Search This Blog

1.5.12

எங்களால் என்ன கேடு? - பெரியார்

இறுதியாக தந்தை பெரியார் அவர்கள் புதுமனையினை திறந்து வைத்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும், நண்பருக்கும் தெரிய வேண்டும். எப்படி குடிமாறிப் போனால் முகவரி மாற்றம் குறித்து விளம்பரப்படுத்துவது போலவாகும். இதுபோலத்தான் திருமணம், புதிய கடைத் திறப்பு எல்லாம் மக்களுக்கு இச்சங்கதியை தெரியப்படுத்தச் செய்ய ஒருவகை விளம்பர சாதனமாகும். இது எந்த நாட்டிலும் உண்டு.

இத்தகைய இந்த ஜாதி இனத்தின் சுயநலக்காரர்கள், தந்திரக்காரர்கள். இதனை பணம் பறிக்கவும், மதத்தையும், மடத்தனத்தையும் புகுத்தவும் உபயோ கப்படுத்திக் கொண்டனர். மக்களும் இதுபற்றி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு நடக்கின்றனர்.

சுயமரியாதைக்காரர்கள் இப்படி முட்டாள் தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளுகின்றார் களே. இதனை மாற்றி பரிகாரம் காண வேண்டாமா? என்று எண்ணியே இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒத்த முறைகளை கையாளுகின்றோம். பார்ப்பனரைக் கூப்பிட்டு அர்த்தமற்ற சடங்குகளைச் செய்கிறார் களே ஒழிய, அது ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? என்று சிந்திப்பதே இல்லை.

மனிதன் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பலன் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்து செய்ய முற்படுவதோ, செய்ய தூண்டுவதோ நம்மவர்களுக்கு இல்லை. எதுவும் சுலபத்தில் அடைய வேண்டும் என்று தான் ஆசைப்படு கின்றார்கள்.

இம்மாதிரியான காரியத்தில் கை வைக்க எவனுமே தோன்றவே இல்லையே. தோன்றியவன் எல்லாம் இம்மாதிரியான முட்டாள்தனத்தை பாது காக்கவேதான் நினைக்கிறான்.

கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதில் முன்னெச்சரிக்கை வேண்டும். இங்கு மேல்நாட்டு பாணி ஜனநாயக முறை புகுத்த இங்கு மக்கள் இன்னும் தகுதி பெறவில்லை. அரசியல் கட்சிகள் புகுந்தால் பெரும் பாலான மக்களின் சமூக வாழ்வில் சிதைவு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி எனக்கூறி அடிக்கடி ஒத்தி வைப் பும், வெளிநடப்பு நாடகங்களுமே நடக்கும். எங்கள் இயக்கத்தைத் தவிர இருக் கின்ற அத்தனை இயக்கங்களும், அமைப்புகளும் எங்களால் ஏற்படும் மாறுதல்களை ஏற்பட ஒட்டாமல் தடுக்கவே பாடுபட்டு வருகின்றன.

எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி பார்ப்பனரை எதிர்க்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழிய, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவற்றைக் காப்பாற்றவே பாடு பட்டு வருகின்றனர்.

நாங்கள் கூறுகிறோம் என்றால், அப் படியே உங்களை நாங்கள் நம்பச் சொல்ல வும் இல்லையே? உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உனது புத்திக்கு சரி என்று பட்டால்தானே எடுத்துக் கொள்ளச் சொல்கின்றோம்.

மக்கள் காரண காரியங்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தால் வெகு நாளைக்கு முன்பே நாடு முன்னேறி இருக்கும். இல்லாதவன் காரணமாகத்தான் நாம் இப்படி இருக்கின்றோம். மதம், சாஸ்திரம் என்பதெல்லாம் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்கக் கூடியது என்று ஆக்கி வைத்தாதாகும் என்று எடுத்துக் கூறினார். அவர்கள் மேலும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் மடமை பற்றியும், ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

------------------19.5.1962 அன்று ஆத்தூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 12.5.1962

3 comments:

தமிழ் ஓவியா said...

ராமன், கிருஷ்ணன் பற்றி எம்.ஜி.ஆர்


எம்.ஜி.ஆர்.கோடம்பாக்கம் ஹைரோடு வழியாக ஸ்டூடியோவுக்குப் போகும் போது பலமுறை சர்ப்ரைஸாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி ஒரு நாள் அவர் கிருஷ்ண ஜெயந்தியன்று வந்திருந்தபோது, எங்கள் வீட்டு வாசலில் தொடங்கி, பூஜை அறை வரை நெடுக கிருஷ்ணர் பாதங்கள் வரைந்திருந்தோம்.உள்ளே நுழைந்ததும் அவர், என்ன இதெல்லாம்? என்று கேட்க, நான், இன்று உங்களுக்கு நம்பிக்கை இல்லாத கிருஷ்ணர் பிறந்த நாள்என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே, எனக்கு நம்பிக்கை இல்லாத என்று சொல்லாதீர்கள்! ஒன்றே குலம்;ஒருவனே தேவன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு; அவருக்கு ராமர், கிருஷ்ணர் என்று பெயரிடுவதில்தான் நம்பிக்கை இல்லை என்று சொன்னார். இதைக் கல்கி(15.4.2012)யில் கூறியிருப்பவர், திரைப்படத்துறை மூலம் எம்.ஜி.ஆருடன் நட்பில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி. எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி அ.தி.மு.க.தான் இங்கு ஆட்சி செய்கிறது. அதன் தலைவரான ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ராமர், கிருஷ்ணர் மீது நம்பிக்கை இல்லை என்பதை அறிவாரா? அந்தக் கட்சியின் தொண்டர்கள் தான் அறிவார்களா? ராமன் பாலத்தை தேசியச் சின்னம் ஆக்கவேண்டும் என்று கூறுவதும், கிருஷ்ண ஜெயந்திக்கு அரசு விடுமுறை விடுவதும் தனது தலைவர் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு எதிரானதல்லவா? -”உண்மை” ஏப்ரல் 16-30 2012

தமிழ் ஓவியா said...

பாலாறும் தேனாறும் ஓடுமா?


மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் வகையில் ஊடகங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு இடம் அளிக்கின்றன. 90 விழுக்காடு நிகழ்ச்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளாகவே உள்ளன. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவை அவர்களுக்குப் பிரச்சினையே அல்ல; டெண்டுல்கர் 100 வது சதம் அடித்ததுதான் முக்கியமான செய்தியாகும். அவர் 100ஆவது சதம் அடித்தவுடன், வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, வறுமை எல்லாம் காணாமல் போய்விடும்; நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுமா? ஜோதிட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதும், ஜோதிட பலன்களை பத்திரிகைகள் வெளியிடுவதும் மடமை மிகுந்த செயல்களாகும்.

- மார்க்கண்டேய கட்ஜூ,
மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி,
பத்திரிகை கவுன்சில் தலைவர்

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்... கேரளாவில்


கேரளாவின் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்து கோவில்களின் அர்ச்சகர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை பார்ப்பனர் அல்லாதோரை நிரப்ப தேவஸ்தானம் முடிவு செய்து ஒரு பெரும் மாற்றத்திற்கு வழி கோலியுள்ளது. திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு கேரளாவில் 2,000 கோவில்கள் உள்ளன. கடந்த 6 மாதத்திற்கு முன்பு அர்ச்சகர் பணியிடங்களுக்கான நேர் காணல்கள் அனைத்து ஜாதியினரைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் நடத்தப்பட்டு, 199 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதோர் ஆவர் என தேவஸ்தான போர்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் இந்து அறநிலையத்துறைக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க தமிழக அரசு முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.