Search This Blog

10.11.11

மனிதன் - தந்தை பெரியார்



வினா:- மனிதன் என்றால் என்ன?

விடை: பகுத்தறிவுள்ள ஒரு பிராணி.

வினா:- மனிதன் தோன்றி எவ்வளவு காலமாயிற்று?

விடை: லட்சக்கணக்கான வருஷங்களாயிற்று.

வினா:- அவனுடைய பூர்வீகம் யார்?

விடை: முலையுண்ணும் பிராணிகள். (பாலூட்டிகள்)

வினா: அது உனக்கு எப்படித் தெரியும்?

விடை: மக்கள் உறுப்புகளின் அமைப்பு, கலப்பு, வேலை முறை முதலியவற்றைக் கவனித்தால் மனிதனும் ஒரு பிராணிக்கு ஒப்பாகவே இருக்கிறான்.

வினா: மனிதனுக்கும் பிராணிகளுக்கும் பொதுவாக இருக்கும் சில அம்சங்கள் விளக்கிச் சொல்.

விடை: மற்றப் பிராணிகளுக்கு இல்லாத தசை நாரோ, எலும்போ, உறுப்புகளோ மனிதனுக்கு இல்லவே இல்லை.

வினா: இவ்வளவுதானா?

விடை: மனித உடலும் மிருக உடலும், ஒரே மாதிரிப் பொருள்களாலேயே ஆக்கப்பட்டிருக்-கின்றன. இரண்டு உடல்களிலும் ஒரே மாதிரியான அங்க அமைப்பே காணப்-படுகின்றன. இரண்டு உடல்களும் ஒரே மாதிரியான ஜனன மரண விதிகளுக்கே கட்டுப்பட்டிருக்கின்றன.

வினா: இதர பிராணிகளுக்கும் மனிதனுக்கும் ஏதாவது வித்தியாசமுண்டா?

விடை: அறிவிலும், ஒழுக்கத்திலும் மனிதன் மற்ற பிராணிகளுக்கு மேலானவனாயிருக் கிறான்.

வினா: வேறு வித்தியாசங்கள் உண்டா?

விடை: பசிப்பிணியைத் தணிக்க மட்டுமே பிராணிகள் முயற்சி செய்கின்றன. மனிதன் தன் இலட்சியங்களை அடைய முயல்கிறான்.

வினா: வேறு ஏதாவதுண்டா?

விடை: தன் சந்ததிகளுக்கும், எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் க்ஷேமமுண்டாகும்படி மனிதன் வாழ்ந்து உழைக்-கிறான்; மிருகங்களுக்கு எதிர்-காலத்தைப் பற்றிய உணர்ச்சியே இல்லை.

வினா: மனிதனுக்கும் மிருகங்களுக்குமுள்ள சம்பந்தம் என்ன?

விடை: அவன் மிருக வர்க்கத்திலிருந்து தோன்றினான். அல்லது மிருக வர்க்கத்திலிருந்து அபிவிருத்தியடைந்தான்.

வினா: மனிதன் மிருக வர்க்கத்திலிருந்து தோன்றி அபி விருத்தி அடைந்தான் என்பதற்கு முக்கியமான ஆதாரமென்ன?

விடை: மனிதக் கரு உயிர் பெறும் முன்பு பல நிலைமை அடைகின்றன. அப்பொழுது அதற்கு மீன்களுக்கு இருப்பது போன்ற மூச்சுக் கருவிகளும் வாலும், பெரிய கால் விரல்-களும், உரோமம் அடர்ந்த உடலும், குரங்குக்கு உள்ளது போன்ற மூளையும் இருக்கின்றன.

வினா: அதன் பொருள் என்ன?

விடை:- அந்த நிலைமையை எல்லாம் கடந்தே மனிதன் தற்கால உருவத்தை அடைந்-தான் என்பதே பொருள்.

வினா: தற்காலம் காணப்-படும் மிருகங்களைப் போல் மனிதனும் ஒரு காலத்திலே மிருகமாயிருந்தான் என்று நீ கூறுகிறாயா?

விடை:- நெடுங்காலம் அவன் குரங்கைப் போலவும், கொரில்லாக் குரங்கைப் போலவும், பெரிய வாலில்லாக் குரங்கைப் போலவும் இருந்து வந்தான்.

வினா: எந்தக் காலத்தில் அவன் அவ்வாறு இருந்தான்?

விடை:- திட்டமாகக் கூற முடியாது. ஒருகால் லட்சோப லட்சம் வருஷங்களுக்கு முன் இருக்கலாம்.

வினா: அப்படியானால் மனிதன் பிரத்தியேகமாகச் சிருஷ்டிக்கப்படவில்லையா?

விடை:- இல்லை. அவன் கீழ்த்தரப் பிராணியாக இருந்து நாளாவட்டத்தில் முன்னேறினான்.

வினா: மிருகம் மனிதனாக மாறுவதை யாராவது எப்பொழுதுதாவது கண்ணாரக் கண்டதுண்டா?

விடை:- இல்லை. இயற்கை இரகசியமாக வேலை செய்கிறது. குறிப்பிட்டுணர முடியாத பல பருவங்களைக் கடந்து காலக்கிரமத்தில் சிறுகச் சிறுக மனிதன் கீழ்த்தரப் பிராணியிலிருந்து முன்னேற்றமடைந்திருக்கிறான்.

வினா: அவனது உடல் மட்டுந்தானா இவ்வாறு முன்னேற்றமடைந்து வளர்ச்சியடைந்திருக்கிறது?

விடை:- இல்லை. அவனது உடலைப் போலவே அவனது மனம் அல்லது பகுத்தறிவும் காலக் கிரமத்தில் சிறுகச் சிறுக முன்னேற்றமடைந்து வந்திருக்கிறது.

வினா: எல்லாப் பிராணி-களும் முன்னேற்றமடைந்து ஏன் மனிதராகவில்லை?

விடை:- எந்தக் காரணத்-தினால் காட்டாள ஜாதியா ரெல்லாம் நாகரிக மக்களாக-வில்லையோ அந்தக் காரணத் தினாலேயே மிருகங்கள் எல்லாம் மக்களாக முன்னேற்ற மடையவில்லை.

வினா: அந்தக் காரணம் எது?

விடை:- சாதகமான நிலை.

வினா: அதை விளக்கிக் கூறு.

விடை:- தேவையே முன்னேற்றத்துக்கு அடிப்படை. சுகமாக வாழ முடியும் வரை மிருகங்களும் காட்டாளர்களும் அந்த நிலைமையிலேயே இருக்கின்றன. ஆபத்துகளினாலோ, மரணத்தினாலோ பயமடையும் போதுதான் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளப் புது மார்க்கங்களைக் கண்டுபிடிக்க முயல்கின்றன.

வினா: இதைக் கொஞ்சங் கூட விளக்கிக் கூறு.

விடை:- சந்தர்ப்பங்கள் அல்லது நிலை-மையைத் தழுவியே மனிதன் அல்லது மிருகத்தின் வாழ்க்கை உருப்பெறுகிறது. சந்தர்ப்பங்கள் அல்லது நிலைமையில் மாற்றமேற்படும்போது மனிதன் அல்லது மிருகத்தின் நிலைமையிலும் மாற்றமேற் படுகிறது.

வினா: மனித முன்னேற்றத்துக்கு முக்கிய-மாக உதவி புரிந்தது எது?

விடை: ஜீவிதப் போராட்டமே மற்ற-வற்றைவிட அதிகமாக உதவி புரிந்தது.

வினா: மனித உற்பத்தியைப் பற்றி வேறு ஏதாவது அபிப்பிராயமுண்டா?

விடை:- உண்டு. ஆறாயிரம் வருஷங்களுக்கு முன் கடவுள் மனிதனை நினைத்த மாத்திரத்தில் உத்தமனாக சிருஷ்டித்ததாக அநந்தம்பேர் நம்பி வருகிறார்கள்.

வினா: உத்தமனாக சிருஷ்டித்தான் என்பதன் பொருள் என்ன?

விடை:- கடவுளைப் போலவே மனிதன் தோற்றுவிக்கப்பட்டானாம்.

வினா: மனிதன் ஒரு காலத்து கடவுளைப் போல உத்தமனாய் இருந்தானென்று உரிமை பாராட்டப்படுகிறதா?

விடை: உரிமை பாராட்டப்படுவதாகத் தோன்றவில்லை.

வினா: அப்படியானால் கடவுளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் உத்தமன் அல்லவா?

விடை: இல்லை.

வினா: அப்படியானால் மனிதன் உத்தமனாகப் படைக்கப்பட்டான் என்று அவர்கள் ஏன் கூறுகிறார்கள்?

விடை: ஒரு மனிதனுக்கு எவ்வளவு உத்தமனாக இருக்க முடியுமோ அவ்வளவு உத்தமனாக மனிதன் இருந்தான் என்றே அவர்கள் நம்புகிறார்கள் என நினைக்கிறேன்.

வினா: இப்பொழுது அவன் ஏன் உத்தமனாக இருக்கவில்லை?

விடை:- கடவுள் கட்டளையை அவன் மீறியதனால் உத்தமத் தன்மையை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வினா: உத்தமனான ஒருவன் எவ்வாறு குற்றம் செய்வான்?

விடை: தன்னுடைய பெருமைக்காக அவன் குற்றம் செய்யும்படி சிருஷ்டி கர்த்தா அனுமதித் தாராம்.

வினா: அப்படியானால் அவன் கடவுள் கட்டளையை மீறாமல் கட்டளைப்படியே தான் நடந்தானா?

விடை:- கடவுள் நோக்கத்தைப் பூர்த்தி செய்யுமாறு கடவுள் கட்டளைப்படியே அவன் நடந்தான்.

வினா: மனிதன் வீழ்ச்சியடைந்ததனால் ஏற்பட்ட பலன்கள் எவை?

விடை:- எல்லா மக்களுக்கும் பாபம், துன்பம், மரணம் இவைகளே ஏற்பட்ட பலன்கள்.

வினா: மனிதன் வீழ்ச்சியடைவதற்கு முன் உலகத்தில் தீமையே இருந்ததில்லையா?

விடை: விஞ்ஞான சாஸ்திரப்படியும் பைபிளின்படியும் உலகத்தில் தீமை இருக்கத்தான் செய்திருக்கிறது. ஏனெனில், ஆதாம் பாவம் செய்யும்படி சாத்தான் தூண்டியதாகப் பைபிளில் கூறப்-பட்டிருக்கிறது. வினா:- சாத்தானைப் பற்றிய பொதுவான நம்பிக்கை என்ன?

வினா: சாத்தான் - கடவுளுக்கும் மனிதனுக்கும் பெரிய விரோதி என்று பொதுவாக நம்பப்படுகிறது.

வினா: வேறு என்ன?

விடை:- கடவுள் - நன்மைக்கு அதிகாரியாக இருப்பது போல், சாத்தான் - தீமைக்கு அதிகாரியாக இருக்கிறானாம்.

வினா: பேய் எப்பொழுது முதல் இருந்து கொண்டு வருகிறது?

விடை:- கடவுள் தோன்றிய போதே பேயும் தோன்றியிருப்பதாக சாமான்ய ஜனங்கள் நம்புகிறார்கள்.

வினா: மக்கள் பேயை நம்பக் காரணம் என்ன?

விடை:- மனித சமூகம் பாலிய தசையிலிருந்த போது வெளிச்சத்துக்கும், இருளுக்கும், ஜீவனுக்கும், மரணத்துக்கும், விருப்புக்கும், வெறுப்புக்கும் காரணம் கூறும் பொருட்டு நன்மை செய்ய ஒன்றும், தீமை செய்ய ஒன்றும் இருப்பதாகவும், அவை இரண்டுமே உலகத்தை அடக்கி யாண்டு வருவதாகவும் நம்பிக் கொண்டது.

வினா: பேய் கடவுளைப் போல் அவ்வளவு புத்திசாலியா?

விடை:- இல்லை. பெரிய தந்திரசாலியாம்.

வினா: பேயின் ஜீவித நோக்கமென்ன?

விடை: மக்களைக் கெட்ட வழியில் செலுத்திக் கெடுத்து, கடவுள் வேலையை அழிப்பதே.

வினா: பேய் இருந்து கொண்டு இருப்பதற்குப் பொறுப்பாளி யார்?

விடை:- பொதுவான நம்பிக்கை என்ன-வெனில், ஆதி மனிதனைப் போல் பேயும் உத்தமனாகவே இருந்ததாம். அது தானும் கடவுளாக வேண்டுமென்று எண்ணியதனால் அது சுவர்க்கத்திலிருந்து ஓட்டப்பட்டதாம்.

வினா: கடவுள் அந்தப் பேயை ஏன் அழிக்கவில்லை?

விடை:- மனிதன் வீழ்ச்சியடைய எக்காரணத்-தினால் கடவுள் அனுமதியளித்தானோ அக்காரணத்தினாலேயே கடவுள் பேயை ஒழிக்காமல் வைத்துக் கொண்டு இருக்கிறான்.

வினா: அதன் பொருள் விளங்கச் சொல்லு?

விடை:- தன் பெருமையை நிலைநாட்டும் பொருட்டே கடவுள் பேயை உயிரோடு வைத்துக் கொண்டு இருக்கிறான்.

வினா: எப்பொழுதும் ஒரு நரகமும் பேயும் இருந்து கொண்டுதானிருக்குமா?

விடை:- இருந்து கொண்டு இருக்குமென்றே அனேகர் சொல்லுகிறார்கள்.

வினா: பேய்களைப் பற்றிய இம்மாதிரிக் கதைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்?

விடை:- அவர்கள் பெற்றோர் நம்பியதனால் அவர்களும் நம்புகிறார்கள்.

வினா: அந்த நம்பிக்கையைப் பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?

விடை:- விஷயங்களை ஆராய்ந்து பாராதவர்கள் கூறும் அபிப்பிராயங்களுக்கும், கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பே இல்லை.

வினா: பேய் நம்பிக்கையினால் ஏற்பட்ட பலன் என்ன?

விடை:- பேய் நம்பிக்கையினால் மக்கள் மூட பக்தியுடையவர்களாயும், சஞ்சல-முடையவர்களாயும், பயங்காளிகளாயும், குரூரர்களாயும் ஆகிவிடுகிறார்கள்.

வினா: பேய் நம்பிக்கை எப்படி ஒழியும்,

விடை: அறிவியக்கத்தினால் ஒழியும்.

வினா: உலகத்திலே மிகவும் பயங்கரமானது எது?

விடை:- பயம் தான்.

வினா: ஏன்?

விடை:- பயம், இருதயத்தையும், உடலையும் திமிராக்கி, தற்காப்புக்குள்ள சக்தியை அழித்து விடுகிறது. தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள ஒருவனுக்குச் சக்தியில்லாது ஆகும் போது அரசியல், சமயப் பூச்சாண்டிகளுக்கு அடிமைப்பட்டுவிடுகிறான்.

--------------------தந்தை பெரியார் - "குடிஅரசு" 26.4.1936

0 comments: