Search This Blog

9.2.10

கலரவத்துக்குக் கத்தியைத் தீட்டும் இந்து முன்னணி


செஞ்சியில் கத்தி தீட்டும்
இந்து முன்னணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோயில் இப்பொழுது பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ள இடம் கிறித்துவர்களுக்குச் சொந்தமானது என்ற நிலையில், பிரச்சினை கிளம்பியுள்ளது. கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் இருதரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது கூட்டத்தின் முடிவுக்கு ஒத்துழைக்காமல் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

கோயிலுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பேராயரிடம் கேட்டு முடிவு சொல்ல 10 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் வரும் 15 ஆம் தேதி மாலை நடைபெறும்; அதுவரை இப்பொழுதுள்ள நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்துக்கள் சார்பில் கலந்துகொண்ட இந்து முன்னணியைச் சாராதவர்கள் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டனர். எதையும் பிரச்சினையாக்கி, சூடாக்கி அதன்மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதானே இந்து முன்னணி வகையறாக்களின் அணுகுமுறை? அதன்படி 25 பேர்களைத் திரட்டிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து வழிபட முனைந்துள்ளனர். காவல்துறை தடுத்துள்ளது. வாக்குவாதம் சூடாகியிருக்கிறது.

இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; இராமகோபாலனை அழைத்து வருவோம் என்று மிரட்டலில் இறங்கியுள்ளனர்.

எந்தவித சட்டம் ஒழுங்குக்கும் கட்டுப்படாதவர்கள் இவர்கள். விநாயகர் ஊர்வலம் என்று காவல்துறையிடம் அனுமதி பெறுவார்கள். அனுமதி பெறும்வரை நயந்து, பெற்றபின் அனுமதி வழங்கப்பட்ட பாதைகள் வழியாக செல்லாமல், அனுமதி மறுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் திடீரென்று நுழைய முற்படுவார்கள். காவல்துறை தடியடி நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடனே இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்று கூச்சல் போடுவார்கள்.

இந்துக் கோயில் இருக்கிறது. எனவே வழிபட எங்களுக்கு உரிமை உண்டு என்று இந்து முன்னணியினர் சொல்வார்களேயானால், அதே காரணம் வேலூர் கோட்டைக்குள்ளிருக்கும் முஸ்லிம்களின் தர்காவுக்குப் பொருந்தாதா? அங்கு மட்டும் வேறு நியாயம் பேசுவது ஏன்? எதிலும் இரட்டை அளவுகோல்தானா?

பாபர் மசூதி பிரச்சினையை சங் பரிவார்க் கும்பல் கையில் எடுத்துக்கொண்ட காலந்தொட்டு, இதுபோன்ற பிரச்சினைகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே வெடித்துச் சிதற ஆரம்பித்துவிட்டன.

பாபர் மசூதிக்குமுன் அங்கு ராமன் கோயில் இருந்தது; பாபர், ராமன் கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதியைக் கட்டினார் என்று தம் போக்கில் பேசினார்கள்; பிரச்சாரம் செய்தார்கள். ஒரு காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை வெறியூட்டி கூட்டிச் சென்று, கரசேவை என்ற பொய்யான தகவலை நீதிமன்றத்திற்குச் சொல்லி உள்ளே சென்று, 450 ஆண்டுகாலம் வரலாறு படைத்திட்ட பாபர் மசூதியைத் தரைமட்டமாக இடித்துத் தள்ளியது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?

இப்படி வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தினால் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை இந்துத்துவாவாதிகள் சந்திக்க வேண்டியிருக்கும்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு; இவை எல்லாமே புத்த விகாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு அவ்விடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் என்பதற்கு அழுத்தமான, ஆணித்தரமான ஆதாரங்கள் உண்டே! அதன் அடிப்படையில் நடந்துகொள்ளத் தயார்தானா?

வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறதா ஆர்.எஸ்.எஸ். வகையறா?

செஞ்சியில் கலரவத்துக்குக் கத்தியைத் தீட்டப் பார்க்கிறார்கள்; கடுமையான நடவடிக்கைகள்மூலம் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோளாகும்.

--------------------------”விடுதலை” தலையங்கம் 5-2-2010

3 comments:

dubai saravanan said...

R.S.S, V.H.P,போன்ற வெறி பிடித்த நாய்களை தடை செய்ய முடியாதா?

வஜ்ரா said...

உன் பைத்தியக்கார பேச்சுக்கு மாற்று கருத்து வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

http://www.tamilhindu.com/2010/02/gingee-christian-aggression-on-old-hindu-temple/

இது உனக்கு அல்ல. உன் வலைத்தளத்தைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளத்தான்.

Pebble said...

//வேலூர் கோட்டைக்குள்ளிருக்கும் முஸ்லிம்களின் தர்காவுக்குப் பொருந்தாதா? //

Friend,
I think that is a mosque not dharga. Please verify.