Search This Blog

28.5.15

தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்-பெரியார்



என் மீதோ, எனது இயக்கத்தைப் பற்றியோ எந்தவிதக் குறையும் கண்டுபிடிக்க முடியாததன் காரணமாக அவர்களின் வண்டவாளங்கள் வெளியாகின்றதே என்ற ஆத்திரத்தினால் ஏதேதோ பொய்ப் பித்தலாட்டமான பிரச்சாரங்களை எல்லாம் கிளப்பி விட்டு இருக்கின்றனர். 


 எல்லா ஜாதி மக்களிலும் சில புல்லுருவிகள் 4  அணா கொடுத்தால் சொன்னபடி எல்லாம் ஆடும் எச்சக்கலை ஆட்கள் இருப்பது போல ஆதித்திராவிடர்களிலேயே சில எச்சக்கலை ஆசாமிகளைப் பிடித்து தவறாக நோட்டீஸ்கள் போட்டு உள்ளார்கள். இது கண்டு அந்த ஆதித்திராவிட மக்களும் நம்பி விட மாட்டார்கள். இப்படிப்பட்ட பித்தலாட்டப் பிரச்சாரங்களை எல்லாம் கண்டு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கழகத் தோழர்கள் எல்லோரும் கூறினார்களே, அதுவே போதும். 


திராவிடர் கழகமானது இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆற்றிய தொண்டு இன்றைய இளைஞர்களுக்கு என்ன தெரியப் போகின்றது? 50-ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை எவ்வாறு இருந்தது? இன்றைய நிலை எப்படி உயர்ந்து உள்ளது? என்று ஒப்பிட்டுப் பார்க்கும் வயதானவர்களுக்குத்தான் தெரியும். இன்றைய இளைஞர்கள் - இன்றைய நிலை போலத்தான் அன்றைக்கும் இருந்ததாக எண்ணிக் கொண்டு இருப்பார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது வண்ணார், நாவிதர் வீட்டுப் பிள்ளைகள் கூட, தனியாகத் தாழ்வாரத்தில் அமர்ந்துதான் படிக்க வேண்டும். அவர்களுக்கே இப்படி என்றால் ஆதித்திராவிடர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டும்? 


 வீதியில் நடக்க முடியாதவர்களாக, நல்ல உடை உடுத்தவோ, உணவு உண்ணவோ முடியாதவர்களாக கல்வி, உத்தியோகம் பெறக் கூடாதவர்களாக இருந்த நிலையானது இன்றைக்கு மாறி அவர்களும் மனிதத் தன்மையுடன் நடத்தும்படியான நிலை யாரால் ஏற்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள்.

 

எனவே, ஆதித்திராவிடர் மக்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு எல்லாம் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

 தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

               -----------------------தந்தைபெரியார் -”விடுதலை” 18-12-1961

5 comments:

தமிழ் ஓவியா said...

பேசும் பேச்சு - எப்படி? - யோசிப்போமா



வாழ்வில் நாம் அனைவரும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளும், நடைமுறைகளும் ஏராளம்! ஏராளம்!!
வாசிப்பது
படிப்பது,
கற்பது
அறிவது
இவை எல்லாம் ஒன்றல்ல. வெவ்வேறான பல்வேறு படிநிலைகள் என்பதை நாம் அசை போட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.

அறிதல் வேறு, புரிதல் வேறு, தெளிதல் வேறு - இல்லையா?
நாம் அறிந்ததையெல்லாம் புரிந்து கொண்டோமா?
புரிந்து கொண்டதையெல்லாம் பற்றி தெளிவடைந்துள்ளோமா?
தெளிவடைந்த பிறகும்கூட அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகத் துணிதல் நம்மில்

ஏன் பலருக்கு வருவதில்லை?
வாழ்க்கைக்குக் கேளிக்கை அவசியம்தான் ஆனால் கேளிக்கையே வாழ்க்கை ஆகலாமா?
உணவுக்கு உப்பு தேவைதான், ஆனால் உப்பே உணவாக முடியுமா?
பேசுவது என்பது விரும்பத்தக்க தேவைகளில் ஒன்றுதான் ஆனால் வெறும் பேச்சு மட்டுமே

பயன் தந்துவிட முடியுமா?
பேசுவதுகூட உரையாடலின் முக்கிய கூறுதான்; அப்பேச்சு பொருள் பொதிந்த தாகவும், செயலுக்கான முன்னோடி யாகவும், அமைந்தால்தான் பேச்சுக்குப் பயன்; பேசியவருக்குப் பெருமை!

திருவள்ளுவர்தம் திருக்குறளில் பயன் இல சொல்லாமை என்று ஒரு அதிகாரத்தினையே பத்து குறள்களில் எழுதியுள்ளார்களே! அறத்துப்பாலில் 20ஆம் அதிகாரமாக இது இடம் பெற்றுள்ளது!

சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல் (குறள் 200)

பொருள்: சொற்கள் பலவற்றுள்ளும் பயன் அளிக்கக் கூடிய சொற்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்; சொற்களில் பலன் ஏதும் அளிக்காத சொற்களை ஒரு போதும் சொல்லவே கூடாது.

அதற்கு முந்தைய குறளில் வள்ளுவர் - குற்றமற்ற அறிவினை ஒருவர் உடையவரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அவரது பேச்சை வைத்து எடை போட்டு

ஆய்ந்து அறியுங்கள் என்று நமக்கு அறிவு றுத்துகிறார்!
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (குறள் 199)
இதன்

பொருள்: மயக்கத்திற்கு இடமில்லாத குற்றமற்ற அறிவினை உடையவர்கள், மறந்தும் பொருளில்லாத பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டுமா?
நாம் பேசும்போது - கேட்பவர்கள் விரும்பிக் கேட்குமாறு அப்பேச்சு அமைதல் வேண்டும். என்ன இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே எப்போது இவரிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று சலிப்பும், சங்கடமும் கொள்ளுமாறு செய்யலாமா?
இதை விட நமக்குத் தெரியாது, நாம் உருவாக்கிய அவமானம் வேறு உண்டா?
சள சள வென்றோ, தொண தொண வென்றோ பேசுவதுடன் நான், நான் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறுவது நம்மை நாமே மற்றவர் முன் மதிப்பிழக்கத் தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்! - மறவாதீர்!

அது மட்டுமா?
நாம் பேசும் பேச்சு கருத்தாழம் மிகுந்ததாக குறிப்பாக உரையாடலில் அமைதல் மட்டும் முக்கியம் அல்ல.
எக்காரணத்தைக் கொண்டும் நம் குரலை பிறர் முன் உயர்த்திப் பேசாமல் மென்மையாகக் கூறப் பழகிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது!
(எனக்கே இந்த குறைபாடு பற்பல நேரங்களில் உண்டு; காரணம் ஆணவம் அல்ல. நாம் கூறும் கருத்து 100-க்கு 100 ஆதாரபூர்வமானது என்ற உறுதியால் தான். என்றாலும் விரும்பத்தக்கது அல்ல. நாம் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று பல நேரங்களில் உணர்ந்தது உண்டு. பெரும்பாலும் இதனைக் கடைப் பிடிக்க நான் இடைவிடாத முயற் சியை இன்னமும் செய்து கொண்டு தான் வருகிறேன்).

Asserting என்று உறுதிபட அழுத்திச் சொல்லுதலைக்கூட மென் குரலில் கூறலாமே!
ஜப்பானியர்களிடம் நாம் மரியா தையை எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே அளவுக்கு அவர்கள் எவரும் உரக்கக் கூடப் பேச மாட்டார்கள். மென்மையாகத் தான் மெல்லிய குரலில் பேசுவர். அங்கு மட்டுமல்ல மேலை நாட்டவர் பலரும் இப்படித்தான்.
ஓங்கிய குரலில் பதில் அளிக்கக் கூட மாட்டார்கள். தாய்லாந்து மக்கள் கூட மென் குரலில்தான் பேசுவர்.

ஆனால், நாம் தான் பட்டாசுப் பேச்சு வெடித்து ஊர் அறிய, உலகறிய முழங்கிடும் பேச்சுப் பண் பாடு என்ற பொருள் குற்றவாளிகள் ஆவோம்!
எப்போது மாறுகிறோமோ, அப் போது தான் மனிதம் வளரும், உயரும்!
சிந்திப்போமா?



Read more: http://www.viduthalai.in/page-2/%20102506.html#ixzz3bpalBzNp

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)



Read more: http://www.viduthalai.in/page-2/102504.html#ixzz3bpbBJDBu

தமிழ் ஓவியா said...

கை, கால் குடைச்சல்!

கை, கால் குடைச்சல் என்றாலே வயதானவர்களின் உபாதை என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு பல மணிநேரம் வேலை செய்பவர் களுக்கும் இப்பிரச்சினை வரும் என்கிறார் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் கண்ணன். கை, கால் குடைச் சலுக்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறுகிறார் அவர்.



ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் வரலாம். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, கை, கால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாதல், வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் போன்றவையும் காரணமாகலாம்.
இந்த உபாதை 30 வயதுக்கு உட்பட்டவருக்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே வேளையில், சுமை தூக்கும் தொழிலாளிகள், தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வரலாம். பெண்களில் 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக வருகிறது. இதற்கு மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு போன்றவை காரணங்கள்.

இது பரம்பரையாகத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு. கை, கால்களில் ஒருவருக்கு குடைச்சல் உள்ளது என்பதை உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்... படிப்படியாக முழங்கால் வரை அதிகமாகும். இரவு நேரங்களில் தூங்கும் போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற மாதிரி இருக்கும். குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்துப் போகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும். இந்த அறிகுறி உள்ள பெண்களுக்கு இடுப்பு வலிமற்றும் தலைவலி இருக்கும். சிலருக்கு தூக்கமின்மை வரலாம். அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, முடி உதிர்தல் போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும், மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்தலாம். வாரத்தில் 5 நாட்கள் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்கள் செய்வதும் அவசியம். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசி உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவது நன்மை தரும். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக உப்பு கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், தாங்களாகவே மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை மருத்துவர் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தலாம். இதனால் தற்காலிக நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியம். பிரச்னைக்கான தக்க காரணத்தை ஆராய்ந்து அறிந்து நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை மேற்கொண்டால் இந்த குறைபாட்டை சரி செய்யலாம்.





Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpc0Pk33

தமிழ் ஓவியா said...

வாத பித்த நோய்களை குணப்படுத்தும் தூதுவளை

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.



தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியை யும் அதிகரிக்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவை பலப்படுத்தும். தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும். தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் ஆகியவை நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும். தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.



Read more: http://www.viduthalai.in/page-7/102527.html#ixzz3bpcArCCi

தமிழ் ஓவியா said...

மருத்துவ ஆலோசனை

சூவிங்கம் மெல்வதால் உணவு சாப்பிடுவது குறைந்து உடல் எடை குறைய வாய்ப்புண்டா?

அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சூவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் சாப்பிடும் வேளையில் அதிக உணவு உட்கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. சூவிங்கம் மெல்லுபவர்கள் இயற்கையான பழங் களைவிட, சத்தற்ற உணவையே அதிகம் விரும்புகின்றனர்.

பூண்டு சாப்பிடுவதால் தீய விளைவுகள் உண்டா?

பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் ரத்தத்தை இளக்கும் மாத்திரையை உட் கொள்பவராக இருந்தால், பூண்டைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். பூண்டுக்கு ரத்தத்தை இளக்கும் தன்மை உண்டு.

உடல் பருமனுக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பு?

டைப் 2 வகை நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆகியவை நேரடியாக உடல் பருமனுடன் தொடர்புடையவை. அமெரிக்காவில் நிகழும் அய்ந்து மரணங் களில் ஒன்று உடல் பருமனால் ஏற்படுகிறது.



Read more: http://www.viduthalai.in/page-7/102525.html#ixzz3bpcQJU8S