Search This Blog

11.10.13

பெரியார் ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த உபசாரப் பத்திரமும் பதிலும்

ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த உபசாரப் பத்திரமும் பதிலும்

அன்பு கொண்ட நகரசபை தலைவரவர்களே! அங்கத்தினர்களே!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!!

கோவை நகரசபையின் சார்பாக எனக்கு வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் மிகுதியும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவனேயாவேன். ஆனால் அவ்வுபசாரப் பத்திரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று சொல்லுவேனேயானால் நான் உண்மையற்ற புகழை ஏற்றுக் கொண்டவன் என்னும் குற்றத்திற்காளானவனாவேன். ஏனெனில் தீண்டாமை விலக்கிலும், பொது நல சேவையிலும், அரசியலிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும் நான் ஏதோ பெரிய வேலைகள் செய்திருப்பதாக உங்கள் உபசாரப் பத்திரத்தில் புகழ்ந்து இருக்கிறீர்கள். உண்மையில் பார்ப்போமானால் அத் துரையில் பொது மக்களுக்கு என்ன காரியம் செய்திருக்கிறேன் என்று இன்று உங்கள் முன்னிலையில் நான் சொல்லக் கூடும்?

தோழர்களே! இந்தியாவில் பார்ப்பனர்களும் படித்த கூட்டத்தாரும் செல்வவான்களுமாகிய ஊரார் சரீர உழைப்பில் வாழ்வதற்கென்றே உயிர் வாழும் கூட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாதாருக்கு பாடு பட்டிருக்கின்றேன், ஏழைகளுக்கு பாடுபட்டிருக்கின்றேன், தொழிலாளிக்கு பாடுபட்டிருக்கின்றேன் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளுவதானால் அப்படி பட்ட அவர், நான் மாத்திரமல்ல மற்றும் எப்படிப்பட்ட தேச பக்தர் ஆனாலும், தேசீயவாதி ஆனாலும், தேசப் பாதுகாப்புக்காக தேச மக்களுக்காகவே உயிர் வாழ்கின்றேன் மூச்சு விடுகின்றேன் என்று சொல்லுபவர்களானாலும் அதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, அறிவுடைமையோ பலன் தரும் தன்மையோ இருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

பொதுநலசேவை என்பது புரட்டு

நான் வெகுநாளைக்கு முன்பதாகவே (ளுடிஉயைட ளநசஎiஉந ளை ய hரஅரெப) சோஷியல் சர்விஸ் இஸ் ஏ ஹம்பக். அதாவது சமூக சேவை என்று சொல்வது முழுப் புரட்டு என்றும் அதன் கருத்து பணக்காரர்களையும் முதலாளிகளையும் சோம்பேரிகளையும் காப்பாற்றக் கோட்டை கட்டுதல் என்றும் சொல்லி இருக்கிறேன். இந்த அபிப்பிராயம் எனது மேல் நாட்டு சுற்றுப் பிரயாணத்தில் முன்னிலும் அதிகமாய் பலப்பட்டது என்று தான் சொல்லுவேன். நான் ஸ்பெயினில் ஒரு பெண்ணினிடம் பேசிக் கொண்டி ருக்கும் போது அந்தம்மாள் பேச்சு சந்தர்ப்பத்தில் என் வேலை என்ன என்று கேட்ட காலத்தில் நான் சாதாரணமுறையில் ஏதோ என்னாலான பொது ஜன சேவை செய்கிறேன் என்று சொன்னேன். அதற்கு உடனே அந்தம்மாள் “பொது ஜன சேவை என்பது முழுதும் பித்தலாட்டம் என்றே நாங்கள் கருதுகிறோம்” என்று சொன்னார்கள். பிறகு நமது இயக்க விஷயத்தை சொன்ன பிறகு ஒரு அளவில் அந்தம்மாள் சரி என்று சொன்னார்கள். நமது நாட்டு பொதுஜன சேவை என்பதை என்ன என்று சற்றுயோசித்துப் பாருங்கள்.

தீண்டாமை விலக்கு

தீண்டாமை விலக்கு என்றால் ஒருவனைதொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டுவிடுவதாலும் தீண்டாமை விலகிப் போய் விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போது மென்று சொல்லி அதற்கே பெரிய புரட்சி செய்ய வேண்டி யதாய் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். அப்படிச் சொல்லுகின்றவர் களையே மகான்கள்-மகாத்மாக்கள்- பொது ஜன சேவைக்காரர்-தீண்டாமை விலக்கு வீரர்-வைக்கம் வீரர்-என்றெல்லாம் ஆக்கி விட்டோம்.

“கங்காதரா மாண்டாயோ என்ற ஒரு வண்ணாத்தி அழுகைக்குரல் அரசன் வீடுவரை அழச்செய்து விட்டது” என்ற கதை போல் இந்த காரியமே இப்போது தேசீய சேவையாய் - பொது ஜன சேவையாய் -–சுயராஜிய சேவையாய் - அன்னிய ஆட்சியை விரட்டி அடிக்கும் சேவையாய் ஆக்கப் பட்டு எங்கு பார்த்தாலும் இதே தப்பட்டை அடிக்கப் படுகின்றது. அது மாத்திர மல்லாமல் மக்கள் எல்லோராலும் அப்படியே கருதப்படுகின்றது. இதனால் எல்லாம் உண்மை தீண்டாமை எப்படி விலகும்? தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாதவனைத் தொடுவதும் அவனை “மோட்சத்திற்கு அனுப்ப” என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா? என்று கேட்கின்றேன். ஒரு மனிதனுக்கு சாப்பாடும் உடையும், இடமும், கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும் “செத்த பிறகு அனுபவிப்பதுமான மோக்ஷமும்” வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

தொடவும் கோவிலுக்குள் போகவும் விடப்பட்டு விட்டால் அவனுக்கு உண்டியும், உடையும், இடமும், கல்வியும் கிடைத்துவிடும் என்று சிலர் சொல்ல வருவார்கள். அப்படியானால் இன்று தொடவும், கோவிலுக்குள் போகவும் உரிமையுடையவர்களும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் அவற்றை அனுபவித்து வருபவர்களுமான மனிதர்கள் எல்லாம் இன்று சோறும், துணியும், குடிசையும், படிப்பும் உடையவர்களாய் இருக்கிறார்களா? என்பதை சிந்தித்துப்பாருங்கள். சோற்றுக்கும், துணிக்கும் வழியென்ன? என்று கேள்க்கும்போது கல்லில்போய் முட்டிக் கொள்ளக் கூட்டிவிட்டதால், அது பொதுநல சேவை ஆகுமா? ஜீவகாருண்யமாகுமா? சமதர்மமாகுமா? என்று யோசித்துப் பாருங்கள். அல்லது ஏழைகள் படும் கஷ்டத்துக்கு வழி என்ன என்று கேட்கும்போது ஒரு நாளைக்கு ஏதோ இரண்டு மூட்டை அரிசியை வேகவைத்துப் போட்டு தர்மத்துக்கு வந்து சாப்பிடுங்கள் என்று தண்டோறா அடித்துவிட்டால் ஏழைகளின் பசியாற்றிய சேவை ஆகிவிடுமா? என்று யோசித்துப்பாருங்கள். எனவே இப்படிப்பட்ட காரியங்களை நாணைய மானதும், பயன் தரத்தக்கதும், அறிவுடமையானதும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அரசியல்

நமது சுயராஜ்ஜியப் புரட்டும், ஸ்தல சுயாட்சிப்புரட்டும் இப்படித்தானே இருக்கின்றது. சுயராஜ்ஜியமென்றால் யாருக்கு என்று யோசித்துப்பாருங்கள். நாளைவரும் சுயராஜ்ஜியத்தில் 100-க்கு 90 மக்களாய் உள்ள ஏழைகளுக்கு என்ன புதியவசதி ஏற்படப்போகின்றது? ஏழைகள், தொழிலாளிகள், கடன் காரர்கள், ஏழை விவசாயக்கூலிகளான படிப்பில்லாதவர்கள் முதலாகிய மக்களுக்கு முறையே பணக்காரன், முதலாளி, லேவாதேவி, பாங்கிக்காரன், நிலச்சுவான், ஜமீன்தாரன், படித்த பார்ப்பனன் ஆகியவர்கள்தானே போய் பிரதிநிதிகளாக உட்காரப்போகின்றார்கள். தீண்டாதார்கள் என்பவர்கள் “இந்து மதத்தை விட்டுவிடுவோம், எங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும்” என்று கேட்டதின் பயனாய் சிறிது பிரதிநிதித்துவமாவது கிடைத் தது. கோவிலுக்குள் வாருங்கள் என்று சிலர் கூப்பிடுகின்றார்கள். மற்றபடி மேல்கண்ட வகுப்பாருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள். அவர்கள் குறைகளை நீக்கிக்கொள்ள அரசியலில் எங்காவது எந்த சட்ட சபைகளிலாவது இடமளிக்கப்பட்டிருக்கின்றதா? இதுபோல்தானே இன்று ஸ்தல சுயாட்சியும் இருந்து வருகின்றது.

முனிசிபல் கௌன்சிலிலோ, தாலூகா ஜில்லா போர்டுகளிலோ, பட்டக் காரர்களும், ஜமீன்தாரர்களும், வெள்ளியங்கிரிக் கவுண்டர்களும், ரத்தின சபாபதி முதலியார்களும், ஷண்முகஞ் செட்டியார்களும் மற்றும் இது போன்றவர்களும்தான் எங்கும் போட்டிபோட்டு அவரவர்கள் “பெரியவீட்டு” சொத்துகளைப்போல் பங்குபோட்டுக்கொள்ளுவதுபோல் மோதல்கள் நடக்கின்றனவேயொழிய உண்மையான ஏழை, கூலி, தொழிலாளி, பயிர் செய்பவன் போட்டி போடவோ வெற்றிபெறவோ முடிக்கின்றதா என்று பாருங்கள். சொத்தின் பேரிலும் படிப்பின் பேரிலும்தான் ஓட்டர் லிஸ்ட்டும், அபேட்சகர் லிஸ்ட்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறதே தவிர சொத்தும், படிப்பும் இல்லாத மக்கள் கதி என்ன? என்பதை யோசித்துப்பாருங்கள்.

தோழர்களே இந்த மாதிரியான பொது நல சேவை, சுயராஜ்ஜிய சேவை, தேசீய சேவை, தீண்டாமை விலக்கு சேவை ஆகியவைகளால் என்ன காரியங்கள் ஆகப் போகின்றது என்றுகருதி இருக்கிறீர்கள். நான் யாருடைய மனதையும் நோகும் படி செய்வதற்காகப் பேசவில்லை. என்னுடைய பொது நல சேவையையும், தீண்டாமை விலக்கு வேலையையும், சிலாகித்து சிலாகித்து திருப்பித் திருப்பி உபசாரப்பத்திரத்தில் எழுதிப் புகழ்ந்திருக்கிறீர்கள். நான் எப்படி அவைகளை ஒப்புக்கொள்ள முடியும். அதைக்கேட்டு நான் வெட்கப்படத்தானே வேண்டி யிருக்கிறது. உண்மையான பொதுநல சேவையோ தீண்டாமை விலக்கு வேலை நான் என்ன செய்துவிட்டேன்? இப்போது ஏதோ செய்யவேண்டும் என்று கருதுகிறேன் என்றாலும் அதற்கு எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு தொல்லைகள் இருக்கின்றன என்று யோசித்துப்பாருங்கள். நான் செய்ய நினைக்கும் பொது ஜனசேவை தீண்டாமை விலக்கு வேலை என்பவை மதத்துரோகம், கடவுள் துரோகம், ஜாதித்துவேஷம், வகுப்புத்துவேஷம், தேசீயத்துரோகம். ராஜத்துரோகம் என்றெல்லாம் ஆகிவிடுகின்றன. ஆகை யால் இந்நிலையில் சுலபத்தில், உண்மையான பொதுநல சேவையும், தீண்டாமை விலக்கு சேவையும், காரியத்தில் பயன்படும்படி செய்யமுடியும் என்று நான் நினைக்கவில்லை. பொது நல சேவை என்றால் என்ன? தீண்டாமை விலக்கு என்றால் என்ன? என்பதை மக்களுக்கு தெரியும்படி செய்தாலே போதும் என்று நினைக்கிறேன். அந்த வேலைதான் செய்ய வேண்டியது முக்கிய கடமையாய் இருக்கிறது என்று கருதியிருக் கிறேன்.

இந்த வேலை இந்தியாவுக்கு மாத்திரம் அவசியம் என்று நான் கருதிவிடவில்லை. “தீண்டாமை” என்பது இல்லாத ஊரிலும், அன்னிய ஆட்சி என்பது இல்லாத ஊரிலும், ஏகாதிபத்தியமோ, சக்கரவர்த்தியோ, ராஜாக்களோ இல்லாத ஊரிலும் இப்படித்தான் இருக்கிறது. “குபேர பட்டணம்” என்று சொல்லும் அமெரிக்காவிலும், சக்கரவர்த்தியை ஒழித்து சமதர்ம ஆட்சி நடத்தும் ஜர்மனியிலும், சொந்த தேச அரசர் ஆளும் இங்கிலாந்திலும், அரசரை விரட்டி அடித்த குடி அரசு நாடான ஸ்பெயினிலும் இந்த கதிதான் இருக்கிறது. சில இடங்களில் ஒரு கட்டிலில் பகுதி படுக்கையை வாடகைக்கு விட்டு ஜீவிக்கவேண்டி இருக்கின்றன. வெரும் சகிக்க முடியாத பட்டினிக்காகவே பெண்கள் தெருக்களில் வந்து கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு போய் விபசாரித்தனம் செய்து ஜீவிக்கவேண்டி இருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் முதலாளிகளின் ஆட்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றே உணருகிறேன்.

தோழர்களே! இவைகள் என் சொந்த அபிப்பிராயமே யொழிய தர்க்கித்து முடிவுகண்டு முடிந்த முடிவு என்று சொல்ல வரவில்லை. நான் பார்க் கும் கண்ணாடி துவேஷக் கண்ணாடியாய், பாரபட்சக் கண்ணாடியாய் இருக்க லாம். ஆகையால் நீங்கள் இவற்றை உங்கள் நடு நிலைக்கண்ணாடிகொண்டு பார்த்து உங்களுக்கு தோன்றியபடி நடவுங்கள் என்று சொல்லுவதோடு, மறுமுறையும் எனக்கு இவ்வித சந்தர்ப்பமளித்து ஊக்கமளித்ததற்காக உங்கள் எல்லோருக்கும் உங்கள் பிரதிநிதியாகிய கோவை முனிசிபல் அங்கத்தினர் களுக்கும் அவர்களது அக்கிராசனாதிபதி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

-------------------------------22.01.1933 இல் கோவை முனிசிபல் சங்கத்தாரால் வழங்கப்பட்ட உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து பேசிய உரை,"குடி அரசு" - சொற்பொழிவு - 29.01.1933

36 comments:

தமிழ் ஓவியா said...


நாடு எங்கே செல்லுகிறது?


தூத்துக்குடி மாவட்டம் கீழ்வல்ல நாட்டில் இன்பேன்ட் சீசஸ் என்ற பெயரில் பொறியியல் கல்லூரி ஒன்று நடைபெற்று வருகின்றது. அக் கல்லூரியில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பல முறை நிருவாகம் கண்டித்து வந்த நிலையிலும்கூட, மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் சிலரைக் கல்லூரி நிருவாகம் தற்காலிக நீக்கம் (Suspension)
செய்தது.

அதனால் ஆத்திரம் அடைந்த மூன்று மாணவர்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களைக் கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர் என்கிற செய்தி உண்மையிலேயே பெரும் அதிர்ச்சிக்குரியது. குருதியை உறையச் செய்யக் கூடியதாகும்.

நாம் நாட்டுக் கல்வியின் நிலை எந்தத் திசையில் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கும்பொழுது தலை சுற்றுகிறது!

உயர் நிலைப் பள்ளி அளவில் சென்னையில் ஆசிரியை ஒருவரை மாணவர் குத்திக் கொன்றார் என்ற செய்தியைத் தொடர்ந்து இப்படி ஒரு நிகழ்வு!

நம் நாட்டுக் கல்வி முறை ஆசிரியர்களின் செயல்பாடுகள், பெற்றோர்களின் கண்காணிப்பு, சமுதாயத்தின் போக்கு, அரசியல், சினிமா, ஊடகங்கள், இணையதளங்கள் இவை எல்லாமும் தான் இதன் பின்னணியில் இருக்கின்றன என்பதில் அய்யமில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணவர் களிடையே துப்பாக்கிப் புழக்கம் உண்டு; மாணவர்கள் வகுப்புகளில் புகுந்து சுட்டனர் - பலர் செத்தனர் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. அமெரிக் காவில் நடந்தது என்பதற்காக அதற்கு நியாயம் கற்பித்து விட முடியாது.

மாணவர்கள் என்றால் மார்க்கு வாங்குவது என்கிற அளவில்தான் நம் கல்வி முறை இருந்து வருகிறது.

தகுதி என்பது மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் வாங்குவது என்று தான் கருதப்படுகிறது. கல்வி அறிவை வளர்க்க வேண்டும்; அதே நேரத்தில் நல்ல பண்பாட்டை, ஒழுக்கத்தைக் கற்பிப்பதாக இருக்க வேண்டாமா? அதற்காக நம் பாடத் திட்டத்தில் என்ன வழி முறை இருக்கிறது?

மாலை நேர விளையாட்டு என்பதுகூட வெறும் உடல் நலம் என்று கருதி விடக் கூடாது. விளையாட்டு - தன்னம்பிக்கை, வெற்றி அதற்கான பயிற்சி, உழைப்பு என்கிற உணர்வுகளை உண்டாக்கக் கூடியதாகும்.

இன்றைக்குப் பல பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கூடக் கிடையாது. உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளிகளில் வேறு பணிக்கு பயன்படுத்தப்படும் அவலம்.

நாட்டு நலப் பணித் திட்டம், என்.சி.சி., ஏ.சி.சி. போன்ற பயிற்சிகள் இவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தும் பொழுது அவர்களின் சிந்தனையில் செறிவான எண்ணங்கள் மலரும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிருவாகிகளின் சந்திப்பு குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை ஏற்பாடு செய் யப்பட வேண்டும். அதில் நிறை - குறைகளைப்பற்றி கலந்து உரையாடினால், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பதெல்லாம் பெயர் அளவுக்குத்தான் இருக்கிறது. அதிலும் அரசியல் புகுந்து அதன் நோக்கத்தைக் கொன்று வருகிறது.

பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கண்காணிப்பு அறவே இருப்பதில்லை.

விஞ்ஞான வளர்ச்சி நல்லதற்குப் பயன்பட வேண்டும்; ஆனால் எதிர்மறையாகத்தான் அதிக மாக பயன்படுகிறது.

சினிமா, தொலைக்காட்சி, ஊடகங்கள், இணைய தளங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது, எல்லோருக்குமே தெரியும்.

தெரிந்து என்ன பயன்? அவற்றை நெறிப்படுத்த என்ன திட்டம் கைவசம் உள்ளது? அரசு என்ன செய்கிறது? என்று ஏராளமான கேள்விகள் உண்டு.

அ.இ.அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் கொலை, கொள்ளை, வழிப்பறி என்பது சர்வ சாதாரணமாக ஆகி விட்டது.

குற்றவாளிகள் உரிய காலத்தில் தண்டிக்கப்படுவ தில்லை. இதனால் குற்றப் புரிவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

சமூக ஆர்வலர்கள் இது குறித்தும், சிந்திக்கவும், வழி காட்டவும் கடமைப்பட்டுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தத் தவறினால் எதிர் காலம் கேள்விக் குறியாகி விடும். பள்ளிப் பருவத் திலேயே கொலை எண்ணம் வந்து விட்டால் நாடு காடாகித் தீருவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ் ஓவியா said...



மூட மக்கள்

ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக ஓயாது பாடுபட்டவர் வீரமணி


இளங்கோ யாதவ் - மாநிலத் தலைவர் சமாஜ்வாடி கட்சி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்திட போராடி வருகின்றார்கள். கடந்த 1989ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் வி.பி. சிங் அவர்கள் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்பு மண்டல் குழு பரிந்துரைப் படி 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முன் வந்தபோது இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா, வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மதவெறி அமைப்புகள் போராட்டம் வடமாநிலங்களில் நடத் தியபோது தமிழகத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய தலைவர்களை அழைத்து மத்திய அரசின் முடிவை ஆதரித்து தமிழகத்தில் மதவெறி சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்கச் செய்தவர் கி.வீரமணி ஆவார்கள். மேலும் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக போராடி வரு கின்ற முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத்யாதவ், கலைஞர் மு. கருணாநிதி, ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்களின் தலைமையில் போராட்டக் களங்களை தமிழகத்தில் தலைமையேற்று நடத்தக் கூடியவர் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், கடந்த 1995ஆம் ஆண்டு அன்றைய இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசில் கல்வி வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இடஒதுக் கீட்டை சட்டப் பூர்வமாக பாது காத்திட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது தமிழக முதல்வர் ஜெ. ஜெய லலிதா அவர்களுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து தமிழகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஏகோபித்த உணர்வுகளை வெளிப் படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக் காக சமூக நீதிக்காகவும் போராடி வருகின்ற கி.வீரமணி அவர்களை சமூக நீதிக்கு எதிரான மதவெறி கொள்கைக்கு ஆதரவாக உள்ள பாரதீய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்து மத வெறி அமைப்பு களுடன் சில சுயநல சக்திகள் இணைந்து கடந்த 28ஆம் தேதி கடலூர் மாவட் டம் விருத்தாசலத்தில் அவர்களை தாக்க முயற்சித்தனர். இதனை வன் மையாக கண்டிக்கின்றோம். மேலும் தமிழகம் முழுவதும் கி.வீரமணி அவர்கள் எங்கு சென்றாலும் தாக்குதல் நடத்துவோம் என ஒரு தொலைக் காட்சி வாயிலாக சில சுயநல சக்திகள் கூறி வருவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்து மத வெறி அமைப்புகள் மற்றும் சில சுயநல சக்திகளுடைய செயலினை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் சமூக நீதிக்காக போராடக் கூடிய கி.வீரமணி அவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டுமென தமிழக சமாஜ்வாடி கட்சி சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ தேர்வு


ஸ்டாக்ஹோம், அக்.11- 2013-ஆம் ஆண்டுக் கான இலக்கியத்துக் கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட் டுள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கி யத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த சிறுகதை தொகுப் பிற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஆலிஸ் மன்றோ 14 சிறுகதை தொகுப்புகளை வழங்கியிருக்கிறார். கடைசியாக 4 சுயசரிதை கதைகளுடன் கூடிய டியர் லைஃப் என்ற தொகுப்பை வெளியிட்டார். 82 வயதான ஆலிஸ், கதை எழுது வதில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13-ஆவது பெண் ஆலிஸ் மன்றோ ஆவார். நோபல் பரிசு தவிர, மூன்று முறை கனடாவின் கவர்னர் ஜெனரல் விருதினையும், 2009ஆம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேச பரிசையும் ஆலிஸ் மன்றோ பெற்றிருக்கிறார்.

கடந்த 1901ஆம் ஆண்டு முதல் 2012 வரை 106 பேர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் 17 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். ரவீந் திரநாத் தாகூர், ரட்யார்ட் கிப்ளிங், வி.எஸ்.நைபால் ஆகியோர் நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் ஆவர். கடந்த ஆண்டு இந்த பரிசு சீனாவின் மோ யானுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


கழகத் தீர்மானத்துக்கு வெற்றி! உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி

மதுரை, அக்.11- உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனு மதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத் தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட் டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆயுஷா பானு(வயது 33). இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

என் கணவர் பக்கீர் மைதீன், துபாயில் உள்ள ஒரு சோப் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சில பிரச் சினைகள் காரணமாக என் கணவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை கம்பெனி உரிமையாளர் பறித்துக்கொண்டு அனுப்பி விட்டார். தற்போது என் கணவர் முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மெக்காவில் தங்கி இருந்து அங்கு வருபவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாக தெரிவித் தார். கடந்த 21 மாதங் களாக அவர், கஷ்டப் பட்டு வருகிறார். எனது கணவரை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு விசா ரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வழக் குரைஞர் பகத்சிங் தமி ழில் வாதாட அனும திக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு அனுமதி மறுத்த தனி நீதிபதி, அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 348, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகிய வற்றில் வழக்காடு மொழியாக ஆங்கில மொழி தான் இருக்கும் என்று கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு அமர்வு உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன் றங்களில் ஆங்கிலத்தில் தான் வாதாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள் ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதே காரணத்தை கூறி கன்னி யாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கட்டட வரை பட அனுமதி கேட்டு தாக்கல் செய்த வழக் கையும் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேல் முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து ஆயுஷாபானு, சுந்தர்ராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய் தனர். இந்த மனு நீதிபதி கள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசா ரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், ஆயுஷாபானு, சுந்தர் ராஜன் ஆகியோர் தாக் கல் செய்த மனுக்களை தகுதி அடிப்படையில் தனி நீதிபதி விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட் டனர்.

இந்த வழக்குகளை பொறுத்தமட்டில் தமிழில் வாதாடிய காரணத்துக்காகவே தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி யின் உத்தரவை டிவிஷன் அமர்வு ரத்து செய்து இருப்பதன் மூலம் தமி ழில் வாதாட தடை யில்லை, தமிழில் வாதா டும் போது அதை ஏற்றுக் கொண்டு தகுதி அடிப் படையில் வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். கடந்த 7ஆம் தேதியன்று சென்னை நடைபெற்ற திராவி டர் கழகத் தலைமைச் செயற்குழுவில்கூட இது குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சபாஷ் சரியான ஆணை: சாலைகளில் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கத் தடை!


சென்னை, அக்.11-சென்னையில் பலர் அமா வாசை அன்று திருஷ்டி பூசணிக்காய் உடைப் பதை வழக்கமாக கொண் டுள்ளனர். குறிப்பாக சாலையின் நடுவே பூசணிக்காய்களை உடைக்கின்றனர். இத னால், அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத் தில் சிக்குகின்றனர். வரும் 13ஆம் தேதி ஆயுத பூஜை விழா கொண் டாடப்படுகிறது. அன் றைய தினமும் ஏராள மானவர்கள் பூசணிக் காய்களை உடைப்பார் கள். இதற்காக சாலை ஓர கடைகளில் விற் பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போக் குவரத்து பிரிவு காவல் துறை கூடுதல் ஆணை யர் கருணாசாகர் கூறு கையில் சாலையின் நடுவே திருஷ்டி பூசணிக் காய்களை உடைத்து போக்குவரத்திற்கு இடை யூறு செய்வது சட்டப் படி குற்றம். அப்படி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தமிழக அரசு வசம் உள்ள கோவில்களில் தீண்டாமை: டில்லியில் புகார்

புதுடில்லி, அக்.11- திருப் பூரில், தமிழக அரசின் வசம் உள்ள பல கோவில்களில் தாழ்த் தப்பட்ட மக்கள் சாமி கும்பிட அனுமதிக்கப் படுவதில்லை என்று டில்லியில் நடந்த தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மக்களின் முன்னேற்றத்திற்கான ஆலோ சனைக் கூட்டத்தில் தாழ்த்தப் பட்டோர் விடுதலை இயக்க துணைப் பொதுச் செயலாளர் கருப்பையா குற்றம்சாட்டினார். டில்லி விஞ்ஞான பவனில், தலித் மற்றும் தாழ்த்தப்படோர் மக்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம் அக்டோ பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி துவக்கிவைத்தார்.

கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உ.பி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலித் மற்றும் தாழத்தப்பட்ட அமைப்பு கள், அரசு சங்கங்கள் ஆகியவற் றின் பிரதிநிதிகள் கலந்து கொண் டனர். இந்த கூட்டத்தில் கலந்து கெண்ட தலித் விடுதலை இயக்க இணைப் பொது செயலாளர் கருப்பையா பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பல கோவில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவைகளில் தாழ்த்தப் பட்ட மக்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவதில்லை. மேலும், தமிழகத்தில் தீண் டாமை வன்கொடுமை சட்டத்தை முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை இந்த சட்டம் குறித்து ஆணையம் ஆய்வு நடத்த வேண்டும். அடுத்து, மத்திய அரசு தலித் மக்களுக்காக, தமிழகத்தில் சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் சுமார் ரூ 37 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதில் வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. எனவே, மீதி நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் சமூக நீதிக் கான மத்திய அமைச்சர் எல்சா குமாரி நிறைவுரையற்றினார்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்க உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு


அமெரிக்க நாட்டில் மதமும் அரசும் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கின்றன. அரசு, மத விவகாரங்களுக்காக எந்தச் செலவும் செய்யக்கூடாது என்பது அந்த நாட்டு அரசியல் சட்டம் கூறுகிறது.

கடந்த 1979ஆம் ஆண்டு போப் வாஷிங்டன் நகருக்கு வருகை தந்தார். அப்போது போப் தொழுகைக்காக வாஷிங்டன் நகரில் ஒரு பிளாட்பாரம் கட்டப்பட்டது. இதற்காக நகர நிரு வாகம் சுமார் 200 ஆயிரம் டாலர்களைச் செலவிட்டது.

நகரத்தில் கட்டப்பட்ட பிளாட்பாரம் என்பதா லும், நகர மக்களுக்காகப் பயன்படக்கூடியது என்பதாலும், நகர நிருவாகத்தினரே இந்தச் செலவை ஏற்க வேண்டும் என்று சர்ச் நிருவாகம் கூறியது! இதையொட்டி தொடரப் பட்ட வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

போப் வருகையை ஒட்டித்தான் இது கட்டப்பட்டுள்ளது என்பதால், பிளமேல் ஃபியா சர்ச் நிருவாகம் இந்தப் பணத்தை நகர நிருவாகத்திடம் திருப்பித் தந்துவிட வேண்டு மென்று, மத விவகாரங்களுக்காக அரசு பணம் செலவிடுவது அமெரிக்க அரசியல் சட்டத் துக்கு முரணானதாகும் என்றும் தீர்ப்பு வழங்கி விட்டது.

தமிழ் ஓவியா said...

சாமி ரெண்டு! ஆ-சாமி ரெண்டு!!



இன்னிசை இளவல் இளையராஜா, கவிஞர். கங்கை அமரன் அண்ணன் பாவலர் வரதராசன் மேடை இசைக் கலையில் வல்லவர். அவர் நடத்தும் இசைக்கலை நிகழ்ச்சிகள் உரையும், பாட்டுமாகத் தொடர்ந்து வரும்.

பகுத்தறிவு மணங்கமழ பல குட்டிக் கதைகளும் சொல்வார். சிந்தனையைக் கிளரும் கீழ்க்காணும் கதை அவற்றுள் ஒன்று.

திருப்பனந்தாள் சிவபெருமான், சீரங்கநாதன், மதுரைக் கள்ளழகன், காஞ்சி காமாட்சி, மாங்காடு மாரியம்மன், அன்னை அபிராமி... சாமிகள் பணக்கார சாமிகள்? ஆறுகாலப் பூஜை... புனஸ்காரம்.. ஆரத்தி.. தேரோட்டம்... திருவிழா... பொண்டாட்டி, புள்ளைக்குட்டி, வைப்பாட்டி, கள்ளப்புருஷன் இவைகளுக்குண்டு.

காடன், மாடன், மதுரைவீரன், பேச்சி, சடைச்சி, பத்ரகாளி சேரிச்சாமிகள்... ஊரின் ஒதுக்குப் புறத்திலே... சுடுகாட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கும் இந்த ஏழைச்சாமிகளுக்கு நாள்தோறும் நாய் அபிஷேகம் நடத்தும். காக்கை எச்சமிட்டு நைவேத்தியம் செய்யும். ஆக, சாமிகளும் ரெண்டு! ஆ-சாமிகளும் ரெண்டு!!

தகவல்: சங்கை வேலவன்

தமிழ் ஓவியா said...

கலைகள் - ஓவியங்கள்



சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம், பழைய சின்னங்களையும் - ஓவியங்களையும் - கலை களையும் அழித்து விடா தீர்கள் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தார் எந்தப் பழைய சின்னம், ஓவியம், கலை முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்றார்கள் என்று நான் கண்ணி யமாய் நினைக்கின்றேனோ அந்தச் சின்னமும், ஓவியமும், கலைகளுமேதான், நம்மையும், நம் மக்க ளையும் நமது நாட்டையும் பாழாக்கியதுடன் ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம் செய்து தீர வேண்டும்.

இல்லையேல் வேறு எந்த விதத்திலும் நமக்கு கதிமோட்சமில்லை என்று நினைக்கும்படியான நிலைக்குக் கொண்டு வந்து விட்டன.

- தந்தை பெரியார், விடுதலை 30.1.1974

தமிழ் ஓவியா said...

திருடியவன் யார்?



ஒருவர்: அய்யா சாமியாரே! என் வீட்டில் ஒரு மாடு திருட்டு போய்விட்டது. அது இப்பொழுது எங்கு இருக்கிறது என்று சரியாக சொல்ல முடியுமா?

சாமியார்: அப்பனே எல்லாம் இறைவன் செயல். இதை எப்படி நான் சரியாகச் சொல்ல முடியும்?

ஒருவர்: அப்படியானால் என் மாட்டைத் திருடிக் கொண்டு போனது உங்கள் இறைவன்தானா?

எம்.ஆர்.ஓம்பிரகாஷ், சி.மெய்யூர்

தமிழ் ஓவியா said...


சிந்தனைப்பூக்கள்

நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின்றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

=======

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதா யுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டு மென்கின்றோம்.

=======

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

=======

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

=======

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால் தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக் கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளி பற்றிய மகிழ்ச்சிகரமான உச்சநீதிமன்ற தீர்ப்பு! கலைஞர் வரவேற்பு


சென்னை, ஆக.11- மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

கேள்வி: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள், அதன் துறைகள், நிறுவனங்கள் மற்றும் மய்யங்களில் 3 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறதே?

கலைஞர்: அனைவரும் ஒருமுகமாக வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சமூகத் தடைகள் காரணமாக வேலை வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின் றனர். இந்தத் தீர்ப்பின் மூலமாக அவர்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்.

மத்திய, மாநில அரசுகள் தங்களது துறை களில் உள்ள காலி இடங்கள் குறித்து விவரங் களைத் தொகுத்து அதனடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 50 விழுக்காட்டிற்குமேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கவோ கூடாது.

இதனை மத்திய, மாநில அரசுகள் மூன்று மாதக் காலத்திற்குள் நிறை வேற்ற வேண்டும் என்ற தீர்ப்பினை வரவேற் கின்றேன். இந்தத் தீர்ப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசு களின் கடமையாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப் பினை வரவேற்று அறிக்கை விடுத்த தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள்கூட, தி.மு.க. ஆட்சியில் தான் ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி புது சொல்லாக்கமாக மாற்றுத் திறனாளிகள் என்று அரசுக் குறிப்புகளில் இடம்பெறச் செய்யப்பட்டது என்பதனையும், ஆனால் இன்றைய ஆட்சியில் அந்த மாற்றுத் திறனாளிகள் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார்கள் என்பதையும் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. ஆட்சியிலேதான் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியமே அமைக்கப்பட்டது. நான் திரைக்கதை வசனம் எழுதிய இளைஞன் படத்திற்காக எனக்குக் கிடைத்த 45 இலட்சம் ரூபாயைக்கூட மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காகத்தான் அளித்தேன்.

அப்படிப் பட்ட எனக்கு தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கின்றது. அந்தத் தீர்ப்பினை மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

- முரசொலி, 11.10.2013

தமிழ் ஓவியா said...


அக்.11: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்


இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பர் 19 ஆம் தேதி அய்.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக் கருத்து.

உலகில் அனைத்துப் பெண் குழந்தை களுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என அய்.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளுக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்படு கிறது.

இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல் வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணம்.

பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என அய்.நா., வலியுறுத்துகிறது.

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல் வதற்குத் தேவையான, போக்குவரத்து வசதி களை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தை களுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.

பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல்.

பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.

தொழில்நுட்ப கல்வி, கிராமப்புற மாணவி களுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்



ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ?
(விடுதலை, 21.3.1954)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் அல்ல கர்நாடகாவில்! விதவைப் பூசாரிகள்

மங்களூர் அருகே உள்ள குத்ரோலி கிராமத்தில் இருக்கும் கோகர்ணநாத ஈஸ்வரன் கோவிலில் இரு விதவைப்பெண்கள் மூலவருக்கு அர்ச்சனை நடத்தியுள்ளனர். அம்பாள் அன்னபூரணேஷ்வரிக்கும் அவர்கள் பூசை நடத்தினர். அவர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தீர்த்தமும் பிரசாதமும் அளித்துள்ளனர். வெளிர் மஞ்சள் புடவைகள் அணிந்து வந்த விதவைப் பெண்கள் இருவரும் மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனார்த்தன பூசாரி தலைமையேற்று நடத்தினார். ஒரு பெண் பூசாரி புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா சாந்தி என்றும் மற்றொருவர் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த மூடா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சாந்தி என்றும் அவர் அடையாளம் கூறினார். இவர்கள் இருவரும் மங்களூரில் உள்ள குரு மந்திராவில் வேதபாடங்களைக் கற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்திரா சாந்தி பீடி சுற்றும் தொழில் செய்து வந்தவர் என்று கோவில் வட்டாரங்கள் கூறின. இருவரும் கோவிலுக்குள் நுழைந்தவுடன் கேரளாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியும், கோவிலின் நிறுவனருமான சிறீநாராயண குருக்களின் சிலைக்கு முதலில் பூசை செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கு பூசை செய்தனர்.

தமிழ் ஓவியா said...


மந்திரிகள் நியமனம்


ஜஸ்டிஸ் கட்சி மந்திரிபதவியில் இருந்த காலத்தில் யாருக்காவது ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் செய்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நமது பார்ப்பனர்கள் ஒவ்வொரு பொய்க்கதையைக் கட்டி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தூஷித்துக் கொண்டு பாமர மக்களுக்கு அவ்வியக்கத்தினிடம் அருவருப் புண்டாகும்படி எவ்வளவோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து கொண்டு வந்தது பொதுஜனங்களுக்கு தெரிந்ததுதான்.

ஆனால் அம்மாதிரி நியமனங்கள் பார்ப்பனர்களுக் காவது அக்கோஷ்டியைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதாருக் காவது கிடைத்துவிட்டால் அதைப் பற்றி வெளியிலே பேசாமல் ரகசியமாக அனுபவித்துக் கொண்டு வந்ததும் யாவரும் அறிந்தது.

உதாரணமாக ஸ்ரீமான் சி.வி. வெங் கட்டரமண அய்யங்காருக்குக் கோயமுத்தூர் ஜில்லா போர்டுக்கு நியமனம் செய்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையாவது பேசவே இல்லை. அதே சமயத்தில் சென்னை முனிசிபாலிடிக்கு ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரை அதே மந்திரிகள் நியமனம் செய்த காலத்தில் கொல்லை வழி பிரவேசமென்று எழுதி இருந்தார்கள்.

அதற்குச் சமாதானமாக தேர்தலில் தோற்றவர்களை நியமணம் செய்வதுதான் கொள்ளைவழி பிரவேசமே யொழிய தேர்தலுக்கு நின்று வெற்றிபெறத் தக்க யோக்கியதை இல்லாதவர்களை நியமிப்பது கொல்லை வழிப் பிரவேசமல்லவென்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே குறிப்பிடப்போகும் சம்பவத்தை நமது பார்ப்பனர்கள் என்னவென்று சொல்வார்களோ? தெரிய வில்லை.

கோயமுத்தூர் ஜில்லா கல்விச் சபைக்குச் சமீபத்தில் நியமனம் செய்யப் பெற்றிருக்கும் மாதிரியும் அப்பொழுது சத்தம் போட்ட பார்ப்பனப் பத்திரிகை களுக்கு இப்பொழுது கண்ணே இல்லையா? புத்திதான் இல்லையா? என்பதும் வாசகர்களால்தான் நிர்ண யிக்கப்பட வேண்டும் அதாவது மேற்படி சபைக்குச் சமீபத்தில் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட ஸ்ரீமான், டி.எம். ராமசந்திரன் செட்டியார் என்பவர் ஜில்லா ஸ்தலஸ்தாபன மூலமாய் செனட்டிற்கு நின்று வெகு வித்தியாசமான ஓட்டுகளால் தோல்வி யுற்றவர்.

அதாவது இவர் பட்டதாரி என்கிற பெருமையு டையவராக இருந்து கோயமுத்தூர் டவுன் முனிசிபல் கவுன்சிலிலேயே 30 ஓட்டுகளுக்கு மேல் இருந்தும், இவருக்குப் போட்டியாக நின்றவர் பட்டதாரி அல்லாத வராக இருந்தும், வெளியூர்க்காரராக இருந்தும், அவருக்கு சுமார் 60 ஓட்டுகள் கிடைத்ததுமல்லாமல் திரு. செட்டியார் 10 ஓட்டுகள் தான் பெற்று தோல்வி யடைந்தார்.

எஜுகேஷன் கவுன்சிலுக்கும் கோயம்புத்தூர் முனிஸி பாலிடி மூலமாக நின்று வேறொரு பட்டதாரி அல்லாதவர் இவருக்குப் போட்டியாக நிற்க இவர் வெற்றி பெற முடியாமல் பின்வாங்கிக் கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது.

தவிர திரு. செட்டியார் அவர்களுடைய வகுப்பில் யாருக்கும் அந்த ஸ்தானமில்லை. ஆதலால் அவ்வகுப் பாருக்காக செட்டியாருக்குக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுவதாக இருந்தாலோ அதுவும் இல்லை. ஏனெனில் அதே வகுப்பில் ஸ்ரீமான் செட்டியார் குடும்பத்திலேயே ஸ்ரீமான் செட்டியாரின் தமயனாருடைய குமாரரின் மனைவியாரும் தமது சின்ன மாமனாரின் குமாரத்தியும் ஆகிய ஸ்ரீமதி லலிதாம்பாள் அவர்கள் ஏற்கனவே அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படியிருக்க தோல்வியுற்றவரும், அதே வகுப்பில் மற்ற ஒரு நியமனம் பெற்ற வகுப்பினரும் ஆகிய கனவானை எதற்காக மந்திரி நியமித்தார்? அந்தச் சபைக்கு லாயக்குள்ள வேறு கனவான்களாவது அல்லது அச்சபையில் பிரதிநிதித்துவமடையாத வேறு வகுப்பாராவது இல்லை என்கிற காரணத்தினாலா?

அல்லது மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கட்கு நியமனம் பெற்ற ஸ்ரீமான் செட்டியாரிலிருந்து முதலானது செய்து மரியாதை செய்தார் என்பதற்காகவா? இதைப் பற்றி எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது இதை அவர்களது நிருபர்களாவது பிரஸ்தாபித்தார்களா? எந்த சட்டசபை வாயாடிகளாவது வெளிப்படுத் தினார்களா என்று கேட்கின்றோம்? இது எப்படியோ இருக்கட்டும்.

இந்த நியமனத்தினால் பெரிய தீமையோ நன்மையோ ஏற்பட்டதாக நாம் சிறிதும் கவலைப் படவில்லை. அல்லது ஸ்ரீமான் செட்டியார் அந்த ஸ்தானத்திற்கு லாயக்கில்லாதவர் என்றும் சொல்வதற்கு வரவில்லை. நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளின் பேரில் சொல்லிக்கொண்டு வந்த குற்றங்களும் அவர்களுக்கு விரோதமாகச் செய்து கொண்டு வந்த பிரசுரங்களும் யோக்கிய மானதா? அயோக்கியத்தனமானதா? என்பதையும் இவை தேசத்திற்காகச் செய்யப்பட்டனவா? அல்லது பார்ப்பனர் ஆதிக்கத்திற்காகச் செய்யப் பட்டனவா? என்பதைப் பொதுஜனங்கள் அறிவதற்காகவே இதை குறிப்பிடு கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...


கோவில்பட்டி திராவிடர் கழகம் தலைமைச் சொற்பொழிவு


அன்பர்களே! நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றி சொல்லியவை யாவும் என்னிடம் உள்ள அன்பினா லல்லாது அவ்வளவும் உண்மை என்று தாங்கள் நம்பிவிடக் கூடாது என்று தங்களை கேட்டுக்கொள்ளு கிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன்.

அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவ ராயிருந்து நடத்திய பெருங்கிளர்ச்சியின்போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன். அன்றியும் நான் சிவஞான யோகிகள் வாசித்துக் கொடுத்த உபசாரப்பத்திர வாக்கியங்களுக்கும் நான் ஒரு சிறிதும் பொருத்தமுடையவன் அல்லன் ஆகிலும் அப்பத்திரத்தில் எனது கொள்கைகளைப் புகழ்ந்திருக்கும் விஷயங்களைப் பொருத்தவரை அக்கொள்கைக்கு அதை ஒரு நற்சாட்சிப் பத்திரமாக எடுத்துக்கொண்டு அதற்காக எனது நன்றியைச் செலுத்துகிறேன்.

இத்திராவிட சங்கம் 18ஆவது ஆண்டு விழா என்று சொல்லப்படுவதால் இதற்கு 18 ஆண்டுகள் முடிந் திருக்கிறது. நமது நாட்டில் திராவிடர் முன்னேற்ற சம்பந்தமாய் ஏதாவது இயக்கங்கள் மூலம் பேசுவதா யிருந்தால் நமது எதிரிகள் உத்தியோகத்திற்காசைப்பட்ட யாரோ சில பார்ப்பனரல்லாதாரால் சமீபத்தில் திரா விடர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சுயநல இயக்கம் என்று சொல்லிவருவது உங் களுக்குத் தெரியும் ஆனால் இக்கழகம் அப்பேர்ப்பட்ட வர்களால் ஆக்கப்பட்டதா என்பதும் சுவாமி சிவஞான யோகிகள் ஏதாவது உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு கிடைக்காமல் போனதற்காக ஆரம்பித்தாரா என்பதையும் அவருக்கு ஏதாவது உத்தியோகம் வேண்டியிருக் கிறதா என்பதையும் திருவள்ளுவருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, புத்தருக்கு உத்தியோகம் வேண்டி இருந்ததா, கபிலருக்கு உத்தியோகம் வேண்டி இருந்ததா, அவ்வைக்கு உத்தியோகம் வேண்டி இருந்ததா என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

அன்றியும் சுவாமி சிவஞான யோகிகள் காலத்தில் மாத்திரம் இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்பதாக நினைக்கிறீர்களா என்று இந்த நாட்டில் ஆரியர்கள் என்று கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர்-திராவிடர் என்கிற வேற்றுமையும் ஆரியர் சங்கம், திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதை கிளர்ச்சிகளும் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவைகளை எவ்வளவோ பாடுபட்டு நமது எதிரிகள் மறைக்க முயன்றாலும் இயற்கைத் தத்துவம் மறைக்கமுடியாமல் செய்துவருகிறது.

எதுவரையில் ஆரியர் வேதம் என்பது நமது நாட்டில் இருக்குமோ எதுவரை ஆரியர் ஆதிக்கம், ஆரியதர்ம பிரச்சாரசபை, வருணாசிரம தர்ம பிரச்சாரசபை நமது நாட்டில் இருக்குமோ அதுவரை நமது இயக்கம் அதாவது திராவிடர் முன்னேற்ற இயக்கம், சுய மரி யாதை இயக்கம், சமரச இயக்கம் இருந்து தீர வேண்டியதுதான்.

சமீப காலத்தில் ஆரியர்களால் தஞ்சை ஜில்லா துவார் என்கிற கிராமத்தில் கூட்டப்பட்ட பிராமண சம்மேளனம் என்னும் கூட்டத்தை அதன் நடவடிக் கைகளையும் பார்த்தவர்களும் இம்மாதிரி இருக்கப்பட்ட சங்கங்கள் அவசியமா இல்லையா என்பது யாவருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும் நமது நாட்டில் மதம் அடங்கிய வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் முதலியவை களின் பேரால் ஆரிய பிரச்சாரம் செய்துவரும் வரையில் நாம் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டு இருந்து தீரவேண்டியதுதான். எனவே இம்முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்.

- குடிஅரசு- சொற்பொழிவு - 26.06.1927

தமிழ் ஓவியா said...


ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (15.10.2013)


1. வாழ்க வாழ்க வாழ்கவே,
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே,
தமிழர் தலைவர் தலைமையிலே
பணி முடிப்போம், பணி முடிப்போம்!

4. மத்திய அரசே மத்திய அரசே!
புறக்கணிப்பாய், புறக்கணிப்பாய்!
இலங்கையில் கூடுகின்ற, இலங்கையில் கூடுகின்ற
காமன்வெல்த் மாநாட்டை, காமன்வெல்த் மாநாட்டை
புறக்கணிப்பாய், புறக்கணிப்பாய்!

5. இனப்படு கொலையாளன்
இனப்படு கொலையாளன்
ராஜபக்சே தலைமையில்,
ராஜபக்சே தலைமையில்
கூடுகின்ற, கூடுகின்ற
காமன்வெல்த் மாநாட்டை, காமன்வெல்த் மாநாட்டை
புறக்கணிப்பாய், புறக்கணிப்பாய்!

6. மத்திய அரசே, மத்திய அரசே
வழங்காதே, வழங்காதே!
இலங்கை அரசுக்கு, இலங்கை அரசுக்கு
போர்க்கப்பலை, போர்க்கப்பலை
வழங்காதே, வழங்காதே!

7. தமிழர்களைக் கொன்று குவித்த
தமிழர்களைக் கொன்று குவித்த
இனவெறி அரசுக்கு, இனவெறி அரசுக்கு
போர்க்கப்பலா? போர்க்கப்பலா?
தமிழன் என்றால், தமிழன் என்றால்,
நாதியற்ற நாதியற்ற
கும்பலா, கும்பலா?

8. மத்திய அரசே, மத்திய அரசே!
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து
தமிழக மீனவர்கள், தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவதை தாக்கப்படுவதைத்
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து!

9. கச்சத்தீவை கச்சத்தீவை!
மீட்டெடு, மீட்டெடு!
தமிழக மீனவர்களை தமிழக மீனவர்களைக்
காத்திடு, காத்திடு!

10. போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும்வரை, வெற்றி கிட்டும்வரை
போராடுவோம், போராடுவோம்!

11. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே,
தமிழர் தலைவர் தலைமையிலே,
பணி முடிப்போம், பணி முடிப்போம்!

12. வெல்க, வெல்க, வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

தமிழ் ஓவியா said...


விஷ வித்து

-அவிஜெய்

1) அண்ணனுக்கு ஒரு தம்பியுண்டு - அவர்
அன்புடன் வாழ்ந்திட்ட காலம் உண்டு;
அண்ணனுக்குப் பிள்ளை நூறு என்பார் - தம்பி
ஐந்து பிள்ளைகளின் தந்தையானான்!ஹீ

2) மூத்தவன் பிள்ளைகள் கவுரவராம் - தம்பி
பாண்டுவின் புத்திரர் பாண்டவராம்!
நேத்திரம் இல்லாத அண்ணன் மகன் - அங்கு
நாட்டினை ஆண்டிடல் நீதியென்றார்!

3) பாசமும் நேசமும் போனதப்பா - பகைப் பங்காளிகள் என்று ஆனதப்பா;
தேசம் துண்டுதுண்டாய் மாறினதே - கொடும்
சூதாட்டம் பேயாட்டம் ஆடினதே!

4) சொத்து, சுகம், வீடு வைத்திழந்தான் - தங்கள்
தந்தையர் நாட்டினை வைத்திழந்தான்;
புத்திர, மித்திரர் வைத்திழந்தான் - அந்தப்
பாண்டவர் மூத்தவன் தர்மன் என்பான்!

5) தம்பியர் நால்வரை வைத்திழந்தான் - பின்னர்
தன்னையே தோற்றவன் தலைகுனிந்தான்!
எஞ்சியது ஒன்று உண்டல்லவா - உங்கள்
ஐவருக்கும் அவள் பெண்டல்லவா?

6) சோதரன் சொற்படி சூதுவைத்தான் -அந்தோ
தங்கக்குலமகள் நாதியற்றாள்!
பாதகன் துரியனே வென்றுவிட்டான் - அவன்
பாரதப் பண்பினைக் கொன்று விட்டான்!

7) சேலை உரிந்திடு! ஆணையிட்டான் , - ஐவர்
சேர்ந்தவள் விலைமகள்! ஊளையிட்டான்! - கதை
மாலையும் காலையும் கேட்டலுத்தார் - மக்கள்
மங்கையின் மாண்பினைப்போட்டுடைத்தார்.

8) சினிமாவில் ஆடிடும் பெண்கள் பலர் - மூடும்
சேலையே இல்லாமல் ஆடுகின்றார்!
மனித உடல் வைத்துச் சூதாடுவார் - ஒரு
மங்கையை நூறுபேர் கூறாடுவார்.

9) அனுதினம் டி.வி.யில் பெண் விருந்து - வஸ்த்ர
அபகரணம் தினம் கண்விருந்து!
வினைவிதைத் திட்டனர் ஓரிடத்தில் - விஷ
விருட்சமானது பாரதத்தில்!

தமிழ் ஓவியா said...


எல்லோரும் தமிழரென்றால் ஏன் நமக்குள் சாதிமத பேதம்?


- வீ.இரத்தினம், பெங்களூரு

மானத்தோடு தமிழர்கள் நாம்
மதிப்பாய் வாழவேண்டு மென்றால்,
முதலில் நாம் ஒன்றுபட வேண்டும் - வேற்றுமை
உணர்வுகளைக் கொன்றுவிட வேண்டும்.
ஈனமுற்று ஊனமுற்று
இருப்பதை நாம் ஒழித்துவிட்டு,
இரும்புத்தூண்போல் நிமிர்ந்துநிற்க வேண்டும் - கழகத்தமிழ்
ஏடுகளை முனைந்து கற்கவேண்டும்

கழகத்தமிழ் ஏடுகளைக்
கசடறநாம் கற்கா விட்டால்
கடந்தகால உண்மை தெரியாது - நம்மைக்
கவிழ்த்து விட்டோர் சூதும் புரியாது.
இழந்துவிட்ட பெருமைகளை
இப்போதே நாம் மீட்காவிட்டால்
அன்னைத் தமிழ் நாடுநமக்கில்லை - இதை
ஆராய்ந்து நீ ஏன் உணரவில்லை

எல்லோருமே தமிழரென்ற
எண்ணத்தை நாம் கொண்டிருந்தால்
ஏன் நமக்குள் சாதிமத பேதம் - இதை
ஒழிக்காதது ஏன் இறையவன் வேதம்?
வெல்லத்தமிழ் இலக்கியத்தை
விலக்கிவிட்டுக் கண்ணைமூடி
வீழ்ந்தோமே நாம் வீணர்களின் வழியில் - தனித்தனியே
தாழ்ந்தோமே நாம் சாதிப்படுகுழியில்

கடவுள் மதம் சாதி என்று
கண்ணை மூடி நம்பவைத்து
காலடியில் போட்டு மிதித்தாரே! - கேள்வி
கேட்கக்கூடாதென்றும் விதித்தாரே!
திடமாய் இதை எதிர்த்து வந்த
தந்தை பெரியார் வழிதான்
தீமைகளைக் கொல்லுமடா தம்பி - அதனால்
திரள்வோம் ஒன்றாய் அவர் வழியை நம்பி.

தமிழ் ஓவியா said...


வழக்கும் இல்லே வாய்தாவும் இல்லே!


- சிவகாசி மணியம்

கிட்டுப் பயல இப்படியே விட்டுவைக்கக் கூடாதுப்பா. பஞ்சாயத்து போர்டு தேர்தல்ல நம்மை எதிர்த்துவேலை செஞ்சான். அதோட விட்டானா? பஞ்சாயத்துல ஊழல்னு பெட்டிசன் மேல பெட்டிசன் போட்டுக்கிட்டிருக்கான். எத்தனை நாளைக்கு பொறுக்க முடியும்? ஏதாவது செய்தாகணும் வீருசாமி என்றார் அவ்வூர் ஊராட்சித் தலைவர் மாடசாமி

என்ன செய்யணும் சொல்லுங்கண்ணே...

கைய கால எடுத்துட்டு நொண்டி நொடமா அவன் அலையணும். நான் பார்க்கணும்...

அதெல்லாம் வெட்டி வேலைண்ணே. போலீசு, கோர்ட்டு, கேசுன்னு நாமதான் அலையணும். காதும் காதும் வச்ச மாதிரி கச்சிதமா முடிக்கணும். செஞ்சது யார்னு தெரியப்படாது...

மண்டையில இருக்குதே அதுக்கு கொஞ்சம் வேலை கொடுத்துப் பாரு

மண்டைனு சொன்னீங்களா. உடனே மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. இப்படி கொஞ்சம் காதக் கொடுங்க... மாடசாமியின் காதில் மட்டும் கேட்கும்படி எதையோ சொன்னான் வீருசாமி. அவனது கையைப் பிடித்து குலுக்கியபடி பிரமாதம் அருமையான அய்டியா அதுபடி செஞ்சிரு. எவ் வளவு செலவானாலும் சரி என்றான் மாடசாமி

அந்த நாளும் வந்தது. வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழா நேர்த்திக் கடன் கழிக்கும் நாள். ஆணும், பெண்ணுமாக பக்தர்கள் வரிசை கட்டி உட்கார்ந்திருந்தார்கள். பூசாரி ஒருவன் சாமி ஆடியபடி வந்து கொண்டிருந்தான். அவனுடன் வந்த இன்னொரு பூசாரி கூடையிலிருந்து ஒவ் வொரு தேங்காயாய் எடுத்துத் தர, எதையோ முணுமுணுத்தபடி பக்தனின் மண்டையில் போட்டு உடைக்க பதற்றமும் பரபரப்பும் அங்கிருந்தோர் எல்லோரிடத்திலும்!

அந்த வரிசையில் கிட்டு பூசாரியை எதிர் பார்த்து உட்கார்ந்திருந்தான். மாடசாமியும் வீருசாமியும் ஓர் ஓரமாய் நின்றபடி நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் முழுக்க சாம்பல் பூச்சும் மாலையும் கழுத்துமாய் கிட்டு அருகில் பூசாரி வந்தபோது அவன் கையில் தேங்காய் ஒன்று தரப்பட்டது... அவன் மண்டையில் போட்டபோது அது உடையவில்லை. மறுபடியும் பூசாரி தன் பலத்தை பிரயோகித்தபோது தேங்காய் மட்டுமா உடைந்தது? கிட்டுவின் மண்டையும் தான். இரத்தம் ஊற்றெடுத்து அவன் உடலை நனைத்தது. கிட்டு மயங்கி விழுந்தான். உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்தார்கள்.

மருத்துவ மனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லும் பணி துரித கதியில் நடந்தது. ஆத்திரம் தீர அந்தக்காட்சியை நான்கு கண்கள் மட்டும் பார்த்து ரசித்துக் கொண் டிருந்தன.

பூசாரிக்கு நாம கொடுத்த பணம் வீண் போகலே... என்று மாடசாமியின் காதில் கிசு கிசுத்தான் வீருசாமி!

தமிழ் ஓவியா said...


மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அத்திப்பழம்!


அத்திப்பழம் ஆரோக்கியமான அழகைத் தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள் பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனைக் கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலா னோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத் தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவு கள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப் பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ப்பெருள் அத்தியில் காணப்படுவ தால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

தமிழ் ஓவியா said...


மனச்சாட்சியை விற்காதீர்!


தமிழ்நாட்டில் நான் செய்துள்ள சிறிய தொண்டை முன்னிட்டும், எமது மேல்நாட்டுப் பிரயாணத்தை முன்னிட்டும் எம்மை உபசரிக்கும் நோக்கமாகச் செய்த வந்தனோபசாரங்களுக்கு நான் எனது உண்மையான நன்றியறிதலைச் செலுத்துகிறேன்.

நீங்கள் என்னை அதிகம் புகழ்ந்து விட்டீர்கள். இருந்தும் எனது கொள் கையை நீங்கள் பூரணமாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள் என்று இதனால் எனக்கு தோன்றுகிறது.

இன்று உலகத்தில் விடுதலையின் பேரால், சுதந்திரத்தின் பேரால் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன.

மனிதாபிமானம், தேசாபிமானம், கடவுளபிமானம் என்ற பேரால் எத்தனை பேர் வயிறு பிழைக்கின்றனர்.

லட்சக்கணக்கான நமது சகோதரர், உடன் பிறந்தார், ஊனுடையின்றிக் கஷ்டப்பட்டுச் சாகின்ற இந்நாட்களில் அவர்களுடைய இன்னல்களை நீக்க வழி தேடுவதை விட்டுக் கடவுளைப் பற்றிப் பேசி என்ன பயன்?

நாம் ஆலோசனைக்காரர்
அதுவே நமது கொள்கை;
அதுவே சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை

நமக்குத் தோன்றுகிற எண்ணங் களை ஆலோசித்து அலசிப்பார்க்க வேண்டும்.

அதற்குப் பயப்படக்கூடாது.

எனக்குக் கடவுளைப் பற்றியே கவலையில்லை.

உலகத்தில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?

அது போல் கடவுளும் ஒருவர் இருக் கட்டும் அதைப்பற்றி என்ன விசாரம்?

ஆனால் நாள் முழுவதும் பாடுபட்டும் வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப் பார் என்றால் நமது மதப்பிரசாரகர்கள் கடவுளைப் பார் என்கின்றார்கள்.

மக்கள் கஷ்டத்தினின்றும் விடுதலை யடைய வேண்டும்.

இதற்குச் சம்மதமான கடவுள் இருக் கட்டும் மற்றக் கடவுள்கள் வேண்டாம்.

இவ்வளவு தான் நாம் சொல்வது.

மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ண முடியாத தேசாபிமானம் வேண்டாம்.
தேசாபிமானம் நாளைக்கு;

இன்றைக்கு வயிற்றுச் சோற்றுக்கு
விசயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள்.

பார்த்து அதற்கேற்றவாறு நட வுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.
நான் மனிதன்.

என் அறிவைக் கொண்டு விஷ யங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன்.
ஒன்றையும் வெறுக்க வேண்டாம்.
ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம்.

அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள்.

இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனசாட்சியை விற்றுவிட வேண்டாம்.

(நூல்: அய்ரோப்பாவில் பெரியார், பக், 37)

தமிழ் ஓவியா said...


ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!


இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. அதை பற்றி விளக்கமாகப் பேசுகிறார் குழந்தை யின்மை சிகிச்சை மருத்துவர் மகா லட்சுமி.

நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு கல்லீரல் பழுதடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். வேலை செய்யாத கல்லீரல் பகுதியில் அவரது ஸ்டெம் செல்களை செலுத்தினால், அந்த செல்கள் கல்லீரல் செல்களாகவே மாறி, ஊட்டம் கிடைத்து, அந்த உறுப்பின் வளர்ச்சிக்கு உதவும். இப்படி இன்று சிறுநீரகம், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்பு மாற்று சிகிச்சை களுக்கும் ஸ்டெம் செல் பயன்படுகிறது. அதே டெக்னிக்தான் குழந்தையின்மை சிகிச்சையிலும் பயன்பட ஆரம்பித் திருக்கிறது.

பெண்களின் கருப்பையின் உள் சுவர் என்டோமெட்ரியம் எனப்படும். மாதவிலக்கின் போது அது உறைந்து, ரத்தப் போக்காக வெளியேறும். மாதவிடாய் நின்றதும், மறுபடி அந்தச் சுவர் வளர ஆரம்பிக்கும். கருத்தரித்து விட்டால், அது உறையாது. அதில்தான் கருவானது ஒட்டி வளர ஆரம்பிக்கும். பெண்களுக்கு வயது கூடக் கூட, அதாவது, மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போது, இந்த என்டோ மெட்ரியம் வளர்ச்சியும் குறைய ஆரம்பிக்கும்.

30 பிளஸ்சிலேயே சில பெண்களுக்கு திசுக்களின் பாதிப்பினால், இந்த என்டோமெட்ரியம், ப்ரீ மெச்சூர் ஏஜிங் எனப்படுகிற முன்கூட்டிய முதுமை நிலையை அடையும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை என இதற்கு எத்தனையோ கார ணங்கள்... அதன் தொடர்ச்சியாக, குழந்தையின்மைக்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும், கடைசியில் கருவானது, ஒட்டாமலேயே போகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தவிர இவர் களுக்கு வேறு வழியில்லை.

ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலி லிருந்தே ஸ்டெம் செல்களை எடுத்து, உடனடியாக கருப்பையின் உள்ளே செலுத்தி, என்டோமெட்ரியத்தை வளரச் செய்யலாம். அதன் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவானது ஒட்டி, நன்கு வளரும் என நிரூபிக்கப்பட்டு வரு கிறது.

ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு, அடுத்த மாதவிலக்கு வரும் வரை காத்திருந்து, என்டோமெட்ரியம் வளர்ச்சியடைகிறதா எனப் பார்த்து, பிறகு குழந்தையின்மைக்கான சிகிச் சையைத் தொடரலாம். குழந்தை யில்லாத தம்பதியருக்கு இது நிச்சயம் இனிப்பான செய்தியாக அமையும்... என்கிறார் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் மகாலட்சுமி.

தமிழ் ஓவியா said...


கொள்கைக்கா - வருமானத்திற்கா?


கும்பகோணத்தில் ஆர்.சி. வெங்கட்ராமன் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். தந்தை பெரியார் அபிமானி. 1928இல் குற்றாலத்திற்குக் குடும்பத்துடன் சென்று தங்கி இருந்தார். தந்தை பெரியார் அவர்களும் அந்தக் கால கட்டத்தில் குற்றாலம் சென்று தங்கினார். ஒரு நாள் காலை குற்றாலத்தில் மத்தாளம் பாறை பாட்டையில் தந்தை பெரியார், குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன், தந்தை பெரியாரின் மாப்பிள்ளை ஆகிய மூன்று பேரும் பேசிக் கொண்டு சென்றார்கள்.

அப்பொழுது குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் தந்தை பெரியாரிடம் கூறினார். நமது குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தாதார் சேரும்வரை இராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரைகளை நிறுத்தி வைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். உடன் வந்த மாப்பிள்ளையும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு இதைப் பெரியார் ஏற்க மறுக்கிறார் என்றும் கூறினார்.

அதற்குத் தந்தை பெரியார் புன்னகையுடன் பதில் கூறினார்.

நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை; ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும் நான் எனது கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா என்று பளிச் சென்று பதிலளித்தார்.

- குடந்தை ஆர். வெங்கட்ராமன் எழுதிய கட்டுரையிலிருந்து விடுதலை 17.5.1959)

தமிழ் ஓவியா said...


கவிதைக்குப் பாராட்டு!



06.10.2013 தேதியிட்ட விடுதலை - ஞாயிறு மலரில் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் படைத்து எழுதியுள்ள இடியும், அடியும் இனி யாருக்கு? ஓர் அரிய கவிதைப் படைப்பு. கழகத்தின் பாரம்பரிய அடிப்படை மாண்புகளில் ஒன்றான, உணர்ச்சி பிரவாகத்தின் சுழற்சிகளிடையே அறிவும், பண்பும், அடிப்படை மனித உறவைச் சிதைக்காத நாகரிகமும் என்ற கோட்பாடு, மிகத் தெளிவாகவே காணக் கிடக்கிறது.

அடித்தவன் பெயர் யாருக்கடா தெரியும்? அடிபட்டவர் அல்லவா ஒளிர்கிறார் என்ற வரிகள், அவரின் முதிர்ச்சியையும், பண்பையும், காட்டுவது மட்டுமின்றி, ஒரு மிக உயர்ந்த கவிதை வளத்தையும் காட்டுகிறது. அடைவடிஉ ழுசயனே ளுவலடந என அறியப்படும் எளிய சொற்கள் அரிய கருத்துக்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளன.

கவிஞருக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பேராசிரியர் எஸ்.எஃப்.என். செல்லையா, சென்னை-40

தமிழ் ஓவியா said...

யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்த உத்தரவு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடில்லி, அக்.13- வாக்குப்பதிவு இயந்திரத்தில், யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்றால், வேட்பாளர்களை புறக்கணிக்கும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி தரவேண் டும் என்று கோரி, சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு அதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும், இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட் பாளர்களின் பெயர் பட்டியலுக்கு அடியில் யாருக்கும் வாக்கு இல்லை (ஆங்கிலத்தில் நோட்டா) என்ற வாசகத்துடன் ஒரு பொத்தானை அமைக்க வேண் டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள், தற்போது அதற்காக வாக்குச் சாவடியில் வைக்கப்படும் பதிவேட்டில் கையெழுத் திடும் முறை ரகசியத்தை காப்பதாக இல்லை என்பதால் அந்த முறையை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ் தான், மத்தியபிரதேசம், டில்லி, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் யாருக்கும் ஓட்டு இல்லை என்ற வசதியை ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் முடிந்ததும் கடைசியாக, யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகத்தையும் அதற்குரிய பொத்தானையும் அமைக்க வேண்டும். யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற வேண்டும்.

ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்கும் வட கிழக்கு மாநிலங்களில், யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கையின் போது, யாருக்கும் வாக்கு இல்லை என்று பதிவான ஓட்டுகளையும் எண்ணி அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்தி செயல்படுத்த தேவையான பயிற்சிகளை தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


சி(ற)வப்புப் பூஜை!


கொல்கத்தாவில் துர்கா பூஜை விமர்சை யாகக் கொண்டாடப்படும் மூடப் பண்டிகை. மார்க் ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில்கூட துர்கா பூஜைக்குத் தான் அரசு விழா முன் பணம் வழங்கப்படும்.

தோழர் ஜோதிபாசு அவர்கள் தலைமையி லான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராகவிருந்த சுபாஷ் சக்ரவர்த்தி கொல் கத்தா காளி கோயிலுக் குச் சென்று நேர்த்திக் கடன் கழித்து, கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் அளவுக்கு (2006 செப்டம்பர்) துர்க்கா பூஜை பெரும் பாதிப்பை அங்கு ஏற் படுத்தி விட்டது. (முதல் வர் ஜோதிபாசு அதனைக் கண்டித்தார் என்பது மகிழ்ச்சியான சேதி!)

இப்பொழுது ஒரு தகவல் கொல்கத்தாவிலி ருந்து கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவில் குறிப் பாக சோனாக்க்ஷி பகுதி யில் சிவப்பு விளக்குப் பகுதியில் 10 ஆயிரம் பாலியல் தொழிலாளர் கள் இருக்கிறார்கள். ஆசியாவிலேயே இங்கு தான் அதிகம்!

அவர்களுக்கு மட்டும் பக்தி இருக்காதா? இவர் கள் துர்கா பூஜைக்காகத் தனிப் பந்தல் அமைத்துப் பூஜை கொண்டாடுகிறார் கள் என்பதுதான் அந்தத் தகவல்!

ஆயுதப் பூஜை கொண் டாடுவது சாதாரணமான தல்ல; செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் தெய் வத்துக்குச் சமமாக தொழிலுக்குத் தேவைப் படும் தளவாடங்களை, கருவிகளைக் கும்பிடு வது அவசியம் அல்லவா? என்று வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கங்களைச் சொல் லுவதுண்டு பக்த சிரோன் மணிகள்.

தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில், போகிற போக்கில் சில கேள்விகளைக் கேட்ப துண்டு. ஆயுத பூஜையில் நகரசுத்தி தொழிலாளி எதை வைத்துப் படைப் பான்? விலை மகளிர் (அந்தக் காலத்தில் புழக் கத்தில் இருந்த சொல் லாடல் அது!) பூஜைக் குரிய பொருள் எது? என்று கேட்பார்கள்.

ஆயிரக்கணக்கில் கூடி தந்தை பெரியார் உரையைச் செவி மடுக் கும் மக்களிடையே வெடிச் சிரிப்புக் கிளம்பும் - கை தட்டி வரவேற் பார்கள்.

காலுக்கு மிகவும் பாதுகாப்புக்கு பயன்படக் கூடியது செருப்பு தானே? வீட்டைச் சுத்தப்படுத்த அவசியமானது விளக்க மாறு தானே?

ஆயுத பூஜையின் போது இவைகளுக்கும் பூஜை உண்டா? கோபப் படாமல் புத்தியைக் கொஞ்சம் செலவிட்டுப் பார்த்தால் - பகுத்தறிவு வாதிகளின் இந்தக் கேள்விகளில் அடங்கி இருக்கும் நியாயமும், நேர்மையும், சிந்தனையும் புலப்படுமே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்

ஜாதிக் கூட்டணியைப் புறக்கணிப்போம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தீர்மானங்கள்

சென்னை, அக்.13- மதவாத சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்; தமிழ்நாட்டில் அணி சேரும் ஜாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 11 தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளது.
ஜாதி வெறியர்களைக் கட்டுப்படுத்துக
தமிழ்நாட்டில் ஜாதி வெறியர்கள் மீண்டும் வெளிப்படையாக அணி சேர்ந்திருப்பது இங்குள்ள சனநாயக சக்திகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள் ளனர். அதை இப்போதே தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஜாதியவாத சக்திகள் மீது தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக் கைகளை இச்செயற்குழு பாராட்டுகிறது. அதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டு மெனவும் கேட்டுக்கொள்கிறது. தலித் மக்களுக்கு மட்டுமின்றி நாட்டின் சனநாயக நெறிமுறை களுக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற ஜாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டுமென அனைத்துச் சனநாயக சக்திகளையும் இச்செயற்குழு அறைகூவி அழைக் கிறது.

தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற் படையின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசோ, மெத்தனம் காட்டுகிறது. எல்லைப் புறத்தில் இராணுவ வீரர்களின் மீதான தாக்குதல் எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகக் கருதப்படுகிறதோ அதுபோன்றே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும் இந்திய இறை யாண்மைக்கு எதிரான சவாலாகவே கருதப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியும், சாதனங்களும் வழங் கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

2013 நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு. இதை வலியுறுத்தி முதலில் அறிக்கை வெளியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். தற்போது இக்கோரிக்கைக்கான பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகு அவர் களுக்கு இச்செயற்குழு தனது ஆதரவைத் தெரி வித்துக் கொள்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என மத்திய அரசு உடனடி யாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் விதமாக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் போராட முன்வரவேண்டுமென இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

ஏற்காடு இடைத்தேர்தல் - திமுகவுக்கு ஆதரவு

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பி யுள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று திமுக வேட்பாளரை ஆதரிப்பது எனவும், அவரது வெற்றிக்கு அயராது தேர்தல் பணியாற்றுவது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது. இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவதே அண்மைக்கால நடைமுறையாகிவிட்டது. எனினும், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஒரு அறிவுறுத்தலாக அமையும். ஆகவே, இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு ஏற்காடு தொகுதி மக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் யாவும் தயாராகி வருகின்றன. பாரதிய சனதா கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்துள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையிலான போட்டியாக உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சனநாயக சக்திகள் அனைவருக்குமே ஆபத்தாகிவிடும். நாட்டை மதவாத ஆபத்திலிருந்து பாதுகாப்பது இன்று முதன்மையான கடமையாக உள்ளது. எனவே, மதவாத சக்திகளுக்கு எதிராக இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென இச் செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


உமாபாரதி இப்படி...


மத்தியப் பிரதேசத்தில் செல்வி உமாபாரதி முதல் அமைச்ச ராகவிருந்தார். அவர் காலையில் எழுந்து வெளியில் செல்லுவதாக இருந்தால் பசு மாடு தரிசனம் தான் முதலாவது: வெளியூர் சென்றாலும் அங்கும் பசு மாடு தயாராக இருக்க வேண்டுமாம். முதல் அமைச்சராக இருந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட இந்தச் சடங்கு முதலமைச்சராக இல்லாதநிலையில் இப்பொழுதும் தொடரப்படுகிறதா என்று தெரிய வில்லை.

ஒரு கேள்வி: இவ்வளவு சாஸ்திர சம்பிரதாயங் களைக் கறாராகக் கடைப்பிடித்த உமாபாரதி - ம.பி. முதல் அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியவில்லையே ஏன்! சிந்திக்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...


மோடியின் கலக்கம்


உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண் ணிக்கை 80. எல்லா அரசியல் கட்சிகளும் அம்மாநிலத் தையே குறி வைக்கின்றன.

பி.ஜே.பி.யின் பிரதமருக் கான வேட்பாளர் மோடி தன் விசுவாசியான அமித்ஷாவை உ.பி.க்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளார். ஆனால், உ.பி.யில் ஏற்பாடு செய்யப்பட்ட பா.ஜ.க விழாவில், காணும் விளம்பரங்களில் எல்லாம் அத்வானி படம் தானாம்; வெறுத்துப் போனார் அமித்ஷா. வேறு வழியில்லை. விழாவையே புறக்கணித்து விட்டார். சிறப்பு விருந்தினர் அத்வானிக்கு அவ்விழாவில் ஏகப்பட்ட புகழ் மாலைகளாம். மோடி கலங்குகிறாராம்.

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் ஜெயலலிதா சொல்லுவதும் - அண்ணா கூறியதும்

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ஆயுத பூஜையையும், அதற்கு அடுத்த நாளில் விஜய தசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஆய்த பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழி பட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழி பட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி, பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில் மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுதபூஜையாகும்.

விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக் கையில் மக்கள் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும், செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண் டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

- ஜெ.ஜெயலலிதா, நமது எம்.ஜி.ஆர், நாள்: 13.10.2013


ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை பற்றி அண்ணா

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுதபூஜை செய்தவர்களல்லார் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை!

ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம். உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல் யோசி, உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்த பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டு பிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய; அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

தமிழ் ஓவியா said...


அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டன் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப்பார்.

சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை; ஆயுத பூஜை,

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச்சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

திராவிட நாடு - (26.10.1947)

கட்சியின் பெயரில் அண்ணா!

அண்ணாவின் கொள்கையோ படுகுழியில், அண்ணா திமுக தொண்டர்களே சிந்திப்பீர்! சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே, களம் காண வாரீர்!


கழகத் தோழர்களே!

வரும் 15.10.2013 செவ்வாயன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத் தமிழர்களின் உரிமைகள் கோரி, கொடுங்கோலன் ராஜபக்சே தலைமையேற்று நடத்த உள்ள காமன் வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி -
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் நாளும் தாக்கப்படும் - சிறை பிடிக்கப்படும் கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி - தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் வரும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்.

கழகப் பொறுப்பாளர்களே, செவ்வாயன்று நாம் காணும் களம் - தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்! வேண்டும்!!

இந்திய அரசின் காதுகளில் ஒலிக்க வேண்டும். அவர்களின் கண்களையும் திறக்க வேண்டும்! - வேண்டும்!!

தோழர்களே ஒருங்கிணைப்பீர்!

தோள் தூக்கி வெண்கலக் குரல் கொடுப்பீர்! குரல் கொடுப்பீர்!!