Search This Blog

7.2.10

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிந்தனை

மொழி ஞாயிறு

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1902)

ஆரியத்துக்கும் அதன் மொழிக்கும் அடங்காப் புலியாக மீசை முறுக்கி எழுந்த அரிமாவுக்குப் பெயர் தான் பாவாணர்.

தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலியின் தந்தை என்று போற்றப்படுபவர். 1974-இல் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலித் திட்டத்தின் (Tamil Etymological porject) முதல் இயக்குநராய் பொறுப்பேற்று முத்திரைப் பதித்த பெருமகன் இவர்.

அகர முதலியின் முதல் தொகுப்பு 1985இல் வெளிவந்தது. தமது இறுதிக் காலத்தை எவரும் எளிதில் நெருங்க முடியாத புலமைத்துவம் வாய்ந்த இந்தப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்.

தமிழ், ஆங்கிலம் வடமொழிகளில் புலமை பெற்றவர். அதனால்தான் ஆரியத்தின் கரவுகளை அக்கக்காகப் பிரித்து அதன் பேதைமையை ஊருக்கும் உலகுக்கும் காட்டினார்.

எந்தெந்த தமிழ்ச் சொற்கள் எல்லாம் ஆரிய மயமாக்கப்பட்டன என்பதை வேர் வரை சென்று உணர வைத்த ஆய்வுக் கடல் அவர்! தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொன்றும் முத்துக் குவியல்; 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தமிழ் உலகிற்குத் தந்த கொடையாளரும் ஆவார்.

தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் பெரியார் பற்றாளர் மானமிகு கோ. இளவழகன் அவர்கள் பாவாணர் நூல்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று சேகரித்து ஒரே நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து பதிப்பக வரலாற்றில் சாதனையாளராக மிளிர்கிறார்.

பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ்நாட்டுக் கதைகளையும், செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வட மொழியில் மொழி பெயர்த் தும் வைத்துக் கொண்டு அவ்வட நூல்களை முதல் நூல்களாகவும் தொன்னூல்களை வழி நூலாகவும் காட்டினர் (ஒப்பியன் மொழி நூல் முன்னுரை பக்கம் 48)

பார்ப்பனர்களில் இந்தச் சூழ்ச்சியைப் பார்ப்பனரான பரிதிமாற்கலைஞரும் (கோ. சூரியநாராயண சாஸ்திரி) ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தமிழிரிடமிருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்ததைத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியிலிருந்து தமிழிற்கு அவை வந்தனபோலவும் காட்டினர். (தமிழ் மொழியின் வரலாறு - பக்கம் 27)

என்று குறிப்பிடுவதைக் கண்டால் பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெளிவாகும்.

1955ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை பாவாணருக்கு திராவிட மொழி நூல் ஞாயிறு என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும். தமிழர் வீட்டுப் பிள்ளைக்கு நற்றமிழில் பெயர் சூட்டுவோம்! மொழி ஞாயிறு பிறந்த இந்நாளில் உண்மைத் தமிழர்கள் உறுதி கொள்ள வேண்டிய ஒன்று இது! தமிழா தமிழனாக இரு!

--------------- மயிலாடன் அவர்கள் 7-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Prapa said...

அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,