Search This Blog

27.5.15

பார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது?-பெரியார்

மக்கள் மீது மடமையை ஏவி, ஏமாற்றிப் பிழைத்தது இனியும் செல்லாது!




அன்பர்களே, நான் ஆரியர் - திராவிடர் என்ற வேற்றுமைகளையும் அதன் காரணமாக நாட்டிலேயுள்ள மடமைகளையும் எடுத்துக் கூறினால் நம்மிலே மிகப் பெரியவர்கள் என்று கருதப்படும் சிலர் ஆரியராவது திராவிடராவது என்று அலட்சியம் செய்கின்றனர். நான் கூறுகிறேன் பார்ப்பனர் உயர்ந்த ஜாதி என்பதால்தானே அவர்கள் பாடுபடாமலேயே கஷ்டப்படாமலேயே சுகம் அனுபவிப்பதும், அதே சமயத்தில் பாடுபட்டும், கஷ்டப்பட்டும், வரி கொடுத்தும், சுருங்கக் கூறின் நாட்டின் வாழ்வுக்கு அஸ்திவாரமான காரியங்களைச் செய்து வரும் நாட்டுக்குரியவர்களாகிய நமது இனத்தவர்கள் அதாவது திராவிடர்கள் - சூத்திரர் என்ற காரணத்தால் இழிவு படுத்தப்பட்டு வருகிறோம். இதைத்தவிர பார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது? 
  
 
இவ்வித வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்று எங்களை விட வேறு யார் கவலைப்பட்டு வருகிறார்கள். அக்காலத்திலேயிருந்த ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, மகான்களோ, கவலைப்படாதிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, இக்காலத்திலும் அதற்கு யார் பாடுபடுகின்றனர்.
 
  
கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளர செய்தார்களா? 
 
 
 
சோஷலிஸ்டுகள் தானாகட்டும், உண்மையிலேயே, மக்கள் சமூதாயத்திலே சமதர்மம் நிலவ வேண்டுமானால் அதற்கானவற்றை செய்தார்களா? ஏதோ காங்கிரசின் பலம் சரியாதிருக்க அதற்கு முட்டுக் கொடுக்கும் வஸ்துக்கள் போலவே இந்நாட்டு சோஷலிசமும் இருந்து வருகிறதேயன்றி அதனின் உண்மைத் தத்துவம் வளர்க்கப்படுகிறதா? 
 
  
தீவிரவாதிகளெனப்படும் கம்யூனிஸ்டு - சோஷலிஸ்டுகளின் நிலையே இவ்வாறு இருக்கும்போது நாம் காங்கிரசாரைப் பற்றி கூறத் தேவையேயில்லை.
 
 
 
ஆனால், இவர்களுக்கெல்லாம் மக்களின் உண்மையான விடுதலைக்கு ஏற்ற மார்க்கங்கள் எவை எவை என்பது தெரியாததா? தெரிந்தும் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்றால் பொது மக்களிடத்திலே செல்வாக்கு இருக்காது. ஓட்டு வராது. அரசைக் கைப்பற்ற முடியாது என்று கருதியே பொது மக்களின் காதுக்கினிய வார்த்தைகளைக் கூறி அவர்களது கருத்தை அழிய வைக்கின்றனர்.
 
ஆனால் திராவிடர் இயக்கமானது கேவலம் பட்டம், பதவி, சட்டசபை வேலை, அதற்காக ஓட்டு ஆகியவைகளை லட்சியம் செய்யாமல் மனித சமூதாயத்திலே வளர்ந்துள்ள மடமையை ஒழிக்க சற்ற கடினமான மருந்து கொடுத்து வருகிறோம். நாங்கள் மக்களின் எதிர்ப்புக்கும், அதனால் ஏற்பட்ட பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியதால்தான் இன்றைய நிலையிலாவது மக்கள் ஓரளவுக்க அறிவு பெற்ற வருவதோடு, நான் எந்த கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினேனோ அது இன்று மக்கள் சமூதாயத்திலே வேறுன்றி விட்டது. 
  
 
அச் சக்தியை இனி, எவராலும் அசைக்க முடியாது; அழிக்கவும் முடியாது; அழிக்கவோ, அசைக்கவோ முற்படுபவர்கள் யாராவராயிருப்பினும், கடவுளாயிருந்தாலுங்கூட தாங்களாகவே தங்களுக்கு அழிவு தேடிக் கொண்டவர்களாவார்களென்பதை எடுத்தக்காட்ட விரும்புகிறேன்.
 
 
 
மடைமையை மக்கள் சமூதாயத்திலே பரப்பி ஏமாற்றிப் பிழைத்து வந்த கூட்டத்தினர் மீது அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள் - ஜாதி - மதம் - புராணம் - இதிகாசங்கள் மீது இன்று மக்களுக்கு அவ்வளவு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை பார்ப்பனீயத்தை ஆயுதமாகக் கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து விரைவில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
 
 
 
இனி எங்களை வகுப்பு வாதிகள், தேசத் துரோகிகள், கடவுள் துரோகிகள் என்று எவரும் கூற முடியாது ஏன்? 
 
 
இதுவரை, வகுப்பு வித்தியாசங்களைப் பிறவியின் பேரால் தனிப்பட்ட உரிமையை, ஜாதியின் பேரால் சலுகையை அடைந்துவந்த பார்ப்பனர்களே இந்நாட்டில் வகுப்புவாதிகளாயிருக்கின்றனர். வகுப்புவாதம் நம் நாட்டிலே தலைவிரித்தாடுவதற்குக் காரணமே பார்ப்பனர்கள்தானென்று நமது நிதி அமைச்சர் கனம் கோபால் ரெட்டியார் அவர்கள் சட்டசபையில் பார்ப்பன அம்மையார் ருக்குமணி லட்சுமதி அவர்கள் கேட்ட கேள்விக்கு விவரமாகப் பதிலளித்துள்ளதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
 
 
அவர் மட்டுமல்ல; மற்றொரு அமைச்சர் கனம் பக்தவச்சலம் கூட "இதுவரை பார்ப்பனர்கள் தங்கள் வகுப்பின் நலனுக்காக தனி உரிமையைப் பெற்று வாழ மிக சாமர்த்திமாக வகுப்புவாதத் தன்மையுடன் நடந்து கொண்டு அதே சமயத்தில் மற்றவர்களை வகுப்புவாதிகள் என்று கூறி வந்துள்ளனர்" என்று சில நாட்களுக்கு முன் சென்னை மவுண்ட்ரோட் சர்க்கார் மாளிகையிலே நடைபெற்ற பத்திரிகை செய்தியாளர்கள் மாநாட்டிலே கூறியிருக்கிறார். 
 
 
 
இவ்விதமாக காங்கிரஸ் மந்திரிகளும் பொதுவாக மக்களும், உணர ஆரம்பித்துவிட்டனர். யார் வகுப்புவாதிகளென்பதை. 
 
 
 
அதே போன்று கோயில் - மடங்கள் ஒழிய வேண்டுமென்று நான் கூறி வந்த போது என்னையும் எங்கள் இயக்கத்தாரையும் நாத்திகர்கள் என்று கூறி நாட்டிலே எங்களுக்குப் பொல்லாப்பை உண்டாக்கியப் பார்ப்பனர்களே! நீங்கள் இனி அத்துறையிலும் மக்களை ஏமாற்ற முடியாது. சர்க்காரே அச்சட்டத்தைக் கொண்டு வர முனைந்துவிட்டனர். முன்னாள் பிரதமர் ஓமத்தூரார் ஆட்சியின் கடைசி கட்டத்தில் கொண்டு வரப்பட்ட கோயில் - மட சொத்து பாதுகாப்பு மசோதாவின் போது பார்ப்பனர்களும் அவர்களின் கையாட்களான இரண்டொரு திராவிட விபீஷணர்களும் கொடுத்தத் தொல்லை எவ்வளவு? இதை நாட்டினர் அறிந்ததுதானே! எனினும் மக்களிடத்தில் அம்மசோதாவுக்கு பேராதரவு இருந்து வருகிறதென்பதைப் பார்க்கும்போது எங்களைக் கோயில் - மட எதிரிகள் என்று கூறி எங்களது கொள்கைக்கு அழிவுதேட எவராலும் முடியுமா? 
 
 
 
எனவே, நான் கூறிவந்த கொள்கைகள் இனி ஒவ்வொன்றாக நடைபெற்றாக வேண்டிய கால நிலையை நாடும் மக்களும் அடைந்து விட்டனர். காலமாறுதல் மனப் புரட்சி என்னும் வேகத்திலே பழமையெனும் பித்தலாட்டங்கள் இனி எதிர்த்து நிற்க முடியாது என எச்சரிக்கிறேன்.
 
 
 
----------------------------------------தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 13-04-1949 அன்று ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 19-04-1949

6 comments:

தமிழ் ஓவியா said...

மாணவர் அமைப்புக்குத் தடை விவகாரம்: சென்னை அய்.அய்.டி.க்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை

புதுடில்லி, ஜூன் 1_ "அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம்' அமைப் புக்கு தடை விதிக்கப்பட் டுள்ள விவகாரத்தில், சென்னை அய்.அய்.டி. யிடம் விளக்கம் கேட்டு தாழ்த்தப்பட்டோர் களுக்கான தேசிய ஆணை யம் (என்.சி.எஸ்.சி.) அறி விக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் அந்த ஆணை யத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யுமான பி.எல். புனியா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கல்லூரி வளாகங் களில் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் தேவை. அதற்கு தடை விதிப்பது, அவர்களின் குரல் வளையை நசுக் குவது போன்றதாகும்.

இது தவறான நடவடிக்கை ஆகும். இந்த விவகா ரத்தை நானே கவனத்தில் எடுத்துக் கொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு சென்னை அய். அய்.டி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அந்த விளக்கத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப் படும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. மத்தியில் பிரதமர் நரேந் திர மோடி தலைமையி லான அரசு அமைந்த பிறகு, தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான சம்ப வங்கள் அதிகரித்து விட் டன. ராஜஸ்தான் மாநி லம், நாகோர் மாவட் டத்தில் 4 தாழ்த்தப் பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுதொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சம்பவ இடத்துக்கு 3 நாள்களுக்குப் பிறகு நான் சென்றபோதுதான், மாவட்ட துணை ஆட்சியர் உடன் வந்தார். இதிலிருந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு அரசு நிர்வாகத்தில் இருப் போர் முக்கியம் கொடுக்க வில்லை என்பது தெரிய வருகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் புனியா. பிரதமர் மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளை யும் விமர்சித்ததாக, சென்னை அய்.அய்.டி.யைச் சேர்ந்த அம்பேத்கர் - பெரியார் மாணவர் வட்டம் அமைப்பின் அங்கீகாரத்தை சென்னை அய்.அய்.டி. ரத்து செய்தது.



Read more: http://www.viduthalai.in/e-paper/102499.html#ixzz3bpa6zPKk

தமிழ் ஓவியா said...

பேசும் பேச்சு - எப்படி? - யோசிப்போமா



வாழ்வில் நாம் அனைவரும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளும், நடைமுறைகளும் ஏராளம்! ஏராளம்!!
வாசிப்பது
படிப்பது,
கற்பது
அறிவது
இவை எல்லாம் ஒன்றல்ல. வெவ்வேறான பல்வேறு படிநிலைகள் என்பதை நாம் அசை போட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.

அறிதல் வேறு, புரிதல் வேறு, தெளிதல் வேறு - இல்லையா?
நாம் அறிந்ததையெல்லாம் புரிந்து கொண்டோமா?
புரிந்து கொண்டதையெல்லாம் பற்றி தெளிவடைந்துள்ளோமா?
தெளிவடைந்த பிறகும்கூட அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகத் துணிதல் நம்மில்

ஏன் பலருக்கு வருவதில்லை?
வாழ்க்கைக்குக் கேளிக்கை அவசியம்தான் ஆனால் கேளிக்கையே வாழ்க்கை ஆகலாமா?
உணவுக்கு உப்பு தேவைதான், ஆனால் உப்பே உணவாக முடியுமா?
பேசுவது என்பது விரும்பத்தக்க தேவைகளில் ஒன்றுதான் ஆனால் வெறும் பேச்சு மட்டுமே

பயன் தந்துவிட முடியுமா?
பேசுவதுகூட உரையாடலின் முக்கிய கூறுதான்; அப்பேச்சு பொருள் பொதிந்த தாகவும், செயலுக்கான முன்னோடி யாகவும், அமைந்தால்தான் பேச்சுக்குப் பயன்; பேசியவருக்குப் பெருமை!

திருவள்ளுவர்தம் திருக்குறளில் பயன் இல சொல்லாமை என்று ஒரு அதிகாரத்தினையே பத்து குறள்களில் எழுதியுள்ளார்களே! அறத்துப்பாலில் 20ஆம் அதிகாரமாக இது இடம் பெற்றுள்ளது!

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல் (குறள் 200)

பொருள்: சொற்கள் பலவற்றுள்ளும் பயன் அளிக்கக் கூடிய சொற்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்; சொற்களில் பலன் ஏதும் அளிக்காத சொற்களை ஒரு போதும் சொல்லவே கூடாது.

அதற்கு முந்தைய குறளில் வள்ளுவர் - குற்றமற்ற அறிவினை ஒருவர் உடையவரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அவரது பேச்சை வைத்து எடை போட்டு

ஆய்ந்து அறியுங்கள் என்று நமக்கு அறிவு றுத்துகிறார்!
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (குறள் 199)
இதன்

பொருள்: மயக்கத்திற்கு இடமில்லாத குற்றமற்ற அறிவினை உடையவர்கள், மறந்தும் பொருளில்லாத பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டுமா?
நாம் பேசும்போது - கேட்பவர்கள் விரும்பிக் கேட்குமாறு அப்பேச்சு அமைதல் வேண்டும். என்ன இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே எப்போது இவரிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று சலிப்பும், சங்கடமும் கொள்ளுமாறு செய்யலாமா?
இதை விட நமக்குத் தெரியாது, நாம் உருவாக்கிய அவமானம் வேறு உண்டா?
சள சள வென்றோ, தொண தொண வென்றோ பேசுவதுடன் நான், நான் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறுவது நம்மை நாமே மற்றவர் முன் மதிப்பிழக்கத் தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்! - மறவாதீர்!

அது மட்டுமா?
நாம் பேசும் பேச்சு கருத்தாழம் மிகுந்ததாக குறிப்பாக உரையாடலில் அமைதல் மட்டும் முக்கியம் அல்ல.
எக்காரணத்தைக் கொண்டும் நம் குரலை பிறர் முன் உயர்த்திப் பேசாமல் மென்மையாகக் கூறப் பழகிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது!
(எனக்கே இந்த குறைபாடு பற்பல நேரங்களில் உண்டு; காரணம் ஆணவம் அல்ல. நாம் கூறும் கருத்து 100-க்கு 100 ஆதாரபூர்வமானது என்ற உறுதியால் தான். என்றாலும் விரும்பத்தக்கது அல்ல. நாம் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று பல நேரங்களில் உணர்ந்தது உண்டு. பெரும்பாலும் இதனைக் கடைப் பிடிக்க நான் இடைவிடாத முயற் சியை இன்னமும் செய்து கொண்டு தான் வருகிறேன்).

Asserting என்று உறுதிபட அழுத்திச் சொல்லுதலைக்கூட மென் குரலில் கூறலாமே!
ஜப்பானியர்களிடம் நாம் மரியா தையை எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே அளவுக்கு அவர்கள் எவரும் உரக்கக் கூடப் பேச மாட்டார்கள். மென்மையாகத் தான் மெல்லிய குரலில் பேசுவர். அங்கு மட்டுமல்ல மேலை நாட்டவர் பலரும் இப்படித்தான்.
ஓங்கிய குரலில் பதில் அளிக்கக் கூட மாட்டார்கள். தாய்லாந்து மக்கள் கூட மென் குரலில்தான் பேசுவர்.

ஆனால், நாம் தான் பட்டாசுப் பேச்சு வெடித்து ஊர் அறிய, உலகறிய முழங்கிடும் பேச்சுப் பண் பாடு என்ற பொருள் குற்றவாளிகள் ஆவோம்!
எப்போது மாறுகிறோமோ, அப் போது தான் மனிதம் வளரும், உயரும்!
சிந்திப்போமா?



Read more: http://www.viduthalai.in/page-2/%20102506.html#ixzz3bpalBzNp

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)



Read more: http://www.viduthalai.in/page-2/102504.html#ixzz3bpbBJDBu

தமிழ் ஓவியா said...

புதினாக் கீரையின் மருத்துவ குணங்கள்

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.



வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது. அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறு கின்றனர். தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறும். மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

மருத்துவக் குணங்கள்: கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும்கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவைகளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போது பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறுள்ளவர்கள் புதினாத் துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.



Read more: http://www.viduthalai.in/page-7/102523.html#ixzz3bpbpYRvI

தமிழ் ஓவியா said...

கை, கால் குடைச்சல்!

கை, கால் குடைச்சல் என்றாலே வயதானவர்களின் உபாதை என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர் களுக்கும் இப்பிரச்சினை வரும் என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் கண்ணன். கை, கால் குடைச் சலுக்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறுகிறார் அவர்.



ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் வரலாம். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை, கால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாதல், வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் போன்றவையும் காரணமாகலாம்.
இந்த உபாதை 30 வயதுக்கு உட்பட்டவருக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே வேளையில், சுமை தூக்கும் தொழிலாளிகள், தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வரலாம். பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள்.

இது பரம்பரையாகத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. கை, கால்களில் ஒருவருக்கு குடைச்சல் உள்ளது என்பதை உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்... படிப்படியாக முழங்கால் வரை அதிகமாகும். இரவு நேரங்களில் தூங்கும் போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும். இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு இடுப்பு வலிமற்றும் தலைவலி இருக்கும். சிலருக்கு தூக்கமின்மை வரலாம். அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல் போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும், மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்தலாம். வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்கள் செய்வதும் அவசியம். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசி உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது நன்மை தரும். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், தாங்களாகவே மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை மருத்துவர் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். இதனால் தற்காலிக நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியம். பிரச்னைக்கான தக்க காரணத்தை ஆராய்ந்து அறிந்து நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொண்டால் இந்த குறைபாட்டை சரி செய்யலாம்.





Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpc0Pk33

தமிழ் ஓவியா said...

மருத்துவ ஆலோசனை

சூவிங்கம் மெல்வதால் உணவு சாப்பிடுவது குறைந்து உடல் எடை குறைய வாய்ப்புண்டா?

அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சூவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் சாப்பிடும் வேளையில் அதிக உணவு உட்கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. சூவிங்கம் மெல்லுபவர்கள் இயற்கையான பழங் களைவிட, சத்தற்ற உணவையே அதிகம் விரும்புகின்றனர்.

பூண்டு சாப்பிடுவதால் தீய விளைவுகள் உண்டா?

பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் ரத்தத்தை இளக்கும் மாத்திரையை உட் கொள்பவராக இருந்தால், பூண்டைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். பூண்டுக்கு ரத்தத்தை இளக்கும் தன்மை உண்டு.

உடல் பருமனுக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பு?

டைப் 2 வகை நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நேரடியாக உடல் பருமனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவில் நிகழும் அய்ந்து மரணங் களில் ஒன்று உடல் பருமனால் ஏற்படுகிறது.



Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpcQJU8S