதுகள் வழங்கிடவும் மைய அரசிடம் வலியுறுத்தி நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட வருவோர்க்குத் திருவள்ளுவர் பற்றிய கையேடு, திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் அளித்திட 20 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டது. தொடர் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக நடைமுறைப் படுத்திடத் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...

தமிழறிஞர்களின் நூல்களின் நாட்டுடைமை ஆக்கப்பட்டு; மரபு உரிமையர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கப்பட்டது. தமிழ் - செம்மொழி எனப் பிரகடனம் செய்யப்பட்டது. கோவையில் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தமிழ் மொழியைப் படிக்காமல் பட்டம் பெறும் சூழ்நிலையைத் தடுக்கும் பொருட்டு 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

தமிழில் பெயரிடப்படும் தரமான திரைப் படங் களுக்கு வரி விலக்கு அளிக்கப் படுகிறது; இச்சலுகை தமிழ்ப் பெயர் கொண்ட பழையத் திரைப் படங் களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

மொரிசீயசு நாட்டிலுள்ள அண்ணல் காந்தி நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் ஓர் இருக்கை அமைக்கவும், அதில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகள் முதலியவை நடத்தவும், சான்றிதழ் படிப்பினை உருவாக்கவும், தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கவும் அரசு நிதி ஒப்பளிப்பு செய்தது.

1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 25 மாணவ, மாணவி யர்களுக்கு முதல்வர் கலைஞர் பாராட்டுப் பரிசு என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் மொத்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம், சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளை அகற்றிட அயராது பாடுபட்டு வருகிறது.

எல்லா மதங்களும் ஒன்றே - அவை எல்லாரும் இன்புற்று வாழ்வர்கள் என்றே சொல்லால் முழங்குவது கண்டீர் - அவை துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ எல்லோரும் மக்களே யாவர் - இங் கெல்லாரும் நிகராவர் எல்லோரும் உறவோர். எல்லோரும் ஒருதாயின் செல்வம் - இதை எண்ணாத மக்களை என்னென்று சொல்வோம்.

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் மனிதநேயத்தைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் வலியுறுத்திப் பாடியுள்ளார்.

பாமர மக்களுக்குள் பிறவி பேதம் நீக்கப் படாதவரை, எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கி விடாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதையும்; யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானாக இல்லாமல், உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று அறிஞர்

அண்ணா அவர்கள் சொன்னதையும் மறவாதீர்!

நமது முன்னோரின் இந்தக் கனவுகளை எல்லாம் நனவாக்கத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் அயராது பாடுபட்டு வருகிறது. நாடுவிட்டு, புலம் பெயர்ந்து வந்துள்ள நீங்கள், தாய்நாட்டிற்கும் - வாழ்வாதாரம் தந்த நாட்டிற்கும் பாசத்தோடும் பற்றோடும் வாழ்ந்து, நேர்மையாகவும், நிறைவாகவும் உழைத்து, உங்களையும் மேம்படுத்திக் கொண்டு, வாழ்ந்திடும் நாட்டையும் வளப்படுத்திட வேண்டும் என்ற எனது வாழ்த்துக்களைக் கூறி, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் தமிழ்ப்பற்று இதுதான்!


எதற்கெடுத்தாலும் மானமிகு கலைஞர் அவர்களையும், மானமிகு கி.வீரமணி அவர்களை யும் கேலி செய்யாவிட்டால் பார்ப்பனர்களுக்குத் தூக்கம் வராது. அதுவும் தமிழையும், தமிழர் களையும் பொறுத்துக் கிண்டல் என்றால் கிண்டி வைத்த சர்க்கரைப் பொங்கல் போல. இலங்கையிலே 89 ஊர்களின் தமிழ்ப் பெயர் களை சிங்கள மொழியாக மாற்றியது கண்டு தமிழர்கள் ஆத்திரப்படுகிறார்கள். ஆனால் பார்ப் பனர்களுக்கோ மகா கொண்டாட்டமாக இருக் கிறது என்பதன் அடையாளம் தானே இது?

கோயிலுக்குள் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதத்துக்குப் பதில் தமிழ் என்றால் பற்றிக் கொண்டு வருகிறது இந்தப் பார்ப்பனர்களுக்கு தமிழ் ஊர்ப் பெயர்களை சிங்கள மொழியில் மாற்றும் பொழுது பால் பாயாசம் சாப்பிட்டது போல இருக்கிறது அந்தப் பார்ப்பனர் கும்பலுக்கு பார்ப்பானும் தமிழன்தான் என்று கெ()ஞ்சும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு கொஞ்சம் சூடு வருமா பார்ப்போம்?

தமிழ் ஓவியா said...

தெலங்கானா நாத்திக அமைப்பு அறிவிப்பு:



இவை அச்சு அசலான மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா!

பூதங்கள், பேய்கள். மனித மறுபிறப்பு, சுவர்க்க, நரகக் கற்பனைகள்,
மந்திரங்கள், மகிமைகள், செய்வினை ஆகியவற்றில் துளியேனும் உண்மை இல்லை.
வாஸ்து, ஜோதிடம், கைரேகை கே.பி.ஜே. லக்கி மோதிரங்கள், அதிர்ஷ்டக் கற்கள் இராசி பலன்கள் குபேர- லட்சுமி எந்திரங்கள், குடும்ப தோசங்கள் அனைத்துமே நவீன மோசடிகள், தில்லுமுல்லுகள்!
பரலோகம், கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே ஒட்டுமொத்த மோசடிகள்!
பாபா, சுவாமிஜீக்கள் மகிமை பெயரில் செய்யப்படும் அனைத்தும் ஜிம்மிக்குகளே! மந்திரமல்ல, தந்திரமே!!

மக்கள்=பிரஜா நாத்திக சமாஜம், மாநிலக் குழு செல்: 9959652769, 9849757222

மந்திர - தந்திர மோசடிகளை விளக்கி தெலங்கானா மக்கள் நாத்திக அமைப்பு வெளியிட்டுள்ள பிளெக்ஸ்= நெகிழிப் பதாகை.

- தமிழில்: கோரா, திருவூர் -602025, 8.2.2013

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)