Search This Blog

4.2.13

பொம்மைக் கல்யாணம் எது?- பெரியார்

பொம்மைக் கல்யாணம் எது?

நாங்கள் தோன்றுவதற்கு முன் பெண்களின் நிலை எப்படி இருந்தது? ஒரு வருடத்தில் தாலி அறுத்த பெண்கள், 3 வருடத்தில் தாலி அறுத்த பெண்கள், 5 வருடத்தில் தாலி அறுத்த பெண்கள் என்று, 100 பெண்களை எடுத்துக் கொண்டால் 20 பெண்கள் வரை விதவைகளாகவே இருப்பார்கள்.

விதவையான பெண்கள், காந்தியாரிடம் சென்று நாங்கள் எல்லாம் என்ன செய்வது என்று கேட்டதற்கு, ராட்டினம் சுற்றப் போங்கள் என்று தான் சொன்னார். நாங்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுங்கள், மறு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினோம். அதன்பின் காந்தியாரும், விதவைக் கொடுமை பெரிய கொடுமை. அதை இந்த நாட்டில் மாற்ற வேண்டுமென்று சொன்னார். வெள்ளைக்காரன் வந்த பின்தான் உடன்கட்டை ஏறுதல் (சதி) நிறுத்தப்பட்டது. அவன் இல்லாமல் இருந்தால், இன்னும் அந்தக் கொடுமை நடந்து கொண்டி ருக்கும். இந்த உடன்கட்டை ஏறுதலை மாற்றியதற்காகவும், பெண்களுக்குப் பள்ளி வைத்ததற்காகவும் ஏற்பட்டதே சிப்பாய்க் கலகம். அதைத்தான் காங்கிரஸ்காரன் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறான்.

இந்தப் பெண் பார்த்தா இந்த ஆணை விரும்பியது? அல்லது இந்த பையன் இந்தப் பெண்ணை விரும்பினாரா? என்றால் இல்லை. தாய் தந்தையர்கள் பார்த்து முடித்து வைப்பதுதானே!. இது பொம்மைக்குக் கல்யாணம் செய்வது போன்றது தானே! மேல்நாடுகளில் தன் பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய மாப்பிள்ளையைத் தேடுவதோ அல்லது பையனின் தந்தை பெண்ணைத் தேடியோ திருமணம் செய்வது கிடையாது. அங்கெல்லாம் ஆணும், பெண்ணும் ஒருவரோடு ஒருவர் விரும்பிப் பழகி, ஓரிரு மாதங்கள் சென்ற பின் தங்களின் பெற்றோரிடம் சொல்லித் தாங்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள்!

                -----------------------(12.9.1966 அன்று வெங்கடசமுத்திரத்தில் (தர்மபுரி மாவட்டம்) நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரைலிருந்து)  விடுதலை 20.10.1966.

ஓர் ஆணும், பெண்ணும் உணர்ச்சி வசப்பட்டு காதலர்களாவது தான் இந்நிகழ்ச்சியின் தத்துவமே தவிர, இதற்கென்று முறைகள் என்பதெல்லாம் கிடையாது. முன்னெல்லாம் ஆணும், பெண்ணும் தாங்களே விரும்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். பின் தாய், தந்தையர் தலையிட்டு ஆண், பெண்களைத் தாங்களே பார்த்துச் சேர்த்து வாழ்க்கை நடத்த வைத்தனர். ஆரியர்கள் இங்கு வந்த பின் தான் சடங்குகள், முறைகள் யாவும் ஏற்படலாயிற்று. அதற்கு முன் கிடையாது.

பார்ப்பனர்களின் ஆட்சியில் நம் சமுதாயம் எவ்வளவு இழிவாக இருந்து இப்போது படிப்படியாக முன்னேறி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளை எல்லாம், 5 வயது 7 வயது பெண்களை எல்லாம் திருமணம் செய்திருக் கிறார்கள். திருமணம் செய்தது மட்டுமல்ல, உடல் சம்பந்தமும் வைத்திருக்கின்றனர். வெள்ளையன் வந்த பின் தான் இந்த நிலை மாறியது. பல வழக்குகள் கோர்ட்டுக்குச் சென்றிருக்கின்றன.

10 வயது பெண்ணைப் புணர்ந்தான் என்ற கேஸில், புணர்ந்தது தவறு அல்ல, கணவன் தான் புணர்ந்திருக்கிறான், அவனுக்குத் தனது மனைவியோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள உரிமையுண்டு என்று பார்ப்பனர்கள் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். சாதாரண பார்ப்பனர்கள் அல்ல! காங்கிரசில் பெரிய தலைவராக இருந்த திலகரே தலைமை தாங்கி இந்தக் கிளர்ச்சியை நடத்தி இருக்கிறார். பல அறிஞர்கள் கூடி இப்படி இருப்பது தவறு என்று முடிவு செய்து வெள்ளையனோடு சேர்ந்து சட்டம் இயற்றத் துணை புரிந்தனர். வெள்ளையன் வந்து தான் சிறிது சிறிதாக இதையெல்லாம் மாற்றினான்.
****
நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள் பிள்ளை பெறவும், சோறு ஆக்கவும் தான் இருக்கின்றனரே தவிர, அந்த வேலையிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனரே தவிர, நேரத்தை வீணாக்குகின்றனரே தவிர, சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ அவர்கள் பயன்படுவது கிடையாது. இந்த நிலை மாற வேண்டும். நான் மேல் நாடுகள் எல்லாம் போய் வந்திருக்கின்றேன். அங்குள்ள பெண்கள் அடுப்பைக் கட்டிக் கொண்டு அழுவதில்லை.  வாசலிலே கொண்டு வந்து வண்டியில் வைத்துக் கொண்டு ரொட்டி விற்பான். அதில் இரண்டை வாங்கி அறுத்து வெண்ணெய் தடவுவார்கள்.  டின்னில் பதம் செய்யப்பட்ட மீன் ரெடியாக இருக்கும். அதில் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு தங்களின் உணவை முடித்துக் கொள்வார்கள். அது போதுமானதாக இருக்கும். வயிறும் நிரம்பி விடும். இங்கு போல பெண்கள் சமையலுக் கென்று காலை யிலிருந்து கஷ்டப்படுவதே கிடையாது. அதனால் தான் அவர்கள் உத்தியோகம் பார்க்க முடிகிறது. மற்ற பொது காரியங்களில் எல்லாம் பங்கேற்க முடிகிறது.

இந்தக் காட்டுமிராண்டி கால உணவுப் பழக்கத்தை நம் மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.  மற்ற நாட்டுப் பெண்களைப் போல் நம் பெண்களும் ஆண்களின் தயவை எதிர்பாராமல் வாழ வேண்டும்.

மணமக்கள் மூட நம்பிக்கையான, முட்டாள்தனமான விழாக்களில் தங்களின் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கக் கூடாது. கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சினிமாக்களையே பார்க்கக் கூடாது. அதை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

அறிவு வளர்ச்சி ஏற்படும்படியான தொழிற்சாலைகள், விஞ்ஞானப் புதுமைகளைப் பார்க்க வேண்டும். சென்னை போன்ற பெரிய நகரங்களைப் போய்ப் பார்க்க வேண்டும். அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வரவுக்குள் செலவிடப் பழக வேண்டும். வரவுக்கு மேல் செலவழிக்கக் கூடாது. வருவாயில் ஒரு சிறு பாகமாவது சேமிப்பு இருக்க வேண்டும். 

இதையெல்லாம் விட அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், அந்தக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துப் படிக்க வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

                     ---------------------(7.4.1967 அன்று மன்னார்குடியை அடுத்த ராயபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரைலிருந்து) விடுதலை 16.4.1967.

35 comments:

தமிழ் ஓவியா said...


அச்சமில்லாமல் வாழ வேண்டும் பெரியார் கற்றுத் தந்த பாடம் அது!


நிதி அமைச்சர் ப. சிதம்பரம் எடுத்துக்காட்டு

திருப்பத்தூர், பிப்4- வங்கி சேவையை ஒவ் வொருவருக்கும் கிடைக் கச் செய்வதை மய்ய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தச் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கிக்குச் செல்ல பொது மக்கள் அஞ்சக் கூடாது - அச்சம் தவிர் என்று சொன்னவர் தந்தை பெரியார். அதனை நாம் பின்பற்ற வேண்டும் என் றார் நிதி அமைச்சர்.

விஜயா வங்கியின் 1334வது கிளையை காட் டுக்குடிப் பட்டியில் பேசுகையில் ப. சிதம் பரம், இத்தகைய வங் கிப் பணிகளைப் பெற மக்கள் முன்பெல்லாம் அதிகத் தொலைவு பய ணிக்க வேண்டி இருந் தது. இன்று பெரும்பா லான கிராமங்களில் போதிய வங்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 6000 முதல் ஏழாயிரம் வரை மக்கள் வசதியின் பொருட்டு ஆண்டு தோறும் திறக்கப்படு கிறது என்றார்.

மேலும் பேசுகையில், மக்கள் கடன் வாங்க வெட்கப்படக் கூடாது. வங்கிகள் கடன் கொடுப் பது நாட்டு வளர்ச்சிக் காகவே! கடன் வாங்கிச் செல்ல அச்சப்படக் கூடாது. ஏனென்றால் அச்சம் என்பது கூடாது என்று வலியுறுத்தியவர் தந்தை பெரியார். அச்சம் தவிர்த்தால்தான் வெற்றி பெற முடியும். ஒவ்வொருவரும் அச்ச மின்றி வங்கிகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

அரசாங்கம் வேளாண் மைக் கடன்களுக்கு வட்டி வீதத்தைக் குறைத் திருக்கிறது. இப்போது 9 சதவிகிதமாக முன்பி ருந்த பத்து சதவீதத்தி லிருந்து குறைத்துள்ளது. விவசாயி ஒருவர் முத லோடு வட்டியையும் செலுத்த முன்வந்தால் மேலும் வட்டி வீதம் 4 விழுக்காடுதான் என் றும் அமைச்சர் குறிப் பிட்டார்.

மக்கள் வங்கியின் முக்கியத்துவத்தை உணரத் தலைப்பட்டு விட்டார்கள். வங்கிக் கடனைப் பயன்படுத் தும் 98 விழுக்காடு மாணவர்கள் ஏழைகள். எனவே வங்கியின் சேவையை மேலும் பலர் பயன்படுத்த அரசு விரி வுபடுத்த விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.

பண உதவியாக வழங்கும் திட்டம் 51 மாவட்டங்களில் 43 மாவட்டங்களில் சிறப் பாகச் செயல்படுவதாக வும், மேலும் 700 மாவட் டங்களில் இந்த ஆண்டு முடிவில் நேரடியாக நிதி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் ஊர் திக் கடன், கால்நடைக் கடன், வணிகக் கடன், சுய உதவிக் குழுக் களுக்கு நிதி உதவி ஆகிய வற்றையும் வழங்கினார்.

விஜயா வங்கியின் செயல்முறை இயக்குநர் ஷெனாய், கனரா வங்கி யின் தலைவர், நிருவாக இயக்குநர் உமேத்திர காமத் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது?


மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை திட்டமிட்டே அங்கே நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

தமிழ் ஓவியா said...

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (ழிமிகி) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.

டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் - கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் - இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை - வழக்குகள் - நத்தை வேகத்தில் நகர வேண்டும்?

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்? வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.

தீவிரவாதம் என்றாலே இஸ்லாமி யர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந் துள்ளார்கள்.

மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு, செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!

தமிழ் ஓவியா said...

நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?

தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள்மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?

எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் கடந்த 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்து ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!

தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?

இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).

புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?

தமிழ் ஓவியா said...


4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?

5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?

6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?

7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?

8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?

உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.

திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?

என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!

ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!

- கி.வீரமணி,
ஆசிரியர்.

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?



இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,
நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல - இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் !

- சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...

ஆத்திரேலியப் பழங்குடிகள்


4,000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் குடியேற்றம் ஆத்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதை மரபணு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1800களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் தமிழர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆத்திரேலியாவில் டிங்கோ(ராஜபாளைய வகையை சார்ந்த ஒல்லியான உடலமைப்பு கொண்ட நாய்கள்) நாய்களை தமிழர்களே அறிமுகப்படுத்தினர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியலுக்கான தேசியக் கழகத்தின் செயலமர்வுகளில் இது குறித்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன. தமிழர்கள் தம்முடன் நுண்கற்கள் எனப்படும் கல்லாயுதங்களையும் தம்முடன் கொண்டு வந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆத்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேற்றம் பற்றிய ஆய்வுக்கு ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூ கினி, தென்கிழக்காசியா, இந்தியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களினதும் மரபணுக்கள் ஒப்பிடப்பட்டன.

இவவய்வுகளின் படி, 35,000 முதல் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியப் பழங்குடியினரதும், நியூகினியினரதும் மரபியலில் ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், ஆத்திரேலியாவும், நியூ கினியும் சாகுல் என்றழைக்கப்பட்ட ஒரே நிலப்பகுதியைக் கொண்டிருந்தன.

இதே வேளையில், 4,000 முதல் 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்கும், ஆத்திரேலியாவுக்கும் இடையில் இருந்தமையும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது, என செருமனியைச் சேர்ந்த மானுடவியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டோன்கிங் தெரிவித்தார். இக்காலப்பகுதியைச் சேர்ந்த மனித எச்சங்கள், மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் இவர்கள் ஆராய்ந்தனர்

தமிழ் ஓவியா said...

இறையருள் இல்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் யூகம் எப்போதும் சரியாகவே இருக்கும். அவருடன் பணிபுரிந்த ஒரு நண்பர் தாமஸின் யூகம் பற்றி கூறினார். யூகிப்பதில் எடிசனுக்கு நிகர் எடிசன்தான்! நாங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த பலமுறை முயற்சி செய்து தோற்றிருப்போம். அதை எடிசனிடம் கொடுத்தால் நாங்கள் தொடர்ந்த அதே வழியில்தான் அவரும் செல்வார். இதைத்தானே நாமும் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒரு மாற்றத்தைச் செய்வார். அந்தச் சோதனை வெற்றிபெற்றுவிடும். அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று எப்படித் தோன்றியது என்று கேட்டால் எனக்குத் தெரியாது; ஏதோ தோன்றியது செய்தேன்! என்பார்.அப்படித் தோன்றுவது இறையருளா என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 124

தொகுப்பு: பாவலர் ப. கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

எம்.ஜி.ஆர்.கொண்டாடிய திருநாள் எது?



தாய்வீட்டில்தான் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பொங்கல் விழா நடைபெறும். பிறப்பால் மலையாளி என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கொண்டாடிய பண்டிகைகள் பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டும் மட்டும்தான். பொங்கல் விழாவின் போது எம்.ஜி.ஆருடைய ஸ்டண்ட் கோஷ்டியினர் நாடகம் போடுவார்கள். எம்.ஜி.ஆரது படங்களில் கொடூரமான வில்லன்களாக தோன்றும் அவர்கள் அன்று நல்ல கேரக்டர்களில் உருக வைப்பார்கள். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். அன்று தாய்வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கைக்கு கிடைத்ததை எல்லாம் கொடுத்து மகிழ்வார் எம்.ஜி.ஆர்.

-- யுவகிருஷ்ணா

தமிழ் ஓவியா said...


கருத்துத் திணிப்பு



வாக்களிக்கும் வயது வந்த பின்னே தான், ஒருவருக்கு தன் மதத்தை தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கிடையே அத்தனை மதத்தின் நூல்களையும் அவன்/அவள் படிக்கட்டும், பின்பு தனக்கு பிடித்த மதத்தை தேர்வு செய்து கொள்ளட்டும். தந்தையின்/தாயின் மதம் குழந்தைக்கும் திணிக்கப்படுவது என்பது, தங்களை நம்பும் குழந்தையின் அறியாமையை பயன்படுத்தி பெற்றோர்களால் செய்யப்படும் பெரும் கருத்துத் திணிப்பு மோசடியாகும். - செல்வன்

தமிழ் ஓவியா said...

காந்தியாருக்கே இந்த நிலை என்றால்

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன் இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது! என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளினார்கள்.

ஒரு முகம்மதியரையோ,சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள்.தான் ஒரு முகம்மதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் கூறுவார்.தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்கூட, அவர் தன் சாதியை சொல்வதில்லை. நீங்களும் அவர் பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்.தான் ஒரு முகம்மதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை நீ சன்னியா, ஷேக்கா,சையதா,சாதிக்கா,பிஞ்சாரியா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.

தானொரு சீக்கியர் என்றதும், நீங்கள் அவரை ஜாட்டா,ரோதாவா,மாழ்பியா,ராம்தாசியா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை.

ஆனாலும், நான் ஓர் இந்து என்று என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை.அவருடைய சாதி என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள்.ஏன்? ஓர் இந்துவைப் பொறுத்தமட்டில்,அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய மனிதன் என்பதை உங்களால் உறுதியாக தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- அண்ணல் அம்பேத்கர்-”உண்மை” பிப்ரவரி 01-15 - 2013

தமிழ் ஓவியா said...

சுவாமி அக்னிவேஷ்


தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான பிரச்னைகள் ஏராளம். ஆனால், பல புகார்களுக்கு போலீஸார் எஃப்.ஐ.ஆரே பதிவது இல்லை. எல்லாவற்றுக்கும் எதிராகப் போராட இதுதான் சரியான நேரம்.

பெண்கள், பாதிக்கப்பட்டோர், தலித் தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய அளவில் போராட வேண்டும். தர்மபுரியில் இருந்து தர்மசாலா வரை நடைபயணம் போக வேண்டும்.

கலப்புத் திருமணம் செய்வதே இதற்கு முக்கியத் தீர்வு. அதுதான் தலித் ஒடுக்குமுறைகளை முற்றிலும் தடுக்கும் ஒரே ஆயுதம். மதம் மாறி, சமூகம் மாறி, ஏன் நாடு மாறியும் திருமணம் செய்ய வேண்டும்.

இது மட்டும் நடந்தால், 20 வருடங்களுக்குப் பிறகு பேதம் என்ற விஷயமே இருக்காது.

மோடி பிரதமரா? (சிரிக்கிறார்) அப்படி ஒரு விஷயம் நடந்தால், அது தேசிய விபத்து. அவர் செய்த கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் அவர் சிறைக்குத்தான் போக வேண்டும். பிரதமர் ஆகக்கூடாது. குஜராத் மக்கள் வேறு, இந்திய மக்கள் வேறு!

- சுவாமி அக்னிவேஷ்,

ஜூனியர் விகடன், 27--.01.2013

தமிழ் ஓவியா said...

சிறுகதை - பெரிய (அ)ம்மை



உச்சி வெயில் மண்டைய புளக்கிறாப்புல அடித்துக்கொண்டு இருந்தது. எட்ட மட்டும் பார்க்கும்போது கானல் மழை கண்களுக்கு விருந்தளித்து. எங்கும் ஒரே வெட்கை, அனல் காற்றின் சீற்றம். அந்த ஊரைச் சுற்றி கருவேல மரங்கள் அடர்த்தியாய் பாதுகாப்பு; அரண்போல் இருந்தது.

கருப்பாய் பாட்டி மட்டும் வீட்டின் முன் உள்ள அடர்த்தியான வேப்ப மர நிழலில் கட்டில் போட்டு அதன்மீது உக்கார்ந்த வண்ணம், வெற்றிலையை மென்று கொண்டு காதில் உள்ள தந்தட்டிகள் இரண்டும் ஆட தெருவை கூர்ந்து பார்த்தவண்ணமாய் இருந்தாள்.

ஒருத்தியக்கூட கண்ணால காணலயே, எல்லா இவளுகளுமா வேலக்கி போயிட்டாளுக விருதா கூறுகெட கழுதக. வாரம் தவறாம வேல வேலனு போறாளுக, வாரம் முடிஞ்ச கடன உடன வாங்கி கஞ்சி குடிக்குதுக, மிச்ச மீதி எவளாவது வச்சு இருக்காள்களா? கஞ்சிக்கு செத்த கழுதக என்று மனசுக்குள் எண்ணியவாறு தொலைவில் தன் இடுங்கிய கண்களால் தெருவை துலாவினாள்.

தமிழ் ஓவியா said...

எவளோ ஒருத்தி வர்றது மாதிரி தெரியுதே..? அட மூதேவி முக்காடு போட்டுட்டுள வர்ற, விருத சாவஞ் செத்த சிறுக்கி என மனசில் எழும் கோபத்தை... அது எவடி முக்காடு போட்டுட்டு வர்றவா! எனக் கத்தினாள்.
வெயிலின் கொடூரத்தை தணித்த முக்காடுத் துணியை மெல்ல விலக்கினாள்.

அட இவளா? இவ ரெம்ப வாய்கொழுப்புக் காரியே இவட்ட நம்ம பேச்சு எடுபடாதே. சரி வரட்டும் இன்னைக்கு இவ கூடதான் பொழுது போகணும்னு இருந்தா அத யாராலதான் மாத்த முடியும்.

அருகில் வந்த தமிழரசியை உற்றுப் பார்த்த கருப்பாயி பாட்டி அட கிறுக்கு பய புள்ள நீயாடி? ஒரு வாத்த நாந்தானு சொல்லக்கூடாது. ஆமா உடம்புக்கு முடியலயா? ஒரு வடிய இருக்குறாப்புல தெரியுதே.

கடுப்பெடுத்த வெயில்ல நடந்து வந்ததுக்கும் வேப்பமர நிழல்ல வந்து நின்னதும் போன உசிரு திரும்பி வந்தது போல இருந்தது தமிழரசிக்கு. அந்த ஊரிலே படிச்சவளுனு கணக்கெடுத்து பாத்தா இவ ஒருத்திதான்.

கருப்பாயி பாட்டிக்கு தமிழரசிய பாத்தாலே பிடிக்காது. ஏன்னா இவ பேச்ச கேக்குறதே இல்ல தமிழரசி எதுக்கெடுத்தாலும் பதிலுக்கு பதிலு பேசுவா. ஏன்ன? பாட்டி பழைய பல்லவியே பேசுவா? எதுக்கெடுத்தாலும் அந்தக் காலத்துல நாங்களலெல்லாம் என தற்பெருமை பேசி தனது பகட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவா.

ஏம் புள்ள இந்தக் கொளுத்து கொளுத்துதே வெயிலு. மழகிழ ஏதாச்சும் வருமா?

ஏம் பாட்டி உனக்கு தெரியாத எனக்குத் தெரியப் போகுது

போன வாரம் சாமிட்ட குறிகேட்டப்போ கார்த்திகை மாசம் மழ பெய்யும்னு சொன்னது. இப்போ...

அடப் போ பாட்டி, நீ ஒன்னு. எந்தச் சாமியும் இன்னைக்கு மழ பெய்யும்னு கரெக்டா சொன்னது கிடையாது.

நாளு நட்சத்திரம் பாக்குறாங்க மழ வர்றதுக்கு மட்டும் வானிலை அறிக்கை வாசிக்கிறாரே ரமணன் அவரத்தான் எல்லா நிருபர்களும் கேக்குறாங்க, உனக்குத் தெரியாத நீதான் டி.வி. பாக்குறது இல்லையே? உனக்கு எங்க தெரியப் போகுது.

பேசிக்கொண்டே இருந்த கருப்பாயி பாட்டி திடீர்னு கட்டில விட்டு கீழே இறங்கி வாசல்ல கிடந்த வெலக்க மாத்த எடுத்து...

சீக்... கழுதே மூதேவி எங்கே வர்ரே... எனக் கூவிக் கொண்டு, வீர்ரென்னு சுழன்று வரும் சூறாவளிக் காத்த நோக்கி திட்டத் தொடங்கினாள்.

தமிழ் ஓவியா said...

தமிழரசிக்கு ஒரே சிரிப்புதான் அந்த உடல் நிலையிலும் குழுங்கி குழுங்கி சிரித்தாள்.

ஏண்டி சிரிக்கிற என்னப் பாத்த பயித்தியக்காரிய தெரியுதா? என்று சொல்லியவாறு விலக்குமாறை கீலே போட்டுவிட்டு மீண்டும் கட்டில் மேல் வந்து உக்கார்ந்தாள். அதற்குள் அந்த சூறாவளிக் காத்து அவர்களை கடந்து சென்றுவிட்டது.

பிறகு என்ன பாட்டி, சூறாவளிக் காத்தப் போயி. இந்த திட்டு திட்டுறேயே?

உனக்கென்னடி தெரியும் நீயோ சின்னக் கழுத. அற்ப ஆயுசுகள போனதுக, இப்படி ஆவியா அலையுதக. அதப் பத்தி உனக்கென்ன தெரியும்! நீ ரெம்ப மெத்தப் படிச்சவ. ஓன்ட இதச் சொன்னா அததக்கு காரணத்த சொல்லி, ஏம் வாய அடச்சுப்புடுவ. சரி அத விடு நீ இன்னைக்கு வேலக்கி போகலையா? எனப் பேச்சை வேறு பக்கம் திசை திருப்பினாள்.

வேலக்கி போக முடிஞ்சா எதுக்கு ஓம் வீட்டு வாசல்ல தேடி வர்றேன் என்று மனசுக்குள் எண்ணியவளாய்...

போகல பாட்டி என்றவள், அப்படியே ஒருக்களித்து படுக்க முயன்றாள், அதற்குள் _ ஏண்டி எனக் கேட்டாள் பாட்டி.

இவ விட மாட்டா போலிருக்கே என நினைத்துக் கொண்டு சொல்லித் தொலையவேண்டியதுதான்.
உடம்பு பூராம் அனலாக் கொதிக்குது பாட்டி உடம்புக்கே ஒன்னுஞ் சரியில்ல அதான் போகல, செத்த நேரம் இங்க குத்தவச்சுட்டு போகலாம்னு வந்த; நீ என்னடான கேள்வி மேல கேள்வி கேட்டு தொணதொணனுக்கிட்டு இருக்கேயே என்றவாறு தலைக்கு கையை தலையணையாக்கி சேலையை இழுத்து மூடி, படுக்க முயன்றாள். வேப்ப மர நிழல் தாலாட்ட தொடங்கியது.

தமிழ் ஓவியா said...

பாட்டிக்கு கோபம் உச்சி மண்டைக்கு சுர்ரென்று ஏறியது. அங்கிட்டு இங்கிட்டுனு அலைஞ்சிட்டு வர்றாள்க இங்கே வந்தவுடனே மல்லாந்து படுக்க துடிக்கிறாள்க. இவளுக்காகவா தன்னால கஷ்டப்பட்டு இம்புட்டு பெரிய வேப்ப மரத்த வளத்து வச்சுருக்கேன் என மனசுக்குள் கருவிக்கொண்டு

ஏண்டி புள்ள நா ஒருத்தி குத்துக் கல்லாட்டம் ஒத்த முனியா ஒக்காந்து இருக்கேனே, என்ன பாட்டி செய்யுற ஏதுபாட்டி ஒரு பேச்சுக்காவது ஒரு வாத்த கேட்டியா புள்ள, பொசுக்குனு வந்தவுடனே படுக்கப் போறீயே

இங்க வந்ததுக்கு பதில வீட்டுலயே முடங்கி கெடந்துருக்கலாம் என்று எண்ணியவளாய்.

உனக்கென்ன பாட்டி குறைச்சல், எங்கள மாதிரி குறுக்கொடிய வேல செஞ்சாக் கஞ்சி குடிக்கிற; இந்த வயசிலயும் நகைக்கு பஞ்சமில்ல, மாசம் புறந்தா டானு பென்சன் பணம் வந்துவிழுது. வேல வேலக்கு பசிச்சாலும் பசிக்காட்டாலும் சோறு, செத்த நேரம் இந்த நிழல்ல கண்ணயர்லாம்னு வந்தேன். நீ என்னடான பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சுட்டாப்புல, சும்மா தொணத் தொணனு கேள்வி மேல கேள்வி கேட்டு தொலைக்கிறேயே? என்று வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள்.

அப்பொழுது வேகமாக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடிவந்தது ஒரு நாய்; வந்தவுடன் நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து படுத்த வண்ணம் கேஸ் கேஸ் என இளைத்த வண்ணமாக இருந்தது.

பாட்டிக்கு வந்ததே கோபம் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து வீசி எறிந்தது. சேடு எங்க வந்து இங்க வந்து படுக்கிற என்றாள்.

ஏம் பாட்டி அந்த வாயில்லாத ஜீவன்ட கோபத்தக் காட்டுற அதுபாட்டுல ஒரு ஓரத்துல படுத்துட்டு போகட்டுமே?

அந்த நாயி மறுகி நின்னு திரும்பி பார்த்தது!

ஆமான்டி கண்ட கண்ட நாயிக வந்து படுக்கிறதுக்க இவ்ளோ பெரிய வேப்ப மரம் வளர்த்து வச்சிருக்கேன். ஏம் பாட்டி சாடை மாடையா என்னையும் வையிற மாதிரி தெரியுதே என்றவாறு ஒரு கையை தரையில ஊண்டி எழுந்தாள், தமிழரசி.

திடீர்னு பாட்டி கட்டுல விட்டு கீழே இறங்கி,
ஆத்தா என்ன மன்னிச்சுடு ஆத்தா தெரியாத்தனமா ஏதாவது பேசியிருந்தா நீதான் சகிச்சு மன்னிக்கணும், என்றவாறு தமிழரசியின் காலில் விழுந்து தோப்புகரணம் போட்டாள்.

தமிழரசிக்கு ஒன்றும் புரியவில்லை இந்த கிழவிக்கு கிறுக்கு புடிச்சிருச்சா?

ஏம் பாட்டி ஏங்கால்ல விழுற? என கொஞ்சம் அச்சத்துடனே கேட்டாள்.

தாயி என்ன மன்னிச்சுடுதாயி ஓம் மேல அம்மா விளையாடி இருக்காமா?

என்ன ஏம் மேல அம்ம விளையாடியிருக்காளா? ஏ உடம்பு என்ன மைதானமா விளையாட என கூறியவாறு தன் முகத்தை தடவிப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது.

இருக்கண்குடி மாரியாத்தா முத்து போட்டு இருக்காபுள்ள பேசாம வீட்டுக்கு போ வெளியில எல்லாம் வரக்கூடாது என்றாள் கருப்பாயி பாட்டி.

தமிழரசிக்கு சிரிப்புதான் வந்தது. ஏம் பாட்டி என்ன இங்க உக்கார வேணாம்னு சொல்லு போயிடுறேன். அதுக்காக இப்படி கதையெல்லாம் உடாதே.

இல்ல தாயி பெரிய மனுசி சொல்லுறேன். பேசாம வீட்டுக்கு போ தாயி.
போறேன்.

நா ஒரு கேள்வி மட்டும் கேக்குறேன். அதுக்கு மட்டும் பதில சொல்லு நா இங்க இருக்கல ஏங் வீட்டுக்கே போயிடுறேன்.

கருப்பாயி பாட்டி விழித்தாள் என்ன கேக்கப் போற என பயபக்தியுடன் நின்றாள்.

ஏம் பாட்டி இந்த வெயில் காலத்துல மட்டும் வர்ற அம்மா மழை காலத்துல வர மாட்டேனுங்கிறாளே ஏம் பாட்டி மழையினா ஆத்தாவுக்கு அலர்ச்சியோ?

கருப்பாய் பாட்டி பேசவில்லை. வாயடைத்து போய் நின்றாள்.

தமிழரசியோ வீறு விறுனு வீட்டுக்கு நடந்தாள்.

- பள்ளபட்டி
(அ)ம்மை

தமிழ் ஓவியா said...

நரபலியைத் தூண்டிய முடநம்பிக்கை விளம்பரங்கள்


மனிதர்கள் மனதில் பன்னெடுங்காலமாக பதிந்த ஒரு நம்பிக்கையை அது தவறு அல்லது மூடநம்பிக்கை என்று உறுதிபட நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இன்றும் பெருகி நிற்பதற்கு என்ன காரணம்? 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் எங்கும் மூட நம்பிக்கைகள் பெருகி இருந்தன. அதன் பிறகு விஞ்ஞான புரட்சியின் காரணமாக மூடநம்பிக்கைகள் பல அழிக்கப்பட்டன.

மனிதர்கள் தங்களின் நிலை உணர்ந்து தங்களை சமுதாயத்திற்கான ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டு சமூக சீர்திருத்ததிற்காக அற்பணித்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். சமூக சீர்திருத்தங்களில் மூடநம்பிக்கைகள் அழிக்கும் பணியை முதலில் கொண்டு வந்தது சீனம் தான்.இதன் கம்யூனிச தத்துவத்தின் காரணமாக சீனம் பற்றிய பல வரலாற்று உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை, அந்த வகையில் சீனர்களின் விஞ்ஞானம் அறிவை எடுத்துக் காட்டுவது அவர்கள் கண்டறிந்த காகிதம். (மிங் வமிச மன்னர்கள் நிலச் சுவான்தார்களுக்கு இதர குறுநிலமன்னர்களின் நிதி நிலை அறிக்கையை காகிதங்களில் எழுதி பொதுப் பார்வைக்கு வைத்தனர். அதுதான் இன்று நிதி நிலை அறிக்கையாக உருமாறி உலகெங்கும் அரசுகள் முதல் பெரிய சிறிய நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன) ஆனால் இந்தியாவில் நாகரீகம் வளர வளர அறிவியல் மூலமாகவேகூட ஊடகங்கள் மக்களின் மனதில் மூடநம்பிக்கைகளைத் திணித்து மேலும் மேலும் அழுக்கெண்ணெய் படிந்த கண்ணாடியாக மனித உள்ளங்களை மாற்றி வருகின்றன. இன்று இந்தியாவில் மூடநம்பிக்கை என்பது அரசியல்வாதிகளில் ஆரம்பித்து ஊடகங்களில் துவங்கி சில சுயநல மதத்தலைவர்கள் வரை சென்று சேர்ந்து அது மக்களையும் மாய்த்துவருகிறது. அண்மையில் இந்திய குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். வழிப்பாட்டு உரிமை ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை; அதை நாம் குறைகூறவில்லை.இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்ட நாடு.அந்நாட்டின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்,அரசின் செலவில் தனது தனிப்பட்ட மத நம்பிக்கைக்காக போய்வருவது தார்மீக ரீதியில் சரிதானா? இப்படி ஒவ்வொரு முறையும் முக்கிய அரசியல் தலைவர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதையும் அவர்கள் வழிபடுவதையும் பத்திரிக்கைகளும்,அரசு ஊடகங்களும் ஏன் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவேண்டும்? இதற்கெல்லாம் முத்தாய்ப்பான ஒரு சிறப்பான தகவல். வடக்கில் உள்ள பிரபல இந்தி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்கும் சென்று வந்தவர். சமீபத்தில் இவர் தொலைக்காட்சிகளில் நுகர்வோர் பொருள் விற்கும் விளம்பரத்தில் நடித்தார். நடித்தது மட்டுமல்லாமல் அந்த பொருளை வாங்கியதால் நான் மிகவும் பலனடைந்தேன் என்று கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...



அது என்ன பொருள் உயிர்கொல்லி நோயை தடுக்கும் மருந்து மாத்திரையா? ஆடைகளை கழுவ பயன்படுத்தும் சலவைதூளா? அல்லது சலவைகட்டியா? குளிர்பானமா? பாத அணியா? அல்லது புது வரவான அழகிய 4 சக்கர வாகனமா? இதில் எதுவுமே கிடையாது அது என்ன தெரியுமா! சுப தன் வர்ஷா லட்சுமி குபேர் யந்திரா(அதாவது நலமுடன் பணமழைகொட்டும் லட்சுமி குபேர யந்திரம்) மும்பையில் பொது இடங்களில் பாபா வங்காளி, ராஜஸ்தான் மாதாஜி, சனிமகராஜ் என்ற பெயரில் இவர்களிடம் வாருங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் கடை வியாபாரம் முதல், அயல் நாட்டு வேலை வரை இவர்களிடம் போனால் சிறப்பாக அமையும் என்றும் விளம்பரபடுத்துவார்கள், மும்பையில் புறநகர் ரெயிலில் எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரங்களைக் காணலாம், இதனால் பல ஏமாற்றுப்புகார்கள், கடத்தல்கள் மற்றும் சில நரபலி (தங்கப்புதையல் கிடைக்கும் என்ற பாபா வங்காளி என்ற சாமியாரின் ஆலோசனை கேட்டு பக்கத்து வீட்டு பையனை பலிகொடுத்த விவகாரம்.

தானே மாவட்டம்- ஆதாரம்:12\10\2009 மராட்டி தினசரி தைனிக் சகால்) இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மத்திய ரெயில்வே காவல் துறையினர் இணைந்து இது போன்ற விளம்பரங்களை மும்பையில் தடைசெய்தனர். இந்தி நடிகர் கோவிந்த செய்துவரும் விளம்பரமும் கிட்டத்தட்ட இதே போன்றது தான் அப்படி என்னதான் கோவிந்தா சொல்கிறார். இதோ! தொலைக்காட்சியில் நமது நேரடி அரங்க நிகழ்ச்சி போல் மூன்று பேர். அவர்களுக்கு எதிரில் கோவிந்தா. அதன் பார்வையாளர்களாக 20 பேர். கோவிந்தாவின் முன்பு உட்கார்தவர் இஸ்லாமியரைப்போல் ஆதாப் என்று சொல்கிறார்( இஸ்லாமியர்களும் இதை பயன்படுத்துகிறார்களாம்) உடனே அவரது அனுபவங்களை சொல்கிறார்.

தமிழ் ஓவியா said...

அவர் ஏதோ வேலைபார்த்துகொண்டு இருந்தாராம் அந்த நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாம், அந்த சிரமத்தில் இருக்கும் போது அவரது அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம்(இதைக் கூறும் போது அவர் அழுகிறார்) உடனே அழுகையை நிறுத்திவிட்டு நான் தன் வருஷா லட்சுமி பற்றி அவரது நன்பரான இந்து பண்டிதர் ஒருவர் கூறினாராம். உடனே அதை வாங்கி பூசை செய்தாராம், அதன் பிறகு அவருக்கு வேலை கிடைத்ததாம். அன்னைக்கு அறுவைசிகிச்சை நடந்ததாம். இவருக்கும் திருமணம் நடந்ததாம். இப்படி பல தாம்கள்... என்ன ஒரு பித்தலாட்டத்தனம் இது.

அதுவும் முக்கியமான தொலைக்காட்சியில் இது போன்ற ஏமாற்றும் விளம்பரங்களை எப்படி நுகர்வோர் ஆணையம் அனுமதிக்கிறது? இதில் இணையதளங்களில் சிலர்(முக்கியமாக பேஸ்புக்கிலும்) இதை நான் பயன்படுத்தினேன், அற்புதமாக வேலை செய்கிறது, என்று நடிகர் கோவிந்தாவிற்கு நன்றிகள், மற்றும் காணிக்கைகள் எல்லாம் சொல்கிறார்கள், அந்தப் பொருளின் விலை 3000 ரூபாய், தபால் செலவுகள் 500 ரூபாய்.சேவைபிரிவு எண் எல்லாம் உண்டு சரி அப்படி அதில் என்னதான் இருக்கும்? ஒரு பெரிய சாவி குபேரனுடையதாம், சிறிய சாவி லட்சுமியுடைதாம், சிறிய லட்சுமி சிலை ஒன்று குபேரனின் (மைத்ரெய புத்தா இங்கு குபேரனகிவிட்டார்) சிலை, ஒரு ஜோடி செருப்பு(லட்சுமியின் பாதங்களாம்) இரண்டு செப்பு தகடுகள் மற்றும் ஒரு தட்டு ஆமை சிலை ஒன்று. இதில் சில கட்டங்களும் எழுத்துக்களும் உள்ள இரண்டு பொருட்கள்.இவை மட்டும் உலோகங்கள். மற்ற எல்லாம் மட்டரக பிளாஸ்டிக்குகள்(நுரை பிளாஸ்டிக்) அதன் மேல் தங்க நிற முலாம் பூசியவைகள். இவைகள் எல்லாம் மும்பை மீராரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகளில் அச்சுவார்த்து தயார்செய்யப்படுகிறது. இதனுடைய மொத்த விலை என்று பார்த்தால் ஒரு சிலைக்கு 20 காசுகள். தகடுகள் ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் பகுதியில் தயாரிக்கின்றனர்.அதன் அடக்கவிலை 100 தகடு ரூ10 மட்டுமே. பாக்கேட்டுகள் டில்லியை அடுத்து உள்ள குர்காவ் என்ற நவீன தொழில் நகரத்தில் தயாராகின்றது. ஒரு டப்பா 2ரூபாய். (அதன் மேல் ஒட்டப்படும் படம் போட்ட காகிதத்துடன் சேர்த்து) அதாவது மூன்று ரூபாய் கூட பெறாத ஒன்றுக்கும் உதவாத பொருளை டெலிமார்கெட்டிங் மூலமாக 3,500 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்துகிறார். அதை வாங்கிகொண்டு இணையதளங்களில் பலர் எந்த திசையில் வைப்பது, எப்படி பூசை செய்வது, வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா? படுக்கை அறையில் வைக்கலாமா? என மடத்தனமாக கேள்விகள் கேட்பதுடன் பிறரையும் ஊக்கப்படுத்துகின்றனர்.

மும்பையில் தடைசெய்யப்பட்ட இந்த மூடநம்பிக்கை வியாபாரம் இப்போது தமிழகத்தை நோக்கிப் படையெடுத்துள்ளது. தமிழில் புதிதாக முளைத்துவரும் தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரங்களை மொழிமாற்றம் செய்து ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

சில நாட்களுக்கு முன் ஈமு கோழி விளம்பரங்கள் வந்தன.அதில் நடித்த நடிகர்கள் மீது கூட பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

தகவல் ஒலிபரப்புத்துறை,நுகர்வோர் துறை ஆகியவை எப்படி இது போன்ற பொருள்களை விற்கவும் அதற்கு தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கிறது என்பதே நம் கேள்வி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரே இதை விளம்பரப்படுத்தும் போது அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க துணிவதில்லை.அதுவும் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

அரசுகளுக்கு மட்டுமல்ல,இதில் ஊடகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.பணம் தருவார்கள் என்பதற்காக எந்த விளம்பரத்தையும் செய்யலாமா?

மருத்துவத்தையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கொண்டுவரவேண்டும் என்ர குரல் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டது.அமருத்துவம் சேவையாக இருந்து அது தொழிலாக மாறிய பின்பு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.உயிர் காக்கும் மருத்துவத்தையே நுகர்வோர் சட்டத்தில் கொண்டுவர முயலும் காலத்தில் அப்பட்டமான ஏமாற்று வியாபாரமான யந்திர தந்திர மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தடுக்கவும்,அதற்கு செய்யப்படும் விளம்பரத்தை முடக்கவும் வேண்டாமா?

- சரவண ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை


பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சுமார் 630 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத் தில் உச்சநீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான குழு ஜனவரி 23 அன்று சமர்ப்பித்துள்ளது.

மரண தண்ட னைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,அதுபோன்ற குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், கூட்டுப் பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட் சமாக ஆயுள் தண்ட னையும் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாக டில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறியுள்ளார்.

குழுவின் பரிந்துரைகள் பற்றி தில்லியில் செய்தியாளர் களிடம் ஜே.எஸ்.வர்மா கூறும்போது,``

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத் தம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 80,000 யோசனைகள் எங்களுக்கு வந்தன. இளைஞர் கள் பலர் முதிர்ச்சிமிக்க யோசனைகளை தெரி வித்தனர்.பொதுமக்கள் பங்கு பெறும் மின்ஆளுகை யில் வெளிப்படைத்தன் மையை உறுதிப்படுத்த வேண்டும்.

குற்றம் செய்வோர் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் நூறாவது பிரிவில், பாலியல் கொடுமைக்கு உடல் ரீதியாக ஆளாகும் போது தற்காப்புக்காக தடுக்கும் உரிமை வழங்குதல் என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான வன்முறையின்போது, சட்டத்தை மீறுவோரையும், அதைத் தடுப்பதற்கு சட்டரீதியான கடமையை செய்யத் தவறும் அரசு ஊழியர்களுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் 376(அ) பிரிவின்படி, பெண் மீது அமிலம் வீசப்பட்டால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யலாம். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக அய்ந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரை வழக்கமான சட்ட விதிகளின்படியே தண்டிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல ஆயுதப் படையினர் சிறப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யலாம்,எனத் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

பிரபல பிரமிட் சாமியாரின் லீலைகள் டிவியில் அம்பலம்


பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம் என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி.(இந்த சமியாரும் பல சாட்டிலைட் டீவியில் காலையில் பெண்ளை மட்டும் மாடலாக வைத்து? த்யானம் கற்றுக் கொடுப்பார்)

கடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார்? சுபாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண்டைமாநிலங்களில் இருந்தும் வி.ஐ.பி.,கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், பெண்களை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதும், அவர்களுடன்,சில்மிஷம் செய்வதுமாக, சாமியார் பத்ரி, காம செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, டிவி சேனல்களுக்கு அந்த காட்சிகளை கொடுத்து ஒளிபரப்ப செய்து விட்டார். அந்தகாட்சிகள், தெலுங்கு சேனல்கள் பலவற்றிலும் ஒளிபரப்பானது. இதனால் அதிர்ச்சி அடைந்த, மகபூப்நகர் மாவட்ட கலெக்டர்,
கிரிஜா சங்கர், சாமியாரின் செயல் பாடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மகளிர்க்கு மட்டுமல்ல . . .!


தெருவில் தன் வயசினையொத்த சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண்குழந்தை திடீரென தன் உடல் வெப்பமடைந்து லேசான வலியுடன், விளையாடுவதை நிறுத்தினாள். பக்கத்திலிருந்த பையன் உன் பாவாடையில் இரத்தம் என்று காட்டினான். வீட்டின் வெளியே குப்பையை கொட்ட வந்த அம்மா இதை கவனித்தாள். தன் மகளை தரதரவென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். வீடு மகிழ்ச்சியும், துக்கமும் ஆக இருந்து கொண்டிருந்தது. இந்த வயசிலேயே குத்த வைச்சிட்டாளே நான் என்ன செய்வேன்? எப்படி பாதுகாப்பேன்? சனியன் சனியன் நானெல்லாம் 15 வயசிலதான் ஆனேன். இதப்பாரு 11 வயசிலேயே என்று சொல்லிக்கொண்டே பிள்ளையை கட்டிக்கொண்டு அழுதாள். இதுபற்றி எதுவும் புரியாமல் பிள்ளை திருதிருவென்று முழித்துக் கொண்டு பாதியில் விட்டுவந்த விளையாட்டை நினைத்துக் கொண்டிருந்தது.

ஆண், பெண் பாகுபாட்டை காட்டத்தொடங்கும் முதல் நிகழ்வு. பெண்ணிற்கு போடப்படும் முதல் தடைக்கல். இன்னும் 40 ஆண்டுகள் படப்போகும் அவஸ்தைதான் முதல் தடவையாய் வந்துவிட்ட மாதவிடாய்.

மாதவிலக்கின்பொழுது கருப்பையில் இருந்து 28 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமும், வழவழப்பான திரவமும் பெண்குறி வழியாக வெளிவரும்; இந்நிலை சாதாரணமாக 3லிருந்து 7 நாட்கள் வரை நீடித்துக் காணப்படும். மாதவிலக்கு பெண் பூப்பெய்தியதிலிருந்து மெனோபாஸ் என்று சொல்லப்படும் சூலக ஓய்வு வரை சுமார் 45 வயதுவரை நீடித்து இருக்கும். பெண்களுக்கு பேறு காலங்களில் மாதவிலக்கு இராது. அதேபோல் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கும்பொழுதும் பொதுவாக 100க்கு 80 சதவீதம் மாதவிலக்கு ஏற்படாது.

மாதவிலக்கின்போது இரத்தம் பொதுவாக 2 முதல் 4 அவன்ஸ் அளவு வெளியேறும். மாதவிலக்கு ஏற்படக் காரணம் செக்ஸ் ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன்களே கருப்பை மீது வேலைசெய்து மாதவிலக்கு ஏற்படச் செய்கின்றன. ஆரம்பத்தில் மூளை அடிச்சுரப்பி ஹார்மோன் சூற்பையை இயக்குவதனால் ஈஸ்ட்ரோஜனும் உட்புறச் சுவரைத் தடிக்கச் செய்கிறது.


தமிழ் ஓவியா said...

மாதவிலக்கு தொடங்கும் முதல் நாளிலிருந்து தொடங்கி 15 நாள் வரை இதன் உட்புறத்தோல் மெதுவாகத் தடித்துக் கொண்டு போகிறது. தடித்த கோழைப் படலத்திற்கடியில் இருக்கும் இரத்தக்குழலில் இரத்தம் அதிகமாகப் பாய ஆரம்பிக்கும். இதில் உள்ள இரத்தக் குழியின் அடர்த்தியும் தோலின் தடிப்பும் சேர்ந்து 1//4 செ.மீ. கனத்திலிருந்து அடுத்த மாதவிடாயின் நாள் நெருங்கும் நேரம் 1/2 செ.மீ. கனத்தை அடைகிறது. இக்காலத்தில் மெதுவான பஞ்சு போன்ற மெத்தையை கருப்பையானது தன்னுடைய உட்புறத்தோலில் தயார் செய்யும். இந்நிலை உருவாகக் காரணம், கருத்தரித்தால், கருவை இப்பஞ்சனை போன்ற உட்தோலில் மெதுவாகப் பொருத்தி வைக்கவே ஆகும். அப்படிக் கருத்தரிக்காவிட்டால் கருவுக்காகச் செய்யப்பட்ட இப்பஞ்சனைகள் மிக வருத்தத்தோடு கலைய ஆரம்பித்து விடுகிறது.

அதாவது கருப்பையின் உட்புறத்தோல் அப்படியே தற்கொலை பண்ணிக்கொள்வது போல் சிறுசிறு துண்டுகளாக வெளிப்பட ஆரம்பிக்கின்றது. இப்பொழுது அதனுடைய அடியில் மிக வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த இரத்தக்குழல் வெடித்து அதிலிருந்து இரத்தம் வெளிவர ஆரம்பிக்கும். இதுவே மாதவிலக்கு ஆகும். மறுபடியும் அடுத்த மாதமும் உருவாகப் போவதாக ஆசைப்பட்டுக் கொண்டு கருப்பை பஞ்சணையைத் தயாரிக்க ஆரம்பித்துவிடும். இப்பஞ்சணை கருத்தோன்றாத பொழுது கலையும். கருத்தரித்தால் மாதவிலக்கு தோன்றாது. கருவளரத் தொடங்கும். இதுவே உலகம் வாழ, தழைக்க நடைபெறும் நிகழ்ச்சி ஆகும்.

மாதவிலக்கின்போது கவனிக்க வேண்டியவை : -

இச்சமயத்தில் முதலில் மலச்சிக்கலுக்கு இடந்தராமல் இருக்க வேண்டும். பிறப்பு உறுப்புக்களை சுடுநீரில் சிறிது கிருமி நாசினி மருந்து கலந்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நல்ல சுத்தமான துணியையோ, நல்ல நாப்கின்களையோ உபயோகிக்க வேண்டும். துணி உபயோகித்தால் அவற்றைச் சுடுநீரில் துவைத்து நல்ல வெயிலில் உலர்த்தி உபயோகிக்க வேண்டும். மேலும் வெப்ப நாடுகளில் அதிக நாட்களும், குளிர் நாடுகளில் கொஞ்ச நாட்களுமாக மாதவிலக்கு இரத்தக்கசிவு ஏற்படும். உள்துணியை இரண்டு மணிக்கொரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் இரத்தம் அதிகமாக வெளிவரும் பொழுது பாதுகாப்பு உள்துணி காய்ந்தவுடன் கடினமாகி நடக்கையில் உடலுறுப்புகளில் உராய்ந்து வேதனை தரும். இக்காலங்களில் கட்டாயம் இருவேளை குளிப்பது நல்லது.

தமிழ் ஓவியா said...

மாதவிலக்குக் காலத்தில் ஓய்வு தேவை. குளிக்கக் கூடாது. உடற்பயிற்சி கூடாது, மங்கலப் பணிகளில் பங்கேற்கக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் உள்ளன. பெருமளவில் மாதவிலக்குக்கு முன்னமோ அல்லது தொடக்கத்திலோ சில அறிகுறிகள் தோன்றும். மார்பகங்கள் சற்று பெரிதாகத் தோன்றும். வலிகூட இருக்கலாம். மன இறுக்கம், சோர்வுணர்வு போன்ற உளவியல் அறிகுறிகளும் காணப்படலாம். இவை கவலைப்பட வேண்டாதவை. தாமாகவே சரியாகிவிடும்.

மாதவிலக்குக்கு இடைப்பட்ட காலத்திலும் சிலதுளிகள் வெளிப்படலாம். இது அண்ட அணு சூற்பையிலிருந்து வெளிவருவதேயாகும். இதனைத் தொடர்ந்து வயிற்றில் ஒரு பக்கம் வலி உருவாகக் கூடும். இதுபோன்ற நிலை மூன்று அல்லது நான்கு மாதங்கள் தொடர்ந்தும், பிறகு மறைந்தும் ஏழு எட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தோன்றவும் கூடும் இது இயற்கை. இவற்றைப் பதட்டமின்றி கவனித்து வருவது நல்லது. மகளிர் நலவியல் மருத்துவர்களுக்கு சில நோய்க்குறிகளில் இந்தத் தகவல் பயன்படும். கருவுறுதலைத் திட்டமிட விரும்புவோருக்கும் இக்குறிப்புப் பயன்படும்.

மாதவிலக்குக்கு முன்னர் தோன்றும் வலிதான் பெண்களுக்குத் தோன்றும் நரம்புக் கோளாறுகளிலேயே முதன்மையானது. எட்டு அல்லது பத்து நாட்களுக்கு முன்பே சிலருக்கு உடல் உளவியல் மாறுபாடுகள் தோன்றலாம். சிடுசிடுப்பு, கவனமின்மை, சோர்வு, தலைவலி, நடுமுதுகுவலி, மார்பக வீக்கம் போன்றவை கவலைப்பட வேண்டாதவை. இன்னொரு விஷயம்... இவை கருவுறத் தகுதியான பெண்களுக்கு பெருமளவில் காணப்படுகிறது என்பதே மருத்துவ அறிவியலார் கணிப்பு.

தமிழ் ஓவியா said...

மாதவிலக்குக்கு 1 வாரத்திற்கு முன்னர் உடலில் கூடுதலாக நீர் சேமித்து வைக்கப்படுகிறது. எடை கூடுகிறது. உடல் பருத்தாற் போலத் தோன்றும். ஆனால் இந்நிலை மாதவிலக்குக்குப் பிறகு மாறிவிடும். நீரும் வெளியேறுவதால் உடலில் இறுக்கம் மட்டுமல்ல மன இறுக்கமும் தளர்கிறது.

மாதவிலக்கு பல ஹார்மோன்களின் விளைவுகளேயாகும். மேலும் கருவுறாத நிலையில் மாதந்தோறும் கருப்பையை ஆயத்தப்படுத்தி, குறிப்பிட்ட காலம் கடந்த பின்னர் அந்த ஏற்பாடுகளைக் கலைத்து வெளியேற்றி விட்டு, மீண்டும் ஆயத்தப்படுத்துவது ஹார்மோன்களின் பணிகளாகும். எனவே, ஹார்மோன்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

ஒன்றுமட்டும் இதுவரை மாறவில்லை. மாதவிலக்கு என்பது நடைமுறை வாழ்வில் சங்கடந்தரும் ஒன்றாகவே உள்ளது. இதன் நடைமுறைத் துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளப் பலர் முயல்வதேயில்லை. ஆனால் மருத்துவ அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நாம்... என்ன செய்யலாம்? அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை நமது பிள்ளைகளுக்குக் கூறாதிருக்கலாம்.

மாதவிடாய்க் காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

மாதவிடாய் நேரத்தில் உடல் களைப்பாக இருக்கும். அப்பொழுது வேலையைச் சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அச்சமயத்தில் அதிகமாக உணரப்படும். பெண்கள் தான் உபயோகிக்கும் உள்ளாடைகளையும், டவல்களையும் (சானிடரி நாப்கின்ஸ்) மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைக்காவிட்டால் தொற்றுக்கான கிருமிகள் பரவி கருப்பையில் உள்ளே இருக்கும் இரத்தக் குழலில் எளிதில் புகுந்து தொற்று மற்றும் டெட்டனஸ் என்னும் வாய்ப்பூட்டு நோயையும் உண்டு பண்ணு-ம்.

சாதாரணமாக பெண்ணுக்கு மாதவிலக்கில் 14ஆவது நாளில் அடிவயிற்றில் வலி உண்டாகும். இவ்வலியானது அண்ட அணு சூற்பையிலிருந்து வெளிவருவதையே குறிக்கிறது.

சிலருக்கு அடிவயிற்றில் வலப்புறமோ இடப்புறமோ இதே காரணத்தினால் வலி உண்டாகும். மாதவிலக்கின்போது தினசரி வேலைகளைப் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இதேப்போல் மாதவிலக்கின்போது சுகாதாரத்திற்காக மட்டுமே உடல்உறவு கொள்வது கூடாது என்று கூறுப்படுகிறது. மாதவிலக்கின்போது உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தியாவில் நிறையப் பழங்கதைகள் உள்ளன. இக்கதைகள் எல்லாம் சுகாதாரத்தினைப்பற்றி அறியாத காலத்தில் ஏற்பட்ட கதைகள் ஆகும். கூட்டுக் குடும்பங்களில் இம்மூன்று நாட்கள் வீட்டைவிட்டு ஒதுக்குப்புறமாக உட்கார வைப்பது, அப்பெண்ணிற்கு அதிக வேலையிலிருந்து ஓர் ஓய்வுக்கான நேரமாகவே அமையும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் இல்லை.

நாட்டுப்புறங்களில் பழக்கத்தில் வந்துவிட்டதால் செய்யும் மூடச்சடங்குகளை தவிர்த்துப் பார்த்தால் அவர்கள் கொடுக்கும் உணவு வகைகள் அந்தப் பெண்ணை எந்தக் காலத்திலும் வலிமையாக வைத்திருக்கும். முதலில் நல்லெண்ணையும், முட்டையும் கொடுப்பார்கள். அடுத்த 15 நாட்களுக்கு உளுந்து, வெந்தயம் போன்ற பொருட்களால் ஆன களி உணவு வகைகளைக் கொடுத்து மகிழ்வுடன் இருக்கச் செய்வார்கள்.

பெண் குற்றவாளிகள்பற்றிய ஆய்வில் நான்கு மடங்கு அதிகக் குற்றம் மாதவிலக்கின்போதே நிகழ்ந்துள்ளன. தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விருப்புப் பெறுகின்றனர் அல்லது சரிவரப் பணிபுரிவதில்லை. மேலும் வேலைத்திறனும் குறைந்தே காணப்படுகிறது. காரோட்டிகளான பெண்கள் அதிக அளவு விபத்துக்குள்ளாவதாகப் பதிவுகள் கூறுகின்றன. மேற்குறித்த தகவல்களும் பதிவுகளும் மருத்துவ உலகை உலுக்குகின்றன.

முடிவாக ஒரு தகவல்:-

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசதி, சோர்வு மற்றும் உடல் வலிகளை போக்கும் மருத்துவ சக்தி கொண்டதாக கொய்யப்பழம் உள்ளது. இதனை சாப்பிட்ட சில மணித்துளிகளில் இருந்து அது தனது பணியைத் தொடங்குகிறது. எனவே இந்தக் காலங்களில் கொய்யப்பழம் உங்கள் நண்பனாக இருக்கட்டும்.

- செய்தித் திரட்டு: சுகந்தா

தமிழ் ஓவியா said...





டங்ஸ்டன் இழை கடவுள்

ஃபியூஸ் போன பல்பை எரிய வைக்க முடியாத கடவுளை

திட்டிக்கொண்டிருந்த போது

அல்லா தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றினாரென்று மகிழ்ந்தான் நண்பனொருவன்

என்னிடம் கோபித்துக்கொண்டு போன சூரியன்

திரும்ப வரும்வரை இந்த ஃபியூஸ் போன பல்பை

உயிர்தெழுவதற்கு உதவுமாறு தொழுதேன் அல்லாவிடம்

இந்த இரவில் யார் வெளிச்சம் கொடுத்தாலும் அவன் உன்னதமானவனென்றேன்

அந்த பல்ப் எரியவில்லை தொழுகைக்கு பின்னும்

இருள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை

இருளை கண்ணாடி போல உடைக்க முடியாது

வெளிச்சத்தை தரும் அமுத சுரபி யாரிடமிருக்கிறது

அறியாமை போல பரவியிருக்கும்

கரிய இருளின் சருகுகளை கூட்டித்தள்ள வேண்டும்

இருள் மாமிசமாகிறது பசித்தவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்

அது எல்லோரையும் வசீகரிக்கும் வார்த்தையாகிறது

நான் வெளிச்சத்தின் உணவுக்காக காத்திருக்கின்றேன்

சிலுவை சுமந்த மனிதனின் பிதாவின் மேல் என் கோரிக்கை விழுகிறது

நீண்ட நேரமாகியும் அந்த பல்பு எரியவில்லை

நான் சூரியனுக்காக காத்திருக்கத் தொடங்கினேன்

அந்த தெருவழியே வந்த தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னார்

கொண்டு வா அந்த உயிரற்ற பல்பை டங்ஸ்டண் இழைகள் பொருத்தப்பட்டது இனி எரியுமென்றார்

டங்ஸ்டன் இழை இராத்திரி நேரங்களின் கடவுளானது இப்படித்தான்

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

ரிசானா : கொடூரத் தண்டனை


``அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கக்கூடாது- அண்மையில் முகநூலில் பலரும் எழுதிய பதிவு இது.அப்படியென்ன அந்தக் காட்சியில் இருந்தது? 17 வயதுச் சிறுமி ஒருத்தி பொது இடத்தில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறிப் போய் அப்படிப் பதிவிட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக் என்ற அந்தச் சிறுமிக்கு சவூதி அரேபியா நாட்டில் அளிக்கப்பட்ட கொடூர மரணதண்டனைதான் உலகில் வாழும் மனிதர்களின் மனங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.உலகில் பல் நாடுகள் மரணதண்டனைக்கு எதிராக முடிவெடுத்துள்ளன.இந்தியாவில் மரணதண்டனைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.ஆனால்,சவூதி அரேபியா போன்ற மதங்கள் கோலோச்சும் நாடுகளில் இன்னும் மரணதண்டனைகள் மனிதத்தைக் கொன்றுகொண்டிருக்கின்றன.

யார் இந்த ரிசானா? இலங்கையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவள் ரிசானா. 2005 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காகச் சென்று ஒரு வீட்டில் வேலை செய்துவந்தாள்.அங்கு தனது எஜமானியின் குழந்தையைக் கொன்றுவிட்டாள் என்பது இவள் மீதான குற்றச்சாட்டு.விசாரணை நடத்திய சவூதி அரேபியாவின் தவாமி நீதிமன்றம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி 2007 ஆம் ஆண்டு மரணதண்டனை விதித்தது.ஹாங்க்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமை அமைப்பின் உதவியுடன் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ரியாத் உயர்நீதிமன்றத்தில் ரிசானாவுக்கு ஆதரவாக மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.ஆனால்,அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர்,ரிசானாவின் கருணை மனுவும் சவூதி அரசால் நிராகரிக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர் விரும்பினால் குற்றவாளியை மன்னிக்கலாம் என்பது ஷரீயத் சட்டம்.ஆனால்,இந்த வழக்கில் இறந்துபோன குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


4 மாதக் குழந்தையைத் திட்டமிட்டு ரிசானா கொல்லவில்லை.பாலூட்டும் போது மூச்சுத் திணறி குழந்தை இறந்துள்ளது.4 மாதக் குழந்தையைக் கொல்ல ஒரு சிறுமிக்கு மனம் வருமா?

சவுதி அரேபியாவுக்கு நான் 01.04.2005-ல் வந்தேன்.அங்கு ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைப்பது, கழுவுவது, 4 மாதக் குழந்தையை பார்த்துக்கொள்வது ஆகிய வேலையைச் செய்து கொண்டு இருந்தேன்.அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியிருக்கும்.

அப்போது யாரும் வீட்டில் இல்லை. அங்குள்ள 4 மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். வழக்கம் போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் வெளியேவர ஆரம்பித்தது.அப்போது நான் குழந்தையின் தொண்டையை மெதுவாகதடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூங்குகிறதென நினைத்தேன்.

தமிழ் ஓவியா said...


குழந்தையின் தாயான எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி என்னை செருப்பால் அடித்துவிட்டு குழந்தையைதூக்கிக்கொண்டு போனார். எனது மூக்கிலும் கன்னத்திலும் எஜமானி அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.பின்னர், என்னை காவல்துறையிடம் ஒப்படைத்து அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெறித்ததாகக் கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை எலக்ட்ரிக் ஷாக் வைக்கப்போவதாகக் கூறினார்கள்.இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிக்கொடுத்த தாளில் கையொப்பம் போட்டேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது. ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாககுழந்தையை கொல்ல நான் கழுத்தை நெறிக்கவில்லை. மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன்.-இது ரிசானா எழுதிய கருணை மனு.

இதன்மூலம் ரிசானா துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது தெரியவருகிறது. இச்சம்பவம் நடந்தபோது ரிசானாவின் உண்மையான வயது 17.ஆனால்,வயதை அதிகமாகக் குறிப்பிட்டு அவளுக்கு பாஸ்போர்ட் வாங்கி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.மைனர் குற்றவாளிகளுக்கு பன்னாட்டு மனித உரிமை ஆவணத்தின்படி மரணதண்டனை விதிக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தான் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிடுவோம் என்றும்,ஊருக்குத் திரும்பிவிடலாம் என்றும் ரிசானா இறக்கும் வரை நம்பிக்கொண்டு இருந்திருக்கிறாள்.தன்னிடம் இருந்த 500 சவூதி ரியால் பணத்தை தானமாகக் கொடுத்துவிடும்படிக் கூறியிருக்கிறாள்.இது ரிசானாவுக்கு மரண தண்டனை வித்திக்கப்படுவதற்கு(9.1.2013)சில மணி நேரத்திற்கு முன் அவளைச் சந்தித்த மௌல்வி ஏ.ஜே.எம்.மக்தூம்,ரிசானாவின் குடும்பத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி.

தமிழ் ஓவியா said...

இஸ்லாமிய மத நம்பிக்கையாளரான இந்த மௌல்வி, இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து அவளை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது, இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார் என்றால் அநியாயக்காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக என்று கூட பிரார்த்தித்தேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஒரு மத நம்பிக்கையாளருக்கே மனம் பொறுக்கவில்லை.மதங்கள் சாராத மனிதநேயர்களின் மனங்கள் என்ன பாடுபடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?அதனால்தான் இந்த மரணதண்டனைக் காட்சியைப் பார்த்தவர்கள் நான் இந்தக் காட்சியைப் பார்த்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

மதங்கள் அன்பைபோதிக்கின்றன என்று சொல்லப்படுகிறது.அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்று இறைவனை இஸ்லாம் வர்ணிக்கிறது.இந்த நம்பிக்கைகொண்ட சவூதி மக்களும்,அந்நாட்டு ஊடகங்களும்கூட ரிசானாவுக்கு மரணதண்டனை கூடாது;மன்னிக்கப்படவேண்டும் என்றே குரல் எழுப்பியிருக்கின்றனர்.ரிசானாவின் பெற்றோருக்கு சவூதி இளவரசர் பெரும் பணத்தை நட்டஈடாகக் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால்,அவர்கள் அதனைப் பெறவிரும்பவில்லை;மறுத்துவிட்டனர்.

மனிதன் போட்டுக்கொண்ட எல்லைக் கோடுகளைத்தாண்டி இன்று இணையம் என்னும் அறிவியல் அற்புதம் உலகத்தையே இணைத்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் அன்றாடச் சம்பவங்களை உலகம் அடுத்த நொடியே பார்க்கிறது. நாடுகளால்,மதங்களால், இனங்களால்,மொழிகளால் பிரிந்திருக்கும் மனிதன் இப்போதுதான் மனிதத்தை நோக்கி நகர்ந்துவருகிறான்.அதனால்தான் எங்கோ இருக்கும் சவூதி அரேபியாவில் நிகழும் கொடுமையைக் கண்டிக்க அங்குள்ள மக்களோடு நாமும் இணைகிறோம்.

இத்தகைய காலகட்டத்தில் இன்னும் ஆதிகால கொடூர தண்டனைகளை நடைமுறைப்படுத்தலாமா? மனித மனங்களை,குணங்களை புரிந்துகொள்ளும் உணர்வு நமக்கு இல்லையா? தவறு செய்வது மனிதனின் இயல்புதான்.அதற்கு தண்டனைகளும் தேவைதான்.தண்டனை என்பது மனிதனைத் திருத்துவதற்குத்தான் இருக்கவேண்டுமே தவிர,அவனைக் கொல்லுவதாக இருக்கலாமா?நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்ற அய்யம் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் அடிக்கடி எழுகிறது.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

மதுரையில் மரபணு ஆய்வு மய்யம்!



நமது உண்மை இதழில் (டிசம்பர் 16-31) ஜாதியை தகர்க்கும் மரபணு அறிவியல் கட்டுரை படித்தேன். அதில் இவ்வாறான ஆய்வுகள் பலவற்றை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். அதுபற்றி மேலதிக தகவல்கள் வருமாறு: தேசிய புவியியல் கழகம், அய்பிஎம் மற்றும் வெய்ட் குடும்ப அறக் கட்டளை ஆகியோர் இணைந்து 2005 ஆம் ஆண்டு முதல் ரூ.100 கோடி செலவில் உலக முழுவதும் உள்ள 11 ஆய்வு மய்யங்களை நிறுவி மனித மரபணு பரவல்பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

டாக்டர் ராமசாமி பிச்சப்பன் எனும் பேராசிரியர் தலைமையில், இந்தியாவுக்கான மய்யம் மதுரை காமராசர் பல்கலையில் ரூ. 4 கோடி செலவில் நிறுவப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுகிறது. பிரமலைக்கள்ளர்தான் 65000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் மனிதக் குழுவினர்; நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தவர்கள் 50000 ஆண்டுகளுக்குமுன் வந்த மற்றொரு குழுவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக இணையதளவரைபடத்தின்படி, நாகர்கோவில் நாடார்கள், விழுப்புரம் பறையர்கள் எனப் பல்வேறு சமூகத்தவரைப் பற்றியும், நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் வேறு சமூகக் கலப்பற்று வாழும் தொல்குடியினர் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை உலக அளவில் 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.

ரூ. 11,000 விலையுள்ள டப்பாவிலுள்ள கன்னத்துக்குள் பஞ்சுக் குச்சியைத் தடவி எடுத்து அவர்களுக்கு அனுப்பினால் நாம் எங்கிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள், தந்தை, தாய் வழிகள் என்ன என்னும் தகவல்கள் நமக்கு அளிப்பார்களாம்.

ஒன்று மட்டும் உறுதி. ஆப்பிரிக்காவின் எதியோப்பியா, கென்யா, தான்சானியா பகுதியில்தான் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் உருவானதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதலில் வேட்டை சமூகமாக விளங்கி, தெற்கு ஆசியாவுக்கு நகர்ந்து பின்னர் மற்ற பகுதிகளில் பரவினர். பின்னர் வேட்டையாடும் சமூகம், வேளாண் சமூகமாக மாறிற்று. அதோடு ஜாதி, மதம், மொழி, நிறம் போன்ற நோய்களையும் உருவாக்கிக் கொண்டோம்!

- அ.காசிவிசுவநாதன், மதுரை.

தமிழ் ஓவியா said...

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு,

நான் பகுத்தறிவு தந்தையின் மேல் அதிக பற்று கொண்டவன். அவரைப் போல் மகத்தான ஒரு மனிதர் பிறக்காவிடில் இன்றைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.

நான் எந்த அரசியலோ, எந்த அமைப்போ சேராதவன். பகுத்தறிவுப் பகலவன் தந்தையின் வழியில் நடக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

தங்களது உண்மை இதழில், நாள் டிசம்பர் 16-_31 2012 பக்கம் 9இல் பத்து கோரிக்கைளுமே சிறந்தவை. அதில் 8ஆவதாக கூறப்பட்டிருப்பது நடந்தால், எனது 7 மாத பெண் குழந்தைக்கு ஜாதியற்றவர் என்றே சான்றிதழ் வாங்குவேன்.

அவர்களாவது ஜாதி, கடவுள், அடிமை இல்லாமல் மனிதன், இயற்கை, தோழமையுடன் வாழட்டும். ஜாதி ஒழிய போராடும் தங்களுக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும்.

யாரும் பார்த்திராத கடவுளை தேடித்தேடி அலைகிறான். பக்கத்தில் இருக்கும் மனிதனை மறக்கிறான்.

இல்லாத ஏழைகள் எத்தனையோ பேர் இருக்க, இருப்பவன் திருப்பதியில் பணத்தை கொட்டுகிறான்.

பெண்ணை அம்மன் சாமி என்று கும்பிட வைக்கிறான். பார்ப்பனன் கருவறையில் பெண்ணுடன் உல்லாசம் கொள்கிறான். 2020ஆம் ஆண்டில் வெள்ளைக்காரன் நிலாவுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறான்.

ஆனால் நமது மக்களோ 2020ஆம் ஆண்டில் 2020 ஜாதியை கண்டுபிடித்து ஜாதி பொருட்காட்சி நடத்துவான்.

மேல்ஜாதி உயர்ஜாதி என்று ஆணவம் கொள்ளும் இவர்கள் வாய் வழியாக பிறந்தார்களா?

_ ச.யுவராஜ், வெட்டுவான்கேணி

தமிழ் ஓவியா said...


பொறுக்குமா இனமலருக்கு?

தி.க., ஆர்ப்பாட்டம்

தி.க., தலைவர் வீரமணி: சேலம் ரயில்வே கோட்டத்தை, கேரளாவுக்கு கொண்டு செல்ல கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கண்டித் தும், அதை தடுத்து நிறுத்த, தமிழக எம்.பி.,க்கள், கட்சி பேதம் பாராமல், பார்லிமென்டில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 9ம் தேதி சேலத்தில், தி.க., ஆர்ப்பாட்டம் நடத்தும்.

டவுட் தனபாலு: உங்க கோரிக்கை நல்ல கோரிக்கை தான்... ஆனா, மத்திய அரசை விழுந்து விழுந்து ஆதரிச்சிட்டு இருக்கிற உங்க, "அரசியல் ஆசான்' கருணாநிதியை, இந்த பிரச்னையில மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க சொல்றதை விட்டுட்டு, ஆர்ப்பாட் டம் எல்லாம் அவசியமான்னு தான், எனக்கு, "டவுட்!'
- தினமலர், 5.2.2013 பக். 8

கோரிக்கை நல்ல கோரிக்கை தானாம் - அதற்காக போராடக் கூடாதாம். திராவிடர் கழகத்திற்கு ஆசான் தந்தை பெரியார்தான்; தன்னை ஆசான் என்று கலைஞர் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார். தினமலருக்கே உரித் தான சில்மி(வி)ஷம் இது.

சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் உரிமைகளுக்காகத் தொடர்ந்து தன் வழியில் போராடிக் கொண்டுதானிருக்கிறது.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினை, கொலை குற்ற வாளியாக பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்குப் பிரச்சினை.

மகளிர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினை, பிராமணாள் பெயர் அழிப்பு! - இப்படி எத்தனையோ போராட்டங்களை தன் வழியில் திராவிடர் கழகம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது!

சேலம் ரயில்வே கோட்டப் பிரச்சினைக்காகவும் ஏற்கெனவே பலமுறை போராடித் தடுத்து நிறுத்தியிருக்கிறது திராவிடர் கழகம்.

இப்பொழுதென்ன தினமலரின் புதுக்கரடி?

தமிழ்நாட்டு உரிமைக்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் தினமலர் - இனமலர் கூட்டத் திற்குப் பொறுக்காதே! நல்ல கோரிக்கை என்று எழுதும் தினமலர் இதற்காக ஏதாவது நாலு வார்த்தை எழுதியதுண்டா? தமிழன் வீட்டில் சாவு விழுந்தால் விசாரிக்கக் கூடப் போகாத பார்ப்பனக் குடும்பம் கருமாதிக்கு மட்டும் கரெக்டா போய் விடும் - தன் சுரண்டல் புரோகிதத் தொழிலுக்காக.

தமிழ்நாட்டின் உரிமை என்றால் குமட்டிக் கொண்டு வருகிறது - இந்தக் கும்பலுக்கு!5-2-2013

தமிழ் ஓவியா said...


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?


இனப்படுகொலையாளன் இந்தியாவுக்கு வருவதா?
கறுஞ்சட்டைத் தோழர்களே கழகக் கொடியுடன் திரள்வீர்! திரள்வீர்!!

அருமைக் கழகத் தோழர்களே!

தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டிக்கும் வகையில், டெசோவின் முடிவுப்படி வரும் 8.2.2013 வெள்ளி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கறுப்புடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் பங்கேற்கிறார். சென்னை மண்டலக் கழக வீரர்களே, வீராங்கனைகளே, கழகக் கொடியுடன் ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!!
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பொழைப்பா?


இனப்படுகொலையாளன் ராஜபக்சே இந்தியா வரு வதை எதிர்ப்பது - கறுப்புச் சட்டை - கொடி போராட் டம் நல்ல பொழைப்பாம். கார்ட்டூன் போடுகிறது கருமாதிப் பத்திரிகை.
பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்று ஒட்டாரம் பிடிக்கும் தமிழ்த் தேசிய வியாதிகளுக்கு இது சமர்ப்பணம்!

எங்கே பிணம் விழும் - கருமாதி, கருமாந்திரம் என்று சொல்லி பணம் பண்ணலாம் என்று பொழைப்பு நடத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலின் கருமாதிப் பத்திரிகை இப்படித்தான் பொழைப்பைப் பற்றி எழுதும்! 6-2-2013