Search This Blog

3.2.13

காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!

காந்தியார் அவர்களின் நினைவு நாளையொட்டி (30.1.1948) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மதவெறிக் கண்டனப் பொதுக்கூட்டம் - சிறப்புக் கூட்டம் நேற்று (1.2.2013) வெள்ளி இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

கலி. பூங்குன்றன் தொடக்கவுரை

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்கவுரை ஆற்றினார்.

அவர் தமதுரையில் காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான இந்துத்துவா என்னும் மதவெறி இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் நடமாடிக் கொண்டுதானிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பிராமண சங்கம், பாரதீய ஜனதா என்று பல்வேறு பெயர்களில் இருந்து கொண்டுதானி ருக்கின்றது.

பாபர் மசூதியை இடித்தது அந்தச் சக்திதான். குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அதே இந்துத்துவா மதவெறிதான்.
அந்த மதவெறி சக்தி அரசியலிலும் குடிகொண் டுள்ளது; நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர் தலிலும் அந்த மதவாத சக்திகளை  எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அதை எதிர்கொள்ளும் ஒரு தத்துவத்திற்குப் பெயர் தான் தந்தை பெரியார். இந்தியா முழுமையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், தத்துவங்களும் தான் எதிரொலிக்கப் போகின்றன. நமது கழகத்தின் அருமையை உணரத்தான் போகிறார்கள் - இந்தியா முழுமையிலிருந்தும் நமது தலைவருக்கு அழைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

வாரி வழங்கினார் தமிழர் தலைவர்

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 90 மணித் துளிகள் வகுப்பறையில் பாடம் நடத்துவது போல புதுப்புதுத் தகவல்களை முனை மழுங்காமல் அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டே போனார்.
காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முசுலிம்தான் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான் என்ற தகவலைப் பார்ப்பனர்கள் பரப்புரை செய்தனர். அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் வாணியம்பாடி, திருவண்ணாமலை, ஈரோடு போன்ற ஊர்களில் முசுலிம் கள் தாக்கப்பட்டனர்.

ஆனால், உண்மையில் காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு இந்து என்று அகில இந்திய வானொலி மாலை 6 மணிக்கு அறிவித்தது (பார்ப்பனர் என்றுகூடச் சொல்லவில்லை).

மகாராட்டிரத்தில் புனே பகுதியில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. பார்ப்பனர்களின் கல்விக் கூடங்கள் எரிக்கப்பட்டன. அவற்றை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் உள்ளே நுழையவிடவில்லை.

தடுத்தாட்கொண்டார் தந்தை பெரியார்

தமிழ்நாட்டிலும் அந்த நிலை ஏற்பட்டு இருக்கும். அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் வானொலிமூலம் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

31.1.1948 அன்று மாலை 4 மணிக்கு வானொலியில் தந்தை பெரியார் அரியதோர் உரையை நிகழ்த்தினார்.

இந்த இழித்தரமான காரியத்திற்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை. இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது - நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப் பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பெயராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும், கருத்து வேற்றுமைக்காக கலவரங் களும், கேடுகளும், நாசங்களும், மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்குச் சிறிதும் வாய்ப் பில்லாமல், அறிவுடைமையோடும் வாழுபவர்களாக மக்கள்  நடந்துகொள்வார்களேயானால், அதுவே பரிதாபகரமானதும், வெறுக்கத்தக்கது மான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும்.

திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப்பட்ட நிலையிலும், அமைதியுடனும், சகிப்புத் தன்மை யுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது விண்ணப்பம் என்று வானொலிமூலம் தந்தை பெரியார் கேட்டுக் கொண்டதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கலவரப் புயலுக்கு இடமில்லாமல் அமைதி தவழும் ஒரு நிலை ஏற்பட்டது என்பதை கழகத் தலைவர் விளக்கினார்.
(தந்தை பெரியார் நினைத்திருந்தால், கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் தமிழ்நாட்டில் எத்தனை அக்கிரகாரங்கள் எரிந்திருக்கும்? எத்தனைப் பார்ப்பனர்கள்  படுகொலை செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பார்களாக! வாழ்க தந்தை பெரியார்!)

அய்யா அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும்...

காந்தியார் மறைவையொட்டி தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு ஆழமானது என்பதையும் விளக்கிப் பேசினார்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது! இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ - உயிர் வாழ்ந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக வாவது நாட்டில் இனி அரசியல், மத இயல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும். (குடிஅரசு அறிக்கை, 31.1.1948)

தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லுமே ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும்.


புதிய நூல்கள் அறிமுகம்
இந்த உரையில் சில புதிய நூல்களைத் தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்று - சர்வோதய சங்கத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சு. வைத்யா (வயது 80) என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இந்துத்துவா சக்திகள் சொன்ன காரணங்கள் இரண்டு.

(1) பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று நாடு பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தது,

(2) இந்திய அரசு பாகிஸ்தானுக்கு முறைப்படி ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என்று காந்தியார் கூறியது.

பத்துத் தடவை படுகொலை முயற்சிகள்

இந்த இரண்டும்தான் காந்தியார் படுகொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டா லும், அதற்குமுன் பத்துத் தடவை காந்தியாரைக் கொலை செய்வதற்கு அவர் கள் திட்டமிட்டார்கள்.  (அப்படி இருக்கும்போது இந்த இரு காரணங்கள்தான் காந்தியாரைக் கொலை செய்ததற்குக் காரணமாக இருக்க முடியாது என்று அழுத்தமாகக் கூறி னார் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்) ஆறு முறை காந்தியாரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆவணங் கள்மூலம் நிரூபிக்க முடியும்.

1934 இல் பூனா நகராட்சியில் காந்தியாருக்கு வர வேற்பு கொடுத்தபோது முதல் முயற்சி.

இதே கோட்சே 1944 இல்!
1944 ஆம் ஆண்டிலேயே இரண்டு முயற்சிகள். இதே நாதுராம் கோட்சே கத்தியுடன் காந்தியாரைக் கொலை செய்ய முயன்று தோற்றான்.
1944 ஜூன் 4 ஆம் தேதியன்று ரயில்மூலம் காந்தியார் பூனாவுக்குச் சென்றபோது ரயிலைக் கவிழ்க்க தண்ட வாளத்தில் மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்திருந்தனர். ஓட்டுநரின் விழிப்பால் அந்த விபத்துத் தவிர்க்கப்பட்டது.

1948 ஜனவரி 20 இல் கூட டில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்து மதவெறி பிடித்த மதன்லால் பாவா என்பவன் காந்தியார்மீது வெடி குண்டு வீசினான். மயிரிழையில் காந்தியார் உயிர் தப்பினார்.

வணக்கம் கூறி வயிற்றை நோக்கிக் குண்டு!

அடுத்த பத்து நாள்களில்தான் ஜனவரி 30 அன்று பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்த காந்தியாரைப் பார்த்து வணக்கம் கூறி, இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா? என்று கேட்டான். காந்தியார் புன்னகைத்து ஆமாம்! என்று கூறியவுடன் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டான்.
பார்ப்பன கோட்சே!

முடிந்தது காந்தியாரின் வாழ்வு!

காங்கிரசானாலும், காந்தியார் ஆனாலும், கடவுளா னாலும் பார்ப்பனர்களுக்குத் தங்களுக்குப் பயன்பட்ட வரைதான் Use and Throw தான்.
வெள்ளைக்காரன் காப்பாற்றினான்- கொள்ளைக்காரன் தீர்த்துக் கட்டினான்
அந்நியன் வெள்ளைக்காரன் - அவர்களை எதிர்த் துப் போராட்டம் நடத்தினார் காந்தியார். ஆனால், அந்த வெள்ளைக்காரன் காந்தியாரைப் பாதுகாத்துக் கொடுத்தான். சுதந்திர இந்தியாவில் பார்ப்பானோ, காந்தியாரின் உயிரைக் குடித்துவிட்டானே என்று கழகத் தலைவர் சொன்னபோது, பார்வையாளர்கள் மத்தியில் சுடுகாட்டு அமைதி!

காந்தியாரின் கொள்ளுப் பேரன்
கொட்டும் தகவல்கள்!
மற்றொரு முக்கிய நூலை தமிழர் தலைவர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
அந்த நூலின் பெயர்:
‘Let’s Kill Gandhi!
A Chronicle of His Last Days, The Conspiracy, Murder, Investigation and Trial’
எழுதியவர் டுஷார் ஏ. காந்தி - இவர் யார் தெரியுமா? காந்தியாரின் மகன் மணிலால் காந்தியின் மகன் என்பதுதான் சிறப்புச் செய்தி.
அந்த நூல் 2007 இல் சுரயீய  ஊடி வால் வெளி யிடப்பட்டது.
விலை ரூ.1000/-
இதுவரை தெரிந்திராத அதிரடியான தகவல்கள் அலை அலையாக இந்நூலில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டார் கழகத் தலைவர்.
                 -------------------------(நாளை பார்ப்போம்)---- மின்சாரம் - 2-2-2013


தமிழர் தலைவர் பேசுகிறார்: சுடப்பட்டவர் சுயமரியாதைக்காரர் காந்தியார் (2)
காந்தியாரின் சீடராக இருந்தவர்தான் பெரியார். காந்தியாரின் கட்டளையை ஏற்று கதர் நூற்றவர்தான். இடையறாது அந்தப் பணியைச் செய்ததால் கால் வீக்கம்; கை வீக்கம் கண்டது. காந்தியார் வரை அந்தத் தகவல் சென்றபோது, ஓய்வு கொடுங்கள் - நிறுத்துங்கள் என்று காந்தியார் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு, எடுத்துக் கொண்ட எந்தப் பணியிலும் உண்மையாக இருக்கக் கூடிய தலைவர் பெரியார்.

இரண்டு பெண்கள் கைகளில்...

கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிடலாம் என்ற கருத்து பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் பிரச்சினை வந்தபோது, அது என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கைகளில் இருக்கிறது என்று சொன்னார் காந்தியார்.

அந்த இரு பெண்களும் வேறு யாருமல்லர்; ஈரோட்டில் இருந்த தந்தை பெரியார் மனைவி நாகம்மையாரும், பெரியார் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாளும் ஆவர்.

காங்கிரசைவிட்டு பெரியார் விலகி சுயமரியாதை இயக்கம் கண்ட பிறகும்கூட, காந்தியார் அழைப்பின் பேரில் 1927இல் பெங்களூருவில் தந்தை பெரியார் காந்தியாரைச் சந்தித்து நீண்ட நேரம் பல பொதுப் பிரச்சினைகள் பற்றி விவாதித்தார்.

காந்தியாரே திகைத்தார்

அந்த உரையாடலில் ஒரு சுவையான நிகழ்ச்சி.

அப்படியானால் உலகத்திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பது உமது அபிப்ராயமா? என்று தந்தை பெரியாரைப் பார்த்து காந்தியார் கேட்டார்.
என் கண்ணுக்குத் தென்படுதில்லையே, நான் என்ன செய்யட்டும்? என்றார் பெரியார்.

காந்தியார் சொன்ன பதில்: அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன். அவர்தான் கோகலே. அவர் தன்னைப் பிராமணர் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது. யாராவது அவரைப் பிராமணர் என்று கூப்பிட்டாலும் ஒப்புக் கொள்ளாத தோடு, உடனே ஆட்சேபித்து தனக்கு அந்த யோக்கி யதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார் என்று காந்தியார் சொன்னபொழுது தந்தை பெரியார் சொன் னதுதான் சுவையானது!

மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என்போன்றவர்கள் கண்ணுக்கு எப்படி தென்படக் கூடும்? என்று பெரியார் பதில் சொன்னபொழுது காந்தியாரே, பதில் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதுதான் உண்மை.
இந்தத் தகவல்களை எல்லாம் சென்னை சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.

காந்தியாரின் சுயமரியாதையைக் காப்பாற்றிய பெரியார்

தந்தை பெரியார் பணியால் காந்தியாரின் சுய மரியாதை காப்பாற்றப்பட்ட ஒரு தகவலையும் கூட்டத்தில் எடுத்துக் காட்டினார்.

தமிழ்நாட்டில் காந்தி எனும் தலைப்பில், காந்தி நூற்றாண்டு வெளியீடாக ஒரு நூல் 1969இல் வெளி வந்தது. அந்த நூலின் 521ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட தகவல் வெளிவந்துள்ளது.

நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும், உமா மகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகி யிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.

உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.

மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத் தைப் பற்றி பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர் - பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறு பாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்து விடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்த போது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத் தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வரு கிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங் கரை வரை செல்கிறாள்.

தமிழ்நாட்டில் காந்தி எனும் நூலில் இடம்பெற்ற இந்தத் தகவலை எடுத்துக்காட்டிய தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வரலாற்றின் கண் ணோட்டத்தோடு சமூக மாற்றத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்கினார்.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்...

சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் குறிப்பிட்டது 1925-க்கு முன் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் காந்தியார் உட்கார வைக்கப்பட்டார். வீட்டுக்குள் போக முடியவில்லை. அப்பொழுது சுயமரி யாதை இயக்கத்தை தந்தை பெரியார் தோற்றுவிக்க வில்லை.

இப்பொழுது காந்தியார், சீனிவாசய்யங்கார் வீட்டுக்குள்ளும், காந்தியாரின் மனைவி சீனிவாசய் யங்கார் வீட்டு அடுப்பங்கரைக்கும் செல்ல முடிகிறது என்று சொல்லும் பொழுது, தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு பெரும் விழிப்புணர்ச்சி உண்டாக்கப்பட்ட காலம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் காரணமாகத்தான் காந்தியார், சீனிவாசய் யங்கார் வீட்டுக்குள்ளே நுழையும் வாய்ப்புக் கிட்டியது. அந்த வகையில் காந்தியாரின் சுயமரியாதையை தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கம் காப்பாற் றிக் கொடுத்துள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் எவ்வளவு பொருத்தமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

(இதுபோன்றவற்றை இயக்க வரலாற்றையொட்டி எடுத்துக்காட்ட எஞ்சியுள்ள தலைவர் தமிழர் தலைவரை விட்டால் வேறு எவர்?)

வாடா சிதம்பரம்!

இந்த இடத்தில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வும் இணைத்துப் பார்க்கத்தக்கது.

சென்னை நேப்பியர் பூங்காவில் வ.உ.சி. பேசிய பேச்சிலிருந்து இதனை எடுத்துச் சொன்னவர் காஞ்சி கல்யாணசுந்தரம் ஆவார் (உண்மை, 1.1.1976 பக். 25; தகவல்: பாவலர் பல்லவன்).

நீதிக்கட்சி தோன்றியபிறகுதான் தமிழர்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளது. நீதிக்கட்சிதான் தமிழ் மக்களிடத்துப் பிடிப்பும், தமிழர்களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையையும் செய்துள்ளது.

உதாரணமாக, நான் முன்பெல்லாம் இந்து பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரங்க அய்யங்கார் அவர்கள், வாடா சிதம்பரம் என்றழைத்துப் பேசுவார். ஆனால் நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒருநாள் போனேன். வாங்கோ சிதம்பரம் பிள்ளை, சவுக்கியமா? என்று அழைத்தார் என்று வ.உ.சி. பேசியுள்ளதையும் இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது மிகப் பொருத்தமாகும்.

திராவிட இயக்கம் சாதித்தது இதைத்தான்!

திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்று வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசும் கோணல் புத்திக்காரர்கள் நேர்மையான முறையில் சிந்திக்கட்டும்!

காந்தியார் ஒரு பக்கம் வருணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பேசினாலும், அவரின் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை, கோயிலுக்குள் ஆதிதிராவிடர் நுழைய வேண்டும் என்பதை சனாதனிகளும், பார்ப்பனர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

கோயில்கள் விபச்சார விடுதிகள்!

1927இல் காந்தியார் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நகரத்தார் பகுதிகளுக்கும் சென்று வந்தார்.

அப்பொழுது ஒரு கட்டத்தில் கோயில்கள் பற்றி காந்தியார் வைத்த விமர்சனம் வைதீகர்களை எரிச்சல் அடையச் செய்தது.

ஆலயங்களை நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்ற ஒன்றைக் கட்டிவிட்டதால்மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. தாசி வீட்டில் எந்த அளவு இறைவன் இருப்பாரோ, அந்த அளவே அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன் என்று காந்தியார் சொன்னதுதான் தாமதம் வைதீகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது (தமிழ்நாட்டில் காந்தி, பக்கம். 533).

காந்தியாரை எதிர்த்து மதுரையில் சனாதனிகள் மாநாடு

1934ஆம் ஆண்டில் ஒரு முறை காந்தியார் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். அதற்காக நிதியையும் திரட்டிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் மதுரையில் சனாதனிகள் மாநாட் டைக் கூட்டி காந்தியாரைக் கடுமையாக வசைபாடி னார்கள். மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? பூரி சங்கராச்சாரியார். மதுரை என்.நடேச அய்யர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடத்தப்பட்ட மாநாடு அது.

காந்தியாரைப் பற்றி எப்படிப்பட்ட கிண்டல் பேச்சுத் தெரியுமா?

ஒன்றுமறியாப் பெண்களிடமிருந்தும், விருப்பமில்லா வணிகர்களிடமிருந்தும், மோதிரங்களையும், வளையல் களையும், தங்கச் சங்கிலிகளையும், ரொக்கத்தையும் பெற்று ஒரு கோடி ரூபாய் திரட்டுவது நம் நோக்கம் அல்ல என்று வரவேற்புக் குழுத் தலைவர் நடேச அய்யர் மறைமுகமாகக் காந்தியாரை கிண்டல் செய்தார்.

பூரி சங்கராச்சாரியார் தாக்கு!

நம்முடைய முன்னோர்களின் அடிப்படையான கோட்பாடுகள் பற்றிய சிக்கலில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஒரு முடிவுக்கு வருவது கூடாது என்றார் பூரி சங்கராச்சாரியார்.

காந்தி, சனாதானியுமல்ல, வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பவருமல்ல, அவர் போதிக்கும் அகிம்சைத் தத்துவத்தையே அவர் கடைப்பிடிப்பதில்லை. வேதங் களிலோ, ஆலயங்களிலோ அவருக்கு நம்பிக்கையும் இல்லை என்று சாடினார் பூரி சங்கராச்சாரியர் (தமிழ்நாட்டில் காந்தி, பக். 785-786).
மகாராட்டிரத்திலும் காந்தியாருக்கு எதிராகவே இருந்தனர் திலகரைப் பின்பற்றியவர்கள். காந்தியாரின் அகிம்சை, திலகரின் வன்முறைக் கருத்தோடு ஒத்துப் போகவில்லை.

போய் ஒழுங்காக வேதங்களைப் படியுங்கள்!

பார்ப்பனர்களின் மோசடியை ஒருவாறு காந்தியாரும் உணரத் தலைப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஒழுக்க சீலர் உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் ஆட்சி நடைபெற்றது. சமூக நீதி நோக்கோடு நடந்து கொண்டார்.

எல்லாப் பதவிகளும் தங்களுக்கே என்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு இது பிடிக்கவில்லை. காந்தியாரிடம் படை எடுத்தனர். தமிழ்நாட்டில், தாடியில்லாத ராமசாமி நாயக்கர் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். எங்களுக்கு எந்த உத்தியோகமும் கிடைப்பதில்லை என்று புகார் கூறினார்.

முதல் அமைச்சர் ஓமந்தூராரே, தக்க புள்ளி விவரங்களுடன் காந்தியாருக்கு விளக்கமாகத் தெரிவித்தார். நூற்றுக்கு மூன்று சதவிகிதமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் எத்தனை சதவீதம் அனுபவிக் கிறார்கள் என்பதை எல்லாம் துல்லியமாக எடுத்துரைத் தார். காந்தியார், பார்ப்பனர்களின் பொய்க் குரலைப் புரிந்து கொண்டார்.

தன்னை மறுபடியும் சந்திக்க வந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் பார்த்து காந்தியார் கேட்ட கேள்வி அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பிராமணர்களுக்குத் தொழில், வேதம் ஓதுவதுதானே. உங்களுக்கு எதற்கு டி-ஸ்கொயர்? பிணம் அறுக்கும் டாக்டர் தொழிலுக்கு ஏன் செல்ல விரும்புகிறீர்கள்? ஒழுங்காகப்போய் வேதங்களையும், சாஸ்திரங்களையும் படியுங்கள் என்று ஒரு போடு போட்டார்.

அப்பொழுதே பார்ப்பனர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர், காந்தியார் பாதை மாறிவிட்டார், இனி இவர் நமக்குப் பயன்படமாட்டார். இவர் செல்வாக்கு பார்ப்பனர் அல்லாதாருக்குத்தான் பயன்படப் போகிறது. இவரை விட்டு வைப்பது நமக்கு ஆபத்து என்று பார்ப்பனர்கள் தீர்மானித்து விட்டனர்.

பார்ப்பனர்களுக்கு எச்சரிக்கை!

சுதந்திரம் அடைந்த காலத்தில் காந்தியார் சுயமரியாதைக்காரராகி விட்டார் என்று தந்தை பெரியார் சொல்லும் அளவுக்கு காந்தியாரிடம் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

நவகாளியில் அவர் தெரிவித்த கருத்து காந்தியார் பார்ப்பனர்கள் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வந்ததைத் தெரிவிக்கிறது.

பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் ஜாதி இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறிய இந்தியாவில், சுதந்திரத்தை நிறைவேற்றிய பின் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போக வேண்டிது தான் (திராவிட நாடு, 2.2.1947) என்கிற அளவுக்குச் சென்றுவிட்ட காந்தியாரைப் பார்ப்பனர்கள் விட்டு வைப்பார்களா?

பெரியார் சொன்ன காரணம்

காந்தியார் படுகொலை பற்றி தந்தை பெரியார் சொன்ன காரணம் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்க தாகும்.

இந்தியா, சுதந்திரம் பெற்றது 15.8.1947; காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948இல். அதாவது சுதந்திரம் பெற்ற 165ஆம் நாள் கொல்லப்பட்டார் காந்தியார்.
காந்தி, இந்தியாவை மதச்சார்பற்றது என்று சொன்னது 7.12.1947இல், காந்தி கொல்லப்பட்டது 30.1.1948இல் அதாவது நம் நாடு மதச்சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார்.
காந்தி சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தை யைப் பார்த்து, அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார்.
அவர் கொல்லப்படாவிட்டால் இந்தியா சுயமரியா தைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே காந்தியா ரைக் கொன்று விட்டார்கள் என்றாரே தந்தை பெரியார்.

இதை யாரால்தான் மறுக்க முடியும்?

கொள்ளுப்பேரன் எழுதுகிறார்

இத்தகைய கருத்துக்களையும், தகவல்களையும் வரிசையாக அணி அணியாக எடுத்துரைத்த தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காந்தியாரின் கொள்ளுப்பேரன் டுஷார் ஏ.காந்தி எழுதிய நூலிலிருந்து எடுத்துச் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி அளிப்பனவாக உள்ளன.

திட்டமிட்டுப் பார்ப்பனர்கள்தான் காந்தியாரைக் கொன்றனர் என்று காந்தியாரின் பேரனே சொல்லு கிறார் என்றார் அவை அதிர்ச்சி அளிக்கக் கூடியது தானே.

காந்தியார் சீர்திருத்த இயக்கம் ஒன்றையே தொடங்குவதாக இருந்தார் என்றெல்லாம் 987 பக்கங் களைக் கொண்ட அந்த நூலிலே குறிப்பிட்டுள்ளார் (பக். XVII முதல் XIX). (முதற் பக்கம் காண்க).

காந்தியார் சுடப்பட்டபோது அவர் சுயமரியாதைக் காரர் காந்தி. அதனால்தான் இந்த நாட்டுக்குக் காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
(வளருகிறது) 3-2-2013

------------------ - மின்சாரம் அவர்கள்  - 2-2-2013,3-2-2013 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

9 comments:

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?



இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,
நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் !

- சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...

ஆத்திரேலியப் பழங்குடிகள்


4,000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் குடியேற்றம் ஆத்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதை மரபணு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1800களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் தமிழர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆத்திரேலியாவில் டிங்கோ(ராஜபாளைய வகையை சார்ந்த ஒல்லியான உடலமைப்பு கொண்ட நாய்கள்) நாய்களை தமிழர்களே அறிமுகப்படுத்தினர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியலுக்கான தேசியக் கழகத்தின் செயலமர்வுகளில் இது குறித்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன. தமிழர்கள் தம்முடன் நுண்கற்கள் எனப்படும் கல்லாயுதங்களையும் தம்முடன் கொண்டு வந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆத்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேற்றம் பற்றிய ஆய்வுக்கு ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூ கினி, தென்கிழக்காசியா, இந்தியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களினதும் மரபணுக்கள் ஒப்பிடப்பட்டன.

இவவய்வுகளின் படி, 35,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூகினியினரதும் மரபியலில் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், ஆத்திரேலியாவும், நியூ கினியும் சாகுல் என்றழைக்கப்பட்ட ஒரே நிலப்பகுதியைக் கொண்டிருந்தன.

இதே வேளையில், 4,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்கும், ஆத்திரேலியாவுக்கும் இடையில் இருந்தமையும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது, என செருமனியைச் சேர்ந்த மானுடவியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டோன்கிங் தெரிவித்தார். இக்காலப்பகுதியைச் சேர்ந்த மனித எச்சங்கள், மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் இவர்கள் ஆராய்ந்தனர்

தமிழ் ஓவியா said...

இறையருள் இல்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் யூகம் எப்போதும் சரியாகவே இருக்கும். அவருடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தாமஸின் யூகம் பற்றி கூறினார். யூகிப்பதில் எடிசனுக்கு நிகர் எடிசன்தான்! நாங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த பலமுறை முயற்சி செய்து தோற்றிருப்போம். அதை எடிசனிடம் கொடுத்தால் நாங்கள் தொடர்ந்த அதே வழியில்தான் அவரும் செல்வார். இதைத்தானே நாமும் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒரு மாற்றத்தைச் செய்வார். அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிடும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று எப்படித் தோன்றியது என்று கேட்டால் எனக்குத் தெரியாது; ஏதோ தோன்றியது செய்தேன்! என்பார்.அப்படித் தோன்றுவது இறையருளா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 124

தொகுப்பு: பாவலர் ப. கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

காந்தியாருக்கே இந்த நிலை என்றால்

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன் இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது! என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள்.

ஒரு முகம்மதியரையோ,சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள்.தான் ஒரு முகம்மதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் கூறுவார்.தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்கூட, அவர் தன் சாதியை சொல்வதில்லை. நீங்களும் அவர் பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்.தான் ஒரு முகம்மதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை நீ சன்னியா, ஷேக்கா,சையதா,சாதிக்கா,பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.

தானொரு சீக்கியர் என்றதும், நீங்கள் அவரை ஜாட்டா,ரோதாவா,மாழ்பியா,ராம்தாசியா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை.

ஆனாலும், நான் ஓர் இந்து என்று என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை.அவருடைய சாதி என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள்.ஏன்? ஓர் இந்துவைப் பொறுத்தமட்டில்,அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய மனிதன் என்பதை உங்களால் உறுதியாக தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- அண்ணல் அம்பேத்கர்-”உண்மை” பிப்ரவரி 01-15 - 2013

தமிழ் ஓவியா said...

சுவாமி அக்னிவேஷ்


தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏராளம். ஆனால், பல புகார்களுக்கு போலீஸார் எஃப்.ஐ.ஆரே பதிவது இல்லை. எல்லாவற்றுக்கும் எதிராகப் போராட இதுதான் சரியான நேரம்.

பெண்கள், பாதிக்கப்பட்டோர், தலித் தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் போராட வேண்டும். தர்மபுரியில் இருந்து தர்மசாலா வரை நடைபயணம் போக வேண்டும்.

கலப்புத் திருமணம் செய்வதே இதற்கு முக்கியத் தீர்வு. அதுதான் தலித் ஒடுக்குமுறைகளை முற்றிலும் தடுக்கும் ஒரே ஆயுதம். மதம் மாறி, சமூகம் மாறி, ஏன் நாடு மாறியும் திருமணம் செய்ய வேண்டும்.

இது மட்டும் நடந்தால், 20 வருடங்களுக்குப் பிறகு பேதம் என்ற விஷயமே இருக்காது.

மோடி பிரதமரா? (சிரிக்கிறார்) அப்படி ஒரு விஷயம் நடந்தால், அது தேசிய விபத்து. அவர் செய்த கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் அவர் சிறைக்குத்தான் போக வேண்டும். பிரதமர் ஆகக்கூடாது. குஜராத் மக்கள் வேறு, இந்திய மக்கள் வேறு!

- சுவாமி அக்னிவேஷ்,

ஜூனியர் விகடன், 27--.01.2013

தமிழ் ஓவியா said...





டங்ஸ்டன் இழை கடவுள்

ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை

திட்டிக்கொண்டிருந்த போது

அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன்

என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன்

திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை

உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம்

இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன்

அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும்

இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை

இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது

வெளிச்சத்தை தரும் அமுத சுரபி யாரிடமிருக்கிறது

அறியாமை போல பரவியிருக்கும்

கரிய இருளின் சருகுகளை கூட்டித்தள்ள வேண்டும்

இருள் மாமிசமாகிறது பசித்தவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்

அது எல்லோரையும் வசீகரிக்கும் வார்த்தையாகிறது

நான் வெளிச்சத்தின் உணவுக்காக காத்திருக்கின்றேன்

சிலுவை சுமந்த மனிதனின் பிதாவின் மேல் என் கோரிக்கை விழுகிறது

நீண்ட நேரமாகியும் அந்த பல்பு எரியவில்லை

நான் சூரியனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்

அந்த தெருவழியே வந்த தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார்

கொண்டு வா அந்த உயிரற்ற பல்பை டங்ஸ்டண் இழைகள் பொருத்தப்பட்டது இனி எரியுமென்றார்

டங்ஸ்டன் இழை இராத்திரி நேரங்களின் கடவுளானது இப்படித்தான்

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...


பொறுக்குமா இனமலருக்கு?

தி.க., ஆர்ப்பாட்டம்

தி.க., தலைவர் வீரமணி: சேலம் ரயில்வே கோட்டத்தை, கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, தமிழக எம்.பி.,க்கள், கட்சி பேதம் பாராமல், பார்லிமென்டில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 9ம் தேதி சேலத்தில், தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தும்.

டவுட் தனபாலு: உங்க கோரிக்கை நல்ல கோரிக்கை தான்... ஆனா, மத்திய அரசை விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருக்கிற உங்க, "அரசியல் ஆசான்' கருணாநிதியை, இந்த பிரச்னையில மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க சொல்றதை விட்டுட்டு, ஆர்ப்பாட் டம் எல்லாம் அவசியமான்னு தான், எனக்கு, "டவுட்!'
- தினமலர், 5.2.2013 பக். 8

கோரிக்கை நல்ல கோரிக்கை தானாம் - அதற்காக போராடக் கூடாதாம். திராவிடர் கழகத்திற்கு ஆசான் தந்தை பெரியார்தான்; தன்னை ஆசான் என்று கலைஞர் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார். தினமலருக்கே உரித் தான சில்மி(வி)ஷம் இது.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் உரிமைகளுக்காகத் தொடர்ந்து தன் வழியில் போராடிக் கொண்டுதானிருக்கிறது.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொலை குற்ற வாளியாக பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்குப் பிரச்சினை.

மகளிர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை, பிராமணாள் பெயர் அழிப்பு! - இப்படி எத்தனையோ போராட்டங்களை தன் வழியில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது!

சேலம் ரயில்வே கோட்டப் பிரச்சினைக்காகவும் ஏற்கெனவே பலமுறை போராடித் தடுத்து நிறுத்தியிருக்கிறது திராவிடர் கழகம்.

இப்பொழுதென்ன தினமலரின் புதுக்கரடி?

தமிழ்நாட்டு உரிமைக்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் தினமலர் - இனமலர் கூட்டத் திற்குப் பொறுக்காதே! நல்ல கோரிக்கை என்று எழுதும் தினமலர் இதற்காக ஏதாவது நாலு வார்த்தை எழுதியதுண்டா? தமிழன் வீட்டில் சாவு விழுந்தால் விசாரிக்கக் கூடப் போகாத பார்ப்பனக் குடும்பம் கருமாதிக்கு மட்டும் கரெக்டா போய் விடும் - தன் சுரண்டல் புரோகிதத் தொழிலுக்காக.

தமிழ்நாட்டின் உரிமை என்றால் குமட்டிக் கொண்டு வருகிறது - இந்தக் கும்பலுக்கு!5-2-2013

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?
கறுஞ்சட்டைத் தோழர்களே கழகக் கொடியுடன் திரள்வீர்! திரள்வீர்!!

அருமைக் கழகத் தோழர்களே!

தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் வகையில், டெசோவின் முடிவுப்படி வரும் 8.2.2013 வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கறுப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் பங்கேற்கிறார். சென்னை மண்டலக் கழக வீரர்களே, வீராங்கனைகளே, கழகக் கொடியுடன் ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பொழைப்பா?


இனப்படுகொலையாளன் ராஜபக்சே இந்தியா வரு வதை எதிர்ப்பது - கறுப்புச் சட்டை - கொடி போராட் டம் நல்ல பொழைப்பாம். கார்ட்டூன் போடுகிறது கருமாதிப் பத்திரிகை.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று ஒட்டாரம் பிடிக்கும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு இது சமர்ப்பணம்!

எங்கே பிணம் விழும் - கருமாதி, கருமாந்திரம் என்று சொல்லி பணம் பண்ணலாம் என்று பொழைப்பு நடத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலின் கருமாதிப் பத்திரிகை இப்படித்தான் பொழைப்பைப் பற்றி எழுதும்! 6-2-2013