Search This Blog

8.11.11

அரசின் பேருந்துகளில் மதவாசகங்கள் இடம் பெறலாமா?


பேருந்துகளில், இரயில்களில் மதவாசகங்கள்!

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பேருந்துகளில் திருவள்ளூவர் படமும், திருக்குறளும் இடம் பெற்றிருந்தன. ஆட்சி மாற்றத்தின் விளைவாகப் பெரும்பாலான பேருந்துகளில் புதிய புதிய படங்களும், விளம்பரங்களும் இடம் பெற்று வருகின்றன.

திருக்குறள் வரிகள் மறைக்கப்படும் அளவுக்கு இவை ஆதிக்கம் செலுத்துகின்றன. குடும்ப நலத் திட்டம், திருமண வயது போன்ற விளம்பரங்கள் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்தன. அவை இப்போது இருந்த இடம் தெரியவில்லை.

பேருந்துகளில் சுவரொட்டி விளம்பரங்கள் ஒட்டப்படக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது; அதன் அடிப்படையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது கிடையாது.

ஆனால் புதிய புதிய மத விளம்பரங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சிக்கும், கண்டனத்துக்கும் உரியது; வெறும் ஸ்டிக்கர் மட்டுமல்ல; நிரந்தரமாக இடம் பெறும் வண்ணம் தகடுகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு (படத்துடன்) விளம்பரப்படுத்தப் படுகின்றன. போலி மருத்துவ விளம்பரங்களுக்கும் தடையில்லை.

இறை நினைப்பும், கடின உழைப்பும் உன் ஆயுதமானால் வெற்றி உன் வசமாகும். வெற்றி பெற அனுதினமும் கூறவேண்டிய மந்திரங்கள். ஓ நம சிவாய வாழ்க!

ஓம் சச்சிதானந்தம் வாழ்க!

ஓம் சற்குரு நாதரே

வாழ்க! வாழ்க!

பகவானிடம் மந்திரம் சொல்லி பிரார்த்தனை பண்ணினால் பக்தனுக்கு எல்லாமே வெற்றி.

வெற்றி பெற அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் ஓம் நமோ நாராயணா வாழ்க!

ஓம் சச்சிதானந்தம் வாழ்க!
ஓம் சற்குருநாதரே வாழ்க!

இவை போன்ற வாசகங்கள் ஏராளம்

மதச் சார்பற்ற அரசின் பேருந்துகளில் இவை போன்ற விளம்பரங்கள் இடம் பெறலாமா? இவை சட்ட விரோதமான நடவடிக்கைகள் அல்லவா! இவ்வாறு விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளதா? வழங்கியவர்கள் யார்? வழங்கப்படவில்லையென்றால் இவற்றை விளம்பரப்படுத்தத் தடை விதிக்காதது ஏன்? விளம்பரம் செய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இந்த வகைக் கடவுள் படங்களும், பக்தி வாசகங்களும் இடம் பெற்றிருக்கும் பேருந்துகள் விபத்துக்களில் சிக்குவதில்லையா? அதற்கு உத்தரவாதம் உண்டா? இதேபோலவே மின்சார இரயில்களிலும் வகை வகையான வண்ண வண்ணமான விளம்பரத் தகடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்கள் மத நம்பிக் கையற்றவர்கள் பிரயாணம் செய்யும் அரசுக்குச் சொந்தமான வாகனங்களில் குறிப்பிட்ட மதங் களின் கடவுள் படங்கள், வாசகங்கள் இடம் பெறுவது தேவையில்லாத சர்ச்சைகளை உரு வாக்காதா? (உருவாக்கி வருகிறது என்பதுதான் உண்மை)

நடைப்பாதைகளில்கூட கோயில்கள் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள கால கட்டத்தில், அரசு அலுவலகங்களுக்குள் கடவுள் படங்கள் இடம் பெறக் கூடாது என்று அரசு ஆணை தெளிவாக உள்ள நிலையில் அரசுக்குச் சொந்தமான பேருந்துகள், இரயில்களில் கடவுள் படங்கள், பக்திப் பிரச்சாரம் சட்ட விரோதம் அல்லவா! மாநில, மத்திய அரசுகள் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்து, அரசுக்குச் சொந்தமான வாகனங்களில் மத விளம்பரம் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதே நமது வலியுறுத்த லாகும். இல்லையேல் சட்டப்படியான நடவடிக் கைகள் - நேரடி நடவடிக்கை குறித்து திராவிடர் கழகம் முடிவு எடுக்க நேரிடும்.

-------------------"விடுதலை” தலையங்கம் 8-11-2011

0 comments: