Search This Blog

17.9.13

பெரியார் 135 ஆவது பிறந்த நாளில்....!


நம் மக்களின் மானமீட்பரான எங்கள் பகுத்தறிவு ஆசானே!

இருண்ட எமது வாழ்க்கையில் சிந்தனைச் சுடரைக் கொளுத்திய, எம் இனத்தின் திருவிளக்கே!

காலமெல்லாம் விதியென்றும், கர்மம், (குல) தர்மம் என்றும்   உழன்று கிடந்த உலுத்துப்போன வாழ்வைப் புறந்தள்ளி, புதுவாழ்வு தந்த புத்தொளியே, 

புரட்சியின் கர்த்தாவே உமது 135ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று!
அகிலமெங்கும் அவரது விழா - நன்றித் திரு விழாவாக

அறிவும் மானமும் பெற்றவர்களின் நன்றித்
திருவிழா கொண்டாட்டமாகக் காட்சியளிக்கிறது!

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை
புத்தருக்குப் பின் வீழ்த்தி, வெற்றி கண்ட புதுமைச் சித்தர்தான் நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!

அவர்கள்தந்த தத்துவம்- சுயமரியாதை;  மனிதர் எவராலும் புறக்கணிக்க முடியாத மகத்தான தத்துவம்

எந்த ஒரு கட்டத்திலாவது, அதை மறந்தவர்கூட, மறுத்தவர்கள், மறைத்தவர்கள்கூட அதனைப் பயன்படுத்திடாமல் இருக்கவே முடியாது!
அவ்வளவு சக்தி வாய்ந்த மின் ஈர்ப்புச் சொல் அய்யா தந்த அந்த சுயமரியாதை என்ற சொரணை மீட்கும் அச்சொல்!

அந்தப் பகலவனின் கதிர்கள், உலகத்தை முன்னேற்றப் பாதையின் வெளிச்சங்களாகி இன்று நிலைத்து விட்டன!

அவர்தம் தொலைநோக்கு இன்றைய உலகின் தவிர்க்க இயலாததாக தழுவிக் கொள்ளப்படும் போக்காக,  ஆனதால் அவரது வாக்கு பொய்யாததாகி விட்டது!
பெரியாரைத் துணைக்கோடல் என்பதை ஏற்ற ஆட்சிகள் நிலைத்தன!
பெரியாரைப் பிழையாமையை ஏற்காத எகத்தாள ஆட்சிகள் நிலைக்கவில்லை.

- இது இன்று வரலாற்றுக் காட்சிகள்!

அரசியலுக்கு அவர் சென்றதில்லை; ஆனால் அரசியல் அவரிடம் சென்றே செயலுருக் கொண்டது!

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்                 (குறள் 892)

எரியாற் சுடப் படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்தொழுகுவார்    (குறள் 897)

பெரியார் பிழைத்தொழுகும் ஆட்சிகள் நிலைத்தது போன்ற விளம்பர வானவில் வண்ணங்கள் - ஒரு தற்காலிக வெளிச்சமே; நிலைத்து நிற்காது! நீடிக்காது!

பகலவன்தான் நிலையானது என்பது அறிவியல் உண்மை அல்லவா!
எம்மை பதவி, புகழ் வேட்டைக்கு உரியவர்களாக ஆக்காது, தொண்டு, கைம்மாறு கருதாத மான மீட்புப் பணி, எளிமை, சிக்கனம் நன்றி எதிர்பாராத தொண்டாற்றும் தூய்மை - இவைகளில் தோய்த்து எடுத்து, துலக்கி நிறுத்தியுள்ள எங்கள் ஆசானே, அறிவே, ஒளியே! உமது 135ஆம் ஆண்டு பிறந்த நாளில்


முடிக்க வேண்டிய களப்பணிகளை -
ஜாதி ஒழிப்பை,
மதவெறி மாய்ப்பை,
சமூகநீதி காப்பை,
மூடநம்பிக்கை அழிப்பை,
மனிதநேய பரப்புரையை
செய்ய உறுதியேற்று அன்னையைத் தொடர்ந்து எங்கள் பயணங்கள் தொடருகின்றன!

நிற்காது பயணமாக அது நடந்து கொண்டே இருக்கும் என்று சூளுரைக்கிறோம்.
பயணத்தைத் தொடர்கிறோம்

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
-------------------------------------கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை  "விடுதலை” 17.9.2013

65 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் 135


இன்று தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள்; இது ஒரு தனி மனிதர் பிறந்த குறிப்பு நாள் அல்ல.

தமிழ் நாட்டின் வரலாற்றை பெ.மு., பெ.பி. (பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின்) என்று பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது அறிஞர் பெரு மக்களின் ஆய்வுக் கருத்தாகும்.

பெரியாருக்கு முன், நாம் நாலாஞ் ஜாதிப் பட்டியலில்; இப்பொழுதும் சாஸ்திரப்படி சட்டப்படி அந்த நிலைதான் என்றாலும் நடப்பில் மிகப் பெரிய மாறுதல்!

சூத்திரச்சி வேலைக்கு வந்து விட்டாளா? என்று பார்ப்பனர்கள் இன்று கேட்க முடியாது - முன்பு வெளிப்படையாகவே கேட்பார்கள்.

பெரியாருக்கு முன் சூத்திரனுக்குக் கல்வி கூடாது - கிடையாது - பெரியாருக்குப் பின் ஆச்சாரியார் அந்த வழியில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது அது கடைத்தேறவில்லை - இன்னும் சொல்லப் போனால் அந்தத் திட்டத்தை கொண்டு வந்த ஆச்சாரியாரின் அரசியல் பொது வாழ்வின் கடை கட்டப்பட்டு விட்டது. பெரியாருக்கு முன், ஜாதி, நம் மக்களை இழிவுபடுத்தியது - இன்றைக்கு ஜாதி இழி வானது என்பது உண்மைதான் என்றாலும் அந்த ஜாதி ஓர் அளவுகோலாக்கப்பட்டு, ஆண் டாண்டு காலம் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பஞ்சம, சூத்திர மக்களுக்கு ஏணிப்படி கட்டுகளாக்கப்பட்டது.
பெரியாருக்குப் பின்பு எங்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை- கருணை காட்டுக என்று மனு போடும் ஒரு நிலை பார்ப்பனர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது.

பெரியாருக்கு முன், பெயர்களுக்குப் பின் ஜாதிவால் போட்டுக் கொள்ளுவது பெருமை! பெரியாருக்குப்பின், பெயருக்குப் பின் ஜாதி வாலைப் போட்டுக் கொள்வது இழிவு - அவமானம் - அநாகரிகம் என்ற மனப்பான்மை.

ஜாதி பட்டத்துக்குப் பதிலாகக் கல்விப் பட்டங்களை போடும் தலைகீழ் மாற்றம்!

பெண் என்றால் பிள்ளைப் பெறும் இயந்திரம், அடுப்பூதும் வெறும் ஜடம் என்ற கணிப்பு. இன்றோ தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை எனும் புரட்சிக் கவிஞரின் வயிர, வரிகளுக்கான அடையாளங்கள் எங்குப் பார்த்தாலும்!

சிந்தனையில் மாற்றம், செயல்பாடுகளில் மாற்றம் - எல்லாம் தலையெழுத்து என்னும் குன்றிப் போன முதுகு எலும்புகள் இன்றைக்கு செங்குத்தாக எழுந்து நிற்கும் தன்னம்பிக்கை எழுச்சி மனப்பான்மை.

திருவள்ளுவருக்குக்கூட ஏழு சொற்கள் தேவைப்பட்டன.

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று நான்கே சொற்களில் மனிதன் என்றால் யார்? எத்தகையவனாக இருக்க வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறி விட்டாரே அய்யா!

கடவுளை மற - மனிதனை நினை! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! என்ற வரிகள் குறளைவிட குறுகிய சொற்கள் - ஆனால் விரித்த பொருள் கொண்ட மனிதத் தின் மகத்துவத்தைச் செழுமைப்படுத்தும் - நெறிபடுத்தும் அறிவு மொழிகள்! மதத்தால் மனித சமூகம் வதைப்பட்டது போதும் போதும்! மத மற்ற உலகு ஒன்றைப் படைப்போம் - அங்கே மனிதநேயம் என்ற மூச்சுக் காற்று உலவும் தொண்டறம் என்னும் பயிர் செழித்து வளரும்.
எல்லார்க்கும் எல்லாம் என்ற சமத்துவ அடிக்கட்டுமானம் அமையட்டும்! அமையட்டும்! அறிவு வழி காட்டட்டும் - அன்பு அரவணைக் கட்டும் - அய்யா, காண விரும்பிய அந்தச் சுய மரியாதை உலகைப் படைக்க அறிவு ஆதவன் பிறந்த இந்நாளில் உறுதி ஏற்போம்!

தமிழ் ஓவியா said...

திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்


தந்தை பெரியார் 135ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றனர்.


சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டு!

திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும்

தந்தை பெரியார் பிறந்த நாளில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

சென்னை, செப்.17- திருச்சி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளையும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தினை அதே வழித்தடத்தில் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு பாராட்டினையும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தினை உடனே செயல்படுத்த மாநில அரசிற்கு கோரிக்கையினையும் வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மலர்வளையம் வைத்து உறுதிமொழி!

தந்தை பெரியாரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் புடைசூழ மாலை அணிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தொண்டர்கள், மகளிரணியினர் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலை மையில், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

பின்பு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் பேட்டியளித் தார். பேட்டி வருமாறு:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. இந்த நாளில், பெரியாருடைய புகழ் பாடுவது மட்டும் நம் முடைய நோக்கமல்ல; பெரியாரால் பயன் பெற்றவர்கள் இந்நாளை நன்றித் திரு நாளாக இதனைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் ஓங்கிய கல்வி அறிவு, சிறந்த பகுத்தறிவாக மாறவேண்டும் என்பதற்காக, மீண்டும் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு போன்ற லட்சி யங்கள் இன்னும் முழுமையாக நிறை வேற்றப்படாத நிலையில், பெரியார் பிறந்த நாள், மீண்டும் அக்கொள் கைகளைப் பரப்புவதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த விழாவாகும்.

முக்கியமான கோரிக்கை!

பெரியாருடைய உழைப்பை, உலக நாடுகள் முழுவதும் பாராட்டிப் பெரு மைப்படுத்துகின்ற இவ்வேளையில், மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு முக்கி யமான கோரிக்கையை, உலகம் முழு வதும் உள்ள பெரியார் தொண்டர்கள் சார் பில் மட்டுமல்ல, பெரியார் பற்றாளர்கள் சார்பாகவும் வெளியிட விரும்புகிறோம்.

பெரியார் பிறந்த நாளில் கிடைத்த பரிசு!

மத்திய அரசைப் பொறுத்தவரையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அதே வழித் தடத்தில் நிறைவேற்று கிறோம் என்ற அறிவிப்பு, பெரியார் பிறந்த நாள் விழாவிலே கிடைத்த ஒரு நல்ல பரிசு என்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது. ஆயிரம் எதிர்ப் புகள் வந்தாலும், மத்திய அரசு அதனை நிறைவேற்ற வேண் டும். திருச்சி விமான நிலையத் திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் மத்திய அரசு என்பதை நாங்கள் முழுமையாக இன்றைக்குத் துவக்குகிறோம். இதனை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அத்துணை பேருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம் - தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலை வர்கள் அனைவருக்கும்.

காரணம், தந்தை பெரியார் அவர்கள் திருச்சியைத் தலைநகரமாகக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். எனவே, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றுவதில் இன்றைய அரசும் பங்குபெறவேண்டும்!

அதுபோலவே, மாநில அரசைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்கிற சட்டத்தை நிறைவேற்றி, அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு - 206 பேர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்து வந்த நிலை யில், இந்த சட்டம் உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை காரணமாக, செயல்படுத் தப்படாமல் முடக்கப்பட்டு இருக்கிறது.

வெளியிலேயே பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொன்ன இன்றைய தமிழக அரசு, இன்னமும் முழு முயற்சி எடுக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இந்தப் பெரியார் பிறந்த நாளில், பெரியா ருடைய படத்திற்கு மாலை சூட்டினால் மட்டும் போதாது; பெரியாருடைய நெஞ் சில் தைத்த முள்ளினை அகற்றுகின்ற பணியில் தமிழக அரசினுடைய பங்கும் உண்டு. அதனை நாங்களும் செய்திருக் கிறோம் என்ற பெருமையை, இந்த அரசும் சேர்த்துப் பெறவேண்டும். அதன் மூலமாக தீண்டாமை, ஜாதிக் கொடுமை, ஜாதி ஒழிய அவர்கள் உதவியதாக ஆகும்.

எனவே, ஜாதி ஒழிய, தீண்டாமை அறவே அழிக்கப்பட, இந்த நாட்டில் மிகத் தேவையான ஒன்றுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கருவறை தீண்டாமையை ஒழிக்கக்கூடிய சிறப்பான இந்த முயற்சி - அதனை இந்தப் பெரியார் பிறந்த நாளிலே செயல்படுத்தவேண்டும்.

குறிப்பாக, மாநில அரசு அதிலே அதிக கவனம் செலுத்தவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இரண்டு சாதகமாக இருக்கின்றன. எல்லாமே தெளிவாக இருக்கிறது. எனவே, இதில் தயக்கம் காட்டக்கூடாது என்பதை வேண்டு கோளாக - பெரியார் பிறந்த நாள் விழா வேண்டுகோளாக மாநில அரசுக்கு வைக்கிறோம். அதுபோல, மத்திய அர சினை சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்திற்காகப் பாராட்டுகின்ற நேரத்திலே, திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டவேண்டும் என் கிற கோரிக்கையையும்முன் வைக்கிறோம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழ் ஓவியா said...


பெரியார்


பெரியார் என்றும் பெரியார்!
பகுத்தறிவு சொன்னதால் பெரியார்!
பெரியார் சுயசிந்தனை சொன்னதால் பெரியார்!
பெரியார் ஒழுக்கம் பண்பு சொன்னதால் பெரியார்!
பெரியார் என்றும் பெரியார்!
ஆண்டுகள் பல உருண்டோடினும்
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரே!
வெண்தாடி வேந்தருக்கு
நூற்றி முப்பத்து அய்ந்தாவது பிறந்த நாள்
அய்யா, உமது ஆயிரமாவது
பிறந்த நாளையும்
தமிழ் மண் மறவாது
கொண்டாடும்!
உன்னை முன் வைத்தே
அரசுக் கட்டில் அகப்பட்டது வந்தேறிகள் ஆளும் நாட்டில்.
அய்யா, உம்மை அறிந்ததால்
மங்கையர்கள் பாழும் புகையை விட்டு
படித்துயர்ந்தனர்.
உம்மை புரிந்தால் மாளும்
மங்கையர் உயிர் வாழும்.
ஆயினும், ஆயிரம் ஆண்டுகள் ஆயினும்,
பகுத்தறிவுப் பகலவன் நீரே!
பகுத்தறிவு ஒளி விளக்கும் நீரே!

= வசந்தகுமாரி செல்லையா, வழக்குரைஞர்

தமிழ் ஓவியா said...


ஆத்திகமா? நாத்திகமா? சொல்லுங்கய்யா!

ஆத்திகமா நாத்திகமா சொல்லுங்கய்யா - பார்ப்பன
ஆதிக்கத்தைப் பெரியாராலே வெல்லுங்கய்யா!
அப்பன் தொழிலைச் செய்யச் சொன்னது ஆத்திகந்தான் நம்
அனைவரையும் படிக்க வைத்தது நாத்திகந்தான்
அம்மா விதவை என்றொதுக்கிய தாத்திகந்தான் - அவரை
அவைக்குள்வந்து அமரவைத்தது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
பெண்கள் படிக்கக் கூடாதென்றது ஆத்திகந்தான் - வீட்டுப்
பெட்டைக்கோழி யாக்கிவைத்தது ஆத்திகந்தான்
பொட்டுக்கட்டித் தாசியாக்கிய தாத்திகந்தான் அதைப்
பொசுக்கிப் பெண்ணியம் மீட்டெடுத்தது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
ஆடுமாடு பலிகொடுத்தது ஆத்திகந்தான் சாமி
ஆடுவதைக் கேலிசெய்வது நாத்திகந்தான்
மனிதனையே பலிகொடுப்பது ஆத்திகந்தான் அவன்
மானம், அறிவை மீட்டுத் தந்தது நாத்திகந்நாதன்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
சாதிகளை வகுத்ததுவும் ஆத்திகந்தான் - மூடச்
சடங்குகளைப் புகுத்தியதும் ஆத்திகந்தான்
சாமியார்கள்; சல்லாபங்கள் ஆத்திகந்தான் - அந்தச்
சாக்கடைகளை அகற்றுவது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
பக்திப் போதை ஏற்றுவது ஆத்திகந்தான் மானிடப்
பண்பொழுக்கம் பேணுவது நாத்திகந்தான்
கத்தி எடுத்து ரத்தம்குடிப்ப தாத்திகந்தான் நம்மைக்
கருணையோடு வாழ வைப்பது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)
உலகம்தட்டை என்று சொன்னது ஆத்திகந்தான் - கலிலியோ
உருண்டைஎன்று ஆய்ந்துசொன்னது நாத்திகந்தான்
உலகம் அழியப் போகுதென்றது ஆத்திகந்தான் - அது
உண்மை இல்லை என்று சொன்னது நாத்திகந்தான்
பெரியார் நாத்திகந்தான் (ஆத்தி)


- திருவாரூர் பாவலர் க. முனியாண்டி

தமிழ் ஓவியா said...


எனது கருத்து



மனிதன் தன் வாழ் நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து.
(விடுதலை, 3.2.1969)

தமிழ் ஓவியா said...


அறப்போர் வாளேந்தி, அய்யா, அண்ணா வழியில் பயணம் தொடருவோம்!


உடன்பிறப்பே,

இன்று (17-9-2013) முப்பெரும் விழா! பெரியார் அவர்களின் 135வது பிறந்த நாள் - அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாள் - தி.மு.கழகத்தின் 65வது பிறந்த நாள் - இந்த மூன்று நாள்களையும் இணைத்து நமக்கு எழுச்சியூட்டும் ஏற்றமிகு விழா இந்த முப்பெரும் விழா! தந்தை பெரியாரோடு ஏற்பட்ட தொடர்பு பற்றி அறிஞர் அண்ணா அவர் கள், எனக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது 1935ஆம் ஆண்டில். திருப்பூரில் நடந்த வாலிபர் மாநாட்டில் தான் முதலில் சந்தித்தது. அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன் ஆகி விட்டேன் பொது வாழ்வில்! என்று தந்தைக்கும், தனயனுக்கும் உறவு முளைத்ததை உற்சாகம் பொங்கக் கூறியிருக்கிறார். அதுமட்டுமோ! மேலும் இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர் - தெரிந்த தலைவர் - பார்த்த தலைவர் பெரியார் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமை யில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததும் இல்லை. வராது. பெரியார் நமது இதய பூர்வமான தலைவர். இதயத்தில் குடியேறிய தலைவர் என்றும் பெரியாரைப் பற்றி அண்ணா பெருமிதத்தோடு சொல்லியிருக்கிறார். அந்தப் பெரியாரைப் பற்றி நான்,

இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் - திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம்

மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்!

பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்.
ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!
அவர்
வெண்தாடி அசைந்தால் போதும்
கண் ஜாடை தெரிந்தால் போதும்;
கறுப்புடை தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள்!!

- என்று 1945ஆம் ஆண்டு என்னுடைய 21ஆவது வயதில் கவிதை எழுதினேன்.

பெரியாரின் 135ஆவது பிறந்த நாள்

தந்தை பெரியார், தன்னுடைய பொது வாழ்வின் இலட்சியத்தைப் பற்றி குடியரசு ஏட்டின் முதல் இதழிலேயே மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் அறிவு வளர வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். அந்த இலட்சியப் பாதையில் இறுதி மூச்சு இருந்தவரையில் கொஞ்சமும் விலகாமல் பயணித்தார். அந்தப் பெரியாரின் 135ஆவது பிறந்த நாள்! அந்தப் பெரியாரின் தளகர்த்தராம் நம்முடைய அண்ணா அவர்களின் 105ஆவது பிறந்த நாள்! என்றென்றும் அந்தத் தமிழ்த் தாயின் தலை மகனின் நினைவு நம் நெஞ்சை விட்டு நொடிப் போதும் நீங்கியதே இல்லை. அவருடைய திருவுரு வத்தை நம் நெஞ்சிலே செதுக்கி அவருடைய வழியில் அயராது பணியாற்றி வருகிறோம். அந்த அண்ணனைப் பற்றி, பூவிதழின் மென்மையிலும் மென்மையான

புனித உள்ளம் - அன்பு உள்ளம் -
அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர்

மலர் இதழ்கள் தமிழ் பேசும் -

தமிழ் ஓவியா said...

மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-

விழிமலர்கள் வேலாகும், வாளாகும்

தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!

கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;

கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!

அம்மலரே எதிரிகளை மன்னித்து

நெற்கதிர் போல் தலை நாணச் செய்து விடும்!

என்று 1969ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை வரிகள் இன்றும் எனக்கு உணர்ச்சியூட்டிக் கொண்டிருக் கிறது. திமுக பிறந்த நாள் இன்று

அந்த அண்ணன் தலைமையில், கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் 17-9-1949 அன்று உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் 65வது பிறந்த நாள் இன்று! இந்த மாபெரும் இயக்கத்தைத் தொடங்கிய போது அறிஞர் அண்ணா அவர்கள், நான் மிக மிகத் தெளி வாகவே கூறி விடுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல; எதிர்நோக்கம் கொண்டதுமல்ல; கொள்கை ஒன்றே. சமுதாயத் துறையிலே சீர் திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியல் துறையிலே வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்றும் விடுதலை - ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத் தின் கோட்பாடுகள் என்று பிரகடனப் படுத்தினார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஒட்டு மாஞ்செடிதான். மண் வளம் ஏராளம். அதே பூமி. நீர் பாய்ச்ச, பதப்படுத்த, பாத்தி கட்ட முன் நிற்போர் பலர். ஒட்டு மாஞ்செடி பூத்துக் காய்த்துக் கனி குலுங்கும் நாள் வந்தே தீரும் என்றும் உறுதிபடக் கூறியவர் அண்ணா. அண்ணா தோற்றுவித்தது தி.மு. கழகம் எனினும்; பெரியாரைத் தலைவராகக் கொண்ட திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டதும் 1944இல் சேலம் மாநாட்டில் அண்ணா தீர்மானம் காரணமாகத் தான்.

தமிழ் ஓவியா said...


அந்த அடிப்படையிலேதான் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நாள் என்ற மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக நடத்தி வருகிறோம். தந்தை பெரியார் சமுதாயச் சீர்திருத்தச் சிற்பி என்றால், அறிஞர் அண்ணா அரசியல் மறுமலர்ச்சி ஆசான். பெரியாரும், அண்ணாவும் ஒரே நாணயத் தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். காரல்மார்க்சும் ஏங்கல்சும் எப்படி பொதுவுடைமை இயக்கத்தின் பிதாமகன்களோ; அதைப்போலவே பெரியாரும், அண்ணாவும் திராவிட இயக்கத்தின் பிதாமகன்கள் ஆவார்கள். அண்ணா அவர்கள் நமக்கு அளித்த சொற் றொடர்களாம்

கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது!

இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!
கையில் காசில்லாதவர்கள் - மனதில் மாசில்லாதவர்கள்!

சாலையோரத்திலே சில வேலையற்றதுகள்; வேலையற்றதுகள் உள்ளத்திலே விபரீதஎண்ணங்கள்!

இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது!

தமிழ் ஓவியா said...

தன்னை வெல்வான், தரணியை வெல்வான்!

போன்றவை நம் எண்ணத்தை என்றென்றும் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
அந்த அண்ணன் உருவாக்கிய கொள்கைப் பாசறையாம் தி.மு. கழகம் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் அமர்ந்து, தனது இலட்சியங் களில் அண்ணா வழியில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. தற்போது மீண்டும் எதிர்க்கட்சி வரிசையிலே தி.மு. கழகம் அமர்ந்திருக்கிறது என்றாலும், ஜனநாயகக் கடமையைப் பொறுப் புடன் நிறைவேற்றி, தமிழ் மக்களின் பாதுகாவ லனாக விளங்கும் என்பதில் யாருக்குமே அய்யப் பாடு இருக்க முடியாது.

முப்பெரும் விழா

இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை வேலூர் நகரிலே நடத்திட என்னிடம் ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக் கையில், பந்தல் அமைக்கின்ற வேலையும் தொடங் கப்பட்டு விட்ட நிலையில், வானிலை செய்தியில் இந்த வாரம் 15ஆம் தேதி வரை தொடர் மழை இருக்கக்கூடும் என்று தெரிவித்த காரணத்தால், திடலில் பந்தலிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்து வதைக் காட்டிலும், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் நடத்துவது பொருத்தமாக இருக்குமென்று முடிவு செய்து, வேலூர் மாவட்டக் கழக நண்பர் களை யெல்லாம் அதற்கு ஒப்புக் கொள்ள வைத்து, இன்று (17-9-2013) முப்பெரும் விழா கழகத்தின் சார் பில் நடைபெறுகின்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் மாணவர் கள்பால் கொண்டிருந்த நேசத்தை வெளிப்படுத்திடும் வகையில் எப் போதும்போல முப்பெரும் விழா நிகழ்ச்சியுடன் இணைத்து, தி.மு. கழக அறக் கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதியளிப்பு விழாவும் நடைபெறுகிறது. மேல்நிலைப் பள்ளித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாண வர்களுக்கு தி.மு. கழக அறக்கட் டளை சார்பில் நிதியளிப்பும் மற் றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி யும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந் தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அவர்கள் தொழிலாளர்களிடம் கொண்டிருந்த தோழமையை வெளிப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இவற் றைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் விழா நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகப் பெரிய அறுவை சிகிச்சைக்கு ஆளாகி நலம் பெற்று வரும் பேராசிரியர் அவர்கள்; பெயரை அழைப்பி தழிலே போட வேண்டாம், உடல் நலம் அனுமதித் தால் நானே வந்து விடுகிறேன் என்று தெரிவித்திருந்த போதிலும், நான்தான் அழைப்பிதழிலே பேராசிரி யர் தலைமையில் என்றே அச்சிட்டு விடுங்கள், உடல் நலம் இடம் கொடுத்தால் விழாவிலே கலந்து கொள்ளட்டும், இல்லாவிட்டால் பரவாயில்லை என்று கூறி அவ்வாறே அழைப்பிதழை அச்சடிக்கச் செய்தேன். முப்பெரும் விழா நாளன்று

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதைப்போல இந்த ஆண்டு, தந்தை பெரியார் விருதினை மராட்டிய மாநிலத்தில் கழகத்தின் வேர் பரப்பிய மும்பை த.மு. ஆரிய சங்காரன் அவர்களுக்கும், அண்ணா விருதினை மொழிப் போர் தளகர்த்தர் எல். கணேசன் அவர்களுக்கும், பாவேந்தர் விருதினை எழுத்து வேந்தர் க. திருநாவுக்கரசு அவர்களுக்கும், என் பெயரால் உள்ள கலைஞர் விருதினை ஆயிரம் விளக்கின் அற்புத விளக்கு என்று என்னால் பாராட்டப்பட்ட எஸ்.ஏ.எம். உசேன் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு நா. வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுரு கன், வி.பி. துரைசாமி, திருமதி சற் குணப்பாண்டியன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கவுள்ளார்கள். தென் சென்னை மாவட்டக் கழகச் செயலா ளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., வரவேற்புரை ஆற்றிட, வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் நன்றியுரையாற்ற உள்ளார். முப்பெரும் விழாவினை சென்னையில் நடத்துவதையொட்டி, விழா ஏற்பாடுகளை கழகப் பொருளாளர் தளபதி தலைமையில் தென் சென்னை, வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக முன்னணியினரும் இணைந்து செய்து வருகிறார்கள். இந்த முப்பெரும் விழா பற்றிய செய்திகள் ஏற்கெனவே ஏடுகளில் வெளிவந்துள்ளன. சுவரொட்டி வாயிலாகவும் அறிவிக்கப்பட் உள்ளது. அண்ணனுக்காக எடுக்கப்படும் இந்த விழாவில் கலந்துகொள்ள, அதுவும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, பயணம் புறப்பட்டிருப்பாய் என்பதை நான் நன்றாகவே அறிவேன். இருந்தாலும் அண்ணாவிற்காக நடத்தப்படும் விழாவிற்கு ஆண்டுதோறும் அழைப்பு விடும் இந்த அண்ணன் இந்த ஆண்டு அழைக்கவில்லையே என்ற நினைப்பு உன் நெஞ்சத்தில் நிழலாடும் அல்லவா? அதற் காகவே அவசர அவசரமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒருசிலர் என் அழைப்பு வந்தால் புறப்படலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவர்களும் இந்த மடல் கண்டதும் உடனடி யாக குடும்பத்துடன் புறப்பட்டு வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். பெரியார் காட்டிய பாதையில் - அண்ணா பண்படுத்திய வழியில் - திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அறப்போர் வாளும் கேடயமும் ஏந்தி நம் பயணத்தைத் தொடருவோம்!

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 17.9.2013)

தமிழ் ஓவியா said...


பெரியார் அம்மானை!


வெண்தாடி வேந்தரென்றும் ஈரோட்டுச் சிங்கமென்றும்
தென்னாட்டில் மாப்புகழ் பெற்றவரார்? அம்மானை!
தென்னாட்டில் அப்புகழ் பெற்றவர் யாரெனிலோ
தந்தை பெரியாரே அய்யமில்லை அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

வைக்கத்தில் போர்நடத்தி வாகைசூடி வந்ததனால்
வைக்கம்வீ ரர்எனவே ஆனவரார்? அம்மானை!
வைக்கம்வீ ரர்எனவே வையப் புகழ்பெற்ற
அய்யா பெரியாரே அய்யமிலை அம்மானை!
அய்யா பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

சூத்திரன் என்றுன்னைச் சொன்னவனை நீஎதிர்த்தே
ஆத்திரம் கொண்டெழுவாய் என்றவர்யார்? அம்மானை!
ஆத்திரம் கொண்டெழச் சொன்னவர் யாரெனிலோ
அய்யா பெரியாரே அய்யமிலை அம்மானை!
அய்யா பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

தன்மானம் காக்கத் தமிழ்நாட்டில் அந்நாளில்
தன்மானப் பேரியக்கம் கண்டவர்யார்? அம்மானை!
தன்மானப் பேரியக்கம் கண்டவர் யாரெனிலோ
தன்மானத் தந்தை பெரியாரே அம்மானை!
தன்மானத் தந்தையைப் பாடேலோர் அம்மானை!

இந்தித் திணிப்பை எதிர்த்துப் படைதிரட்டி
நற்றமிழைக் காத்திட்ட நாயகர்யார்? அம்மானை!
நற்றமிழ் காத்திட்ட நாயகர் யாரெனிலோ
தந்தை பெரியாரே என்பதறி அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

திருமணத்தில் சீர்திருத்தக் கொள்கை மணக்கத்
திருமணமு றைகண்டார் யாராவார்? அம்மானை!
கொள்கைத் திருமணம் கண்டவர் யாரெனிலோ
தந்தை பெரியாரே! நாடறியும் அம்மானை!
தந்தை பெரியாரைப் பாடேலோர் அம்மானை!

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடச் செய்துநம்
கண்திறக்கச் செய்தவர் யாராவார் அம்மானை!
கண்திறக்கச் செய்தவர் யாரெனிலோ அய்யா
அறிவாசான் நம்பெரியார் என்றறிக அம்மானை!
நம்பெரியார் பேர்சொல்லிப் பாடேலோர் அம்மானை!

இரு பெண்கள் எதிரெதிரே அமர்ந்து காயைத் தூக்கிப் போட்டு ஏந்திப் பிடித்து விளையாடுவது ஒருவகை விளையாட்டு. அப்போது அவர்களில் ஒருவர் வினாத்தொடுத்தும் மற்றவர் விடையளித்தும் பாடுவதற்கு அம்மானை என்று பெயர்.

இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் கலந்து தளை தட்டாமல் செப்பலோசையுடன் அமையக்கூடியது இப்பாடல்.

சிலப்பதிகாரத்தில்தான் அம்மானை முதன்முதலாக இடம்பெற்றதாக தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் ஆண்டிராய்டு செயலி வெளியீடு

இதைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் உள்ள நினைவு கல்வெட்டு அருகில், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

* தந்தை பெரியார் பிறந்த நாள் மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட முதல் பிரதியை இருதய நோய் தடுப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.

* உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி - 1 பதிப்பாசிரியர் கி.வீரமணி) நூலை தமிழர் தலைவர் வெளியிட வரியியல் அறிஞர் ச.ராஜரத்தினம் பெற்றுக்கொண்டார்

* பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை எழுதிய எது வகுப்புவாதம்? என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட திராவிட மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை பெற்றுக்கொண்டார்.

* திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எழுதிய வகுப்புரிமைப் போராட்டம் (கம்யூனல் ஜி.ஓ) என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, பெரியார் நூலகர் வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். (61 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்)

* திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய ஒற்றைப்பத்தி (தொகுதி 2) நூலை, தமிழர் தலைவர் வெளியிட, மும்பை த.மு.ஆரிய சங்காரன் பெற்றுக்கொண்டார். புலவர் அறநெறியன் எழுதிய பெரியார் புரட்சி மொழிக்குறள் என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் பெற்றுக் கொண்டார். டாக்டர் மு.கன்னியப்பன் அவர்கள் எழுதிய ஒரு நாத்திகனின் பவுத்தனின் அம்பேத்கர் வாதியின் இறுதி எச்சரிக்கை! என்ற நூலை நூலாசிரியர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

பெரியார் ஆண்டிராய்டு செயலி வெளியீடு

இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எழுதிய 39 புத்தகங்கள் அடங்கிய ரூ. 6135 மதிப்புள்ள பெரியார் ஆண்டிராய்டு செயலி பெரியார் - கையடக்க நூலகம்)த்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, டாக்டர் சரோஜா, நாகரசன்பட்டி யைச் சேர்ந்த பொறியாளர் என்.எல். ஏகாம்பரம், எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் அரிமா ஒளிவண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவுச் சிங்கம்
- உவமைக் கவிஞர் சுரதா

நூற்றாண்டு பிறப்பதொன்றும் புதுமை இல்லை
நூற்றாண்டில் மிகச்சிறந்தோர் பிறந்தால், அந்த
நூற்றாண்டு பெருமைபெறும், எனவே, சென்ற
நூற்றாண்டில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தோன்றி
நூற்றாண்டைச் சிறப்பித்தார். அதுபோல் சென்ற
நூற்றாண்டில் நம்பெரியார் தோன்றி, இந்த
நூற்றாண்டில் புரட்சிபல செய்து, இந்த
நூற்றாண்டில் மேதையென விளங்குகின்றார்.
நாத்திகச் சிங்கமவர், பெரியார் என்னும்
நான் கெழுத்துத் தலைவரவர். நாட்டிலுள்ள
ஆத்திக வாதிகளின் கொட்டம் தன்னை
அன்றாடம் அடக்கியவர், நம்மை யெல்லாம்
சூத்திரனென் றழைத்தோரை ஓட ஓடத்
துரத்தியவர் தமிழர்க்கு வாழ்வு தந்த
மூர்த்தியவர் தமிழகத்தில் முதல்வ ராகா
முதல்வரவர் நம்பெரியார் அறிவின் உச்சி!
தம்முடைய கருத்துக்கள் பலவற் றுக்கும்
தாமேவோர் களமமைத்துத் தலைமை தாங்கி
தம்முடைய குறிக்கோளுக் காக வேண்டித்
தாமேபோர்க் களஞ்சென்றும் சிறைக்குச் சென்றும்,
தம்முடைய தள்ளாத வயதில் கூடத்
தளராமல் போராடிச் சாகு மட்டும்
தம்வாழ்வைத் தமிழ்நாட்டுக் கர்ப்ப ணித்த
தன்மானப் பகுத்தறிவுச் சிங்க மன்றோ?
சாக்கிரட்டீஸ் இல்லையென்றால் பிளாட்டோ இல்லை;
ஜங்என்பான் இல்லையென்றால் ஃராய்டு இல்லை;
சாக்கியராம் புத்தர்பிரான் இல்லை யென்றால்
சத்யகுண போதனெனும் அசோகன் இல்லை;
நாக்கரசன் நக்கீரன் இல்லை என்றால்,
நம்நாட்டில் ஓர் ஓட்டக் கூத்த னில்லை;
பாக்கியவான் நம் பெரியார் இல்லை என்றால்,
பாவேந்தர் பேரறிஞர் இவர்கள் இல்லை.
தந்தை பெரி யாரைப்போல் நீண்ட நேரம்
தமிழ்நாட்டில் பேசியவர் யாரு மில்லை
எந்தவிதக் கேள்விக்கும் பதில் சொல் லாமல்
இவரெழுந்து சென்றதில்லை. தம்மை யாரும் நிந்திப்பார் என்பதற்கோ, இவற்றைச் சொன்னால்
நெருக்கடிகள் ஏற்படுமே என்ப தற்கோ,
தந்தை பெரி யாரென்றும் அஞ்ச வில்லை.
தம் கருத்தைக் கூறாமல் இருந்த தில்லை.
நினைவாற்றல் சர்ச்சிலுக்கும் சீச ருக்கும்
நிச்சயமாய் அதிகந்தான். தமிழர் நெஞ்சில்
நிலைபெற்ற ஈரோட்டுப் பெரியா ருக்கு
நினைவாற்றல் அதிகந்தான் தமிழர் கட்கு
தனியாற்றல் பலவுண்டு; இவரைப் போன்று
தங்குதடை இல்லாது பேசும் ஆற்றல்
இனியொருவர்க் கமைந்திடுமா? பெரியார் போன்று
எதிர்வாதம் செய்வதற்கு நம்மால் ஆமோ?
பெண்ணுரிமை பெறவேண்டும்; விதவை யான
பெண்ணுக்கு மறுவாழ்விங் களிக்க வேண்டும்
எண்ணுரிமை எழுத்துரிமை பெற்றுப் பெண்கள்
எல்லோரும் இந்நாட்டில் கற்க வேண்டும்
குண்டர்களின் வஞ்சகமும், ஜாதி பேதக்
கொடுமைகளும் மனுநீதி முறையும், இந்த
மண்டலத்தில் ஒழிந்தாக வேண்டும் என்று
வாதித்தார், சாதித்தார், வெற்றி பெற்றார்.
உலகிலுள்ளோர் அனைவர்க்கும் உரியார் சற்றும் ஒடுங்காத புகழ்பெற்ற பெரியார்; வாழ்வில்
பலதுறைக்கும் வழிகாட்டி; உலகத் திற்கோர்.
பகுத்தறிவுப் படகோட்டி; நமக்கோர் ஈட்டி;
மலைநிலத்து வரிவேங்கைப் புலியைக் கொன்ற
மாவீரன்; வைதீக வேட்டைக்காரன்
தலைசிறந்த எழுத்தாளர் பெரும்பேச்சாளர்
தன்மனைவி இறப்புக்கும் அழாத தீரர்.
கூறுமடி யார்கள் வினை தீர்த் தானாமே,
குன்றுருவ வேல்வாங்கி நின்றானாமே,
மாறுபட சூரரைவ தைத்தா னாமே
வடிவேலன்! அன்னவனை பக்தரெல்லாம்
ஆறுமுறை நினைத்திட்டால், புரட்சி செய்த
அய்யாவை நீங்களெலாம் ஒவ்வோர் நாளும்
நூறுமுறை நினையுங்கள்! நினைக்கா விட்டால்
நுரையைப்போல் நாமெல்லாம் கரைந்தே போவோம்
சமுதாயம் திருந்துவதற்கும், நமது நாட்டில்
சாதிமதம் ஒழிவதற்கும் பாடுபட்ட
இமயமலை! ஈரோட்டுப் பெரியார் என்னும்
எரியீட்டி அன்றிருந்தார். இன்றோ இல்லை
நமைவிட்டு நம்பெரியார் மறைந்த போதும்
நாமவரை ஒரு போதும் மறக்கவில்லை
இமயத்தை வடநாட்டான் மறந்திட்டாலும்
ஈரோட்டை நாமென்றும் மறக்க மாட்டோம்.
கடுகுண்டு, மிளகுண்டு, பூண்டு முண்டு,
கத்தரிக்காய் அவரைக்காய் இவையு முண்டு
கடலுண்டு ஆறுண்டு குளங்கள் உண்டு;
கடவுளுண்டா என்றொருவர் கேட்ட போது,
கடவுளில்லை என்று சொன்னார் விவேகா னந்தர்
கடைசிவரை சொன்னாரா? சொல்லவில்லை
கடவுளில்லை கடவுளில்லை இல்லை என்று
கடைசிவரை பெரியார் தான் சொல்லி வந்தார்.
பெரியாழ்வார் ஆத்திகர்; நமது தந்தை
பெரியாரோ நாத்திகர். இரண்டு பேரும்
சரியான சத்துருக்கள்; இரண்டு பேரில்
சமூகத்திற் கார் தேவை? ஆழ்வா ரெல்லாம்
மரியாதைக் குரியவர்தாம்.அவர்கள் பாடல்
மறுமலர்ச்சிக் குதவிடுமா? நமது தந்தை
பெரியாரின் போதனைத்தான் இந்த நாட்டின்
பிரச்சினைகள் தீர்வதற்கு உதவி செய்யும்.

நன்றி: வள்ளுவர் தமிழ்ப்பீடம், 1.9.2013

தமிழ் ஓவியா said...


ஒழுக்கம்பற்றி பெரியார்...

உண்மையான ஒழுக் கம், நாணயம் வேண்டுமா னால் தேவை குறைய வேண் டும். அவசியம் குறைய வேண்டும். தேவையும், அவ சியமும் அதிகமாக அதிக மாக நாணயக்கேடும், ஒழுக்கக் கேடும் வளர்ந்து கொண்டுதான் போகும்.

- (விடுதலை, 22.7.1969)

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமை அளிப்பது மாத்திரமல்லாமல், அவனைச் சுற் றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மையும் அளிக்கும்.

- (விடுதலை, 30.7.1969)

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

- (குடிஅரசு, 22.12.1929)

உங்கள் மனதை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு, தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மன மறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்க முள்ளவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

- (குடிஅரசு, 30.9.1944)

பிறருக்கு ஒழுக்கத்தைப்பற்றிச் சொல்லுவதை விடத் தன்னிடத்து அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

- (விடுதலை, 20.11.1958)
//

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பேசுகிறார்...

நாசவேலைக்காரன்

அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் புரட்சிக்காரனும், சகல துறையிலும் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் ஜாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை, வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன்; நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு, மத அடிப்படை என்பவைகளைக்கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன். இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பேசுகிறார்...

எனது பள்ளிப் படிப்பு

நானும் படிக்கலே. என்னுடைய 10ஆவது வயசிலே நாலாவது வகுப்பு பாஸ் பண்ணினவன். அதுவும் இரண்டு வருஷம் படிச்சி முதல் வருஷம் பெயிலாகி, அடுத்த வருஷம் பாஸ் பண்ணினேன். 1888, 1889லே. எனக்கு ஞாபகமிருக்குது. என் 10ஆவது வயதிலே. அதற்கப்புறம் நானு எந்தப் பள்ளிக்கூடத்திலேயும் படிக்கலே. எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லே பெரியவங்க நம்பிக்கையில்லே.

எனக்கு இரண்டாவது நாட்டைப் பற்றிக் கவலை இல்லை. மொழியைப் பற்றிக் கவலை இல்லை. நம்ம நாட்டை எவன் அரசாளுகிறான் என்பதைப் பற்றியும் கவலையில்லை. அதனாலே இஷ்டம் போல என்னாலே பேச முடிஞ்சிது.

தமிழ் ஓவியா said...

அய்யாவின் மனம்


விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவர் திடீரென கத்தியுடன் அய்யாவை நோக்கிப் பாய்ந்துள்ளார். சிறிதும் பதற்றமடையாத அய்யா அவர்கள், அந்த நபரின் கையை எட்டிப் பிடித்துள்ளார். அய்யாவின் தொண்டர்கள் அந்த நபரைத் தாக்க ஆயத்தமாகிவிடவே, அய்யா அனைவரையும் அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் அந்த நபரை மேடையில் தன் அருகிலேயே அமர வைத்துவிட்டு, தொடர்ந்து உரையாற்றிய அய்யா அவர்கள் கூட்டம் முடிந்ததும், பத்திரமாக அவரது வீட்டில் கொண்டுபோய் விடும்படி தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் அந்த நபரைப் போலீசில் ஒப்படைப்பார் என நினைத்தவர்களுக்கு அய்யாவின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்ததாம்.

தமிழ் ஓவியா said...

வாழ்க்கைத் துணைவிக்காக வாதாடிய பெரியார்


அய்யா அவர்கள் இரவு நீண்ட நேரம் கடையில் இருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அய்யா வரும்வரை விழித்திருந்து உணவு பரிமாறுவார் நாகம்மையார். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் அய்யா வீட்டிற்கு வரவில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாகம்மையார் அருகில் இருந்த தூணில் சாய்ந்தபடியே அயர்ந்து தூங்கிவிட்டார். அய்யா வீட்டிற்கு வந்ததுகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த அய்யாவின் அம்மா மருமகளை எழுப்பிச் சாப்பாடு எடுத்து வைக்கும்படிக் கூறியுள்ளார். அரைகுறைத் தூக்கத்தில் பதற்றத்துடன் எழுந்தார் நாகம்மையார். தூக்கக் கலக்கத்திலேயே சாதம் வைத்தார். காய்கறிக் கூட்டு வைப்பதாக நினைத்து அருகில் பசு மாட்டுக்காகக் கலக்கி வைத்திருந்த பருத்திக் கொட்டை புண்ணாக்குக் கலவையை எடுத்து வைத்தார். அருகில் ஒரு பாத்திரத்தில் மாடு குடிப்பதற்காக கழுநீர் வைக்கப்பட்டிருந்தது. அதனை ரசம் என நினைத்து ஒரு டம்ளரில் எடுத்து வைத்துவிட்டுப் படுத்துவிட்டார்.

அய்யாவுக்கு முதலில் இதனைப் பார்த்துத் திகைப்பும் ஆத்திரமும் வந்தாலும், அடித்துப் போட்டாற்போல் நாகம்மையார் தூங்குவதைப் பார்த்ததும் பரிதாபமும் அனுதாபமும் ஏற்பட்டுள்ளது. அய்யா அவர்களின் அம்மாவை அழைத்துக் காட்டியுள்ளார். அய்யாவின் அம்மாவுக்கோ கோபம் வர முறைத்துப் பார்த்துள்ளார். உடனே அய்யா, அவளை முறைத்து என்னம்மா பிரயோசனம்? பகல் முழுக்க எவ்வளவு கடுமையாக வேலை செய்திருந்தால் இந்தப் பெண் இப்படி உடலும் புத்தியும் சுவாதீனமில்லாமல் தூங்குவாள்? ஒரேடியா வேலை வாங்காமல் பகலில் கொஞ்ச நேரம் தூங்க விட்டிருந்தால் இப்படி அடித்துப் போட்டதுபோல் தூங்குவாளா? என நயமாகப் பேசியுள்ளார். அய்யாவின் அம்மா சின்னத்தாயம்மையாருக்கும் உண்மைநிலை புரிந்தது.

பெண்ணடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்த அந்தக் காலத்திலேயே பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கழுநீரைச் சாப்பாடாகப் படைத்த மனைவியின்மீது கோபப்படாமல் உடல் உழைப்பின் அயர்வைக் காரண காரியத்துடன் சிந்தித்து, பிற்காலத்தில் பெண் விடுதலை இயக்கப் போராளியாகத் திகழ்ந்து வெற்றிபெற்றவர் நம் அய்யா அவர்கள்.

தமிழ் ஓவியா said...

மொழி எப்படி இருக்க வேண்டும்?



மனுஷனுக்கு மொழி வேணும்ன்னா, அந்த மொழியில் இருந்தே உணர்ச்சி கிளம்பணும். அறிவு வளர்ச்சியடையணும். விஞ்ஞானத்துக்கு எல்லாம் தோது இருக்கணும். தமிழிலே என்னா இருக்குது. தமிழைக் காட்டுமிராண்டின்னு சொல்லிட்டாங்கிறான் யாரு? சுத்தக் காட்டு மிராண்டிப்பசங்கதான் (கைத்தட்டல்) அதைச் சொல்றவங்க அறிவாளியில்லே. நான் சொல்றேன். நீங்களும், நானும் சண்டை பிடிச்சிக்கிட்டா, வாடா போடாங்கிறோம். வாத்தாங்கிறோம் (சிரிப்பு) அவுங்கம்மா இவுங்கம்மாங்கிறோம். அவனே, அவன் மகனே இவன் மகனேங்கிறோம். இதெல்லாம் தமிழ்லே இருக்குது. இந்தப் பேச்செல்லாம் ஆங்கிலேத்திலேயே கிடையாதே. (சிரிப்பு) ராணியாய் இருந்தாக் கூட அவள்தான் “Her Majesty” ராணி அவளை அவள்ன்னுதான் கூப்பிடுகிறோம். “Her”ராஜாவாக இருந்தாலும் அவன் தான் “His Majesty”ன்னுதான் சொல்லுகிறோம். நீ ஒரு ராஜாகிட்டே பேசறாப்பிலே இருந்தாலும் ஒரு பிரபுகிட்டே அவனுடைய வேலைக்காரன் பேசறாப்பிலே இருந்தாலும் நீ சீஷீ தான். ஒருத்தனுக்கு நீ அடா இன்னொருத்தன் அவனே (சிரிப்பு) இன்னொருத்தனுக்கு இவனே இந்த மாதிரி மொழிபேதம் வைச்சிக்கிட்டு இருக்கிறதுன்னா சமதர்மம்ன்னு வாயிலே பேசிக்கிட்டு, அடா, போடாங்கிற, பேச்சு வேணும்கிறியே, எதுக்காக வேணுங்கிறே? இல்லே மனிதன் அறிவு இருக்குது. வளர வேணும்ங்கிறான். சமதர்மம் வேணுங்கிறான். என்னதுக்குப் பணக்காரன்கிறான்? என்னத்துக்கு முதலாளிங்கிறான்? அடாபுடா_-ங்கிற வார்த்தை மட்டும் என்னத்துக்கு இருக்கணும்? மனிதன் அடா புடான்னு வார்த்தையைத் தமிழில் வச்சிக்கிட்டு அப்புறம் என்னா பண்ணுவான்.

நூல்: பெரியார் சிந்தனைத் திரட்டு

தமிழ் ஓவியா said...

அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்?


அன்று பெரியார் சொன்னது இன்று நடந்தே விட்டது!

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தாலும் பத்து வருடத்திலே நாம் நூறு வயது வரை வாழ்வோம். ஆகாயத்திலே பறப்போம். உங்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்போது நானூறு பேரை, முன்னூறு பேரைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது ஆகாயக் கப்பல். ஒரு மனிதனைத் தூக்கிக் கொண்டு ஏன் பறக்காது? தனித்தனியாக வாங்கி முதுகில் கட்டிக்கொண்டால். ஏறுது மேலே விர் என்று! இப்பவே நாற்பது வருடம் சராசரி வயது உயர்ந்துவிட்டதே! தோழர்களே! 1952இல் நமது சராசரி வயது 25. இன்று சராசரி வயது 52. இடையிலே 20 வருடத்தில் 30 வருடம் நமது ஆயுள் உயர்ந்து விட்டது. இன்னும் 2000 வருடம் வரும்போது நாம் 75 வருடம் இருப்போம். வெள்ளைக்காரன் நூறு வருடத்திற்கு மேல் இருப்பான் சாகமாட்டான். சாவதற்கு அவசியம் இல்லை. அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது. ஏதோ ஒன்று இரண்டுக்கு இல்லை. அதுவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். எனவே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னேன். பாருங்கள், நேற்று வந்த பத்திரிகைகளிலே விந்துகளை விந்து பேங்கில் சேர்த்துவைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கூட குழந்தைகளை உண்டாக்கலாம் என்று வந்திருக்கிறது.

கோழிக்குஞ்சைப் பொறிக்க வைப்பதுபோல் பொறிக்க வைத்துவிடலாம். பெண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே ஆண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே, பேங்கு என்று அதற்குப் பெயர். அதிலே சேர்த்து வைத்துக் கொள்ளலாம். என்றைக்குக் குழந்தை வேண்டுமோ, அன்றைக்குக் குழந்தையை உண்டாக்கிக் கொள்ளலாம். பியா, பியா என்று கத்திக்கொண்டு குழந்தை வரும், இதையெல்லாம் பொய் என்று சொல்ல முடியாது.

- சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார் அவர்கள் 19.12.1973 மாலை ஆற்றிய தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்ட சிந்தனை இது. அய்யா பெரியார் சொன்னதுபோல தனி மனிதன் பறப்பதற்கான வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் பல நடந்து வருகின்றன. சிலர் அதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இங்கே படங்களில் உள்ளவை அந்த இயந்திரங்களே! மனிதனின் சராசரி வயதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். 75 வயதைக் கடந்தவர்கள் நம்மில் ஏராளமானோர் வாழ்வதே அதற்குச் சாட்சி. உலகில் அறிவியலில் வளர்ச்சி பெற்ற நாடுகள் பலவற்றில் விந்து சேமிப்பு வங்கிகளும், விந்துதான அமைப்புகளும் இயங்கி வருகின்றன. விந்து வங்கிகள் சென்னைக்கேகூட வந்துவிட்டன. இணையத்தில் நுழைந்து sperm bank, sperm donors, semen for sale எனக் குறிப்பிட்டால் ஏராளமான வலைத்தளங்கள் திறக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இந்து சமய அறநிலையத் துறையின் ஆணை சட்டத்தின்முன் நிற்காது


இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையில், அல்லது கண்காணிப்பில் உள்ள பல திருமண மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்பதாக இந்து அறநிலையத் துறையினர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன!

இது மிகவும் கண்டனத்திற்குரியது, குடிமக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரைப்படி அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்!

கொராடச்சேரி அருகில் உள்ள கண் கொடுத்த வனிதம் என்ற ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் எனது நிகழ்ச்சி, அவ்வட்டார திராவிடர் விவசாயிகளின் -_ சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்தது; அதை மனதில் வைத்துச் சிலர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் இதுபோன்ற சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் இந்து நாடு அல்ல; (நேப்பாளத்தில் மட்டும்தான் உலகின் ஒரே இந்து நாடு இருந்தது; அதுவும் காலாவதி ஆகி, அங்கே மாவோயிஸ்டுகள் கூட்டணி அரசு _- ஆட்சி நடைபெற்று வரும் நிலை!)

எந்த அடிப்படையில் நாத்திகர்களான திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபம் தரக் கூடாது என்று தமிழக அரசால் கூறப்படுகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை.

இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்பதோ, இந்த ஆட்சியோ, இந்து முன்னணியின் கிளை ஸ்தாபனம் அல்ல; ஜனநாயகப்படி, அனைத்து மக்களாலும் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி.

இந்து அறநிலையத்துறையின் வேலையும்கூட, பக்தியைப் பரப்புவதோ, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ அல்ல.

தணிக்கைத்துறை, கோவில் சொத்துக்களை தனியார் கொள்ளையிலிருந்து பாதுகாத்து, வரவு - செலவுகளைத் தணிக்கை செய்யும் வேலையே தவிர, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ, அதைக் காப்பாற்றும் வேலையோ அல்ல. 1923 முதல் பனகல் அரசர் பிரதமராகவிருந்த நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் பற்றிய விவாதத்தைப் பார்த்து தெளிவடையட்டும்!

மேலும், இந்து மதத்திலேயே நாத்திகம் என்பது ஒரு பிரிவு என்பது தத்துவ ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டதேயாகும்.

சார்வாகர்கள் _- பிரகஸ்பதிகள் இராமனுக்கு மந்திரியாக இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்ட ஜாபாலி போன்றவர்கள் நாத்திகர்கள் ஆவர்!

கடவுள் உண்டு என்பவரும் ஹிந்து மதத்தில் இருக்கலாம்; கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளரும்கூட இந்து மதத்தில் இருக்கலாம்.

இது சட்டப்படி _- ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகி சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்களே, அதுவே இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தச் சட்டமேயாகும்.

இந்தத் திருமணங்களில், கடவுளுக்கோ, இந்துமத சாங்கிய, சம்பிரதாயங்களுக்கோ, சடங்குகளுக்கோ இடமே இல்லை; என்றாலும் இந்தச் சட்டப்படியான சுயமரியாதைத் திருமணங்கள் _- ஹிந்து கோவில்களின் திருமண மண்டபங்களில் நடைபெற்று வருகின்றன என்பது இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமற் போனதேன்?

திருமண மண்டபங்கள் சமூகக் கூடங்கள் (Community Halls) என்பதால் அனைவரும் அதைப் பயன்படுத்தும் உரிமை உடையவர் ஆவர்.

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்குரிய (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள) கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் எத்தனையோ சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளனவே.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஆத்திகர்கள் _- நாத்திகர்கள் உட்பட கலந்து கொண்டுள்ளனரே!

இந்தச் சுற்றறிக்கை கோவில் நிருவாக அதிகாரிகள் -_ பொது மக்கள் இடையிலே வீணான சர்ச்சையை _ தகராறை உருவாக்கக் கூடியதாகும்.

இந்தச் சுற்றறிக்கையை அறநிலையத்துறை திரும்பப் பெறுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை. இல்லையேல் நீதிமன்றத்தில் சட்டப்படி பகுத்தறிவாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின்முன் இந்த ஆணை நிற்காது.

எனவே அரசும், இந்து அறநிலையத்துறையும் கோவில் உண்டியல் காணாமற் போவதையும் திருட்டுப் போகும் கடவுளர் _- கடவுளச்சிகளைப் பாதுகாப்பதையும் கவனத்தில் கொண்டு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் ஈடுபட்ட கர்ப்பக்கிரக லீலைகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் ஆன முயற்சிகளில் இறங்குவது நல்லது; தேவையும்கூட!

நியாயத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே முதற்கட்டமாக நமது வேண்டுகோள்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இவர்தான் மோடி


நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரிகளை போலி என்கவுன்டரில் சிக்கவைத்துவிட்டு, தனக்கு நெருக்கமான அமித் ஷாவை மோடி பாதுகாப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறை) அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்ஸாரா.

6 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் வன்ஸாரா மோடியின் நம்பிக்கைக்குரிய மேனாள் அதிகாரி. சி.பி.அய்.ஆல் புலனாய்வு செய்யப்பட்டு வரும் 2003_06 இடையேயான 4 போலி என்கவுன்டர், சோராபுதீன், பிரஜாபதி, இஷரத் ஜஹான், சாதிக் ஜமால் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர், தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்த அதிகாரிகளை ஷா கைவிட்டுவிட்டார் என்றும், முதலமைச்சரைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் வெறும் களப் பணியாளர்கள்தான், அவர்கள் கொள்கை வகுப்பாளர்களான மோடி மற்றும் ஷாவின் உத்தரவுகளைச் செயல்படுத்துபவர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...




தந்தை பெரியார் பேசுகிறார்...

உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்


மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ணமுடியாத தேசாபிமானம் வேண்டாம். தேசாபிமானம் நாளைக்கு; இன்றைக்கு வயிற்றுச்சோற்றுக்கு விசயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். பார்த்து அதற்கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.

நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய அறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.

தமிழ் ஓவியா said...

எரிசர சூரியன் கண்விழித்த வேளையிலே...


ஈரோட்டு மேகத்தில்
எரிசர சூரியனாய் கதராடை ஓவியம்
கண்விழித்த வேளையிலே
நீருக்குள் நிமிர்ந்தபடி
நெடுநேரம் மூச்சடக்கி முங்கிக்கிடந்த
முத்தெல்லாம் முகமன் செய்ததடா

பெண்ணின் விடுதலையைப்
பேசிப்பேசி ஓயாது
கல்விக்கும் கஞ்சிக்கும்
கட்டுகின்ற கந்தைக்கும்
வக்கற்று வாழ்ந்தவனுக்கு
வக்காலத்து வக்கீலாகி துன்பந்தரும்
இழிவுகளைத் துடைத்தெறிந்த பெம்மானே!

எழுத்துச் சீர்திருத்தம்
எளிதான வரிவடிவம் சொல்லாத சொல்லெடுத்து
செம்மாந்தக் கவிதைகளால்
அய்யாவுன் தொண்டினையே அனுதினமும்
நாவசைத்து கன்னித் தமிழன்னை
கனிமொழியில் பாடுகின்றாள்!

காதறுந்த செருப்புகள்
கல்லெறிந்து கலகம்
கடவுள் பித்தலாட்டத்தைக்
கனத்த பொருளுரைத்து மானிட பேதங்கள்
மணியொலிக்கும் வேதமென
ஊசலிட்ட வையத்தை உரியடித்த தீரர்நீர்!

சிக்கனச் செல்வத்தைச்
சீதனமாய்த் தந்தவர்தான்
ஒழுக்கத்தை எஞ்ஞான்றும்
ஓம்புகின்ற மக்களில்
ஆகச்சிறந்த வேந்தராக
அணுவளவும் பிசகாது உள்ளளவும்
கடைப்பிடித்த உலகளந்த பெரியோனே!

காவிப் பூனைகளின்
கண்கட்டு வித்தைகளை
ஆவி பூதமென்று அறிவுக்கு
ஒவ்வாததை மூத்திரச் சட்டியுடன்
மேடைதனில் முழங்கியவர்
சாத்திரப் பொய்யுரைத்த சத்திய சீலரன்றோ!

ஈன்றளித்த கொள்கையெலாம்
இடுகாட்டில் இட்டுவிட்டோம்
வியர்வைத் தீயினிலே வேதனை
விறகெரிய கண்ணின் கருமணியில்
கரும்புகை மூளுதய்யா மண்ணின்
வேரடியில் மகத்துவம் ஆனவரே!

உழைப்பைச் சுரண்டுவோர்
ஊளைச்சதை வாதிகளே சோம்பலுக்கு
எதிர்வினையாய் செயலாற்ற மதியிழந்து
இழிவுகளை ஒழித்திட இம்மியும்
இயலாதவன் அருகதை அற்றவனாம்
ஆனமட்டும் சொன்னீரே!

ஜாதி(க்)காளை விரட்டும்நின்
சாட்டைக்கு அஞ்சியவை சகதிக்குள்
சக்கரமாய் சண்டித்தனம் செய்யாதுன்
தோற்றத்தால் கட்டுண்டு தோல்விதனைக்
கண்டதய்யா ஆனாலும் ஆனதென்ன
அடிமாடாய் வாழ்கின்றோம்

மானுடம் போற்றியே
மனுவைச் சாற்றியே
தமிழர்தம் தந்தையாய்
தரணியிலே நின்றிட்டாய்
ஏனெதற்கு என்றிங்கு
ஏகமாய்க் கேட்டுவிட்டால்
மூடத்தனம் தொழுகின்ற
மடத்தனம் விட்டகழும்!


- சேரங்குலத்தான்

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...

கிராமங்களே இருக்கக்கூடாது

தோழர்களே! எனது கிராமச் சீர்திருத்தத் திட்டம் என்பது என்னவென்றால், நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்து விடுவதேயாகும். அது மாத்திரமல்லாமல், கிராமங்கள் (க்ஷிவீறீறீணீரீமீ) என்கின்ற வார்த்தைகள் அகராதியில்கூட இல்லாதபடி செய்துவிட வேண்டும். அரசியலிலும்கூட கிராமம் என்கின்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்றே சொல்லுவேன். கிராமம் என்கின்ற எண்ணத்தையும், பெயரையும், அதற்கு ஏற்ற பாகுபாட்டையும், பாகுபாட்டு முறையையும் வைத்துக் கொண்டு நீங்கள் என்னதான் கிராமச் சீர்திருத்தம் செய்தாலும் பறையன், சக்கிலி என்பவர்கள், எப்படி அரிஜனன் ஆனானோ அதுபோலவும், ஆதிதிராவிடன் ஆனானோ அதுபோலவும் போன்ற மாற்றம்தான் ஏற்படுமே ஒழிய, பறையன் மற்ற மனிதர்களைப் போல மனிதனானான் என்கின்ற மாற்றம் எப்படி ஏற்படாதோ அதுபோல் கிராமச் சீர்திருத்தம் செய்யப்படுவதால் நல்ல கிராமம் ஆயிற்று என்றுதான் ஏற்படுமே ஒழிய மற்றபடியான நகரத்தன்மையும், நகர மக்கள் அனுபவிக்கும் உரிமையையும் அனுபவிக்க முடியவே முடியாது.

கிராமம் என்று ஒரு குப்பைக்காடு எதற்காக இருக்க வேண்டும்? ஆடு, மாடு, எருமை மேய்ப்பதும், அவைகளைக் காப்பாற்றி பால், தயிர், நெய், மோர் உற்பத்தி செய்வது கிராமத்தான்; அவ்வளவையும் அனுபவிப்பது நகரத்தான். இதற்கு என்ன ஆதாரம்? கிராமவாசி கிராமத்தில் இரவு 3 மணிக்கு எழுந்து மாட்டுக்குத் தண்ணீர் வைத்து, கொட்டத்தைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு 4 மணிக்குப் பால் கறந்துவிட்டு கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு 5 மணிக்குப் புறப்பட்டு 3, 4, 5 மைல் நடந்து 6 மணிக்கு நகரத்துக்கு வந்து நகரத்து மக்களை அய்யா பாலு அம்மா பாலுக்காரி நான் என்று சொல்லிக் கதவைத் தட்டி எழுப்பி பால் ஊற்றிவிட்டுப் போகிறார்கள். தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் பால், நெய் ருசியே தெரியாமல் செய்து விடுகிறார்கள். இதற்கு நகரத்தார் பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். கிராமத்தான் கையில் கிடைத்த இந்தப் பணம்தான் என்ன ஆகிறது. போலீசுக்கு ஒரு பங்கு, முனிசிபல் சிப்பந்திகளுக்கு ஒரு பங்கு போனது போக கனமாக ஏதாவது மீதியிருந்தால் அது வக்கீலுக்கும் அதிகாரிகளுக்கும் போகிறது.
நல்ல பெரிய விவசாயி என்பவனும் கிராமத்தில் இருந்தால் இதுபோல்தான். கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்-குக் கொண்டுவந்தால், நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச்செலவு _ முட்டுவலிக்குக்கூட பத்தும் பத்தாமல் கணக்குப் போட்டு விலைபேசி ஒன்றுக்கு ஒன்றேகாலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரையத்தைத் தரகு, மகிமை, சாமிக்காக, நோட்டு வட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெத்திலை பாக்குச் செலவு என்றெல்லாம் பல செலவுகணக்குப் போட்டுப் பிடித்துக்கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன் மீது கருணைவைத்து, கடவுள் இவ்வளவு ரூபாயை கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக்கொண்டு காப்பி சாப்பிட்டு சினிமாப் பார்த்து விட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ இந்தச் சரக்கை வாங்கி, இருப்பு வைத்து அதிக விலைவரும்போது விற்று லாபமடைந்து லட்சாதிபதியாகி மாடமாளிகை கட்டிக்கொண்டு கிராமவாசியை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான்.

சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் போகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.

ஆகவே கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் சூத்திரன் _ தீண்டாத ஜாதியான் நிலையில்தான் இருக்கும்.

எனவே, சமுதாயத்தில் மக்கள் மனிதத்தன்மை பெறவேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும், பறையன் என்ற ஒரு ஜாதியும் அடியோடு இல்லாமல் மனிதன் என்கின்ற ஜாதிதான் இருக்கவேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ அதுபோல் ஊர்களிலும், பட்டணம் நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள்தான் இருக்கவேண்டும் என்று ஆக்கப்படவேண்டும். - நூல்: கிராமச் சீர்திருத்தம்

தமிழ் ஓவியா said...

கிருஷ்ணன் மட்டும் வாழ்க!


ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார்: நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000க்கு மேல்சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார். உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார். உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன், கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று சொன்னாராம். தகவல்: சந்திரன் வீராசாமி, திருச்சி

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...

சோற்றைத் தின்றுவிட்டு சும்மா இருப்பதா?



நேற்று குறிச்சி வைச்சேன் சொல்லலாம்னு. நேற்று வந்து என்னைச் சந்தித்தவரு 90 வயசு ஆகுதே கொஞ்ச நாளைக்குச் சும்மாயிருங்களேன்னாரு. அடே பயித்தியக்காரா ஒரு ஆளு சோறு திங்கிறேன். கொஞ்சங் கொஞ்சமா சாப்பிட்டாலும் என் ஒருத்தனுக்கு செலவு ரூ200 ஆகுது. ஒரு வேளை காபி, ஒரு வேளை பாலு, ஒரு நாளைக்கு அரைகிலோ கறி. கறி இல்லாமல் (இறைச்சி) சாப்பிடவே மாட்டேன். முட்டை அது இது எல்லாம். முன்பு ரூ.15லே அடங்கின செலவு இப்ப எனக்கு 200 ரூபாய் ஆகுது என் ஒருத்தன் செலவு. எப்படி ஆகுதுன்னு கேட்பிங்க. எட்டு பழம் மலைப்பழம் ஒரு பழம் இரண்டனா 1 டஜன் ஒன்னரை ரூபாய். இந்த மாதிரி நான் சாப்பிடுவது பொது மக்களுடைய பணம்தானே. ஒரு மாசத்துக்கு 200 ரூபாய்க்குத் தின்னுட்டு நான் சும்மாயிருக்க வேணும்னா அது சரியல்ல. ஆனதினாலே அய்யா என்னாலானதைப் பத்தில் ஒரு பங்காவது பொதுத் தொண்டு செய்யணும்னு சொன்னேன். அது மாதிரி மனிதன்னா தானுண்டு, தன் பொண்டுபிள்ளை உண்டுனு, சோறு தின்னுக்கிட்டு பொதுத் தொண்டு செய்யமாலிருப்பது- _ சுயவாழ்வை விட கேவலம் அது. நம்மாலே உலகத்துக்கு என்னா? அதனாலே மக்கள் ஆணும் பெண்ணும் பக்குவமடைய வேணும்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பேசுகிறார்...

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?


தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னைச் சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, கீதை வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னைத் தீண்டாத ஜாதியாக பார்ப்பானும் அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றிச் சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.

* * *

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துகளையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!

* * *

அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டுவிட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? நீ யாருக்குப் பிறந்தவன்? என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும்விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து, நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கும்படிச் செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்குப் பொத்துக்கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனைச் சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்! சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!

- நூல்: தமிழும் தமிழரும்

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...
நமது தேர்தல் முறை சரியா?


தோழர்களே! இந்த எலக்ஷன் முறையின் காரணமாக, பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற காரணத்திற்காக ஓட்டுப் பெற்று, அதனால் பலனை உண்டாக்குவதைவிட இந்த ஓட்டுக் காரணமாக எவ்வளவு நல்ல வேட்பாளனையும் அயோக்கியனாக்கி விடுகிறார்கள். எவ்வளவு யோக்கியர்களா இருந்தாலும் வேட்பாளர்கள் ஒழுக்கத்தோடு இல்லை. நான் சீமையில் தேர்தல் நடந்ததைப் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். முன்பெல்லாம் ஓட்டு இங்கு இருந்தது வெள்ளைக்காரன் காலத்திலே.

ஆனால் ஒரு அளவுக்குத் தகுதிபார்த்துக் கொடுப்பான். அபேட்சகர்களும் தகுதியுள்ளவர்களாகவே நிற்பார்கள். அப்ப பணம் கொடுக்காமல் தேர்தல். நாணயம், ஒழுக்கம் கெடாமல் காரியம் நடக்கும். அப்படித்தான் இருந்தது. அவன் போன பிறகு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கணும்ன்னு ஆரம்பிச்ச பிறகு வேட்பாளர்களான இரண்டு பேர் நிற்பதில் போட்டி ஏற்பட்டு நாணயம் இல்லாமல் போய் விடுகிறது. காரணம் என்னா? கொள்கையில்கூட அவர்களுக்கு இலட்சியம் இல்லை. தேர்தலில் நின்றுவிட்டால் சரி, எப்படியாவது ஜெயிக்கணும். அதுக்கு எந்தவிதமான பித்தலாட்டமான ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்யணும். எவ்வளவு யோக்கியமான ஓட்டராக இருந்தாலும் அவன் எந்த அளவிற்கு நாணயமாயிருந்தாலும் அவனை நாணய மற்றவர்களாக ஆக்கி எந்த விதத்திலாவது ஓட்டு வாங்கணும். இதுதான் ஓட்டுரிமையிலே ஏற்படுகிற பலன்.

* * *

10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு பண்ணி எலெக்ஷனில் ஜெயிக்கணும்ன்னா, உண்மையான ஜனநாயகத்திலே 100க்கு 95 பேருக்கு வசதி வாய்ப்பு இருக்குமா? எத்தனை பேரு நம்ம ஜனங்களிலே இலட்ச ரூபாய் செலவு பண்ணி எலக்ஷனிலே ஈடுபட வாய்ப்போடு இருக்கிறாங்க? எந்தக் கட்சிக்காரனும் அபேட்சகரை எதிர்த்து நிற்கும் ஆளு ஓட்டுக்கு வந்தாலும், அவனிடம் ஓட்டர்கள் ரூ 5 கொடுக்கறீயா, 10 ரூபாய் கொடுக்கறீயான்னு கேட்கலாம். இது ஒன்னும் ரகசியமில்லே. நம்ம நாடு பூராவும் தெரிந்திருக்கிற ரகசியம் இது. இதைப் பற்றி யாருக்கும் கவலையில்லையே. இலட்சியம் பண்றதில்லையே? எல்லாக் கட்சிக்காரர்களும் காந்தியார் காலம் தொட்டு மக்களுக்கு ஓட்டுக் கொடுத்து வருகிறாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏச்சி, எப்படியாவது பதவிக்கு வரணும் அது தான் அபேட்சகர்களின் நோக்கம். இப்படிப் பணம் கொடுத்துப் பதவிக்கு வந்த பிறகு அதுதான் ஜனநாயகம்ன்னு பேசுறாங்க.

நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் ஒரு சமுதாயச் சீர்த்திருத்தக்காரன் என்பதனாலே இதைச் சொல்லுகிறேன். நான் அரசியலில் இருந்தால் கூட இந்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் நானும் பண்ணித்தான் ஆகணும். காந்தி அரசியலில் நின்னாலும் பணம் கொடுத்துத்தான் ஆகணும், ஜவஹர்லால் நேரு எலெக்ஷனில் நின்னாலும் அவரும் பணம் கொடுத்துத்தான் ஆகணும். நம்ம காமராசர் எலெக்ஷனில் நிற்கணும்ன்னு சொன்னாலும் அவரும் இலட்ச ரூபாய் செலவு பண்ணித்தான் ஆகணும், அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேணுமா? இப்படி எல்லாம் எலெக்ஷனில் ஜெயிச்சி வரணும்ன்னா இது என்னா ஜனநாயகம்? வெங்காய ஜனநாயகம் (சிரிப்பு கைத்தட்டல்) பணத்தினாலே ஜெயிக்கலாம், பித்தலாட்டத்திலே ஜெயிக்கலாம். மக்களை ஏய்க்கிறதினாலேயும் ஜெயிக்கலாம். (சிரிப்பு) அப்படி ஜெயிச்சி வந்ததுக்கு அப்புறம், அதை ஜனநாயகம் என்கிறான். ஜனநாயகத்தில் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறான்.

ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா? பணம் கொடுக்கிறதாலே நாணயம் கெட்டுப் போகுது ஒழுக்கம் கெட்டுப்போவுது. இந்த முறையிலே நல்லவன் _ யோக்கியன் வரமுடியாமல் போயிடுது. நல்ல மனுஷன் வருவதுக்கு வாய்ப்பும் இல்லாமல் போயிடுது இந்த மாதிரியான தேர்தல் முறையினாலே. ஆனதினாலே இந்த மாதிரியான, ஒழுக்கக்கேடான, நாணயக்கேடான, ஜனநாயகத்தை ஒழிக்கத்தான் நான் பாடுபடுகிறேன். (கைத்தட்டல்) இது மாறணும் விரைவிலே. (கைத்தட்டல்) சுத்த காலிப்பசங்களைக் கொண்டுவந்து விட்டுடுறாங்க, மகா அயோக்கியத்தனங்களைச் செய்யப் பயப்படாமே துணிஞ்சி தேர்தலில் வந்திடுறாங்க. பணத்துக்குத்தான் ஓட்டுத் தந்தாங்கன்னு அவனுக பதவிக்கு வந்த உடனே பொறுக்கித் திங்க ஆரம்பிக்கிறாங்க. இந்த மாதிரி நிலை நீடிக்கிறதினாலே நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு _ கஷ்டப்படுகிற மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பேசுகிறார்...
பார்ப்பனர்களை ஆதரித்தது ஏன்?


பொதுவாக இந்தக் காரியத்திலே (தேர்தலிலே) கிருஷ்ணமாச்சாரியை மாத்திரமா நான் ஆதரிச்சேன். சீரங்கத்திலே, வாசுதேவ அய்யாங்காரை ஆதரிச்சேன் கும்பகோணத்திலே சம்பத்- அய்யங்காரை ஆதரிச்சேன், சர்.பி.ராமசாமி அய்யர் மகன் பட்டாபிராமனை அந்த ஆளை ஆதரித்தேன், பட்டுக்கோட்டையில் யாரோ ஒரு சீனிவாசனை ஆதரிச்சேன், இன்னும் எங்கெங்கேயோ நான் ஆதரிச்ச பாப்பானிலே தோத்துப்போன ஆளு இந்த காஞ்சிபுரம்தான், ஏறக்குறைய நான் போன ஆளுக எல்லாம் ஜெயிச்சாங்க, என்னமோ அந்த ஆளுக எல்லாம் இப்ப நம்ம காமாராசருக்குக் கையாளாக இருப்பாங்கன்னுதான் நினைச்சேன், அதுதான் காரணம்.

அய்யமாரை ஆதரிக்கிறேன்னா காமாராசருக்குக் கையாளுன்னுதான், அய்ந்தாம் படையாய் இல்லாமல், சூழ்ச்சி பண்ற ஆளாய் இல்லாமே _- இந்த மாதிரி இருப்பாங்களேன்னு, இந்தக் காரியத்துக்காகத்தான் என் ஆதரவு,

பாரத நாடும் காந்தி நாடும்!

இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்குக் காந்தி நாடுன்னுபேரு வைச்சா நான் வரவேற்பேன். காந்தி- சகாப்தமானாலும் நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு பாரத நாடு என்று இந்த நாட்டுக்குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. எதுக்காக இந்த நாட்டுக்குப் பாரத நாடு-ன்னு பேரு இருக்க வேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம், சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் பாரத நாடுங்கிறான். காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் காந்தி நாடு-ன்னு வைக்கச் சொன்னேன்.

அதாவது வருஷம் என்றதுக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் வருஷம் என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிறிஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டசி மாதம் பிறந்தேன். பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? முஸ்லீம் முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே காந்தி பேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நடக்காது!

செய்தி: ஏழுமலையா னுக்குப் புதிய பல்லக்கு. - நரேந்திரமோடி

சிந்தனை: ஏன் நடப்பதில் தகராறோ?

குறிப்பு: பிணியான வர்களையும், பிணமான வர்களையும்தானே தூக்கிச் செல்லுவார் கள்?

தமிழ் ஓவியா said...

வைத்தி அய்யர்கள்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா செய்திகளைப் பல ஏடுகளும் வெளியிட்டுள்ளன. மாலை முரசு பெரியார் திடலில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. (வாழ்க தமிழின உணர்வு!).

தினமணி வைத்தியநாதய்யர் எப்படி செய்தியை வெளியிட்டுள்ளார் தெரியுமா? வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் பல்வேறு கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்று தினமணி செய்தி போடுகிறது. அது என்ன பெரியார் திடலிலும்?

பெரியார் திடல்தான் தந்தை பெரியாரின் தலைமை யிடம் - தலைமைக் கழகம் இருக்கக்கூடிய இடம். இயக் கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலை நாள்தோறும் வெளிவந்திருக்கக்கூடிய இடம். இந்த நிலையிலும் பெரியார் திடலிலும் என்று போடுவதற்குப் பெயர்தான் திருத்தப்படவே முடியாத பார்ப்பனத்தனம் என்பது; தமிழர் விரோத ஏடு என்ற முத்திரையைப் பதிக்காமல் வைத்தி அய்யர் வெளியேற மாட்டார் என்று தெரிகிறது.

(குறிப்பு: பார்ப்பனர்கள் மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன சங்க மாநாட்டில் தீர்மானம் போட்ட பிறகு மீசை வைத்துள்ள அய்யர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது).

தமிழில் வெளிவரத் தொடங்கியுள்ள இந்து ஏடு ஓரளவு பெரியார் பிறந்த நாள் விழா செய்திகளை வெளி யிட்டுள்ளது. கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நான்காம் பக்கம் வெளிவந்துள்ள செய்தியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், தி.மு.க. ஆட்சி யில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆன நிலை யில், மறுபடியும் மறுபடியும் ஏடுகளும், தொலைக்காட்சி களும் தந்தை பெரியார் பெயரை இருட்டடிக்க ஆசைப் படுவது ஏன்? இப்படியெல்லாம் சூரியனைச் சுண்டைக் காயால் மறைத்துவிட முடியாதே!

தமிழ் ஓவியா said...

திராவிடக் கட்சிகள்பற்றி சி.பி.எம்

சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ் ணன் அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன் னெடுத்துச் செல்லுவதில் பெரியாரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது என்று குறிப்பிட்ட அதே வேளையில், பெரியாருக்குப்பின் ஜாதி ஒழிப்பு இயக்கங் களை நடத்துவதில் திராவிடக் கட்சிகள் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அடிப்படையில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் பொத்தாம் பொதுவாக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை.

திராவிடர் கழகம் நடத்துகின்ற ஒவ்வொரு பொதுக் கூட்டமும், நிகழ்ச்சியும்கூட ஜாதி ஒழிப்பைக் கருவாகக் கொண்டதுதான்.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகள் எரிக்கப்பட்டபோதுகூட களத்தில் முன்னின்று அனைவரையும் ஒருங்கிணைத்து, ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஜாதிவெறித்தனத்துக்குக் கொள்ளி வைத்ததுகூட திராவிடர் கழகமே!

இன்றும் ஜாதி - தீண்டாமை என்பது அதிகாரப் பூர்வமாக, சட்ட ரீதியாக, சாஸ்திர ரீதியாக ஆளுமை யோடு அகங்காரத்தோடு, வீராப்புத்தனத்துடன் குடிகொண்டு இருப்பது கோவில் கருவறையே!

இதனை முறியடிக்கும் மிகப்பெரிய சமூகப்புரட்சிப் போராட்டக் களத்தில் நின்றுகொண்டு இருப்பது திராவிடர் கழகம்தானே. அதற்கான சட்டங்களை இருமுறை கொண்டு வந்த சிறப்பு தி.மு.க.வுக்கு உரியது என்பதையும் புறந்தள்ளிவிட முடியாதே! ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன என்பனவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?

ஜாதி - வருணாசிரமத்தை வலியுறுத்தும் நூலான கிருஷ்ணனின் கீதையைப் பின்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளது குறித்து சி.பி.எம். இதுவரை விமர்சன அளவில்கூட எதையும் கூறாதது ஏனோ?

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டமும் - மத்திய அரசின் முடிவும்!

தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டம், சேது சமுத்திரத் திட்டமாகும். 1860 ஆம் ஆண்டு இதன் தொடக்கமாகும். 153 ஆண்டுகாலமாக இது நிறை வேற்றப்படாமல், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் வேகம் காட்டப்பட்டது.

60 சதவிகித பணிகள் முடிவுற்ற நிலையில், இந்தத் திட்டம் கூடாது; என்று முட்டுக்கட்டை போடப்பட்டு விட்டது.

பச்சைப் பார்ப்பனரான சு.சாமி என்பவரும், அண்ணா பெயரையும், திராவிட இனக் கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெய லலிதாவும் உச்சநீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்து இடைக்காலத் தடையைப் பெற்று விட்டனர்.

ராமன் கட்டிய பாலத்தை இடித்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறார்கள் - இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது, என்ற கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.
இதில் என்ன கொடுமை என்றால், பி.ஜே.பி. காரர்கள் ராமன் பாலம் என்று சொல்லப்படும் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சொல்லி வருகிறார்களே தவிர, திட்டமே கூடாது என்று கூறவில்லை. ஆனால், செல்வி ஜெயலலிதா அவர்களோ இந்தத் திட்டமே அறவே கூடாது என்று அடம்பிடிக்கின்றார்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் 6 ஆவது வழித்தடம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முடிவு செய்யப்பட்டதல்ல, மாறாக வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில்தான் முடிவு செய்யப்பட்டது.

முரளிமனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோர் மத்தியில் அமைச்சராக - பி.ஜே.பி. ஆட்சிக்காலத்தில் ஒப்புதலும் பெறப்பட்டதாகும்.

அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இரண்டு தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்றாத மத்திய அரசின் மீதும் தேர்தல் அறிக்கையில் குற்றச் சாற்றும் பதிவு செய்யப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது (10.5.1986).

உண்மை இவ்வாறு இருக்க, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, என்று இன்று கூறுவதில், அரசியல் உள்நோக்கம் ஓங்கி நிற்கிறது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மத்தியில் உள்ள காங்கிரசுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.வுக்கும் அதன் அரசியல் பலன் போய்ச் சேர்ந்துவிடும் என்ற பயமே இதன் பின்னணியில் பெருந்தூணாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இத்தகு உள்நோக்கத்தோடு, இந்தத் திட்டத்தைத் தடுப்பவர்கள், தமிழ்நாடு மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படக் கூடிய திட்டத்தைத் தடுப் பதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கட்சிகள் அம்பலப்படுத்தப்படும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. மிகக் கடுமையான விலையை எதிர்காலத்தில் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்! எச்சரிக்கின்றோம்!

அ.இ.அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழ் ஓவியா said...

வைக்கம் வீரர்


திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் சுவையான எழுத்தோவியம் இதோ:
வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கு சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்று தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று. (பக்கம் 349)

தமிழ் ஓவியா said...

வாழ்த்துவதில் கணக்குப் பார்க்கும்போது..



அய்யா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அய்யா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். கூட்டத்தில் பேசிய பேச்சாளர்களுள் பலர்,

அய்யா அவர்கள் ஈரோட்டில் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும். ஈரோட்டிற்கு அய்யா அவர்கள் எதுவும் செய்வதும் இல்லை. அய்யா காசு விசயத்தில இப்படிக் கணக்குப் பார்க்கக் கூடாது. கொஞ்சம் தாராளமாக இருக்க வேண்டும் என்று அய்யாவின் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்கள்.

கூட்டம் முடியும்போது பேசிய அய்யா அவர்கள், நான் காசு பணம் விசயத்தில ரொம்பக் கணக்குப் பார்க்கிறேன்னு பேசியவர்களில் அதிகமானோர் சொன்னார்கள். நீங்கள் என்னை வாழ்த்தியபோது, அய்யா 100 வயசு வரையில் இருக்கணும், 101 வயசு வரையிலும் வாழணும் அப்படினுதானே வாழ்த்தினீர்கள். ஏன் லட்சம் வருசம் உயிரோடு வாழணும், அய்யா கோடி வருசம் வரை இருக்கணும்னு வாழ்த்தலே?

நீங்க சும்மா வாழ்த்தறதிலேயே ஒரு கணக்குப் பார்க்கறீங்க. கஞ்சத்தனம் காட்றீங்க இது பணம், காசு விசயம்கூட இல்லை. சும்மாவே வாழ்த்தப் போறீங்க _ அப்படியிருக்க என்னைப் பார்த்துக் கணக்குப் பார்க்கறீங்கன்னு சொல்வது நியாயமா? என்று கேட்டாராம்.

- நூல்: மேதைகளின் கருத்துக் களஞ்சியம்

தமிழ் ஓவியா said...

முட்டாள்கள் எங்கும் உண்டு

அமெரிக்கர் ஒருவர் அய்யா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். அய்யாவின் கொள்கைகள் பற்றி விவாதித்த அவர், மக்களிடையே நாளுக்கு நாள் ஒழுக்கக்கேடுகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு ஒழுக்க உணர்வை ஊட்டவாவது தெய்வபக்தி, மதநம்பிக்கை இவை இருக்க வேண்டியது அவசியமல்லவா? என்று கேட்டுள்ளார்.

உடனே அய்யா அவர்கள், மதபோதனை, கடவுள் பக்தி எல்லாம் எத்தனையோ காலமாக மக்களுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. கூடிக்கொண்டுதான் போகிறது. உங்கள் நாட்டிலேகூட நிமிடத்துக்கொரு கற்பழிப்பு, மணிக்கொரு கொலை நடப்பதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆகையினாலே நீங்கள் சொல்லும் மதபோதனை, கடவுள் பக்தி இவையெல்லாம் மக்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டுள்ளார்.

உடனே அமெரிக்கர், ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவிலும் பரவி வருகிறதே என்றதும்,

முட்டாள்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்லர். எல்லா நட்டிலேயும் இருப்பாங்க, அமெரிக்காவிலும் இருக்காங்க என்றாராம் அய்யா.

தமிழ் ஓவியா said...

மாறுதல்


ஒரு கணவன் அவன் மனைவியை ஏதாவது அடிச்சிப் போட்டான்னா அது கிரிமினல். பொம்பளைகள் எல்லாம் முன் காலத்திலே எப்படி நினைத்துச் சொல்லுவாள் தெரியுமா புருஷனிடம்? மகாராசா உன் கையாலே நான் செத்தால்நான் புண்ணியத்துக்குப் போய்டுவேன் என்பாள். இப்ப சட்டப்படி அது கிரிமினல். இப்போ வைதால் கிரிமினல். வாடி போடீன்னா இவன் கிட்டே இருக்க இஷ்டமில்லை அய்யா என்னைக் காட்டுமிராண்டி-யாட்டம் பேசுறான் என்பாள். இதெயெல்லாம் மனிதனுக்குச் சுதந்திரம் ஏற்பட்ட பிறகு _ மாறுதல் ஏற்பட்ட பிறகு ஏற்படுகிற மாற்றம். உலகம் இன்னும் எவ்வளவோ மாறிக்கிட்டு வரப்போவுது. ---பெரியார்

தமிழ் ஓவியா said...

நூல்:

வடநாட்டில் பெரியார் (தொகுதி 1, 2)
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,. வேப்பேரி, சென்னை_7.

பக்கங்கள்: தொகுதி 1: 224, தொகுதி: 2: 384. விலை: தொகுதி 1: 90, தொகுதி 2: ரூ.150. உலக மக்கள் அனைவரும் மூடநம்பிக்கைகளில் இருந்து _ மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து மீள வேண்டும் என எண்ணியவர் தந்தை பெரியார் அவர்கள். தமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். பம்பாய், கல்கத்தா, பாட்னா, கான்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று ஆற்றிய உரைகள், நடத்திய மாநாடுகள், இயற்றிய தீர்மானங்கள், சந்தித்த நபர்கள், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், அய்யாவின் உரைக்கு _ கருத்துக்கு பத்திரிகைகள் கொடுத்த சிறப்பு, பொதுமக்களிடம் காணப்பட்ட வரவேற்பு போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல்.

தந்தை பெரியாரை _ அவரது தடம் பிறழாத கொள்கைகளை _ சொல் வீச்சுகளைப் படம் பிடித்துக் காட்டி அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம்பெற வேண்டிய கருத்துப் பெட்டகமாகத் திகழ்கிறது.

தமிழ் ஓவியா said...

ஒலிவட்டு Audo CD

தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள்

தொடர்புக்கு : பெரியார் புத்தக நிலையம்

தொலைப்பேசி : 044௨6618161

பரபரப்பான இன்றைய உலகில் புத்தகங்களைப் படிப்பதற்குப் பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஒலிப் புத்தகங்களின் தேவை அதிகரித்துவிட்டது. பேருந்தில், ரயிலில் பயணம் செய்யும்போது பயனுள்ள கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் ஒலிப் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.

தந்தை பெரியாரின் கருத்துகளை _- கொள்கைகளை இளைய தலைமுறையினரும் தெரிந்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின் இந்த உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கும், அறிவியலின் கண்டுபிடிப்புகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துச் சொன்ன அறிவு ஆசானின் சிந்தனைகள்,

இனிவரும் உலகம், கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்?, தமிழனை அடிமையாக்கியவை எவை? என்ற மூன்று தலைப்புகளில் மிளிர்கின்றன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் குரலில் இனிவரும் உலகம் ஒலிக்கிறது.
தொடர்ந்து தந்தை பெரியாரின் சிந்தையைக் கவரும் கருத்துச் செல்வங்கள் வெளிவரும் என்ற அறிவிப்பு அடுத்தடுத்த ஒலிப் புத்தகங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது.

தமிழ் ஓவியா said...

இணையதளம் http://periyarpinju.com/

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமைந்துள்ள இணையதளம்.

பிஞ்சுகளின் மனதில் நன்னெறியையும் நம்பிக்கையையும் ஊட்டும்வகையில் ஆசிரியர் தாத்தா பேரன் பேத்திகளுக்கு எழுதும் அன்புமடல், பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழிவகுக்கும் கதைகள், அறிவியல் செய்திகள், மூளைக்கு வேலை கொடுக்கும் சுடோகு, சிந்திக்க வைக்கும் படக்கதை, உலகச் செய்திகள் போன்ற பல்வேறு தகவல்களுடன் பரிணமிப்பதே பெரியார் பிஞ்சு மாத இதழ்.

முந்தைய இதழ்கள் பகுதியில், நாம் படிக்க விரும்பும் இதழின் மாதத்தைக் கிளிக் செய்து செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், கணினியிலேயே விளையாடுவதற்கு ஏற்றபடி சுடோகு, சீராக படத்தை அடுக்கும் படப்புதிர் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கான காணொளிகளும் இந்தத் தளத்தைக் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன.

தமிழ் ஓவியா said...

மறு கன்னத்தைக் காட்டினால் என்னாகும்?


கருத்தொற்றுமை கொண்ட வள்ளுவரும் இயேசுவும் நான் ஏறக்குறைய வள்ளுவரின் சங்கதிகளைக் கிறிஸ்துவுக்கும் பொருத்துவதுண்டு. ஆனால் நான் வள்ளுவர் முந்தியா? கிறிஸ்து முந்தியா? என்பதில் நான் கிறிஸ்து முந்தின்னு சொன்னால் கொஞ்சம் தகராறு வரும். ஆனால் அவர் வெகு தூரத்திலே 5000, 6000 மைலுக்கு அப்பாலே இருந்தவர். இவர் (வள்ளுவர்) இப்பால் இருந்தவர். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பி அடிச்சிருக்க மாட்டாங்க _ வைச்சிக்கங்க, ஆனாலும் கருத்து ஒன்னாயிருக்கும். நல்லா மகிழ்ச்சியோடு அன்போடு அவரவர்கள் கருத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ரொம்பச் சரி. இவர்போல்தான் சொல்லியிருக்கிறார் கிறிஸ்து. இந்தக் (வலது) கன்னத்தில் அறைந்தால், இந்தக் (இடது) கன்னத்தையும் காட்டு என்று! மேல்சொக்காயைப் பிடுங்கினால் அடிச் சொக்காயையும் கழட்டிக் கொடுன்னார்! (சிரிப்பு) சரி ரொம்ப -அன்புக்கும் அது சரி. ரொம்ப ஆழ்ந்த ஞானத்துக்கும் அது இருக்குது. அது இன்னைக்கு முடியுமோ? இந்தக் கன்னத்தில் அறைஞ்சதும் நீ மறு கன்னத்தையும் காட்டினால் வாயில் உள்ள முப்பத்திரண்டு பல்லும் போயிடும் (சிரிப்பு). வெறும் ஆளாய்த்தான் போய்ச் சேருவான், கொஞ்சம் எதிர்த்தால்தான் முடியும். இன்றைக்கு அப்படி வேண்டியிருக்குது. அவர்கள் அப்பொழுது அப்படி இருந்தார்கள், அவர்கள் பயித்தியக்காரர்கள் அல்ல. அன்றைய காலம் அப்படி இருந்திருக்கும். ஒரு சமயம் அது போலவே நம்ம இலக்கியங்களிலே அனேக சங்கதிகள் இருக்கு. அதை சுவாமிகளும் சொல்லியிருக்கிறாங்க. அதை நம்புகிறோமோ இல்லையோ அது மாதிரி நடந்ததோ, இல்லையோ அதிலே இருக்கிற கருத்துகள் ரொம்பச் சரி, சிலது அப்படியே இருக்குது.

தமிழ் ஓவியா said...

வாழ்த்து?

எனக்கு வாழ்த்துவதிலே நம்பிக்கையில்லை. அது ஒரு மூடநம்பிக்கை. என்னை வையிரான் பாருங்க. அவன் நாசமாயப் போகமாட்டானான்னு அதுவும் ஒரு மூடநம்பிக்கைதானே. உடனே நான் நாசமாய்ப் போயிடுவேனா நான். ஆனதினாலே எல்லா மூடநம்பிக்கை போல வாழ்த்தும் _- ஒரு மூடநம்பிக்கை. ஆனாலும் அது ஒரு செல்வாக்குப் பெற்றிருக்கிறதினாலே, அது காதுக்கு இனிமை கொடுக்கிறது. அது என்னா செய்கிறதுன்னா? வாழ்த்துகிறபோது அது இனிமையைக் கொடுக்கிறது. வைகிறபோது கொஞ்சம் துன்பத்தைக் கொடுக்கிறது.

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்கிறார்



இப்போதெல்லாம்
குப்பனையும் சுப்பனையும்
கோவில்களுக்குள்
காண முடிகிறது

பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த
பொன்னுத்தாயின் பேத்தி
லண்டனில்
பிசியோதரபி படிக்கிறாள்

வியாதி என்றதும்
மந்திரித்து
தாயத்துக் கட்டிய கைகளில்
மருந்துச் சீட்டுகள்

மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம்
கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப்
பணிவோடு காட்டுகிறார்
கணேச அய்யர்

வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்தும்
தேங்காயைத் தட்டிப் பார்த்தும்
கொள்முதல் செய்யும் கணவர்கள்
காய்கறிச் சந்தைகளில்

மொட்டை போட்டிருந்த
நண்பன் ஒருவனிடம்
கோவிலுக்கா என்றேன்
சம்மருக்கு என்றான் சாதாரணமாக

மேலத் தெருவில்
கீழத் தெருக்காரர்களின்
பாலிஷ் செய்யப்பட்ட
பாதுகைகளின் தடங்கள்

வெண்ணிலாவின்
மதிப்பெண் அட்டையில்
அம்மா பெயரின் முன்னெழுத்தும்
மின்னிச் சிரிக்கிறது

கழுத்துக் கயிற்றின்
மதச் சின்னங்கள்
காலாவதி ஆகிப் போய்
சில்வர் செயினில்
'Love' 'Cool' வாசகங்கள்

தொலைக்காட்சியின்
சமையல் நிகழ்ச்சிகளில்
தொகுத்து வழங்கும் பெண்களையும்
சமைத்துக் காட்டும் ஆண்களையும்
எவரும் விகாரமாய்ப் பார்ப்பதில்லை

சாலைகளில் முளைத்த
'வழி'பாட்டுத் தலங்கள்
அவ்வப்போது
நகராட்சியின் புல்டோசருக்கு இரையாகிறது

மதத்தை ஜாதியை முன்னிறுத்தும்
அரசியல் அமைப்புகள் யாவும்
பெரியாரின் மண்ணில்
மண்ணையே கவ்வுகின்றன ....

- ‍ ஓவியச்செல்வன்

தமிழ் ஓவியா said...

பெரியார் திடல் வாங்கிய கதை!


ஜி.டி.நாயுடு அவர்கள் பேசினார்கள். உங்களுக்கும் தெரியும் அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு. எப்பவும் அவுங்க, எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் என்னைப் பாராட்டுவதற்கு அவர் கொண்டிருக்கிற ஒரு உறவு என்னைப் பற்றிக் கேலியா சில வார்த்தைகள் சொல்லுவது என் காதுக்கு இனிய சில சிக்கல் சம்பிரதாயங்களை எடுத்து எடுத்துச் சொல்லுவார்கள். ஒன்னும் பொய் இருக்காது. அதை நான் சொல்லிக்கிறேன். நிஜம் தான் (கைத்தட்டல் சிரிப்பு) அய்யா அவர்களுக்கும் அது வேடிக்கை. சிக்கனம். நாங்கள் இரண்டு பேரும் ஒரு இலையில் உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட்டவன்தான். என்னால் ஆனவரைக்கும் தடுப்பேன். அவரு வேலைக்காரன் தானே எனக்கு அதிகமாகப் போட்டுட்டுப் போயிடுவான். (சிரிப்பு) அது அவருக்கு வேடிக்கை. போடுங்கிறேன். அவரு திங்கிறாரா இல்லையான்னு பார்ப்பார். அப்படி ரொம்ப எங்கள் இருவருக்கும் பழக்கமாயிடுச்சி. அதனாலே இந்த வேடிக்கையை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறதுதான். அது என்னைப் பற்றிச் சொல்லுகிறதுக்குப் (என்னை) பாராட்டுவதிலே அது அவருக்கு ஒரு முறை அவ்வளவுதான். (கைத்தட்டல் சிரிப்பு) வேறு சில விஷயங்களையும் அவரு சொன்னாரு. முக்கிய விஷயத்தையும் நான் சொல்றேன். இந்த இடம் (பெரியார் திடல்) அவர் ஜி.டி. நாயுடுகாரு) வாங்கிக் கொடுத்தது. (பெரியார் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வந்து தொல்லை தருகிறது ஆனாலும் பேச்சு தொடர்கிறது). ஆரம்பத்திலே நான் வேண்டான்னுட்டேன். இதற்கு முன்பே என்கிட்டே விலைக்கு வந்தது. வந்து சொன்னாங்க வாங்கலாம்னு. பின்னால் அவர் வாங்கிட கட்டாயப்படுத்தவே _ -இயக்கத்துக்காக வாங்கினேன்.

தமிழ் ஓவியா said...

பெரியார் இல்லாவிட்டால்...?


கேள்வி : பெரியார் தமிழ்நாட்டில் பிறக்காதிருந்தால்...?

பதில் : கடைசி மனிதர்களும் தலைநிமிர்ந்து நின்றிருக்க முடியாது.

கேள்வி : பூட்டிய அறைக்குள் 10 நாள் பொழுதுபோக என்ன புத்தகங்கள்?

பதில் : அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள்தான்.

கேள்வி : பிடித்த பாரதிதாசன் கவிதை?

பதில்: ``இருட்டறையில் உள்ளதடா உலகம். ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!

கேள்வி : விரும்புவது எந்த கலர் பேண்ட்?

பதில் : ``கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

- கல்கி (18 ஆகஸ்ட் 2013) இதழில் தொல்.திருமாவளவன் அளித்த பதில்களிலிருந்து...

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கான உரிமைகள்


1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் மனிதரில் மேல்ஜாதி கீழ்ஜாதி என்ற வேற்றுமை இருப்பதுபோல் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற வேறுபாடும் இருக்கக் கூடாது என்று பேசியதுடன், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சம வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியவர் நம் அய்யா அவர்கள்.

இதனைக் கேட்ட சிலர், அப்படி என்னென்ன உரிமைகள் பெண்களுக்கு வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்று அய்யா அவர்களிடம் கிண்டலாகக் கேட்டனர்.

கேட்டவர்களின் தொனியைப் புரிந்துகொண்ட அய்யா அவர்கள், நீங்கள் ஒன்றும் அதிகமாகப் பெண்களுக்கு உரிமைகளைத் தந்துவிட வேண்டாம். ஆண்களாகிய நீங்கள் இப்போது என்னென்ன உரிமைகளை அனுபவித்து வருகிறீர்களோ அதேபோல் பெண்களுக்கும் தந்தால் போதும் என்றதும் கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்களாம்.

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்?

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினைத் தன்னுடைய தோழர் களுக்குச் சொல்லியிருக்கிறார். குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்க வேண்டாம்; நம்முடைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள்ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னார்.

இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதைச் செய்யக்கூடாது.

ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? திருட்டுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று சொல்கிறான்.

இரண்டு பேருடைய ஒழுக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர் பெரியார் அவர்கள், பிள்ளையாரை உடைத்த பெரியார் அவர்கள், உங்களுடைய சொந்தச் செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?

- பேராவூரணியில் 8.9.2013 அன்று நடைபெற்ற தி.க.வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி.

தமிழ் ஓவியா said...

என்னுடைய பிறந்த நாளில் இராமாயணம், பகவத்கீதை போன்ற ஆபாச நூல்களைக் கொளுத்துவது என்று காலையில் நடந்த (திராவிடர் கழகம்) சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதனை நல்ல வண்ணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதிலுள்ள ஆபாசங்களையும் நாம் எடுத்து விளக்க வேண்டும். இராமாயணம், சீதையாணம் முதலிய நூல்களில் உள்ள ஆபாசங்களையும், கடவுள்களின் தன்மைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறிமுடித்தார்கள்.

- பெரியார்,
('விடுதலை', 14.05.1962)

தமிழ் ஓவியா said...

தனது பிறந்தநாளில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை பெரியார் என்ன செய்வார் என்று கூறுகிறார்:

"இன்று எனது எடைக்கு எடை முந்திரிப் பருப்பு அளித்துள்ளீர்கள். எனது எடையானது 192- ராத்தல் ஆகும். எனது எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள், பேரீச்சபழம், துணி, நெல், கம்பு, உப்பு இப்படி அளித்தார்கள். காலையில் வயதை எண்ணி பவுன்கள் கொடுத்தார்கள். சென்ற ஆண்டு நண்பர் திரு. எம்.ஆர். இராதா அவர்கள் எனது வயது அளவுக்கு வருடத்துக்கு ஒரு பவுன் வீதம் தருவதாகக் கூறி 10.000 ரூபாய் அளித்தார்.

நான் எனக்கு அளிக்கப்படும் பொருள்களைப் பணமாக ஆக்குகின்றேன்.

நமது கழகத்துக்கு மாதம் குறைந்த பட்சம் 5000- வீதம் வருவாய் வரும் நிலையில் உள்ளது. இனி பணம் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு பல தொழில்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன்.

கவனிப்பாரற்றுத் திரிகின்ற பிள்ளைகளுக்கு இப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான தொழில் பள்ளி ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இதற்கு மாதம் 1.500- செலவாகக் கூடும். இன்னும் மற்ற மற்றப் பணிகளும் செய்ய திட்டம் போட்டுள்ளேன்."

- பெரியார்,
('விடுதலை', 29.07.1962)

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
வெள்ளி, 20 செப்டம்பர் 2013 16:35
E-mail Print

வலு - பளு

செய்தி: தேசத்திற் குத் தேவை வலுவான தலைமை! - நரேந்திரமோடி

சிந்தனை: ஒரே அடியாக சிறுபான்மை யினரை ஒழித்துக்கட்டும் அளவுக்கு வலுவானதாக பளுவானதாக இருக்க வேண்டும் - அப்படித் தானே?

தமிழ் ஓவியா said...


திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக!


தந்தை பெரியார் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகத்தான சமூகப் புரட்சியாளர் ஆவார். கால் நூற்றாண்டு காலம் தமது பொது வாழ்க்கைக்கான தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளியைத் தேர்ந்தெ டுத்து, தமிழகம் முழுவதும் சமூக மாற்றத்திற்கான பெரும் பணிகளை மேற்கொண்டார்.

தமிழக மக்கள் தந்தை பெரியார் அவர்களை தத்தம் குடும்பத் தலைவராகவே கருதிப் போற்றி வருகிறார்கள். அந்த வரலாற்று நாயகரை நினைவு கூரும் வகையில், அவர் தமது தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றிய திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திராவிடர் கழக மண்டல தலைவர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (திருச்சி - 19.9.2013)

தமிழ் ஓவியா said...


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்



தி.மு.க. தலைவர் கலைஞர் ஆதரவு

சென்னை, செப்.20- திருச்சி பன்னாட்டு விமான நிலை யத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:

கேள்வி: திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டு மென்று தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

கலைஞர்: திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேண்டுகோளை முழு மனதோடு ஆதரிக்கின்றது. மத்திய அரசு உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முன்வைத்து வாதிட வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு: கலைஞரின் இந்த அறிவிப்புக்கு நன்றி!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


கழகக் குடும்பத்தவர்க்கு முக்கிய வேண்டுகோள்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது சுற்றுப் பயணம் கடந்த ஓராண்டுக் காலத்தில் மிக அதிகமாக உள்ளது. ஒரே நாளில், பல ஊர்களில், பல நிகழ்ச்சிகள் என்று இருப்பது அவரது உடல் நலப் பாதுகாப்புக்கும், அவர் எழுத வேண்டிய எழுத்துப் பணி, நிர்வாகப் பணிகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைகளாக அமைந்து விடுகின்றன.

கழகக் குடும்பத்தினரைத் திருப்தி செய்யவேண்டும் என்பதற்காகவே கேட்டவுடன் தனது தொல்லைகள் பற்றிக் கவலைப்படாது, எங்களையும் மீறி நிகழ்ச்சிகளுக்கு அவர் ஒப்புக்கொண்டு விடுகின்றார்.

எனவே, தோழர்கள் ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்கிற அளவில், மிகவும் அவசியமானால் உள்ளூர் அருகில் உள்ள ஊர் என்றால் திருமணம் போன்றவைகளுடன் நிறுத்தி, ஒழுங்குபடுத்திட ஒத்துழைக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,

- வீ. \அன்புராஜ்
சுற்றுப் பயணப் பொறுப்பாளர்

தமிழ் ஓவியா said...


கழகப் பொறுப்பாளர்களுக்கு... கடப்பாடுகள் பன்னிரெண்டு!


1. வாரத்தில் 5 நாள்கள் உங்கள் குடும்பத்திற் காகச் செலவிடுங்கள். இரண்டு நாள்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளாவது இயக்கத்திற்காகச் செலவிடுங்கள்!

2. தலைமைக் கழகம் - மண்டல அமைப்பு - மாவட்ட அமைப்புகள் - நகர, ஒன்றிய, கிளைக் கழக அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (நெட்ஒர்க்) சிறப்பாக இருந்தால் இயக்கப் பணிகளும் சிறப்பாக இருக்கும்.

3. நம் தோழர்கள் நம் பலம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். வரலாற்றையே திருப்பிப் போட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

4. பதவி பக்கம் போகாமல், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாத ஓர் இயக்கத்தில், ஒரே தலைவர் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் கொள்கையில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொடியின்கீழ் நாம் செயலாற்றிக் கொண்டிருக் கிறோம். அதற்காக நம் முதுகை நாமே தட்டிக் கொண்டு பெருமைப்படவேண்டும்.

5. தந்தை பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்; இருக்கிறது; பல மாகவே இருக்கிறது - யாராலும் நம்மைப் புறக் கணிக்க முடியாது என்ற நிலை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நமது சாதனைகள் அனேகம்! அனேகம்!!

6. நமக்குக் கொடுக் கப்பட்டுள்ள பொறுப் புக்குத் தக்க வகையில் நாம் கடமையாற்றுகி றோமா என்பதுபற்றி நமக்கு நாமே எடை போட் டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. நாம் விட்டுச் செல்லும் எச்சம் என்பது என்ன? நாம் வாழ்ந்த காலத்தில் இந்த இயக்கத் துக்காக, அதன் கொள் கைகளுக்காக என்ன செய்தோம் என்பதுதான் நம் மறைவிற்குப் பிறகு நிலைத்து நிற்கக் கூடிய எச்சம் ஆகும்.

8. நமது இயக்கத்தைப்பற்றி தந்தை பெரியார் சொன்னது - நமது இயக்கம் என்பது பனைமரம் மாதிரி; பனை மரத்துக்கு யார் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார்கள்? அது தானாகவே எந்தச் சூழ லிலும் வளரவில்லையா? பலன் கொடுக்கவில்லையா?

அதேபோன்றுதான் நம் மக்களுக்காக உயிருக்கு மேலான தேவையான இயக்கம் நமது கழகம் - அதனை நம் மக்கள் கைவிடமாட்டார்கள் - நேரி டையாக முன்வராவிட்டாலும், மன ரீதியாக, மறை முகமாகவேனும் இந்த இயக்கத்தை மதிப்பார்கள் - உதவுவார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அணுக்கமான மக்கள் தொடர்பு! தொடர்பு!!

நாம் நிதி கேட்டால் மக்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள் - நாம் ஏன் தயங்கி நிற்கவேண்டும்?

9. பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், அந்தப் பொறுப்புக்கான பணிகளை பல்வேறு காரணங் களால் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் தாராளமாக விலகிக்கொண்டு, அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கலாம். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

10. நாம் மட்டும் கொள்கைக்காரர்களாக இருந்தால் போதாது - நம்மைச் சார்ந்தவர்கள் - குடும்பத்தவர்கள் - உற்றார் உறவினர்கள் - நண்பர் கள் - ஏன் இந்த உலகமே பெரியார் கொள்கை மயமாகவேண்டும்.
பெரியார் ஒரு வாழ்க்கை நெறி என்பது மெய்ப் படவேண்டும். அதற்காக உழைக்கவேண்டும்.

11. மதவாத சக்திகள் மருட்டுகின்ற இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுமையும் தந்தை பெரியார் கொள்கை - தத்துவம் சூறாவளியாகச் சுழன்றடிக்கப்படும் காலகட்டம் இது.

12. தோழர்களே, செயல்படுவீர்! உற்சாகமாகச் செயல்படுவீர்!!

- திராவிடர் கழக மண்டல தலைவர், செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் - திருச்சி 19.9.2013

தமிழ் ஓவியா said...


எனக்குக் கவலையில்லை



யாருக்கு எந்த மதத்தில் பற்றிருப்பினும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால், அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது? மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாக இருக்கவேண்டும். - (குடிஅரசு, 15.4.1928)

தமிழ் ஓவியா said...


இதுதான் இடதுசாரி சிந்தனையா?


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கேரளா வில் அமைச்சராக (கம்யூனிஸ்டு) இருந்தவரும், இடதுசாரி சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படு வருமான திரு. வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், 2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், பிஜேபியின் பிரதமருக் கான வேட்பாளராக, நரேந்திரமோடி முன்னிறுத் தப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், பிரதமர் பொறுப்புக்கு அவர்தான் தகுதியானவர் என்றும், தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் செயல் பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை, தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள, அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிர்வாகத் திறமை உடையவரா நரேந்திர மோடி? என்பது ஒரு புறம் இருக்கட்டும்; அந்த நிருவாகத் திறமை எதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

அவர் நிருவாகத் திறமையின் இலட்சணம் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது தானா? அவருக்குச் சம்பந் தமே யில்லை என்று கூறப் போகிறார்களா?

அதுவுண்மை என்றால், ஒரு முதல் அமைச்சருக்கே சம்பந்தம் இல்லாமல் பல்லாயிரம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றால், செயல்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்தார் என்று பொருள் படாதா?

ஓர் உண்மையைத் திட்டமிட்டு, மறைக்கப் பார்க்கின்றனர். நரேந்திரமோடி என்ற முதல் அமைச்சர், தன் நிருவாகத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதை மறைக்கப் பார்க் கிறார்கள்.

அறிவு நாணயத்தோடு அவர் செயல்பாடு இருந்தால், இவ்வளவு பேரழிவுக்குக் காரணமாக இருந்ததற்குத் தான் பொறுப்பேற்ற, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையைத் தூண்டுவதற்கு, ஒரு முதல் அமைச்சரே அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஏற்பாடு செய் தார் என்றால், இதனை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?

பிஜேபி சட்டமன்ற, உறுப்பினர்களின் வாக்கு மூலத்தை தெகல்கா ஊடகம் பெற்று அம்பலப் படுத்தி விடவில்லையா?

எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு என்ற அய்ன்ஸ்டின் தேற்றத்தைக் கூறி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நியாயப்படுத்தியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அறிய மாட்டாரா? மோடியின் பின் புலத்தில் பணத் திமிங்கலங்கள் இருப்பது கூடவா மார்க்சியவாதி என்று கூறப்படுபவருக்குப் புரியாது?

குஜராத் மாநிலத்தை, இந்துத்துவாவின் பரிசோ தனை சாலையாக ஆக்கி, அதில் வெ(ற்)றி பெற்ற நிலையில் அதே பாணியை ஒடிசா மாநிலத்தில் அரங்கேற்றவில்லையா? இதனை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டலாமா?

குஜராத் நிகழ்வினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே!

இன்றைக்குக்கூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருவது எந்த அடிப்படையில்?

இராமச்சந்திர குகா, மார்க்கண்டேய கட்ஜூ (இவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிதான்) பொருளாதார மேதை - நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் போன்றவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்துள்ள நிலையில், வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்துத்துவா சக்திக்குத் துணை போவது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்மீது போர்த்தப்பட்டு இருந்த இடதுசாரி என்ற திரையை அவரே கிழித்துக் கொண்டு விட்டார் என்றே கருதப்பட வேண்டும்.

மோடிக்குப் பல்வேறு முகாம்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன திட்டமிட்ட வகையில்; இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய வாக்காளர்களே!

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழுக்குத் துரோகமும்


ஆசிரியர் ஏங்கினால் வகுப்பறை தேங்கும் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் இப்போதோ நம் அன்னைத் தமிழும் சேர்ந்து ஏங்குகிறது தேங்கு கிறது. ஆம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தேர்வு வாரியத்திற்குக் கொஞ்சமும் அடிப்படை அறிவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியர்க்கு அடிப் படை அறிவு என்பது எதுவாக இருக்க வேண்டும்? தன்னுடைய பாடத்துறையில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான். ஆனால் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழுக்கு வழங்கப்படுகின்ற மதிப்பெண்களோ வெறும் 30 மதிப்பெண்களே. ஆங்கிலம் - 30, உளவியல் - 30, சமூக அறிவியல் - 60. எல்லாம் சரிதான். ஆனால் இதில் சமூக அறிவியல் பாடத்திற்கு ஏன் அதிக மதிப் பெண்கள்? இப்படி வைப்பதால் அந்தந்தத் துறைசார்ந்த ஆசிரியர் களுக்குத் தத்தம் துறை சார்ந்த பாடத்தில் எப்படி அறிவு பெருகும்? நாட்டம் வரும்? சமூக அறிவியல் பாடத்திற்குக் கொடுக்கிற அதே மதிப்பெண்களே அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்குத் தந்திருந்தால் தேர்வு வாரியத்தின் அறிவு நாணயம் விளங்கியிருக்கும். நாங்கள் தேர்வில் தோல்வியைக் கண்டது இதுதான் காரணம். இந்த மன நிலையில் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிப் போம்? தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவே இல்லை. குற் றாலத்தில் எங்கோ மணம் வீசுகிறதே என்பதற்குப் பதிலாக குற்றாலத்தில் என்கோமணம் வீசுகிறதே என்று தப்பிதமாகப் படிக்கும் எழுதும் அவலநிலையைப் பாரீர்!

TNPSC - தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டித்துப் போராட் டம் கண்டு மீண்டும் முக்கியத்துவம் பெற்றுத்தரப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்விலும் தமிழுக்கு முக் கியத்துவம் வேண்டும். தமிழ்ப் படித்த வர்க்கு முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. எல்லாம் இந்தப் பார்ப்பன ஆட்சியின் தொல்லை.

தமிழ்ப்படித்தவர்கள் முன்னேற முடிய வில்லை. முறையான தேர்வு முறையே இது இல்லை. இந்தக் கொடுமை போதாதென்று விடைத் தாள் வேறு மோசடி. இப்போது நடந்து முடிந்த தேர்வையும், அதன் முடிவையும் உடனே ரத்து செய்ய வேண்டும். முறையான தேர்வு முறை யுடன் (தமிழுக்கு முக்கியத்துவம் - 60 மதிப்பெண்) அல்லது அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்கு - 60 மதிப்பெண்கள் (அல்லது) மீண்டும் பதிவு மூப்பு அடிப்படையில் பின் பற்றிட வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுக்கத்தான் வேண்டும்

தங்களை விட்டால் நாதி ஏது?

தமிழாசிரியர்களுக்கு நல்லதொரு நீதியைக் கூடிய விரைவில் பெற்றுத் தர வேண்டும் என எதிர்ப் பார்க்கி றோம். நல்ல முடிவுக்காகக் காத்தி ருக்கிறோம்.

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலை யாய பற்று மொழிப்பற்றே. மொழிப் பற்று இல்லாதாரிடத்துத் தேசப் பற்றும் இராது என்பது உறுதி.

தேசம் என்பது மொழியை அடிப் படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால்,

தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த் தனை.

- தந்தை பெரியார் (10-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம், பக்கம் 31)

- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. (மோடி) வெறும் முகமூடிதான்! அதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தாகரத் காட்டம்

திருப்பூர், செப்.20- திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதிபாசு நூற் றாண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் விழாப் பொதுக்கூட்டம் 19.9.2013 மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகரத் பேசியதாவது:

அதிகாரத்தை ஏழை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியவர் ஜோதிபாசு ஆவார். அவர் செயல்படுத்திய கொள்கைகளை எதிர்க்கட்சியினர்கூட குறைகூற முடியாது. 1946 ஆம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் பஞ்சாயத்து அமைப்பினை ஏற்படுத்தி, அதிகாரத்தை அதிகாரபர வலாக்கினார்.

ஜோதிபாசுவின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான பாடங்களை நாம் கற்கவேண்டியுள்ளது.

பிஜேபி (மோடி) என்பது வெறும் முகமூடிதானே தவிர, இதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் ஆகும்.
மோடி தொழிலாளி என்ற வார்த்தையை வாயால்கூட உச்சரிக்காதவர். தொழிலாளிகளைப்பற்றிய எண்ணமும், சிந்தனையும் அறவே இல்லாதவர்; ஆனால், இப்படிப்பட்ட வருக்கு திருப்பூரில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட்கள் இருப்பது தொழிலாளர்களுக்கு இழிவாகும்.

பெருமுதலாளிகள் பெருவாரியாக மோடியை விரும்புகிறார்கள். தம்பட்டம் அடிக்கிறார்கள்.ஆனால், திருப்பூர் போன்ற தொழிலாளர் நிறைந்த பகுதியில் மோடி ஏற்கப்படமாட்டார்.

- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்


உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும், எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.

பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.

அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை முன் னேற்ற வழி வகுக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொ டுக்கச் சொல்ல முடியாது.

சேற்றிலே சந்தன வாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதி னான்கு லோகத்தைக் காட் டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாறாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

-அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!

டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவு களை மீறக்கூடா தென் றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண் டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ் திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்