Search This Blog

16.11.11

அது என்ன சித்ரா பவுர்ணமி?


மதச் சார்பற்ற அரசுதானா?

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சித்திரா பவுர்ணமி என்னும் இந்து மத விழாவை தமிழ்நாடு அரசு மதத் திருவிழாவாக அறிவித்திருப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதச் சார்பற்ற ஓர் அரசு, ஒரு மதத்தின் விழாவை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடலாமா? கொண்டாட முடியுமா என்பது முக்கியமான கேள்வியாகும்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. அரசால் சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கூட உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் எது செய்யப்பட்டாலும் அதனைத் தலைகீழாக மாற்றுவது என்பதையே கொள்கையாக, முக்கிய நோக்கமாகக் கொண்டவர் தமிழ்நாடு முதலமைச்சர். தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழகத் தலைவர்கள், புலவர் பெருமக்கள் 1921 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்து அறிவித்ததைத்தான், திராவிடர் இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலியோர் விரும்பியதைத்தான் கலைஞர் சட்டமாக்கினார். இதில் அரசியலுக்குச் சற்றும் இடமில்லை.

கலைஞர் எதைச் செய்தாலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்ணோட்டத்தில் அரசியல் தான்.

முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த சித்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கம் தான் சித்திரா பவுர்ணமியை அரசு மத விழாவாக அறிவித்துள்ளதன் உள்ளடக்கம் ஆகும்.

தை முதல் நாள் - தமிழர் விழாவை அரசு விழா வாகக் கொண்டாட தி.மு.க. அரசு உத்தரவிட்டால், அதற்கு எதிராக எதையாவது செய்தே தீரவேண்டும் என்கிற உணர்ச்சிதான் இதில் தலைதூக்கி நிற்கிறது.

யார் எதைச் சொன்னாலும் அதனைக் கருத்தில் கொள்ளாத நிலையில், நீதிமன்றங்கள்தான் தமிழக முதலமைச்சருக்கு மூக்கணாங்கயிறு போட்டு வருகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை என்னும் கோட்பாட்டுக்கு மாறாக, எதிராக குறிப்பிட்ட ஒரு மத நிகழ்ச்சியை அரசே நடத்துவது என்பது பச்சையான சட்ட விரோதமாகும். நீதிமன்றத்திற்குச் சென்றால் இந்த அறிவிப்பு செல்லுபடியற்றதாகவே ஆகும் நிலைதான் ஏற்படும்.


முதலமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் இந்து மத அபிமானம், ஆன்மீக நம்பிக்கை இருக்கலாம். அதனை அவர் தோட்ட வீட்டின் அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரங்கேற்ற ஆசைப்படக் கூடாது.

அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு என்று சில கொள்கைகளைக் கடைபிடித்துத் தீரவேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.

தந்தை பெரியார் பிறந்த நாளிலும், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளிலும் அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிப்பதை ஒரு சடங்காக முதலமைச்சர் கருதுகிறார் என்றே தெரிகிறது.

அவர் பொதுச்செயலாளராக இருக்கும் கட்சி - அதன் பாரம்பரியம், அவர் ஏற்றுக்கொண்டு இருப்ப தாகக் கூறும் தலைவர்களின் கொள்கைகள், வழி காட்டுதல்கள் இவற்றைக் கொச்சைப்படுத்துவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால், அந்தத் தலைவர்களுக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் எதிரானதுதான் எங்கள் கட்சி என்று வெளியிப்படையாகப் பிரகடனப்படுத்த முன்வரட்டும்.

இந்தப் பிரச்சினையில் ஆட்சி ரீதியாக செயல் படுவது சட்ட விரோதம் என்றால், கட்சி ரீதியாகச் செயல்படுவது கொள்கை விரோதமாகும்.

ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், அரசு அலுவலகங்களில் எந்தவித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்களும், படங்களும் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்து, மதச் சார்பற்ற தன்மையின் மரியாதையைக் காப்பாற்றிய அறிஞர் அண்ணா எங்கே?

அதற்கு முற்றிலும் எதிராகச் செயல்படும் செல்வி ஜெயலலிதா எங்கே?

அண்ணாவின் கொள்கைக்காகவே அண்ணா தி.மு.க.வில் இருக்கிறோம் என்று உண்மையிலேயே நம்பும் அ.தி.மு.க. தொண்டர்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது!

-------------------- “விடுதலை” தலையஙகம் 16-11-2011

*******************************


சித்ரா பவுர்ணமி என்னும் மத விழா அரசு சார்பில் நடத்தப்படுமாம் - சொல்லியிருப்பவர் மதச் சார்பற்ற அரசின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா!

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் பவுர்ணமி கூடிய நாள் சித்ரா பவுர்ணமியாம்.

வண்டி வண்டியாக புராணக் குப்பைக் கதைகள் உண்டு.

அதில் ஒன்றே ஒன்று...

கஜேந்திர மோட்சம்

ஸ்ரீ மத் பாகவதத்தை முதலில் திருமால் பிரம்மருக்குச் சொல்ல, பிரம்மா நாரதருக்கும், நாரதர் வியாசருக்கும், வியாசர் சுகபிரம்மருக்கும், சுகபிரம்மர் பரீட்சித்து மன்னனுக்கும் கூறியருளியதாக புராணங்கள் இயம்புகின்றன. ஸ்ரீ மத் பாகவதத்தை நாரத முனிவர், ருக்மணி தேவிக்கும் கூறியருளினார்.

இந்த ஸ்ரீ மத் பாகவதத்தில் வரும் கஜேந்திர மோட்சக் கதை மிகவும் புனிதம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

திரிகூட மலையின் அழகில் கவரப்பட்ட ஹுஹு, ஹாஹா எனும் இரு கந்தர்வர்கள் தத்தம் மனைவியரோடு பூமியில் இறங்கினார்கள். இதில் ஹுஹு தன் மனைவியோடு ஓர் ஓடையில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது தேவலர் எனும் முனிவர் அங்கே வந்தார். ஹுஹு விளையாட்டாகக் கருதி ஒரு முதலையின் உருவெடுத்து முனிவரின் காலைப் பற்றியிழுத்தான். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாகும்படி சபித்தார். ஹுஹுவும் முதலையாக உருமாறி வாழ்ந்து வந்தான்.

இதேபோன்று இன்னுமொரு சாபக் கதையும் உண்டு. இந்திரத்யும்னன் எனும் மன்னன் நாராயண பூஜையில் லயித்திருந்தான். அப்போது அங்கு வருகை தந்த அகத்தியரை அவன் கவனிக்கவில்லை. இதனால் அரசன் தன்னை அவமதித்ததாக கருதிய அகத்தியர் அவனை அய்ந்தறிவு படைத்த யானையாகக் கடவது என சபித்தார்.

யானையாக மாறிய போதும் மன்னன் தன் நாராயண பூஜையை கைவிடவில்லை. ஒரு ஏகாதசியில் கஜேந்திரனான அவன் பகவானுக்காக நீராடி மலர் பறிக்கும்போது தன் காலை ஏதோ பற்றியிழுப்பது போன்று உணர்ந்தான். ஆம் அவன் கால் ஒரு முதலையின் வாயில் அகப்பட்டிருந்தது. அம்முதலை வேறு யாருமல்ல தேவலரின் சாபத்தால் முதலையான ஹுஹு கந்தர்வனே அவன்.

எவ்வளவு முயன்றும் முதலையிடத்தினின்று தப்பிக்க முடியாத கஜேந்திர யானை நாராயணனை நோக்கி அபயக் குரல் எழுப்பியது. ஆதிமூலமே என்னைக் காப்பாற்று எனக் கதறியது. பக்தனின் அபயக் குரல் கேட்ட திருமாலும் கருட வாகனத்தில் தரிசனம் தந்து சுதர்சனத்தால் முதலையின் தலையை அறுத்து வதம் செய்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தருளினார். இதுவே தற்போதும் கஜேந்திர மோட்சமாக அனுஷ்டிக்கப்படுகிறது. திருமால் திருத்தலங்கள் அனைத்திலும் இந்த சித்ரா பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச வைபவம் சிறப்பாக நடைபெறும். சித்ரா பவுர்ணமியில் பெருமாள் கோயில் சென்று கஜேந்திர மோட்சம் காண நமக்கும் பாவங்கள் தொலைந்து மோட்சப் பேறு கிட்டும் என்று ஓர் ஆன்மீக இதழ் விவரிக்கிறது.

ஏற்கெனவே பயித்தியக்காரன்... அவன் சாராயம் குடித்திருந்த நேரத்தில் தேளும் கொட்டினால் எப்படி இருக்கும்? அதுபோன்ற உளறல்தானே இந்தக் கதையும்!

தனக்கு மாற்று, தமிழகத்தில் யாரும் இல்லை என்று பேட்டி கொடுத்த அம்மையார் இந்த அபத்தத்துக்காகத்தான் அரசு விழா எடுக்கப் போகிறாரா?

ஆட்சி செய்யும் பாவங்கள், குற்றங்களிலிருந்து கரையேறத்தான் இந்த ஏற்பாடா?

இது மதச் சார்பற்ற அரசா? இந்துத்துவா அரசா? பதில் தேவை!

----------------------- “விடுதலை” 16-11-2011


2 comments:

தமிழ் ஓவியா said...

நாத்திகச் செயல்!


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.6 லட்சம் ரூபாயில் நவீன இடிதாங்கிக் கருவி.

- டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.11.2011

இது கடவுளின் சக்தியை நம்பாமல் அவமதிக்கும் செயல் அல்லவா!
--"விடுதலை" 16-11-2011

நம்பி said...

//இது மதச் சார்பற்ற அரசா? இந்துத்துவா அரசா? பதில் தேவை!\\

''ஊத்தை பாப்பாத்தி அரசு'' அது எதுக்கு? ஆதரவாக இருக்கும் என்று தெரியாதா?