Search This Blog

8.10.13

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் - பெரியார்

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும்
புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?


தோழர்களே!

இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்.

அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.

உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

மற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும். ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும். இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப் படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்.

நாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.

ஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.

திருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது. அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் முன்பு சமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு சௌகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம். எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

இத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்?

புரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா? அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள் பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.

மற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே ஒப்பந்தத்தில் மிளிரும்.

ஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா? அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் "திருமணம்" இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும்? அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு? ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

மற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்கு ஆக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது. குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.

இன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.

------------------------------------------------------------- 06.12.1936 ஆம் நாள் திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர். சுப்பிரமணியம் சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும்  தந்தை பெரியார்   தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு.  ----”குடி அரசு”  13.12.1936

41 comments:

தமிழ் ஓவியா said...


மோடி ஆளும் ஆட்சியின் பரிதாபம் குஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவு மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தகவல்


ஆமதாபாத், அக்.8- குஜராத் மாநிலத்தில், மூன்றில் ஒரு குழந்தை, எடை குறைவாக பிறப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.

சி.ஏ.ஜி., சார்பில், குஜராத் சட்டசபை யில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கை: குழந்தைகள், ஊட்டச் சத்து குறைவாக இருப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. குஜராத்திலும், இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஆனாலும், குஜராத்திலும், 63 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை.

குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, 75 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தேவை. ஆனால், 50 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தான் செயல்படுகின்றன. குஜராத்தில், மூன்று குழந்தைகள் பிறந்தால், அதில் ஒரு குழந்தை, எடை குறைவாகப் பிறக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், சரியாகச் செயல்படாதது தான், இதற்கு காரணம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட் டுடன் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இதன்மூலம் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளது.

மோடியின் மாதிரி இப்போது வெளிப் படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காந்தி நகருக்கு மிக அருகிலுள்ள அகமதாபாத் நகரிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கட்டடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 அமெரிக்கர்கள் - ஒரு ஜெர்மானியர் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 8- அறிவி யல், இலக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில், மருத் துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகை யில், இந்த ஆண்டின் மருத்துவத் துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித உடலில் உள்ள செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மனித உடலில் உள்ள குறிப்பிட்ட செல்கள், மனித உடலுக்குத் தேவையான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த திரவம், உடலின் எந்த பாகத்திற்கு தேவைப்படும் என்ற தகவல் அந்த செல்லுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சரியான இடத்திற்கு, சரியான நேரத்திற்கு அந்த திரவம் அனுப்பப்படுகிறது.

இந்த துல்லியமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அமைப் பினை பேராசிரியர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் தாமஸ் சுடாப் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின்மூலம் கண் டறிந்து வெளியிட்டுள்ளனர். நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் ஜேம்ஸ் ராத்மேன், யாலே பல்கலைக்கழகத்திலும், ஷேக்மேன் கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும், சுடோப், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத் திலும் பேராசிரியர்களாக பணி யாற்றி வருகின்றனர்.

இயற்பியல், வேதியியல், இலக் கியம், அமைதி மற்றும் பொருளா தாரத்துக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும், அடுத்த வாரத் திலும் அறிவிக்கப்படுகின்றன. ஒவ் வொரு பரிசும் 8 மில்லியன் ஸ்வீடன் கரோனா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.7 கோடி) மதிப்புடையதாகும்.

தமிழ் ஓவியா said...

சங்கரராமன் படுகொலை மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு உண்டு
கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகன் சாட்சியம்

சென்னை, அக். 8- எனது தந்தையார் சங்கர ராமன் கொலை செய்யப் பட்டதிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக் கப்பட்டதிலும் காஞ்சி புரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வ திக்குத் தொடர்பு உண்டு என்று படுகொலை செய் யப்பட்ட சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெளி வாக சாட்சி சொன்னார்.

ஜெயேந்திரர் ஆள் வைத்து தாக்கினார் என்று ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரராமன் மகன் சாட்சியம் அளித்தார்.

2002 செப்டம்பர் 20ஆம் தேதி மந்தை வெளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவ ரது மனைவி, வேலைக் காரர் ஆகியோர் தாக் கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், லட்சுமணன் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் தனர். இந்த வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது.

ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உள் ளிட்ட 17 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று (7.10.2013) 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. சங்கர ராமனின் மகன் ஆனந்த் சர்மா ஆஜராகி சாட்சி அளித்தார். அவ ரிடம் அரசு சிறப்பு வழக் குரைஞர் என். விஜயராஜ் விசாரணை நடத்தினார். ஆனந்த் சர்மா அளித்த சாட்சியம் வருமாறு:

எனது தந்தை சங்கர ராமன் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்து வந்தார். இதனால் இரு வருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், எனது தந்தைக்கும், ஜெயேந்திர ருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச் சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண் டித்து வந்தார். இதை யடுத்து, 2002இல் நசரத் பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர் வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் ஆகி யோரை வரச்சொல்லி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற் படவில்லை.

இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதி னார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப் பினார். நான்தான் அந்த அஞ்சல்களை அனுப் புவேன். அந்த கடிதங் களை ரிசர்வ் வங்கி வைத்தியநாதன், ராதா கிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப் பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத் தியநாதன் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பப் பட்டன.

இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ் ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ் ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்து தாக்கியுள் ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ் ணன் எழுதியதாக தவ றாக புரிந்துகொண்டு அவரை தாக்கியுள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடி தம் எழுத வேண்டாம் என்று எனது தந்தை யிடம் கூறினோம். அத னால் 6 மாதங்கள் கடி தம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் பட்டினப் பாக்கம் காவல் நிலை யத்தில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்து தாக்கியுள்ளனர்.

எனக் கும் எனது குடும்பத் தினருக்கும் ஆபத்து வந் தால் அதற்கு ஜெயேந் திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவல கத்தில் எனது தந்தையை கொலை செய்தனர். காவல்துறையினர் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரி வித்தேன்.இவ்வாறு சாட்சியம் அளித்தார்.

விசாரணை முடிந்தவு டன், சாட்சி ஆனந்த் சர்மாவிடம் வேறொரு நாள் குறுக்கு விசாரணை நடத்துமாறு நீதிபதி யிடம் ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வெங்கட்ராமன் கோரி னார். அதற்கு அரசு சிறப்பு வழக்குரைஞர் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், காலதாமதம் செய்தால் சாட்சியை மிரட்டு வதற்கு வாய்ப்பு ஏற் படும். முடிந்தால் நாளை குறுக்குவிசாரணை நடத்தட்டும் என்றார்.

ஆனால், ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே சாட்சியம் அளித்த ராதாகிருஷ் ணனிடம் குறுக்கு விசா ரணை நடத்தியபிறகு தான் ஆனந்த் சர்மா விடம் குறுக்கு விசா ரணை நடத்துவோம் என்று கூறி ஒரு மனு வைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, விசா ரணையை நீதிபதி வரும் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அன்று ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.

தமிழ் ஓவியா said...


அக்டோபர் எழுச்சி


உலகில் அக்டோபர் புரட்சி பற்றிப் பேசுகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் இந்த அக்டோபர் மாதம் பல முக்கிய நிகழ்வுகளின் சங்கமமாக அமைகிறது.

செப்டம்பரின் இறுதிப் பகுதி அதற்கான தொடக்கத்தைக் கொடுத்து விட்டது என்று சொல்லலாம்; செப்டம்பர் 28இல் விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணியின் மண்டல மாநாடும் அதனையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலும் பெரிய அலைகளை நாட்டில் எழுப்பி விட்டன.

திராவிடர் கழகத் தலைவர் மீது தொடுக்கப்பட்ட அந்தத் தாக்குதல் தனி நபர் மீதான ஒன்றல்ல - ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு மற்றும் பிற்போக்குச் சக்தி களை நோக்கிய எதிர்ப்பு என்கிற வகையில் கட்சி களைக் கடந்து பேரலையைத் தட்டி எழுப்பி விட்டது.

இவற்றின் குறியீடாக இருக்கக் கூடிய திராவிடர் கழகம், அதன் தலைவர் மீதான தாக்குதலை முற்போக்குச் சக்திகள் தங்களுக்கான ஒன்றாகக் கருதி எடுத்துக் கொண்டது - நல்லதோர் அறிகுறி யாகும். தமிழ்நாட்டு மக்கள் அப்படி ஒன்றும் கெட்டுப் போகவில்லை; தந்தை பெரியார் விதைத்த வித்து, வீறு கொண்ட எழுச்சியாக - சில நேரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பச்சையான அரசியல் நோக்கு என்ற சுயநலச் சிறையில் சிக்கிக் கொண்ட ஒரு சிறு எண்ணிக்கை கொண்டவர்களைத் தவிர, மற்றபடி பொதுவாகத் தமிழ் மண்ணில் முற்போக்குச் சிந்தனை வீறு கொண்டு இருப்பதை இந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்திக் காட்டி விட்டன.

குறிப்பாக ஜாதி அமைப்புகள் ஒன்றுகூடி ஏதோ பெரிய புரட்சி நடத்தப் போவதாக தத்தம் முதுகுகளில் தம்பட்டங்களைக் கட்டிக் கொண்டு டாம் டாம் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் நோக்கம் எல்லாம் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று நாக்கில் எச்சில் ஊறிக் கிடக்கும் சமாச்சாரம் தான்.

அற்பக் கணக்கில்கூட ஜாதிக் கூட்டங்கள் வெற்றி பெற முடியாது தமிழ்நாட்டில் என்பது - இதற்கு முன்பும் எத்தனையோ முறை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் பாடம் புகட்டி இருந்தும், இதுவரை புத்திக் கொள் முதல் பெறவில்லை என்பது பரிதாபமே!

இன்னும் - சிலருக்கு மதவாத சக்திகளோடு ஆலிங்கனம்! அவர்கள் பெரியார், அண்ணா பெயரைக் கூட உச்சரிப்பார்கள். ஏன் சில நேரங்களில் பகுத்தறிவு கூடப் பேசுவார்கள்; மேலும் மதச் சார்பின்மை பற்றியும் ஆவேசமாக பேசுவார்கள். இவர்கள் அத்தனைப் பேர்களும் முகத்திரை கிழிந்து பரிதாபகரமான பள்ளத்தாக்கில் விழுந்து எலும்புகளை இழந்து விடப் போகிறார்கள்.

தேர்தலுக்குமுன் ஒரு கூட்டு - தேர்தலுக்குப்பின் ஒரு கூட்டு என்ற முதுகுக்குப் பின்னால் முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். அதில்கூட அறிவு நாணயம் இல்லையே!

என்னதான் மோடிகளை முன்னிறுத்தினாலும், கோடி கோடியாகப் பண வெள்ளத்தை கரை உடைத்து ஓடச் செய்தாலும் பிள்ளை பிழைக்கப் போவதில்லை.

விருத்தாசலம் மாநாடு எடுத்துக் கொடுத்து விட்டது - அக்டோபர் 20 திண்டிவனம் கழகப் பொதுக் குழுவும் சங்கநாதம் செய்யும் - திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடும் - இந்தியாவுக்கே பல செய்திகளைக் கொடுக்கப் போகிறது.

பிஜேபிக்கான, குறிப்பாக அவர்களின் பிரதம ருக்கான வேட்பாளர் திரு. நரேந்திரமோடி, மதச் சார்பின்மை என்பதை வேறு ஒரு தடத்திற்கு இழுத் துச் சென்று, ஏதேதோ தமது மனதிற்குப்பட்டவற்றை எல்லாம் சம்பந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.

மதச் சார்பின்மையை மறு தலிக்கவும் முடிய வில்லை. அதே நேரத்தில் ஒப்புக் கொள்ளவும் மனம் இல்லை; ஆகவே மதச்சார்பின்மை என்பதற்கு தங்கள் இஷ்டத்திற்கு விளக்கம் சொல்ல முற்பட் டுள்ளனர்.

மதச் சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் இல்லை என்பதுதான். அதனை மறைத்து விட்ட நிலையில், தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கான அடிப்படைத் தகுதியை எப்படிப் பெற முடியும்?

இந்த அடிப்படையை இந்தியாவிலேயே சற்றும் பிசிறு இல்லாமல் செவ்விய முறையில் சொல்லிக் கொடுக்கும் பாடம் நமது இயக்கத்திற்குத்தான், நமது தலைவருக்குத் தான் உண்டு.

அக்டோபர் மாதம் நமது கழகத்திற்கு முக்கிய மானது. திண்டிவனம் பொதுக் குழுவில் அதற்கான வெளிச்சம் கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களைச் சந்திப் பார்கள் சந்திப்போம்!

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும்.

விடுதலை, 22.9.1972

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்களுக்கு அரணாவோம்!


தந்தை பெரியார் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்று வித்து அதன் மூலம் நம்மையெல்லாம் மனிதர்களுக்கு பாதுகாப்பாய் வாழ வழி வகுத்துள்ளார்கள்.

அவர்கள் போட்டுத் தந்த பாதை யில் எந்த வித சபலத்திற்கும் ஆளா காமல், ஆளாக்காமல் நம்மை வழி நடத்திச் செல்கிறார் நம் தமிழர் தலைவர் அவர்கள்.

தலைவர் அவர்களின் பெருமை களைப் பொறாதவர்கள் அவர்கள் மீது அபாண்டமாய் பழிகளை வீசி வருகின்றனர். அவற்றால் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல், அப்பழிகளே பூமராங் போல வீசியவர்களிடமே சென்றடைகின்றன.

மனைவிமீது கோபங் கொண்ட பார்ப்பனன், தன் மனைவியை பார்த்து, உனக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை உடுத்தி மூலை யில் உட்கார வைக்க வேண்டுமடி என்றானாம். கோபத்தின் உச்சியிலி ருந்த பார்ப்பனன் தான் செத்தால் தான் இது நடக்கும் என்பதைக் கூட உணர முடியவில்லை.

இது போலவே மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகன் தாலியறுக்க வேண்டும் என்றெண்ணுகிற மாமியார் களும் உண்டு. இப்படிப்பட்ட அவலச் சிற்றின்பக்காரார்கள் நாட்டில் நிறைய உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசு இயந்திரங்களிலும், ஆட்சியிலும் அமர்ந்துவிடுகிறார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு விருத்தாசலத்தில் நடந்த விரும்பத் தகாத நிகழ்ச்சியாகும்.

இக்கொடுஞ்செயலைச் செய்தவர்கள், தந்தை பெரியார் அவர்களின் பேராற்ற லால், மானமிகுவாளர்கள் முத்தையா முதலியார், கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட் சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்றோரின் முயற்சியால் கிடைத்த பட்டம் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, மேற்சொன்ன தலைவர்களைப் பின்பற்றி வரும் ஆசிரியர் அவர்களை பயணத்தின்போது தாக்கு கிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதற்குத் தூண்டு கோலாய் இருந்தவர்களை என்ன செய்வது? இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் என்று மன்னித்து விடுவதா? அல்லது அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதா?

சட்டத்திற்குட்பட்ட கத்தியை எப்போ தும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மைத் தாக்கவருபவனைக் கொல்லும் முயற்சியில் செத்துப் போனாலும் பரவா யில்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் வழியா? நீதிமன்றம் வழியா? மக்கள் மன்றம் வழியா? அல்லது மூன் றையும் கொண்ட வழியா என்பதை யோசிக்க வேண்டும்.

எதற்கும் ஆயத்தமாகவே திராவிடர் கழகத்தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்டளை கிடைத்தவுடன் அதனைச் செயல்படுத்த ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் என்பது இருபாலரையும் சேர்த்துத்தான்.

மம்சாபுரம் நிகழ்ச்சியை இலேசாக விட்டு விட்டதால் தான் இப்போதைய நிகழ்வு. இரண்டுமே அண்ணாவை கொடியிலும் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு, அவரது கொள்கைக்கு நாமம் போடுபவர்கள் ஆட்சியில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர், அவர் களது கொள்கைகளைத் தெரியாதவர் களை; தொ(கு)ண்டர்களாகக் கொண்ட கட்சி, தெரிந்தும் தெரியாதவர்கள் போலிருக்கும் குட்டித்தலைவர்களைக் கொண்ட கட்சி, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவ மானப்படுத்தும் மனோநிலை கொண்ட தலைமை இப்படிப்பட்ட அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழகம். ஏ தாழ்ந்த தமிழகமே என்ற அண்ணாவின் தலைப்புத்தான் நினைவிற்கு வருகிறது.

இக்கொடிய செயலில் ஈடுபட்ட குண்டர்கள், அவர்களுக்குத் துணை போன காவல்துறை மண்டையர்கள் அனைவரும் தண்டனைக்கு உட் பட்டே ஆகவேண்டும். நம் முயற்சி களால் பட்டம், பதவி கிடைத்த அலுவலர்கள் தம்மைத் தாக்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும்.

நம்முடைய பிரச்சாரங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும். சாதிச் சங்கங்கள் அரசியலில் ஈடுபடு வதைத் தடுத்தாக வேண்டும். சாதிச் சங்கங்கள் செயல்பட முடியாத அளவிற்கு நம் பிரச்சாரங்களை, முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்.

பாடுபடுவோம், வெற்றி பெறு வோம்; சாதிப்பகைவர்களைப் புறங் காண்போம்.

- ப. சங்கரநாராயணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், நாகர்கோயில்-2)

தமிழ் ஓவியா said...


இலங்கைக் கடற்படையின் வன்முறை இந்திய இறையாண்மைக்குச் சவால் பிரதமருக்குக் கலைஞர் கடிதம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக். 8- இலங்கைக் கடற் படையின் வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இக்கடிதத்தினை புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களி டம் கலைஞர் அவர்கள் சார்பில் கவி ஞர் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களை கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் நேற்று முன்தினம் மாலை புதுடில்லியில் சந்தித்து, இம்மனுவின் நகலை வழங்கி அக் கோரிக்கை களை வலியுறுத்தினார்.

(இலங்கையில் சல்மான் குர்ஷித் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்னதாக, அவரிடம் இம்மனுவின் நகலை வழங்கியது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.)

இப்பிரச்சினை குறித்து அக்டோபர் 6 அன்று கலைஞர் அவர்கள் கையெழுத்திட்டு பிரதமர் மன் மோகன் சிங் அவர்களிடம் கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்களால் அளிக்கப்படும் மனுவில் கூறப் பட்டுள்ளதாவது :-

தமிழக மீனவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண தங்களது உடனடி நடவடிக்கைக்காக தி.மு.க சார்பில் இந்த மனு தங்களிடம் சமர்ப்பிக்கப் படுகிறது. கடந்த 28.9.2013 அன்று, தமிழ்நாட்டின் ஆறு கடலோர மாவட்டங்களின் மீனவர் அமைப் புகள் சென்னையில் தி.மு.க.விடம் முறையிட்டனர்.

அலை அலையாய்த் துயரங்கள்!

அப்போது அவர்கள், மீனவர்கள் சந்தித்து வரும் அண்மைக்காலப் பிரச்சினைகளை விவரித்ததுடன், இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் படும் கொடுமைகளையும், அவர்களது உயிர்கள் எவ்வாறு பாதுகாப்பின்றியும் வாழ்க்கை நிச்சயமற்றதாகியும் ஆகிவிட்டதை விவரித்தனர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றி நிறுத்தமுடியாத துயரத்துக்கு ஆட் படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

தமிழக மீனவர் கள் மீது இடைவிடாத அச்சுறுத் தலும், கடுமையான சித்திரவதையும் கொடுமையும் கட்டவிழ்த்து விடப்படு கிறது. இதன் விளைவாக அவர்களது வாழ்க்கை மிகவும் துயரமாகிவிட்டது. தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் ``துயரங்கள் தனியாக வருவதில்லை.

தமிழ் ஓவியா said...

ஆனால் படைகளாக வருகின்றன. சில ஆண்டுகள் முன்புவரை, தமிழக மீன வர்கள் மீது இலங்கைக் கடற்படை யினர்; துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்கள் பிடித்த மீன் களையும், வலைகளையும், படகுகளையும் கைப்பற்றி அடித்து விரட்டுவது என்று அவ்வப்போது நடைபெற்று வந்த சம்ப வங்கள், அண்மைக் காலத் தில், குறிப்பாக 2009ஆம் ஆண்டு இலங்கை யில் போர் நின்றபிறகு, மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன.

நமது மீனவர்களைக் கைது செய்து இலங் கையிலுள்ள சிறைகளுக்கு அனுப் புவது என்பது தங்குதடையின்றி குறையாமல் நடைபெற்று வருகிறது. அவர்களது படகுகளும் இலங்கைக் கடற்படையால் பிடித்துவைத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. இலங் கைக் கடற்படையின் அணுகுமுறை தமிழ்ச் சமுதாயத்தின் கூட்டு மன சாட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.

படகுகளைத் திருப்பி தருவதில்லை!

20.9.2013 வரையில், நாகை, காரைக்கால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 112 மீனவத் தமிழர்கள் பல்வேறு இலங்கைச் சிறைகளில் ஜாமீன் அல்லது வழக்கு விசாரணையின்றி அவதிப்படுகிறார்கள். 18.9.2013 அன்று, இந்தியக் கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டி ருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 19 பேர் இலங்கைக் கடற் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக பொய்யாகக் குற்றம் சாட்டப் பட்டு இலங்கைக் கடற்படையால் அவர்களது 5 படகுகளுடன் பிடிக்கப் பட்டனர்.

21.9.2013 அன்று, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி அவர்களது 14 நாள் வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்ற பின், கச்சத்தீவு அருகில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கைக் கடலோரக் காவல்படை அவர்களைக் கடுமை யாகத் தாக்கி, அவர்களது வலைகள் மற்றும் இதர மீன்பிடிக் கருவிகளை மோசமாகச் சேதப்படுத்தி அவர்களில் 20 பேரைக் கைது செய்ததுடன் 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங் களில் கைது செய்யப்பட்ட மீனவர் கள் சிலர் 23.9.2013 மற்றும் 25.9.2013 தேதிகளில் சிறைகளிலிருந்து விடு தலை செய்யப்பட்டபோது அவர்க ளது படகுகள் அவர்களுக்கு திருப்பித் தரப்படவில்லை.

நாகை, காரைக்கால் பகுதி மீனவர் கள் இலங்கைச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டபின் அவர் களது படகுகளின்றி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனர். பின்னர் அவர்கள் 21.9.2013 அன்று இலங்கைக் கடற் படையால் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசந்துறையில் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர்.

ஏழு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாக இலங்கை நிர்வாகத்தினர், தாங்கள் கைது செய்த மீனவர்களை, அவர்களது படகுகளைப் பிடித்து வைத்துக் கொண்டு திருப்பி அனுப் புவது என்று கூறப்படுகிறது. பிடித்து வைக்கப்பட்ட விசைப் படகுகள் இலங்கை அரசால் கையகப்படுத்தப் பட்டுள்ளன என்று காணப்படுகிறது.

400 மீனவர்கள் கொலை! ஆயினும் துப்பாக்கிச் சூட்டின் ஓசை குறையவில்லை!

இலங்கைக் கடற்படையினர் வேண்டுமென்றே நடத்தும் துப்பாக் கிச் சூடு சம்பவங்களில் ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மிகமோசமான துயரமாகும். அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங் களின்படி 1983க்குப் பிறகு, 1991 முதல் 2008 வரை கொல்லப்பட்ட 118 பேர் உட்பட, 400 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் மீனவர்கள் மீது 480 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 1983ஆம் ஆண்டு தமிழ் மீனவர்கள் மீது தொடங்கிய துப்பாக்கிச் சூட்டின் துயரமான ஓசை இன்னமும் ஓயவில்லை.

தமிழ் ஓவியா said...

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை

மீனவர்களுக்குப் படுகாயம் ஏற் படுத்துதல், அவர்களைக் கொல்லுதல், அவர்களது படகுகளைக் கையகப் படுத்துதல் ஆகியவை அனைத்தும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரா னவை, இலங்கைக் கடற்படையினர் இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோதமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இத்தகைய காட்டு மிராண்டித்தனம் சர்வதேச சமுதாயத் தால் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்படவேண்டும்.

இந்தக் கொடுமைக்கு இந்திய அரசு மவுன சாட்சியாக இருக்கக்கூடாது. 28.9.2013 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இது தொடர்பாக வழக்கம் போல மத்திய அரசைக் குற்றம்சாட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் 136 மீனவர்களையும் 29 படகுகளையும் விடுவிப்பதுபற்றி எழுதியுள்ளார். பின்னர், நாகை, காரைக்கால், பாம்பன் பகுதி மீனவர்கள் 66 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களும் அவர்களது விசைப் படகுகள் இல்லாமல் திரும்புவதால் கவலை அடைந்துள்ளனர். 3.10.2013 அன்று, நான்கு ராமேஸ்வரம் மீனவர் கள் அவர்களது படகுகளுடன் இலங்கை காவல்துறை யினரால் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.

படகுகள்தான் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமாகும். மீனவர்களை விடுவித்து விட்டு அவர்களது படகு களைப் பிடித்து வைத்துக்கொள்வது, அவர்கள் வாழவும் வாழ்க்கைக் காக வருமானம் ஈட்டுவதற்குமான அடிப் படை உரிமையை மறுப்பதாகும். இது மிகவும் மனிதாபி மானமற்ற செயலா கும். `இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவால் இது உணர்த்திடுக!

இந்தக் கொடுமைகளை உடனடி யாகத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தாங்கள் தூதரகத் தொடர்புகள் மூலமாக அனைத்து தீவிரமான, தீர்மானகரமான நடவடிக்கைகளை யும் எடுத்து, தமிழ் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாத்து, அவர்களது வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டு கிறேன்.

கையகப்படுத்தப்பட்ட மற்றும் பிடித்துவைக்கப்பட்ட அவர்களது படகுகளை மீட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கவும், மீனவர்கள் அனைவரையும் நிபந்த னையின்றி விடுவிக்கவும் வேண்டு மென்று நாங்கள் கோருகிறோம். இலங்கைக் கடற்படையினரின் வன் முறை நடவடிக்கைகள் இந்திய நாட் டின் இறையாண்மைக்கு விடப்படும் சவால்கள் என்று, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவரது கொழும்புப் பயணத்தின் போது இலங்கை அரசுக்குத் தெளி வாக உணர்த்தவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக்கு தி.மு.க நன்றியுடை யதாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


குடும்ப வன்முறை என்றால் என்ன?


உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல்லாமலோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்முறை.

இது கணவன் - மனைவி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உற வினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மன ரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்தமிடுவது, கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல்வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது 2005ஆம் ஆண்டு அமலுக்கு வந்துவிட்டது. இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் இதை உறுதி செய்தி ருக்கிறது. பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்கவேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும், பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம் என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சட்டம் பயனுள்ளதா?

நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போன்ற சட்டங்கள் ஏற்கெனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டு கள் பலவாகின்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடை முறையில் வெளியே தெரியாதவாறு இயங்குகின்றன. குழந்தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களிலும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போலவே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டமும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.

இதற்கு என்ன காரணம்?

இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர்களது வளர்ப்பு முறையும் இடம் தரவில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவதில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அதனால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

தமிழகத்தின் நிலைமை என்ன?

கடந்த ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டுமே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டுமொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார்களில் 80 சத விகிதத்துக்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக்கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்தத் தன்னார்வ அமைப்பும் அல்ல. கடந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் 6 அன்று, கேள்வியொன்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல் இது.

தமிழ் ஓவியா said...

அப்படியானால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் கொடுமைக்கு ஆளாவதில்லையா?

அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், பிகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார், டில்லி ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எவ்வளவு புகார்கள் பதியப்பட்டன என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டவணையில் இந்த விவரங்கள் இல்லை. தகவல் கிடைக்கவில்லை என்கிற பதிலைத்தான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள் உணர்த்தும் பாடம் என்ன?

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த விவரங்களை வைத்து மற்ற மாநிலப் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக பொருள் கொள்ள முடியாது. நாகரீக சமூகத்துக்கு சவால்விடும் வகையில்தான் இந்தியாவில் குடும்பங்கள் இயங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூகம் என்பதற்கான முழு பொருளையும் நடைமுறையில் உணர்த்தி வருவது இந்தியக் குடும்பங்கள். பெண்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரிமை, கல்வி உரிமை ஆகியவை இன்னும் முழுவீச்சில் செயலுக்கு வரவில்லை. வெற்று முழக்கங்களாகத்தான் காற்றில் கரைகின்றன. ஆண்களை சார்ந்து வாழ்வதே பெரும்பாலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இதை எதிர்க்கவேண்டும் என்றுகூட பல பெண்கள் நினைக்கவில்லை. அந்தளவுக்கு அறியாமையில் வாழ்கிறார்கள்.

தமிழகம் முன்னுதாரணமா?

ஆமாம். நாட்டிலேயே அதிகளவு புகார்கள் தமிழகப் பெண்களால்தான் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்மறையில் எப்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகளவு இருக்கின்றன என்று பார்க்கிறோமோ அதே போல் நேர்மறையில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம். அணுகலாம். அதாவது, தமிழகப் பெண்கள் துணிச்சலுடன் ஆண்கள் மீது புகார் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதுதான் இது. இந்த துணிச்சல் ஒரே இரவில் பெண்களுக்கு வந்துவிடவில்லை. தந்தை பெரியாரில் தொடங்கி பல திராவிட இயக்க முன்னோடிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக போராடி வந்ததன் விளைவைத்தான் இந்தத் தலைமுறையை சேர்ந்த பெண்கள் அனுபவிக்கிறார்கள். தெளிவுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்; மறுக்கப்படுவதை கேட்டுப் பெறுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


உ.பி. உயர்நீதிமன்றத்தின் விசித்திர உத்தரவு

அலகாபாத், அக்.8- உத்தரபிரதேசத்தில் காவலர் பணியில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ள பிற் படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் 17 ஆயிரம் இடங்கள் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் ஆஹிர், யாதவ், யாதுவன்ஷி மற்றும் குவாலா ஆகிய ஜாதியை சேர்ந்தவர் களும், எஸ்சி பிரிவில் சாமர், துரியா மற்றும் ஜாதவ் ஜாதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இடஒதுக்கீடு பலன்களை பெற்றிருப்பதாக மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையில் ஏறக்குறைய 60 சதவீதம் அளவுக்கு நிறைந்திருப்ப தாகவும், இவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளித்தால் மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படு வார்கள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் அகர்வால் விசாரித்து, போதிய பிரதிநிதித்துவம் பெற் றுள்ள ஜாதியினருக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டார்.

இது அரசி யல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்தாரி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பிரசாத் மவுரியா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய் பகதுர் பதக் கூறினார். சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்ட பின்னர் உயர்நீதிமன் றத்தில் உ.பி. அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் படும் என மூத்த அமைச்சரும் சமாஜ் வாடி மாநில செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுத் துறைகளில் பார்ப்பனர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்களே, அதற்கு இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிப்பார்களா?

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்



பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். - (விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...


அக்டோபர் 15 இல் ஆர்ப்பாட்டம்!


7.10.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினை களை வலியுறுத்தி முக்கிய தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.

இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகளுக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டும், தமிழ்த் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், மாநில அரசுக்குக் காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளை யும் வழங்கப் போவதில்லை.

13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்திருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்ப தோடு இதனை அடிப்படையாகக் கொண்டு காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அன்றைய இலங்கை அதிபர் ஜூனியர் ரிச்சர்ட் (ஜெ.ஆர்.) ஜெயவர்த்தனே ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை யின் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைப்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றி ருந்தன.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை உச்சநீதிமன் றத்தின் வாயிலாக ஒரு தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு இணைப்பு இல்லை என்றாகி விட்டது.

(நியாயமாக ஒப்பந்தப்படி 1988 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கவேண்டும் - ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வடக்கு மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது).

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்காஸ் ஆகிய இன மக்களைக் கொண்ட பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு செய்யப் பட்டதா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதற்குப் பிறகும்கூட ஜெயவர்த்தனே என்ன மனவோட்டத்தில் இருந்தார்?

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழிகளாகும் என்ற ஒப்பந்தப் பிரிவுபற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அதிபர் ஜெயவர்த்தனே கூறினார். அப்படி இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பதைப்பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 30.7.1987, பக்கம் 9) என்று கூறியவர்தானே!


13 ஆவது திருத்தப்படி தமிழர்களுக்கு ஓரளவு சுயாட்சி மணம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவ்வாறு திருத்த இலங்கை அரசு தயாராகவில்லை.

இதனை எதிர்த்து புத்தத் துறவிகளைத் தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தச் செய்திருப்பதும் இலங்கை அரசுதான்.

நிலவுரிமை, காவல்துறை அதிகாரம் போன்றவைகூட இல்லாமல் ஒரு மாநிலத்தின் ஆட்சி என்பது நகைப்புக் குரியதாகவே இருக்கும். மாநில முதலமைச்சரைவிட ஆளுநருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் என்ற ஒரு நிலை சட்ட ரீதியாக உருவாக்கி வைக்கப் பட்டுள்ளது.

நியாயமாக 13 ஆவது சட்டத் திருத்தத்தை நிறை வேற்றிச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கையை வலியுறுத்த இந்தியாவுக்குக் கடமை இருக்கிறது. ஏனெனில், இந்தியப் பிரதமரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் அது.

இரத்து செய்வதாக இருந்தால்கூட இரண்டு நாடுகளும் இணைந்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக ஒரு சார்பாக (Unilateral) முடிவு எடுப்பது சட்ட விரோதமாகும்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிடவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதே தவிர, அதன் நோக்கத்தை நிறைவேற்றும் மனப்பான்மை இலங்கை அரசுக்குக் கிடையவே கிடையாது.

இலங்கை சென்று வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையில் அழுத்தம் கொடுத்தார் - எந்த அளவுக்கு இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் வலியுறுத்தியே 61 கழக மாவட்டங் களில் திராவிடர் கழகம் வரும் 15 ஆம் தேதி ஆர்ப் பாட்டத்தை நடத்துகிறது. தோழர்களே, எழுச்சியோடு செயல்படுத்துவீர்!

தமிழ் ஓவியா said...


இயற்பியல் நோபல் பரிசு: இரு விஞ்ஞானிகளுக்கு!


ஸ்டாக்ஹோம், அக்.9- கடவுள் துகளைக் கண் டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியை இருவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அந்த விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் பீட்டர் க்ஸ் (வயது 84), பெல்ஜியத்தின் பிராங் கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார்கள்.

இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படுகிற கடவுள் துகளை கண்டு பிடித்து உலகுக்கு முதலிலேயே சொன்ன சாதனை யாளர்கள் இவர்கள்.

அதென்ன கடவுள் துகள் என்ற கேள்வி எழு கிறது அல்லவா? அதற்கு முதலில் இந்த பிரபஞ்சம் உருவானது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பிக் பேங் என்றழைக்கப்பட்ட பெருவெடிப்பு ஏற்பட்டது. அப்போது வாயுக்கள் தோன்றி அதில் இருந்த அணுக்கள் ஒன்றுசேர்ந்துதான் இந்தப் பிரபஞ்சம் உண்டானது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

ஒட்டும் பொருள் அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டு பிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரயில் என அனைத்து பொருள்களின் உருவாக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது.

ஆனால் இந்த 16 துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டும்பொருள் ஒன்று உண்டு என்று அரை நூற்றாண்டுக்கு முன்பாக 1964-ம் ஆண்டு உலகுக்கு சொன்னவர்கள் பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கி லெர்ட் ஆவார்கள். பீட்டர்க்ஸ் பெயரால் அது க்ஸ்போஸான் என அழைக்கப்படுகிறது. இதை கடவுள் துகள் என கருதுகின்றனர்.

போஸான்க்ஸ் இதைக் கண்டறிவதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஜெனீவா அருகில் 574 அடி ஆழத்தில், 27 கி.மீ. நீளத்தில் ஒரு சுரங்கப்பாதையில் செர்ன் என்ற அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி மய்யம் உருவாக்கப் பட்டது. இதில் அதிவேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர்.

அதில் இதுவரை பார்த்திராத துகளின் தடயம் காணப்பட்டது. அதன் நிறை, இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கணித்து கூறிய அதே வரையறைக்குள் இருந்தது. அதுதான் க்ஸ் போஸான் துகள். இந்த போஸான் துகள் கண்டு பிடித்தவரின் பெயரால் போஸான்க்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு காரணமான விஞ் ஞானி பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் விஞ்ஞானிகள் இருவரும் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதைக் காரணமாக்கக் கூடாது என்ற தீர்ப்பு சிறப்பானது

கடவுளை மற - மனிதனை நினை என்ற பெரியார் கொள்கைக்கு வெற்றி!

தமிழர் தலைவரின் மனிதநேய அறிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. மாற்றுத் திறனாளிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் அனைத்துத் துறைகளிலும் 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டியது கட்டாயம் ஆகும். இன்னும் 3 மாதங்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கக் கூடாது. அதற்குமேல் என்றாலும், மூன்று விழுக்காடு தர மறுக்கக் கூடாது.

- இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு ஆணையிட்டு இருப்பது,

பல லட்சணக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களுக்கு ஒரு புது வாழ்வையும், புத்தாக்கத்தையும் தரும் சமூகநீதிப் பயணத்தில் ஒரு அருமையான மைல்கல் ஆகும்!

கலைஞர் உருவாக்கிக் கொடுத்த சொல்லாக்கமே மாற்றுத் திறனாளிகள்!

தமிழ் ஓவியா said...

ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக சென்ற முறை இருந்தபோது, ஒரு புது சொல்லாக்கமாக மாற்றுத் திறனாளிகள் என்று அரசுக் குறிப்புகளில் இடம்பெறச் செய்தார்கள்; முதன்முதலில் அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடும் தருவதற்கு ஏற்பாடு செய்து நடை முறைப்படுத்தினார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளைக் காக்க நடத்திய போராட்டத் தின்போது, காவல்துறையினர் அவர்களிடம் சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்; உயர்நீதிமன்ற நெருக்குதல் காரணமாகவே பிறகு அவர்களது உரிமைக் குரலுக்குச் சற்று பயன் ஏற்பட்டது.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இந்திய நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் சட்டபூர்வமான உரிமையாகவே - சலுகையாக அல்ல - வேலை வாய்ப்பை இனி மத்திய - மாநில அரசுகளிடம் பெற்று சுயமரியாதை யோடு வாழ வழி ஏற்படும்.

வெளிநாடுகள் காட்டும் மனிதாபிமானம்

வெளிநாடுகளில் குறிப்பாக, மாற்றுத் திறனாளி களுக்கு எதிலும் முன்னுரிமை, சலுகை, வாகனங்கள் நிறுத்தப்படும் இடம் தொடங்கி, அலுவலகம், கல்வி நிலையங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும்.

இப்போது நம் நாட்டிலும் அந்த நிலை செயல்படத் தொடங்கியுள்ளது, மகிழ்ச்சிக்குரியது.

உச்சநீதிமன்ற ஆணையில், ஒரு செய்தியை தெளிவு படுத்தியுள்ளார்கள் நீதியரசர்கள்; அது மிகவும் பாராட்டத் தக்கது!

50 விழுக்காடுப் பிரச்சினை - உண்மை நிலை என்ன?

50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற விதியைக் காரணம் காட்டி, இந்த மூன்று விழுக்காடு மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் எந்த அரசும் விடக்கூடாது என்று கூறி இந்த 3 விழுக்காடு காரணமாக இட ஒதுக்கீடு வரையறை 50-க்கு மேலாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்!

1. 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவிலும் கூறப்படவே இல்லை.

பாலாஜி ஏள (கர்நாடகா) மாநிலம் என்ற வழக்கில் போகிற போக்கில் கூறப்பட்ட கருத்தை ஏதோ மிகப்பெரிய ஆணைபோல ஆதிக்க சக்திகள் காட்டி விட்டன.

2. இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் குழுவின் வழக்கில் (9 நீதிபதிகள் கொண்ட அமர்வு) 50 சத விகிதத்திற்குமேல் விலக்காக இருக்கலாம் என்றும், விளக்கம் தரப்பட்டது இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

3. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித சட்டம், அத் தீர்ப்புக்கு முன்னதாகவே செயல்படுத்தப்பட்ட ஒன்று. சட்டம், அது சட்ட வலிமையைப் பெற்று, 9 ஆவது அட்ட வணைப் பாதுகாப்பினைப் பெற்றுள்ளது என்பதும் முக்கியம்.

இதனை ஒழிக்க இங்குள்ள உயர்ஜாதி பார்ப்பனீயம் எத்தனையோ முயற்சிகளை இன்னும் செய்து வந்த வண்ணமே உள்ளது! ஆனால், இது செயலில் 33 ஆண்டு களாக இருக்கும் நிலையில், இனி எந்த அரசும் இதில் கை வைக்க முடியாது; கை வைத்தால் குளவிக் கூட்டி னைக் கலைக்க கை வைத்தவர் கதையாகிவிடும்.

பெரியார் சொன்ன கடவுளை மற; மனிதனை நினை!

எனவே, 50 விழுக்காடு பற்றிக் கவலைப்படாமல், இந்த 3 விழுக்காடு உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கு (கூடுதலாகவே) வழங்க உச்சநீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது என்பது வரவேற்கத்தக்கது.

சமூகநீதிக் கொடி அங்கேயும் இப்போதுதான் உயர்ந்து பறக்கத் தொடங்குகிறது என்று உலகம் தெரிந்து கொள்கிறது!

நம்பிக்கையாளர்களின் கருத்துப்படி, கடவுளர்கள் அவர்களை அப்படிப் படைத்தனர் என்பதாகும். இத் தகைய நீதியரசர்களோ (மனிதர்கள்) அவர்களை வாழ வைக்கின்றனர்!

தந்தை பெரியார் கூறிய கடவுளை மற; மனிதனை நினை! எப்படி செயல் வடிவம் பெறுகிறது பார்த்தீர்களா?

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
9.10.2013

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....


1987 இல் இதே நாளில்தான் புதுக்கோட் டையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஒரு மாநில அரசே இந்திய அர சமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின்படி சட்ட மியற்றலாம் என்ற கருத் துருவைத் தீர்மானமாக வடித்துக் கொடுக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் 69 சத விகிதம் நிலைபெற்றதற்கு இந்த அடிப்படையில் செயல்படுத்துவதுதான் காரணம்!

தமிழ் ஓவியா said...


கருங்காலிகள் கூட்டம்

கடந்த 28.9.2013 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச லத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல மாணவர் அணி மாநாட்டுக்கு செல்லும் வழியில் சில காவி காலிகளும், ஜாதி சங்கத் தினரும் சேர்ந்து, கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களை தாக்க முயன்றனர். கழகத் தோழர் களைத் தாக்கினர் மற்றும் தமிழர் தலைவரின் வாகனத்தை சேதப் படுத்தினர் என்பது, தமிழ் சமுதா யமும், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தினரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும். 80 ஆண்டு வாழ்வு முற்றுப் பெற்று 81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ள 73 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தமான தமிழகத்தின் மூத்த தலைவரை, ஒரு காவிக் கும்பல் தாக்கியதும், அதைக் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும், அநாகரி கமான செயல்.

வீரமணி என்பவர் தனிப் பட்ட மனிதரல்ல. அவர் நம் இனத்தின் முகவரி, சமூகநீதியின் தலைமகன், ஒட்டுமொத்தத் தமி ழர்களின் உரிமைக் காவலர். சிறு வயதில் யாரும் ஏற்றுக் கொள்ளத் துணியாத கொள்கையினை ஏற்று, கல்லூரிப் பருவத்தில் தங்கப்பதக்கம் பெற்று, இளம் பருவத்தில் நாடெங்கும் பகுத்தறிவுக் கொள்கையினைப் பரப்பியவர். 1980-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ரூ. 9000/- வருமான வரம்பு) என்ற அரசு ஆணையை எதிர்த்து, களம் கண்டு 31 சதவிகிதமாக பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர்; காவிரி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என, 1982 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து பிரச்சாரம் செய்து, போராடி வந்த தலைவர்; 1983 ஆம் ஆண்டு இலங் கையில் இன அழிப்பு போர் நடை பெற்ற நிலையில் சரியான அமைப்பை, சரியான தலைவரை அடையாளம் கண்டு தமிழர்களுக்கு அறிவித்த தலைவரை, பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை பற்றி அறிய அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் தலைவர் மண்டல் அவர்கள், பரிந்துரையை நான் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டேன். அதனை செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் திடலே, சமூகநீதிக்குச் சொந்தமான பெரியார் கண்ட இயக்கத்தின் தலைவர் வீர மணியே என தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய மண்டல் அவர்களின் வாக் கிற்கு ஏற்ப நாடெங்கும் 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தியவர். மண்டல் குழுவை நடைமுறைப் படுத்திய முன்னாள் பிரதமர் மாண்பு மிகு வி.பி.சிங் அவர்கள் சமூகநீதி பாடத்தை எனக்கு கற்று தந்த தலைவர் வீரமணியே! என சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பிரகடனப்படுத்தப் பட்ட தலைவரை, அனைத்து சாதி யினரும், அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வரும் தலைவரை, இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இட்டபோது அதற்கு எதிராக 31சி என்ற சட்டத்தை கண்டெடுத்து அதனை அரசியல் அமைப்பு சட்டத் தின் 9 ஆவது அட்டவணையில் வைத்துவிட்டால் இடஒதுக்கீட்டிற்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைத்து விடும் என தமிழக அர சிற்கே சட்டத்தை எடுத்துக் கொடுத்து அதனை குடியரசுத் தலைவர் (சங்கர் தயாள் சர்மா), பிரதமர் (பி.வி.நரசிம் மராவ்), முதலமைச்சர் (ஜெ.ஜெய லலிதா) என்ற மூன்று பார்ப்பனர் களைக் கொண்டே நிறைவேற்றச் செய்து இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த தலை வரை, வடநாட்டு தலைவர்களான சந்திரஜித், பி.பி.மவுரியா, ராம்விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, கன்சிராம், லாலு பிரசாத், முலாயம்சிங், மாயா வதி போன்ற தலைவர்களின் அன்பை யும், அமெரிக்கா, கனடா, சிங்கப் பூர், மலேசியா, இலங்கை, மியான்மா, லண்டன், குவைத் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது உயிராகப் போற்றும் தலைவரை, உலக நாத்திகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவரை, இருதய மாற்று அறுவை சிகிச்சை மூன்று முறை செய்து இருந்த நிலையிலும், ஓய்வு எடுக்க வேண்டிய நிலையிலும், தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் நலனுக்காக இரவு, பகல் பாராமல் இடைய றாது உழைத்துவரும் தலைவரை, நான் தற்போது வாழ்வது போனஸ் வாழ்க்கையே என்று அறிவித்து ஓய்வில்லாது உழைக் கும் தலைவரின் உயிருக்கு குறி என்பது நமது இன எதிரிகளுக்கு வேண்டுமானால் லாபகரமாக இருக்கலாம், துணைபோன கருங் காலி தமிழினத் துரோகிகளுக்கும், சமூக நீதியை, உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கு இவரைவிட்டால் பட்டம், பதவி, ஓய்வு, சலிப்பு இல் லாது உழைக்கக்கூடிய இன் னொரு தலைவர் யார் என்பதை இரவில் உறங்கப் போகும் போது, ஒரு கணம் சிந்தித்துப் பார், நாதியற்ற தமிழினமே!

- இரா.நீலகண்டன், திராவிடர் கழகம், பேராவூரணி

தமிழ் ஓவியா said...


ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல்: தலைவர்களுக்கு கலைஞர் கடிதம்


சென்னை, அக். 9- தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும் சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர் தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிடுங்கள்! என தி.மு.க. தலைவர் கலைஞர், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சி களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அன்புடையீர்,
வணக்கம்.

வருகிற 4.12.2013 அன்று நடை பெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேர வைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத் துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொ டர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக் கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றி ணைந்து நல்கிடும் உறுதியான ஆதர வோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமான தென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திட வும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திட வும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாள ருக்குத் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள,

(ஒப்பம்)
( மு. கருணாநிதி )

இந்தக் கடிதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், தமிழகச் சட்டப்பேரவை யின் எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க.வின் நிறுவனருமான விஜயகாந்த், பா.ஜ.க. வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண் டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹருல்லா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி.எம்.சிறீதர் வாண்டையார், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார், பெருந் தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர். தனபாலன், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது , சிறுபான்மையினச் சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கா.லியாகத் அலிகான், எஸ்.டி.பி.அய்., கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் எல்.சந்தானம், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் மத்தியக் குழுவின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மா வாசி ஆகியோர் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அறிவுலக ஆசானுக்கு அமீரகத் தமிழர்கள் எடுத்த விழா

துபை, அக். 9- அமீரகத் தமி ழர்கள் அமைப்பின் (அஜ்மான்) சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 03.10.2013 மாலை 7.00 மணியளவில் அஜ்மான் சிவ்ஸ் டார் பவனில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந் தினர்களாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநிலத் துணை கொள்கை பரப்புச்செயலாளர் திரு. சங்கத்தமிழன், உம்-அல் குவைன் நேஷனல் ஏஜென்சி பொது மேளாளர் திரு. லிங்கண் ணன் ஆகியோர் கலந்துகொண் டனர்.

அமீரகத் தமிழர்கள் அமைப் பின் நிறுவனத் தலைவர் திரு. ஏ.எஸ்.மூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வளைகுடா நாடுகளில் தமிழர் களுக்கென ஒரு வாரியம் அமைக்க திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் முயற்சி எடுத்திருப் பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செயல் என்றும், வெளிநாடு களில் வாழும் தமிழர்கள் சமத் துவத்தோடு வாழ வழிவகுத் துள்ள தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாளை அமீரகத் தமிழர்களோடு கொண்டா டுவது பெருமிதத்தை அளிக் கிறது என்றும் அவர் தனது வரவேற்புரையில் கூறினார்.

மேலும், அமீரகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக திராவிடர் கழகத் துடன் அஜ்மான் தமிழர்கள் அமைப்பு திகழ்கிறது என்றும் கூறினார். இதுபோன்ற சமூக ஆர்வமுள்ள நிகழ்ச்சிகளை நடத்த இடமும், அனைவருக் கும் விருந்தும் வழங்கும் புரவ லர் சிவ்ஸ்டார் பவனின் நிறு வனர் திரு. எல்.கோவிந்தராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண் டார்.

இந்த நிகழ்ச்சியோடு அமைப் பின் பொருளாளர் திரு. அப் துல் லத்தீப் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழாவும் இணைந்து நடப்பதில் பெருமிதம் கொள் வதாக தெரிவித்தார். தொடர்ந்து திரு. லிங்கண்ணன், திரு. மதியழ கன், திரு. சங்கத்தமிழன் ஆகி யோர் உரை நிகழ்த்தினர்.

இவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் தமது சிறப்புரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், தந்தை பெரியார் அவர்களின் 135வது பிறந்தநாள் விழா தமிழகம், புதுச்சேரி, புதுதில்லி, கொல் கத்தா, மும்பை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களிலும், சிங் கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா (கானா), துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுக ளிலும் சிறப்பாக நடைபெறு வது குறித்து மகிழ்ச்சி தெரி வித்தார்.

பெரியார் மற்றும் அவரது தத்துவங்கள் உலகமயமாக்கப் படுவது பற்றியும் அதற்காக தமிழர் தலைவர் மேற்கொண் டிருக்கும் முயற்சிகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் அவர்களின் 75ஆம் பிறந்தநாளை அஜ்மான் தமிழர்கள் அமைப்பு அமீரகத் திலுள்ள பெரியார் தொண்டர் களுடன் இணைந்து கொண் டாடியதை நினைத்து பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரியார் அவர் களின் பல்வேறு கருத்துகளை விளக்கியும் குறிப்பாக இல்ல றம், துறவறம் தவிர்த்து தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப் படுத்திய தொண்டறத்தின் தேவை பற்றியும் விரிவாக கூறினார். பள்ளி மாணவர்களிடையே பெரியார் பற்றி அறிந்து கொள் ளும் வகையில் தமிழகம் முழு வதும் சிறப்பாக நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டியின் பயன் பற்றி கூறி யதுடன், வெளிநாடுகளிலும் இப்போட்டிகளை தொடர்ந்து நடத்திட வேண்டுகோள் விடுத் தார்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ் வாக அமீரகத் தமிழர்கள் அமைப்பின் பொருளாளர் திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு அவரின் சமூக சேவையைப் பாராட்டி மனிதநேய பண் பாளர் விருது வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றார். அஜ் மானில் அமீரகத் தமிழர்கள் அமைப்பை நிறுவி வெற்றிகர மாக நடத்திட பல்லாண்டு களாக உழைத்த திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு பிரிவு உப சரிப்பு விழா இனிதே நடை பெற்றது.

இவ்விழாவில் வானலை வளர்தமிழ் அமைப்பின் தலை வர் திரு. சிவ்ஸ்டார் எல்.கோவிந் தராஜன், அஜ்மான் தமிழர்கள் அமைப்பின் துணைத் தலைவ ரும் ஆர்யா கிரைன்டிங் பேக்கேஜிங் நிறுவனத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர். மதி யழகன், அமைப்பின் செயலா ளரும் சஃபையர் ரெஸ்டா ரண்ட்டின் உரிமையாளருமான திரு. இரா.சாமிநாதன், எமி ரேட்ஸ் ஏர்லைன்ஸ் திரு. சதீஷ்ராஜ், துபாய் மினரல் வாட்டர் திரு. செல்வதுரை, குலாம் முஸ்லீம் அமைப்பின் திரு.ஜான், ஓவியர்கள் ரவிச்சந் திரன், குமார் உள்ளிட்ட ஏராள மான அமீரகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிவ்ஸ்டார் பவன் நிறுவனத்தின் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

பெரியார் கல்வி நிறுவன முன்னாள் மாணவி செல்வி. நிவேதிதா ஆனந்த் இந்நிகழ்ச் சியை இனிதே தொகுத்து வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


பட்டாச்சார்யாக்கள்

பெண்கள் பெரும் பதவிகளுக்கு வருவதில் லையே என்ற ஆதங்கங் கள் அவ்வப்பொழுது எழுவதுண்டு.

இப்பொழுது கொஞ் சம் கொஞ்சம் வர ஆரம் பித்துள்ளனர். அவர்கள் எல்லாம் யார்? யார்?
பாரத ஸ்டேட் வங்கி யின் முதல் பெண் தலை வர் அருந்ததி பட்டாச் சார்யா, அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பான்சே, பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் விஜயலட்சுமி ஆர்அய்யர், யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வின் தலைவர் அர்ச்சனா பார்க்கவா, அய்.சி.அய். சி.அய். வங்கியின் தலை வர் சந்தா கோச்சார், ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் சிகா சர்மா.

இந்தப் பெயர்களை பார்க்கும் பொழுதே இவர்கள் எல்லாம் யார்? எந்தப் பிரிவைச் சேர்ந்த வர்கள் என்பது வெளிப் படை! கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப் படாது அல்லவா!

என்னதான் சமூக நீதி, இடஒதுக்கீடு என்று நாம் குரல் கொடுத்தா லும், பாடுபட்டாலும் அவா ளின் ஆதிக்கம் இன் னொரு வகையில் வளர்ந்து கொண்டேதான் இருக் கிறது.

அதுவும் தனியார்த் துறைகள் வளர்ந்து வரும் இந்தக் கால கட்டத்தில் அவற்றில் தலைமைப்பீட இயக்குநர்கள் எல்லாம் யார்? பெரும்பாலும் பார்ப்பனர்களே! பணிய மர்த்தம் செய்யும் இடத் திலே பத்திரமாக உட் கார்ந்து கொண்டு முதுகைத் தட்டிப் பார்த்து, பூணூல் தட்டுப்படுகிறதா என்று அடையாளம் கண்டு, ஆயிரக்கணக்கில் தனியார்த் துறைகளில் அவாளைத் திணித்துக் கொண்டு தானிருக் கிறார்கள். இது அடக்க மாக, ஆர்ப்பாட்டம் இல் லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது.

சமூகநீதியில் நமது அடுத்தக் கட்ட களம் தனியார்த்துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறு வதே என்று திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி.வீரமணி அவர் கள் கூறியிருப்பது எவ் வளவுத் தொலைநோக்கு!

சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தேவை என்று திராவிடர் கழகம் வலி யுறுத்துவதன் முக்கியத் துவத்தை இந்தக் கண் ணோட்டத்தில் பார்த்தால் தான் பளிச் சென்று துல்லியமாகப் புரியும்.

உள் ஒதுக்கீடு இல்லை யென்றால் வங்கிகளில் தலைமைப் பொறுப்பு களில் உயர் ஜாதி பெண் களின் ஆக்கிரமிப்புப் போலவே இதுவும் அவா ளின் (கிராப்பு தலை வாசிகள்) ஏகபோகக் காடாகத்தான் மாறும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமா னால் ஈரோட்டுக் கண் ணாடி தேவைப்படும்!

- மயிலாடன் 10-10-2013

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


கடமை தவறாத மனிதநேயர் ஓட்டுநர் சம்பத் ஓர் எடுத்துக்காட்டு!


நெஞ்சுவலியால் துடித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு இறந்தார்

துரைப்பாக்கம் அக்.10- ஓடும் பஸ்சில் திடீர் நெஞ்சு வலியால் துடித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு பலியானார். சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (45). இவர் பிரபல தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் வந்த விமானி மற்றும் பணிப்பெண்களை ஏற்றிக் கொண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக் குத் திரும்பிக் கொண்டு இருந்தார். மீனம்பாக்கத்தில் இருந்து எழும்பூருக்குத் திரும்பி வரும்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக பஸ்ஸில் இருந்த கிளீனரிடம் சம்பத் கூறி, தண்ணீர் அருந்தியதும் நெஞ்சு வலி குறைந்ததால், மீண்டும் பஸ்ஸை இயக்கினார்.
கத்திப்பாரா மேம்பாலம் அருகே பஸ் வந்தபோது, மீண்டும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சம்பத் கூறினார். ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் பஸ்ஸை இயக்கி, சாலையோரமாக நிறுத் தினார்.

இந்நிலையில் மீண்டும் மயக்க மடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்ஸில் இருந்த விமானி, பணிப்பெண்கள் ஓடிவந்து சம்பத்தை மருத்துவர்களிடம் கொண்டு சென்றதில் அவர் இறந்து போனது தெரிய வந்தது அனைவரும் அதிர்ச்சிகுள்ளாயினர்.

மேலே காட்டிய செய்தி மிகவும் நெஞ்சை உருக்கும், துயரத்திற்குரிய செய்தி!

வெறும் உரிமைகளை மட்டும் பேசிப் பேசி, கடமைகளை - பொறுப்புகளைக் காற்றில் பறக்கவிடும் மக்களே, பெரிதும் நிறைந்த இந்த பாலைவனச் சமுதாயத் தில் ஓர் ஒயாசிஸ் - சோலைவனமாக திகழும், இந்த சம்பத் போன்ற ஓட்டு நர்கள், மனித குலத்தில் நல்லவர்களும், பொறுப்பை உணர்ந்து கடமையாற்றும் சீலர்களும், இன்னும் இருந்து வருவதால் இந்த உலகம் மனித நேயத்தை மரண மடையச் செய்யாமல், காத்து வருகிறது போலும்!

பாராட்டுதலுக்குரிய அந்த ஓட்டுநர் ஒரு ஓரத்தில் அவர் ஒட்டி வந்த பேருந்தை நிறுத்தாமல், நெஞ்சு வலியுடன் ஒட்டி வந்திருப்பாரேயானால் என்ன நிகழ்ந் திருக்கும்?

அதுவும் நெருக்கடி மிகுந்த அண்ணா சாலையில்? வண்டி, தானே ஓடி பெரும் விபத்து ஏற்பட்டு, பல உயிர்களும் - பேருந்தில் விமான நிலையத்திலிருந்து வந்த விமானி பணிப் பெண்கள் உட்பட பலரும் சிக்கியிருப்பார்களே, எதிரே வந்த வாகனங்களும் தப்பி இருக்க முடியாதே!

அவர்தம் பொறுப்புணர்ச்சியை நாடும் அரசும், சமூக நல அமைப்புகளும் பாராட்டி, அவர் தம் குடும்பத்திற்கு ஆறுதல் - இரங்கல் கூறுவதோடு, பரிசும் விருதும் அளிக்க முன்வர வேண்டும். நமது கழகமும் சிறப்புச் செய்யும்!

இதுபோல முன்பு, மின்சார ரயிலை ஒட்டி வந்த அரக்கோணம் அருகே ராஜூ என்ற ஓட்டுநர் (டிரைவர்) நெஞ்சு வலி ஏற்பட்டதைச் சமாளித்து நடு வழியில் நிறுத்திடாமல் அரக்கோணம் நிலையம் வந்து நிறுத்திய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தார்!

அதில் பயணம் செய்த அவ்வளவு ரயில் பயணிகளையும் காப்பாற்றிய பொறுப்புணர்ச்சியின் சின்னமாக அவர் வாழ்ந்து காட்டி மறைந்தார்.


அதை நாம் பாராட்டி எழுதினோம்; கழகச் சார்பில் பாராட்டுத் தீர்மானம் கும்மிடிப்பூண்டி மாநாட்டில் போட்டு அக்குடும்பத்தினரைக் கழகத்த வர்கள் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவரை ரயில்வே துறை பாராட்டி விருது (மறைந்தாலும்) அக்குடும்பத் தினருக்கு வழங்கி சகோதரர் டி.ஆர். பாலு - எம்.பி. மூலம் ஏற்பாடும் செய்தோம்!

இந்த முறை மறைந்தும் மறை யாதவராக உயர்ந்த ஓட்டுநர் சம்பத் அவர்களின் குடும்பத்தினருக்கு, அரசும் பாராட்டு வழங்க வேண்டும்.

அடுத்த விழாவில் அவர்தம் குடும்பத்தினரை அழைத்து பெரியார் மனிதநேய விருது அளித்துப் பாராட் டுவோம்!

தம் உயிர் பெரிது - எனினும்
கடமை அதனினும் பெரிது!

- எனக் காட்டிய அத்தகைய மா மனிதர்கள்!

அவர்தம் புகழ் வாழ்க! வாழ்க!!

தமிழ் ஓவியா said...


சபாஷ்! கருநாடக முதல் அமைச்சர் மூடநம்பிக்கையை உடைத்து எறிந்தார்


பெங்களூரு, அக்.10- பெங்களூரு சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தால் பதவி பறி போகும் என்ற மூடநம்பிக்கையை முறியடித்தார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.

கர்நாடக மாநில முதல்வர் சித்த ராமையா திங்கட்கிழமை சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தார். சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் கர்நாடகத்தின் முன் னாள் முதல்வர்கள் பலர் தங்கள் பத வியை பறி கொடுத்திருக்கிறார்களாம்.

கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ''தைரியம் இருந் தால் எங்க ஊர் மண்ணை மிதித்துப் பாருங்கள். இல்லையென்றால் சாம் ராஜ் நகரை கர்நாடகத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக்கித் தாருங் கள்'' என முதல்வர்களை சீண்டும் வகையில் சவால் விடுவார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் ஆட்சியை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குண்டு ராவ் 1982-ஆம் ஆண்டு சாம் ராஜ் நகருக்கு வந்தார். அவருடைய முதல்வர் பதவி ஒரே மாதத்தில் பறி போனது. ராமகிருஷ்ண ஹெக்டே, சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்து வைத்த 15 நாள்களில் ஊழல் புகாரில் சிக்கி முதல்வர் பதவியைப் பறி கொடுத்தார்.

இப்படி சாம்ராஜ் நகருக்குள் நுழைந்து ஆட்சியை பறி கொடுத்த முதல்வர்களின் பட்டியல் சதானந்த கவுடா வரை நீள்கிறது.

இதனால், சில முதல்வர்கள் சாம் ராஜ் நகர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்து விட்டு, நொண்டிச் சாக்குகளை சொல்லி மாதேஸ்வரன் மலை அடிவாரத்திலே நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூரு திரும்பி விடுவர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சாம்ராஜ் நகருக்கு சென்ற சித்தராமையா ''நான் ஆட் சிக்கு வந்தால், தைரியமாக சாம்ராஜ் நகருக்கு வரு வேன்'' என அறிவித்தார். பதவியேற்று 5 மாதங் களானாலும் சாம்ராஜ் நகருக்கு செல்லாமல் இருந்தார். இதனால் எதிர் கட்சியினர் 'பதவிக்கு ஆசைப்பட்டே சித்தராமையா சாம்ராஜ் நகருக்கு வருவதை தவிர்த்து வருகிறார் 'எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

சித்தராமையா ஏற்கெனவே தேதி குறித்தபடி கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11.35 மணிக்கு சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தார். ரூ. 1,700 கோடி செலவில் நலத்திட்டங்களை அறிவித் தார். சட்டமேதை அம்பேத்கர் பவன் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி, அம்பேத்கரின் ஆளுயர சிலையைத் திறந்து வைத்து முழங்க ஆரம்பித்தார்.

கர்நாடக மாநிலத்தின் எல்லைக் குள் இருக்கும் சாம்ராஜ் நகருக்கு நான் வந்ததில் எந்த பெருமை யும் இருப்பதாகக் கருத வில்லை. ஏனென்றால் எனக்கு மூடநம்பிக்கை இல்லை. இந்திய மக்க ளிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க, அறிவே சிறந்த ஆயுதம் என அம்பேத்கர் போராடினார். கர்நாடகத் திலும் சமூக சீர்திருத்தவாதிகளான பசவண்ணரும், மகாகவி குவெம்புவும் தொடர்ந்து போராடினர். இனியும் தொடர்ந்து சாம்ராஜ் நகருக்கு வந்து மூடநம்பிக்கைகளின் கோட்டையை தகர்த்தெறிவேன்''எனச் சூளுரைத்தார்.

முந்தைய முதல்வர்களின் நாற்காலி களை காவு வாங்கிய சாம்ராஜ் நகர், சித்தராமையாவின் நாற்காலியையும் காவு வாங்குமா என்ற கேள்வி கர்நாடக அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


வேதியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்கள் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 10-அமெ ரிக்காவை சேர்ந்த மைக் கேல் லெவிட், மார்டின் கர் பிளஸ் மற்றும் அரை வார் செல் ஆகியோ ருக்கு வேதியிய லுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக த்தை சேர்ந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெ ரிக்க ஆஸ்திரியரான மார்டின் கர்பி ளஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெ ரிக்க இஸ்ரேலியரான அரை வார்செல் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

வேதியல் மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நடைபெறும். எலக்ட் ரான்கள் அணுவின் மய்யப்பகுதியை நோக்கி பாய்ந்து வருவது வழக்கம். இவை கண்களுக்கு புலப்படாது. இந்த வேதியல் மாற்றங்களை கணினிகள் புரிந்து கொள்ளும் வகையில் அவற் றை தயார்படுத்தியுள்ளனர். இது சிக்கலான மருந்து தயாரிப்புக்கு பயன்படுகிறது. இதற்காக இவர் களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே செல்லுகிறது?


தூத்துக்குடி மாவட்டம் கீழ்வல்ல நாட்டில் இன்பேன்ட் சீசஸ் என்ற பெயரில் பொறியியல் கல்லூரி ஒன்று நடைபெற்று வருகின்றது. அக் கல்லூரியில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பல முறை நிருவாகம் கண்டித்து வந்த நிலையிலும்கூட, மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் சிலரைக் கல்லூரி நிருவாகம் தற்காலிக நீக்கம் (Suspension)
செய்தது.

அதனால் ஆத்திரம் அடைந்த மூன்று மாணவர்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களைக் கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர் என்கிற செய்தி உண்மையிலேயே பெரும் அதிர்ச்சிக்குரியது. குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.

நாம் நாட்டுக் கல்வியின் நிலை எந்தத் திசையில் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கும்பொழுது தலை சுற்றுகிறது!

உயர் நிலைப் பள்ளி அளவில் சென்னையில் ஆசிரியை ஒருவரை மாணவர் குத்திக் கொன்றார் என்ற செய்தியைத் தொடர்ந்து இப்படி ஒரு நிகழ்வு!

நம் நாட்டுக் கல்வி முறை ஆசிரியர்களின் செயல்பாடுகள், பெற்றோர்களின் கண்காணிப்பு, சமுதாயத்தின் போக்கு, அரசியல், சினிமா, ஊடகங்கள், இணையதளங்கள் இவை எல்லாமும் தான் இதன் பின்னணியில் இருக்கின்றன என்பதில் அய்யமில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணவர் களிடையே துப்பாக்கிப் புழக்கம் உண்டு; மாணவர்கள் வகுப்புகளில் புகுந்து சுட்டனர் - பலர் செத்தனர் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. அமெரிக் காவில் நடந்தது என்பதற்காக அதற்கு நியாயம் கற்பித்து விட முடியாது.

மாணவர்கள் என்றால் மார்க்கு வாங்குவது என்கிற அளவில்தான் நம் கல்வி முறை இருந்து வருகிறது.

தகுதி என்பது மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் வாங்குவது என்று தான் கருதப்படுகிறது. கல்வி அறிவை வளர்க்க வேண்டும்; அதே நேரத்தில் நல்ல பண்பாட்டை, ஒழுக்கத்தைக் கற்பிப்பதாக இருக்க வேண்டாமா? அதற்காக நம் பாடத் திட்டத்தில் என்ன வழி முறை இருக்கிறது?

மாலை நேர விளையாட்டு என்பதுகூட வெறும் உடல் நலம் என்று கருதி விடக் கூடாது. விளையாட்டு - தன்னம்பிக்கை, வெற்றி அதற்கான பயிற்சி, உழைப்பு என்கிற உணர்வுகளை உண்டாக்கக் கூடியதாகும்.

இன்றைக்குப் பல பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கூடக் கிடையாது. உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளிகளில் வேறு பணிக்கு பயன்படுத்தப்படும் அவலம்.

நாட்டு நலப் பணித் திட்டம், என்.சி.சி., ஏ.சி.சி. போன்ற பயிற்சிகள் இவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தும் பொழுது அவர்களின் சிந்தனையில் செறிவான எண்ணங்கள் மலரும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிருவாகிகளின் சந்திப்பு குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை ஏற்பாடு செய் யப்பட வேண்டும். அதில் நிறை - குறைகளைப்பற்றி கலந்து உரையாடினால், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பதெல்லாம் பெயர் அளவுக்குத்தான் இருக்கிறது. அதிலும் அரசியல் புகுந்து அதன் நோக்கத்தைக் கொன்று வருகிறது.

பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கண்காணிப்பு அறவே இருப்பதில்லை.

விஞ்ஞான வளர்ச்சி நல்லதற்குப் பயன்பட வேண்டும்; ஆனால் எதிர்மறையாகத்தான் அதிக மாக பயன்படுகிறது.

சினிமா, தொலைக்காட்சி, ஊடகங்கள், இணைய தளங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது, எல்லோருக்குமே தெரியும்.

தெரிந்து என்ன பயன்? அவற்றை நெறிப்படுத்த என்ன திட்டம் கைவசம் உள்ளது? அரசு என்ன செய்கிறது? என்று ஏராளமான கேள்விகள் உண்டு.

அ.இ.அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் கொலை, கொள்ளை, வழிப்பறி என்பது சர்வ சாதாரணமாக ஆகி விட்டது.

குற்றவாளிகள் உரிய காலத்தில் தண்டிக்கப்படுவ தில்லை. இதனால் குற்றப் புரிவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

சமூக ஆர்வலர்கள் இது குறித்தும், சிந்திக்கவும், வழி காட்டவும் கடமைப்பட்டுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தத் தவறினால் எதிர் காலம் கேள்விக் குறியாகி விடும். பள்ளிப் பருவத் திலேயே கொலை எண்ணம் வந்து விட்டால் நாடு காடாகித் தீருவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ் ஓவியா said...



மூட மக்கள்

ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக ஓயாது பாடுபட்டவர் வீரமணி


இளங்கோ யாதவ் - மாநிலத் தலைவர் சமாஜ்வாடி கட்சி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்திட போராடி வருகின்றார்கள். கடந்த 1989ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் வி.பி. சிங் அவர்கள் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்பு மண்டல் குழு பரிந்துரைப் படி 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முன் வந்தபோது இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா, வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மதவெறி அமைப்புகள் போராட்டம் வடமாநிலங்களில் நடத் தியபோது தமிழகத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய தலைவர்களை அழைத்து மத்திய அரசின் முடிவை ஆதரித்து தமிழகத்தில் மதவெறி சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்கச் செய்தவர் கி.வீரமணி ஆவார்கள். மேலும் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக போராடி வரு கின்ற முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத்யாதவ், கலைஞர் மு. கருணாநிதி, ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்களின் தலைமையில் போராட்டக் களங்களை தமிழகத்தில் தலைமையேற்று நடத்தக் கூடியவர் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், கடந்த 1995ஆம் ஆண்டு அன்றைய இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசில் கல்வி வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இடஒதுக் கீட்டை சட்டப் பூர்வமாக பாது காத்திட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது தமிழக முதல்வர் ஜெ. ஜெய லலிதா அவர்களுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து தமிழகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஏகோபித்த உணர்வுகளை வெளிப் படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக் காக சமூக நீதிக்காகவும் போராடி வருகின்ற கி.வீரமணி அவர்களை சமூக நீதிக்கு எதிரான மதவெறி கொள்கைக்கு ஆதரவாக உள்ள பாரதீய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்து மத வெறி அமைப்பு களுடன் சில சுயநல சக்திகள் இணைந்து கடந்த 28ஆம் தேதி கடலூர் மாவட் டம் விருத்தாசலத்தில் அவர்களை தாக்க முயற்சித்தனர். இதனை வன் மையாக கண்டிக்கின்றோம். மேலும் தமிழகம் முழுவதும் கி.வீரமணி அவர்கள் எங்கு சென்றாலும் தாக்குதல் நடத்துவோம் என ஒரு தொலைக் காட்சி வாயிலாக சில சுயநல சக்திகள் கூறி வருவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்து மத வெறி அமைப்புகள் மற்றும் சில சுயநல சக்திகளுடைய செயலினை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் சமூக நீதிக்காக போராடக் கூடிய கி.வீரமணி அவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டுமென தமிழக சமாஜ்வாடி கட்சி சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ தேர்வு


ஸ்டாக்ஹோம், அக்.11- 2013-ஆம் ஆண்டுக் கான இலக்கியத்துக் கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட் டுள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கி யத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த சிறுகதை தொகுப் பிற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஆலிஸ் மன்றோ 14 சிறுகதை தொகுப்புகளை வழங்கியிருக்கிறார். கடைசியாக 4 சுயசரிதை கதைகளுடன் கூடிய டியர் லைஃப் என்ற தொகுப்பை வெளியிட்டார். 82 வயதான ஆலிஸ், கதை எழுது வதில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13-ஆவது பெண் ஆலிஸ் மன்றோ ஆவார். நோபல் பரிசு தவிர, மூன்று முறை கனடாவின் கவர்னர் ஜெனரல் விருதினையும், 2009ஆம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேச பரிசையும் ஆலிஸ் மன்றோ பெற்றிருக்கிறார்.

கடந்த 1901ஆம் ஆண்டு முதல் 2012 வரை 106 பேர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் 17 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். ரவீந் திரநாத் தாகூர், ரட்யார்ட் கிப்ளிங், வி.எஸ்.நைபால் ஆகியோர் நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் ஆவர். கடந்த ஆண்டு இந்த பரிசு சீனாவின் மோ யானுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


கழகத் தீர்மானத்துக்கு வெற்றி! உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி

மதுரை, அக்.11- உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனு மதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத் தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட் டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆயுஷா பானு(வயது 33). இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

என் கணவர் பக்கீர் மைதீன், துபாயில் உள்ள ஒரு சோப் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சில பிரச் சினைகள் காரணமாக என் கணவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை கம்பெனி உரிமையாளர் பறித்துக்கொண்டு அனுப்பி விட்டார். தற்போது என் கணவர் முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மெக்காவில் தங்கி இருந்து அங்கு வருபவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாக தெரிவித் தார். கடந்த 21 மாதங் களாக அவர், கஷ்டப் பட்டு வருகிறார். எனது கணவரை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு விசா ரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வழக் குரைஞர் பகத்சிங் தமி ழில் வாதாட அனும திக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு அனுமதி மறுத்த தனி நீதிபதி, அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 348, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகிய வற்றில் வழக்காடு மொழியாக ஆங்கில மொழி தான் இருக்கும் என்று கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு அமர்வு உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன் றங்களில் ஆங்கிலத்தில் தான் வாதாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள் ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதே காரணத்தை கூறி கன்னி யாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கட்டட வரை பட அனுமதி கேட்டு தாக்கல் செய்த வழக் கையும் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேல் முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து ஆயுஷாபானு, சுந்தர்ராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய் தனர். இந்த மனு நீதிபதி கள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசா ரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், ஆயுஷாபானு, சுந்தர் ராஜன் ஆகியோர் தாக் கல் செய்த மனுக்களை தகுதி அடிப்படையில் தனி நீதிபதி விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

இந்த வழக்குகளை பொறுத்தமட்டில் தமிழில் வாதாடிய காரணத்துக்காகவே தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி யின் உத்தரவை டிவிஷன் அமர்வு ரத்து செய்து இருப்பதன் மூலம் தமி ழில் வாதாட தடை யில்லை, தமிழில் வாதா டும் போது அதை ஏற்றுக் கொண்டு தகுதி அடிப் படையில் வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். கடந்த 7ஆம் தேதியன்று சென்னை நடைபெற்ற திராவி டர் கழகத் தலைமைச் செயற்குழுவில்கூட இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சபாஷ் சரியான ஆணை: சாலைகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கத் தடை!


சென்னை, அக்.11-சென்னையில் பலர் அமா வாசை அன்று திருஷ்டி பூசணிக்காய் உடைப் பதை வழக்கமாக கொண் டுள்ளனர். குறிப்பாக சாலையின் நடுவே பூசணிக்காய்களை உடைக்கின்றனர். இத னால், அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத் தில் சிக்குகின்றனர். வரும் 13ஆம் தேதி ஆயுத பூஜை விழா கொண் டாடப்படுகிறது. அன் றைய தினமும் ஏராள மானவர்கள் பூசணிக் காய்களை உடைப்பார் கள். இதற்காக சாலை ஓர கடைகளில் விற் பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போக் குவரத்து பிரிவு காவல் துறை கூடுதல் ஆணை யர் கருணாசாகர் கூறு கையில் சாலையின் நடுவே திருஷ்டி பூசணிக் காய்களை உடைத்து போக்குவரத்திற்கு இடை யூறு செய்வது சட்டப் படி குற்றம். அப்படி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தமிழக அரசு வசம் உள்ள கோவில்களில் தீண்டாமை: டில்லியில் புகார்

புதுடில்லி, அக்.11- திருப் பூரில், தமிழக அரசின் வசம் உள்ள பல கோவில்களில் தாழ்த் தப்பட்ட மக்கள் சாமி கும்பிட அனுமதிக்கப் படுவதில்லை என்று டில்லியில் நடந்த தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மக்களின் முன்னேற்றத்திற்கான ஆலோ சனைக் கூட்டத்தில் தாழ்த்தப் பட்டோர் விடுதலை இயக்க துணைப் பொதுச் செயலாளர் கருப்பையா குற்றம்சாட்டினார். டில்லி விஞ்ஞான பவனில், தலித் மற்றும் தாழ்த்தப்படோர் மக்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோ பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி துவக்கிவைத்தார்.

கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உ.பி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலித் மற்றும் தாழத்தப்பட்ட அமைப்பு கள், அரசு சங்கங்கள் ஆகியவற் றின் பிரதிநிதிகள் கலந்து கொண் டனர். இந்த கூட்டத்தில் கலந்து கெண்ட தலித் விடுதலை இயக்க இணைப் பொது செயலாளர் கருப்பையா பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பல கோவில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவைகளில் தாழ்த்தப் பட்ட மக்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவதில்லை. மேலும், தமிழகத்தில் தீண் டாமை வன்கொடுமை சட்டத்தை முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை இந்த சட்டம் குறித்து ஆணையம் ஆய்வு நடத்த வேண்டும். அடுத்து, மத்திய அரசு தலித் மக்களுக்காக, தமிழகத்தில் சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் சுமார் ரூ 37 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதில் வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. எனவே, மீதி நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் சமூக நீதிக் கான மத்திய அமைச்சர் எல்சா குமாரி நிறைவுரையற்றினார்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்க உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு


அமெரிக்க நாட்டில் மதமும் அரசும் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. அரசு, மத விவகாரங்களுக்காக எந்தச் செலவும் செய்யக்கூடாது என்பது அந்த நாட்டு அரசியல் சட்டம் கூறுகிறது.

கடந்த 1979ஆம் ஆண்டு போப் வாஷிங்டன் நகருக்கு வருகை தந்தார். அப்போது போப் தொழுகைக்காக வாஷிங்டன் நகரில் ஒரு பிளாட்பாரம் கட்டப்பட்டது. இதற்காக நகர நிரு வாகம் சுமார் 200 ஆயிரம் டாலர்களைச் செலவிட்டது.

நகரத்தில் கட்டப்பட்ட பிளாட்பாரம் என்பதா லும், நகர மக்களுக்காகப் பயன்படக்கூடியது என்பதாலும், நகர நிருவாகத்தினரே இந்தச் செலவை ஏற்க வேண்டும் என்று சர்ச் நிருவாகம் கூறியது! இதையொட்டி தொடரப் பட்ட வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

போப் வருகையை ஒட்டித்தான் இது கட்டப்பட்டுள்ளது என்பதால், பிளமேல் ஃபியா சர்ச் நிருவாகம் இந்தப் பணத்தை நகர நிருவாகத்திடம் திருப்பித் தந்துவிட வேண்டு மென்று, மத விவகாரங்களுக்காக அரசு பணம் செலவிடுவது அமெரிக்க அரசியல் சட்டத் துக்கு முரணானதாகும் என்றும் தீர்ப்பு வழங்கி விட்டது.

தமிழ் ஓவியா said...

சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!



இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.

பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளரும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.

திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.

காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!

தகவல்: சங்கை வேலவன்

தமிழ் ஓவியா said...

கலைகள் - ஓவியங்கள்



சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம், பழைய சின்னங்களையும் - ஓவியங்களையும் - கலை களையும் அழித்து விடா தீர்கள் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தார் எந்தப் பழைய சின்னம், ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்றார்கள் என்று நான் கண்ணி யமாய் நினைக்கின்றேனோ அந்தச் சின்னமும், ஓவியமும், கலைகளுமேதான், நம்மையும், நம் மக்க ளையும் நமது நாட்டையும் பாழாக்கியதுடன் ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம் செய்து தீர வேண்டும்.

இல்லையேல் வேறு எந்த விதத்திலும் நமக்கு கதிமோட்சமில்லை என்று நினைக்கும்படியான நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

- தந்தை பெரியார், விடுதலை 30.1.1974

தமிழ் ஓவியா said...

திருடியவன் யார்?



ஒருவர்: அய்யா சாமியாரே! என் வீட்டில் ஒரு மாடு திருட்டு போய்விட்டது. அது இப்பொழுது எங்கு இருக்கிறது என்று சரியாக சொல்ல முடியுமா?

சாமியார்: அப்பனே எல்லாம் இறைவன் செயல். இதை எப்படி நான் சரியாகச் சொல்ல முடியும்?

ஒருவர்: அப்படியானால் என் மாட்டைத் திருடிக் கொண்டு போனது உங்கள் இறைவன்தானா?

எம்.ஆர்.ஓம்பிரகாஷ், சி.மெய்யூர்

தமிழ் ஓவியா said...


சிந்தனைப்பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின்றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

=======

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதா யுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டு மென்கின்றோம்.

=======

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

=======

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

=======

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால் தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக் கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளி பற்றிய மகிழ்ச்சிகரமான உச்சநீதிமன்ற தீர்ப்பு! கலைஞர் வரவேற்பு


சென்னை, ஆக.11- மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

கேள்வி: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள், அதன் துறைகள், நிறுவனங்கள் மற்றும் மய்யங்களில் 3 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறதே?

கலைஞர்: அனைவரும் ஒருமுகமாக வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சமூகத் தடைகள் காரணமாக வேலை வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின் றனர். இந்தத் தீர்ப்பின் மூலமாக அவர்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்.

மத்திய, மாநில அரசுகள் தங்களது துறை களில் உள்ள காலி இடங்கள் குறித்து விவரங் களைத் தொகுத்து அதனடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கவோ கூடாது.

இதனை மத்திய, மாநில அரசுகள் மூன்று மாதக் காலத்திற்குள் நிறை வேற்ற வேண்டும் என்ற தீர்ப்பினை வரவேற் கின்றேன். இந்தத் தீர்ப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசு களின் கடமையாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப் பினை வரவேற்று அறிக்கை விடுத்த தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள்கூட, தி.மு.க. ஆட்சியில் தான் ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி புது சொல்லாக்கமாக மாற்றுத் திறனாளிகள் என்று அரசுக் குறிப்புகளில் இடம்பெறச் செய்யப்பட்டது என்பதனையும், ஆனால் இன்றைய ஆட்சியில் அந்த மாற்றுத் திறனாளிகள் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார்கள் என்பதையும் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. ஆட்சியிலேதான் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியமே அமைக்கப்பட்டது. நான் திரைக்கதை வசனம் எழுதிய இளைஞன் படத்திற்காக எனக்குக் கிடைத்த 45 இலட்சம் ரூபாயைக்கூட மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காகத்தான் அளித்தேன்.

அப்படிப் பட்ட எனக்கு தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கின்றது. அந்தத் தீர்ப்பினை மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

- முரசொலி, 11.10.2013

தமிழ் ஓவியா said...


அக்.11: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்


இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பர் 19 ஆம் தேதி அய்.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக் கருத்து.

உலகில் அனைத்துப் பெண் குழந்தை களுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என அய்.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளுக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்படு கிறது.

இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல் வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணம்.

பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என அய்.நா., வலியுறுத்துகிறது.

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல் வதற்குத் தேவையான, போக்குவரத்து வசதி களை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தை களுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.

பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல்.

பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.

தொழில்நுட்ப கல்வி, கிராமப்புற மாணவி களுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.