Search This Blog

31.5.15

பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்! -- 1


தந்தை பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்!





எங்கள் நட்பு என்றும் குறையாது.
கவர்னர் - ஜெனரல்,
திரு.சி. இராஜகோபாலாச்சாரியார்
எழுபதாவது ஆண்டு விழாவுக்கு,
தில்லி 22-11-1948

சீரார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது.

                                                                            -----------------------இராஜகோபாலாச்சாரி

**************************************************************************************

பெரியார் நீடு வாழ்க!

தமிழ்ப் பேராசிரியர்
உயர் திரு. மறைமலை அடிகளார் அவர்கள்.

சாதி, சமயப் பூசல்களை யொழித்து, "எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி யிரங்கி"த் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன் மக்கட்குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும், முப்பத்தைந்தாண்டுகட்குமுன், சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில், அதனை எதிர்த்தும், என்னைப் பகைத்தும், எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அஞ்ஞான்று எனக்குதவியாய் நிற்றற்கு எவருமில்லை. பின்னர், பெரியார் திரு. ஈ.வெ.ரா. இராமசாமி அவர்கள், யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந் திட்பமாய் எடுத்து விளக்கிப் பேசவும், எழுதவுந் துவக்கிய காலந்தொட்டு, ஆரியச்
சேர்க்கையால் தமிழ் மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்குந், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைப்பாட்டைத் தமிழர் உணர்வாராயினர்.
அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வாராயினர். ஆதலால் பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த் தொண்டைப் பெரிதும் பாராட்டி அவர்கள் நீடு இனிது வாழ்கவென்று திருவருளை வேண்டி வழுத்துகின்றேன்.

                           ----------------------------மறைமலையடிகள், 05-12-1948
*****************************************************************************************

கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்!

தமிழ்ப் பெரியார்.
திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள்.

ஈரோட்டில், சென்னை மாகாணச் சங்க இரண்டாம் ஆண்டு மாநாடு (11,12-10-1919)-ல் குழுமியது. அதன் தலைவர் திரு.லாட் கோவிந்ததாஸ், வரவேற்புத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமிப் பெரியார் நட்பை அம்மாநாட்டிலேயே யான் பெற்றேன்.


.....நாயக்கர், சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர். யான் அமைச்சருள் ஒருவன்.

டாக்டர் வரதராஜீலு நாயுடுவும், யானும், நாயக்கர் வீட்டில் தங்கினோம். நாயக்கர் தலையிலும், உடலிலும், இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணிபூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர் ஜமீன்தாராகவும், இவர் ஜமீன்தாரணியாகவும் காணப்பட்டனர்.


நாயக்கர், பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்து செலுத்திய பின்னர், தமிழ்நாட்டிக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கன மழையாகும்; கல் மழையாகும். மழை மூன்று மணிநேரம் - நான்கு மணிநேரம் பொழியும்.


முன்னாலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப்புகுந்தால், முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ், நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரசில் வெறி கொண்டு நானா பக்கமும் பறந்து உழைத்ததை, யான் நன்கு அறிவேன். நாயக்கரும், யானும் சேர்ந்து, சேர்ந்து, எங்கெங்கேயோ தொண்டு செய்தோம். காடு, மலையேறியும் பணி புரிந்தோம்.


நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு, பலமுறை சிறை புகுந்தார். அவ்வுறுதிக்கு இடர் விளைவித்தது சுயராஜ்யக் கட்சி. சுயராஜ்யக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரஸ் சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியதானது, நாயக்கருக்கு எரியூட்டிற்று....


..... நாயக்கர் "சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கும், பட்டம் - பதவிக் கட்சியாகும்" என்பார். "தற்போது காங்கிரசில் உற்றுள்ள சோர்வை நீக்கிப் பழைய ஒத்துழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் வேண்டும்" என்று யான் சொல்வேன். "மீண்டும் ஒத்துழையாமை எழுமா?" என்று அவர் கேட்பார். "அது எழுந்தே தீரும்; வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். "சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும், மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராம சாமியார் கூறுவார். யான் அதை மறுப்பேன்.


.... நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங்கண்டு பிரசாரம் செய்தார். அதனால், தென்னாட்டுக்குக் கேடு விளைதல் கண்டு, யான் எதிர்ப் பிரசாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம்; பத்திரிக்கையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம்; என் உடல் நலம் குன்றும் வரை, யான் முன்னணியில் நின்று போர் புரிந்தே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டுக்கு யான் செல்வேன்; என் வீட்டிற்கு அவர் வருவார். எங்கள் நட்புக்கு குலையவே இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார். என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம்; உறங்குவோம்; நட்பு முறையில் உறவாடுவோம்.


நாயக்கர் சுயமரியாதை, எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை; பத்துப் பங்கு வேற்றுமை. எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும், எங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒரு காரணம்.


இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவே இருந்தது.... காஞ்சி மாநாட்டிலே நாயக்கருக்கும், எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் "குடிஅரசு" எய்த சொல்லம்புகள், பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே.... நாயக்கர், சாதி வேற்றுமையை ஒழித்தவர்; அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர்.


வைக்கத்தில் (1924) தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகஞ் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் "வைக்கம் வீரர்" என்ற தலைப்பீந்து, பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். "வைக்கம் வீரர்" என்பது பெரியாருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று.


இராமசாமியார் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் இவர் முயற்சியால் ஈரோட்டில் இந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானும் சென்றிருந்தேன். தென்னாட்டில் இந்தி விதையிட்டவர் நாயக்கரே. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அது செடியாகி நின்றது. காங்கிரஸ் ஆட்சி, அச்செடியைத் திடீரென மரமாக்கக் கட்டாயத்தில் இறங்கியது. "அது இஷ்டப்படி வளரலாமே" என்றார் நாயக்கர். இக்கருத்து வேற்றுமை பெருங்கிளர்ச்சித் தீயாயிற்று. நாயக்கர், கிளர்ச்சித் தலைவராக முன்னணியில் நின்றார். அவரது கெழுதகை நண்பர் இராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் ஆட்சித் தலைவராக வீற்றிருந்தார். அடக்குமுறை எழுந்தது. நாயக்கர் ஏறக்குறைய ஆயிரவருடன் சிறை புகுந்தார். அடக்குமுறையை யான் "நவசக்தி" வாயிலாக மறுத்து வந்தேன். அம்மறுப்பு, நாயக்கர் கிளர்ச்சிக்குத் துணை போயிற்று.


வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம்.



மயிலை மந்தைவெளியிலே (08-03-1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு "குகானந்த நிலைய"த்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார். யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பி பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. "மழை பெய்தது தெரியுமா?" என்று நண்பரைக் கேட்டேன். "மழையா?" என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு, 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின் மீது சென்றது. "அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.



1942-ம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது, அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும், சண்முகானந்தசாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், "இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழுகைக்குப் காரணம் என்ன?


அஞ்சாமையும், உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான், நாகரிக நாடாக இருக்க முடியும். கருத்து வேற்றுமைக்கு இடங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான், மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும், சென்னை வந்தால், அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம் ஈரோடு செல்வேன்.

                                      *********************************************

இராமசாமிப் பெரியார், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ, தென்னாட்டிலும், வடநாட்டிலும் பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.

ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெளிடைமலை.


பெரியார் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால், எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.


..... இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும், அரிய யோசனைகளும், இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.


"தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்." இது பெரியாருக்குத் தான் பொருந்தும்.

***********************************************************************************************

பிறர் செய்திராத பெரும்பணி செய்தவர்!

சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள்.
(1928)

சென்ற நாற்பதாண்டுகளாகத் திரு. ஈ.வெ.ரா. அவர்கள், இத்தென்னாட்டில் பிரம்மாண்டமான பணியாற்றி வருகின்றவர். இன்றைய தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஈ.வெ.ரா. அவர்களின் பெயர் சொந்தப் பெயராகவே உரிமையுடன் வழங்கப்படுகிறது. அவருடைய பெயரும், புகழும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திர தேசத்திலும், பம்பாயிலும், மத்திய மாகாணங்களிலும், பிற இடங்களிலும் பரவி இருக்கின்றன என்பதைப் பெருமிதத்தோடு நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.


"எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமூதாய சீர்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ - அங்கெங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் ஒளிவீசித் திகழ்கின்றது." ஒரு சில ஆண்டுகளுக்குள் இத்தகை பரந்த செல்வாக்கு அவருக்கு எப்படி ஏற்பட்டுவிட்டது? அவருடைய வாழ்க்கை முறையில், நடைமுறைத் திட்டத்தில் இடையறாத பெருந்தொண்டில், பேச்சில், எழுத்தில் பொதுமக்களை எல்லாம் தன்பால் ஈர்க்கத்தக்க அத்தகைய தனிச் சிறப்பு என்னதான் பொதிந்து கிடக்கின்றது?


சென்ற முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில், வேறு யாரும் செய்து முடிக்காத அரும்பணியை அவர் ஒருவரே ஆற்றி இருக்கிறார் என்று எல்லோராலும் சொல்லப்படுகின்றதே, அதெற்கென்ன காரணம்? பொதுநலத் தொண்டு புரிவதில் அவர் அப்படி என்ன பதைபொருளைக் கண்டுபிடித்துவிட்டார்? இதைத் தான் நாம் சிந்தித்தறிய வேண்டும்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே நாங்களெல்லாம் கூடத்தான், சமூக சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி வந்தோம். சமூக சீர்திருத்தத்தைத் தேசீய முறையில் கையாளுவதா, அல்லது ஆராய்ச்சி முறையில் கையாளுவதா என்று நாங்கள் அக்காத்தில் தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தோம். நான் அந்த நாட்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்களையும் பார்க்கிறேன். வியக்கத்தக்க பேராற்றலைப் பொதுமக்களிடத்தெல்லாம் நண்பர் நாயக்கர் எழுப்பிவிட்டதைத்தான் பார்க்கிறேன்.


அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; மக்களிடத்தே புது எழுச்சியைப் பார்க்கிறேன்.


நண்பர் ஈ.வெ.ரா. காலத்தையே மாற்றிவிட்டாரா என்ன?


அந்தக் காலத்தில் நாங்கள் படித்த கூட்டத்தாரைக் கொண்டு, சீர்திருத்த ஆர்வத்தை நாட்டில் எழுப்பிவிடலாம் என்று நம்பினோம். ஆனால் இராமசாமி நாயக்கரவர்கள், படித்த கூட்டத்தாரைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. என்ன ஆனாலும் சரி, சீர்திருத்தம் மட்டும் கூடவே கூடாது என்று சூள் உரைத்துவிட்ட (படித்த) கூட்டத்தாரிடம், சீர்திருத்தப் பணியாற்றுவதில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது; ஆம்! படிப்பு வாசனை அறியாத பாமர மக்களிடம் தம் முழுச் சக்தியையும் அவர் செலவிட்டுப் பணியாற்றி வருகிறாரே, அதிலேதான் அவருடைய வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது. பரிதாபத்திற்குரிய வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் பாமர மக்களை, அவர்களுடைய நீண்ட உறக்கத்தினின்றும் தட்டி எழுப்புவது, அவர்களுடைய உள்ளத்தில் தம் கருத்துக்கள் நேரே சென்று பதியக்கூடிய வண்ணம் பேசுவது; எழுதுவது - இவற்றின் தொகுப்புத் தான், இராமசாமி நாயக்கரின் பெருந்தொண்டு.


தங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை உணர வழியின்றி, எங்கும் நிறைந்த அந்தகாரத்தில் தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒளி ஒன்று கிடைக்குமா என்று வாடி வருந்திக் கொண்ட ஆயிரமாயிரம் மக்கள் வதைவதை அவர் கண்டார். சோர்ந்து போன அவர்களுடைய உள்ளங்களுக்குச் சுறுசுறுப்பை ஊட்டினார். மங்கி மறைந்து போன பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டி தட்டி எழுப்பினார்; எதனையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் சிந்தனா சக்தியை அவர்களுக்கு அளித்தார். இதைவிடச் சிறந்த தொண்டு வேறு என்னதான் இருக்க முடியும்?


எந்தக் கருத்தையும் பகுத்தறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து காரணகாரியத் தத்துவங்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று எண்ணிப் பார்த்து அதன் பின்னரே ஒப்புக் கொள்ள வேண்டும் என்னும் உணர்ச்சியை, அவர் பாமர மக்களுக்கெல்லாம் ஊட்டிவிட்டார். உண்மை விடுதலைக்கு இதைவிட விரைவாக நம்மைச் செலுத்தும் பாதை வேறு இருக்க முடியுமா?


சமூதாய சீர்திருத்தத் துறையில் அவர் ஆற்றிய பெரும்பணி, சிந்தனா சக்தியை மக்கள் உள்ளத்திலெல்லாம் எழுப்பிவிட்டதே. சீர்திருத்த எண்ணங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் வளர்ச்சிக்கே இப்பணி மிகமிக இன்றியமையாதது என்பதை யார் மறுக்க முடியும்?


தம்முடைய அச்சம், தயை, தாட்சண்யமற்ற - ஆணித்தரமான கண்டனங்களால் யார் யார் மனம் புண்படும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது. தாம் எடுத்துக்கூறும் கருத்துக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்துவனதாமா என்பதைத் தான் அவர் எண்ணிப் பார்ப்பார். மற்றபடி தம்முடைய தொண்டு யார் யார் உள்ளத்தில் என்னென்ன எதிரொலிகளைக் கிளப்பும் என்பதைப் பற்றி அவர் சிறிதும் எண்ணமாட்டார். சமூதாய சீர்திருத்தவாதி ஒருவருக்கு அமைந்திருக்க வேண்டிய சிறப்பான பண்பு - இந்த அஞ்சாத நெஞ்சந்தான். இது என்னுடைய நண்பர் இராமசாமி நாயக்கர் அவர்களிடம் பூரணமாய் அமைந்திருக்கிறது.


நண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட்டில் பரவச் செய்துவிட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந்தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணி விட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று முதியவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்றுவிட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.
                                            ************************************************

பிரெஞ்சு தேசத்தில் ருசோ என்பவர் (1712 - 1778) அந்நாட்டின்
சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்ததுபோல், நம் நாட்டின்
சுயமரியாதையைக் காக்க உழைக்கும் நமது நாயக்கர், 'தமிழ்நாட்டின் ருசோ' ஆவார். (1926)

********************************************************************************************
சிறந்த மனிதர்களில் ஒருவர்!

சர். ஆர். சண்முகஞ் செட்டியார் (1939)


இராமசாமிப் பெரியார் அவர்களுடைய பொதுநலத் தொண்டுகள் பலவற்றில் நான் நெருங்கிக் கலந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அவர்களோடு கால் நூற்றாண்டுக்கு மேல் அந்நியோன்யமாகப் பழகக்கூடிய நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறேன். இந்தியாவில் இன்று பொதுவாழ்வில் உள்ள மிக முக்கியமான பிரபலஸ்தர்களில் பெரியார் அவர்களும் ஒருவர் என்பதைத் தயங்காமல் கூறுவேன். சென்ற 25-ஆண்டுகளாக இந்நாட்டின் பொதுவாழ்வில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களில் மிகப் பேர்பெற்ற தலைவர்கள் அனேகருடன் நெருங்கிப் பழகியுள்ள காரணத்தைக் கொண்டே நான் மேற்கண்ட கருத்தை அழுத்தமாய்த் தெரிவிக்கிறேன்.


செய்கையில் உண்மை - நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம் - சிறிதும் தன்னலமென்பதே இல்லாத வாழ்க்கை - இவைகளே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக்கூடியனவென்றால், உண்மையிலேயே பெரியார் நம்முடைய மிகக் சிறந்த மனிதர்களில் ஒருவராவார்.


நாட்டிற்குத் தொண்டு புரிவதாகவே தம்முடைய வாழ்க்கையைப் பயன்படுத்துவதிலுள்ள அவரது ஆர்வமும், இந்திய சதூயத்திலுள்ள கேடுகளை ஒழிப்பதற்காக அவைகளுக்கெதிராய்ச் செய்து வரும் பிரசார முறைகளும், அவற்றின் மீது அவருக்குள்ள நியாயமான கோபாவேசமும், இக்காரணங்களுக்காக அவர் செய்துள்ள மகத்தான தியாகங்களும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் பெரியாருக்கு ஒரு நிரந்தரமான இடங்கிடைக்குமாறு செய்துவிட்டன.


நமது நாட்டைப் போன்ற பெரும்பரப்பான ஒரு நாட்டில், குறிப்பிட்ட அளவான துறைகளில், உண்மையான தேசத்தொண்டு செய்வதற்கு இடமிருக்கிறது. பெரியார் அவர்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தமது வேலையைச் செய்வதென்று நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இக்குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் செய்யும் தொண்டானது அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகிய பொது வாழ்க்கையின் எல்லாத் துறையிகளிலும் மிகமிகத் தீவிரமான முறையியென்றே சொல்ல வேண்டும். தாம் மேற்போட்டுக் கொண்ட இவ்வேலையினின்றும், அகில இந்தியத்தலைமையென்னும் பேராசைகளால் அவர் எக்காலத்திலம் இழுக்கப்பட்டதேயில்லை.

*****************************************************************************************


தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர்!

ரெவரண்ட் ஜான் பிட்மன் (1928)

சமூக சீர்திருத்தத் துறையில் இடைவிடாத சேவை செய்து வரும் இராமசாமி நாயக்கர் அவர்கள், தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர் ஆவார்.

******************************************************************************************


கொள்கைக்காக உயிரையும் கொடுப்பவர்!


முன்னால் முதல் மந்திரி,
பனகல் அரசர், சர்.பி. ராமராயநிங்கவாரு அவர்கள்
(1928)


மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூக சீர்திருத்தக்காரராவார். அவர், சமூக சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூக சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராயிருக்கிறார்.



தோழர். ஆர்.கே. சண்முகம் அவர்கள் தெரிவித்தது போல் சமூக சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன்பெறாமற் போன வேலையைச் சில வஹஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன்பெறாமற் போனவேலையைச் சில வருஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத்தைவிடச் சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை அவரே முதலில் கண்டவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், சமுதாய சீர்திருத்தத்தை துறையில் பெரும்பணி ஆற்றியாக வேண்டுமென்பது அவருடைய முடிந்த முடிவு.

**********************************************************************************************

ஓர் உண்மையான சிங்கம்!


முன்னால் கவர்னர்,
சர்.கே.வி.ரெட்டிநாயுடு அவர்கள்.
(1928)


தமக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழு வேலையாகவுங் கொண்டு கடந்த 20-அல்லது 25-ஆண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு, இரண்டு அல்லது மூன்று விசேஷ குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்களமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும், நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுப்பிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம், இரண்டாவது தியாகம், மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக்
கொண்டு வருவது என்பது.


தோழர் இராமசாமி நாயக்கர் அவர்களின் தைரியத்தைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. அவர் ஓர் உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்! வாழ்க்கையில் பயமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய பயமின்மை இருந்தாலொழிய இத்தகைய (சமூதாய சீர்திருத்தக்) காரியங்களில் யாரும் வேலை செய்ய முடியாது.


அவசியம் நேர்ந்தால், அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர். பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயதத்தை உபயோகிப்பது போல், தோழர் நாயக்கர் தமது பேனாவைப் பயமின்றி எங்கும் செலுத்துகிறவர்.

*********************************************************************************************

பெரிய தியாகி!


கப்பலோட்டிய தமிழர்,
வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள்.
(1928)

திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி "அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில்" பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது?


திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20-வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை
செய்து வந்தோம். அந்த இயக்கத்தின் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்தது நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.

******************************************************************************************

எங்களால் மறக்க முடியாதவர்!

ராவ்சாகிப் N. சிவராஜ் B.A., B.L., M.L.C., அவர்கள்
(1928)

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு. நாயக்கர் அவர்களை எங்கள் சமூகத்தார்; என்றும் மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை, அளவிடற்பாலது அன்று. அவர் ஒரு காலத்தில் தேசீயப் போராட்டத்தில் அமிதவாதக் கொள்கையுடையவராக இருந்தார். சமூக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவார்.
********************************************************************************************
ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார்! 

முன்னாள் அமைச்சர், 
திரு.எஸ்.இராமநாதன் M.A., B.L., 
(1930)


வைக்கம் வீரர் ஒரு மனிதரல்லர்; அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். 


உலகத்தில் எந்தெந்தத தேசங்கள் முன்னேறியிருக்கின்றனவோ, அந்தந்தத் தேசங்களில் இவரது கொள்கை நிலவக் காணலாம். மற்றும், தீவிரமாக எந்த மக்கள் சுதந்திரப் போராட்டம் செய்திருக்கின்றரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்.

********************************************************************************************

சரியென்று பட்டதை வலியுத்துபவர்!

முன்னாள் முதன்மந்திரி, 
டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் 
(1928)



நான் காங்கிரசிலிருந்த காலம் முதற்கொண்டு நாயக்கர் அவர்களை அறிவேன். அவர் - மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை கொஞ்சமும் மதியாது, தமக்குச் சரியென்றுட்டதை வலியுறுத்திவந்த ஒரு காரணத்தாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன். அத்தகைய ஒரு சிறந்த குணமே, இப்போது நம் மக்களின் முற்போக்கக்கு அவசியமாயிருக்கிறது.


நம்மால் கற்பிக்கப்பட்ட - மனிதனுக்கு மனிதன் உள்ள வேற்றுமையே நமது தேசத்தை நாம் ஆள்வதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்திருக்கிறது..... அந்த அர்த்தத்தோடுதான், இன்று இராமசாமி நாயக்கர் அவர்கள், பிராமணரல்லாதார் இயக்கத்தின் தலைவராய் விளங்குகிறார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சத்தை அவர் அறிந்துவிட்டார். காலஞ்சென்ற எனது நண்பர் நாயர் பெருமாள் இவ்வியக்கத்தைத் துவக்கும் போது, சமூக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அத்தகைய கொள்கையே, தோழர் நாயக்கர் அவர்களும் கொண்டிருக்கிறார்.
                                                ********************************

(1929)

எனது நண்பர் திரு. ஈ.வெ.ரா. இராமசாமி நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த (சுயமரியாதை) இயக்கம், நன்றாக வேருன்றி அசைக்க முடியாத நிலையோடு நிற்பதல்லாமல் அது பெரும்பான்மையான மக்களைத் தன்னுள் கவர்ந்து கொண்டு வருவதைக் காணக்காண, நான் அளவிட முடியாத மகிழ்ச்சியடைகிறேன். 

*******************************************************************************************************

நாயக்கர் சேவையை நாடு மறவாது! 


டாக்டர் பி.வரதராஜீலு நாயுடு அவர்கள், 
(1934)


"............. ஸ்ரீ நாயக்கர் தமிழ்த் தேசத்திற்குச் செய்துள்ள ஊழியத்தை ஒருவரும் மறந்திருக்க முடியாது. பெரும் தனவந்தராகவும், ஈரோட்டு முனிசிபல் சேர்மன் தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர் ஆகிய பதவிகளையும் வகித்து உல்லாசமாயிருந்த ஸ்ரீராமசாமி நாயக்கர், 1915-ம் வருடம் முதற்கொண்டு தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார். கோயம்புத்தூர் ஜில்லா மாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மாநாட்டிற்கும் 1915, 1917- ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாவரும் அறிவார்கள். பிறகு காங்கிரசில் சேர்ந்து, ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றியதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதே இல்லை.

1924-ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் மெம்பராகவும் இருந்து, நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர். அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் 1922-ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலிருந்து விலகி (ஸ்ரீவரதராஜீலு நாயுடு உட்பட) எல்லாத் தேசியவாதிகளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்ததும், "சுயமரியாதை"  இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். அய்ரோப்பாவில் யாத்திரை செய்து ரஷியாவைத் தரிசித்ததன் பயனாகப், "பொது உடைமை"க் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார். அவருக்கும் நமக்கும் மாறுபட்ட கருத்துக்கள் என்னவிருப்பினும், தமக்கு நியாயமென்றுபட்ட கருத்துக்களை அஞ்சாது வெளியிடுவதில் ஸ்ரீநாயக்கர் முதல் ஸ்தாபனம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய - சமூக - அரசியல் துறைகளில் ஸ்ரீநாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும், அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத்தேசத்தினர் ஒருநாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும்..." 
                                                -------------------------"தமிழ்நாடு" தலையங்கம்
***************************************************

1933


"நாயக்கர் அவர்கள் நபட்டிற்குப் புரிந்த சேவையை நான் மறுக்க முடியாது. நானும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும், நாயக்கரும் ஒரே சமயத்தில் இரவும் பகலும் இடைவிடாமல் ஒன்றித்துப் பிரசாரம் புரிந்துவந்திருக்கிறோம். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப் பரந்த நோக்கமுடைய உலக அபிமான இயக்கத்தை (International Movement) ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்."

************************************************************************************************

உண்மைக் களஞ்சியம்! 


சர். ஏ.டி. பன்னீர் செல்வம், பார் - அட்- லா 
(1938) 


நமது மாபெரும் தலைவர் பெரியாருக்குச் சத்தியாக்கிரகம், அகிம்சை, "சாகும்வரை உண்ணாவிரதம்" முதலிய வித்தைகளில் நம்பிக்கை இல்லை. ஆனால், அவர் தமக்குச் சரியெனப்பட்டதை எவருடைய தயவு தாட்சணியத்திற்கும் கட்டுப்படாது. பட்டவர்த்தனமாகச் சொல்லுவார். அது மற்றவர்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ அதைப்பற்றி அவருக்குக் கவலையே கிடையாது. தம் கருத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுவார்ககளோ என்ற பயம் அவருக்கு இருப்பதே இல்லை. 


நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்ல. ஆனால், தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக அவர் பட்டினி கிடப்பதில்லை; "சாகும்வரை உண்ணாவிரத"மிருப்பதில்லை. நேர்மையான வழியிலேயே பாடுபடுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்! 


*****************************************************************************************

முதலமைச்சராயிருக்க உரிமையுடையவர்! 

திருவாங்கூர் முன்னாள் திவான், 
சர். சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள் 
(1945)


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், வெகுவாக மதிக்கப்படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்துவிடவேண்டுமென்பதைப் பகிரங்கமாகவே அவர் சொல்லி வருகிறார். அத்தகைய தீர்மானம் ஒன்று, சமீப காலத்தில் நடைபெற்ற சேலம் ஜஸ்டிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே தமிழ்நாடும் ஒரு சுதந்திர அரசாங்கத்தைக் கொண்ட தனிநாடாகவே அவரால் சித்தரிக்கப்படுகிறது. இன்றைய நிலைமை அடிப்படையாய்க் கொண்டு பார்த்தால் பாகிஸ்தானத்தில் முதல் அமைச்சராக இருப்பதற்கு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு.


*************************************************************************************

பெரியார் இராமசாமி! 


முன்னால் அமைச்சர், 
அட்வகேட், S.முத்தையா முதலியார் அவர்கள்


"பெரியார் இராமசாமி"க்குக் கருத்துரை தர, திருவாளர் சிவப்பிரகாசத்தின் வேண்டுகோளை உவப்புடன் ஏற்கிறேன்.


"மகாத்மா" வெனுஞ் சொல் காந்தியாருக்கே சிறப்புப் பெயராக உரிதாய்விட்டது போல், "பெரியார்" எனும் சொல் "ஈ.வெ.ரா" வுக்கே இந்நாட்டில் உரிதாய்விட்டது. பத்தாண்டுகளுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈ.வெ.ரா. சிறை சென்று, காங்கிரசு கவர்ன்மெண்டின் காருண்யத்தினால் பெல்லாரி ஜெயிலில் வதியும் பொழுது, கடற்கரையில் தீவிரமாய் நடக்கும் கூட்டங்களொன்றில் நான் பேசுகையில், வடநாட்டுத் தலைவரை "மகாத்மா" வென்று அழைப்பதுபோல், தென்னாட்டுத் தலைவரை அதற்கீடான "பெரியார்" என்றே அழைக்கவேணும், அச்சொல் அவருக்கே தனிச் சொல்லாக வழங்கவேணுமென்று சொன்னது, இப்பொழுது ஞாபகம் வருகிறது. அச்சொல் நிலைத்தது பற்றி மகிழ்ச்சி. அச்சொல்லைத் தலையாகக் கொண்ட நூல் வருவது, மேலும் மகிழ்ச்சி.


இவ்விருவர்களுக்குமுள்ள பொருத்தங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். மகாத்மா, தம் தொழிலையும், பதவிகளையும் விட்டுப் பொதுநல ஊழியத்தில் ஈடுபட்டார். அப்படியே பெரியாரும், தம் பெரிய லாபகரமான வியாபாரத்தையும், பல பொது ஸ்தாபனங்களில் தலைவர், அங்கத்தினர் என்ற பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினார். அன்னிய ஆங்கிலேய ஆட்சியை ஒழிக்க, இருவரும் பலமுறை சிறை சென்றுள்ளார்கள். மகாத்மாவின் மனைவி ஸ்ரீமதி கஸ்தூரியம்மையாரும் மகாத்மாவைப் பின்பற்றிச் சிறை சென்றார். பெரியாரின் மனைவி ஸ்ரீமதி நாகம்மையாரும் அவ்வாறே. காந்தியாரும் கதர் நூல் நூற்றார். பெரியார் நூலும் நூற்றார்; மூட்டை தலையில் தாங்கி கதரும் விற்றார். மகாத்மா அகிம்சா தர்மத்தையும், சாத்வீகத்தையும் கையாண்டார். பெரியாரும் அக்கொள்கையை ஏற்று, அவ்விதமே நடக்க அறிவுரை செய்கிறார். 


இவர்களுக்குள்ள மாறுபாடுகளையும் சில சொல்லுகிறேன்.


மகாத்மா எளிய வாழ்வென்று சொல்லிக் கொண்டு மன்னரும் மகிழக்கூடிய சுகவாழ்வு வாழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில் நிமிஷம் தவறாமல் ஸ்தானம், உணவு, பானம், நடை, வேலை, உறக்கம் முதலியன. ஆட்டுப் பால் என்றால் ஆடே உடன் பிரயாணம் செய்ய வேண்டும். பழங்கள், பருப்புகள் முறைப்படி தவறாமல் எக்காலத்திலுமுண்டு. பணிவிடையாட்கள் பல பேர். டாக்டர் எப்போழுதும் கூடவே பிரயாணமென்றால் தகுந்த முன்னேற்பாடு, பரிவாரங்கள், வேலையாட்கள், காரியதரிசிகள் உட்பட எவரும். 3 வது வகுப்பு வண்டி பிரயாணமென்றால் வண்டி முழுமையும் சில சமயங்களில் தனி இரயில்ககள் கூட. சென்ற இடங்களிலெல்லாம் அரண்மனையையொத்த விடுதிகள். பங்கி காலனியானாலும் முன்னதாகவே லட்ச ருபாய் செலவில் வசதிகள் செய்தபிறகு! நடக்கும் பொழுது கைலாகு கொடுத்துத் தாங்கி நடப்பவர்கள் பலர். எட்டியிருந்து பார்ப்பவர் சொல்வது இது. கிட்டவிருந்து பழகுபவர்கள் சொல்வது பலவிருக்கலாம்.


பெரியார் கதையென்ன? எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக்கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்காவிட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5- நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால் கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3-வது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காத கூட்டம். தப்பித் தவறி மேல் வகுப்புக்குப் போனால் அங்கும் அப்பொழுதும் அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க துணையாகச் சகா ஒருவர் இருவர் - இவ்வளவு தான். சென்றவிடயங்களில் அனேகமாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டிதானோ! எங்காவது ஜாகை, சௌகரியமிருந்தால், அங்கும் 20-பேர் கூட்டம். உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுது தான், தன்னுடம்பும் தசை, நரம்புகளாலானதுதான் என்ற எண்ணமுண்டாகியது.


காங்கிரசில் முழுமையும் ஈடுபட்டு நடந்துவரும்பொழுது, காஞ்சீபுரம் மாநாட்டில் இந்த ஸ்தாபனத்தினால் தமிழருக்கு நலன் கிடைக்காது; திராவிடனுக்குத் தாழ்மையும், தீமையுந்தான் உண்டாகுமென்று இவரும், திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும் கண்டு கொண்டார்கள். பெரியார் அதைவிட்டு அப்பொழுதே விலகினார். திரு. வி.க. - திருத்தலாமென்ற எண்ணங்கொண்டு அங்கே இருந்தார். அவருக்கும் பின்பு நினைவெல்லாம் கனவாகிவிட்டது. இருவரும் மறுபடியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். திராவிடஸ்தான் பிரிவினையிலும், இந்தியெதிர்ப்பிலும் இருவரும் ஒத்துழைக்கிறார்கள். வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கை நம்பிக்கை அதிகரிக்கிறது. தென்னாடு தனிநாடாகி, தமிழும், தமிழனும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொருவரும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொருவரும்உணர்ச்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்புரிய வேண்டும். (20-11-1948)

                                            **********************************************                                         

                                             நம் மதிப்பிற்குரிய தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தலைமையேற்று உயிர் நாடியாயிருந்து வேலை செய்துவரும் திராவிடர் கழகத்துக்குத் திராவிட நாட்டுப் பிரிவினையையே அதன் முக்கியக் கொள்கையாக அமைத்துவிட்டார். அதற்குப் பெருத்த ஆதரவு கிடைத்து விட்டதென்பதோடு, அதன் கொள்கையும் நன்கு பரவி, பொதுமக்களுடையவும், இதர அரசியல் ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களுடையவும் ஒருமித்த ஆமோதிப்பைப் பெற்றுவிட்டது மகிழ்ச்சிக்குரியதொன்றாகும்.

                                              *********************************************

சுதந்திரத் திராவிடத் தனியரசுக்குப் பெரியார் இராமசாமியவர்கள் பெரும் போராட்டம் துவக்கி நடத்தி வருகிறார்கள். பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு நிற்போர்கூட, இந்த நிலையில் வினயமாக ஆலோசித்து சுதந்திரத் திராவிடத் தனியரசு பெற அவருடன் ஒத்துழைக்க முன்வர வேண்டியது அவசியம் (1947)

*******************************************************************************************************

நீண்ட காலம் வாழ்வாராக!

முன்னால் உயர்மன்ற நீதிபதி.
மலையாளம், M.கோவிந்தன். B.A.,B.L., 
(1929)


உலகத்திலுள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்த காலஞ்சென்ற பெரியார் ஸ்ரீநாராயண குருசாமி அவர்களால் இவ்வுண்மை மலையாளம் என வழங்கப்படும் நாட்டில் நன்கு உணரப்பட்டது. மக்கள் அனைவரும் சகோதரர்களென்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்த திரு.கே. அய்யப்பன் என்னும் பிறர்க்கென வாழும் வாலிபர், இவ்வுபதேசத்தைப் பரப்பி வருகின்றார்.


மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு.ஈ.வெ.இராமசாமியார் மற்றெவரையும் விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து, ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன்வந்துள்ளனர். திரு. இராமசாமியார் பலசாலி என்பது உங்கட்குத் தெரியும். சுதந்திரத்திற்காக நன்றாகப் போராடுபவர்.


வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவருடன் முதன்முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற்படும் படியான முடிவிற்குக் கொண்டு வந்துவிட்டுத் திரு. இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். ஏனைய நடவடிக்கைகளையும் அவர் நடத்தி வைத்தார். இவர் அழுத்தமான காங்கிரஸ்வாதியாகவும், ஒத்துழையாமையிலீடுபட்டவராகவும் இருந்தார். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவையைப்பற்றி நாங்கள் அவ்வளவு தெரிந்தவர்களல்ல. அவரது மனம், இப்போது மிகவும் முக்கியமான சமூதாயத்துறையிலீடுபட்டிருக்கிறது. கோட்டயத்தில் நடைப்பெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10.000- க்கு அதிகப்பட்ட மக்கட்கு இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன்.

சொற்பொழிவு எளியதாகவும், நேரானதாகவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மையுணர்வோடு வந்தது. மிகக் கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்ததானது, இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும். நல்ல காலத்திலேயே இவர் இங்குச் "சுயமரியாதை" இயக்கத்தைத் துவக்கினார். செல்வாக்குடையவர்கள் இவரைப் பின்பற்றுகின்றனரென்பதை, யான் பார்க்கிறேன்..... 

இந்நாட்டிலே களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்குப் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற்றமடையச் சமயமும், வசதியுமளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். முன்னரே அவ்வியக்கம் பரவி இம்மாகாணத்தின் பல பாகங்களில் வேரூன்றிவிட்டது. இப்போதிருக்கும் பொதுஜன இயக்கமென்பதையும் விட இவ்வியக்கம் நன்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களைப் பிளவுப்படுத்தும் தடைகளையொழித்துச் சித்தி பெறுமென்பதும், மக்களை அய்க்கியப்படுத்துமென்பதும் திண்ணம்.



இயக்கத்தைச் சித்தியான முடிவுக்குக் கொணரப் பணியாற்றவும், ஒற்றுமைப்பட்ட இந்திய மக்களின் உன்னத நிலையைக் கண்டு களிக்கவும், திரு. ராமசாமியார் நீண்ட காலம் உடல் நலத்துடனும், வன்மையுடனும் வாழ்வாராக!


*************************************************************************************************

                           -------------------------------------நூல்:- சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலிலிருந்து 9 ஆம் பதிப்பு  பக்கம் 199-226 




27 comments:

முனைவர். வா.நேரு said...

மிக நல்ல பதிவு தமிழ் ஓவியா, வாழ்த்துக்கள்.

முனைவர். வா.நேரு said...

மிக நல்ல பதிவு தமிழ் ஓவியா, வாழ்த்துக்கள். ..முனைவர் வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி தளங்களில் அயராது பாடுபடும்



விடுதலையை வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள்

81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை நாளேட்டை - தமிழர்களே, வாங்கிப் படியுங்கள் - தாங்கிப் பிடியுங்கள் என்று 53 ஆண்டுகள் விடுதலையின் ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது அருட்கொடையால் மலர்ந்த உலகின் ஒரே முழு பகுத்தறிவு நாளேடு விடுதலை நாளேடு!
இந்நாளேட்டின் 81ஆம்ஆண்டு துவக்க நாள் இன்று.
ஒரு கொள்கை நாளேடு, தொடர்ந்து எதிர் நீச்சலில் களைப்போ, சோர்வோ சிறிதும் இன்றி, நீந்தி நீந்தி வெற்றிக் கரைகளைத் தொடும் போராயுதம் என்பதே இதன் தனித் தன்மை; தனி வரலாறு!
இன்னார் இனியர் என்று பாராது, துலாக்கோல் சரியான நிலையில் நின்று எடை காட்டுவதுபோல், நம் மக்களுக்கு விரோதமான அவமரியாதைகளை அழித்து, சுயமரியாதையை நாளும் போதிக்கும் சுவைமிக்க பாட புத்தகம்!

வருவாய் விடுதலையின் குறிக்கோள் அல்ல!

வருவாய் இதன் குறிக்கோள் அல்ல; லட்சங்கள் இதன் இலக்கு அல்ல. இலட்சியங்களே மாறாத இதன் இலக்கு! இலக்கை நோக்கி நாணேற்றிக் குறி பார்ப்பதில் வேறு எத்திசையிலும் இது தன் பார்வையைச் சிதற விடுவதில்லை. 101 காலணா நன்கொடைகள் மக்களும், தொண்டர்களும், தோழர்களும் தந்தாலும் அதனைப் பத்திரப்படுத்தி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளையை பெரியார் தம் திரண்ட செல்வத்தையும் இதில் இணைத்து உருவாக்கியதால், ஆண்டுதோறும் ஏற்படும் பல லட்ச ரூபாய் நட்டம் என்ற தாங்கொணாச் சுமையையும் தாங்கி, இழப்பிலேகூட கொள்கை இன்பம் எங்களுக்கு உண்டு என்பதாலோ, தூக்கிச் சுமப்பதில் சுகம் காணும் சுயமரியாதை வீரர்களாக நாம் அனைவரும் உள்ளோம்!



தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் ஏடு

இந்திய அரசியல் சட்டத்தின் பேரால்தான் குடிஅரசுத் தலைவர், பிரதமர் முதல் ஊராட்சியினர் வரை உறுதி எடுத்துக் கொள்ளுகின்றனர்.

அவர்களில் எத்தனைப் பேருக்கு அதில் உள்ள அடிப்படைக் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று விதிக்கப்பட்டுள்ளது தெரியும்?

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அறிவியல் மனப்பான்மையையும் (Scientific Temper), மனிதநேயம் (Humanism), ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு ஆராயும் திறன் (Spirit of inquiry), சீர்திருத்தம் (Reform)ஆகிய வற்றை வளர்ப்பது இன்றியமையாத முக்கிய கடமை யாகும் என்று 51A பிரிவின் - உட்பிரிவு (h) கூறுகின்றதே, அதைப் பரப்பும் அன்றாடப் பணியே தன் உயிர்மூச்சு என்று கருதி நாளும் கருத்துப் பிரச்சாரம் செய்து - வருவாய் இழப்பு, பொருளாதாரத்தில் இருந்த போதிலும் - அறிவை விருத்தி செய்து அகண்டமாக்கும் அன்றாடப் பணி செய்து கொண்டுள்ள நாளேடு - விடுதலை என்ற 80ஆம் ஆண்டு நிறைந்த சாதனை நாளேடு இந்தியாவிலோ - உலகிலோ வேறு எங்காவது உண்டா?
சமூக நீதிக் களத்தில் தான் இதன் சாதனைகள் சாதாரணமானதா?

நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும்!

நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும்; ஜோதிட மூடநம்பிக்கை, ராசி பலன், மலிவான சுவைக்களங்களான சின்னத்திரை, பெரிய திரை, மதம், ஆன்மீக வியாபாரம் இவற்றில் மக்களைச் சுரண்டாத, சுயமரியாதைச் சொக்கத் தங்க நாளேடு விடுதலையைத் தவிர வேறு உண்டா? விரலை மடக்கத்தான் எவராலும் முடியுமா?

வருமானத்திற்காக முன் பக்கங்களைக்கூட காவு கொடுத்துள்ள நாளேடுகள் இன்று நம் கண்முன்னே சர்வ சாதாரணம்!

அரசு விளம்பரத்திற்காக தங்கள் ஏடுகளை குத்தகைக்கு விட்டு, ஏதாஸ்து தம்பட்ட ஏடுகள் மத்தியில், தனி ஒரு நாளேடு, தலை நிமிர்ந்து இன்னமும் பீடு நடை, பெருமித நோக்கோடு போடுகிறது என்றால் அது பெரியார்தம் விடுதலை அல்லவா?

வாங்கிப் படியுங்கள்

கழகக் குடும்பத்தவர்களே, பேராதரவு தரும் பெருந் தகையாளர்களே! விடுதலையை வாங்கிப் படியுங்கள் தாங்கிப் பிடியுங்கள்.

சந்தாக்கள்மூலம் நீர் ஊற்றி வளர்க்கும் உங்கள் கடமையைச் செய்யுங்கள். காரணம் விடுதலை என்றும் உங்கள் (மக்கள்) உடைமை - பொது உடைமை - பொது உரிமைக்கு போராடும் போர்க் கருவி!

பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி அழிப்பு, பகுத்தறிவும், அறிவியலும் - தன்மானமும், இனமானமும், மனிதநேயம் காக்க, மனித உரிமைக்கான போர்க் கவசப் பணி புரிய விடுதலையை தாங்கிப் பிடியுங்கள்.அது விடுதலைக்காக மட்டும் அல்ல உங்களுக்காக - உங்கள் எழுச்சி, ஏற்றத்திற்காக, எதிர்கால சந்ததி யினருக்காக!

நமது ரத்த ஓட்டம் தடைப்படலாமா?

53 ஆண்டுகள் ஆசிரியப் பணி புரியும் உங்கள் தோழன் - தொண்டனின் அன்பு கனிந்த வேண்டுகோள்.
விடுதலைக்கு சந்தா
விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடை
சால்வைகளைத் தவிர்த்து சந்தாக்களைப் பெருக்குங்கள்!
நமது இரத்த ஓட்டம் தடைபடலாமா? இனமானத் திருப்பணி தளர் நடைக்கு ஆளாகலாமா?
ஒத்துழையுங்கள்! ஒத்துழையுங்கள். என்றும் உங்கள் ஆசிரியத் தோழன்



சென்னை ஆசிரியர் 1.6.2015 விடுதலை (மருத்துவமனையிலிருந்து வந்து எழுதும் முதல் அறிக்கை - வேண்டுகோள் இது)



Read more: http://www.viduthalai.in/e-paper/102498.html#ixzz3bpZLNbCb

தமிழ் ஓவியா said...

விளக்கம் கேட்கப்படவில்லை மாணவர் அமைப்பு தகவல்

சென்னை, ஜூன் 1- சென்னை அய்அய்டி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு எந்தவித அறிவிப்பு எங்களுக்கு இதுவரை அனுப்பப்பட வில்லை என அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் தெரிவித்தனர். அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை அய்அய்டி நிர்வாகம் கடந்த மே 15-ஆம் தேதி ரத்து செய்தது. இந்த நிலையில், மாணவர் அமைப்பு மீதான நடவடிக்கைக்கு விளக்கம் அளித்த சென்னை அய்அய்டி நிர்வாகம், விதிகளை மீறி, அய்அய்டி-யின் பெயரைப் பயன்படுத்தி, தங்களது சொந்த கருத்துகளை வெளியிட்டதாலேயே அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இது தாற்காலிகமானதுதான்.

விதிகளை மீறியதற்கு விளக்கம் கேட்டு அந்த அமைப்பினருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் என அய்அய்டி நிர்வாகம் தெரிவித்தது. இதை மறுத்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள், அய்அய்டி நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு எந்தவித அறிவிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. தடை நீக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை (ஜூன் 1) அறிவிப்பை வெளியிடுவோம் என்றனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102500.html#ixzz3bpZi4lBD

தமிழ் ஓவியா said...

சொத்துக் குவிப்பு வழக்கு: மேல்முறையீடு வரவேற்கத்தக்கதே!

திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை
கருநாடக மாநில அரசு சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, கருநாடக மாநில அட்வகேட் ஜெனரலும், மூத்த வழக்குரைஞரும், சட்ட நிபுணருமான ரவிவர்மக் குமார், கருநாடக மாநில அரசு சட்டத்துறை செயலாளர் செங்கப்பா ஆகியோர் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாக ஆய்ந்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கருநாடக மாநில அமைச்சரவை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டது மாத்திரமல்ல; தவறான வகையில் வழக்குகளை மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது சட்டப்படியானது - நியாயப்படியானது - வரவேற்கத்தக்கதுமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடே எதிர்ப்பார்க்கிறது.


சென்னை தலைவர் திராவிடர் கழகம்
1.6.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102502.html#ixzz3bpZq1sQq

தமிழ் ஓவியா said...

பேசும் பேச்சு - எப்படி? - யோசிப்போமா



வாழ்வில் நாம் அனைவரும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளும், நடைமுறைகளும் ஏராளம்! ஏராளம்!!
வாசிப்பது
படிப்பது,
கற்பது
அறிவது
இவை எல்லாம் ஒன்றல்ல. வெவ்வேறான பல்வேறு படிநிலைகள் என்பதை நாம் அசை போட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.

அறிதல் வேறு, புரிதல் வேறு, தெளிதல் வேறு - இல்லையா?
நாம் அறிந்ததையெல்லாம் புரிந்து கொண்டோமா?
புரிந்து கொண்டதையெல்லாம் பற்றி தெளிவடைந்துள்ளோமா?
தெளிவடைந்த பிறகும்கூட அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகத் துணிதல் நம்மில்

ஏன் பலருக்கு வருவதில்லை?
வாழ்க்கைக்குக் கேளிக்கை அவசியம்தான் ஆனால் கேளிக்கையே வாழ்க்கை ஆகலாமா?
உணவுக்கு உப்பு தேவைதான், ஆனால் உப்பே உணவாக முடியுமா?
பேசுவது என்பது விரும்பத்தக்க தேவைகளில் ஒன்றுதான் ஆனால் வெறும் பேச்சு மட்டுமே

பயன் தந்துவிட முடியுமா?
பேசுவதுகூட உரையாடலின் முக்கிய கூறுதான்; அப்பேச்சு பொருள் பொதிந்த தாகவும், செயலுக்கான முன்னோடி யாகவும், அமைந்தால்தான் பேச்சுக்குப் பயன்; பேசியவருக்குப் பெருமை!

திருவள்ளுவர்தம் திருக்குறளில் பயன் இல சொல்லாமை என்று ஒரு அதிகாரத்தினையே பத்து குறள்களில் எழுதியுள்ளார்களே! அறத்துப்பாலில் 20ஆம் அதிகாரமாக இது இடம் பெற்றுள்ளது!

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல் (குறள் 200)

பொருள்: சொற்கள் பலவற்றுள்ளும் பயன் அளிக்கக் கூடிய சொற்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்; சொற்களில் பலன் ஏதும் அளிக்காத சொற்களை ஒரு போதும் சொல்லவே கூடாது.

அதற்கு முந்தைய குறளில் வள்ளுவர் - குற்றமற்ற அறிவினை ஒருவர் உடையவரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அவரது பேச்சை வைத்து எடை போட்டு

ஆய்ந்து அறியுங்கள் என்று நமக்கு அறிவு றுத்துகிறார்!
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (குறள் 199)
இதன்

பொருள்: மயக்கத்திற்கு இடமில்லாத குற்றமற்ற அறிவினை உடையவர்கள், மறந்தும் பொருளில்லாத பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டுமா?
நாம் பேசும்போது - கேட்பவர்கள் விரும்பிக் கேட்குமாறு அப்பேச்சு அமைதல் வேண்டும். என்ன இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே எப்போது இவரிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று சலிப்பும், சங்கடமும் கொள்ளுமாறு செய்யலாமா?
இதை விட நமக்குத் தெரியாது, நாம் உருவாக்கிய அவமானம் வேறு உண்டா?
சள சள வென்றோ, தொண தொண வென்றோ பேசுவதுடன் நான், நான் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறுவது நம்மை நாமே மற்றவர் முன் மதிப்பிழக்கத் தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்! - மறவாதீர்!

அது மட்டுமா?
நாம் பேசும் பேச்சு கருத்தாழம் மிகுந்ததாக குறிப்பாக உரையாடலில் அமைதல் மட்டும் முக்கியம் அல்ல.
எக்காரணத்தைக் கொண்டும் நம் குரலை பிறர் முன் உயர்த்திப் பேசாமல் மென்மையாகக் கூறப் பழகிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது!
(எனக்கே இந்த குறைபாடு பற்பல நேரங்களில் உண்டு; காரணம் ஆணவம் அல்ல. நாம் கூறும் கருத்து 100-க்கு 100 ஆதாரபூர்வமானது என்ற உறுதியால் தான். என்றாலும் விரும்பத்தக்கது அல்ல. நாம் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று பல நேரங்களில் உணர்ந்தது உண்டு. பெரும்பாலும் இதனைக் கடைப் பிடிக்க நான் இடைவிடாத முயற் சியை இன்னமும் செய்து கொண்டு தான் வருகிறேன்).

Asserting என்று உறுதிபட அழுத்திச் சொல்லுதலைக்கூட மென் குரலில் கூறலாமே!
ஜப்பானியர்களிடம் நாம் மரியா தையை எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே அளவுக்கு அவர்கள் எவரும் உரக்கக் கூடப் பேச மாட்டார்கள். மென்மையாகத் தான் மெல்லிய குரலில் பேசுவர். அங்கு மட்டுமல்ல மேலை நாட்டவர் பலரும் இப்படித்தான்.
ஓங்கிய குரலில் பதில் அளிக்கக் கூட மாட்டார்கள். தாய்லாந்து மக்கள் கூட மென் குரலில்தான் பேசுவர்.

ஆனால், நாம் தான் பட்டாசுப் பேச்சு வெடித்து ஊர் அறிய, உலகறிய முழங்கிடும் பேச்சுப் பண் பாடு என்ற பொருள் குற்றவாளிகள் ஆவோம்!
எப்போது மாறுகிறோமோ, அப் போது தான் மனிதம் வளரும், உயரும்!
சிந்திப்போமா?



Read more: http://www.viduthalai.in/page-2/%20102506.html#ixzz3bpalBzNp

தமிழ் ஓவியா said...

புலி வாலை மிதிக்கலாமா?

சென்னை அய்.அய்.டி.யில் கடந்த ஆண்டு (2014) பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளன்று அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் ஒன்று தொடங்கப்பட்டது.

அய்.அய்.டி. என்றாலே மக்களுக்கோ, மக்கள் பிரச்சினைக்கோ சம்பந்தம் இல்லாதது - அது ஒரு தனி உலகம் என்று கருதப்படும் நிலைதான் இருந்து வந்தது.

எங்களுக்கும் சமூக அக்கறை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டு சமூகம் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்கு மாறாக, அம்பேத்கர் - பெரியார் பெயரைக் கேட்டாலே நுரையீரல் வெந்து போய் விடும் என்று கருதுகிறவர்களின் கைப்பாவை யாகத்தான் அய்.அய்.டி. இருந்து வந்திருக்கிறது.

அய்.அய்.டி. என்றாலே அய்யர் - அய்யங்கார் டெக்னாலஜி என்ற நிலைதான்; அது ஒரு பெரிய அக்ர காரமாகவே இருந்து வந்திருக்கிறது; தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பெயரளவிற்கு இட ஒதுக்கீடு உண்டு என்றாலும் அவர்களுக்குரிய சதவீதப்படி (தாழ்த்தப் பட்டோர் 15 சதவீதம், பழங்குடியினர் ஏழரை சதவீதம்) இடங்கள் நிரப்பப்படுவதில்லை. பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் ஆரிய ஆக்டோபஸ் ஆதிக்கம் தான்.

சென்னை அய்.அய்.டி.யையே எடுத்துக் கொள்ளலாம் மொத்தம் 212 பேராசிரியர்கள் என்றால் அவர்களில் உயர் ஜாதியினர் 209. (98.59 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம்; தாழ்த்தப்பட்டோர் 3 (1-41 சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors) 91 பேர் என்றால் அதில் உயர் ஜாதியினர் 88 (96.70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியம் தாழ்த்தப் பட்டோர் 3 (3.3. சதவீதம்) பழங்குடியினர் பூஜ்ஜியம், உதவிப் பேராசிரியர் 177 என்றால் அதில் உயர் ஜாதியினர் 165 (93.22 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் 7 (3.95 சதவீதம்) தாழ்த்தப்பட்டோர் 4 (2.25 சதவீதம்) பழங்குடியினர் - 1.

தமிழ் ஓவியா said...


ஆகக் கூடுதல் உயர் ஜாதியினர் (பெரும்பாலும் பார்ப்பனர்களே!) 462, பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் 7, தாழ்த்தப்பட்டோர் 10, பழங்குடியினர் ஒன்றே ஒன்று -இதுதான் சென்னை அய்.அய்.டி.யின் நிலை.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு - மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டதால்தான் முதன் முதலாக உதவிப் பேராசிரியர்களில் மட்டும் 7 இடங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியராகவோ, இணைப் பேராசிரியராகவோ ஒரே ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை; பழங்குடியினரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டும் - அதுவும் உதவிப் பேராசிரியர் பணியில்.

இத்தகு பெரும் அக்கிரகாரக் காலனியாக இருக்கக் கூடிய அய்.அய்.டி. வளாகத்தில் சமூக நீதிப் போராளிகளான பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் பெயரால் ஓர் அமைப்பு இயங்குகிறது என்றால் அவர்களால் சீரணித்துக் கொள்ள முடியுமா?
அதனுடைய விளைவுதான் அம்பேத்கர் - பெரியார் பெயரால் அமைந்த வாசகர் வட்டத்திற்கான தடையாகும்.

கேட்டால் பிரதமரை விமர்சித்து விட்டார்களாம். ஏன் பிரதமர் என்பவர் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவரா? இந்தியா ஜனநாயக நாடல்லவா!
இன்றைக்குப் பிரதமரை விமர்சிப்பதா என்று விண்ணுக்கும் பூமிக்கும் வானரமாகத் தாவுகிறார்களே - இதே அய்.அய்.டி. வளாகத்திற்குள் மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் இதரப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக, அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்களின் கொடும்பாவியைப் அய்.அய்.டி. பார்ப்பன மாணவர்கள் அய்.அய்.டி. வளாகத்திலேயே கொளுத்தவில்லையா? அப்பொழுது சம்பந்தப்பட்ட மாணவர்கள்மீதோ, அமைப்பின்மீதோ அய்.அய்.டி. நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டால் நிருவாகமே மாணவர்களைத் தட்டிக் கொடுக்கும்; சட்டப்படியாக உள்ள இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினால் அந்த அமைப்பினை சட்ட விரோதமாகத் தடை செய்யும் - இதுதான் மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி என்பது.

விவேகானந்தர் பெயரால் வாசகர் வட்டம் அங்கு செயல்படுகிறது; அவர்களுக்கு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது - இணைய தள வசதிகளுடன் அவர்கள் எதைப் பரப்புகிறார்கள்? வேதம், இதிகாசம், உபநிடதம் பற்றி எல்லாம் பேசுகிறார்களே - அந்த வேதங்கள், கீதை என்ன சொல்லுகின்றன?

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதையைப் பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்கிறது அய்.அய்.டி. நிருவாகம்?
அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் ஆகியோரின் பெயரால் அமைந்த அமைப்பினைத் தடை செய்தது மூலம் புலிவாலை மிதித்து விட்டனர் - குளவிக் கூட்டில் கை வைத்து விட்டன பார்ப்பன சக்திகள். அதன் விளைவு என்ன என்பதை நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சி விவாதங்களில் மாணவ - மாணவிகள் டாண் டாண் என்று ஈரோட்டுச் சிங்கக் குரலில் கர்ச்சிக்கிறார்களே! பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லையா? என்று முழங்குகிறார்களே! பூரிப்பாக இருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்து விட்டார் , அம்பேத்கர் காலமாகி விட்டார் என்று கனவு காண வேண்டாம்; அவர்கள் விதைத்துச் சென்ற கனல் கனன்று கொண்டுதானிருக்கிறது. தேவைப்படும்பொழுது எரிமலையாக, பூகம்பமாக வெடித்துக் கிளம்பும் என்பதை நேரில் பார்த்த பிறகாவது பார்ப்பனர்கள் புத்திக் கொள்முதல் பெறட்டும்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அண்ணல் அம்பேத்கர்!!



Read more: http://www.viduthalai.in/page-2/102505.html#ixzz3bpavwVqX

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)



Read more: http://www.viduthalai.in/page-2/102504.html#ixzz3bpbBJDBu

தமிழ் ஓவியா said...

புதினாக் கீரையின் மருத்துவ குணங்கள்

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.



வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறு கின்றனர். தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறும். மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

மருத்துவக் குணங்கள்: கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும்கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவைகளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போது பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறுள்ளவர்கள் புதினாத் துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.



Read more: http://www.viduthalai.in/page-7/102523.html#ixzz3bpbpYRvI

தமிழ் ஓவியா said...

கை, கால் குடைச்சல்!

கை, கால் குடைச்சல் என்றாலே வயதானவர்களின் உபாதை என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர் களுக்கும் இப்பிரச்சினை வரும் என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் கண்ணன். கை, கால் குடைச் சலுக்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறுகிறார் அவர்.



ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் வரலாம். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை, கால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாதல், வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் போன்றவையும் காரணமாகலாம்.
இந்த உபாதை 30 வயதுக்கு உட்பட்டவருக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே வேளையில், சுமை தூக்கும் தொழிலாளிகள், தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வரலாம். பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள்.

இது பரம்பரையாகத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. கை, கால்களில் ஒருவருக்கு குடைச்சல் உள்ளது என்பதை உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்... படிப்படியாக முழங்கால் வரை அதிகமாகும். இரவு நேரங்களில் தூங்கும் போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும். இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு இடுப்பு வலிமற்றும் தலைவலி இருக்கும். சிலருக்கு தூக்கமின்மை வரலாம். அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல் போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும், மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்தலாம். வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்கள் செய்வதும் அவசியம். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசி உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது நன்மை தரும். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், தாங்களாகவே மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை மருத்துவர் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். இதனால் தற்காலிக நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியம். பிரச்னைக்கான தக்க காரணத்தை ஆராய்ந்து அறிந்து நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொண்டால் இந்த குறைபாட்டை சரி செய்யலாம்.





Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpc0Pk33

தமிழ் ஓவியா said...

வாத பித்த நோய்களை குணப்படுத்தும் தூதுவளை

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.



தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியை யும் அதிகரிக்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவை பலப்படுத்தும். தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும். தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் ஆகியவை நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும். தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.



Read more: http://www.viduthalai.in/page-7/102527.html#ixzz3bpcArCCi

தமிழ் ஓவியா said...

மருத்துவ ஆலோசனை

சூவிங்கம் மெல்வதால் உணவு சாப்பிடுவது குறைந்து உடல் எடை குறைய வாய்ப்புண்டா?

அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சூவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் சாப்பிடும் வேளையில் அதிக உணவு உட்கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. சூவிங்கம் மெல்லுபவர்கள் இயற்கையான பழங் களைவிட, சத்தற்ற உணவையே அதிகம் விரும்புகின்றனர்.

பூண்டு சாப்பிடுவதால் தீய விளைவுகள் உண்டா?

பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் ரத்தத்தை இளக்கும் மாத்திரையை உட் கொள்பவராக இருந்தால், பூண்டைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். பூண்டுக்கு ரத்தத்தை இளக்கும் தன்மை உண்டு.

உடல் பருமனுக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பு?

டைப் 2 வகை நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நேரடியாக உடல் பருமனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவில் நிகழும் அய்ந்து மரணங் களில் ஒன்று உடல் பருமனால் ஏற்படுகிறது.



Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpcQJU8S

தமிழ் ஓவியா said...

புலியை இடறியதன் விளைவு: மும்பை அய்.அய்..டி.யில் அம்பேத்கர் - பெரியார் - புலே வாசகர் வட்டம் தோற்றம்

மும்பை, ஜுன்1_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் விளைவு _- எதிரொலியாக மும்பை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் புதிய அமைப்பு உருவாகியுள்ளது.

சென்னை அய்.அய்.டி மாணவர்களின் அமைப் பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையைக் கண் டித்து ஜனநாயக உரிமை கோருபவர்களும், கருத்து ரிமை கோருபவர்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நடத்துபவர்கள்மீது தாக்குதலா?

தேசிய அளவில் அந் தத் தடையை கண்டித்து மாணவர் அமைப்புகள் கிளர்ந்து எழுந்து போராட் டத்தில் குதித்துள்ளனர். புதுடில்லியில் இந்திய தேசிய மாணவர் ஒன்றியம் சார்பில் புதுடில்லியில் போராட்டத்தை நடத்தி னார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாண வியர்மீது காவல்துறை யினர் கடுமையாக நடந்து கொண்டு தாக்கி உள்ள னர். அத்தாக்குதல்களைக் கண்டித்து சென்னை அய்.அய்.டி மாணவர்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பு மாணவர்கள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அய்.அய்.டி. மாணவர்கள்

தேசிய அளவில் விவா தமாக உருவாகி இருப்பது என்னவென்றால், சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் தலைவராக இருப்பவரிடம் எந்த விதத்திலும் நீதி, நேர்மை ஏதும் கிடையாது. நிர்வாக ரீதியாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்துக்கு தடைவிதிப்பதற் கான உரிமை அல்லது தனிப்பட்ட மாணவரின் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை என்று எதுவுமே அவருக்கு கிடையாது.

அவருடைய தனிப் பட்ட வலதுசாரி சிந் தனைகளுடன், தன்னு டைய அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்துவதா கவே அவருடைய செயல் இருக்கிறது. மாணவர்கள் தங்களின் கருத்துகளை நிகழ்ச்சிகளின் வாயி லாகவோ, துண்டறிக்கை களை வழங்குவதன் வாயி லாகவோ இன்னும் பிற வகையிலோ கருத்து தெரி விப்பதைக் கண்காணிப்ப தற்கோ, கட்டுப்படுத்துவ தற்கோ நிர்வாகத்துக்கு எவ் வித அதிகாரமும் இல்லை.

அய்.அய்.டி நிறுவப் பட்ட காலத்திலிருந்து சர்வாதிகார முறையில் இது போன்ற கருத்துகளுக்கான சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேநேரத்தில் வலது சாரிக் குழுக்களாக உள்ள பார்ப்பனீய கொள்கை களைப் பரப்புவதற்கு மட்டும் அனுமதிக்கும் நிலை இருந்துவருகிறது.

விவேகானந்தா வாசகர் வட்டம் Vivekananda study circle (VSC) வந்தே மாத ரம் உள்ளிட்டவை மற்றும் அலுவலக ரீதியில் இல் லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா ஆகிய வற்றைச் செய்து வருகின் றது. விவேகானந்தா வாசகர் வட்ட அமைப்பு செயல்படுவதற்காக தனியே பிரம்புத்திரா விடுதியில் இணைந்துள்ள நூலகத்துடன் கூடிய ஓர் அறையும், அய்.அய்.டி. இணைய தளத்தின்மூலம் இணைந்திருக்கும் வசதி யும், அதன் தொடர்புடைய மின்னஞ்சல் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதுடன், நிதிவசதியும், அய்.அய்.டி அரங்குகளையும் பயன் படுத்திக்கொள்ளவும் உள் ளட்ட பல்வேறு வகை யிலும் விவேகானந்தா வாசகர் வட்டம் அமைப்பு செயல்படுவதற்கான அனைத்துவகையிலான வாய்ப்புகளும் சென்னை அய்.அய்.டியில் வழங்கப் பட்டுள்ளன.

ஆகவே, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்தின் சார்பில் கீழ்க் காணும் வசதிகளை அளிக் குமாறு கேட்டுக்கொள் கிறோம். சென்னை அய். அய்.டி. வளாகத்துக்குள் எந்த ஒரு மாணவர் அமைப்பாக இருப்பினும் எவ்வித கேள்விகளும், இடையூறுமின்றி, சுதந் திரமாக இயங்க வேண்டும்.

விவாதங்கள் நிகழ்ச் சிகளை நடத்திட அய். அய்.டியின் எந்த விடுதி யிலாவது நிரந்தரமான அறை ஒதுக்கப்பட வேண்டும். நூலகத்துக்கு போதிய இடத்தை அளிக்க வேண்டும். மாணவர்களின் தகவல்களை அளிப்பதற்கு அய்.அய்.டியின் இணைய தளத்தில் இடம் ஒதுக்க வேண்டும். மாணவர்கள் தொடர்பு கொள்ள மாண வர்மின்னஞ்சல் (SMail) கணக்குகள் தொடங்குவ தற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். மாண வர் அமைப்புகளுக்கு என ஒதுக்கப்படும் நிதியை சம அளவில் அனைத்து மாண வர் அமைப்புகளுக்கும் வழங்கிட வேண்டும்

இந்த கோரிக்கைகளை சென்னை அய்.அய்.டி மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் கோரி உள்னர்.

மும்பை அய்.அய்.டி.யில் புதிய அமைப்பு

சென்னை அய்.அய்.டி. யின் தடையை எதிர்த்து மும்பையில் மும்பை அய். அய்.டி மாணவர்கள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மனிதச் சங்கிலிப் போராட் டத்தை நடத்தி உள்ளனர்.
சென்னை அய்.அய்.டி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடையின் எதிரொலியாக சமுதாயத் தில் அரும்பெரும் பணி களை ஆற்றியுள்ள தலை வர்களின் பெயரில் மும்பை அய்.அய்.டி. மாணவர்களின் சார்பில் அம்பேத்கர் பெரி யார் புலே வாசகர் வட்டம் என்ற புதிய அமைப்பு உருவாகி உள்ளது.



Read more: http://www.viduthalai.in/e-paper/102547.html#ixzz3bungdqxe

தமிழ் ஓவியா said...

பஞ்சாயத்து என்ற பெயரால் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்



திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் திரண்டனர்
சென்னை, ஜுன்2_ சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (1.6.2015) மாலை 4.00 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி தலைமையில் இந்தியா முழுவதிலும் பஞ்சாயத்து என்ற பெயரில் நடை பெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங் களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், மகளிரணி கு.தங்கமணி, சுமதி கணேசன், த.மரகதமணி, தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி தொடக்க உரை ஆற்றினார். சென்னை மண்டல மாணவரணி செய லாளர் பா.மணியம்மை, பெரியார் களம் இறைவி ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், கே.இராசேந்திரன், பேராசிரியர் ராமு, பெருமாள், விஜயலட்சுமிதாஸ், திண்டிவனம் மாவட்டச் செயலாளர் நவா.ஏழுமலை, மாவட்ட மகளிரணி விஜயலட்சுமி, மாவட்ட பாசறை சரோஜா, சாந்தி பரந்தாமன், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், மாவட்டச் செயலாளர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை சேதுராமன், தொழிலாளரணி பாலு, சி.செங் குட்டுவன், ஆவடி மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, கலைமணி, தென் சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செயலாளர் சண்முகப்பிரியன், ஈழமுகிலன், பெருமாள், வடசென்னை இளைஞரணி தளபதி பாண்டியன், திருவொற்றியூர் கணேசன், ஒளிவண்ணன், திண்டிவனம் சிந்தனைசிற்பி, முத்தழகன், புழல் நகரத்தலைவர் ஏழுமலை, ஜனாதிபதி, சுவர் எழுத்து இரணியன், நா.பார்த்திபன், ஓவியர் பாசுகர், பொன்னேரி பாலு, தரமணி மஞ்சுநாதன், இராசேந்திரன், பட்டாளம் பன்னீர், தாம்பரம் பாசு.ஓவியச் செல்வன், கோ.சுரேஷ், ரேவந்த், சிவக்குமார், திலீபன், இரா.சத்தீஷ், வ.மணி கண்டன், சண்முகம், இராமதுரை, யுவராஜ், மகேசுவரன், முத்துராஜ், ஆனந்த், இசையின்பன், ஆவடி தமிழ்மணி, எழில், தொழிலாளரணி துணை செயலாளர் செல்வராசு, மதிவாணன், மகளிரணி உமா, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, செ.பூங்குழலி, மீனாட்சி, திலகவதி சென்னியப்பன், மோ.மீனாகுமாரி, பாக்யா கலைமணி, ஆவடி பாசறை செயலாளர் பெரியார் செல்வி, மு.சந்திரா, அறிவுச்சுடர், ஈசுவரி, சீனியம்மாள், பகுத்தறிவு, அஜந்தா, வி.யாழ்ஒளி, வி.வளர்மதி, வி.தங்கமணி, கோ.குமாரி, கீர்த்தி, பூவை செல்வி, பொன்மணி, தென்னரசி, விஜயா, திலகவதி, பசும்பொன், குடியாத்தம் ஓவியா, நிலா, பெரியார் பிஞ்சுகள் கவியமுதன், செம்மொழி, பகுத்தறிவு உள்பட சென்னை மண்டலத்தைச் சேர்ந்த தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி கழக மாவட்டங்களின் சார்பில் கழகத் தோழர்கள், தோழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் மு.பவானி நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரை

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பாக திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி தலைமை ஏற்று இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆர்ப்பாட்டமானது, கடந்த ஒரு மாதமாக இந்தியாமுழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதைக் கவனித்த தமிழர் தலைவர் அவர்கள் ஓர் அறிக்கையின் வாயிலாக இந்தப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

குறிப்பாக மகாராட்டிர மாநிலத்திலே ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் வைத்திருந்த கைப்பேசியில் அம்பேத்கர் பாடல் இடம் பெற்றிருந்தது என்று இருந்த காரணத்தால் அங்கே இருந்த உயர்ஜாதியினர், அவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மீரட் பகுதியிலே பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மீறி ஆறு பெண்கள் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக வேலைக்கு சென்றார்கள். உடனே, ஊர்ப்பஞ்சாயத்து என்று கூடி, அந்த பெண்களை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல், கிராமமே அவர்களைப் புறக்கணித்தது.

அந்த புறக்கணிப்பிலிருந்து அவர்கள் மீள வேண்டுமென்றால், ஓர் இலட்சரூபாய் பணம் கட்ட வேண்டும். அந்த ஒரு லட்சரூபாய் பணத்தை கிராமத்தில் உள்ளவர்களிடம் கடனாக வாங்கி, அதற்கு வட்டி சதவிகிதம் 120 சதவிகிதம் கொடுத்து, அந்தக் கடன் அடைத்து, அந்தத் தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று செய்தி வருகிறது.

மூன்றாவதாக பாட்னாவிலிருந்து ஒரு செய்தி வருகிறது. ஒரு யாதவ இளைஞன் மாற்று ஜாதி பெண்ணைத் திரு மணம் செய்து கொண்டான் என்பதற்காக ஊர்ப்பஞ்சாயத் தைக் கூட்டி 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக் கிறார்கள்.
அதைவிடக் கொடுமை பஞ்சாபிலே பேருந்திலே சென்று கொண்டிருந்த ஒரு தாயையும், மகளையும் அங்கே இருந்த இரண்டு காலிகள் பாலியல் தொந்தரவு செய்த நேரத்தில் அதிலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் அந்தப் பெண் பேருந்திலிருந்து குதித்துவிட்டார். குதித்தவர் அங்கே மரணம் அடைந்தார்.

தமிழ் ஓவியா said...

இது பெரிய பிரச்சினையான நேரத்திலே பஞ்சாப் மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் சொல்கிறார், இது சாதாரண விபத்து, இது கடவுள் செயல். இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார். இப்படித் தொடர்ந்து பல்வேறு செய்திகள் பெண்களின்மீது ஒடுக்குமுறை என்பது தலைவிரித்தாடக்கூடிய கேவலம் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் பல்வேறு செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக குடியாத்தத்திலே 5 வயது சிறுமி ஒரு கோயில் குருக்களால் பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். குருக்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை என்றுகூட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல கிருஷ்ணகிரியிலே பெங்களூருவில் வேலை பார்த்த ஒரு தோழர் நவீனமான கைபேசி வைத்திருந்தார் என்பதற்காக உயர்ந்த ஜாதிக்காரர்கள் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இப்படித் தொடர்ந்து ஜாதியும், தீண்டாமையும் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்ற காரணத்தாலே, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரிலே சாட்டை அடி கொடுப்பது, அபராதம் போடுவது என்று கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிற காரணத்தாலே, இவற்றை எல்லாம் கண்டித்து மக்கள் மத்தியிலே விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக மத்தியிலே பிஜேபியின் மதவாத ஆட்சி வந்ததற்குப்பின்னாலே இந்துத்துவ உணர்வு தலைதூக்கு கின்ற ஒரு

சூழ்நிலையிலே இத்தகைய ஒடுக்குமுறைகள் நாட்டில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
அவற்றைக் கண்டிக்கின்ற வகையில்தான் மக்கள் மத்தியிலே அதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும். இந்தக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக மத்திய அரசு ஒரு தனிச்சட்டத்தையே கொண்டுவர வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள். அதை வலியுறுத் தித்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் - இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

பொருளாளர் தலைமையுரை

ஆர்ப்பாட்டத் தலைமையேற்று திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி பேசுகையில் குறிப்பிட்டதாவது: பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒழிக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம் என்ற திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையின்படி, இங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கின்றது. இந்த நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகின்றது.

ஆனாலும்கூட இன்னும் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பஞ்சாயத்து என்ற பெயரால் கட்டப்பஞ்சாயத்து, ஜமீன்தார் பஞ்சாயத்து, நில உரிமைதாரர்களின் பஞ்சாயத்து, ஜாதிப்பஞ்சாயத்து என்று பஞ்சாயத்துகள் நடந்துகொண்டி ருக்கின்றன. இவைகளெல்லாம் கட்டப் பஞ்சாயத்து களாகவே நடந்துகொண்டிருக்கின்றன. நீதித்துறை அல்லது சட்டத்துறையாக இருந்தாலும் அல்லது காவல்துறையாக இருந்தாலும் எந்த துறைகளுமே இதில் செயல்படும் பொழுது இதில் கண்துடைப்பு நாடகமாகத்தான் அதில் நடந்துகொண்டிருக்கின்றன. சமூகநலத்துறையும், சமூகப் பாதுகாப்புத்துறையும், மனித உரிமை ஆணையமும் இருந்தும், பெண்ணடிமைத் தனங்கள் ஒழிய வேண்டும் என்று கூறும் எத்தனையோ பெண்ணுரிமை அமைப்புகள் இருந்தும்கூட அவை செயல்பட முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

இப்படிப் பட்ட ஒரு சூழலில் கட்டப்பஞ்சாயத்து என்ற பெயரால், ஜாதிப்பஞ்சாயத்து என்ற பெயரால், நாட்டாண்மை பஞ்சாயத்து என்ற பெயரால் சவுக்கடியைக் கொடுப்பதும், சாணிப்பால் கரைத்து ஊற்றுவதும், மலத்தை வாயில் திணிப்பதும், சிறுநீரை வாயில் ஊற்றுவதுமாகிய பல கொடுமைகள், சாட்டை அடிகள், அபராதங்கள் இவை நடந்துகொண்டிருக்கின்றன.
பெண்ணடிமைத்தனம் தலைதூக்கி நிற்கும் நிலையில், பெண்களை ஒரு பாவைகளாக, அனுபவிக்கத்தக்க பாவைகளாக மட்டுமே நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கும்போது, பெண்களை ஓர் அலங்காரப் பதுமைகளாக நினைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கும்போது, இவையெல்லாம் மாற வேண்டும் என்று அதற்காக சிறப்பான சட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இன்றும் நம்முடைய சட்டத்திலே 18 இடங்களிலே ஜாதி இருக்கிறது. தந்தைபெரியார் அவர்கள் சொன்னதைப்போல, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வதைப்போல, ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டம் வரவேண்டும், தீண்டாமை ஒழிக்கப்படுவதற்கான சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். பெண்ணடிமைத் தனம் ஒழிக்கப்படுவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் 4 தூண்களாக இருக்கக்கூடிய நீதித்துறையாக இருந்தாலும், நிர்வாகத் துறையாக இருந்தாலும், சட்டமன்றம், நாடாளுமன்றமாக இருந்தாலும், ஊடகத்துறையாக இருந்தாலும் அதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், பெண்களுக்கும் அவரவர்களுக்குரிய விழுக்காட்டளவில் பங்களிப்பு அளிக்கப்பட்டால்தான், பெண்களுக்கு குறைந்த பட்சம் 33 விழுக்காடு பங்களிப்பு அளிக்கப்பட்டால்தான் இந்தக் கொடுமைகள் அகற்றப்படும்.

ஏனென்றால், புகாரை வாங்குமிடத்திலும், புகார்மீதான சட்டத்தை செயல்படுத்தும் நேரத்திலும், அதை ஊடகங் களில் சொல்லக்கூடிய நிலையாக இருந்தாலும், சட்டமன்றத் திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கேள்விகளை எழுப்புகின்ற நிலையாக இருந்தாலும், அதில் அவரவர் களுக்குரிய விழுக்காட்டளவிலான மக்கள் இருந்தால்மட் டும்தான் அதை செயல்படுத்த வேண்டும், செயல்படுத்த முடியும் என்ற காரணத்தால்தான் அதை விளக்கித்தான் பொதுமக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் இதைப்புரிந்துகொண்டு இதற்கான தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் வேண்டுகோளாகக் கூறி அனைவரும் ஆதரவை அளித்திட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி தலை மையுரையில் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கருங்கடலாக கழக கொடிகளுடன் தோழர்கள் தோழியர்கள் பெரியார் பிஞ்சுகள் குவிந்தனர்.



Read more: http://www.viduthalai.in/e-paper/102557.html#ixzz3buntb6vK

தமிழ் ஓவியா said...

மூன்றாம் முறையாக அவசர சட்டமா?

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மூன்றாம் முறையாக மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்டிஏ) அவசரச் சட்டமாக செயல்படுத்த துடிக்கிறது.

இதற்குமுன் இரண்டு முறை மாநிலங்களவையில் அதற்கு ஆதரவு கிடைக்காத நிலையில் மூன்றாம் முறையாகக் கொண்டு வர முனையும் இந்த அவசர சட்டத்துக்குக் குடியரசு தலைவர் எப்படி கையொப்ப மிடுகிறார் என்பது நியாயமான வினாவாகும். அதிகாரமற்ற பதவி என்று இந்தியக் குடியரசு தலைவர் விமர்சிக்கப்பட்டாலும், இதுபோன்ற சந்தர்ப்பத் திலாவது மோடி அரசைப் பார்த்து சன்னமான ஒரே ஒரு கேள்வியைக்கூட எழுப்பக் கூடாதா? ஒரு ஜனநாயக அமைப்பில் நாடாளுமன்றத்தை இப்படி சிறுமைப்படுத்துவது நல்லதல்ல என்று செல்ல மாகவாவது பிரதமர் மோடி தலையில் ஒரு குட்டு வைக்கக் கூடாதா?
1894ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசாங்கம் பின்பற்றிய அதே பாணியை சுதந்திர நாடாகக் கூறப்படும் ஒரு நாடு கண் மூடிப் பின்பற்றலாமா?
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) 2013ஆம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துதல் மறு வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டத்திற்கு பிஜேபி உள்ளிட்ட பல கட்சிகளும் கைதூக்கின என்பது உண்மையே!

ஆனால், அறிவு நாணயத்தோடு இப்பொழுது பிஜேபி ஆட்சி நடந்து கொள்ளவில்லை என்பதுதான் குற்றச்சாற்று. அந்த ஆட்சியில் இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு, நில உரிமையாளர்களுக்கு வழங்கப் பட்டு இருந்த உரிமைகளும், சலுகைகளும் இந்த மோடி அரசில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன என்பதுதான் கொடுமை!
ஆளும் கட்சியை எதிர்க்கக் கிடைத்த அரசியல் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் இதனை மாற்றி விட்டன என்று பொத்தாம் பொதுவாகவும் குற்றப் பத்திரிகை படிக்கவும் முடியாது - கூடாது; பிஜேபி தலைமையி லான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஏற்கெனவே ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வயிற் றுக்குச் சோறு போடும் விளை நிலங்களில் எல்லாம் கான்கிரீட் வீடுகள் கண் சிமிட்டி நிற்கின்றன. இப்பொ ழுது வெளிநாட்டுப் பெரு முதலாளிகளின் தொழிற் சாலைகளுக்காகப் பாரம்பரிய விவசாயிகளின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்படுவதுதான் நாடு தழுவிய கடும் எதிர்ப்புக்களுக்குக் காரணமாகும்.

பி.ஜே.பி. அரசின் இந்தப் புதிய சட்டப்படி பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது.
80 சதவீத நில உரிமையாளர்களில் ஒப்புதல் தேவை, நகர்ப்புற நில உரிமையாளர்களுக்கு சந்தை விலையை விட இரு மடங்கும், கிராமப்புறங்களில் சந்தை விலையைவிட நான்கு மடங்கும் இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது மன்மோகன் அரசின் சட்டம். மோடி அரசோ அதனைத் தூக்கித் தூர எறிந்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் காலால் ஆட்டும் ஆணையை பிஜேபி அரசு தலையாட்டி செய்கிறது.

நில உரிமையாளர்களுக்கான மீள் குடியேற்றம், மறுவாழ்வு பற்றி மன்மோகன் அரசின் சட்டம் பேசியது. உத்தரவாதமும் தந்தது. மோடி அரசோ அதனை முகர்ந்துகூடப் பார்க்கத் தயாராகவில்லை.
அரசு நிலம் கையகப்படுத்தும் முறையில் ஏற்கெ னவே நாட்டு மக்களுக்குக் கடும் கசப்பான அனுப வங்கள் உண்டு.
எடுத்துக்காட்டாக சிறீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்துக்கு 1000 ஏக்கருக்கு மேல் நிலம் தாரை வார்க்கப்பட்டது. அந்த நிறுவனத்தைக் காதும் காதும் வைத்தாற்போல ஊற்றி மூடி விட்டனர். திண்டுக்கல்லில் சிப்காட்டுக்காக 500 ஏக்கர் நிலத்தை எடுத்தார்களே - அங்கு எந்தத் தொழிற்சாலை எழுந்து நிற்கிறது?

பாரம்பரியம் பாரம்பரியமாக ஒரு குழி நிலம் இருந் தாலும் அதுதான் மிகப் பெரிய பெருமை, அந்தஸ்து என்று கருதிய மக்களிடத்திலிருந்து சட்டத்தைக் காட்டிப் பறித்து வருகிறார்களே அவர்கள் வீட்டுப் பிள்ளை களுக்கு எந்த அளவுக்கு வேலை வாய்ப்பை தந்தனர்? அதிகமாகப் போனால் வாட்சுமேன் வேலை அவ்வளவு தானே! நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்காக நிலங்களை வழங்கியவர்கள் இந்த உரிமைக்காக இன்றுவரை கைப் பிசைந்து நிற்கிறார்களே!
இந்த நிலக் கையகப்படுத்தும் சட்டத்தால் பெரும் பாலும் பாதிக்கப்படும் மக்கள் யார் தெரியுமா? 80 சதவீத மக்கள் பழங்குடி மக்கள், 10 சதவீத மக்கள் தாழ்த்தப் பட்டவர்கள், 10 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்; ஆக இதிலும்கூட சமூக நீதி பலிகடா ஆக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினையைத்தான் சென்னை அய்.டி.அய். மாணவர்கள், சமூகப் பொறுப்போடு விவா தித்து இருக்கிறார்கள். கருத்துக்களை வெளியிட்டுள் ளார்கள். நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த வகையில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்குத் துணை போகிறது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தான் பிரதமர் மோடியின் மீதான விமர்சனம் என்று கூறி, சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்கியுள்ளனர்.

மூன்றாம் முறையாக அவசர சட்டம் மூலம் இதனைச் செயல்படுத்தத் துடிக்கும் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங் களின் அரசு என்று சென்னை அய்.அய்.டி. மாண வர்கள் கருத்துச் சொன்னதுதான் அவர்களின் அஸ்தி வாரத்தில் கை வைத்திருக்கிறது. அதனால்தான் அவசர அவசரமாக மொட்டைக் கடுதாசியை ஆதாரமாகக் கொண்டு அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள சமூக விழிப்புணர்வு அமைப் பினைத் தடை செய்துள்ளனர்.

பொதுவாக இந்துத்துவா கோட்பாடு விவசாயத்துக்கு எதிரானது. அதன் பார்வையில் விவசாயம் பாவத் தொழிலாகும் என்பதையும் அறிந்தால், இந்துத்துவா கட்சியான பிஜேபி அரசில் நிலக் கையகப்படுத்தும் சட்டத்திற்கான தாத்பரியம் புலப்படும் - எச்சரிக்கை!



Read more: http://www.viduthalai.in/page-2/102562.html#ixzz3bupC9fc7

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரையும் தாண்டி நூறாண்டு வாழ்கவே!



மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை ஒருவரி விமர்சனத்தில் அடக்கி அகிலத்திற்கு அடையாளம் காட்டிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இன்று (3.6.2015) 92ஆம் ஆண்டு அகவை தொடக்கம்!

அவரது ஒப்பற்ற உழைப்பும், கொண்ட லட்சியத்தில் தளரா உறுதியும் அவரை என்றும் சீரிளமையோடு வைத்துக் கொண்டுள்ளது!

அவர் ஒரு பல்கலை அறிஞர். அவரிடமிருந்து ஆட்சியை, ஜனநாயகத்தின் கோணல் புத்தி சிற்சில நேரங்களில் பறிக்கலாம்; ஆனால் அவரது ஆற்றல் மிக்க- வாளினும் வலிமை வாய்ந்த எழுதுகோல் என்றென்றும் அவரது தனி உடைமை!

ஆம் பொதுஉடைமையை பொதுஉரிமையைப் பரப்பும் தனிஉடைமை!

எழுத்துகள் அவரது ஏவல்படைகள்; கருத்து களும் லட்சியங்களும் அவைகட்குக் காவல் படைகள்!

ஆட்சிதான் என்றும் இனமான உணர்வாளர் களின் இதயங்களில்- மக்களின் இதயச் சிம்மாசனம் நிரந்தரமானது. பதவிச் சிம்மாசனம் அதன்முன் எம்மாத்திரம்? தந்தை பெரியார்தம் குருகுலத்தில் பூத்துக் குலுங்கிக் காய்த்த அந்தக் கனியை அறிஞர் அண்ணா தன்கனிவால் பழமாக்கினார்.

எனவேதான் இன்றும் கலைஞர் என்ற மாமனிதத்தின் கூட்டுச் சேர்க்கை அய்யாவின் துணிவு+அண்ணாவின் கனிவு!

ஆட்சியில் அமர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த வர்கள் பலர்.

ஆனால் ஆட்சியையே வரலாறாக்கியவர்கள் சிலரே!

அதில் கலைஞரின் இடம் தனிஇடம்; எளிதில் எவராலும் தொட்டுவிடமுடியாத சாதனைச் சிகரம்!

நன்றி மறந்தோரைத் தவிர, நல்லோர் பாராட்டுவர்; எதிர்நீச்சல் என்பது அய்யா என்ற ஆசானிடம் அவர் கற்றுத்துறை போகிய பயிற்சி!

எதையும் தாங்கும் இதயம் என்பது அண்ணா விடம் அவர் கற்றுக்கொண்ட பாடம்!!

நெருக்கடி காலம் என்ற நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க.வைக் கரைசேர்த்த உத்தமத் தலைவர்!
முதன்முதல் பதவிஏற்றபோது, தான் மிக மிக பிற்படுத்தப்பட்ட எளிய குடும்பத்தவன். எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றுகூறி, அதைப் பணியாகக் கருதி உழைத்தவர் உழைப்பவர்!

சோர்வறியாதவர் என்பது எப்படியோ, அப்படியே தனிப்பட்ட முறையிலும் தோல்வி அறியாதவர் அவர் என்பது அவரது அரசியல் வாழ்வின் சாதனை.

முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் அவை விரைந்த முடிவுகளாகவே அமையும் என்பதே உண்மை; ஆனால் அவை அவசர முடிவுகள் அல்ல. 92 அகவை என்பது முதுமை அல்ல;

முதிர்ச்சி! முதிர்ச்சி!! எழுச்சி!!!

தந்தை பெரியார் வயதினையும் தாண்டி, நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து, திராவிடத்தின் பெருமையை திக்கெட்டும் பரப்பட்டும் என்று வாழ்த்துகிறோம்!
வாழ்க பல்லாண்டு!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



சென்னை
3.6.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102623.html#ixzz3c0hQCmXD

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் கடமை


நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன், அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.
_ (உண்மை, 15.9.1976)



Read more: http://www.viduthalai.in/page-2/102627.html#ixzz3c0hqOdxV

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட இந்துத்துவாவாதிகளுக்கு அர்ப்பணம்
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
மும்பை, ஜாதவ்பூர், டில்லியிலும் துவங்கியது




டில்லி, ஜூன் 3_ சென்னை அய்.அய்.டி.யிலும் அம் பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் எதிரொலியாக மும்பை, டெல்லி, ஜாதவ் பூரிலும் இந்த அமைப்பத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அய்.அய்.டி நிர்வாகம் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சர்வாதிகார ஆணைக்கு அடிபணிந்து, ஹிட்லரின் நடவடிக்கை யைப் போல் அம்பேத்கர் _ பெரியார்- வாசகர் வட் டத்தை தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழகத்தில் துவங்கிய போராட்டம் டில்லியிலும் எதிரொலித்தது.

திங்கள் அன்று மும்பை _ பவாயில் உள்ள அய். அய்.டி தலைமையத்தில் முற்போக்கு சிந்தனை யுள்ள மாணவர்கள் ஒன்று கூடி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அம்பேத் கர் _ பெரியார்- _ புலே பெயரில் வாசகர் வட்டம் ஒன்று துவங்கப்பட்டது.

துவங்கிய உடனே அதன் முதல் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் கருத்துகளை மக்களி டையே பரப்பும் கொள் கைதான் இந்த வாசகர் வட் டம் துவங்கப்பட்டதன் நோக்கம் என்று அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் மும்பையைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து அய்.அய்.டி-யிலும் பெரி யார் _ அம்பேத்கர் வாசகர் வட்டம் துவங்கப்பட்டுள் ளது.

டில்லி, கான்பூர் அய்.அய்.டியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட் டம் பல்வேறு குழுக்க ளைச் சேர்ந்த மாணவர் கள் ஒன்றிணை மீது ஆரம் பித்தனர்.

இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர் _ பெரியார்- மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துவக்கம்

இந்தியாவின் மிக முக் கியமான உயர்கல்வியக மான டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செவ்வாய் அன்று அம் பேத்கர் _ -பெரியார் மாண வர் வாசகர் வட்டம் துவங் கப்பட்டது. மதவாத மாணவர் அமைப்பான எபிவிபி தலைமையகத் தின் எதிரிலேயே இந்த வாசகர் வட்டம் துவக்கப் பட்டது.

துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண வர் அமைப்பினர் செய்தி யாளர்களிடம் பேசும் போது அம்பேத்கர் _ பெரி யார் -வாசகர் வட்டமா னது உடனடியாக அனைத்து சமூகவலைதளங்களிலும் தங்களது அமைப்பிற்கென புதிய பக்கங்களைத் துவங் கியுள்ளது. மேலும் விரை வில் இதற்கென ஒரு இணையதளமும், கொள் கைகளை விளக்கும் இதழ் களையும் தொடர்ந்து வெளியிட முடிவுசெய்துள் ளதாக தெரிவித்தனர்.

டில்லி அய்.அய்.டி. மாணவர்கள் கருத்து

டில்லி அய்.அய்.டி அம்பேத்கர் _ பெரியார்-வாசகர் வட்ட மாணவர் கள் கூறியதாவது, இந்தியா வில் மொத்தம் 16 அய். அய்.டிக்கள் உள்ளன. தற்போது அய்ந்து அய். அய்.டிக்களில் பெரியார் _ அம்பேத்கர் வாசகர் வட் டம் துவங்கியிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் இந்தியா முழுவதிலும் உள்ள 16 அய்.அய்.டிக் களிலும் வாசகர் வட்டம் துவங்க தீர்மானித்து இருக் கிறோம்.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் உயர் கல்வி நிறுவனம் இந்துத் துவ சிந்தனைகொண்ட வர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும், அங்கே உள்ள மாணவர் களால் அம்பேத்கர் பெரியார்- _ வாசகர் வட்டம் துவங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஆகையால் மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அய்.அய்.டிகளில் துவங்குவது மிகவும் எளிதான செயலாகும். விரைவில் அனைத்து அய்.அய்.டி மாணவர் வாசகர்வட்டத்தையும் ஒன்றிணைக்க இருக்கி றோம் என்று கூறினர்.

பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள் கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு ஒரு அனாம தேய கடிதம் வந்தது என்று கூறி ஸ்மிருதி இரா னியின் தலையீட்டால் தடைசெய்யப்பட்ட சென்னை அய்.அய்.டி பெரியார்- _ அம்பேத்கர் வாசகர் வட்டம் தற்போது பெரிய அளவில் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெண்ணடிமைச் சின்ன மான தாலி அகற்றுதல் குறித்த நிகழ்ச்சியை சென்னை பெரியார் திட லில் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலை மையில் நடத்தியது.

இதற்கு தடை மற்றும் இந்துத்துவ அமைப்பின் போராட்டத் தின் காரணமாக பெண் ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்வு உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்குவாதிகளிடம் போய்ச் சேர்ந்தது. அதே போல் அம்பேத்கர் பெரி யார்- _ வாசகர் வட்டத் தின் தடையும் இன்று இந் தியா முழுவதிலுமுள்ள மாணவர்களை சென்ற டைந்துள்ளது.



Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0izsbo6

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட மாணவர்களுக்கு அருந்ததி ராய் ஆதரவு

சென்னை, ஜுன் 3_ மாணவர் அமைப்பால் என்ன நேர்ந்துவிட்டது? ஏன் கல்விநிறுவனத்தின் தலைவர் அவர்களைக்கண்டு அச்சப் பட வேண்டும்? ஏன் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்?

அதற்கான காரணங்க ளாக அவர்கள் கூறுவது வழ மையான முட்டாள்தனமான காரணத்தையேதான் குறிப் பிட்டுள்ளார்கள். வெறுப்பு களை வகுப்புகளுக்கிடையே பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த காரணமாக அமைப் பின் பெயரில் அரசியல் இருப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதேபோன்று செயல்பட்டுவரும் அமைப் பாக விவேகானந்தா வாசகர் வட்டம் இருப்பதற்கு இவை யெல்லாம் பொருந்தவில் லையாம்.

இந்துத்துவத்தின் தேசிய அளவிலான நிகழ்ச்சியாக கர்வாப்சியை (ஏற்கெனவே ஆர்ய சமாஜம் சார்பில் சுத்தி நிகழ்ச்சியைப்போன்று) நடத்திவந்தபோது தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் கொண்டுவருவதற்காக இந்துமதத்தை வெளிப் படையாகக் கண்டித்தவ ராகிய அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை , அவர் ஓர் இந்து என்று கூறிக்கொண்ட இந்துத்துவா அமைப்புகள் கொண்டாடி யதாக ஊடகங்களில் தக வல்கள் வெளிவந்தன.

அப் படி இருக்கும் போது, அம் பேத்கரைப் பின்பற்றுபவர் களாக இருப்பவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்தும் போது, ஹைர்லாஞ்சியில் உள்ள சுரோகா பாட்மாங்கே குடும்பத்தினர் கொல்லப் பட்டது ஏன்? செல்பேசியில் ஒலிக்கும்போது அம்பேத்கர் புகழ் பாடல் ரிங் டோன் ஒலித்ததால் தாழ்த்தப்பட்ட இளைஞரை அடித்தே கொன்றது ஏன்?

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்குத் தடை போடுவதும் ஏன்? ஏனென்றால், எந்த நோக் கத்தாலோ, ஆட்டம் போடு வதன்மூலமாக ஆபத்தான இடத்தில் கைவைத்து விட்டார்கள். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் ஜாதி யத்தை ஊடுருவச் செய்து விட்டார்கள். இந்த ஆட்சி யில் பல முனைகளிலும் அச்சுறுத்தல்களின் மூலமாக செய்துவரும் கேடுகளைவிட,

பகத்சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பெயரில் விழாக்களைக் கொண்டாடு வதன் மூலமாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ன கேட்டினை செய்து விட்டது? இதுதான் அவர்களைக் கொந்தளிப்புக்கு உள்ளாக் கிள்ளது. ஆகவே, இதுதான் அவர்களைத் தடையை நீக்க வலியுறுத்திள்ளது.

இடதுசாரிகள் மற்றும் முற்போக்கான முசுலீம் அமைப்புகளுடன் கைகோர்ப் பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் அறிவிப்பு அதற்கேற்பவே ஆட்சியா ளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக் கப்பட்டுள்ள தடையின் மூலமாக ஒருமித்த கருத்துள் ளவர்களை ஒன்றிணைப்ப தன் தொடக்கமாக அமைந் துள்ளது.

_இவ்வாறு அருந்ததிராய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jBmWOr

தமிழ் ஓவியா said...

அய்அய்டி இயக்குநருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் அழைப்பாணை

புதுடில்லி, ஜூன் 3_ சென்னை அய்அய்டியில் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-, பெரியார் வாசகர் வட்டத்தின் அங் கீகாரம் ரத்து செய்யப் பட்ட விவகாரத்தில், மத் திய மனித வளத் துறைச் செயலர், சென்னை அய் அய்டி இயக்குநர் ஆகி யோருக்கு தாழ்த்தப்பட் டோர்களுக்கான தேசிய ஆணையம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இருவரும் ஜூன் 8ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த விவகா ரத்தில், சென்னை அய்அய் டியிடம் விளக்கம் கேட்டு ஆணையம் ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. "விதிகளை மீறி செயல் பட்டதால், அந்த மாண வர் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டது' என்று அந்த கடிதத்திற்கு அய்.அய்.டி. நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த விசா ரணைக்காக ஆஜராகும் படி மத்திய மனித வளத் துறை செயலருக்கும், சென்னை அய்அய்டி இயக் குநருக்கும் செவ்வாய்க் கிழமை அழைப்பாணை கள் அனுப்பப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.



Read more: http://www.viduthalai.in/page-8/102622.html#ixzz3c0jIoVEr

தமிழ் ஓவியா said...

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!
கடவுள்களைக் காப்பாற்றுங்கள்!!
கோவில் கலசம் திருட்டு - மாரியம்மனுக்கு தாலியறுப்பு



விருத்தாசலம், ஜூன் 3_- விருத்தாசலம் அடுத்த எருமனூர் மாரியம்மன் கோவிலில் அம்மனின் தாலியை யாரோ திருடிச்சென்றுள்ளனர். எருமனூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் இருப்புப்பாதை அருகில் புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. தனிநபருக்கு சொந்தமான இக்கோயிலில் கிராம மக்கள் பொது வழிபாடு நடத்துவார்களாம்.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை மாலை மாரியம்மன் சிலைக்கு படைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சனிக்கிழமை காலை கோயிலுக்கு சிறுவர்கள் விளையாடச் சென்று ள்ளனர். அப்போது, கோபுரத்தின்மீது கலசம் இல்லாததைப் பார்த்த சிறுவர்கள், கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் வந்து பார்த்தபோது, கலசத்தையும், மாரி யம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலியையும் யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு தலைமையில் நேரில் சென்று விசாரணை நடத் தினர். அப்போது, கிராம மக்கள் கூறியதாவது:

இதுவரை மூன்று முறை இக்கோயிலில் திருட்டு போயுள்ளது. 10 கிலோ மணி, உண்டியல், பித்தளைப் பொருள்கள் ஆகியவற்றை முன்பு திருடிச் சென்றுள்ளனர். இப்போது, அம்மன் கலசம் மற்றும் தாலியையும் திருடிச் சென்றுள் ளனர் எனவே, திருடர்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினர்.

தன் தாலியையே காக்க முடியாத மாரியம்மனா ஊரார் தாலியைக் காக்கப் போகிறது? திராவிடர் கழகத்துக்காரர்கள் தாலி அறுத்து விட்டதாகக் கொக்கரிக்கும் மதவாதிகளே, சர்வ சக்தியுள்ள தாகக் கூறும் மாரியம்மனின் தாலியை திருட்டுப் பக்தர்கள் அறுத்துச் சென்றுள்ளனரே. மாரியம்மனின் சக்தி இதுதானோ?

பெரியார் திடலில் தாலியை அகற்றிக் கொண் டவர்களுக்கு திவசம் நடத்திய மதவாதிகளே, ஆத்தா தாலி அறுக்கப்பட்டு களவாடப்பட் டுள்ளதே, இப்போது யாருக்கு திவசம் நடத்து வீர்கள்?!



Read more: http://www.viduthalai.in/page-8/102621.html#ixzz3c0jk8azs