Search This Blog

2.2.10

வாக்காளர் பட்டியலும் - முசுலிம் பெண்களும்


மதம்

வாக்காளர் அடையாளப் பட்டியலில் ஒளிப்படம் (Photo) இடம்பெற்றிருப்பதில்கூட மத சாயம் பூசப்படுவது வேடிக்கைதான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முசுலிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயமாம். பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகமாம்.

ஆனால், முசுலிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளதாம்! இது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25 இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி தீபக்வர்மா ஆகியோர் வாக்காளர் அட்டையில் படம் வெளிவந்ததற்கே இப்படி வருத்தப்படுகிறீர்களே, தேர்தலில் போட்டியிட்டால் என்ன ஆகும்? வேட்பாளர்களின் படத்தை வீதிக்கு வீதி ஒட்டுவார்களே, அப்பொழுது என்ன செய்வீர்கள் என்ற பொருள் பொதிந்த வினாக்களை எழுப்பியுள்ளனர். வேண்டுமானால், வாக்களிப்பதா, வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும் என்று பந்தை அவர்கள் பக்கமே தள்ளிவிட்டனர் நீதியரசர்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதே மனுதாரர் 2006 இல் இதே வழக்கைத் தொடுத்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இந்தியா முழுமையும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது; அங்கெல்லாம் இதுபோல ஒளிப்படங்கள் அச்சிடப்பட்டுதான் உள்ளன. இங்கு மட்டும் இப்படி ஒரு வினோத வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் தமிழகத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் எடுத்துக் கூறவும் பட்டது.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் ஒளிப்படம். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட்டால் எப்படி உண்மையை அறிய முடியும்?

மத நம்பிக்கைகள் உலகம் முழுவதும் மாறி வருகின்றன. முசுலிம் மதத்தைச் சேர்ந்த பெண்களிலும் பல மாற்றங்கள் பல நாடுகளிலும் ஏற்பட்டே வருகின்றன.

மாறுதல் என்பதுதான் மாறாதது என்பது இன்னும் ஒரு சிலருக்குப் புரியவில்லையே! -

----------------------மயிலாடன் அவர்கள் 2-2-2010 “விடுதலை” யில் எழுதியுள்ள கட்டுரை

3 comments:

sultangulam@blogspot.com said...

மாற/மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

இஸ்லாத்தில் பெண்களுக்கு பர்தா (மறைக்க வேண்டிய பகுதி) முகமும் முன்கையும் நீங்கலாக உள்ள இடங்கள்தான்.

லூசுத்தனமா கேசு போட்டால் என்ன செய்வது.

ஜியா said...

நிச்சயமாக இஸ்லாத்தினை அறியாதவர்கள் தான் அவ்வாறு செய்வார்கள் இஸ்லாத்தில் முகத்தை மறைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை இதற்கு இஸ்லாம் நிச்சயம் பொருப்பு ஏற்காது........

Jaafar said...

அஜ்மல் போன்ற அரைவேக்காடுகள் செய்யும் இது போன்ற தவறுகளால் தான் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இஸ்லாத்தில் முகம் மறைக்கப்பட வேண்டுமென்று சொல்லப்படவில்லை. பெண்கள் இவ்வுலகத்தை தெளிவாக கண்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் சில இஸ்லாமியர்கள் செய்த சூழ்ச்சி இது. மாற்று மதத்தவர் இஸ்லாமை புரிந்து கொள்வது இருக்கட்டும். முதலில் இஸ்லாமியர்கள் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறார்கள்.?!!